கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.
Author: virutcham
அழகன்
அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்
ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின
தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது
தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை
கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்
இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்
நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று
பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்
நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை
அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.
எதையாவது சொல்லட்டுமா………61
கவிதை
பொம்மலாட்டம்
ப.மதியழகன்
சருகுகள் பாதையை
மூடியிருந்தன
பழுத்த இலைகள்
தன்னை விடுவிக்கும்
காற்றுக்காக காத்திருந்தன
மொட்டைப் பனைமரத்தில்
காகம் ஒன்று அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை உதிர்த்துச் சென்றது
வண்டுகளின வருகைக்காக
பூக்கள் தவம்கிடந்தன
திருட்டுக் கொடுக்க
என்னிடம் காலணிகள்
மட்டுமே இருந்தன
அருவியில் குளிக்கிறார்கள்
பணப் பித்து பிடித்தவர்கள்
இல்லை என்பவர்கள் மீது
ஒளிக்கிரணங்கள் படுவதில்லை
உண்டு என்பவர்கள் வீட்டில்
தீபங்கள் அணைவதில்லை
பொம்மலாட்ட பொம்மைகள்
எது செய்தாலும் தவறில்லை
ஆட்டுவிப்பவன் கைகளுக்கு
எது சரி எது தவறென்று
தெரியவில்லை.
மகனின் தீபாவளி
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்கப்படவே இல்லை.
மெட்டமார்ஃபஸிஸ்
அக்கறை/ரையை யாசிப்பவள்
அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்
பறவைகளின் திசை
தருணம்
சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை
யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை
அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை
எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது
நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை
நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை
நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.
இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.








