புள்ளிக் கோலங்கள்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.
இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.
கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.
கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.
காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.
மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.
முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் …
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி.

இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..

 
இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

எதையாவது சொல்லட்டுமா……….58

செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் இதய நாள் கொண்டாடுகிறார்கள்.  போனவாரம் சனிக்கிழமை என் உறவினருடன் சென்னைக்கு இரவு 12.45க்கு வரும் ராமேஸ்வரம் விரைவு வண்டியில் ஏறும்போது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  தில்லியில் இருக்கும் எங்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்துவிட்டார் என்று குறிப்பிட்டார். கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.  தினமும் நடப்பவர்.  சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாதவர்.  வயது 68 இருக்கும்.  அவருக்கு எப்படி இதுமாதிரி ஏற்பட்டது.  இன்னொருவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் ஒரு மாதம் மேல் அலுவலகம் வரவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக நான் மூன்று விபத்துக்களை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன்.  பந்தநல்லூர் என்ற கிராமத்தில் இருக்கும்போது, என் அலுவலக நண்பர் ஒருவருக்கு எதிர்பாராதவிதமாய் மாரடைப்பு (Heart Attack).  முதலில் இது தெதியாது.  அவசரம் அவசரமாக 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள சுகம் மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் தெரியும்.  அவர் தப்பித்து விட்டார்.  கொஞ்சம் ஏமாந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். 
ஒரு முறை என் அலுவலக நண்பர் ஒருவர், அவர் பெண்ணின் பாட்டுக் கச்சேரியை வைத்திருந்தார்.  பேசுவதற்கு பெண்ணின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார்.  பாட்டுக் கச்சேரி போய்க்கொண்டிருந்தது.  துக்கடா பாடும்முன் மேடையில் எல்லோரும் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசினார்கள்.  கல்லூரி பேராசிரியரும் பாராட்டிப் பேசினார்.  பின் பெண் துக்கடா பாட ஆரம்பித்தாள்.  கல்லூரி பேராசிரியர் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்து கொண்டார்.  கொஞ்ச நேரத்தில் பேராசிரியர் அவர் உட்கார்ந்த இருக்கையிலிருந்து கீழே சாய்ந்தார்.  பின் நினைவு தப்பிப் போய்விட்டது.  பாட்டுக் கச்சேரி நின்றுவிட்டது.  நண்பருடன் வண்டியில் பேராசிரியரை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.  நண்பரைப் பார்த்து, மருத்துவர் கேட்டார்  ”இவர் இறந்து போயாற்று… ஏன் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?” என்று. எனக்கு படபடவென்று வந்தது.  அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தேன்.  மயிலாடுதுறையில் உள்ள என் அறைக்கு வந்தபிறகுகூட தூக்கம் வராமல் இரவு முழுவதும் அவதிப்பட்டேன்.  இப்படி நம் முன்னால் நடப்பதை எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன். 
நான் அமெரிக்கா போவதற்கு முன் உடல் பரிசோதனை செய்துகொண்டு ஒரு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கச் சென்றேன்.  ஏன்எனில் அமெரிக்காவில் சான்றிதழ் இல்லாமல் மாத்திரை தர மாட்டார்களாம்.  என்னைப் பரிசோதித்த டாக்டர், சான்றிதழ் தருவதற்கு முன் என்னை எச்சரிக்கை செய்தார்.  நான் பயந்து விட்டேன்.  அமெரிக்காவிற்கு கடைசி நிமிடத்தில் போகாமல் இருந்து விடலாமலா என்று நினைத்தேன்.  பின் முன் வைத்தக் காலை பின் வைக்கக்கூடாதென்று பயத்துடன் கிளம்பி விட்டேன். எப்போதும் என் ரத்த அழுத்தத்தை மருத்துவர் சோதிக்கிறார் என்றால் அது அதிகமாகவே காட்டும். அமெரிக்காவிலிருந்து டாக்டர் செல்வராஜூற்கு போன் செய்தேன்.  பின் அவர் ஏற்கனவே சொன்ன மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு மாதம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விட்டேன்.  திரும்பவும் சென்னை வந்து ஒரு மாதம் மேல் ஓடிவிட்டது.  இருந்தும் என் சர்க்கரை நோயைக் குறைக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கிறேன். சாப்பாட்டை குறைத்துவிட்டேன். 
செய்தித்தாளில் உலக இதய நாள் பற்றி செய்திகளைப் படித்தபோது, ஒரு செய்தி என் கண்ணில் இருந்து விலகாமல் இருந்தது.  ஒருவர் பொங்கல், வடை, பரோட்டா சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம்.  இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் வர எல்லாவித வாய்ப்பும் உண்டாம்.  அடப்பாவி தினமும் இந்தப் பொங்கல் வடையைச் சாப்பிடுகிறேனே என்று நினைத்துக்கொண்டேன். செய்தியைப் பார்த்த அன்று பொங்கல் வடையைச் சாப்பிடாமல் அலுவலகம் சென்றேன்.  அங்கோ என் அலுவலகப் பெண்மணி ஒருவருக்கு பிறந்த தினம் என்று எல்லோருக்கும் அலுவலக முனையில் உள்ள ஒரு கடையிலிருந்து வடையை தருவித்துக் கொடுத்தார்.  வேறு வழியில்லாமல் அந்த வடையைச் காப்பிட்டு 4 தம்ளர் தண்ணீரைக் குடித்தேன்.  சர்க்கரை நோயுடன் எப்படி வாழ்வது என்ற புத்தகம் எழுதலாமா என்று யோசிக்கிறேன். 

