கனவென்று தெரிந்திருந்தால்

கிணற்று நீரில்
நிலா பார்ப்போம்
தண்ணீர் உனைப் பருகி
தாகம் தீர்க்கும்
குழலோசை
செவியினில் இனிக்கும்
கண்களுக்கு நீ எதிரில் வருவது
மிகவும் பிடிக்கும்
மரத்திலிருந்து விழுந்த
பழுத்த இலையொன்று
உன் மீது உரசியதால்
தீப்பற்றி எரியும்
வீதியில் நீ
நடந்து வந்தால்
வெண்மேகம் குடைபிடிக்கும்
வரம் கொடுக்கிறேன் என்று
கடவுள் நேற்று
உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே
கல்லூரியில் நீ
வரலாறு படித்தாய்
தெருவெல்லாம் நானல்லவா
மரம் நட வேண்டியிருக்கிறது.

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…31

கணேஷ்
பூனைகள் ஜாக்கிரதை

அடுப்பில்  பால்  கொதிக்கிறது.
அது கொதிக்கும் சத்தம் கேட்காமல்
தொலைக்காட்சிக்குள் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது. 
சமையலறையில் பாலாறு.
தொலைக்காட்சியின் கைதியாய்
தொடர்ந்து இருந்தேன்.
வீடு திரும்பிய மனைவி 
சமையலறை பார்த்தவுடன்
ஆனந்த கூக்குரலிட்டாள்.
துடைத்து விட்டார் போல சமையலறை.
பூனையொன்று  பாலாற்றை குடித்து
தரையை சுத்தம் செய்துவிட்டது.
சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி 
பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.
என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.     
என்னை விட்டுவிடும்படி   தொலைக்காட்சியை  கேட்டேன்
பதில் கிடைக்கவில்லை.
மின்சார வெட்டு !
பூனைகள்  என் வாழ்வை சூறையாடுவதை  எங்ஙனம் தடுப்பது?
மின்சார வாரியத்துக்கு   
யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் !
ஆறரை மணி செய்திகள்  முடிந்தால்தான்
தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.

காதல் திசை

வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,
ன்தாம்லவ துந்ருமிடஇ 
அராபிக் எழுத வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!

முகம்

ஊரின் முகத்தை தீர்மானிக்க
அலையத் துவங்கினேன்
மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும்
கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும்
வடக்கிருந்து வர தெற்கும்
தெற்கிருந்து இறங்க வடக்குமென
எதிரெதிர் துருவங்கள்
முகப்பாய் மாற்றம்கொள்ள
தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன்
நிலைக்கண்ணாடி
ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை…

எதிர் விளையாட்டு

இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.
‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’
அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.
அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
‘பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..


*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்

விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில் 

தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்

தன்  பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்

******

சாலை விதி

ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.
வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.
இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.
உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

ழ 5வது இதழ்

இப்பொழுது

கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்
காற்றைப்போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது
உடனே புதிய ஊற்றுக்களின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறுவிரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்
மாற்று புதியதொன்றை மணத்துடன்
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு
பார்வை விரிய பாதை வளரட்டும்
முன்பே ஒன்றிருந்தால் –
உடைத்த கைகள், உளி,
கல்துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்
சக்கரம், நெரிசல்,
மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண்முன்
எப்பொழுதும் தா.

(டிசம்பர் 1978 ஜனவரி 1979)

 

நிலைப்பாடு

ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

பசிக்கொண்டு நிதம் செல்லும்
பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும்
சாலை மரங்கள் சற்றே
உறங்கிப் போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பு
நினைவுக்குள் புகை மூட்டும்
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளைபிடித்து
குடையெனப் பாவனை செய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக்கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாட்கள் கழியும்
வேர்கொள்ளாக் கால்கள்
             பகற்கானலில் சாம்பலாகும்
             கட்டிடங்களுக்கப்பால்
நீலத்தொடுவானம் தேடிச்செல்ல
             வழிமரங்கள் தாம்பெற்ற
ராகங்களின் நிரந்தரமறியாது
             உடல் சிலிர்த்துப் பாதையை
             நிறைக்கும்
             கந்தல் நிழல் கண்டு

பல்லி

பாத்ரூமில்
ஒரு பல்லி எதிர்ப்பட்டது
குட்டிப் பல்லி
துண்டை எடுத்துக்கொண்டு
போன எனக்கு
அதன்மீது அருவெறுப்பு
நான் அதையே
பார்த்துக்கொண்டிருக்க
அது
இங்கும் அங்கும்
தலைதெறிக்க ஓடியது
வேடிக்கை என்னவென்றால்
அது என்மீது
விழுந்துவிடப் போகிறதென்று
நடுங்கிக் கொண்டிருந்தேன்
என் பயத்தின்
எதிரொலியாய் அது
ஓடி ஓடிப் போனது
குட்டி பாத்ரூமில்
அதன் எல்லை
பரந்து விரிந்திருக்கிறது
என் எல்லை
குறுகலாகத் தெரிகிறது