புரியாத பிரச்சினை

சிறுகதை

பத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்புJustify Full கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோ ம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

பத்மநாபனை நான் மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

”என்ன பத்மநாபன்?…எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?”

”வந்துவிட்டேன். டெம்பரரி டிரான்ஸ்வர்…வந்து ஒரு மாசம்தான் ஆகிறது…”

”எங்கே இருக்கிறீர்கள்?”

”ஹஸ்தினாபுரம்….”

”சொல்லவே இல்லையே?”

”என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம்… உங்க பெண் பெயர் என்ன?

”ஏன்?

”சுருதிதானே?”

”ஆமாம்..”

”என்ன பண்றா?”

”பி டெக்…எம்ஐடியிலே பண்றா..”

”நினைச்சது சரியாப்போச்சு..”

”என்ன நினைச்சீங்க..”

”சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாக இருக்குமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு…..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”

”நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது..”

”நான் சொல்ல வந்தது வேற விஷயம்…நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம்…எனக்கு ஆபிஸ் 8.30 மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே 7.30க்கெல்லாம் ஓடணும்…டெய்லி ஓடறேன்..நான் போற சமயம் எம்ஐடியில் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்….அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டே போவாங்க…தினமும் உங்கப் பொண்ணு சுருதியைப் பாக்கறேன்….நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை..அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க..எல்லாம் படிக்கிற பசங்க.. அந்த கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்கமாட்டாங்க..சுருதிகிட்ட வந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல கூட கையைப் போடுவான். ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான்…சுருதிகிட்ட சொல்றான்…உதட்டுலதான் பண்ணக்கூடாதாம்….கேட்க சகிக்கலை..”

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு சொரேர் என்றிருந்தது. ”என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு….” சத்தம் போட்டு கேட்டேன்.

”தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது. இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு….இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுக்கிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணனும்..”

”பத்மநாபன் ரொம்ப நன்றி…இத எப்படியாவது சரி செய்யணும்…சுருதி நல்லப் பொண்ணு…கொஞ்சம் வெகுளி…இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல் கவலைப்படுவாள்….அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாக கவனித்தேன்… ”என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…” என்று கேட்டேன்..”நல்லாதானே இருக்கு..”என்றாள் சுருதி.

”உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?”

”அதெல்லாம் கிடையாது…தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து 4 மாசம் மேலே ஆயிடுத்தே..”

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை… மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாக கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..

”உன்காகத்தான் இடம் போட்டிருக்கேன்..,” என்றான் ஒருவன் இளித்தபடியே.

இந்த சமயத்தில், ”சுருதி…” என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா?” என்றாள்.

”இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு,” என்றேன். சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

”அவர்கள் எல்லோரும் யாரு?” என்று கேட்டேன்.

”ஃபிரண்ட்ஸ்,” என்றாள்.

சுருதி பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

”தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கிறாயா..?”

”ஆமாம்..”

”அவர்கள் தினமும் உன்னை கிண்டல் செய்கிறார்களாமே?”

”இல்லையே..”

”பத்மநாபன் சொல்றார்…இல்லைங்கறீயே..”

”என் வகுப்பில படிக்கிறவங்க..நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”

”ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?”

”மல்லிகாவும் என் கூடத்தான் வருவாள்..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்..”

”சுருதி…என்னைப் பொருத்தவரை இதெல்லாம் தப்பு..கன்னத்தில இடிக்கிறது. தோள்ல கையைப் போடறது.. நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம்..அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்…”

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள். ”நீங்க காலஜ்ஜூக்கெல்லாம் வராதிங்கப்பா,” என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். ”எப்ப காலேஜ் முடியும்?”

”தெரியாது..சிலசமயம் 4க்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால், 5கூட ஆகும்..”

”சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன். ”இன்று உங்களைப் பார்க்கவில்லையே?”என்றார்.

”நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.

”எத்தனை நாள்தான் உங்களால் சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்?”

”அதுதான் எனக்கும் புரியவில்லை..”

”இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..”

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள்.. அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், ”சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸை சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள்.

”சுருதிக்குத் திருமணம் ஆகப் போறது.. நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.

”சரி அங்கிள்… நாங்கள் இனிமேல் அப்படி வரமாட்டோம்,”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம். ”ஏன்பா..இப்படிப் பொய் சொல்றீங்க..அவங்க நல்லவங்கப்பா…சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்..”

”எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, சுருதி.”

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில்படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். ”அவர்கள் நல்லவர்கள்,”என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன். ”நானும் உங்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்..சுருதிக்கு என்னைத் தெரியாமல் இருப்பது நல்லது,”என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாக காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்று எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.

நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.. ”நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார். எனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகப் போன் செய்தார். ”அந்த நாலைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்துவிட்டாள். இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,”என்றார்.

எனக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை.

மழைக் குடை நாட்கள்

மழையையே குடையாக்கி நடந்த நாட்கள்
மகா உன்னதமானவை
அரைநெல்லிக் கனி தின்று
தண்ணீர் பருகும் அனுபவம் போல
வாழ்வ்க்கு சுவை, திருப்பம் சேர்ப்பவை.

