நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள்

சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.  

கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன்.  இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.  முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை.

ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல்  இருந்தது.  இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அதைப் படிக்கலாம் என்று  தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில். 

ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத.  அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.  

புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்கு.  அந்த வகையில் தி ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி என்ற இப்புத்தகத்தைப் பற்றி எழுதலாமென்று தோன்றியது.

இந்தச் சிறுகதைத் தொகுதியை ஐந்திணைப் பதிப்பகத்திலிருந்து ரூ.13.50 க்கு 1990 ஆண்டில் வாங்கியிருக்கிறேன் என்று நினைககிறேன் பொதுவாக ஒரு புத்தகத்தை வாங்குவதாக இருந்தால் அந்தப் புத்தகத்தில் எந்தத் தேதியில் எந்த ஆண்டு வாங்கியிருக்கிறேன் என்று குறித்து வைத்திருப்பேன்.   ஏனோ இந்தப் புத்தகத்தில் அதைக் குறித்து வைக்கவில்லை.  நம் வாழ்க்கை கடந்து போகிறது.  நம் கையில் உள்ள இந்தப் புத்தகமும் கடந்து போய்விடும்

தி ஜானகிராமன் கதைத் தொகுதியான அக்பர் சாஸ்திரியில் 11 கதைகள் உள்ளன.  

இங்கு தி ஜானகிராமன் தொகுதியில் எழுதி உள்ள முன்னுரையைக் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.  

“இத் தொகுதியில் வெளியாகியுள்ள கதைகள் வெவ்வேறு ஆண்டுகளில் மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன், கல்கி, ஆனந்தவிகடன், உமா, காதல் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை.    

இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான்.  சிறுகதைகள் என்றுகூடச் சொல்லவில்லை.

அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள் உலக இலக்கியத்திலேயே பத்துப் பேருக்குள் இருந்தால் அதிகம்.  எனவே சாட்சிகள், அல்லது வேறு எதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்., ” என்கிறார் தி ஜானகிராமன்.

ஏன் இப்படி எழுதி உள்ளார் ஜானகிராமன் என்பது எனக்குப் புரியவில்லை.  இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட் 1963.  அப்போது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தாம் எழுதுவது சிறுகதை இல்லை என்ற குழப்பம் இருந்திருக்கும்.  ஜானகிராமனுக்கும் இது மாதிரியான குழப்பம் இருந்திருக்கிறது.  இந்த 11 கதைகளை ஒரு முறை இல்லை 2 முறை 3 முறைகள் படித்துக்கொண்டே இருக்கலாம்.  ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாய் கட்டமைத்து உள்ளார். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக எடுத்துப் பேச வேண்டும்.

முதல் கதையான அக்பர் சாஸ்திரி எனற கதையை எடுத்துக்கொள்வோம். 

அந்தக் கதையை இரண்டு மூன்று முறைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.  அப்படி ஒரு கதையை எழுதுவதற்குப் பெரிய திறமை வேண்டும்.  அது ஜானகிராமன் போன்ற மேதையால்தான் முடியும்.  

கதை நடக்குமிடம்  ஓடும் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில்.  அதில் கூடியிருக்கிற மனிதர்களிடையே நடக்கிற உரையாடல்தான் இக் கதை.  கதையில் தென்படுகிற கோவிந்த சாஸ்திரி ஒரு அலட்டலான நபராகக் காட்சிப்படுத்தப் படுகிறார்.  அவரைப் பற்றி தி ஜானகிராமன் இப்படி விவரிக்கிறார்.  

‘சாட்டை மாதிரி முறுக்கு  ஏறிய உடம்பு.  நேரான உடம்பு. உட்கார்ந்திருந்தபோது கூட வளையா நேர் முதுகு.’  இப்படிப் போகிறது இந்தக் கதை. எக்ûஸஸ் இலாக்காவில் சூப்பிரண்டாக இருக்கும்  நபருக்கு இரண்டு பிள்ளைகள்.  நோயாளி மனைவி.   கோவிந்த சாஸதிரி என்று அறியப்படுகிற அக்பர் சாஸ்திரி எதிர் சீடடில இருக்கிறார்.  அக்பர் சாஸ்திரக்குப் பதில் சொல்லிக்கொண்டு வருகிறார சூப்பிரண்டு பயபக்தியுடன்.  அக்பர் சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகிறார்.  உடம்பை எப்படிப் பேண வேண்டுமென்று.  அக்பர் சாôஸ்திரி, அவருடைய வாழ்நாளில் ஒரு முறைகூட மருத்துவரைப் பார்த்ததில்லை என்று பெருமை அடித்துக்கொள்கிறார். உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திக்கொண்டவன் அக்பர்.  அதனால் கோவிந்த சாஸ்திரி யைப் பார்த்து அக்பர் சாஸ்திரி என்ற பெயரை வைத்தவர் அவருடைய சம்பந்தி.  

சூப்பிரண்டின் இரண்டு புதல்வர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறார் அக்பர் சாஸ்திரி என்கிற கோவிந்த சாஸ்திரி :

‘மலேரியா அடிச்சுக் கிடந்தாப்ல இருக்கே ரண்டும்.’ என்று.  பின் பையன்கள் உடம்பைப் பற்றி விஜாரிக்கிறார்.  குதிரைக்கு வைக்கிற கொள்ளை கொடுக்கச் சொல்கிறார். அவர் பாட்டி வைத்தியம் செய்து கொள்வதைப் பற்றி பெரிதாகத் தற்பெருமை அடித்துக்கொள்கிறார்.  அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சூப்பிரண்டு வருத்தத்துடன் சொல்கிறார் : üநான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ டாக்டர் வராத நாளே கிடையாது,ý என்று. தன் மனைவியைப் பற்றி மனம் வருத்தத்துடன் பேசிக்கொண்டு போகிறார். 

இந்த இடத்தில் சூப்பிரண்டு மனைவியைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  ‘வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை. வாயில் குழறல். அழகாகக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறி விட்டிருந்தாள்.’

இப்படி தத்ரூபமாகப் படிப்பவர் கவனத்திற்கு ஒரு கதாபாத்திரத்தை ஜானகிராமன் எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார்.  அந்த அம்மாளின் தீராத தலைவலியைத் தீர்க்க இயற்கை மருத்துவத்தை அக்பர் சாஸ்திரி சொல்ல,  அதை ஒரு நோட்டில் குறித்துக்கொள்கிறார் சூப்பிரண்டு.  

இந்தக் கதையில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபர் ஒருவர் ஜன்னல் பக்கத்தில் உள்ள இருக்கையை விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருப்பவர் வேறு யாருமில்லை ஜானகிராமன்தான்.

68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.   

இப்படிப் பேசிக்கொண்டு வந்தவர் இறங்கும் இடமான கும்பகோணம் வரும்போது எதிர்பாராதவிதமாய் மார்பைப் பிடித்துக்கொண்டு இறந்தும் விடுகிறார்.  

கதையின் முடிவில் ஜானகிராமன் இப்படி முடிக்கிறார்.

‘டாக்டர் உதவியில்லாமல் அக்பர் சாஸ்திரி மனிதன் செய்கிற கடைசி காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.’

இனி இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் புரட்டிப் பார்க்கலாம்.

                                                                                     (இன்னும் வரும்)

தினமணி இதழுக்கு நன்றி..

தினமணியில் நூல் அரங்கம் என்ற பகுதியில் என்னுடைய திறந்த புத்தகம் என்ற நூலின் விமர்சனம் வந்துள்ளது. கீழே அதில் வெளி ஆனதைக் கொடுத்திருக்கிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி.

அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கி றது இந்தப் புத்தகம்.
கவிஞர், கதாசிரியர், பல் லாண்டுகள் ஒருசிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகி
றார். மொத்தம் ஐம்பது பதி வுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன
இத்தொகுப்பில். ‘அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் பற்றிய பதிவு ‘ஆத்மாநாம் சில குறிப்புகள்’. அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்மாநாம் நினைவாக நடந்த உணர்ச்சிபூர்வமான இரங்கல் கூட்ட விவரணையுடன் அந்தப் பதிவை நிறைவு செய்கிறார்.
பேராசிரியரும் நாவலாசிரியரும் கவிஞருமான நகுலனைப்பற்றிய பதிவில் அவருடைய ஐந்து கவிதைகள் இடம்பெறுகின்றன.
தமிழில் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவது பற்றியும், அதை விற்பதற்குப் படும் பாட்டைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
‘யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்? என்ற பதிவு நியாயமான கவலையை எழுப்பக் கூடியது. ‘இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு. சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை’ என்கிற அவரது அங்கலாய்ப்பு நிஜமாகிவிடக் கூடாதே என்ற கவலை நமக்கும் ஏற்படுகிறது.

