குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

எதையாவது சொல்லட்டுமா………63

இந்த முறை 35வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெறுவது பற்றி யோசனையாக இருந்தது.  கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனை.  இந்த முறை புதிய புத்தகம் எதுவும் கொண்டு வரவில்லை.  ஏன் விருட்சமே கொண்டு வரவில்லை?  இருக்கிற புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், ரூ5000 வரை தேறுமா என்பது சந்தேகம்.  எல்லாம் விற்கமுடியாத கவிதைப் புத்தகங்கள்.  இதற்கு உழைப்பு அதிகமாகத் தேவைப் படுகிறது.  பல நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது.  ஏன் இதில் கலந்துகொள்ளவேண்டும்? 
புத்தகம் கொண்டு வர முடியவில்லை.  ஆடம்பரமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்த முடியவில்லை. தமிழில் பெரும்பாலான புத்தகங்களை உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடுகின்றன.  விருட்சம் போன்ற பத்திரிகை என்ன செய்ய முடியும்?  அப்படியே புத்தகம் போட்டால் யார் கவனத்திற்கு அது போகும்.  விற்கவும் விற்காது.  என்னை விட்டும் போகாது. 
ஆட்சி மாறியதால், எப்போதும் கிடைக்க வேண்டிய லைப்ரரி ஆர்டரும் போய்விட்டது.  கண்டுகொள்ளவே இல்லை.  வரவும் இல்லை.  யாருக்கும் போய்ச் சேரவில்லை போல் தோன்றுகிறது.  பொதுவாக ஜனங்களுக்கு புத்தகங்கள் மீது மதிப்பு குறைந்து போய்விட்டது.  ஆனால் பல பதிப்பகங்கள் control இல்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளுகிறார்கள்.  பல இடங்களுக்குப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். 
புத்தகக் கண்காட்சியில் வாடகை ரூ10000 என்றால், செலவு ரூ10000 மேல் ஆகிவிடும்.  இந்தப் பணம் கிடைக்க வேண்டுமானால், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, ஆனந்தவிகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் சேர்த்து விற்கவேண்டும்.  இதில் விருட்சம் புத்தகம் கொஞ்சம் விற்கும்.  இந்த முறை எதற்கு இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று  தோன்றியது. தோன்றிகொண்டே இருக்கிறது. 
போனமுறை புத்தகக் கண்காட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் வேறு சேர்ந்துகொண்டது.  எனக்கு உதவி செய்த நண்பர் ஒருவர், நான் எதிர்பாராத தொகையைக் கடனாகக் கேட்டார்.  இது மாதிரி கடனாகப் பணம் கேட்டாலே ஆபத்து என்று எனக்குத் தோன்றியது.  ஏன் என்றால், பணம் கடனாகக் கேட்பவர்கள் யாரும் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில்லை.  புத்தகக் கண்காட்சி மூலம் கிடைத்த சிறிய தொகையை அவருக்குத் தாராளமாகவே கொடுத்தேன்.  எனக்கும் அவருக்கும் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை.  விருட்சத்திற்குக் கிடைக்கும் தொகை புத்தகம் போடத்தான் பயன்படுத்துவேன்.  லாபம் கிடையாது. திரும்பவும் புத்தகம் போடுவேன்.  அவ்வளவுதான்.  இந்த முறை வேண்டாமென்று நினைத்துக்கொண்டே அவரிடம் தொடர்புகொண்டு பேசினேன்.  ஒரு நாளைக்கு ரூ.1000 வேண்டுமாம்.  எனக்கு அவர் கேட்டது சிரிப்பை மூட்டியது.  1000 ரூபாய்க்குப் புத்தகமே ஒரு நாளைக்கு விற்காது.  விருட்சம் பொறுத்தவரை புத்தகம் விற்று லாபம் வந்தால் சரி, இல்லாவிட்டால் விளம்பரம் என்று சொல்லி தப்பிக்கலாம்.
விருட்சம் பொறுத்தவரை அது oneman show.  எல்லாமே நான்தான்.  அதனால் ஏகப்பட்ட தடுமாற்றங்கள்.  யாராவது கவிதைப் புத்தகம் போட  வேண்டுமென்று என்னிடம் வந்தால், மனதைத் திடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பேன்.  புத்தகம் விற்க என்னிடம் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் கொடுத்தால், கண்காட்சி முடிவதற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் சந்திப்பதும், புத்தகத்திற்கான பணம் கொடுப்பதும் சிரமமாகிவிடும்.  
இப்படித்தான் சென்னையில் நடக்கும் 35வது புத்தகக் கண்காட்சிக்கு விருட்சம் தயாராகிவிட்டது.