சுத்த வீரனின்
விழுப்புண், குருதி, வலியாகி
புகழ் உறுதியை
முழுமையாய் நிறை நிறுத்துபவை
நடக்கும்போது மழை நாட்கள்
குளிர் முட்களாகித் தைப்பினும்
கடந்த பின்பு
சூர்ய கர்வம் அடக்கும்
கைக்குட்டையாகி நிழல் தருதலால்
மழைக்குடை நாட்கள்
நன்றியறிதலுக்குரியவை
எப்பொழுதும்

தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரியும் கோ கண்ணன் 1969 ம் ஆண்டு பிறந்தவர். பார்வையிழப்பையும் மீறி பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆசிரியர் பட்டப் படிப்பும் படித்தார்.

Your Voice

Climbing down the steps and walking crossing many a street going past the bazaar-street where things lay spread like the Sea Even after going beyond the tall, strong gateway, some sounds come to fall in the ears.
Leaving the light of the outer corridor where voices of the world have faded a little Going into the semi-darkness of the inner-corridor our ancestors’ voices softly whisper secrets in our ears.
After entering into the wholesome darkness of the sanctum-sanctorium there comes from within a dark, colourful silence outside, upon things in absolute quietitude as the very light when it reflects At some times I feel that you are with me with hands resting on the lap, right in front of my eyes A song springs from Veena on its own.
While talking with my friends, from out of blue your voice drops a sentence.
Though it seems familiar yet, wonder and surprise have never withered away in our Togetherness.

Poem from Navina Virtucham

Translated by Latha Ramakrishnan

இரு கவிதைகள்

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது..

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்

கவிதை ஒன்று

கீழே
விழுந்துகிடந்த
ரூபாய்த் தாளை
எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
யார் யார்
கைகளிலிருந்து
தப்பி விழுந்ததோ
என்ன பாடுபட்டதோ
என்ன துரோகம் செய்ததோ

கவிதை இரண்டு

எண்ணற்ற வழிகளில்
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்
ஆனால்
சிலரை மட்டும் பார்க்கிறோம்
இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம்
இன்னும் இன்னும் சிலரிடம்தான்
உறவு வைத்துக்கொள்கிறோம்.

கவிதை மூன்று
நீண்ட
சோம்பல்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
நாற்காலியில்
உட்கார்ந்தால்போதும்
தூக்கம்
கண்ணைச் சுழற்றும்
ஒன்றும் தோன்றாமல்
ஒரு நிமிடம் என்னால்
இருக்க முடியவில்லை

கவிதை நான்கு

பிழிய பிழிய
மழைப்பெய்து
விழியை வைத்தது
கட்டுப்பாடற்ற முறையில்
ஒழுங்கு தப்பி
தெறித்தன வாகனங்கள்

உல்டா



என் நண்பர்கள் இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……18

த.அரவிந்தன்

பிரசவம்
—————

பிரசவத்திற்காக
வந்திருக்கிறது வெள்ளைப் பூனை.
பரண் மேல் ஒண்டியிருக்கும்
அதற்கு
குளிரூட்டப்பட்ட அறையில்
காற்றால் நிரம்பிய
மெத்தையமைத்துக் கொடுக்கலாம்
நாலைந்து மருத்துவர்களை
எப்போதும் உடனிருக்க வைக்கலாம்
பிரசவ வலி தெரியாதிருக்க
அதன்
தலையை, உடலைக் கோதி விடலாம்
ஈன்று சோர்கையில்
பெரிய வஞ்சீர மீனை
உண்ணக் கொடுக்கலாம்
பத்தொரு தாதிகளை நியமித்து
குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும்
பனிக்குட நீரைக் கழுவலாம்
பால் காம்புகளை
சிறு நேரமும் தேட விடாமல்
முதல் பருகலுக்குத் துணை புரியலாம்
நாய்கள்
கழுகுகள்
வாகனங்கள் நுழையாத
கூரை வேய்ந்த மைதானம் அமைத்து
அவற்றை விளையாட விடலாம்
இன்னும்
இன்னும்
என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
அதற்கு முன்-
என் மீதான
அதன் நடுக்கத்தைப் போக்க
என்ன செய்ய?

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

” அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பாஸ் ” என்றான்.

“கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?”

” அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பாஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பாஸ் ? “


அலையும் ஆவியொன்று


என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……17

பூனை

ஆலா

எலிமட்டும் பிடிப்பதில்லை
எல்லோர் வீட்டிலும் பூனை
பூரான், தேள், பல்லியென
பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும்
எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள்
கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை
வாயில் கவ்வி வந்தது பூனை
பின்னங்காலால் தூக்கியெறிந்து
முன்னம் வேடிக்கைப் பார்த்தது.
ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது
துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது

பால் குடிப்பதும்
பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே.
யாரும் பார்க்காத நேரத்தில்
குழித்தோண்டி மலம் மறைக்கும்
இயற்கையின் எழில் உருவே பூனை

புலியினம்தான் பூனையும்
போனதெப்படி அதன் போர்க்குணம்?
இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல்
மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ

அண்டிப் பிழைப்பது அழகல்ல
ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது
புலியைப் பிடிக்கும்