நிலவும் குட்டி முதலைகளும்

 

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்…
குத்து வாள் போலிருந்த

அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது

முதுகைச் சொறிந்து
கொண்டன. 

நிலவும் காகமும்

அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி

சாய்க்கப் பட்டது.  
கிளையோடு விழுந்த

கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம். 

நிலவும் தவளையும்

 

அலையற்ற நீர்

படுக்கையில் அயர்ந்த

தூக்கத்தில் நிலா.
நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.
இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்

துள்ளலில் வளைந்து

நெளிந்தது நிலா. 

நீரும் நிலாவும்

பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.

நிலா இருந்தது.

கொஞ்சம்
கரைந்துமிருந்தது.

மீண்டும் மூடி

வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.

இன்னும் கரைந்திருந்தது.  

நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக. 

நிலாவைத் தின்ற எறும்பு

நீரில் மிதந்த எறும்பு
அலையினில் அசைந்து
கொண்டிருந்த நிலாவை
கடித்து கடித்து இழுத்தது.
எறும்பின் கூர்வாய்க்குள்

நிலாவின் விழும்பு

இழுபடுவது போல் தோன்ற
இன்னும் உற்சாகமாய்

இழுக்க முனைகையில்

நிலாவைத் தின்ற
எறும்பின் சுவையறிந்த
ஒரு பறவை
எறும்பைக்
கவ்விப் பறந்தது.

நரியும் நிலாவும்

பௌர்ணமி இரவில்

கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை…
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி…
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.

நிலாக் காவல்

நடந்து கொண்டே

இருந்தேன். என்னைத்

தொடர்ந்து கொண்டே

இருந்தது நிலா.

இரவின் தனிமை

என்னை

அச்சமூட்டவில்லை…

நடந்த தூரங்கள் முழுக்க

தொடர்ந்து உரையாடிக்

கொண்டே வந்தது நிலா…

நான் நுழைந்த

அந்த வீட்டிற்குள்

மட்டும் நுழையவில்லை

அந்த நிலா..

எவ்வளவு நேரம்

எனக்காக வெளியே

காத்திருந்ததோ

எனக்குத் தெரியவில்லை…

பூனைக்குட்டியும் நிலாவும்

நிலாவை இதுவரைப்

பார்த்திராத பூனைக்குட்டி

திடீரென நிலாவைப்

பார்த்து பயந்தோடியது..

நிலா துரத்த துரத்த

பூனைக்குட்டி

இன்னும் வேகமாய்

ஓடிப் பின்னால்

மேலேப் பார்த்தது,.

நிலா ஒரு மேகத்துள்

மறைந்திருந்து நோட்டம்

விடுவது போல்

பூனைக்குத் தோன்றிற்று.

பூனை வேகமாய்

ஒரு புதரில் மறைந்து

நிலாவைப் பார்க்க

நிலா மீண்டும்

மேகக் குகையிலிருந்து

வெளியே வந்து துரத்த

பூனைக்குட்டி ஓடிஓடி

ஒரு வீட்டிற்குள்

நுழைந்தது.

சீறும் பூனைக்குட்டியைக்

கண்டு பயந்த

மூன்று வயது குழந்தை

ஓடிப்போய்

அம்மாவின் மடியில்

விழுந்து அழ

அம்மா நிலாவைக்

காட்டி குழந்தையை

சமாதானப் படுத்தினாள்…

நிலாதான் குழந்தையின்

அழுகையின் ஆரம்பமென

அறியாது…

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின்

பரந்த வெளியில்

கொட்டகைத் தொட்டியில்

கொட்டிய கழனியை

சப்பி சப்பி

குடித்தது பசு.

நிலா மிதந்த

கழனியை மென்று

மென்று சுவைத்தது.

மிகுந்த சுவையாய்

இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல

வாய்க்கு பிடிபடாமல்

தொட்டியில் எஞ்சிய

கழனியிலேயே கொஞ்சி

விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்

காணாமல் நிலா போக

பசு கன்றைப்

பார்த்தது சந்தேகமாக

கண்ணீரின் புனிதம்

உப்பெல்லாம் கண்ணீரில்

கரைந்து விடுவதால்

உணர்வுகளும் கண்ணீரோடு

கரைந்து விடுமாவெனத்

தெரியவில்லை.

கன்னத்தில் சொட்டுகிற

கண்ணீர் சுத்தமானதா

அசுத்தம் கலந்ததாவென

அறிய இயலவில்லை.

தோண்டி விட்டார்களா

ஊற்றாய் ஊறி

வந்ததாவெனவும்

தெரியவில்லை.

ஆனால் அனுதாப

அலைகளால்

அனைவரையும்

சுனாமியாய் அபகரிக்க

இயல்கிறது சில துளி

சொட்டும் கண்ணீரால்.