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

தேனரசன் கவிதைகள் 
வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு,   அகரம் சிவகங்கை   ரூ.5-00
 தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது.
   காகங்கள் முடிபுனைந்தால்
   கரைச்சல்களே சங்கீதம்
   சிறுமைக்கு நீர் வார்த்தால்
   தெருநெடுவே முள் வளரும்.
இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,’பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
   ‘தேவை பணம் இதுவே
   திருவாய் மொழி  எனவே
   சேவை மனப்பான்மை
   சிவலோகம் போகிறது’
   ‘அவரவர்கள் பாட்டுக்கு
   அகப்பட்டது சுருட்டல்
   தவறில்லை என்னுமொரு
   தருமம் தழைக்கிறது.’
என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.  சொல்லே கவிதை என்பது உண்மையென்றாலும் கவிஞன் கலைஞனுமாகவே காணப்பட்டு வருகிறான்.  கூற்றின் அளவிலேயே மேற்கண்ட வரிகள் தேனரசனுக்குக் கவிதை ஆகிவிட்டாலும் இந்தத் தொகுப்பில் சிருஷ்டி அளவிலான கவிதைகளும் உள்ளது  நிம்மதி தருகிறது.  அவற்றின் எண்ணிக்கை 38ல் 8 என்றாலும் ‘ஒரு வெளியேற்றம்’ ‘யார் சொன்னது?’ என்ற கவிதைகளும் பிறகு ‘ஆதிவாசிகள்,’ ‘ஒரு விவசாயியின் மறைவில்’, ‘ஈடு’, ‘பாவம் அம்மா,’  ‘மேஜை மீது’ ஆகிய கவிதைகளும் நன்றாக உள்ளன என்றாலும், எண்ணல் அலங்காரம் என்ற கவிதை எல்லாவற்றினும் சிறந்ததாக இருக்கிறது.  வயது வந்த தமக்கைக்காக ஒரு சிறுவன்.
   ‘ஐயா சாமி.  நாலு நாளாப் பட்டினி
   மூணு மாசம் முன்னாலே
   மாரி மகமாயி வந்து
   எங்க அக்காவின்
   ரெண்டு கண்ணையும்
   சூறையாட்டிட்டா
   ஒரு மனசு வெச்சு
   ஒதவுங்கையா’
என்று யாசிக்கிறான்.
   ‘நாளைக்குப்
   புத்திலக்கியம் படைத்து
   இந்தச் சமுதாயத்தை
   புணருத்தாரணம் செய்யப் போகிறவன்’

அந்த யாசிப்பில் வரும் நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு என்ற எண்களின் இறக்கத்தை ரசிக்கிறானாம்.  இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் மனத்தின் வினோதப் போக்கு பிடிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையை உயர்வானதாகக் கூறவேண்டும்.

ஆனால் தேனரசன் கவனக்குறைவு என்ற குற்றத்துக்கு ஆளாகக்கூடாது.  உதாரணமாக அந்தச் சிறுவனின் யாசிப்புக் கூற்றில் ‘அக்காவின்’ என்று காணப்படுகிறது.  இந்தச் சொல்லில் வரும் ‘இன்’ பொருந்தாமல் நெருடுகிறது. 
கவிதை என்ற தலைப்பில் உள்ள கவிதை தேனரசனுக்குச் சிறப்பைத் தராது.  ‘பெண் துணை’ இல்லாத சமயத்தில் ஏகாந்தம் மேற்பட்டு ‘இப்போ யாருமில்லே வாடி என் மனச்சுக மோகினி’ என்று கவிதையை அழைக்கும் பொழுது தேனரசனின் திறமை வீணாகிறது.  ‘தனிமை கண்டதுண்டு-அதிலே
சாரமிருக்குதம்மா’ என்ற பாரதியின் வரியை நினைந்து மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள நேருகிறது.  கவிதை பற்றிய, கவிஞனுக்கு இருக்க வேண்டிய அனுபவம் இங்கு காணப்படவில்லை.  மேலும் விஷயம் மிகவும் சாமான்யமாகி விட்டது. என்றாலும் கூட தேனரசன் நம்பிக்கை தருகிறார்.
                                                                                                –  ஞானக் கூத்தன்.               
 
