எதையாவது சொல்லட்டுமா….6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள்.

எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது.

பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்).
எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன்.

எல்லோரும் தீவிர எழுத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கவிதைகளைத் திறமையாக எழுதுகிறார்கள். கதைகளை விதம் விதமாக தருகிறார்கள். இந்தப் புதியவர்களின் வேகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தப் படைப்பையும் எப்படி எழுத வேண்டுமென்ற கோட்பாடு என்றெல்லாம் கிடையாது. ஆனால் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகிற தன்மை புதியவர்களிடம் உள்ளது.

பாரதியாரின் வசனக் கவிதைதான் புதுக்கவிதை உருவாகக் காரணம். எந்தப் படைப்பும் ஒன்றைப் பார்த்துதான் இன்னொன்று உருவாகிறது. பாரதி வசனக் கவிதை மட்டும் எழுதவில்லை என்றால், இன்றைய புதுக்கவிதை உருவாகி இருக்குமா?

க.நா.சு ஒருபடி மேலே போய் புதுக்கவிதை எளிதில் வாசிக்கும்படி உரைநடை பாணியில் எழுதி அசத்தி விட்டார்.

இதை புதியவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது. தானாகவே தெரிந்து கொண்டார்களா? இவர்கள் படைப்புகளைப் பிரசுரிப்பது மிக முக்கியமான ஒன்று. நான் ஒவ்வொரு முறையும், வலைத்தளத்திலும், நவீன விருட்சம் இதழிலும் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறேன்.

நவீன விருட்சம் 85வது இதழை வரும் 3 நாட்களில் தயாரிக்க வேண்டும். முடியுமா என்று பார்க்கிறேன். யார் படைப்புகளாவது விட்டுப் போயிருந்தால் ஞாபகப்படுத்தவும்.

“எதையாவது சொல்லட்டுமா….6” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன