இனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்…

தமிழில் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சரியானபடி விருது கிடைப்பதில்லை. அங்கீகாரம் கிடைப்பதில்லை. உயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுக்கக் கூட மாட்டார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படித்தான் நடக்கும். நான் பழகிய பல படைப்பாளிகளுக்கு இந்த அங்கீகாரம் சிறிது கூட இல்லை. சி சு செல்லப்பாவின் சுதந்திரதாகம் என்ற மெகா நாவலுக்கு சாகித்திய அக்காதெமியின் விருது அவர் மரணம் அடைந்தபிறகுதான் கிடைத்துள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பரிசு வேண்டாமென்று சொல்லியிருப்பார். சி சு செல்லப்பா பிடிவாதக்காரர். அதேபோல் பரிசு கிடைக்காமல் விட்டுப்போன எழுத்தாளர்களின் பட்டியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நீண்ட பட்டியலையே கொண்டு வர முடியும்.

இந்தப் பரிசு கிடைக்க என்ன செய்வது என்று ஒவ்வொரு எழுத்தாளனும் யோசிக்கத் தொடங்கினால் அவன் எழுதாமல் ஓடிவிட வேண்டியதுதான். மா அரங்கநாதனின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது மா அரங்கநாதனின் சிறுகதைகளுக்கு ஒரு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்திருக்கலாமே என்று தோன்றியது. மனித நேயத்தை ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். இதுமாதிரி சிறுகதைகள் எழுதுகிற எழுத்தாளர் இந்தியா அளவில் மற்ற மொழிகளில் இருப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளரை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைப் போல எழுத்தாளர் தமிழ் மொழியைத் தவிர வேற மொழியில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவருக்குக் கிடைத்தது என்ன?

சார்த்தருக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்பே காம்யூவிற்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டது. அவருக்குப் பின் நோபல் பரிசை சார்த்தருக்கு அளித்தார்கள். அவர் வாங்க மறுத்துவிட்டார்.

நகுலன் என்ற எழுத்தாளர் என்னிடம் சொல்வார். என் புத்தகம் 36 பிரதிகள் அடித்தால் போதும். ஏன் என்று கேட்பேன். என் நண்பர்கள் 35 பேர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் புத்தகங்களை அனுப்பி விடுவேன். ஒரு பிரதியை நான் வைத்துக்கொள்வேன்.

இந்த அளவிற்கு தெளிவாக சிந்திக்கக் கூடியவர்தான் நகுலன். அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்க வில்லை. ஆனால் ஒருமுறை அவருக்கும் பரிசு கொடுத்தார்கள். அதை வாங்குவதற்கு அவர் பட்ட அவஸ்தையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேடையில் கூச்சத்துடன் அமர்ந்திருந்தார். பரிசு கொடுக்கும்போது எழுந்து சென்று பரிசு வாங்குவதுபோல் போஸ் கொடுக்கவில்லை. பரிசு பெற்றவுடன் ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிட்டார். சமீபத்தில் அசோகமித்திரனுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்க எல்லோரும் சிபாரிசு செய்தார்கள். இந்த முறை உங்களுக்கு நிச்சயம் ஞானப்பீட பரிசு கிடைக்கும் என்றேன். அவர் அதை நம்பவில்லை. அதெல்லாம் கிடைக்காது என்றார். அதை நினைத்து கற்பனையும் செய்யவில்லை. அவர் சொன்னது மாதிரி ஞானப்பீட பரிசு கிடைக்கவில்லை.

நான் வங்கியிலிருந்து ஓய்வுப் பெற்றபிறகு, நானும் சிறந்த கவிதைத் தொகுதி, கதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, நாவலுக்கு என்று எல்லாவற்றுக்கும் பரிýசு கொடுக்கலாமாவென்று யோசித்தேன். ஒரு பரிசு விதம் ரூ.10000 வரை பரிசு கொடுக்கலாமென்று யோசித்தேன். பின் அது மாதிரி கொடுப்பதில் உள்ள சிக்கலை என் நண்பர் சொன்னதும் அதிலிருந்து விலகிக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் போய் முடிந்திருக்கும். ஏன் இந்தப் புத்தகத்திற்குப் பரிசு கொடுத்தீர்கள் என்று சண்டைக்கு வந்து விடுவார்கள். அப்படி சண்டை போடுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் அதிகப் பக்கங்கள் கொண்ட அவர் புத்தகத்தை பரிசுக்கு அனுப்பி அது கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஏமாந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவர் எழுதிய புத்தகம் அவ்வளவு மோசமான புத்தகம் இல்லை. ஏனோ நடுவர்கள் கண்களுக்கு அந்தப் புத்தகத்தின் மேன்மை புலப்படவில்லை. என்ன செய்வது? பரிசு கொடுப்பதில் தேர்ந்தெடுப்பவர்களிடம் ஏதோ அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதேபோல் எதாவது போட்டிக்கு நான் கொண்டு வரும் புத்தகங்களை அனுப்புகிற தொற்று நோய் என்னை விட்டுப் போகவில்லை. தீராத இந்தத் தொற்று நோயிலிருந்து விலக வேண்டும். அதிலிருந்து விலகிப் பார்க்கிற மனோபாவம் வேண்டும். அங்கீகாரம் கிடைக்கவில்லை, விருது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்கோ யாரோ பரிசு அளிக்கிறார்கள். நாம் விலகியிருந்து பார்ப்போம். நமக்குப் பிடித்திருந்தால் நாமும் புத்தகங்களை வாங்கிப் படிப்போம். இல்லாவிட்டால் பேசாமல் ஒதுங்கி இருப்போம். புத்தகங்களை மட்டும் போட்டிக்கு அனுப்பிவிட்டு ஏங்கிக்கொண்டிருக்க வேண்டாம்.

கண்ணை மூடிக்,கொண்டு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன