ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்
அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்
அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு
‘நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் – இஸுரு சாமர சோமவீர

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

 
அஸீஸ் நேஸின்

      அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

      அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?
      எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப் பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

      நகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வைத்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப் பொறி மற்றும் உடைந்து சிதறிப் போன வீட்டுத் தளபாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலை பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.

      அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்ப் புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக் கடையொன்றும் இருந்தது. அவர் அக் கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். சில்லறை வியாபாரியும், பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நண்பர்களாகினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக் கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடையைக் கொண்டு செல்வதற்கும் தேவையான வசதிகள் அக் கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.
      சில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச் சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும் வரையில் அங்கு சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலுமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிது காலம் சென்ற பிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன் மற்றும் தீன்பண்ட வியாபாரியொருவன் அப் பகுதியில் தமது வியாபாரங்களைத் தொடங்கினர்.
      சொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல ஆகி விட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப் பிரதேசத்தை காலையிலிருந்து இரவு வரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தான். சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

      அவர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள இயலவில்லை. அவரால் தனியாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல்துறை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்ந்து கொண்டனர்.

      அவருக்கு அவரது நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டும் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக் கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச் செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும், பழ வியாபாரியிடமிருந்தும் மற்றும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
      ஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப் பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறென சிந்தித்துக் கொண்டிருந்த போது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியாபாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்து வந்தார்.
      “என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல.”

      சில்லறை வியாபாரி புன்னகைத்துக் கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.
      ” அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்.”
      அவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக?  அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திருப்பது ஏன்?
      “ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா? ” சில்லறை வியாபாரி கேட்டான்.
      “ஆமா..அப்படியொரு எண்ணமிருக்கு.”
      அவர்கள் வந்திருக்கும் காரணம் இப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.
      ” ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?
      ” எங்களுக்கு அக்கம்பக்கத்துலருந்து கேள்விப்பட்டுச்சு.”
      ” ஆனா அது பற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்கக்கிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல.”
      ” எங்கள வெட்கப்பட வைக்கவேணாம் ஐயா. ஐயாக்கிட்ட இருந்து எங்களுக்கு பணம் தேவையில்ல.”
      ” எனக்குன்னா ஐயாக்கிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்” பழ வியாபாரி சொன்னான்.
      ” ஏனது?”
      ” நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்கு பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க.”
      அவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.
      ” அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்.” அவர் உளறலாகச் சொன்னார்.
      அவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தான் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.
      கோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.
      ” இந்தப் பகுதியை விட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விட்டுப் போடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்.”
      ” ஆமா. நாங்க அதைச் சொல்லத்தான் வந்தோம்.” பழ வியாபாரி இடை நிறுத்தினான்.
      ” எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்.”
      ” எங்களுக்குத் தெரியும்.” பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.
      ” எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்று சேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியை விட்டுப் போயிட வேணாங்குறதுதான்.”
      ” வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக் கொள்றோம். இந்தப் பகுதியை விட்டு மட்டும் போயிட வேணாம்.” சில்லறை வியாபாரி இடை மறித்தான்.
      அவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழி நடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்து வைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.
      ” அதுன்னா முடியாது.” அவர் மீண்டும் சொன்னார்.
      ” என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமில்ல. எனக்கு இப்ப வேலையொண்ணு கூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன்கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்.”
      கோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.
      “நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்.”
      மூவரும் ஒன்றாக இணைந்து வற்புருத்தினார்கள். மக்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச் சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலி செய்த வியாபாரிகள் கூட இப்பொழுது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.
      ” ரொம்ப நன்றி..ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள்.
      ” ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல. ” சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.
      ” இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்க வைக்கிறோம்.”
      ” எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக்காம இங்கேயே வச்சுக்கிறதுதான்.” கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.
      அவர் பெரியதொரு குழப்பத்துக்குள்ளானார்.
      ” சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புருத்துறீங்க?”
      ” அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க.”
      ” பைத்தியமா? நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்?”
      ” ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல்வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப் பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க..புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை” சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.
      ” எங்களுக்கு தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.
      ” நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும்போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும் தானே?”
      ” ஆமா..அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்க மாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க.” பழ வியாபாரி கூறினான்.
      ” அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க.”
      அவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.
      ” அவர்கள் எல்லோருமே பொலிஸ்காரர்களா?”
      ” சில பேர் பொலிஸ்காரர்கள்.. சில பேர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்கு பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரிப் போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க.”
      ” அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்.” சில்லறை வியாபாரி சொன்னான்.
      ” பிச்சைக்காரங்க எங்களுக்கு தயவுபண்ணுங்க ” பழ வியாபாரி கெஞ்சினான்.
      ” ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க” கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.
      அவர் ஒரு கணம் சிந்தித்தார். ‘எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.’
      ” சரி..நான் போகல. ஆனா நீங்க கொண்டு வந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க.”
      அவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.
      பழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.
      ” நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா?”
      ” ம்ம்..! நல்லது.. நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்கக்கிட்ட இருந்து எதுவுமே வேணாம்.”
      ” ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.” கோப்பிக் கடைக்காரன் ஆசிர்வதித்தான்.  

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

இஸுரு சாமர சோமவீர

எமதுலகில் சூரியனும் இல்லை

 

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

– ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம்

கைக் குழந்தைகள் தவிர்த்து

ஆண் வாடையேதுமில்லை

எல்லோருமே பெண்கள்

வயதானவர்கள்

நடுத்தர வயதுடையோர்

யுவதிகள்

எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப

பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான

இவ் விசித்திர நகரில்

எஞ்சியுள்ள

எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்

சகோதரரைப் புத்திரர்களை

சீருடை அணிவித்து

வீரப் பெயர்கள் சூட்டி

மரியாதை வேட்டுக்களின் மத்தியில்

புதைத்திட்டோம்

செத்துப்போனவர்களாக

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

மொழிபெயர்ப்புக் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக
கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே
மூலம் – மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

மூலம் – ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)





சுய துரோகம்
நேற்று நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம் காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம் காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம் காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம் எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்
நேற்று நாங்கள் சந்திக்காதிருந்தோம் இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம் காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம் பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை அனுபவிக்காதிருந்தோம்
நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய்
நேற்று நீயென்று ஒருவர் இருக்கவில்லை நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும் இன்றும் அவ்வாறே நான் மாத்திரமே பாதம் பதிக்க இடமற்ற வெற்று வெளியொன்றில் புவியொன்றா பிரபஞ்சமொன்றா பொருளொன்றா சக்தியொன்றா எண்ணமொன்றா உணர்வொன்றா இவை ஏதுமற்ற வெற்று வெளியொன்றில் வெறுமனே தரித்திருக்கிறேன்
நேற்று சூரியன் உதித்திடவில்லை நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை அதுவுமன்றி நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை
எல்லாமே வெறுமையாய்…

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும் இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும் பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக் கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம்மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

புத்தாண்டுக் கனவு

நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்
நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்
ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்
*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்
புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?
பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?
மூலம் – மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230

மொழிபெயர்ப்புக் கவிதை

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)
தின்றுகொண்டு தின்றுகொண்டு அவர்கள் ஒன்றாக வரும்பொழுது ஒருவாறு தப்பித்த எனக்கு கால்களை மேலே போட்டவாறு இனி பார்த்துக் கொண்டிருக்கலாம் ஒருவன் மற்றவனைத் தின்றுகொள்ளும் போது குட்டை வால் எஞ்சும் வரைக்கும்
மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)