திறந்த புத்தகம் – அழகியசிங்கர்; பக்.211; ரூ.170; விருட்சம், 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை -33

தினமணியில்……….

என் ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீதர்-சாமா எழுதிய மொத்த சிறுகதைகளையும் ‘வழங்க வளரும் நேயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். 161 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பின் விலை ரூ.120. இன்றைய தினமணி இதழில் இத் தொகுப்பைப் பற்றிய சிறிய விமர்சனம் வந்துள்ளது. அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி உரித்தாகும்.

வழங்க வளரும் நேயங்கள் – ஸ்ரீதர்-சாமா; பக்.161; ரூ.120, விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட் மெண்ட்ஸ் , 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.

தமிழ் இலக்கியத்தில் சிறு கதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக் கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துகதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக் கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங் குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், ‘வாக்கு’ எனும் கதையில் அம்மாவின் அர வணைப்புக்கு ஏங்கும் தேவியின் மூலம் இன்றைய சமூ கத்தின் பெரும்பான்மையான வளரிளம் பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளார். ஆயிரங்காலத்து பயிரான திருமண பந்தத்தின் பின்னால் இருக்கும் துன்பங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது அந்தகதை.

அதேபோல தொகுப்பில் உள்ள 11 கதைகளும் சமூக சூழலால் மனித நேயம் பாதிக்கப்படுவதையும், தனிமனித வாழ்வில் வெளிச்சமும், இருட்டும் சமமாக இருப்பதையும் நூலா:காட்டும் காலக்கண்ணாடிகளாகவே உள்ளன.
| ‘தொட்டில் பழக்கம் மரப்பெட்டி மட்டும்’ என்ற கதை கடைக்காரர், நுகர்வோர் இருவரையும் சமமான தராசுத்தட்டில் வைத்து எடைபோடுவதாகவும், மிகநுட்ப மான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டதாகவும் இருக்கிறது.

வழக்கத்தில் இருந்து மறைந்த சில சொற்கள், மீண்டும் படித்தாலே புரியும்படியான சில சொற்றொடர்கள் என சிலவற்றை மறந்து நாம் இந்த தொகுப்பைப் படித்தால் புதிய அனுபவங்களைப் பெறுவது உறுதி.

நீங்களும் படிக்கலாம் – 32

பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற பெயரில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் எம் ஜி சுரேஷ் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அப் புத்தகத்தை எல்லோரும் வாங்கி வாசித்து அறிவை விருத்திச் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதுவரை படித்த இதுமாதிரியான கோட்பாடு ரீதியாக எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக எழுதப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் இது ஒரு பாடப் புத்தகம் என்று கூட சொல்லலாம். தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இதுமாதிரியான புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றும் நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து எம் ஜி சுரேஷ் பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறார்.
போமோ என்றால் என்ன என்று சுரேஷ் முதலில் ஆரம்பிக்கிறார். போமோ என்கிற இந்த இரண்டெழுத்துப் பதம் போஸ்ட் மாடர்னிசத்தைக் குறிக்கிறது. போஸ்ட் மாடர்னிசம் என்று அழைக்கப்படும் பின் நவீன்த்துவத்துக்கு இப்போது வயது முப்த்தியெட்டு ஆகிறது என்கிறார்.
நான் உடனே உங்களை ‘அதிகாரமும் பின் நவீனத்துவமும்’ என்ற ஒன்பதாவது அத்தியாயத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறேன். அதில் சுரேஷ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“பின் நவீனத்துவத்துக்கென்று தனித்த கண்டுபிடிப்பாளர் என்று யாரும் கிடையாது. ‘ழாக் தெரிதா’, ‘மிஷல் ஃபூக்கோ’, ‘ரொலான் பார்த்’, ‘கில்ஸ் தெலூஸ்’, ‘இஹாப் ஹஸன்’, ‘ழீன் பொத்ரியார்’, ‘ழாக் லக்கான்’ போன்ற ஒரு குழு பின் நவீனத்துவச் சிந்தனையை வடிவமைத்தது.”
பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : ‘அதிகாரம் என்பது அறிவு என்ற அமைப்பின் செயல்பாடுகளால் வருவது. அது சமூகரீதியாக முறைமைப் படுத்தப்படும்போது சட்டமாகவும், சட்டங்களை அமலாக்கும் நிறுவனங்களாகவும் மாறிவிடுகிறது.’
‘அதிகாரங்கள் பல இருக்கின்றன. அதைப்போலவே வரலாறுகளும் பல இருக்கின்றன. ஒற்றையான ஓர் அதிகாரம் என்பது எப்படி இல்லையோ அதேமாதிரி ஒரு வரலாறு என்பதும் இல்லை’ என்பது பூக்கோவின் கருத்து.
இன்னொரு இடத்தில் பூக்கோ இப்படி குறிப்பிடுகிறார் : நவீனத்துவ அறிவு மனப்பிறழ்வுற்றவர்களையும், குற்றவாளிகளையும், நோயாளிகளையும் தகுதியற்றவார்களாக்கி விலக்கி ஒதுக்கி வைக்கிறது.
‘துண்டாடப்பட்ட அதிகாரங்களை, ‘அதிகாரத்தின் நுண் அரசியல்’ என்று குறிப்பிடுகிறார்.
நுண் அலகுகளாக அதிகாரம் எங்கெல்லாம் நிலவுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்களும் நிலவுகின்றன.
பெண்கள், வெள்ளையர் அல்லாதவர், சிறைக்கைதிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் போன்றோரை மற்றமையாக வைத்துப் பார்க்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சுரேஷ் அப்படியே மொழிபெயர்த்துக் கூறாமல் நம்மிடையே நிலவும் புராணங்களையும் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
‘ரொலாண் பார்த்’ சொல்கிற மாதிரி, ‘நாம் ஒரே நேரத்தில் கதாசிரியனாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கிறோம்,’ என்கிறார்.
இதில் நம் நாட்டு ராமாயணத்தை சுரேஷ் உதாரணம் காட்டுகிறார். ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரை அதில் ஒரு பாத்திரமாக லவ-குசர்களுக்கு ஒரு குருகுலத்தில் பாடம் சொல்லித் தருபவராக வருகிறார்.
‘ஃபூக்கோவை’ப் பொறுத்தவரையில் சுயமான முழுமையான மனிதன் என்று யாரும் இல்லை.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
‘தெரிதா’வின் முக்கியமான கோட்பாடு ‘கட்டவழிப்பு’. அதைப்போலவே ‘ஃபூக்கோவி’ன் முக்கியமான கோட்பாடு ‘உரையாடல்’ என்பதாகும்.
‘பின் நவீனத்துவமும் இலக்கியமும்’ என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி எழுதுகிறார் :
‘பின் நவீனத்துவம் என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது ‘கட்டவிழ்ப்பு’ என்ற வார்த்தை. அது ‘தெரிதா’ அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக நம் ஞாபகத்தில் வந்து மோதுவது ‘உரையாடல்’ என்ற வார்த்தை. இது ‘மிஷல் பூக்கோ’ முன்வைத்தது. மூன்றாவதாக நம் கவனத்துக்கு வருவது ‘ஆசிரியனின் மரணம்.’ இதைச் சொன்னவர் ‘ரொலாண் பார்த்’. இந்த மூன்று கருத்துகளும் சேர்த்து பின்நவீனத்தை ஒரு முப்பரமாணம் கொண்ட அறிதல் முறையாக உருவாக்கியிருக்கின்றன.
ஒரு பிரதியை எழுதும்போதுதான் அவன் ஆசிரியன். எழுதி முடித்தபின் அவனும் ஒரு வாசகன், பார்வையாளன், விமர்சகன். அவன் எழுதிய பிரதியை அவனே விமர்சிக்கலாம். கிழி கிழி என்று கிழிக்கலாம் என்று சொல்லி ஆசிரியனின் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்தை பார்த் ரத்து செய்கிறார்.
மூன்று மரணங்கள் என்ற அத்தியாயத்தில் சுரேஷ் இப்படி குறிப்பிடுகிறார்.
1. நவீனத்துவத்தின் மரணம்
2. உண்மையின் மரணம்
3. செக்ஸின் மரணம்
பின் நவீன யுகத்தில் உண்மை இறந்து போய்விட்டது. இங்கு எதுவுமே நிஜமில்லை. டிவி, கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற எல்லாமே நகல்களின் பிம்பங்களைப் பொழிந்தபடி இருக்கின்றன. நகல் உண்மைகளின் (ஹைபர் ரியல்) தாக்குதல்களுக்கு எதிர்ப்பின்றி நாம் ஆளாகிக்கொண்டிருக்கிறோம். நகல்தான் நமது காலத்தின் உண்மைகள் என்று அறிவித்த ‘ழீன் பொத்ரியார்’ ஒரு பிரெஞ்சுக்காரர்.
இப் புத்தகத்தில் ‘மொழியும் பின் நவீனத்துவமும்’ என்ற அத்தியாயம் கீழ் ‘ங’ என்ற எழுத்தை வைத்து ஒரு கண்டிபிடிப்பை செய்திருக்கிறார்.
‘ங’ – ப்போல் வளை’ என்கிறார் ஒளவையார் ஆத்திச்சுவடியில். இதில் ஒளவையாரின் கோணம் என்ன என்று பார்க்கும்போது,
‘தமிழ் மொழியிலே ‘ங’ என்ற எழுத்துதான் அதீத வளைவுகொண்டது. ஓர் எழுத்தை இதைவிட அதிகம் நெளிக்க முடியாது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ‘ங’ என்ற எழுத்தைப்போல் வளைந்து கொடுத்தால்தான் வெற்றியடைய முடியும், என்று ஒளவையார் சொன்னதாக ஒரு கோடி அர்த்தத்தை இதில் நாம் பெறுகிறோம். யோசித்துப் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் தெரிதாவுக்கு இன்னொரு அர்த்தம் கிடைக்கிறது.
ஒரு மனிதன் ‘ங’ என்ற எழுத்தைப்போல் அஷ்டகோணலாக வளைந்து கொடுப்பது மிக மோசமான செயலாகும். அப்படிப்பட்ட அவலநிலைக்குள்ளானவன் தன்மானம் இல்லாதவன்; சுயமரியாதை கெட்டவன் எனலாம். அப்படிப்பட்ட மனிதன் ஒருபோதும் முன் மாதிரியான மனிதனாக இருக்க முடியாது. மனிதன் நாணலைப்போல் வளைந்து கொடுக்கக் கூடாது. கொடிமரத்தைப் போல உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மனிதர்கள் இருக்கட்டும். இப்படி வளைந்துகொடுக்கும் இந்த ‘ங’ என்ற எழுத்துதான் தமிழ்மொழியில் இருந்துகொண்டு என்னத்தைச் சாதித்தது? ‘ங’ ப்போல் வளை என்ற இந்த ஒரு பழமொழியைத் தவிர வேறு எங்கே உபயோகப்படுத்தப்படுகிறது, என்று யோசித்துப் பார்க்கும்போது மருந்துபோல் சொல்லப்பட்ட ஒரு கருத்து விஷமாக மாறுவதை உணர முடிகிறது அல்லவா?
தெரிதாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை அமெரிக்காவை அள்ளிக்கொண்டு போயிற்று.
19 அத்தியாயங்கள் கொண்ட இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து நவீன அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பின்நவீனத்துவம் என்றால் என்ன? – எம்.ஜி சுரேஷ் – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்புர் சாலை, புத்தாநத்தம் 621310 – தொலைபேசி : 04332 273444 – விலை : ரூ.100

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாக தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியை குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.
இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம். ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு அசைவ ஹோட்டலுக்கு வருகிறார். காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார். அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார். பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார்.

கதை ஆரம்பத்தில் இப்படி ஆரம்பிக்கிறது. ‘அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று.’
இப்படி ஆரம்பிக்கிற இக் கதை காப்பியைப் பற்றி முதலில் மட்டும் சொல்லிவிட்டு கதை நடுவில், ‘ஒரு இடத்தில் காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே ஏன் ஈயை விரட்டினோம்ý என்று அவனுக்குத் தோன்றியது. பின் கதை முடிவில், அவன் எதிரே üஅரைக்கோப்பை அளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபிமீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவு மூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது..’ என்று முடிக்கிறார்.
இப்படி இந்தக் கதையைப் படிக்கும்போது காப்பியைப் பற்றிய தனிக் கதையாகத் தோன்றும்.
ஆனால் வேறு விதமாகப் படிக்கும்போது இரு நண்பர்களைப் பற்றிய கதையாகக் கூட இது இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன் அறிமுகமான ஒரு நண்பன்.
இப்படிப்பபட்ட நண்பனைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் ;

‘அவனுக்கு அவனைப் பற்றிய பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில் கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப்படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன். எப்பேர்ப்பட்ட நண்பன் என்கிறான் இன்னொரு நண்பன்.’ இந்த இடத்தில் இக் கதை இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாக நமக்குத் தெரிய வருகிறது.
அதே சமயத்தில் காந்தியைப்பற்றிய கதையாகக் கூட இதை அடையாளப்படுத்தப்படலாம். இரண்டு நண்பர்கள் காந்தியைப் பற்றி முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காந்தியைப் பற்றி தீவிரமாகப் பேசுகிறார்கள். இந்த இடத்தில் இக் கதையை காந்தியைப் பற்றிய கதையாக நாம் அடையாளப் படுத்தி விடலாம்.
ஒரே சமயத்தில் மூன்று விதமாக ஒரு கதையைப் பார்க்க முடியும் என்பதை இக் காந்தி கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

உண்மையில் எளிதான வாசகனால் இக் கதையை அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொண்டு விட முடியுமா என்பது தெரியவில்லை.
இப்படி எழுதப்படுகிற கதையில் பளிச் பளிச்சென்று வரிகள் அங்கங்கே தட்டு தெறித்துவிழுகின்றன.
‘சிம்னி விளக்கு ஒளி விழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதைபோல – அப்படித் தேவதைகள் இருக்குமானால் – பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுபட்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக் கற்பனையை, உள் மன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது’ என்கிறார். இப்படி அபாரமான வர்ணனையைப் படிக்கும்போது அசோகமித்திரனா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.
காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது கதை இப்படி நகர்கிறது. ‘அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தன்ககு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப்படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி. எப்பேர்பட்ட மனிதர். வழக்கம்போல் அசோகமித்திரன் அதே கிண்டல் தொனியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இப்படி ஆரம்பிக்கிற கதையில் காந்தியைப் பற்றி இரு நண்பர்களும் காரசாரமாகக் கருத்து வேற்றுமை வெளிப்படுவதுபோல் பேசுகிறார்கள். காந்தி ஒரு மகத்தான மனிதர் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொரு நண்பர் அவருக்கு எதிராக வாதிடுகிறார். இறுதியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதில்லை.

‘ஆர் பி டட்’ எழுதிய ‘இன்றைய இந்தியா’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எதிர்வாதம் செய்கிறான் ஒரு நண்பன். இங்கிருந்து இக் கதை இன்னொரு பிரிவுக்குப் போய் விடுகிறது. அதாவது காந்தியால் நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது. அதாவது 4 மாதங்களாக எல்லாரையும் விட நெருக்கமாகப் பழகிய ஒரு நண்பர் பிரிந்து விட்டாலும் துவேஷத்துடன் இன்னொரு நண்பரைப் பற்றி பொய் வதந்திகளை அவிழ்த்து விடுகிறார்.
கீழ் கண்டவாறு இக் கதையை விவரித்துக் கொண்டு போகலாம்:

ஒரு அசைவ ஹோட்டலில் காப்பி சாப்பிட வருகிற ஒருவர் எதிரில் இடம் பெற்றுள்ள காந்தி படத்தைப் பார்க்கிறார். உடனே அவர் நினைவு காந்தியைப் பற்றி அவரும் அவர் நண்பரும் போட்டுக்கொண்ட சண்டை ஞாபகத்திற்கு வருகிறது. அதனால் அவர்களுக்குள் இருந்த நெருக்கமான நட்பு உடைந்து போய்விடுகிறது. துவேஷத்தோடு தன்னைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான் என்கிறார் ஹோட்டலில் காபி சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் நண்பர்.

