இரு கவிதைகள்

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது..