நவீன விருட்சம் 87வது இதழ் வெளிவர உள்ளது. navinavirutcham.blogspot.com ல் வெளிவந்த படைப்புகளைப் பிரசுரம் செய்ய உத்தேசம். பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் இதழில் வெளிவர உள்ளது. நீண்ட கதைகள் பிரசுரம் செய்யும் சாத்தியம் மிகக் குறைவு. படைப்பாளிகள் புதிதாக எழுதி அனுப்பலாம். ஏற்கனவே blogspot வந்தவை வேறு எங்காவது பிரசுரம் ஆனால் குறிப்பிட மறக்க வேண்டாம்.
அன்புடன்
அழகியசிங்கர்
Category: Uncategorized
பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்….23
தாரா கணேசன்
அனாதை இல்லத்துசயாமிப் பூனைக்குக் கண்கள் குருடுஅறை மூலை மென்னிருக்கையில்தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்ககைகள் தந்து சந்தித்ததுஅது என்னை முதன் முதலாய்தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித்திரும்பபிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல்முறித்ததுஅங்குமிங்கும் அலைந்தன கண்ணாடிவிழிகள்தேவதையின் இறக்கைகளுடன்கனவின் அடுக்குகள் ஒளிரமதில் மேல் சயனித்திருந்த அதன்கூவலில் கலைந்தது உறக்கம்மருண்ட பார்வையில் நானும் அதுவும்மயங்கி நின்றவள்துயருற்று நடுங்கும் மென்கரத்தால்கண்கள் சுழற்றி அதற்குப்பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்ததுஅன்றிலிருந்து இரவுகளில்பூனைக்குரலில் பேசும் பறவையொன்றுபின் தொடரவிநோதங்கள் நிறைந்த பூனைகளின்தீவில்அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.
குட்டிக்கதைகள்
புதிய ஒளி
புதுமைப்பித்தன்
அன்று இரவெல்லாம் நல்ல மழை.
காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன.
இரவு பூராவும் “ஹோ ஹோ” என்று ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்திவீச்சு மின்னல்கள். சட சடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின.
மழை நின்றது.
காற்று ஓய்ந்தது.
சொட்டு சொட்டென்று நீர்த்துளிகள்.
வீட்டு வெளிச்சத்தில் ஒளிபெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் துண்டமாக மறைந்தன.
வீட்டிலே நிசப்தம்….
இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழப்பு வந்தது.
அந்த நிசப்தம்; அந்த மௌனம். என் மனத்திலே என்னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தளர்ந்து மறையும் எண்ணக் குவியல்கள்.
திடீரென்று…
தூளியிலிருந்து குழந்தை…என் குழந்தை..
“அம்பி அம்பி குச்சியை எடுத்துண்டு வா…சீமா எடுத்துண்டு வா..” வீறிட்டு அழுகை.
“என்னடா கண்ணே…அழாதே…” என்று என் மனைவி எழுந்தாள்.
“அம்பி இந்தக் குச்சிதான் ராஜாவாம்…..சாமிடா…நீ கொட்டு அடி. நான் கும்படறேன்..நான்தான் கும்பிடுவேன்..” ஒரே அழுகை.
நான் படுக்கையைவிட்டு எழுந்திருந்தேன்..ஜன்னலருகில் சென்று நின்றேன்…
சிதறிய கருமேகங்களிடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.
உள்ளே நிசப்தம்.
தாயின் மந்திரம்தான்
குழந்தை எந்தக் கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழந்து தூங்கினான்.
தாய்….அவளுக்கு என்ன கனவோ
என்ன கனவு..என்ன ஆதரவு…அந்தத் தூக்கத்தின் புன்சிரிப்பு.
குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு.
தாயின் ஆதரங்களிலே கனிவு, ஆதரவிலே அவற்றின் கனியான சிரிப்பு…
என் மனதில் சாந்தி.
அன்று விடியற்காலம். கீழ்த்திசையில் தாயின் ஆதரவு. குழந்தையின் கனவு – இரண்டும் கலந்த வான் ஒளி.
என் மனதில் ஒரு குதூகலம்.
எனக்கு முன் என் குழந்தையின் மழலை…..
பூவரச மரத்தடியிலே….”இந்தக் குச்சுதாண்டாசாமி….நான்தான் கும்பிடுவேன்….”
குட்டிக்கதைகள்
இரகசிய வேதனை
அசோகமித்திரன்
இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் அவன் சங்கடம் தீரவில்லை. முதன்முறை அவன் போகும் இடத்திற்கு 1.75 என்று நிர்ணயத்திருந்தது. கால் ரூபாய் நாணயம் அவனிடம் இருக்காது. இரண்டு ரூபாயாகக் கொடுத்தால் பல நேரங்களில் பாக்கிச் சில்லறை வராது. சில நேரங்களில் வருவது பொதுப் பழக்கத்திலிருந்து மறைந்திட்டட இருபது காசு நாணயமாக இருக்கும். நாட்டில் உள்ள இருபது காசு நாணயங்களெல்லாம் பஸ் கண்டக்டர்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
இரண்டாம் முறை மாற்றப்பட்ட கட்டணம் 1.25. கால் ரூபாய் சில்லறை இல்லையென்றால் பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். எவ்வளவு கால் நாணயங்களைச் சேர்த்து வைக்க முடியும்? இன்று ஒரு கால் ரூபாய் நாணயமும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தடவைகளில் கால் ரூபாய்க்காக கண்டக்டர்கள் கொடுத்த இருபது காசு நாணயங்கள் இருந்தன. ஒரு முறை, ஒரே ஒரு முறை, அவர் கொடுக்கும் இருபது காசை அவர்கள் கால் ரூபாயாக ஏற்றுக்கொள்ளக் கூடாதா?
பஸ்ஸில் பயணம் செய்வதே ஏதோ பிச்சைக்குப் போய் நிற்பது போலச் செய்து விட்டார்கள் கண்டக்டர்களும் டிரைவர்களும். பெரிய பஸ் நிலையங்களில் அந்தக் கேவலத்தைச் சொல்லி முடியாது. எல்லாரும் ஒரு பஸ்ஸில் ஏறி வியர்த்து விருவிருக்கக் காத்திருந்தால் வேறொரு பஸ் காலியாகக் கிளம்பிப் போகும். அப்படியே நிறுத்தி ஏற்றிக்கொண்டால் கால் வைக்க முடியாத குப்பை அல்லது சேறருகே பஸ் நிற்கும். குண்டுப் பெண்மணிகள் பையுடனும் குழந்தைகளுடனும் ஓடி வரும் காட்சி நரகத்தை நம்பாதவர்களையும் நம்ப வைக்கும். கையிலிருக்கும் ஒரு பெட்டியை அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சண்யமாக இறக்கி விடுவார்கள். அல்லது ஏற்றவே மாட்டார்கள். இதெல்லாம் அவனை வாட்டி வதைக்க அவன் இம்முறை ஒரு ரூபாயையும் ஒரு இருபது காசு நாணயத்தையும் கண்டக்டரிடம் நீட்டினான். கண்டக்டர் அதை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சீட்டு கிழித்துக் கொடுத்தான்
குட்டிக்கதைகள்
நவீன விருட்சம் 40வது இதழில் (ஜூலை 1998) இப்படி எழுதியிருந்தேன் : குட்டிக் கதைகள் மற்ற எல்லா அம்சங்களுடன் சேர்ந்து பிரசுரமாகும்போது, உரிய கவனத்தை கவர்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. சமீப காலமாக ஒரு வணிக இதழ் குட்டிக் கதைகள் என்ற பெயரில் பலவற்றைப் பிரசுரம் செய்தும் அவற்றுக்குச் சன்மானமும் அளித்துள்ளது. வணிக இதழ் சந்தையில் வெளியாகும் எதுவும் நாசமாகிவிடும் என்பதற்கு ‘குட்டிக் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தவை உதாரணம். மாறாக சிற்றேடுகள் உரிய கவனத்துடன் கதைகளைப் பிரசுரம் செய்துள்ளன.
‘குட்டிக்கதைகள்’ எப்படி இருக்க வேண்டுமென்று யோசிக்கும்போது, நீதியைச் சொல்லும் ஒன்றாக முடிந்து விடக்கூடாது என்ற காரணத்தால், பாரதியாரின் நீதிக் கதைகளை இதில் சேர்க்கவில்லை. அதேபோல் நடைச்சித்திரமான வார்ப்பில் குட்டிக் கதைகளை அடைத்துவிடக்கூடாது. சம்பவத்தின் ஆழம் மாத்திரம் போதும், சம்பவத்தின் விஸ்தீரணம் தேவையில்லை. கதை ஆரம்பிக்கும் அவசரத்துடன் முடிந்துவிட வேண்டும். திரும்பவும் படிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட வேண்டும். அரைப் பக்கத்திலிருந்து இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் வரை குட்டிக்கதைகளை எழுதி விடலாம்.
