போன்சாய் ம‌ர‌ நிழல்


இருள் பூத்துத் தொங்கும்
போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து
வெளிவ‌ருகிறாள்
அர‌ளிப்பூ தேவ‌தை
பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின்
மேல்
க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம்
ப‌ழைய‌ க‌விதையொன்றின்
பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார்
காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன்
எல்லாக் க‌விதைக‌ளிலும்
தேவ‌தை
என‌ அடித்து எழுதுகிறான்
ஆசிரிய‌ சித்த‌ன்

விமான நிலைய வரவேற்பொன்றில்…



#
பயணக் களைப்பாய்
இருக்கலாம்.
போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.
எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.
ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.
சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.
இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன் நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

நாவிஷ் செந்தில்குமார்



உனக்குமட்டுமொரு
ரகசியம் சொல்கிறேன்
என்றொருவன் காதில் சொன்னதை
எனக்குமட்டும்
சொல்வதாகச் சொல்கிறான்
இன்னொருவன்...
ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள
புள்ளிக்கும்
நாளும் கசிகின்ற
எங்கள் வீட்டு
தண்ணீர்த்தொட்டியிலுள்ள
ஓட்டைக்கும்
நானறிந்து வித்தியாசமேதும் இல்லை

எதையாவது சொல்லட்டுமா….6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள்.

எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது.

பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்).
எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன்.

எல்லோரும் தீவிர எழுத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கவிதைகளைத் திறமையாக எழுதுகிறார்கள். கதைகளை விதம் விதமாக தருகிறார்கள். இந்தப் புதியவர்களின் வேகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தப் படைப்பையும் எப்படி எழுத வேண்டுமென்ற கோட்பாடு என்றெல்லாம் கிடையாது. ஆனால் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகிற தன்மை புதியவர்களிடம் உள்ளது.

பாரதியாரின் வசனக் கவிதைதான் புதுக்கவிதை உருவாகக் காரணம். எந்தப் படைப்பும் ஒன்றைப் பார்த்துதான் இன்னொன்று உருவாகிறது. பாரதி வசனக் கவிதை மட்டும் எழுதவில்லை என்றால், இன்றைய புதுக்கவிதை உருவாகி இருக்குமா?

க.நா.சு ஒருபடி மேலே போய் புதுக்கவிதை எளிதில் வாசிக்கும்படி உரைநடை பாணியில் எழுதி அசத்தி விட்டார்.

இதை புதியவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது. தானாகவே தெரிந்து கொண்டார்களா? இவர்கள் படைப்புகளைப் பிரசுரிப்பது மிக முக்கியமான ஒன்று. நான் ஒவ்வொரு முறையும், வலைத்தளத்திலும், நவீன விருட்சம் இதழிலும் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறேன்.

நவீன விருட்சம் 85வது இதழை வரும் 3 நாட்களில் தயாரிக்க வேண்டும். முடியுமா என்று பார்க்கிறேன். யார் படைப்புகளாவது விட்டுப் போயிருந்தால் ஞாபகப்படுத்தவும்.

சில கவிதைகள்

தூக்கி எறியும்
பழைய செருப்புகளும்
புதிதில்
ஆசையாக வாங்கியதுதான்

*
வரும்போது
இனிதே வரவேற்று
போகும்போது
இனிதே வழியனுப்பும்
இரு பக்கங்கள்
வாய்க்கிறது..
ஊர் எல்லை
பெயர்ப்பலகைக்கே.
*
ஊருக்குப்போயிருக்கும்
மகனின்
மழலைச்சிரிப்பை
எண்ணுந்தோறும்
தனிமையில் விரக்தியாய்
சிரித்துக்கொள்கிறான்

அதற்கும் பெயர்
சிரிப்புத்தானா?
*
கைகளேந்திப் பெற்றுக்கொண்டு
திரும்பி நடக்கும்

அந்தக் கண்களை
உற்று நோக்குங்கள்
திரளும் கண்ணீர்

எதையாவது சொல்லட்டுமா….5

நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நான் கும்பகோணம் பக்கத்தில் உள்ள எந்த ஊரில் இருப்பேன் என்பது தெரியது. எனக்குப் பிடித்த ஊரான மாயவரத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த கம்ப்யூட்டரெல்லாம் இங்கயே வைத்துவிட்டுப் போய்விடுவேன். சில காலம் அங்கு பழகி, வேறு கம்ப்யூட்டரில் என்னை நுழைத்து திரும்பவும் எல்லாம் கொண்டு வர வேண்டும்.

