தாமதமான மனிதாபிமானம்…

நடுச்சாமம் சற்றே நகர்ந்த
அதிகாலைச் சாலையில்
விமானதளம் விரைகையில்
குறுக்காக கிடந்த
அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல்
வண்டியை ஓட்டுனரும்
பார்வையை நானும் திருப்பிய லாவகம்…
ஊர் வந்திறங்கி
வேலை முடித்து
வந்த ஊர் பிரசித்தமெல்லாம்
வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி
வீடு திரும்புகையில் –
காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

நினைவின் கணங்கள்

பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான்
ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ வருகிறாய்
மேய்ச்சல் நிலத்திலிருந்த கணங்களனைத்தையும் உன்னிரு உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி கீழே சிதறட்டுமென விடுகிறாய் எல்லாம் பள்ளமென ஓடி நினைவுகளுக்குள் புதைகிறது
மீளவும் நினைவின் கணங்கள் மலையிறங்கக் காத்திருக்கின்றன

எதையாவது சொல்லட்டுமா….4

3வது இலக்கியக் கூட்டம் 18.10.2009 அன்று வழக்கம்போல் எல்எல்ஏ பில்டிங்கில் நடந்தது. இந்த முறை அஜயன்பாலாவும், தமிழ்மணவாளனும் கலந்துகொண்டார்கள்.

சினிமாவைப்பற்றிய அனுபவத்தை அஜயன்பாலா பகிர்ந்துகொண்டார்.

எல்லோருக்கும் போன் ஒரு முறை செய்வது. பின் இன்னொருமுறை போன் செய்வது. இதுதான் கூட்டம் நடத்தும் முறை. பத்திரிகையிலோ வேறு எங்கேவோ விளம்பரம் கிடையாது.

அஜயன்பாலா சினிமாவைப் பற்றிய தன் அனுபவத்தைப் பேசினார். எனக்குப் பல ஆண்டுகளாக அஜயன்பாலாவைத் தெரியும். அவர் ஒரு பிடிவாதக்காரர். சினிமாவில் தன் தடத்தைப் பதிய வைக்கவேண்டுமென்ற வைராக்கியம் மிக்கவர். இதற்காக பல இன்னல்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அவரை அதிகமாகக் கவர்வது சிறுகதை எழுதுவதுதானாம். இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் முதல் சிறுகதை நவீன விருட்சத்தில்தான் வந்தது. ஒரு உதவி டைரக்டராக சினிமாவில் நுழைய அவர் பட்ட சிரமங்களை சுவாரசியமாகப் பேசினார். எனக்கு அதைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குக் கட்டாயம் போகக்கூடாதென்று முடிவெடுத்து, டிகிரி சர்டிபிக்கேட்டை போய் வாங்கக்கூட இல்லையாம். வாங்கினால் வேலை கொடுக்கும் அலுவலகத்தில் போய் பெயர் பதிவு செய்ய வீட்டிலுள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள் என்ற அச்சம் அவருக்கு;. அவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். ஒரு படம் அவரே டைரக்ட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகத் தரத்திற்கு தமிழ் படங்களை உயர்த்த வேண்டுமென்ற அசையாத நம்பிக்கை வைத்திரு;கிறார்.. அவர் முயற்சிக்கு வாழ்த்துகள்

தமிழ் மணவாளன் நீண்ட கட்டுரை ஒன்றை எடுத்து வாசிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. கவிதையை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ அதை தாளில் எழுதி உள்ளார். அதை அப்படியே வாசித்தார். கவிதையைக் குறித்து அவர் புரிந்துகொண்ட விதமாகவும் ஒட்டுமொத்த கட்டுரையாகவும் அது தோன்றியது. அவர் படித்த விஷயத்தைப் பார்த்தவுடன், எனக்கும் அதுமாதிரி ஒன்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு தாளில் பதிவு செய்து கொள்வது நல்லது. எதை அவர் கவிதையாக நம்புகிறார் என்பது முக்கியம்.

கவிதையைக் குறித்து உரையாடும் போது பிரம்மராஜன், ஜெயபாஸ்கரன், சுகுமாரன் கவிதைகள் குறித்து பேச்சு திரும்பியது. லாவண்யா,”நான் பிரம்மராஜன் கவிதை ஒன்றை 50 தடவைகள் படித்தேன். அதன்பின்தான் புரிந்தது,” என்றார். உடனே அது குறித்து பலத்த ஆட்சேபணை எழுந்தது. விஜய மகேந்திரன், “லாவண்யாவே இப்படி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது,”என்றார்.