முழுவதும் குட்டிக்கதைகளால் 40வது இதழ் நிரம்பி உள்ளது. ஒரு சில படைப்பாளிகள் இதழுக்காக தந்த கதைகளுடன், சிற்றேடுகள்/புத்தகங்களிலிருந்தும் இன்னும் சில கதைகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
கண்ணாடிஅசோகமித்திரன்
ஈர்க்கில் பஞ்சைச் சுற்றி கிராம்புத் தைலத்தில் தோய்த்துப் பல் மீது தடவப் போனபோதுதான் தெரிந்தது, அது வெறும் தைலத்தில் போகக்கூடிய பல்வலியல்ல என்று. பல்லின் அடிப்பாகத்தில் கறுப்பாக ஒருவட்டம். அதேபோலப் பல்லின் பக்கவாட்டிலும் பெரிய கறுப்பு வட்டம். பல் சொத்தையாகத் தொடங்கி அடியிலிருந்து புரையோடி இப்போது பக்கங்களுக்கும் பரவியிருக்கிறது. பல் வைத்தியரிடம் போனால் பல் ஒரு சிறு இழப்புக்குத் தாங்காது. இந்த அளவு சொத்தை விழுவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டிருக்கும். மாதக் கணக்கில் கூட. ஆனால் இப்போதுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. தினம் ஒருமுறை தலைவாரிக்கொள்ள கண்ணாடி முன் நிற்கிறேனே, அப்போது முகத்தைப் பார்ப்பது கிடையாதோ? இல்லை என்று இப்போது தெரிகிறது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் பழக்கமே போய்விட்டது. எவ்வளவு பேர் சமயம் கிடைத்த போதெல்லாம் கண்ணாடி முன் நிற்கிறார்கள்? அவர்களுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். அதனால்தான் திரும்பத் திரும்பத் தலையை வாரிக்கொள்கிறார்கள். முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். பவுடர் போட்டுக் கொள்கிறார்கள். அவனுக்கு அவன் முகம் ஒரு பொருட்டாக இல்லாமல் போய்விட்டது. கூச்சம் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. அப்படியும் கூறுவதற்கில்லை. பல்லைக் காப்பாற்றியிருக்கும்.
Circle
I was inside the circle
Within me was the circle.
No change in
Those looked as visions
I felt like jumping the circle
I stood near the line
The joy was cut off
Haste and restlessness struck me.
I set out the step to jump over
The circle appeared bigger
Without getting caught up in my leap
The joy that was cut off returned
There is the circle within me
I am within the circle
The circle itself goes on expanding.
(translated by RAA SRINIVASAN)
பூனைகள் பூனைகள் பூனைகள் 22

திருட்டுப் பூனை
எல்லோருக்கும் உரியது எல்லாம் என்று எண்ணி இயங்குகிற பூனைக்கு கிட்டியப் பெயர் திருட்டுப் பூனை.
திருடாத பூனைக்கும் உண்டு இப்பட்டம். இன்னொரு இனத்தால் இடப் பட்ட ஈனப் பெயர். இரையாகிற எலிகள் கூட நம்புகிறபோது இவர்களுக்கு மட்டும் திருட்டுப் பூனை. கட்சித்தொண்டனாய் தீக் குளித்தும் காட்ட முடியாது அதற்கு அதன் விசுவாசத்தை.
பாவம் விசுவாச அரிதாரம் பூசத் தெரியாத விழிகளுடன் பதுங்கி பதுங்கி வாழும் பரம சாதுவாய் திருட்டுப் பூனை
மூலம் – ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)

சுய துரோகம்
நேற்று நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம் காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம் காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம் காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம் எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்
நேற்று நாங்கள் சந்திக்காதிருந்தோம் இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம் காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம் பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை அனுபவிக்காதிருந்தோம்
நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய்
நேற்று நீயென்று ஒருவர் இருக்கவில்லை நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும் இன்றும் அவ்வாறே நான் மாத்திரமே பாதம் பதிக்க இடமற்ற வெற்று வெளியொன்றில் புவியொன்றா பிரபஞ்சமொன்றா பொருளொன்றா சக்தியொன்றா எண்ணமொன்றா உணர்வொன்றா இவை ஏதுமற்ற வெற்று வெளியொன்றில் வெறுமனே தரித்திருக்கிறேன்
நேற்று சூரியன் உதித்திடவில்லை நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை அதுவுமன்றி நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை
எல்லாமே வெறுமையாய்…
மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்
வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்
தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்
வரம்
ஒரு ஊரில் ஒரு மீனவன். மிகவும் ஏழை, ஆனால் அறிவாளி. ஒரு நாள் அவன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அவன் வலையில் ஒரு ஜாடி அகப்பட்டது. அதை திறந்ததும் ஒரு பெரிய பூதம் வந்தது.வெளியே வந்த பூதம்,”என்னை விடுதலை செய்த உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்.” என்றது.மீனவன் சிறிது யோசித்துவிட்டு “எனக்கு நூறு கோடி ரூபாய் வேண்டும். இதுதான் முதல் வரம்.”பூதம், “சரி. இரண்டாவது வரம்?”மீனவன், “இன்னும் இரண்டு வரம் வேண்டும்.”-
