அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல




என் படுக்கையறைச்சன்னலோரம்
புறா ஒன்று அமர்ந்திருக்கிறது
நெடு நேரமாய்
அது
இருப்பது இல்லாதது போல்
இருக்கிறது.
ஒரு அந்தரங்கத்தை அறிந்த
ரகசியம் போல
அவ்வளவு அமைதி
அவ்வளவு சாந்தம்
எப்பொழுதாவது
தன் இணைக்கு மட்டும்
அனுப்புகிறது. தனது  தனிமையை
குறுஞ்செய்தியாக்கி
க்கும்…  க்கும்…




ரவிஉதயன்.

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்


அழகியசிங்கர்                        

                                                             


தூரத்தில் வண்டி வருகிறது
  வேகமாகவும்
மெதுவாகவும
சுற்றி சுற்றி பல வண்டிகள்
வந்தவண்ணம் உள்ளன.
ஹாரன் அடித்தபடி
வண்டிகள் கிடுகிடுக்க                வைக்கின்றன                                 பீட்டர்ஸ் சாலை
காலை நேரத்தில் அதிர்கிறது
ஸ்கூட்டரில் பள்ளிச் சிறார்கள்
அலுவலகம் போக
அவசரம் அவசரமாக
வண்டி பறக்கிறது.
மெதுவாக பீட்டர்ஸ் சாலை
பெசன்ட் சாலையாக மாறுகிறது.
பல்லவன் பஸ்கள் நிற்க
கூட்டம் எல்லா இடத்திலும்
நானும் நிற்கிறேன் மேலே நகராமல்
                       அழுக்கு வண்டிகளும் அழுக்கில்லாத
வண்டிகளும் பொறுமை இல்லாமல்
கதற கதற ஹாரன் அடிக்கின்றன
காலையில் அலுவலகத்தில்
                        கூடும் கூட்டத்தை
மனம் எண்ணி எண்ணி  படபடக்கிறது…..

சீரியல் மகத்துவம்…

சீரியல் மகத்துவம்…

அழகியசிங்கர்

                அலுக்காமல்
சலிக்காமல்
தினமும்
சீரியல் பார்க்கும்
குடும்பம்
எங்கள் குடும்பம்

நானும்

அதில் ஒருவனாக
மாறிவிடுவேனோ
என்று பயமாக இருக்கிறது

சீரியலே வாழ்க்.

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

செல்வராஜ் ஜெகதீசன்
வாங்கிய பொருட்களின்
கனம் தாங்காமல்
கடை வாசலில் வைத்தேன்
சற்றே இளைப்பாற.
பாய்ந்து வந்து பைகளின்
மேல் மோதிய
பூனையொன்றை
விரட்டியவன் வேகமாய்
அவ்விடம் விட்டு
அகன்றேன்.
பூனைக்கு உதவும்
மனமில்லாமல் இல்லை.
பூனைக்கும் மனிதனுக்கும்
பொதுவான உணவொன்றும்
பை-வசம் இல்லாததே
காரணம்.

அலைதலின் முற்றுகை

அலைதலின் முற்றுகை 
கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த 
மனம் எனது 
தவறவிட்ட 
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை 
மழையும் வெயிலும் 
துரத்திக் கொண்டிருக்கிறது 
மேல்நோக்கி 
கீழிறங்கி 
அந்தரத்தில் மிதந்து அலையும் 
இறகு ஒன்றினைத் தனதாக்க 
நெஞ்சு விம்ம விம்ம 
கைகளை நீள.. நீள… நீட்டுகிறேன் 
ஓணான் அடிக்கும் குழந்தைகளை 
யதேச்சையாய்க் கடக்கிறேன் 
தொப்பலென 
உனதான எனக்கானத் தாய்மடியில் 
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்
*** 
–ஆறுமுகம் முருகேசன் 