அக் கூட்டத்தில் ஆச்சரியம். சுவாமிநாதன் என்பவர். இவரை இனி சுவாமிநாதன் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் பல விஷயங்களைக் குறித்து ஆழமான கருத்துக்களை வைத்திருக்கிறார். அஜயன் பாலாவின் முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சினிமா படங்களைப் பற்றி ஆழமான அறிவை வைத்திருக்கிறார். சின்ன சின்ன நாடுகளெல்லாம் 5 படங்கள் தயாரித்தாலும், எல்லோரும் பேசும்படி செய்துவிடுகிறார்கள். தமிழில் அது சாத்தியமே இல்லை என்றார். ஆனாலும் அஜயன் பாலா ஒரு இளைஞர். அந்தக் கனவோடு இருக்கும் அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தது. சினிமாவுக்கென்று, நாடகத்திற்கென்று, பத்திரிகைக்கென்று. ஆனால் இதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்றார் பாரவி. தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தேவகோட்டை வா மூர்த்தி, பாரவி, எஸ். சுவாமிநாதனைப் பாராட்டாமல் இருக்க முடிவில்லை.

கூட்டத்தில் பேசியதை டேப்பில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டால் நன்றாகவே இருக்கும்.

இதயத்தில்

என்னுடைய நிறம்

கருப்புமில்லாத
வெளுப்புமில்லாத
சாம்பல் நிறம்
என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது
வெகுநாட்களாக நானும்
இந்த முதலையும்
காத்துக்கிடந்தோம்
இருபத்தைந்து வயது யுவதி
என்னை ஸ்பரிசித்தாள்;
இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள்
வெளியே செல்லும் எங்களுக்குக்
கையசைத்து விடையளிக்கிறாள்
விரைந்த வாகனத்தின்
தகரத்தில் மாட்டிய என் கை
குருதிப் புனலில்
நினைவிழந்த பெரியவருக்குக்
குழாயில் சொட்டும் இரத்தம்
எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
தொங்கியபடி நானும்
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்

முன்னாள் காதலிகள்

சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.
எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என
அவள் சொல்கையில்
மெதுவாய்
முழிக்கிறது ஒரு மிருகம்
o

கவிதை (1)

அலுவலகம் செல்லும் வழியில் அடிபட்டு இறந்திருந்தது ஒரு செவலை நாய் விரையும் வாகனங்களின் குழப்பத்தில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கலாம்
நாலைந்து நாட்களில் தேய்ந்து கரைந்தது இறந்த நாயின் உடல்
காக்கைகள் கொத்தி தின்ன ஏதுவில்லை வாகனங்கள் நெடுகித் தொலையும் பெருவழிச்சாலையில்
எப்போதும் பிறரின் மரணங்கள் ஒட்டியிருக்கிறது நமது பயணத்தடங்களில்.

பதட்டம்..



சகபயணி ஒருவன்
சட்டைப் பாக்கெட்டிலிருந்து
எடுத்த
மூக்குக்கண்ணாடியோடு
மாட்டிக்கொண்டபடி
வந்த பேனாவை மீண்டும்
சரியாகப் பொருத்தவில்லை – தன்
சட்டைப் பாக்கெட்டில்.
பதட்டம் கூடிக் கொண்டிருந்தது
பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

எதையாவது சொல்லட்டுமா….3


காலை 7.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். தலைப்பு பொதுவான தலைப்புதான் அதில் மாற்றம் இல்லை. ஆரம்பத்தில் எனக்கு பாரமௌன்ட் பப்ளிஸிட்டியில் வேலை. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை முடிந்தபிறகு ரூ.2.50 பைசா கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டு தெருமுனையில் உள்ள டீ கடையில் சுண்டல் சாப்பிடுவேன். நான் டீ கடையில் சுண்டல் சாப்பிடுவது என் தம்பிக்குப் பிடிக்காது. பின் பள்ளிக்கரணை என்ற இடத்தில் கார்டெக்ஸ் அடுக்குபவனாக எனக்கு வேலை. மாதம் ரூ.205 சம்பளம். என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சிபாரிசு செய்தவர் நான் அதிகமாக தலை முடி வைத்திருந்தால் பிடிக்காது. பாக்டரி பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்போம்.

இந்த வேலைக்கு நான் காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டையில் பஸ் பிடிக்க வருவேன். சைதாப்பேட்டை ஸ்டேஷனலில் உள்ள ஒரு கடையில் செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கும். செய்திகள் வாசிப்பது….சரோஜ் நாராயணசாமி என்று ரேடியோவில் கேட்கும் பின் நான் பள்ளிக்கரணை பாக்டரி போய்விட்டுத் திரும்பும்போது சைதாப்பேட்டையில் அதே செய்திகள் வாசிப்பது ரேடியோவில் கேட்கும். என்னடா வாழ்க்கை என்று தோன்றும். சம்பளம் குறைச்சல். ஆனால் உழைப்பு அதைவிட அலைச்சல் அதிகம். சம்பாதிக்கிற ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வம் இருக்கும். குறைச்ச சம்பளம் வாங்கினாலும் என்னிடமும் கர்வம் இருக்குமென்று தோன்றுகிறது.

வேறு ஒரு வேலைக்குத் தாவும்போது, பள்ளிக்கரணை வேலை போய்விட்டது. பெரிய இழப்பு ஏற்பட்டதுபோல் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்போதுதான் நான் தீவிர எழுத்திற்கு அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் இருந்த க்ரியாவில் அடிக்கடி புத்தகம் வாங்கப் போவேன். சி மணியின் ‘வரும் போகும்’ கவிதைப் புத்தகத்தைப் பார்ப்பேன். எனக்குத் தோன்றும் இந்தக் கவிதைப் புத்தகம் போகவே போகாது எப்போதும் க்ரியாவில் இருந்துகொண்டே இருக்குமா என்று.

எனக்கு அடுத்த வேலை வங்கியில் கிடைத்துவிட்டது. பாருங்கள் நாம் நினைப்பதுபோல்தான் நமக்கு எல்லாம் வாய்க்கிறது. நான் பாரத வங்கிக் கிளையில் டிடி வாங்கச் செல்லும்போது அங்கே உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து பொறாமைப் படுவேன். எனக்கும் அவர்களைப் போல் ஒரு தேசிய வங்கியில் தட்டச்சர் வேலை. ஐந்தாவது மாடியில் வேலை. ரெமின்டிங் மிஷினில் எல்லோரும் தட்டு தட்டென்று தட்டுவோம். அதில் பரத் என்ற வித்தியாசமான நண்பர். அவர் லா.ச.ரா கதைகளை அப்படியே ஒப்பிப்பார். ஆச்சரியப்பட்டுப் போவேன். எனக்கோ லா.ச.ரா கதைகளை முழுக்கப் படிக்க முடியாது. ஏன் மௌனியை ரசிப்பதுபோல் லா.ச.ராவை ரசிக்க முடியாது. மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகளை லா.ச.ரா அள்ளித் தெளிக்கிறார் என்று நினைப்பேன். மேலும் அவருக்கு கவிதைகள் மீது அக்கறை இல்லை. நா மு வெங்கடசாமி நாட்டார் என்பவருடைய எழுத்தும் என்னால் ரசிக்க முடியாது.

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் படிக்கத் தொடங்கினேன். வருடாவருடம் சபரி மலைகோயிலுக்குப் போகும் (போய்விட்டு வந்து அளப்பான்) ரவி என்கிற நண்பன், நான் கொடுத்த ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தைப் படித்துவிட்டு, சபரிமலை கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டான். என்னிடம் வாங்கிய புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டான். அலுவலகம் முழுவதும் அவன் பேச்சில் மயங்காதவர்கள் இல்லை.

வங்கியில் சேர்ந்தபிறகுதான் நான் கதை எழுத ஆரம்பித்தேன். என் கதைகள் எந்தப் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. கவிதைகளையும் சேர்த்து சொல்லலாம். செருப்பு என்று ஒரு கதை எழுதினேன். என் பெரியப்பாப் பையன் நடத்திய ‘மலர்த்தும்பி’ (ஏன் இப்படிப்பட்ட பெயரை அவன் தேர்ந்தெடுத்தான்) என்ற பத்திரிகையில் பிரசுரம் செய்தான். அந்தக் கதை வந்த பத்திரிகையை அலுவலகத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டி விற்றேன். மாலதி என்ற பெண்மணியிடம் கொடுத்திருந்தேன்.

ஒருநாள் காலை மாலதி இருந்த அறைக்கு வந்தேன். ‘உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,’ என்றாள் மாலதி. நான் உடனே என் காலில் உள்ள செருப்பைப் பார்த்தேன். அவ்வளவு திருப்தி தராத செருப்பென்று யோசித்தேன். அவள் சிரித்தாள். ‘நான் உங்கள் கதையைச் சொல்கிறேன்,’ என்றாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது.

