ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு
மயில் தோகை விரிக்கும்
பூமியை குளிரச் செய்ய
வானம் கருணை கொள்ளும்
மரங்கள் தான் செய்த தவங்கள்
வீண்போகவில்லையென
மெய்சிலிர்க்கும்
குடை மனிதர்களுக்கு
மூன்றாவது கையாகும்
காகிதக் கப்பல்கள்
கணித சமன்பாடுகளைச்
சுமந்து செல்லும்
கொடியில் காயும்
துணிகளெல்லாம்
எஜமானியம்மாவை
கூவி அழைக்கும்
ஆடுகள் மே என்று
கத்தியபடி
கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும்
தேகம் நனையச் செல்லும்
தேவதையை
கண்கள் வெறித்துப் பார்க்கும்.

பிளாஸ்டிக் நதி



எந்தவொரு நதியின் மீதும்
புகார் சொல்வது
முடியாது என்றபடி அதன்
கழுத்தைத் திருகுகிறேன்
பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது
என்
தாகம்

*****
   

நனைந்த சிறகுகள்

மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை
நனைத்துச்சென்றது

துண்டு நிழல்


*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****
  

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..



மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்

காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்

விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்

அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..

******
    

உயிரோசை

உண்மையை
உண்மையென்று உணர்த்த
இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்
தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.
ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

குழந்தையின் நிலாப் பயணம்

பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள். 

உண்மை

 
 
 
 உண்மைகள் என்றால் 
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்
தனக்குத் தெரியாத உண்மைகளே 
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்
அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்
முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்
அவனது பாதுகாப்பே
விலையென்றாலும் 
பயப்பட மாட்டான்
எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே 
சொல்லி அனுப்பினார்கள்
சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்
சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்
அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும் 
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்
மறுக்கப்படும் 
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை 
என்கிற உண்மை மட்டும்
பார்வைக்குச் சிக்காமல் 
அவனது நடுமுதுகில் அமர்ந்து 
கண்சிமிட்டிச் சிரித்தபடி 
சவாரி செய்து கொண்டிருந்தது
தன்னை விலை பேசவே முடியாதென்று.

பார்வைகள்

 
 
 
 
 
டெட்ராய்ட் நகரத்தின் ஒரு டிசம்பர்மாதக்  காலைப்பொழுது.
 
வழக்கம் போல ஜாக்கிங்கிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி சிறு அறிமுகம்.
 
பெயர் அரவிந்தன்.வயது இருபத்தி எட்டு,இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாய் அமெரிக்கா வந்திருக்கிறேன்.கார் நகரத்துக்காரிகைகளை ரசித்தபடியே ஆறுமாதங்களைக்கழித்துவிட்டேன்..ஆயிற்று அடுத்தவாரம் தாய்மண்ணே வணக்கம் என்று கூவிக்கொண்டுசிங்காரச்சென்னைக்குப்போய்விடுவேன்.
 
தினமும் ஜாக்கிங் செய்யும் பாதையில்  என் கால்கள் செல்கின்றன. எங்கும் மூடுபனியின் ஆக்கிரமிப்பு.
 
மிச்சிகன் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற குளிருக்குப் பாதுகாப்பாய்த் தான் புறப்பட்டு வந்திருக்கிறேன்.
 
எல்லாவற்றிலும் எனக்கு முன்எச்சரிக்கை உணர்வு அதிகம். என் பார்வை கூர்மையானது. பள்ளி நாட்களிலிருந்தே கண்பார்த்ததை மனசு உள் வாங்கிக் கொள்ளும். எனது இந்தத் திறமைதான் என்னை இந்த உயர்நிலைக்கு வரவழைத்திருக்கிறது என்பதில் பெருமை எனக்கு!
 
எதேதோ நினனத்தபடி ஜாக்க்கிங் முடித்து என் அபார்ட்மெண்ட்டிற்குத் திரும்ப நடக்கிறேன்.
 