மீன்கொத்தி ஆறு

மீன்கொத்தி ஆறு                       




கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்


உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன


நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன


உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது


திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்


காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

ரவிஉதயன்

எதையாவது சொல்லட்டுமா….81

எதையாவது சொல்லட்டுமா….81
அழகியசிங்கர் 
நான் மாம்பல வாசி.  மாம்பலத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குமேல் வசித்து வருகிறேன்.  நான் பார்த்த மாம்பலம் வேறு.  இப்போது பார்க்கும் மாம்பலம் வேறு. நான் வங்கியில் சேர்ந்த புதியதில் மாம்பலத்தில் குடியிருந்த என் அலுவலகப் பெண்மணிக்குத் திருமணம்.  அந்தத் திருமணத்தை மாம்பலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அந்தப் பெண் எப்பவாவது என் வீட்டிற்கு வந்து அலுவலகம் போக முடியாவிட்டால் வரமுடியவில்லை என்று கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போவார்.  
எங்களைப்போல அவர்களும் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.  அந்தப் பெண்ணின் அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.  பெண்ணின் திருமணத்தை ஒட்டி பணம் அதிகமாக தேவைப்பட்டது அவர்களுக்கு.  ஒருமுறை எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.  ஒரு காலை நேரத்தில் நானும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.  என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.  எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண்ணின் அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.  “பெண் திருமணத்தை ஒட்டி கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.  நீங்கள் சொûஸட்டியில் உறுப்பினராகச் சேர்ந்து என் பெண் கடன் வாங்க சாட்சி கையெழுத்துப் போட முடியுமா?  கூடவே நீங்களும் கடன் வாங்கி என் பெண் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

“யோசித்துச் சொல்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

பின் யோசித்தப் பிறகு சொûஸட்டியில் கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தோன்றியது.  மேலும் கடன் கொடுக்க என்னிடம் பணமும் இல்லை.  சொற்ப சம்பளம். சம்பளம் வாங்குவதெல்லாம் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது.  ஒருமுறை மின்சார வண்டியில் வந்து கொண்டிருந்தபோது, கால் ஊனமான பெண்மணி பிச்சைக் கேட்டபடி வந்து கொண்டிருந்தாள்.  போர்ட் டிரஸ்டில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கு இருந்தார்கள்.  அந்தக் கும்பலில் ஒருவர் சொன்னது இன்னும்கூட ஞாபகத்தில் இருக்கிறது.  பிச்சைக்காரியைப் பார்த்து அவர் சொன்னார்.  “உண்மையில் உன்னிடம்தான் பணம் இருக்கிறது.  நாங்க சம்பளம் வாங்கியவுடன் கடனுக்கு எங்கள் சம்பளம் போய்விடுகிறது.  நாங்களும் பிச்சைக்காரர்களாக மாறி விடுகிறோம்.  உன்னைவிட மோசமானது எங்கள் நிலை.  நீயாவது வெளிப்படையாக எல்லோரிடமும் பிச்சைக் கேட்கிறாய்.  நாங்கள் யாரிடம் போய்க் கேட்பது,” என்றார்.  அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அலுவலகப் பெண்மணி என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.  நான் அதுமாதிரி கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தயக்கத்துடன் சொல்லிவிட்டேன்.  இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு அந்தப் பெண் என்னை அலுவலகத்தில் பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.  அந்தப் பெண்ணிற்கு என் மீது படுகோபம்.  சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் திருமண அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுப்பதுபோல் என்னிடம் கொடுத்தார்.  அந்தத் திருமணம் மாம்பலத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில்.  நான் போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  
