ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

காலம்

காளி – தாஸ்

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள்.  எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை.  ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்……..

ழ கவிதைகள் – 5வது இதழ்

நீலமணி


சேரிகள்

சிறியார்க் கில்லாப் பெரியார் உறுப்பு
பச்சைத் தோரணம்.  பொற்கொடி முட்கள்
உற்றுழி உதவாது ஓடிப்போகிற
பட்டைப் போலவும் பருத்திபோ லவுமின்றி
ஒட்டிஉற வுகொளும் வெட்டிவேர், வேடர்
ஒட்டமுடி யாத தேனீ மொய்ப்பு.
ஆண்டவன் தந்த அத்தி இலை.  இது
இடையில் வந்நது.  மூலைகளில் ஒளியும்
இருட்டு, காலம் போர்த்திய பொன்னாடை
அழைப்பு விடுக்கும் பச்சை விளக்கு
பாடல் பெறாத்திருப் பதிகள்.  விழல்கள்
பாம்பின் பச்சைப் படம்.  உயிர் வேலி
சந்தன மரத்துப் புல்லுரு விக்கொடி
வீட்டு வாசலில் போட்ட கோலம்
சல்லிவேர்ச் சல்லடை.  மவுன சாட்சி
விளக்கடி நிழல்இது எப்பறவைக் கூடு?
தோள்மீ தமரும் வழக்கம் மாறி
தோளுள் அமர்ந்த பச்சைக் கிளிகள்
பிரியும் புத்தகப் பக்கங் களிடை
பையன் வைத்த நீலமயி லிறகு
பொன்னுலகத்து இருண்டகண் டங்கள்
மாம்ச ஒட்டடை.  ராமன் கோடுகள்
காலம் ஒட்டிய பச்சை ஸ்டாம்புகள்
சிறையின் கம்பிகள்.  தேதிமுத் திரைகள்
புழுக்க நேரத்துத் தோகை விசிறிகள்
தாரால் எழுதிய புரட்சிகோ ஷங்கள்
புரியாத அயல்மொழிக் கவிதைகள்.  பாசி
சாயம். தீவுகள்.  பொன்வேய்ந்த கூரை
இக்கறை களுக்குக் கடவுள் பொறுப்பு
வெற்றித் தலைவன் தோளில் கூட்ட
நீ வளர்த்த கறுப்புப் பூக்கள்
குறில் நிழல்கள்.  உப்புப் பயிர்கள்
தேகச் சுவரில் தட்டிய வரட்டிகள்
அடங்கி நடக்கும் அந்தப்புரப் பிறவிகள்
தான்தோன்றி விளைச்சல்.  கடித்தநா கவிஷம்
நிலவுக் கறை, பாலில் மிதக்கும் நஞ்சு
அடக்குமுறை எதிர்த்த புரட்சிக் கருங்கொடி
கருப்புக்கண் ணாடிகள் கடைசிச் செய்திகள்
அம்புப் படுக்கை ஆருக் காகவோ?
பர்த்தாவும் அகற்றாப் பர்தா.  சேரிகள்
ஆண்டவன் பரமண்டலத்துச் சாத்தான் காலனிகள்
பரபரப்பான செய்திப் பத்தி
இலையின் மூலையில் இருக்கிற ஊறுகாய்

  நீலமணி.

ழ கவிதைகள் – 5வது இதழ்

மூன்று கவிதைகள்
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்
2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்
3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு  போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்
                                                                    நகுலன்
டிசம்பர் 1978 ஜனவரி 1979

அலைகள் காத்திருக்கும்…

பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை

உதிர்ந்த வண்ணம், ஒரு சிறகுடன்
மீண்டும் தேடி மீட்ட போது
பூச்சி சொன்னது “நொண்டுவது
நான் மட்டுமல்ல 
  காலத்தில் கரைந்து போகும் நீயும் தான்,
நொண்டினாலும்,பாடி பறந்து திரிவேன் நான் ”
என்ற பூச்சியை பார்த்து சொன்னென்
“நான் மானுடன்-Man can be destroyed ,but not deafeted.”

காதல் கவிதைகள்

கொஞ்சம் காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என பதிப்பாளர்
என்னிடம் கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும் என் கனவில்
வந்து போக விருப்பமா ?
ஏற்கனவே பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும் உங்கள் நினைவுகளும்
என் காதல் கவிதைகளில்
நிச்சயம் இடம்பெறும்
என்பது உறுதி.
என் கனவுகளில் என்றும்
நிலைத்திருக்க வேண்டிவரும்
என்று அஞ்சத்தேவையில்லை.
அச்சில் வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள் தேறும் வரையே
உங்களின் நினைவுகள்
எனக்குத் தேவைப்படும்
நான் உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான் விழித்திருக்கும் நேரம்
நுழைய நேர்ந்தால்
எப்போதும் அழியாமல்
தங்கிவிட வாய்ப்புண்டு.

தூக்கம்

இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்

பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்

சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்

பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை

உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.

 

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

இஸுரு சாமர சோமவீர

இருளில் உருளும் மனம்

இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

தரக்குடும்பம்

இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்…