ரசனை

நீர்ப்பறவை நீந்தாத வரையிலும்
மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும்
மழைத்திரவம் சிந்தாத வரையிலும்
சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும்
காற்று பலமாக வீசாத வரையிலும்
சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில்
தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும்
கரையோர பனைமரங்கள்

சுமை

எத்தனையோ கனமான பொருட்களைஇந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றனவிழாக்கள் போதும்சடங்குகள் போதும்இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும்கைகள் சுமையாக இருக்கின்றன

இன்று வரை

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள்.

O

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும்.இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள். உள்ளே சாப்பிட ஓட்டை ஒடிசலான நாற்காலிகள். டைனிங் டேபிள் கிடையாது. இதைத் தவிர சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாம்பு எதாவது வந்துவிடுமா என்ற பயமும் எனக்குண்டு. அங்கும் கழிவறை மோசம். தாழ்பாள் கிடையாது. ஒரு பக்கம் கையால் கதவைப் பிடித்துக்கொண்டுதான் யூரின் போகமுடியும். நான் சென்னையில் 18 மாதங்கள் பணிபுரிந்த ஹஸ்தினாபுரம் கிளையில் கழிவறை அடைத்துக்கொள்ளும். பீக் சம்மரில் தண்ணீர் வராது. அவஸ்தைதான்.
நான் சென்னையைக் கடந்தபிறகு என் நினைவெல்லாம் கழிவறைகளைப் பற்றிதான். கும்பகோணம் வட்டார அலுவலகத்திலும் கழிவறைப் பார்க்க சகிக்காது. ஏண்டா உள்ளே நுழைகிறோம் என்று இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். 406 சதுர அடிகள் என்று பெயர். அந்தப் பெயரில் ஒரு புத்தகமும் போட்டிருக்கிறேன். எலிகண்ட் ப்ளாட் பிரமோட்டர்கள் 406 சதுர அடியில் ஒரு சின்ன அடுக்ககம் கட்டித்தந்தார்கள். உண்மையில் நான் ஏமாந்துவிட்டேன். அந்த இடம் கட்டித் தரும்போது இப்படித்தான் அமையப்போகிறது என்று சற்றும் எண்ணவில்லை. மாம்பலத்தில் ஏற்கன஧அவர்கள் கட்டித் தந்த இடத்தைப் பார்த்த பிறகுதான் இந்த இடத்தைப் புக் செய்தேன். படுபாவி கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது. கழிவறை மோசமாக இருக்கிறதென்பது. அதைப் பார்த்த என் அலுவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணி, ‘டாய் டாயலட்’ மாதிரி இருக்கிறது என்றாள். எனக்கு அவமானமாக இருந்தது.
எதாவது ஒன்று சரியில்லை என்றால், அதைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருந்தால் எனக்குக் கனவு வரும். ஒரு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் அந்த இடத்தில் உள்ள சமையலறை சன்னலைப் பிடித்துக்கொண்டிருப்பது போல் ஒரு கனவு. வாடகைக்கு அந்த இடத்தை விடும்போது யாரும் குண்டாக வாடகைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். ஏன்என்றால் டாயலட்டைப் பயன்படுத்தப் படாதபாடு படுவார்கள்.
அந்த அடுக்ககம் கட்டி முடித்துத் தரும்போது, நடிகர் திலகம் சிவாஜி ஞாபகம்தான் வரும். ரொம்ப குண்டாக மாறி விட்டிருந்தார் அந்தச் சமயத்தில். அவர் என் அடுக்ககத்தில் வந்திருந்து வீட்டு டாயலட்டைப் பயன்படுத்தினால், உட்கார்ந்தால் அவரால் எழுந்திருக்கவே முடியாது. தண்ணீரையும் பயன்படுத்த முடியாது.
நான் அந்த அடுக்ககத்தை யார் பேச்சையும் கேட்காமல் வாங்கியிருந்ததால், என் மனைவி என்னுடன் 1 மாதம் மேல் பேசக்கூட இல்லை. அவ்வளவு கோபம். பிரமிள் சாந்தோமில் மீனவர்கள் குப்பத்தில் பொது கழிவறை பக்கத்தில் ஒரு அறையில் குடியிருந்தார். மழை காலங்களில் கழிவறையிலிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். மனிதர் பட்டப்பாடை நான் அறிவேன்.

எதையாவது சொல்லட்டுமா / 8

சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பார்த்து கண் சிமிட்டும்.
உத்யோகமின்றி பல நண்பர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். புத்தகம் போடுவதையும், பத்திரிகை நடத்துவதையும் நிறுத்தும்படி ஆகிவிடும். ஏதோ உத்தியோகத்தில் இருப்பதால் இந்த மட்டும் ஆண்டொன்றில் வாங்கும் Festival Advance ம், Medical Bill ம் விற்காதப் புத்தகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி சு செல்லப்பாவின் ராமையாவின் சிறுகதைப்பாணி புத்தகம் கடையில் போட்டால் கிலோ என்ன விலைக்கு எடுத்துக்கொள்வான் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நல்லவேளை அலுவலகம் என்னை தற்காலிகமாக காப்பாற்றி விட்டது. நானே எதிர்பார்க்காத சீர்காழி என்ற ஊருக்கு என்னை அனுப்பி விட்டது. முன்பு பந்தநல்லூர் மாதிரி இப்போது மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வந்தும் போயும் கொண்டிருக்கிறேன். சனிக்க்஢ழமைகளில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.
2 வாரங்களாக டூவீலரைக் கொண்டுவர படாதபாடு பட்டேன். விடுமுறை அதிகமாக எடுத்துவிட்டதால், லீவு என்றால் மூச்…மடி கணனி வந்துவிட்டதால் எல்லோருடனும் தினமும் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை விட படு மோசமான நிலையிலும் உத்தியோகத்தைப் பிடித்துக்கொண்டு தலை விதியே என்று இருக்கும் பல நண்பர்களின் சோகக் கதை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். அவர்களும் என்னுடன் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். என்ன சரியா?
(இன்னும் வரும்)

நீ விட்டுச் சென்ற மழை

நீ விட்டுச் சென்ற மழை
எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்
அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை
செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி
எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ

நான், பிரமிள், விசிறிசாமியார்……11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்து வந்தார். பொது கழிவறை பக்கத்தில் அவர் அறை இருந்தது. தமிழில் முக்கியமான படைப்பாளியான பிரமிள், யார் கவனமும் இன்றி தனிமைவாசியாக இருந்தார். எனக்கு அவர் நிலையைப் பார்த்து வருத்தமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் இருந்தார். பொதுவாக எழுதுபவர்களெல்லோரும் ஒரு மாதிரியான நிலையில்தான் இருப்பார்கள். ஏன் எழுதுபவர்கள் இல்லாமலே சாதாரண மனிதர்களே அப்படித்தான் இருப்பார்கள். எதாவது ஒன்றில் தீவிரமாக இருப்பவர்கள் அமைதியில்லாமல்தான் இருப்பார்கள். எதாவது ஆசை மனதில் பிடித்துக்கொண்டால் அந்த ஆசையை விட்டு வர முடியாது. இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது. ‘என்னிடம் அதிகமாக பணம் தங்கக் கூடாது. நான் எப்போதும் பிச்சை எடுப்பவனாகத்ததான் இருக்க முடியும்,’ என்பார் பிரமிள். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும். அலுவலகத்தில் என்னைப் பார்க்க வரும்போது, அலுவலகப் பெண்மணி ஒருவரைப் பார்த்து சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார் ஒருநாள். எனக்குத் திகைப்பாக இருந்தது. அந்தப் பெண்மணியின் பெயர் சித்திரா. எப்படி அவருக்கு அப்படி செல்லவந்தது என்று யோசிப்பேன். ‘ஒரே விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்,’ என்பார் பிரமிள். என் இயல்பு நான் எதாவது ஒன்றை ரசித்தால் அதில் நுழைந்து விடவேண்டும் என்று நினைப்பவன். சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போது நானும் கிரிக்கெட் வீரனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு மருத்துவனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். ஞாநி நடத்திய பரீக்ஷா நாடகத்தில் நான் நடித்தபோது ஒரு மெச்சத்தகுந்த நடிகனாக மாற வேண்டுமென்று கற்பனை செய்வேன். நான் எழுத ஆரம்பித்தபோது நான் எழுதுவதையெல்லாம் எல்லோரும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் ஒன்றுமே நடக்காது. பல ஆண்டுகளாக நான் விருட்சம் பத்திரிகையை நடத்துவதைப் பார்த்து, பிரமிள் ‘நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்றார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருமுறை பிரமிள் அவர் அறை வாசலில் விட்டிருந்த செருப்பை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மோசமான நிலை இது. அவர் செருப்பே ரொம்ப சாதாரணமாக இருக்கும். அதை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அலுவலகம் போகும்போது அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று அவர் அறைக்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன், என்னிடமிருந்த செருப்பைக் கழட்டிவிட்டுப் போகச் சொன்னார். அலுவலகம் போகும் சமயத்தில் செருப்பில்லாமல் போக முடியாது என்றேன். ஆனால் அன்று அலுவலகம் விட்டு வரும்போது, அவருக்கு செருப்பு வாங்கிக்கொடுத்தேன். அப்போதுதான் அவர் சோ ராமசாமியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை ஒரு கார்டில் எழுதியிருந்தார். ராமசாமி என்ற பெயரில் இருப்பவர்கள் எப்படி புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பது மாதிரி இருந்தது அந்தக் கவிதை. சோ ராமசாமி, ஈ வே ராமசாமி என்றெல்லாம் தொடர்புப் படுத்தி எழுதியிருந்தார். அந்தக் கார்டை என்னிடம்தான் கொடுத்தார். நான் எங்கோ தொலைத்துவிட்டேன். (இன்னும் வரும்..)