பணம் கொடுக்கமுடியவில்லை என்று சொன்னவுடன் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் எனக்கு சற்று வருத்தமாக இருந்தது.  அந்தப் பெண்ணின் திருமண நாளன்று திடீரென்று நான் திருமணத்திற்குப் போவது என்று முடிவு செய்தேன்.  உடனே வண்டியை எடுத்துக்கொண்டு மிதிலாபுரி திருமணம் மண்டபத்திற்குச் சென்றேன்.  அப்போது மாம்பலத்தில் தெரிந்த திருமணம் மண்டபம் அதுதான்.  
முகூர்த்த நேரத்திற்கு நான் திருமண மண்டபத்தை அடைந்தேன்.கல்யாண மண்டபத்தில் இருந்த சிலர் என்னை வரவேற்று உடனடியாக சாப்பாடு கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.  அலுவலகத்திற்குப் போவதற்கு 1 மணிநேரம் முன் அனுமதி கேட்டிருந்ததால், நானும் சாப்பாடு கூடத்திற்குச் சென்றேன்.  டிபன் சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன்.  வந்தவர்கள் என்னை கல்யாணம் நடக்குமிடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.  எனக்கு ஒரே அதிர்ச்சி.  அங்கே மாலையுடன் பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டு வயதான தம்பதியர்கள்.  எப்படி 80வது வயது திருமணத்திற்கு வந்தேன் என்பது புரியவில்லை.  
நான் கல்யாணமண்டபத்திற்கு மாறி வந்துவிட்டேன்.  எனக்கு கூச்சமாகப் போய்விட்டது.  பின் சமாளித்தபடி வெளியே வந்தேன்.  அங்கிருந்தவர்களைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, நாற்காலி ஒன்றில் உட்காருவதுபோல் உட்கார்ந்தேன்.  பின் நழுவி வெளியே ஓடி வந்துவிட்டேன்.  என் செய்கை எனக்கே வெட்கத்தைத் தந்தது.  பின் பத்திரிகையை எடுத்துப்பார்த்தபோதுதான் தெரிந்தது.  மிதிலாபுரி கல்யாண மண்டபம் இல்லை என்பது.  அதன்பின் பக்கத்தில் இருந்த இன்னொரு தெருவில் அந்தப் பெண்ணின் திருமணம்.  உடனே அங்கு சென்றேன்.  ஒரே கூட்டம்.  அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண் நான் வந்ததைக் கூட கவனிக்கவில்லை.  நான் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
ஏன் இப்படி நடந்தது என்று யோசித்தபோது, அந்தப் பெண் கடன் கேட்டது.  நான் கொடுக்காமல் போனது.  பின் அந்தப் பெண் என்னை அலட்சியப்படுத்தியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  மிகச் சாதாரண நிகழ்ச்சிதான் இது.  ஆனால் மனம் அளவில் ஏன் சலனமடைகிறோம் என்பது பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.  
சிலசமயம் நான் மாம்பலம் ரயில்வே நிலைய படிக்கட்டுலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்ப்பேன்.  தாங்க முடியாத கூட்டம் போய்க்கொண்டிருக்கும்.  யோசித்துப்பார்ப்பேன் இத்தனைப் பேர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களில் எத்தனைப் பேர்களை நமக்குத் தெரியும் என்று.  நாம் சந்திப்பது என்பது மிகக் குறைவான நபர்கள்.  நண்பர்கள் ஆனாலும் சரி, உறவினர்கள் ஆனாலும் சரி.   நாம் நம் உறவுமுறைகளை சரியாகப் பேணி காக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் பையன் வீட்டில் தங்கியிருந்தேன்.  காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யப்போவேன்.  பெரும்பாலும் அமெரிக்கர்கள் யாரையும் பார்க்க முடியாது.  ஆனால் ஒருசிலர் என் கண்ணில் தட்டுப்பட்டால், குட் மார்னிங் என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு இது அச்சரியமாக இருந்தது. முன்னே பின்னே பேசியது கூட கிடையாது.  பார்த்தாலே போதும்.  புன்சிரிப்புடன் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.  
ஆனால் இங்கோ வேறு மாதிரி.  தெரிந்தவர்கள் நேருக்குநேர் போய்க்கொண்டிருந்தால்போதும் வேண்டுமென்றே பார்க்காமல் போய்விடுகிறோம்.  முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு போவோம்.  அல்லது வேறு எங்கோ பார்த்துக்கொண்டு போவோம். 
தலைமை அலுவலகத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு கட்டடத்திலிருந்து ஒரு கட்டடத்திற்கு தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.  நான் தெருவில் அப்படி நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, எதிரில் என் அலுவலக உயர் அதிகாரி நடந்து வந்து கொண்டிருப்பார்.  நான் அவரை நிமிர்ந்து பார்ப்பேன்.  அவரோ என்னைப் பார்க்காதவர் மாதிரி தலைகுனிந்து போய்க் கொண்டிருப்பார்.  ஏன்? அவரைப் பார்த்துதான் நான் தலை குனிந்தபடி போக வேண்டும்.  இது உல்டாவாக இருக்கிறது.  
எனக்கு இன்னும் யாருடனும் எப்படிப் பழக வேண்டுமென்பது தெரியவில்லை போலிருக்கிறது.
 (பிப்ரவரி 2013 அம்ருதா மாத இதழில் பிரசுரமான கட்டுரை)