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான் என்று சொல்லிக்கொண்டே காந்தியுடன் இதைத் தொடர்புப் படுத்திக்கொண்டு போகிறார்.
அதனால் இக் கதையில் காந்தி மூன்று விதத்தில் சேர்க்கப் படுகிறார்.

அசைவ ஹோட்டல் – காபி – காந்தி
காபிப் கோப்பை – ஈ – காந்தி
நண்பர் – உயர்ந்த கருத்து – காந்தி
நண்பர் – எதிர் கருத்து – காந்தி
நண்பர் 1 – நண்பர் 2 – காந்தி ஒரு காரணம். நண்பரைப் பற்றி தூஷணை செய்ய.
அசோகமித்திரன் எழுதிய கதைகளில் வித்தியாசமான கதையாக எனக்கு இது தோன்றுகிறது.
(28.10.2017 அன்று குவிகம் இலக்கியக் கூட்டத்தில் பேசிய கட்டுரை)

சாருநிவேதிதாவின் இராச லீலா என்ற புத்தகம் பற்றி

 நண்பர்களே
வணக்கம்.  நீங்கள் இங்கே ஆவலுடன் கூடியிருப்பது இராச லீலா என்ற 614 பக்கங்கள் கொண்ட நாவலைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்று.  தமிழில் 3 எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எங்கு போய் பேசினாலும் அபிமானிகள் கூடி விடுவார்கள்.  உங்களுக்கும் இது தெரியும்.   3 எழுத்தாளர்களில் ஒருவர் சாருநிவேதிதா.  சாரு நிவேதிதாவிற்கு அபிமானிகள் அதிகம் உண்டு.  ஆனால் சாருநிவேதிதா விஷயத்தில் அபிமானிகளும் எதிர்ப்பவர்களும் உண்டு.  நான் வேண்டுமென்றே பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்கும் மற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் மட்டும்தான் உண்டு.  இந்த எதிர்ப்பாளர்கள் சாருநிவேதிதாவின் புத்தகத்தைப் படித்து அவரை கண்டபடி திட்டவும் திட்டுவார்கள்.  ஏன் சிலசமயம் வன்முறையில் இறங்கினாலும் இறங்குவார்கள்.  சாருநிவேதிதாவும் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருக்க மாட்டார்.  நான் இந்தப் புத்தகத்தைப் பாராட்டி சொன்னால், அபிமானிகள் என்னை வாழ்த்துவார்கள்.  ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரை எதிர்ப்பதுபோல் என்னையும் எதிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.   நான் எந்தப் பக்கம் என்பதை அறிய நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்..
சரி, சாருநிவேதிதாவின் அபிமானிகள் தவிர, உங்களில் எத்தனைப் பேர்கள் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள்?  அந்தப் புத்தகம் எப்படி இருக்குமென்று பார்த்திருக்கிறீர்களா?    நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்க மாட்டீர்கள்.  ஏன் நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா என்பது கூட எனக்குச் சந்தேகம்.
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப் புத்தகம் ஒரு போன் செய்தால் உங்கள் வீட்டிற்கே வந்து விடும்.  612 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  உண்மையில் இதன் விலை 600 ரூபாயிக்கும் மேல்தான் வைத்திருக்க வேண்டும்.  சரி இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கத் தயாராக உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு என்ன வயது இருக்க வேண்டும்.
நான் பள்ளிக்கூடம் படிக்கும் வயதில் இருக்கும்போது பேப்பர் கடை முன்னால் நின்று என்ன பத்திரிகை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.  என் மாமா ஒருவர் கல்கண்டு பத்திரிகையை வாங்கச் சொல்வார்.  குமுதம் ஆனந்தவிகடன் ராணி போன்ற பத்திரிகைகளை வாங்க வேண்டாம் என்று சொல்வார். அவையெல்லாம்  ஆபாஸப் பத்திரிகைகள் அவருக்கு.   படித்தால் மனசு கெட்டுவிடும் என்பார்.  ஆனால் அப்போது டிவி இல்லாத காலம்.  இப்போது டிவியை எல்லா வயதினரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் பார்க்கக் கூடாததைப் பார்க்கத் தவறுவதில்லை.  ஆபாஸமும், வன்முறையும்தான் டிவி சீரியல் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.  குழந்தைகள் முன் நாம் இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகள் மனம் கெட்டுப் போக வாய்ப்புள்ளது.
ஆனால் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு என்ன வயதிருக்க வேண்டும்.  எனக்கு வயது 60க்கு மேல் ஆகிவிட்டது.  எனக்கு இப் புத்தகத்தைப் படிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை.  என் வீட்டிலும் வயதானவர்கள்தான் இருக்கிறோம்.  மேலும் ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்துப் படிக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறது.  என் வீட்டில் என்னைத் தவிர தமிழ்ப் புத்தகங்களை யாரும் படிக்க மாட்டார்கள்.  ஏன் தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் புத்தகங்களைக் கூட படிக்க மாட்டார்கள்.  யாரும் நான் வைத்திருக்கும் புத்தகத்தைத் தொடக் கூட மாட்டார்கள்.  உங்கள் விஷயம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன்.  நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பதால் இந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஆனால் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள்!  நீங்கள் டேபிளில் இந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியூர் சென்று விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது நீங்கள் என்ன புத்தகம் படிக்கிறீர்கள் என்று யாராவது எடுத்துப் பார்ப்பார்களா?  ராஸ லீலா என்ற புத்தகத்தை அப்படி எடுத்துப் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அவர்களுக்கு உங்களை விட வயது குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.  இதுமாதிரியான புத்தகங்களை அவர்கள் படித்த அனுபவம் இல்லாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களைப் பார்த்து அவர்கள் திட்ட எல்லா வாய்ப்பும் உண்டு.  பள்ளிக்கூடம் படிக்கும் புதல்வனோ புதல்வியோ இருந்தால்  நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க அனுமதிப்பீர்களா?   இப் புத்தகம் படிக்க இன்னும் கொஞ்சம் வயது வர வேண்டும்.  நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் 614 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தைப் படிக்க நேரம் இருக்கிறதா உங்களுக்கு?  நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால், அலுவலகம் போய்விட்டு வந்து இப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொள்வீர்களா?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் நீங்கள் புத்தகம் படிக்க எடுத்துக்கொள்வீர்கள்?  உண்மையில் தண்டமாக ஒரு தமிழ் சினிமா பார்க்க உங்கள் பொழுதை செலவு செய்வீர்கள்.  ஆனால் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றாது.  ஏன்?
சில சினிமாக்களைப் பார்க்க இரண்டு விதமான சான்றுகளை அளிப்பார்கள்.  ஒரு சான்று யு இன்னொரு சான்று எ.  எ சான்றிதழ் பெற்றப் படமாக இருந்தால், அதைப் பார்க்க 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.  புத்தகத்திற்கும்  அதுமாதிரியான பிரிவைக் கொண்டு வந்துவிடலாôம்.  சாருநிவேதிதாவின் இந்த நாவலைப் படிக்க எ சான்றிதழ் அளிக்கலாம்.
நீங்கள் கேட்கலாம்.  எல்லாம் சரி, இன்னும் இப் புத்தகம் உள்ளேயே போகாமல் வேற எதுவோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.
நீங்கள் அப்படி நினைப்பது தவறு.  நான் ராஸ லீலாவைப் பற்றிதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  614 பக்கம் உள்ள  இந்த நாவலை நான் ஒரே மூச்சில் படித்தேன்.   தினம் தினம் நான் பல மணி நேரங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டேன்.  படிக்க படிக்க கீழே வைக்க முடியவில்லை.  சில புத்தகங்களைப் படிக்கும்போது நமக்குத் தேவையில்லாத அலுப்பு வந்து விடும்.  முழுக்க முடிப்பதற்குள் படிக்க முடியாமல் நின்றுவிடும்.  இதோ நீங்கள் எதிர்பார்த்தபடியே நேற்று அதாவது 11ஆம் தேதி அக்டோபர் மாதம் 2016 அம் ஆண்டு இப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.   அதாவது இந்தக் கட்டுரையை 12ஆம் தேதியிலிருந்து எழுத ஆரம்பித்துள்ளேன்.  நீங்கள் ஆவலாக இருப்பது தெரிகிறது.  நான் எத்தனைப் பக்கங்கள் எழுதுவேன் என்று எனக்கு இப்போது  தெரியாது.    உடனே அவருடைய இன்னொரு நாவலான புதிய எக்ûஸல் எடுத்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  100 பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.   இந்த நாவலை  எப்போது முடிப்பேன் என்று தெரியாது.   புதிய எக்ûஸல் என்ற  நாவல் 867 பக்கங்கள் கொண்டது.   இந்த நாவலும் வித்தியாசமாக எழுதப் பட்டிருக்கிறது.  ராஸ லீலா மாதிரி தெரியவில்லை.  இதிலிருந்தே சாருநிவேதிதா ஒரு திறமையானவர் என்று தெரிகிறது.  சரி சரி நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.  இதோ ரா4 லீலா என்ற நாவலுக்கு வருகிறேன்.
ராஸ லீல6ô என்ற நாவலில் பாகம் ஒன்றில் கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் பின்குறிப்புகளும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பிக்கும்போதே சாருநிவேதிதா எப்படி ஆரம்பித்துள்ளார் என்பதைக் காட்ட விரும்புகிறேன்.  நான் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நீங்கள் முகம் சுளிக்காமல் கேட்க வேண்டும்.
‘வீட்டில் ஐந்து மணிக்கே எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பும்போது மலஜலமெல்லாம் சரியாகப்  போயிருக்க முடியாது.  நம்முடைய உணவில் ஐரோப்பியர்களின் உணவைப் போல் நார்ச்சத்து இல்லையாதலால் அவர்களுடைய மல வெளியேற்றத்துக்கும் நம்முடைய மல வெளியேற்றத்துக்கும் எக்கச்சக்கமான வித்தியாசம் உள்ளது.  அவர்களுக்கோ இரு இரண்டு நிமிட வேலை.  அதனால் ரயில் கிளம்பியதும் ஒவ்வொருவராக கக்கூûஸ நோக்கிப் படையெடுப்பார்கள்.  அதில் பெருமாளும் சேர்த்திதான்.’
சென்னையிலிருந்து வேலூருக்குப் போய் பணிபுரிபவர்களின் அவதிகளை துல்லியமாக சாரு நிவேதிதா வர்ணித்துக்கொண்டு போகிறார்.  இதில் படுகிற அவதிகளை கொஞ்சங்கூட கூச்சப்படாமல் விவரித்துக் கொண்டு போகிறார். உண்மையை எழுதுகிறார்.   நமக்கு படிக்க படிக்க சங்கடமாக இருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால் இதைப் படிக்கும்போது நாமும் இந்த அவதியில் மாட்டிக்கொள்வதுபோல் தோன்ற வைக்கிறார்.  அதுதான் அவர் வெற்றி.    எனக்கு அதுமாதிரி தோன்றுகிறது.  உங்களுக்குத் தோன்றவில்லையா? நானும் மயிலாடுதுறையில் பணிபுரிந்தவன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சொன்னையை நோக்கி வருவேன்.  பின் வேண்டா வெறுப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி திங்கள் அலுவலகம் போவேன்.  அப்படி வண்டியில் போவதில் பலவித சங்கடங்கள்.  பஸ்ஸில் செல்லும்போது தாங்க முடியாத அவதி.  ஒரு சமயம் உட்கார சீட்டுக் கூட கிடைக்காமல் 7 மணி நேரம் நின்றுகொண்டே மயிலாடுதுறைக்குப் போயிருக்கிறேன்.   அதன்பின் ரொம்ப நேரம் நிற்பது எனக்கு சங்கடமாக மாறிவிட்டது.  அதனால் நின்றுகொண்டு ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதனால்தான் உட்கார்ந்து உங்களுடன் இந்த நாவலைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் பொதுவாக சாதாரணமாக ஒரு நாவலை படித்துப் பழகி இருப்பவராக இருக்கலாம்.  அப்படிப் பழகியவர்களுக்கு இந்த நாவலைப் படிக்கும்போது முகம் சுளிக்கும்படி இருக்கும்.  ஏன் இதையெல்லாம் இப்படி வர்ணிக்கிறார் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.  இது மாதிரியான தருணத்தில் ஏன் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்று கூட நீங்கள் முடிவெடுக்கலாம்.  ஆனால் அதற்காக இந்த நாவலை படிக்காமல் இருந்து விடாதீர்கள்.  உண்மையில் சாரு நிவேதிதா தத்ரூபமான ஒரு சங்கடமான சூழ்நிலையைத்தான் யதார்த்தமாக சொல்லிக்கொண்டு போகிறார்.
உங்களுக்கு நான் இந்த நாவலைப் பற்றிய முன்கதை சுருக்கம் சொல்லப் போவதில்லை.  ஏன் என்றால் நீங்கள் இந்த நாவலை வாங்கி படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பீர்கள்..என் முன் கதை சுருக்கத்தைக் கேட்டு இதுதானே கதை எதற்கு வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள்.  வாங்க வேண்டிய புத்தகத்தை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.   அதனால் ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்லும்போது யாரும் அந்த புத்தகத்தைப் பற்றிய சாராம்சத்தை முழுவதும் சொல்லி விடக் கூடாது. அதைப்போல மோசமானது வேறு ஒன்றுமில்லை.  ஆனால் ஒரு புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் நான் எதுமாதிரி சொன்னால் நீங்கள் வாங்குவீர்கள்..அது கஷ்டமான விஷயம்தான்.  ஒரு வாசகனாகப் படிப்பவருக்கு இந்த நாவல் மூலம் என்ன தெரிய வருகிறது.  என்ன சாருநிவேதிதா  இந்த நாவல் மூலம்  கொண்டு போகிறார் என்பதைத்தான் சொல்ல முயற்சி செய்யப் போகிறேன்.
இரண்டு விஷயங்கள் எனக்கு இந்த நாவல் மூலம் தெரிந்தது. ஒன்று உடல் உளச்சல்.  இன்னொன்று மன உளச்சல்.  உடல் உளச்சல் மன உளச்சலாகக் கூட மாறி விடுகிறது. அதை அவர் சொல்லிக்கொண்டு போகிற விதம் சிறப்பாக உள்ளது.
சில தினங்களுக்கு முன் நான் வாக் செய்துகொண்டிருக்கும்போது என்னுடன் நடந்து கொண்டிருக்கும் ஒரு நண்பரிடம்,  ‘சாருநிவேதிதாவின் இந்த நாவல் பிரமாதம் என்று சொன்னேன்.’  அவர் இலக்கியப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்.  அவர் உடனே, “அப்படி சொல்லாதீர்கள்.” என்றார்.  “ஏன்?” என்று கேட்டேன்.  “அது எல்லோரும் சொல்வது…படித்துவிட்டு எளிதாக சொல்லி விடுவார்கள்,” என்றார்.  “பின் எப்படி இதைப் பற்றி சொல்வது?  வேறு வார்த்தை இருக்கிறதா?”  என்று கேட்டேன்.  அவரால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.  ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு க நா சு எழுதுவதென்றால், அந்தப் புத்தகம் ஒரு வெற்றி என்று எழுதுவார்.
அப்படி சொல்லவில்லை என்றால் பின் எப்படித்தான் அந்தப் புத்தகத்தை விவரிப்பது. அதனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், சாருநிவேதிதாவின் இந்த நாவல் ஒரு வெற்றி. பக்கம் 217ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : üஎன் எழுத்து ஒரு உரையாடல்.  எனக்குள் நான் நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் என்கிறார் . தமிழில் இந்த நாவலுக்கு முன்னோடி உண்டா?  உண்டு.  ஜி நாகராஜன், கரிச்சான் குஞ்சு என்ற இரண்டு எழுத்தாளர்களைப் பற்றிதான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.  ஜி நாகராஜன் விலை மாதர்களிடம் போவதைப் பற்றி தன் எழுத்தில் எழுதியிருக்கிறார்.
 அதேபோல் பசித்த மானுடம் என்ற நாவலிலும் ஆணின் காமத்தை விவரித்துக் கொண்டே போகிறார் கரிச்சான் குஞ்சு.  ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி விட்டார் சாருநிவேதிதா.   ஒரு ஆணின் காமத்தை வெளிப்படுத்தும் நாவல் என்று இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
பல உத்திகளை நாவல் மூலம் கொண்டு வருகிறார்.  நேர்க்கோட்டுத் தன்மையில் இந்த நாவல் எழுதப்படவில்லை.  நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படுகிற எழுத்தில்  ஒரு ஆரம்பம்  முடிவெல்லாம் இருக்கும்.  நாவல் இப்படித்தான் போகும் என்று படிப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.   பின் முடிவு வரும். .  முடிவைக் கூட வாசகன் யூகித்திருப்பான்
.  ஆனால் நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படாத தாவும் தன்மையைக் கொண்ட இந் நாவலை நீங்கள் முதல் பக்கத்திலிருந்துதான் படிக்க வேண்டுமென்பதில்லை.  எதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் வாசிக்கலாம்.  நீங்கள் வாசிக்கும் இடத்திலிருந்து நாவலின் போக்கை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். முன்னும் பின்னும், பின்னும் முன்னுமாகக் கூடப் படிக்கலாம்.   நகுலன் என்ற எழுத்தாளரைப் பற்றி உங்களில் சில பேருக்காவது தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  அவருடைய நாவல்கள் பெரும்பாலும் நேர்கோட்டுப் பாணியில் எழுதப்பட்டிருக்காது. சாருநிவேதிதாவின் நாவல்களும் அப்படித்தான்.  சுயசரிதத்தைத்தான் நாவலாக நகுலன் எழுதியிருப்பார்.  சாருநிவேதிதாவின் நாவலும் சுயசரிதமாக இருக்கிறது.  பொதுவாக சுயசரிதம் என்று சொல்வதில் முழுவதும் உண்மை என்பது இல்லை.  சுயமாக சரிதத்தை எழுதபவர்கள் 50 சதவீதம்தான் எழுதியிருப்பார்கள்.  ஆனால் சாருவின் சுயசரிதமான இந்தப் புத்தகத்தில் 90 சதவீதம் உண்மை இருக்கும் போல் தோன்றுகிறது.  இந்த நாவல் மூலம் தன்னையே உரித்துக் காட்டுகிறார்.  அதனால் இது சுய சரிதத்தையும் மிஞ்சும் நாவல் என்று கூடச் சொல்லலாம்.  கண்ணாயிரம் பெருமாளின் கதை ஒரு சுய சரிதம் சார்ந்த கதைதான் அந்தக் காதாபாத்திரம் மூலம் சாருநிவேதிதா ஒளிந்துகொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.  அவருடைய அஞ்சலக அலுவலகத்தைத்தான் கதையாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.
இந்த நாவலில் கதை என்பது இல்லை.  ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாமா அதுவும் இல்லை.  பித்தனைப் பற்றி எழுதிய பித்தன் கதையா..  இல்லை.. இல்லை..படிக்க படிக்க நீங்கள படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். சரி இதை ஒரு மனப்பிறழ்வு உள்ள ஒருவரின் கதை என்று நீங்கள் தீர்மானித்தால், எனக்கு உடனே ஞாபகம் வருவது கோபி கிருஷ்ணனும், எம் வி வெங்கட்ராமனும்.  மனப்பிறழ்வின் உச்சத்தில் இருந்து எழுதியவர் கோபிகிருஷ்ணன்.  காதுகள் என்ற நாவல் எழுதியிருக்கிறார் எம் வி வெங்கட்ராமன்.  ஓயாமல் கேட்கும் குரலில் பதிவுகளை நாவல் முலம் கொண்டு வருவார்.  சாருநிவேதிதாவின் நாவலில் மனப்பிறழ்வின் தன்மை இருந்தாலும், மேலே குறிப்பிட்ட  இவர்கள் இருவரின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகப் படுகிறது.
இந்த நாவலின் முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்..கண்ணாயிரம் பெருமாள் அவருடைய கதையை நாவலில் சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சாருநிவேதிதாவும் நாவலில் எழுதுகிறார்.  அதனால் இதை மெட்டா பிக்ஷன் என்றும் கூறலாம்.
பக்கம் 219ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : ‘சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல.  என் எழுத்து ஒரு உரையாடல், எனக்குள் நான் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்’ என்கிறார்.  இப்படிச் சொல்வதே பின் நவீனத்துவ நாவல்களின் ஒரு வழி.
கதை ஆரம்பிக்கும் முன்,  முன் குறிப்புகளும், பின் ஒவ்வொரு கதை முடிவிலும் பின் குறிப்புகளும் கொடுத்துக்கொண்டே செல்கிறார். இந்த பின்குறிப்புகள் சிலசமயம் கதையை விட நீண்டு விடுவதாக தோன்றுகிறது.  கதைக்குள் கதையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.  கதையைக் கூடப் படிக்காமல் இந்தப் பின் குறிப்புகளைப் படித்துக்கொண்டே போகலாம்.  இது இந்த நாவலில் காணப்படும் வித்தியாசமான முயற்சி.
இதோ இந்த நாவலன் பக்கங்களைத் திறப்பதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  இதோ ஏதோ ஒரு பக்கத்தை எடுக்கிறேன்.  படிக்கத் துவங்குகிறேன்.
கதை : இருபத்தொன்று
தமிழ் மொழி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.  ஆனால் இருநூறு பேருக்காகவும், முன்னூறு பேருக்காகவும் இலக்கியம் படைப்பதில்தான் சற்றும் உடன்பாடில்லை.  என்னைப் பொறுத்தவரை எந்த மொழியில் எழுதினாலும் ஒன்றுதான்.  ஆனால் தமிழர்களும் மற்ற மொழிக்காரர்களும் ஏன் தங்களுடைய மொழியை மட்டும் உயர்ந்ததாகவும், மாற்றான் மொழியை மட்டமாகவும் கருதுகிறார்கள் என்று புரியவில்லை.  பாரதியே இது விஷயத்தில் பொய் சொல்லியிருக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகும் சாருநிவேதிதா கண்ணுக்கும் காதுக்கும் இனிமையாக இருக்கும் ஒரே மொழி அரபிதான் என்கிறார். அதில் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க ஆரம்பிக்கிறார்.  அந்த மொழியில் உள்ள எழுத்துக்களை இந்த அந்தியாயம் முழுவதும் எழுதி உள்ளார்.
எனக்கு இதைப் படிக்கும்போது, ஞானக்கூத்தனின் கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது.  ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு.  ஆனால் பிறர் மேல்  விடமாட்டேன்’ என்பதுதான் அந்த வரி.
கலை வெளிப்பாட்டில் உடலின் மொழியைப் பற்றி ஆய்வு செய்பவர்களையே தொடர்ந்து கவனப்படுத்தி வருவதாக சாருநிவேதிதா தெரியப்படுத்தி உள்ளார்.  மார்க்கி தெ ஸôத், ஜார்ஜ் பத்தாய், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற பல எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.  ஹென்றி மில்லர், யெரிக்கா ஜென்க் என்ற பெயர்களை ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை.
இந்த நாவலில் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வதைப் பற்றி செய்தி வருகிறது.  கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்கு மேலாக அது தொடர்ந்து விவிரிக்கப்படுகிறது. படிப்பவரின் மனதை சஞ்சலப்படுத்தும் பக்கங்களாகவே இதைக் கருதுகிறேன். ஆனால் அதையும் நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறார்.
‘எனக்கு மன அழுத்தமும், மனப் பதற்றமும் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது நான் பதினைந்து ஆண்டுகள் வேலை பார்த்த தபால் துறை.  அதுவே என்னை மரணத்தின் விளிம்புவரை தள்ளியது.  ஆனால் அதே தபால்துறைதான் பைபாஸ் சர்ஜரி மூலம் நான் உயிர் பிழைத்துக்கொள்ளவும் வழி செய்தது.  ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொடுத்தது என்கிறார் ஒரு இடத்தில்.’
நண்பர்களே, 614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் படித்தவிட்டு  நான் இன்னும் எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  பரிட்சைக்குத் தேர்வு எழுதும் மாணவனைப் போல் நான் இருக்கிறேன்.  எந்தத் தேர்விலும் நான் பார்டர் மார்க் வாங்கித்தான் பாஸ் செய்திருக்கிறேன்.  இந்தத் தேர்விலும் எனக்கு பார்டர் மார்க்குதான் கிடைக்குமா?  சாருநிவேதிதாதான் பதில் சொல்ல வேண்டும்.
புதுமைப்பித்தன் காலத்திலேயே படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது இயல்பாக இருந்துள்ளது  புதுமைப்பித்தன் அவருடைய கவிதைகள் மூலம் பலரை தாக்கி உள்ளார்.
வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்ற விமர்சகர்கள் ஒருவரை ஒருவர் கட்டுரைகள் மூலம் சாடியிருக்கிறார்கள்.  இது சகஜமான சாதாரண விஷயம்.  நீல பத்மநாபன் ஒரு மகா நாவல் எழுதியிருக்கிறார். நாவல்  முழுவதும் அவர் சந்தித்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைப் பற்றி விளாசி எழுதி உள்ளார்.  அந்த நாவல் பலருடைய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  ஏன் நகுலன் கூட சகப் படைப்பாளிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.  ஆனால் அவரை யாரும் ஒன்றும் சொன்னதில்லை.
பிரமிள் கடைசிக்காலத்தில் அவருக்கு ஸ்டோரோக் வந்து செயல்படாமல் இருப்பதற்கு முன்பு கூட சுந்தர ராமசாமியையும், வெங்கட்சாமிநாதனையும் திட்டி நீண்ட கவிதைகளை எழுதி உள்ளார்.  அதன்பின்தான் அவருக்கு ஸ்டோரோக் வந்தது. சகப் படைப்பாளிகளைத் தீண்டுவதுமூலம் பிரமிளுக்கு எழுதுவதற்கான உத்வேகம் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.  இன்னொரு விததத்தில் அவரால் தொடர்ந்து வேறு விதமாக எழுத முடியாமல் போவதால் இப்படி நிகழ்கிறதோ என்றும் தோன்றுகிறது.
சாரு நிவேதிதா அவருடைய ராசலீலா நாவலில் சகப் படைப்பாளிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.  சிறுபத்திரிகை நடத்துபவர்கள் கூட அவரைத் தொந்தரவு செய்திருக்கிறார்கள்.  அதை இந்த நாவலில் அங்கங்கே தெரியப்படுத்தாமல் இல்லை.   நம்வீட்டில் சகோதரர்கள் கருத்து வேற்றுமையால் ஒருவரை ஒருவர் சாடுவதுபோல்தான் இதை நான் பார்க்கிறேன்.  மேலும் அவர் சந்தித்தவர்களைப்பற்றியும், அவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றியும்  கதைப் பொருளாக மாற்றி விடுகிறார்.  இதை அப்படித்தான் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இன்னொரு 100 வருடங்கள் கழித்து இந்த நாவலை அப்போதுள்ள வாசகன் படிக்கும்போது, அதில்  குறிப்பிடுகின்ற எல்லாம் சம்பவங்களாகவும், பெயர்களாகவும்தான் தென்படும்.
இந்த நாவலை மூன்று விதமாகப் பார்க்கலாம்.  முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும். முன்குறிப்பு 1, 2, 3 என்று எழுதி இருக்கிறார்.  சென்னையில் இருக்கும் கண்ணாயிரம் பெருமாள்  சென்னையிலிருந்து வேலூருக்கு சுருக்கெழுத்தாளராக வேலூர் பிரிவு தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலத்தில் சுருக்கெழுத்தாளராகப் போகிறார்.  அவர் ஒரு சுருக்கெழுத்தாளர் மட்டுமல்ல எழுத்தாளரும். தீவிர வாசகர்.  அவர் எழுதவதைக் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.  அங்கு பணிபுரியும்போது ஏற்படும் அவதிகளை விவரித்துக்கொண்டே போகிறார்
.அங்கே சந்திக்கும் காயத்திரி என்ற பெண்ணுடன் ஏற்படும் உறவு கண்ணாயிரம் பெருமாள்  சென்னை ஸர்க்கிள் ஆஃபீஸ÷ற்கு மாற்றப்படும்போது முடிவுக்கு வந்து விடுகிறது.
இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.  பின்குறிப்பு எழுதுவதன் மூலம் ஒரே வரியில் காயத்திரியின் உறவை கண்ணாயிரம் பெருமாள் முடித்து விடுகிறான்.
கதை 1, கதை 2, கதை 3 என்று ஒவ்வொரு அத்தியாயங்களும் தொடருகிறது.  இதில் கதைக்குப் பின் கூறப்படும் பின்குறிப்பு கதையைவிட அதிகமான பக்கங்களில் வருகிறது.
கதைகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலர் எழுதியிருக்கிற பொன்மொழிகளை வெளிப்படுத்திக்கொண்டு போகிறார் ஆசிரியர். ஸில்வியா பிளாத், ஷேக்ஸ்பியர், ஆஸ்கர் ஒயில்ட் என்றெல்லாம் முக்கியமான ஆசிரியர்களின் கூற்று வெளிப்படுத்தப்படுகிறது. கதை பதின்மூன்று என்ற அத்தியாயத்தில்  6 பக்கங்கள் எந்தவித பாராவும் பிரிக்காமல் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.  அதில் ஒரு இடத்தில் உங்கள் குழந்தையை விட உங்கள் பெற்றோரை விட விடவிட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட என்று இரண்டு வரிகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.
கதை 26லிருந்து முதல் பகுதி முடிவடைந்து விடுகிறது.  இரண்டாவது பகுதி ராஸ லீலா என்று ஆரம்பிக்கிறது.  ராஸ லீலா முன்னுரை முற்றும் என்று முடித்து மூன்றாவது பகுதி ஆரம்பமாகிறது.  இந்த மூன்றாவது பகுதியில் 1லிருந்து 64 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார்.  அதர்வ வேதம், பட்டினத்தார், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்துடன் உதாரணங்களுடன் ஒவ்வெபாரு அத்தியாயமும் ஆரம்பமாகி முடிகிறது.   இதில் வித்தியாசமான எழுத்து முறையை 64 பகுதிகளிலும் கடைப்பிடித்திருக்கிறார்.  இதைப் படிக்கும் போது காதல் கடிதங்களைப் படிப்பதுபோல் படுகிறது.  ஒரு பெண்ணின் அந்தரங்கம் சுழன்று சுழன்று வருகிறது.
இந்த நாவலில் சில பக்கங்கள் இருக்கின்றன.  அந்தப் பக்கங்களை நீங்கள் வாய்விட்டு சத்தமாக எல்லோர் முன்னாலும் படிக்கவே முடியாது.  இந்தப் புத்தகத்தின் 454ஆம் பக்கத்தை நீங்கள் சத்தம்போட்டு படிக்கவே முடியாது. அதுவும் பெண்கள் முன் படிக்கவே முடியாது.  அதனால் இந்த நாவல் ஆபாஸமான நாவல் என்று ஒதுக்க முடியாது.  தமிழில் இதுமாதிரியான தன்மை உள்ள நாவலை இதுவரை யாரும் இவ்வளவு துணிச்சலாக எழுதியிருக்க முடியாது. இதை ஒரு பதிப்பாளர் பதிப்பித்திருக்கிறார் என்றால் அவரையும் பாராட்ட வேண்டும்.  ஒவ்வொருவரும் ஏன் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்றால்  இந்த நாவலை எழுதியிருக்கும் விதத்திற்காக.  தமிழில் யாரும் எழுத முடியாத ஒரு நாவலை எழுதியிருப்பதற்காக.  அடிப்படையில் தொடர்ந்து இந் நாவலை வாசிக்கத் தூண்டிக்கொண்டிருக்கும் வசீகரத்திற்காக.
அதனால் சாருநிவேதிதா எழுத்திற்கு எதுமாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று யோசிக்கும்போது, அவர் நாவலுக்கு  தமிழில் இலக்கிய விருது அளிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  அதற்கான தகுதி அவர் நாவலுக்கு இருந்தாலும்.
(டாக் சென்டரில்  புத்தக நண்பர்கள் கூட்டத்தில் 25.10.2016 அன்று வாசித்தக் கட்டுரை)
ராஸ லீலா – நாவல் – சாருநிவேதிதா – கிழக்குப் பதிப்பகம் – 614 பக்கங்கள் – விலை ரூ. 500

நீங்களும் படிக்கலாம்….23

  கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி?
 
எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள ‘நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்’ என்ற புத்தகத்தைப் படித்தேன்.  முன்னுரையில் ‘இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு’ என்று  குறிப்பிடுகிறார் எம் டி எம்.   இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப்  பெற்ற பார்வையாகும் என்கிறார்.  இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா?
இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம்.  இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார்.   அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகளை முற்றிலும் புதியதாக மாற்றுகிறார் ஜøலியோ கிறிஸ்தவா. மேலும், üபெண்ணிய எழுத்தைப் பற்றி குறிப்பிடும்போது உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாதுý என்கிறார் கிறிஸ்தவா.  மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிûதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைக்கிறார் கிறிஸ்தவா.  கிருஸ்தவாவைப் பற்றி விவரித்துக்கொண்டே போகிறார் எம்டிஎம்.  படிக்க படிக்க புதிய சிந்தனையை உருவாக்குகிறது. கிறிஸ்தவா புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது.
‘கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு,’ என்ற கட்டுரையில் பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.
புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குராணாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து பறவையைக் கவனிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.
இது அதிகம் பாவிக்கப்பட்ட பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்  என்று கவிதை போகிறது.
பொதுவாக புனைகதையாளர்களையும் தத்துவாதிகளையும் சரித்திர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக் குரல்களையும் நம்பலாம் என்கிறார் முத்துக்குமாரசுவாமி.  இந்தக் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.
காலவழுவமைதி, சினிமாச்சோழர், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், ஆகஸ்ட் 15 போன்ற ஞானக்கூத்தன் கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புக் கவிதையின் வடிவத்தைக் கட்டமைத்தவை என்கிறார்.  பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980 களில்தான் என்கிறார்.
எம்டிஎம் குறிப்பிட்ட சில கருத்துக்களை மேலும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
– நகுலனில் நான் – நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாக இருக்கிறது.
– ஆத்மநாம் கவிதை தன்னிருப்பை முழுமையாக நிராகரிக்கிற தன்மை கொண்டது.
– சி மணி கவிதையில் வெளியே செல்லமுடியாமல் மாட்டிக்கொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறது.
பசுவய்யாவின் கவிதையிலோ நீ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுததுகிறது என்கிறார் எம்டிஎம்.  உதாரணமாக சவால் என்ற பசுவய்யாவின் கவிதையைக் குறிப்பிடுகிறார்.
போர்ஹெசின் கவிதைகளை முன் வைத்து எம்டிஎம் கூறுபவை : ‘மனம் தன் போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின் கவிதைகள் நினைவுக்கு வந்தன .’
படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம் – அகம் – வரலாறு – பிரபஞ்சம் என்ற தொடர்பை வெளிப்டுத்தி மொழி போதாதிருப்பதைப் பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன.  இதற்கு உதாரணமாக பல கவிதைகளைக் குறிப்பிடுகிறார்
போர்ஹெசின் கவிதைகளை கடந்த 25 வருடங்களாக வாசிக்கிறவர் எம்டிஎம்.  மற்ற கவிஞர்களின் கவிதைளை விட அதிகமாக வாசித்திருப்பது போர்ஹெயின் கவிதைகள் என்கிறார்.  எம்டிஎம் போர்ஹெயின் கவிதைகளை பற்றி குறிப்பிடும்போது, அவருடைய தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கிறார்.  அவர் தந்தைக்கு ப்ரௌனிங்க் என்ற கவிஞரின் கவிதைகள் பிடிக்குமாம்.  போர்ஹெஸ÷க்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு. உற்சாகமாகக் கூறி அப்பாவின் ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறந்து வைக்கிறார் எம்டிஎம்.
மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம்.  தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸ÷டமும் காண்பதாக குறிப்பிடுகிறார்.  நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன்.  போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை.  ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.
அதேபோல் நவீன கவிதைகள் என்பது தான் – பிறன்மை என்பற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு பிரசித்தம் என்கிறார்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவக் குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார்.  பாரதியார் கவிதைகள் இன்னும் நவீன வடிவமாக இருக்கின்றன என்று பல உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.
‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று சாடுகிறாரர் எம்டிஎம்.  இதைத்தான் என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும்.  பெரும்பாலோர் ரசனையின் அடிப்படையில்தான் விமர்சனம் செய்வார்கள். இன்றைய தமிழ் சூழலில் யாரும் ஒரு புத்தகத்தைப் படிக்கவே தயாராக இல்லை.  அப்படிப் படித்தாலும் அது குறித்து எதுவும் எழுதத் தயாராய் இல்லை.  அப்படியொரு சூழலில்  முதலில் விமர்சனம் செய்வதை தமிழில் ரசனை மூலமாக ஆரம்பித்து வைத்தவர் க நா சு.  எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்கிற முறையும் இதுதான்.  ஆனால் எம் டி எம் இப்படி சொல்கிறார் : அவர் சார்ந்து இருக்கிற விமர்சன முறை பின்னை காலனிய, பின் நவீனத்துவ முறை என்கிறார். இந்த மாற்று விமர்சன முறையை கையாளுபவர்கள் பலர் ஒரே மாதிரியாக இதை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.
காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
ஏனெனில் தந்ûதையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல.  அது  மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.
  கோபோ அபேயை ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர் என்கிறார்.
சூஃபி இசையைப் பற்றி குறிப்பிடும்போது ராஜஸ்தானின் புகழ் பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பதம்பூஷண் கோமல் கோத்தாரியைப் பற்றி விவரிக்கிறார்.  அவருடன் சூஃபி இசையைச் சேகரிக்க பலமுறை பாலைவன கிராமங்களில் அலைந்த அனுபவத்தை படிக்க படிக்க நாமும் அந்த அனுபவத்தை உணர்வதுபோல் உணரச் செய்கிறார.
ஒரு கதையைப்போல் சில கட்டுரைகளை எம்டிஎம் விவரித்துக் கொண்டு போகிறார்.  அதில் ஒன்று உஸ்தாத் பில்மிலலாஹ் கான் என்ற கட்டுரை.  பத்ரி என்ற நண்பர் மூலம் உஸ்தாத்தைப் பார்த்துப் பேசுகிற நிகழ்ச்சியை விவரிக்கும்போது அக் கட்டுரை படிப்பவரையும் பரவசப்படுத்தத் தவறவில்லை.
‘ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக் கலைஞன் அடையாளம் காண்கிறான்.  அந்த உணர்வின் எல்லைகளைப் பரிசோதிக்கிறான்.  அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்துக் கவனித்து மேலே போகிறான்.’ என்று எம்டிஎம் விவிரித்துக்கொண்டே போகும்போது, வேற ஒரு பார்வையில் இந்துஸ்தான் இசையை ரசிக்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.
அஞ்சலி  என்ற தலைப்பில் பாடகர் பரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பற்றி குறிப்பிடுகிறார்.  புதிய பார்வையில் எழுதிய எம்டிஎம்மின் கதையான பத்மநாபனின் கூடு குறித்து ஒன்றை குறிப்பிடுகிறார்.  அந்தக் கதை பிரசுரமான தினத்தில்தான் ஸ்ரீனிவாஸ்  டிரைவ் இன்னில் சந்திக்கிறார்.  மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை சொல்வது பற்றிய கதை அது.  எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீனிவாஸ் எம்டிஎம்மைப் பார்த்து.   ‘என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?’ என்ற வரியை வாசித்துக் காட்டுகிறார் எம்டிஎம்.  ஸ்ரீனிவாஸ் புன்னகைத்தபடி அந்த வரியை மெதுவாக வாசித்துக் காட்டினாராம்.  பத்மநாபனின் கூடு கதைப் பிரதி கிடைக்குமென்றால் அதை ஸ்ரீனிவாஸ÷ற்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டு  சொல்கிறார் எம்டிஎம்.  இத் தொகுதியில் இரண்டு தலயாத்திரைகள் பற்றியும், பாகேஸ்ரீராகம் பற்றியும், எம்டிஎம்மின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் சுவாரசியமாக சொல்லிக்கொண்டே போகிறார்.
இப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டு விதமாக நான் உணர்கிறேன்.  ஒன்று  எம்டிஎம்மின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.  இந்தப் பகுதியை அவர் பல சிறு கதைகளாகவோ நீண்ட நாவலாகவோ எழுதியிருக்கலாம்.  ஆனால் அவர் சுய சரிதமாக எழுதி உள்ளார். இன்னொரு பகுதியில் அவர் பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தையும், பல எழுத்தாளர்கள் பற்றிய கூற்றையும் விவரித்துக்கொண்டு போகிறார்.   கோட்பாட்டு முறையில் இப்புத்தகத்தை அணுக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம் இது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நிலவொளி எனும் இரகசிய துணை – கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கங்கள் : 263 – பதிப்பு : 2014 – விலை : ரூ.200 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310இ திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444
                                                                                                               (நன்றி :  மலைகள்.காம்)