அறையிருட்டு

எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை
காற்றின் உதவியுடன் புகையாக்கி
ஒளியை விழுங்கியது
அறையிருட்டு.
மனிதவிழிகள் கூட
தனது ஓட்டைகளை
பார்க்க முடியாதென
கர்வம் கொண்டது.
தனது சுயசொரூபத்தை
முழுக்க உணரும்
வேட்கையில்
சன்னலுக்கு
வெளியே படர்ந்திருந்த
பேரிருட்டின் அங்கமானது.
பேரிருட்டு விரியும் திசைக்கு
மாற்றுதிசையில்
பேரிருட்டுப்பாதையினூடே
விரைந்து பறந்தது.
+++++
சில ஆயிரம் மைல்கள் தூரத்தில்
பேரிருட்டின் எல்லை முடிந்தது.
எலலையற்ற தன்மையை
அனுபவமாய் உணரும் பேரார்வத்தில்
சூரியவொளி ஆக்கிரமித்திருந்த
நிலப்பரப்பில் நுழைந்தவுடன்
அறையிருட்டின் ஒருபகுதி
பஸ்மமானது.
வந்த வழி உடன் திரும்பி
பேரிருட்டின் பாதையூடெ
அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில்,
சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி
பேரிருட்டுடன் சேர்ந்து
அறையிருட்டு கரைந்துபோனது.
+++++
பேரிருட்டின் ஆவியுடல்
சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே
அறையிருட்டின் ஆவியுடலும்
அகதியானது.
பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின்
மீண்டும் உயிர்க்கும் போது
அறையிருட்டையும் உயிர்ப்பித்து
அதன் அறையில் சேர்த்துவிடுவதாக
பேரிருட்டு வாக்களித்தது.

எதையாவது சொல்லட்டுமா………62

சமீபத்தில் நான் ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.  அவர் பெயர் ரவி.  என் சிறிய நோட் புத்தகத்தில் ரவி என்று பெயரிட்டு எழுதியிருந்த தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து போன் செய்தேன்.  ரவிதான் எடுத்தார்.  ஆனால் நான் எதிர்பார்த்த ரவி அல்ல அவர். 
உண்மையில் நான் பேசவே நினைக்காத ரவிதான் அவர். 
”நான் ரவி பேசுகிறேன்,” என்றவுடன்.  ஐய்யயோ தவறு செய்துவிட்டோ மே என்று தோன்றியது.  பின் சமாளித்தேன். 
”எப்படிம்மா இருக்கே?” என்றேன். 
”நல்லாயிருக்கேன்..”
”பெண்ணெல்லாம் செளக்கியமா?”
”ம்..ம்–”
”பூனா போவதுண்டா?”
”ம்…ம்.. சரி, நான் அப்புறம் பேசறேன்…” என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது.  உண்மையிலேயே நான் பேச விரும்பாத ரவிதான் அவர்.  தெரியாமல் பேச்சைத் துவங்கினாலும், பின் ஏன் அவர் துண்டித்துவிட்டார்.  அவருக்கும் என்னுடன் பேசுவதில் ஒருவித சலிப்பு உண்டாயிருக்கும். 
வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஒரே வங்கியில் இருவரும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர்கள்.  அவர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வார்.  பின் அதைப் பற்றி பிரமாதப்படுத்திப் பேசுவார்.  எனக்கு அதுமாதிரி பேச வராது.  நான் அவரிடம் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றைப் படிக்கக் கொடுத்தேன்.  அதைப் படித்தப்பிறகு ஐயப்பன் கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார்.  அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.  நான் படிப்பதோ வேறு.  என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். அந்த ரவி காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு தில்லியில் போய் இருந்தார்.  பின் வேலையை விட்டுப் போய்விட்டார்.  லீகல் தொழிலிக்குப் போய்விட்டார்.  ஒருமுறை அவர் எனக்குப் போன் செய்து அவர் பெண் திருமணத்திற்கு என்னை அழைத்தார்.  அந்தத் திருமணத்திற்கு சுவாமி மலைக்குச் சென்றேன்.  அத்துடன் நின்றுவிட்டது எங்கள் நட்பு.  நாங்கள் பார்ப்பதே இல்லை.  பேசுவது என்பது இல்லவே இல்லை.  ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய நட்பு ஏன் நின்றுவிட்டது.  வயது ஒரு காரணமா?
வயதாக ஆக நம்முடன் பேசுபவர்களுக்கும் வயதாகிக்கொண்டே போகும்.  பின் பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து போய்விடும்.  யாரும் நட்புடன் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.  ஒருமுறை Driveinல் பிரமிளைச் சந்தித்தேன்.  அவர் யாரோ சிலருடன் டீ அருந்தி கொண்டிருந்தார்.  பின் என்னைப் பார்த்தவுடன் என்னைக் கூப்பிட்டார். 
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபிறகு அவர் சொன்னார் : ”அமெரிக்காவிலெல்லாம் இப்பப் பேச்சுத் துணைக்குக்கூட பைசா கொடுத்தா ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள்,” என்றார்.
அவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு காலத்தில் Intensive ஆக இருந்த நட்பு என்பது நீர்த்துப் போய்விட்டது. யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில்லை.  பேசுவதில்லை.  அப்படியே பார்த்தாலும் பேசினாலும் ஏதாவது சில வார்த்தைகள்தான் தேறும்.  உண்மையில் உறவினர் வட்டம் காணாமல் போய்விட்டது.  நட்பு வட்டம்கூட நீர்த்துப் போய்விட்டது. 
அலுவலகத்தில் பழகியவர்களெல்லாம் அலுவலகத்தோடு நின்று விடுவார்கள்.  அப்புறம் என்ன?  நாம் யார்?  நாம் தனி ஆளா? அல்லது ஆள்கூட இல்லையா?