இந்த முறை எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை.

ஏன் பிடிக்கவில்லை? என் அப்பாவிற்கு வயது 88 ஆகிறது. அவரை விட்டுப் போவது ஒவ்வாத விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. என் அப்பா என்னை மாதிரி ரொம்ப சாதுவான மனிதர். நல்ல மனிதர். யாருடன் சண்டைக்குப் போக மாட்டார். கொடுத்ததைச் சாப்பிடுவார். பலருக்கும் உதவி செய்யும் நோக்கம் உடையவர். 88வது வயதில் கூட வெற்றிலைப் பாக்குக் கூட போட மாட்டார்.

எனக்குப் பிடித்த ஊரான மாயூரம் கிடைத்தால், நான் என் அப்பாவை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைப் பார்த்துவிட்டு திங்கள் மாயூரம் போவேன். ஆனால் ஆண்டவன் சித்தம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத்தில் இருக்கும் என் பெண்ணை போனில்தான் பேசமுடியும் நினைத்தால் போய்ப் பார்க்க முடியாது.

எனக்கு சர்க்கரை நோய் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயும் கூட சேர்ந்து இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியாமல் கூட போய்விடுகிறது. சமீபத்தில் நான் எடுத்த ரிப்போர்ட்டில் சர்க்கரை அளவு கடந்து போயிருந்தது. தனியாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பாவிற்கு சர்க்கரையும் இல்லை. உயர் ரத்த அழுத்தமும் இல்லை.

என்ன புத்தகங்கள் படிக்கப் போகிறேன்? எது மாதிரி எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். நவீன விருட்சம் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பேன்.

எப்போதும் நான் வெளியிடும் புத்தகங்கள் 100 பிரதிகள் கூட விற்பதில்லை. விற்பனையாளர்கள் பணம் தருவதில்லை. நானே ஏமாந்து இலவசமாகப் புத்தகங்களைக் கொடுத்து விடுவேன். இந்த முறையும் 4 புத்தகங்கள் கொண்டு வருகிறேன். ஒரு புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் ‘இயல்பு நிலை’ . மொழி பெயர்த்தவர் திறமையானஎன் நண்பர். இன்னொரு புத்தகம் ஞானக்கூத்தனின் கவிதைக்காக என்ற புத்தகம். கவிதைகளைப் பற்றிய நுணுக்கம் நிரம்பியகட்டுரைகள் அடங்கிய புத்தகம். மூன்றாவது புத்தகம் சில கதைகள் என்ற என் குறுநாவல்கள் தொகுதி. நான்காவது புத்தகம். பிரமிளின் விடுதலையும் கலாச்சாரமும் என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம்.

நவீன விருட்சம் வெளிவந்து 21 ஆண்டுகள் முடிந்து 22 ஆண்டின் துவக்கத்தில் 85வது இதழ் வெளிவருகிறது. கையைப் பிசைந்து கொண்டிருக்கிறேன். மாற்றல் ஒரு பக்கம். சக்கரை நோய் இன்னொரு பக்கம். யாராவது உதவி செய்வார்களா என்று போய்க் கேட்டால் எப்படிப் பேசுவது என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. வயது கூடிக்கொண்டே போகிறது. வினயம் தெரியவில்லை. சரி அது போகட்டும் நடப்பது நடக்கட்டும். நாராயணன் செயல் என்பார் என் அப்பா. ஒரு விதத்தில் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

டெரகோட்டா சிற்பங்கள்

கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்டியாக பிசையவேண்டும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
நீங்கள் விரும்பும் வடிவத்தின்
அச்சில் வார்க்கவும்
அடைக்கப்பட்ட அறையில்
புத்தகங்களை எரித்து
க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள்
டாக்டர் பொம்மையோ
கணினி வல்லுனரோ
விரும்பும் சிற்பங்கள் தயாராகும்.
களிமண்ணின் விருப்பத்தை
மட்டும் கேட்காதீர்கள்.