நிழற்படங்கள்

நிழற்படங்கள்

எம்.ரிஷான்ஷெரீப்

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.
 சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.
அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.
கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.
இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.
வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.
நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.
 சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.
அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.
அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.
 இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.
 ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும் சொல்லிக்கொண்டோம்.
பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.
 நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன். ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?
உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.
இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.
இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர் தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். ‘அவள் ரொம்பக் கஷ்டப்படுறா’ எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்
அசோகமித்திரன்
ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்?”
“அவர் பிழைக்க வேண்டுமே?”
“அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்?”
“நான் பிழைக்க வேண்டுமே?”
அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும்.
எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை.
கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்கு வைத்தியம் செய்யாமல் வீடெல்லாம் வேப்பிலையைப் பரப்பி வைப்பார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான போரைத்தொடர்ந்தார். ஒரு முறை அவர் தங்கியிருந்த வீட்டருகே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் வந்து விட்டார்கள். வீட்டில் ஒரு மூதாட்டி. ஒரு கவலை வேண்டாம் என்று சொல்லி வாயிற்படியருகே கொத்து கொத்தாக வேப்பிலையை வைத்தாள். வெள்ளைக்கார்ர்கள் அந்தத் தெருப்பக்கமே வரவில்லை. அம்மை நோய்க்கு அவ்வளவு பயம். இன்று நோய்த்தடுப்பு இருக்கிறது. முன்பு நோய் கண்டு விட்டால் வீட்டில் யாரையும் வரவிடமாட்டார்கள். மிகவும் நெருங்கிய உறவினர்களைக் கூட அநுமதிக்க மாட்டார்கள். அம்மை கண்ட நோயாளி ஒருக்கால் மருத்துவ மனையில் இறந்து விட்டால் அது போன்ற சங்கடம் கிடையாது. உடலை வீட்டுக்கு எடுத்து வர முடியாது. நேராக மயானத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். அப்போது பிணத்தை எடுத்துச்செல்ல ஒரு வண்டியும் வராது. நான் வசித்த ஊரில் ஆம்புலன்ஸ் என்று நான் பார்த்தே கிடையாது.
ஊமைத்துரை வரலாற்றில் வேப்பிலை நிகழ்ச்சி பல விவரங்களைத் தெரிவிக்கிறது. இவ்வளவு பயந்து பயந்து இந்த நாட்டில் இருந்தாலும் பழைய ராணுவக் கல்லறைகளுக்குப் போனால் ஒரே கல்லறைக் கல் முப்பது நாற்பது பெயர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் போரில் உயிர் நீத்தவர்கள் அல்ல. பெருவாரி நோயில் உயிரை விட்டவர்கள்.
சிவராம கரந்த்தின் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருடைய மனைவி அவர் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மாரியம்மனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள், சாமுண்டிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்… “எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று சொல்லி டாக்டரை அழைக்கப் போனார். டாக்டர்கள் யாரும் வரவில்லை. குழந்தை போய் விட்டது. ஆனால் என் சொந்த அனுபவத்தில் எங்கள் வீட்டில்தான் எவ்வளவு வேண்டிக்கொண்டிருக்கிறோம்,எவ்வளவு காசு முடிப்புகளை சாமி படத்தடியில் வைத்திருக்கிறோம்? இந்த 82வது வயதில் என் பெற்றோர்களை நினைத்துக் கொண்டால் அவர்கள் துக்கம்தான் மனதில் முதலில் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் நாங்கள் வசித்த ஊரில் வைத்தியர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலோனோர் எல் எம் எஸ் அல்லது எல். எம் பி. அதாவது, எம் பி பி எஸ் இல்லை. வைத்தியர்கள் குறைவு என்பதால் சாவு அதிகம் என்று இல்லை. வைத்தியமும் சாவும் பெரிய பிரச்னைகள் அல்ல. பிணத்தைக் கொண்டு போனால் சுடுகாட்டில் எரித்து விட்டு வரலாம் அல்லது புதைத்து விட்டு வரலாம்.
நான் முதன் முதலில் மருத்துவர்கள் பற்றி விகடத் துணுக்கு எதிர்கொண்டது சாரணர் ‘காம்ப்ஃபய’ரில்தான். நான் இருந்த குழுவில் ஓரிருவர் தவிர மற்றெல்லோரும் தெலுங்கு அல்லது உருதுக்காரர்கள்.முன்னமேயே கூறியபடி சிறிய ஊரில் குறைவான மருத்துவர்கள் உள்ள நிலையில் இப்படியும் கேலி செய்ய முடியுமா?
கேலியும் செய்தார்கள். அதே டாக்டர்களிடமும் போனார்கள். தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டார்கள்.
                                                                                                                                    பிப்ரவரி  2013                               

விருது

விருது
முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.
இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.
எல்லோரும் கொண்டாடிய
எத்தனையோ கவிதைகளுக்கான
மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா.
புருவங்களை உயர வைத்த
அழகோவியங்கள் பலவற்றைத்
தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை.
மூதாதையர் கடிகாரத்தின்
பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச்
சொட்டுச் சொட்டாகக் கசிகிறது
பேனாவிலிருந்து மை.
பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக.
மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து
வேகமாகப் பயணிக்கிறது மனம்
படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக்
கணம் நோக்கி.
சிறிய பெரிய மீன்கள்
யானையை விடப் பெரிய
சுறாக்கள் திமிங்கலங்கள்
ஆயிரம் வயதான ஆமைகள்
ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன.
தோலின் சுருக்கங்களைத் தாண்டிப்
பிரகாசித்த முகத்திலிருந்து
வெளிப்பட்ட வெளிச்சம்
இன்னொரு கையிலிருந்த
தூரிகையைப் பிடுங்கி அவசரமாய்த்
தீட்டத் தொடங்குகிறது – மன
நிறைவு தந்த நினைவுகளின்
களிப்பையேக்
கலைஞனுக்கான விருதாக.
***
– ராமலக்ஷ்மி