பட்டியல்

பாதையில் கிடந்த
கருவேல முள்ளை
ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன்
புட்டத்தை வாலால் மறைத்தபடி
ஒரு நாய்
என்னைக் கடந்து செல்கிறது
மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது
இனி எந்த மரக்கிளையில்
கிளிகள் வந்தமரும்
மேகங்கள் எங்கே சென்றன
நடவு செய்பவர்களை
வெயிலில் காயவிட்டு
மாடுகள் தின்பதற்காகவாவது
உதவட்டும்
இந்த சுவரொட்டிகள்
அக்கரைக்கு நீந்திச் செல்ல
நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால்
போதாது
எப்போதாவது செல்லும்
விமானத்தை
வேடிக்கைப் பார்க்க
சொல்லியாத் தரவேண்டும்
காலம் முடிந்து
குருக்கள் கிளம்பிவிட்டார்
சாமி எங்கே போகும்.

பயம்

திருவிழா
விடுமுறையின்
கடைசி நாள் இரவில்
வரும் அடுத்த நாள்
பள்ளிக்கூடப்பயமும்,
ஞாயிறு இரவு
சினிமாவின்போது வரும்
அடுத்த நாள்
அலுவல் பயமும்
ஒன்றாகத்தான்
தோணுகிறது.

மௌனங்களை இழைப் பிரித்துத் தொங்கும் நிறம்..

மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்

மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்துக்கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன

அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்

காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்

******
 

கவிதை

அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை

குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்

பாப்புக்குட்டி – 
சிரிக்குது
அழுகுது
கை கால்களை ஆட்டுது
குப்புற விழுது
சலவாய் ஒழுக்குது
ங்கா ங்கூ ஆ பேசுது
விரல் சப்புது
வெறிக்க வெறிக்கப் பாக்குது
தூங்குது
சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்
குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை

கனவென்று தெரிந்திருந்தால்

கிணற்று நீரில்
நிலா பார்ப்போம்
தண்ணீர் உனைப் பருகி
தாகம் தீர்க்கும்
குழலோசை
செவியினில் இனிக்கும்
கண்களுக்கு நீ எதிரில் வருவது
மிகவும் பிடிக்கும்
மரத்திலிருந்து விழுந்த
பழுத்த இலையொன்று
உன் மீது உரசியதால்
தீப்பற்றி எரியும்
வீதியில் நீ
நடந்து வந்தால்
வெண்மேகம் குடைபிடிக்கும்
வரம் கொடுக்கிறேன் என்று
கடவுள் நேற்று
உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே
கல்லூரியில் நீ
வரலாறு படித்தாய்
தெருவெல்லாம் நானல்லவா
மரம் நட வேண்டியிருக்கிறது.

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…31

கணேஷ்
பூனைகள் ஜாக்கிரதை

அடுப்பில்  பால்  கொதிக்கிறது.
அது கொதிக்கும் சத்தம் கேட்காமல்
தொலைக்காட்சிக்குள் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது. 
சமையலறையில் பாலாறு.
தொலைக்காட்சியின் கைதியாய்
தொடர்ந்து இருந்தேன்.
வீடு திரும்பிய மனைவி 
சமையலறை பார்த்தவுடன்
ஆனந்த கூக்குரலிட்டாள்.
துடைத்து விட்டார் போல சமையலறை.
பூனையொன்று  பாலாற்றை குடித்து
தரையை சுத்தம் செய்துவிட்டது.
சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி 
பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.
என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.     
என்னை விட்டுவிடும்படி   தொலைக்காட்சியை  கேட்டேன்
பதில் கிடைக்கவில்லை.
மின்சார வெட்டு !
பூனைகள்  என் வாழ்வை சூறையாடுவதை  எங்ஙனம் தடுப்பது?
மின்சார வாரியத்துக்கு   
யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் !
ஆறரை மணி செய்திகள்  முடிந்தால்தான்
தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.

காதல் திசை

வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,
ன்தாம்லவ துந்ருமிடஇ 
அராபிக் எழுத வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!