காக்கை கூடு

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி
எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

கூட்டிலிருந்த
கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்

இருக்கும் வரை சொறுவைத்த
அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.

இரண்டு கவிதைகள்


கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது


விசாரித்தல்

எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.

எதையாவது சொல்லட்டுமா….7

கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது.

சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது.

கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை. பல இடங்களுக்கு நடந்தே செல்கிறேன். இதனால் டூவீலர் இல்லாத குறையும் மனதில் உறுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மயிலாடுதுறையைவிட கும்பகோணம் இன்னும் வசீகரமாக இருக்கிறது. கூட்டம். கோயில்கள். என்று அமர்களமாக நல்ல களையாக கும்பகோணம் தெரிகிறது. பலதரப்பு மக்கள் வந்தவண்ணம் போய்வண்ணம் இருந்து கொண்டிருந்தார்கள்.

இன்டர்நெட் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் தமிழில் அடிக்க சென்னைக்குத்தான் கொஞ்ச நாட்களாக வர வேண்டியிருக்கும். முடிந்தால் ஆங்கிலத்தில் அடிக்க முயற்சிக்கலாம். ஆனால் விருட்சத்திற்கு வரும் கவிதைகளை வளைதளத்தில் போட்டுவிடலாம்.

இந்த காலச்சுவடு இதழ் கவிதை இதழாக வந்துள்ளது. அதில் முக்கியமாக சுகுமாரன் கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத்து பத்திரிகைதான் புதுக்கவிதையைத் தூக்கிவிட்டதாக எழுதி உள்ளார். உண்மையில் பாரதியின் வசனக் கவிதைகளுக்குப் பிறகு, புதுக் கவிதை முயற்சி ந பிச்சமூர்த்தி, க.நா.சு என்றெல்லாம் தொடங்கி விட்டது. புதுக்கவிதை என்ற பெயரை க.நாசுதான் கண்டுபிடித்தார். சுகுமார் அவருக்குப்பிடித்த சில கவிஞர்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

1978 வாக்கில் ஆத்மாநாம் தொடங்கிய ழ வைப்பற்றி குறிப்பிடவே இல்லை. அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் கடந்த 22 ஆண்டுகளாக வருவது அவர் ஞாபகத்தில் இல்லவே இல்லை. கவிதையைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

எல்லார் கண்களுக்கும் எல்லோரும் தென்படுவதில்லை. நான் அது மாதிரி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் சுகுமாரன் கவிதையைத் தொட்டிருக்க மாட்டேன். சிலருக்கு எதாவது ஒரு ல்ர்ள்ண்ற்ண்ர்ய் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதி விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் இன்னும் அதிகம் பேர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர் கவிதை எழுதுவதே தெரியாமல் போய் விடுகிறது.

இன்டர்நெட் வந்தபிறகு பலருடைய கவிதைகள் தெரிய வருகின்றன. அவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது. இன்னும்கூட கவிதைப் புத்தகங்கள் புத்தகமாகப் போட்டால் விற்பதில்லை. இதை என்னவென்று சொல்வது.

திரும்பவும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைப் பார்ப்போம்.