அப்போதுதான் உணர்கிறேன் பாதை தெரியாத  அளவுக்கு பனிப்படலம் புகையாய் சூழ்ந்துவிட்டிருக்கிறது என்பதை.
 
ஒருக்கணம் என்ன செய்வதென்றே புரியவில்லை.
 
அலுவலகத்தில் இன்று முக்கியமான மீட்டிங் வேறு சரியான நேரத்திற்குப் போக வேண்டுமே?
 
தவிப்புடன் நிற்கும் போது தொலைவில் யாரோ நடந்து வருவதை டக்டக் என்ற ஷூவின் ஒலி நிரூபித்தது.
 
பெருமூச்சுவிட்டவன்,” எக்ஸ்யூஸ்மீ?” என்று குரல் கொடுக்கிறேன்.குரல்தான் இப்போதுஎனக்குப்பார்வையாக இருக்கிறது.
 
ஷூ சத்தம் நிற்கிறது.”யெஸ்?” என்று கேட்கிறது. குரலுக்குரியவருக்கும் என்னைதெரிய வாய்ப்பில்லைதான்  பனிப்புகை தான் எங்களை மறைக்கிரதே!
 
தொடர்ந்து,” உங்களூக்கு ஏதும் நான் உதவவேண்டுமா?” என்கிறது
ஆர்வத்துடன்.அந்த ஆங்கில உச்சரிப்பு குரலுக்குரிய நபர் அமெரிக்கர் என உறுதிப்படுத்துகிறது.இந்த ஊர்க்காரர்களுக்கு  ஓரளவு எல்லா இடமும் அத்துப்படியாய் இருக்குமே?
 
நான், எனது நிலைமையைக்கூறி உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
“வித் ப்ளஷர்… எதற்கும் நான் என் கைத்தடியை நீட்டுகிறேன் அதை பிடித்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்றார் அந்த மனிதர்.குரலைவைத்து நாற்பதுகளில் வயதைச் சொல்லலாம் போலிருக்கிறது.
 
நான் அவர் நீட்டிய கைத்தடியை பனிப்புகைமண்டலத்தில் அனுமானமாய் கைவிட்டுத் துழாவி கெட்டியாய் பிடித்துக் கொள்கிறேன்.
 
போகும்வழியில் என்னைப்பற்றி கூறிவிட்டு,”இந்த ஆறுமாதத்தில் எனக்கு இப்படி வழி தெரியாமல் போனதே இல்லை..என் பார்வையில் ஒருதடவை எதைப்பார்த்தாலும் அது மனதில் பதிந்துவிடும். என்னவோ இன்று இப்படியாகிவிட்டது” என்கிறேன்.
 
“ஓ அப்படியா?” என்கிறார் அவர் வியப்புடன்.
 
அபார்ட்மெண்ட் வாசலுக்கு என்னைக் கொண்டுவிடுகிறார்.
 
“நன்றீ”என்று நான் கூறும்போதே சூரியன் எட்டிப்பார்க்க மெல்லப்பனிப் படலம்  விலக ஆரம்பிக்கிறது.
 
அவரை நோக்கி,”அதெப்படி,பனிப்படலத்தில் வழி  பிசகாமல் நடந்து வந்தீர்கள்? ஆச்சரியமாய் இருக்கிறது!” என்றுகேட்டேன்.
 
அந்த மனிதர் சட்டென தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபடி,” என்னைப் போன்றவர்களுக்கு பாதங்களில் தான் பார்வை. உங்களுக்கு இன்று உதவமுடிந்ததில் மகிழ்ச்சி வருகிறேன்’ என்று அடக்கமுடன் கூறி கைகுலுக்கி விடை பெறுகிறார்.
 
டக் டக் டக்..
 
அவரது கைத்தடியின் ஓசை கம்பீரமாக ஒலித்தபடி நகர்கிறது அந்த நேரம்அதுவரை என்னைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்திருந்த என் பார்வை சட்டென தாழ்கிறது.