மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

 
அஸீஸ் நேஸின்

      அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

      அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?
      எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப் பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

      நகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வைத்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப் பொறி மற்றும் உடைந்து சிதறிப் போன வீட்டுத் தளபாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலை பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.

      அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்ப் புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக் கடையொன்றும் இருந்தது. அவர் அக் கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். சில்லறை வியாபாரியும், பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நண்பர்களாகினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக் கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடையைக் கொண்டு செல்வதற்கும் தேவையான வசதிகள் அக் கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.
      சில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச் சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும் வரையில் அங்கு சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலுமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிது காலம் சென்ற பிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன் மற்றும் தீன்பண்ட வியாபாரியொருவன் அப் பகுதியில் தமது வியாபாரங்களைத் தொடங்கினர்.
      சொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல ஆகி விட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப் பிரதேசத்தை காலையிலிருந்து இரவு வரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தான். சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

      அவர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள இயலவில்லை. அவரால் தனியாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல்துறை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்ந்து கொண்டனர்.

      அவருக்கு அவரது நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டும் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக் கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச் செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும், பழ வியாபாரியிடமிருந்தும் மற்றும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
      ஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப் பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறென சிந்தித்துக் கொண்டிருந்த போது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியாபாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்து வந்தார்.
      “என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல.”

      சில்லறை வியாபாரி புன்னகைத்துக் கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.
      ” அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்.”
      அவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக?  அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திருப்பது ஏன்?
      “ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா? ” சில்லறை வியாபாரி கேட்டான்.
      “ஆமா..அப்படியொரு எண்ணமிருக்கு.”
      அவர்கள் வந்திருக்கும் காரணம் இப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.
      ” ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?
      ” எங்களுக்கு அக்கம்பக்கத்துலருந்து கேள்விப்பட்டுச்சு.”
      ” ஆனா அது பற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்கக்கிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல.”
      ” எங்கள வெட்கப்பட வைக்கவேணாம் ஐயா. ஐயாக்கிட்ட இருந்து எங்களுக்கு பணம் தேவையில்ல.”
      ” எனக்குன்னா ஐயாக்கிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்” பழ வியாபாரி சொன்னான்.
      ” ஏனது?”
      ” நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்கு பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க.”
      அவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.
      ” அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்.” அவர் உளறலாகச் சொன்னார்.
      அவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தான் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.
      கோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.
      ” இந்தப் பகுதியை விட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விட்டுப் போடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்.”
      ” ஆமா. நாங்க அதைச் சொல்லத்தான் வந்தோம்.” பழ வியாபாரி இடை நிறுத்தினான்.
      ” எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்.”
      ” எங்களுக்குத் தெரியும்.” பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.
      ” எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்று சேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியை விட்டுப் போயிட வேணாங்குறதுதான்.”
      ” வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக் கொள்றோம். இந்தப் பகுதியை விட்டு மட்டும் போயிட வேணாம்.” சில்லறை வியாபாரி இடை மறித்தான்.
      அவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழி நடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்து வைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.
      ” அதுன்னா முடியாது.” அவர் மீண்டும் சொன்னார்.
      ” என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமில்ல. எனக்கு இப்ப வேலையொண்ணு கூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன்கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்.”
      கோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.
      “நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்.”
      மூவரும் ஒன்றாக இணைந்து வற்புருத்தினார்கள். மக்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச் சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலி செய்த வியாபாரிகள் கூட இப்பொழுது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.
      ” ரொம்ப நன்றி..ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள்.
      ” ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல. ” சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.
      ” இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்க வைக்கிறோம்.”
      ” எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக்காம இங்கேயே வச்சுக்கிறதுதான்.” கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.
      அவர் பெரியதொரு குழப்பத்துக்குள்ளானார்.
      ” சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புருத்துறீங்க?”
      ” அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க.”
      ” பைத்தியமா? நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்?”
      ” ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல்வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப் பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க..புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை” சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.
      ” எங்களுக்கு தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.
      ” நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும்போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும் தானே?”
      ” ஆமா..அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்க மாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க.” பழ வியாபாரி கூறினான்.
      ” அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க.”
      அவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.
      ” அவர்கள் எல்லோருமே பொலிஸ்காரர்களா?”
      ” சில பேர் பொலிஸ்காரர்கள்.. சில பேர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்கு பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரிப் போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க.”
      ” அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்.” சில்லறை வியாபாரி சொன்னான்.
      ” பிச்சைக்காரங்க எங்களுக்கு தயவுபண்ணுங்க ” பழ வியாபாரி கெஞ்சினான்.
      ” ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க” கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.
      அவர் ஒரு கணம் சிந்தித்தார். ‘எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.’
      ” சரி..நான் போகல. ஆனா நீங்க கொண்டு வந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க.”
      அவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.
      பழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.
      ” நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா?”
      ” ம்ம்..! நல்லது.. நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்கக்கிட்ட இருந்து எதுவுமே வேணாம்.”
      ” ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.” கோப்பிக் கடைக்காரன் ஆசிர்வதித்தான்.  

எமதுலகில் சூரியனும் இல்லை

 

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

– ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.
காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும். ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும் வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லாம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்துகொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக் கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர். சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்திவிட்டுப் பறப்பது மிகப் பெரும் வேடிக்கையாயும், அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பியும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப் பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்து, தலையைத் தடவிய படியும், தடவிய விரல்களில் இரத்தச் சிவப்புகளேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தபடியும் வரும்போது சிறுவர்கள் ‘கா..கா’ எனக் காக்கையின் மொழியைக் கத்திவிட்டு ஓடுவார்கள். அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.
சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசுவதில்லை. எந்தக் கொம்பனாலும் அவனது நாவசைய வைத்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவியெடுக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆம்,இல்லை’ என்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெரிந்திருந்தது. அவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற்றுக்கு எடுத்துப்போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க்கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்திவிட்டுப் பறக்கின்றனவோ என்னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும். அதை அழுத்திவிட்டால் பேசும். ஒலிக்கும். பாடும். அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான் அழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட்டுச் சென்றால்தான் அது பேசுமெனவும் குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தாய்மார் உணவூட்டினர்.
அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்வூரில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தான். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளைகளில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயே வேலைக்கிருந்தான். அவனுக்கென்று சிறு குடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக் கொள்ளும் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான். ஒரு தண்ணீர்க்குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள், ஒரு கேத்தல், ஒரு சிறுகுவளை, ஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணை, இரண்டு வெள்ளைச் சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டுக்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைகள் அவனது உடைமைகளென அக் குடிசையை நிரப்பின. அடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும் ரொட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட்டி தயாரிப்பது அவன் வேலை. காக்கைகளுக்குப் பயந்து அவையெல்லாம் கூடடைந்த பின்னரான முன்னிரவில் அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்துவருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமைத்து மீதமிருக்கும் சோற்றை உண்டு விட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவான். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற்றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் குடிசைக்கு வந்தால் இனி அந்தி சாயும் நேரம் வரை உறக்கம்தான். உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப்போவான்.
எப்பொழுதாவது மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமே அவன் பகல்வேளையில் வெளியே வருவான். ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக்கைகள், பெரியவர் வீட்டுமுற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள் கொத்தியதில் விறகு வெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமும் நெற்றியிலிருந்து கோடாய் வழியலாயிற்று. வசவு மொழிகள் வாயிலிருந்து பெருஞ்சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப்பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந்தனர். பெரியவரின் தாய்க்கிழவி அவனை விறகுவெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அவனது சிறுவயதில் குஞ்சுகளிருந்த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய்த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் காக்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வாங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித்து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கிழவி அப்பெண்களோடு பகிர்ந்துகொண்டாள். வரும்வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லை. அவன் அமைதியாகக் குடிசை வந்து சேர்ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப்போனான்.
ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர் அவனை மீன் வாங்க அனுப்பிவைப்பார். அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலேயே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித்து அவன் பயந்தான். மீனின் உதிரிப்பாகங்களைக் கொத்தித் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப்பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தன. சந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒரு அதிசயப்பிராணியாகப் பார்த்தனர். இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட்டினர். சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பதுபோல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின்னவும், வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித்தன.
இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையிலிருந்து மீன் வாங்கி வரும்வேளை பள்ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான். அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒரு சேர வடிய கைகளில் இரு புளியம்பழங்களோடு அந்த அத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததைப் பார்த்தான். நின்று அருகில் போய் என்னவென்று கைகளால் விசாரித்தான். யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடையோடு கால்கள் வளைந்து குட்டையான இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறிக்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சந்தைப்பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊருக்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக்கு அவளைக்கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்று அவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந்தது. அந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்துவரும் ‘விஸ்க்’ எனும் ஒலியைக் கேட்டபோதெல்லாம் சிறுமி விம்மியபடி திரும்பி காக்கையைப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள். சில சிறுவர்கள் ‘கா..கா’ எனக் கத்திவிட்டு ஓடினர். மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன் அச்சிறுமி முன்னால் காக்கைக்கெதிரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை. அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணியவில்லை. மௌனமாக, அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலேயே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தான். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவியது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப்படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற்றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத்தது.
அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் காணும் சிலர் அவனின் நலம் விசாரித்தனர். பதில்களெதுவும் வராது எனினும் அவனைக் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளியே வரும்போது தொப்பி அணிந்துகொள்ளும் படியும் அல்லது காக்கைகள் பார்த்து மிரளும்படியாக மினுங்கும் ஏதாவதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக் கட்டியபடி வெளியே வரும்படியும் சிலர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப்பழத்தோலைப் போல கூறு கூறாய் மேல் நோக்கி வளர்ந்திருந்த அவனது தலைமுடியினை முழுவதுமாக அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும்படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும்படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினை, சூனியமெனச் சொல்லி அவர்களுக்குத் தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டதாகச் செய்கை செய்தான். அடுத்த முறை பகலில் வெளியே வருகையில் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தப் பார்த்தான். எதற்கும் அசையாக் காக்கைகள் அதன் பின்னால் தொப்பியைக் கொத்திப்பறந்தன. ஒரு முறை கொத்திய காக்கைகள் கூட மீண்டும் மீண்டும் சுற்றிவந்து திருப்பித் திருப்பிக் கொத்தின. கூடி நின்று ஒரு சேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந்த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீசியெறிந்தான்.

ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி தயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப்பார்த்தான். தண்ணீர் குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன் அவன் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாக வந்து சொன்னான். அவனைத் தேடிப்போக அலுத்தவர்கள் ஓரிரண்டு நாள் பொறுத்துப்பார்க்கலாம் என இருந்தனர். ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாக ஆவலாகக் காத்திருந்த, வேலை தேடிப்போயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டது. மறுநாள் விடிகாலையில் குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

சேகுவேராவின் சேற்று தேவதை

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை – 2010)

யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.
வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.
அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.
இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.
கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன. தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.
யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.
பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.
இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.
இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.
இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.
அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.
அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.
அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.
பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.
இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.

மூலம் – ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)





சுய துரோகம்
நேற்று நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம் காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம் காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம் காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம் எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்
நேற்று நாங்கள் சந்திக்காதிருந்தோம் இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம் காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம் பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை அனுபவிக்காதிருந்தோம்
நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய்
நேற்று நீயென்று ஒருவர் இருக்கவில்லை நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும் இன்றும் அவ்வாறே நான் மாத்திரமே பாதம் பதிக்க இடமற்ற வெற்று வெளியொன்றில் புவியொன்றா பிரபஞ்சமொன்றா பொருளொன்றா சக்தியொன்றா எண்ணமொன்றா உணர்வொன்றா இவை ஏதுமற்ற வெற்று வெளியொன்றில் வெறுமனே தரித்திருக்கிறேன்
நேற்று சூரியன் உதித்திடவில்லை நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை அதுவுமன்றி நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை
எல்லாமே வெறுமையாய்…

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும் இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும் பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக் கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம்மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை





மொழிபெயர்ப்புக் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு
செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை
கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும்
சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்
மூலம்திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)