முகம்

ஊரின் முகத்தை தீர்மானிக்க
அலையத் துவங்கினேன்
மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும்
கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும்
வடக்கிருந்து வர தெற்கும்
தெற்கிருந்து இறங்க வடக்குமென
எதிரெதிர் துருவங்கள்
முகப்பாய் மாற்றம்கொள்ள
தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன்
நிலைக்கண்ணாடி
ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை…

எதிர் விளையாட்டு

இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.
‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’
அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.
அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
‘பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..


*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்

விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில் 

தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்

தன்  பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்

******

சாலை விதி

ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.
வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.
இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.
உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

ழ 5வது இதழ்

இப்பொழுது

கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்
காற்றைப்போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது
உடனே புதிய ஊற்றுக்களின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறுவிரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்
மாற்று புதியதொன்றை மணத்துடன்
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு
பார்வை விரிய பாதை வளரட்டும்
முன்பே ஒன்றிருந்தால் –
உடைத்த கைகள், உளி,
கல்துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்
சக்கரம், நெரிசல்,
மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண்முன்
எப்பொழுதும் தா.

(டிசம்பர் 1978 ஜனவரி 1979)

 

நிலைப்பாடு

ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

பசிக்கொண்டு நிதம் செல்லும்
பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும்
சாலை மரங்கள் சற்றே
உறங்கிப் போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பு
நினைவுக்குள் புகை மூட்டும்
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளைபிடித்து
குடையெனப் பாவனை செய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக்கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாட்கள் கழியும்
வேர்கொள்ளாக் கால்கள்
             பகற்கானலில் சாம்பலாகும்
             கட்டிடங்களுக்கப்பால்
நீலத்தொடுவானம் தேடிச்செல்ல
             வழிமரங்கள் தாம்பெற்ற
ராகங்களின் நிரந்தரமறியாது
             உடல் சிலிர்த்துப் பாதையை
             நிறைக்கும்
             கந்தல் நிழல் கண்டு

பல்லி

பாத்ரூமில்
ஒரு பல்லி எதிர்ப்பட்டது
குட்டிப் பல்லி
துண்டை எடுத்துக்கொண்டு
போன எனக்கு
அதன்மீது அருவெறுப்பு
நான் அதையே
பார்த்துக்கொண்டிருக்க
அது
இங்கும் அங்கும்
தலைதெறிக்க ஓடியது
வேடிக்கை என்னவென்றால்
அது என்மீது
விழுந்துவிடப் போகிறதென்று
நடுங்கிக் கொண்டிருந்தேன்
என் பயத்தின்
எதிரொலியாய் அது
ஓடி ஓடிப் போனது
குட்டி பாத்ரூமில்
அதன் எல்லை
பரந்து விரிந்திருக்கிறது
என் எல்லை
குறுகலாகத் தெரிகிறது

உன்மத்தம்

கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.

அழகன்

அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.