ழ கவிதைகள்

ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

மூன்று கவிதைகள்

வி பார்த்தசாரதி

1.

திரும்புகிறார்கள்
மழைத்துளிக்குப்
பயந்து பலர்
கடற்கரையில்

2.

நேற்று என்னால்
காற்றைப் பார்க்க முடிந்தது
இன்று நீ இதை
‘செடி’ என்று சொன்னாலும் சரி
‘சிறு மரம்’ என்று சொன்னாலும் சரியே

3.
நீ போய்க் கொண்டிருக்கிறாய்
நான் வந்து கொண்டிருக்கிறேன் அல்லது
நீ வந்து கொண்டிருக்கிறாய்
நான் போய்க் கொண்டிருக்கிறேன் அதனால்தான்
நாம் சந்திக்க முடிகிறது வெளியில் இப்படி.

எட்டாவது நிறம்


ஏழு வர்ணப் பென்சில் கொண்டு
வரைந்து காட்டிய வானவில்லோடு
எட்டாவது நிறமாக
ஒட்டிக் கொள்கிறது
பாப்பாவின்
வளைந்த குட்டிப் புன்னகையொன்று

******

காலம்

ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள்.  எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை.  ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்…….

மழை துரத்திய இரவில்

வானத்தில் வந்த
பூகம்பம் போல்
திடீரென இடி முழக்கம்.
விண்மீன்களையெல்லாம்
சுனாமி அடித்துச்
சென்றது போல்
வெறுமையாய்
கருவானம்.
இடை இடையே
வானத்தைக் கீறித்
தெறித்த ரத்தமற்ற
நரம்புகளாய் மின்னல்.
எங்கோப் புறப்படுகிற
மழை என்னை
இங்கேத் துரத்தியது.
தூங்குவதற்கு முன்
சன்னல்களையெல்லாம்
அடைத்து விட்டேன்.
இடிக்கு அஞ்சி கேபிள்
இணைப்புகளையெல்லாம்
திறந்து விட்டேன்.
மொட்டை மாடியில்
தொங்கிய 
துணிகளையெல்லாம்
தூங்கும் அறைக்குள்
தூங்க விட்டேன்.
நானும் தூங்கிப்
போனேன் வருகிற
மழையும் வந்ததாய்..
இடையில்
கொசுக்கள் வந்து
கடித்து எழுப்ப
தொப்பையாய்
நனைந்திருந்தேன்
வியர்வையில்.
நீச்சல் தெரியாத
இன்னொரு கொசு
வியர்வை மழையில்
நனைந்து முங்கிச்
செத்தது.
சன்னலைத் திறந்தேன்.
வழக்கம் போல்
வெறும் வானம்
விண்மீன்களுடன்
ஒரு விளையாட்டுப்
புன்னகையுடன்…
கொசுக்கள்
குதூகலத்துடன்
கைதட்டிப் பறந்தன.
அன்றைய இடியின்
முடிவு இப்படியொரு
கவிதையாய். 

வெயில் மங்கும் எழுத்துக்கள்..


*
கண் மூடித் திறந்த ஒரு நொடியில்
இருள் வந்துவிட்டது
அடுத்த நொடியில் மீண்டது
பகலின் நிழலென பரவும் இரவின்
நிழலென பரவும் பகல்

வாசிக்க முடியாமல் மங்கும்
எழுத்துக்கள் மொத்தமும்
புத்தகத்திலிருந்து கொட்டுகிறது
நிழலை இரவை இழுத்துக் கொண்டு

பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில்
ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை
செடியின் காம்பில் ஊர்கிறது
எழுத்துக்களை சுமந்தபடி
எறும்புகள்

வெயில் பட்டுப் பட்டு
ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது
ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும்
வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

முதல் நிலவு

சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு
இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக
ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன.
பகலென்ன இரவென்ன ?
எப்போதும் நிலவுகளின் ஒளியில்
எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன்
ஆதலால் நான் என்னை
அங்கே செலுத்திக்கொள்ளலாம்
என்றிருக்கிறேன்
இப்படிச்சொன்னதிலிருந்து
ஒரு நிலவு என்னுடன்
பேச மறுத்துவிட்டது.

குழப்பம்

 
 

0

எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார்
மோசஸ்சார் பற்றி கொஞ்சம் பேசலாம்

கருத்த உருவம்
தொடர்பற்ற பேச்சு
கன்னாபின்னா கோளத்துக்குள்
கன்னாபின்னாவென
வேலை செய்யும் மூளை

வகுப்பறையில் தூங்கும்
சோம்பேறி

சுவரசியமாக எதுவுமில்லையா?

முப்பதாவது வயதில்
லாரி ஏறி
மூளை வெளித்தள்ளி
இறந்து போனார்

அவரை நீங்கள்தான் இந்தக்
கவிதையைப் பயன்படுத்தி
கொன்றுவிட்டீர்கள் என்றால் நம்புவீர்களா?