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அலுவலகம். 4.45 நாங்கள் புறப்படத் தயாராகிவிடுவோம். மின்சார வண்டி, மாம்பலம் என்று நான் கிளம்பி விடுவேன். ஒரு தகராறுபோது இந்த செட்டப்பை நான் கலைத்தேன். பிராஞ்சுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றேன்.வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆத்மாநாம் பிறகு ‘ழ’ என்ற பத்திரிகை திரும்பவும் வர நான்தான் காரணம். அப்போது நான் பிராஞ்சில் இருந்தேன். திரும்பவும் ஒரு தப்பு செய்தேன். பிராஞ்சிலிருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தேன். சுருக்கெழுத்தாளராக..அப்போது நான் எழுதிய கவிதை ஒன்றுதான் தட்டச்சுப்பொறி.. தமிழில் யாரும் தட்டச்சுப்பொறி பற்றி கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

25 வருடம்…ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை…25 வருடங்கள் நான் தலைமை அலுவலகம், பிராஞ்ச் என்று மாறி மாறி இருந்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பின் தெரியாமல் ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டேன். 2004ல. அதுதான் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளராக மாறியது. மாறிய உடன் என்னைத் தூக்கி அடித்தார்கள். 280 கிலோமீட்டர்கள் தூரத்தில். பந்தநல்லூர் என்ற கிராமத்தில். நொந்து போய்விட்டேன். பதவி உயர்வால் என் சம்பளம் பெரிய அளவில் மாற்றம் இல்லை. நான் மட்டும் தனியாக இருந்தேன். குடும்பம் என்னுடன் வரவில்லை. ஆனால் வேலை கடுமையாக இருந்தது. வேலை முடிந்தபின்பும் திருப்தி அற்ற நிலை. வேலையும் பொறுப்பும் கூடின. சம்பளத்தில் ஒன்றும் மாற்ற மில்லை. ஆனால் 4 ஆண்டுகள் தனிமை வாசம். வாரம் ஒருமுறை சென்னை விஜயம். சனிக்கிழமை சென்னை வருவேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பந்தநல்லூர் வந்துவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை இரவில் கும்பகோணம் பாச:ஞ்சரில் தாம்பரத்திலிருந்து கிளம்பி மயிலாடுதுறையில் போய் இறங்குவேன். அப்போது ஏற்பட்ட தவிப்பில் பல கவிதைகள் எழுதினேன். பந்தநல்லூரில் கிடைத்தப் பதவி உயர்வு, கும்பகோணம் பாசஞச்சர., விபரீதக் கடிதம், மின் விசிறி, ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன். எல்லாம் தனிமை வாசத்தைப் பற்றிய கவிதைகள். கும்பகோணம் பாசஞ்சர் என்ற கவிதையை பாசஞ்கர் வண்டியில் வரும் டிடிஆரிடம் படித்துக் காட்டினேன். கவிதை ரசனை இல்லாதவர். அவரால் ரசிக்க முடியவில்லை.

4 ஆண்டுகள் கழிந்தும் சென்னை மாற்றல் எளிதாகக் கிட்டவில்லை. எப்படியோ ஒரு ஆண்டு தற்காலிக மாற்றம் பெற்று வந்துவிட்டேன். ஹஸ்தினாபுரம் என்ற ஊரில் உள்ள கிளையில் மாற்றம். க்ரோம்பேட்டை அருகில். திரும்பவும் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால் வர இரவு 7.30 மணி ஆகிவிடுகிறது. இப்போது உள்ள வயதில் கூலி அதிகம் கிட்டாமல் மெய் வருத்தம். 20 மாதங்கள் எப்படியோ ஓட்டிவிட்டேன். 7.30லிருந்து 7.30வரை. இன்று (08.10.2009) அதற்கு முடிவு வந்துவிட்டது. டெம்பரரி முடிந்துவிட்டதால் திரும்பவும் பந்தநல்லூருக்குச் செல்ல வேண்டுமென்று கழட்டி விட்டுவிட்டார்கள். என்னடா இது இந்த வயதில் இப்படி ஒரு அவதி என்று நொந்து போயிருக்கிறேன்.

சாட்சி



விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.

வாசனை திரவியம்


வாசனையால் ஆனவனை
ஒருமழைக் காலத்தில்
சந்திக்க நேரிட்டது
பொத்தலாக நனைந்திருக்கும்
அவனது உடலெங்கும் பொங்கிய
அந்த வாசனை
அறுவறுப்பைக் கொடுத்தது
பின்னுச்சியிலிருந்தும்
முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்தும்
தனக்கு வாசனை பிறப்பதாகவும்
மக்கிய இதழ்களை
உணவாகப் புசிப்பதாகவும் கூறினான்
மெல்ல மெல்ல என்னிடமிருந்து
வாசனையை அவன்
உறுஞ்சுவதாக உணர்ந்தேன்
சட்டென அகலுகையில்
இழுத்து இழுத்து பெய்த மழையின்
சகதியொட்டிய என் உடலெங்கும்
வாசனை பரவிக் கொண்டிருந்தது