எதையாவது சொல்லட்டுமா………61

சமீபத்தில் நான் இரண்டு விழாக்களுக்குச் செல்லும்படி நேரிட்டது.  இரண்டுமே எனக்குத் தெரிந்து நெருங்கிய உறவினர் வீடுகளில் நடந்த விழா.  விழா என்பதை விட விருந்து என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரியவில்லை.  இரண்டு குடும்பத்தினரும் பத்திரிகை அனுப்பி அழைத்திருந்தார்கள்.  முதல் அழைப்பு ஒரு கல்யாண அழைப்பிதழ்.  நங்கநல்லூரிலுள்ள ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் நடைப்பெற்றது.  கல்யாண சத்திரம் அமர்களமாக இருந்தது.  நான் சீர்காழி ரிட்டர்ன் என்பதால், மாலை வேளையில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த இடமே அமர்களப்பட்டது.  பெண் வீட்டார் அதிகமாக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  லைட் மியூசிக் வேறு.  சத்தம் அலறியது.  விதவிதமா உணவு வகைகள் மாடியில் பரமாறிக்கொண்டிருந்தார்கள்.  நினைத்தபோது காப்பிகளும், குளீர் பானங்கள் வினியோகப்பட்டிருந்தன. கூட்டத்தில் யாரையும் யாரும் பார்க்கக்கூட முடியாது போலிருந்தது. அப்போதுதான் அந்த உறவினர் சில தினங்களுக்குமுன் எனக்கு போன் செய்தது ஞாபகத்திற்கு வந்தது.
நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குமுன் என் பெண் திருமணத்தை நடத்தியிருந்தேன்.  அப்போது வந்திருந்த அதே சமையல்காரர்தான் உறவினர் கல்யாணத்திற்கும். 
உறவினர் கேட்டார் : ”உங்கள் பெண் திருமணத்தின்போது, சாப்பாட்டிற்கு எவ்வளவு ஆயிற்று?” என்று.
நான்,”ரூ11/2 லட்சம்,” என்றேன்.
அவர் சொன்னார் :  ”இப்போது 5 லட்சம்,” என்று. 
 கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  பின் கல்யாண சத்திரத்தின் வாடகை என்றெல்லாம் உறவினருக்கு ரூ.30 லட்சம் வரை செலவு இருந்திருக்கும். 
அன்று இரவு நான் ரயில் பிடித்து சீர்காழி வந்தபோது, என் வயிறு சரியாயில்லை.  சரியாக சில நாட்கள் ஆயிற்று.
இன்னொரு உறவினர் விழாவிற்கு நான் போகாமல் இருக்க முடியவில்லை.  மன்னார்குடியில் ஒரு சத்திரத்தில் இந்த விழா.  வளைகாப்பு, சீம்மந்த விழா இது.  ஒரு நாள் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றார்கள்.  எனக்கு அங்குதான் உதைத்தது.  சத்திரத்தில் படுத்தால் தூக்கம் வராது.  ‘எதாவது ஓட்டலில் அறை இருந்தால் தங்குகிறேன்,’ என்றேன்.  ஆனால் இறுதியில் என் முடிவை மாற்றிக்கொண்டது தப்பாகப் போய்விட்டது. 
மாடியில் உள்ள அறை ஒன்றில் நான் தங்க ஏற்பாடு செய்தார்கள்.  அறை முழுவதும் தூசியாக இருந்தது.  அறைக் கதவை உள்ளே சாத்திக்கொண்டு படுத்துக்கொள்ள முடியவில்லை.  பின் அறையில் உள்ள பாத்ரூம் மோசத்திலும் மோசமாக இருந்தது.  அங்கும் கதவு இல்லை.  சத்திரம் முழுவதும் உள்ள எல்லா பாத்ரூம்களும் சரியில்லாமல் இருந்தது.  சீமந்தம் என்பதால் கூட்டம் குறைவு.  மேலும் மழை. சென்னையிலிருந்து வரவேண்டிய உறவினர்கள் வரவில்லை.  பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி கூட்டம் இல்லை.  
அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை என்பதோடல்லாமல், அடுத்தநாளிலும் என் உடலில் அதிர்வு ஏற்பட்டது.  ஆனால் மன்னார்குடி பெரிய கோவிலில் உள்ள இராஜகோபால் சுவாமியை மிக நெருக்கமாக தரிசிக்க முடிந்தது. 
இந்த இரண்டு விழாக்களிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால், முதல் திருமண வைபவம் மிகக் குறைவாக செலவை பலவலாறு குறைக்க முயற்சிக்கலாம்.  இரண்டாவது சீமந்த விழாவை சத்திரத்தில் வைத்திருக்க வேண்டாம்.  வீட்டிலேயே மிகக் குறைவான செலவுடன் செய்து முடித்திருக்கலாம்.  பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் போதும்.  வீணான ஆடம்பரம் செலவை மட்டும் ஏற்படுத்தவில்லை கூடவே கலந்துகொள்பவர்களையும் தொந்தரவு செய்து விடுகிறது.