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம் தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து குதூகலத்துடன் என்னை வரவேற்றது அங்கே ஆனந்தமும், ஆச்சர்யங்களும் ஒவ்வொரு மணற்துகள்களிலும் பரவிக்கிடந்தன காற்றலைகளில் மழலைச் சிரிப்பொலி தேவகானமாய் தவழ்ந்து கொண்டிருந்தது மோட்ச சாம்ராஜ்யம், தனக்குத் தேவதைகளாக குட்டி குட்டி அரும்புகளை தேர்ந்தெடுத்திருக்கின்றது அங்கு ஆலயம் காணப்படவில்லை அன்பு நிறைந்திருக்கின்றது காலம் கூட கால்பதிக்கவில்லை அவ்விடத்தில் சுயம் இழந்து நானும் ஒரு குழந்தையாகி மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன் அந்தக் கணத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுகையில் அதைக் கொண்டு இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது எங்கு நோக்கினும் முடமாக்கப்பட்ட பொம்மைகள் உடைந்த பந்துகள் கிழிந்த காகிதக் குப்பைகள் சேற்றுக் கறை படிந்த சுவர்கள் களங்கமில்லா அரும்புகள் எனக்கு கற்றுத் தந்தது இவைகள் வீட்டிற்குத் திரும்பியதும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அலமாரி பொருட்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன், தரையில் விசிறி எறிந்தேன் ஏக்கத்தோடு ஊஞசலின் மீது அமர்ந்தேன் எனது வீட்டை அங்கீகரிக்குமா குழந்தைகள் உலகம் – என்று யோசனை செய்தபடி…

மரணம் ஒரு கற்பிதம்

நேற்று ஒரு கார்டு வந்தது. ..”மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம்
போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் ”
என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி
இப்படிக்கு சிவராமன் ” என்று கையெழுத்திட்டிருந்தது.

கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது.
யார் இந்த சம்பந்தம்… யார் இந்த சிவராமன் இவர்களுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா
சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ?

வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு
அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது.
அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின்
வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில
ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ
மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில்
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பவர். இன்று இறந்து போயிருப்பவர்…

இந்த யதார்த்தத்தில் திரு சம்பந்தத்தின் சோகமான
மரணம் என்னை எந்த வகையில் பாதிக்கக் கூடும் ..ஏதோ ஒரு
மனிதனின் இழப்பு என்ற தகவலைத் தாண்டி ?

இன்னும் யோசித்துப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில்
அவர் எப்போதுமே இறந்தவர் தான்

ஒருவரின் சாவு என்பது அவருக்கும் நமக்கும் உள்ள அன்றாட
நெருக்கத்தையும் சார்புகளையும் உறவையும் பொறுத்தே
முக்கியத்வம் பெறுகிறது..

நமது குடும்பம் காலப்போக்கில் குடும்பங்களாக விரிவடைந்து
அவைகள் மேலும் உபகிளைகளாக பல ஊர்களில் படர்ந்து
பல்கிப் பெருகும் போது நமக்கு ஆரம்பத்தில் தெரிந்த குடும்ப
உறவுகள் பிறகு வெறும் நட்புக்களாகி பிறகு வெறும் அறிமுகங்களாக
பிறகு அதுவும் நீர்த்துப் போய் அவர்கள் அதிகம் பாதிக்காத எங்கோ
வாழ்கின்ற நபர்களாக மாறிப் போய்விடுகிறார்கள்

இந்த மாற்றங்களளே ஒரு வித மரணமாக அல்லது மரணத்தின்
வெவ்வேறு வகையான சாயல்களாக எனக்குத் தோன்றுகிறது.

* * * **

சில வருஷங்களுக்கு முன் என் சகோதரர் இறந்து போனார்.
அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள்.

சகோதரர் இறந்து போன சில தினங்களுக்குப் பிறகு ஒரு
நண்பர் வாசலில் வந்து கதவைத் தட்டினார்.. திறந்தேன்…

”ராமனாதன் இல்லையா..? ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே
வந்தார். அவர் வெளியூருக்கு போய் விட்டு பத்து நாட்களுக்கு பிறகு
அப்போது தான் வருகிறார்.. நாங்கள் அவர் முகத்தை பார்த்துக் கொண்டு
எப்படி இதை சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றோம்..

அவருக்கு எங்கள் மௌனம் அர்த்தமாகவில்லை. அந்த சமயம் எங்கள்
அண்ணி தலை விரிகோலமாக பொட்டு இல்லாமல் வெளியே வந்து
எட்டிப் பார்த்து நண்பரைப் பார்த்தவுடன் ”ஓ”வென்று அழுதார்.. ”ஒங்க நண்பர் போய்ட்டார் ”……..

வந்த நண்பர் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் தலையைப் பிடித்துக்
கொண்டு கீழே தடாலென்று விழுந்தார்.. ”அய்யோ அய்யோ..’ என்று
கதறினார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை

”ஊர்லேருந்து வந்தவுடனெ இன்னிக்கு கண்டிப்பா வந்து பாப்பேன்னு
சொல்லியிருந்தேனே..இப்படி என்னை ஏமாத்திட்டு போய்ட்டானே ! இனிமே
அவன் மாதிரி ஒரு மனுஷனை எங்கெ போய் பாப்பேன்..” என்று வாய் குளரி
புலம்பினார்… வெகுநேரம் ..

நண்பனின் இந்த நிரந்தரப் பிரிவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக
அவருக்கு தோன்றியது.

மரணம் அதன் முழு உக்கிரத்துடன் அவரை துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் விம்மி அழுத பின்பு மெள்ள தாங்கி எழுந்தார்.

”ராமனாதனுக்கு இந்த புஸ்தகத்தை கொடுக்கலாம்னு ஊர்லேருந்து வாங்கிண்டு வந்தேன்..இதை என் ஞாபகமா அவன் போட்டொ அடியிலெ வைச்சுடுங்கோ..
என்று ஒரு புஸ்தகத்தை மேஜையின் மேல் வைத்தார்..

அதன் தலைப்பு ”Life is beautiful ”

** ** ** **

தான் இறந்து போன பிறகு
நண்பர்களில் யார் யார் எந்த எந்த விதமாக அனுதாபத்தை தெரிவிக்கிறார்கள்
விரோதிகள் எவ்விதம் சந்தோஷப்படுகிறார்கள்
என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை
பேப்பரில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தான் ஒரு மேதை
அவன் பெயர் P. T Barnum அமெரிக்காவில் ஸர்க்கஸ் கலையில் புரட்சிகள்
செய்த ஒரு வித்யாசமான மனிதன் ..

மனித உள்மனக் கருத்துகளை கிளறிப் பார்க்க மரணம் இவனுக்கு
ஒரு வசதியான நாடகமாக அமைந்தது….

** ** **

ஒரு பெரிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரியில் அவசரப்
பிரிவில் சேர்க்கப் பட்டு தீவிரமான சிகிச்சையில் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும் போதே அவர் மரணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்த சில அரசியல் பிரமுகர்கள் அவசர ஆத்திரத்தால்
அந்த தலைவரின் இரங்கல் செய்தியை பார்லிமெண்டில் அறிவித்துவிட்டார்கள்.
பிறகு அல்லோல கல்லோலமாகி அந்த தவறான இரங்கலுக்காக
மன்னிப்புக் கோரப்பட்டது; சில ஆண்டுகளுக்கு முன்னால்..

இந்த சம்பவம் பலருக்கும் இப்போது நினைவுக்கு வரலாம்…

மரணம் சிலரை சில சமயம் முட்டாளாக்கி விளையாடுகிறது.

** ** **

கடைசியாக மரணத்தை பற்றிய இன்னொரு பரிமாணத்தை
சொல்லும் என் சிறிய கவிதை ஒன்று

”மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;

சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு. ”