அன்புடையீர்,
வணக்கம்.
ழ இதழின் 5வது இதழ் உங்கள் பார்வைக்கு முழுவதும் படைத்துவிட்டேன்.  இதேபோல் 6வது இதழ் முழுவதும் தருவதாக உத்தேசம்.  கவிதைகளும் கவிதைகளுக்குரிய பார்வையுடன் ஒரு இதழ் 1988ல் வெளிவந்தது.  பளபள அட்டை எதுவுமில்லாமல், அம்மணப்பதிப்பாக நியூஸ்பிரிண்டில் வெளிவந்த இதழ் ழ.
ஒரு திருமணத்தின்போது, அங்கு பரிமாறப்படும் சாப்பாடு இலைக்குக் கீழ், நியூஸ்பிரிண்ட் தாளைப் பயன்படுத்தினார்கள்.  அத்தாள் உருண்டையைப் பார்த்து, ஆத்மாநாம், எத்தனை ழ பத்திரிகைக் கொண்டு வரலாம் என்று ஞானக்கூத்தனிடம் கூறியதாக சொல்வார்கள்.
ழ பத்திரிகை வந்தவுடன் அதை எல்லோருக்கும் அனுப்புவார்கள்.  விற்பனைக்காக சில இடங்களுக்கும் அனுப்புவார்கள்.  ஆனால் அது விற்று வந்த பணத்தைப் போய்க் கேட்கக்கூட மாட்டார்கள்.  க்ரியா போன்ற சில அமைப்புகள் மொத்த விற்பனையை எழுதி வைத்துக்கொண்டு கொடுப்பார்கள்.  மற்றவர்கள் யாரும் சரியாக தந்ததில்லை. 
இதழ் அனுப்பும் பொறுப்பை ஆர்.ராஜகோபலன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.  அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு ழ பத்திரிகையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதழை 42 சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெரு, சென்னை 5 என்ற முகவரியிலிருந்து கொண்டு வந்தார். அவர் ழ இதழின் இணை ஆசிரியர்.  திருவல்லிக்கேணியில் உள்ள  மக்கள் அச்சகம்தான் ழ பத்திரிகையை அச்சடித்துக் கொடுத்தது.
  
அன்புடன்,
அழகியசிங்கர்.
             

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

காளி-தாஸ்

ஒரு கவிதை

 பொழுது விடிந்து
 தினமும்
 நான் வருவேனென்று
 கடற்கரை மண்ணெல்லாம்
 குஞ்சு நண்டுகள்
 கோலம் வரைந்திருக்கின்றன.
  
 

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

நீல பத்மநாபன்

முன்னுரை

அஞ்சுவரி
 வஞ்சப்புகழ்ச்சிக்கு
 பத்தாயிரமென்றால்
 பத்து பக்க
 புஷ்பார்ச்சனைக்கு
 அட்சர லட்சமா?
 
   
முன் செல்

உடனோடி நாய்கள்
 வீறுடன் குரைக்கட்டும்
 கூடப் பறந்து காகங்கள்
 கத்தி களைக் கட்டும்
 ரதமே நீ
 மு
 ன்
 செல்
 முன்
 செ
 ல்

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

மீர்ஸா காலிப் முஹம்மது இக்பால் ஒரு அறிமுகம்
 உலகப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர்களான மீர்ஸா காலீப் முஹம்மது இக்பால் இவர்களின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்டர்லிங் பப்ளிஷர்ஸ், டெல்லி வெளியிட்டிருக்கிறார்கள்.  உருதுக் கவிதைகளைப் பற்றி ஒரு ஆச்சரியமான விஷயம்,  
 கல்வியறிவு உள்ளவரும் அற்றவரும் அவற்றை ஒருங்கே புகழ்கின்ற தன்மை உருதுக் கவிதைகளின் இசை வடிவமும், அக்கவிதைகள் மனித
வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள்.  காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால்.  காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர். 
காலிப்பை கோதேயுடன் ஒப்பிட்டால் இக்பாலை காலெரிட்ஜுடன் ஒப்பிடலாம்.  இந்த ஒப்புமை முழுவதும் பொருந்தாது.  காலிப் பின் கவிதைகள் உணர்ச்சி வயப்பட்டு வெளி வந்தவை.  பேரானந்தத்தினின்று  வெளி வந்தவை.  இக்பாலின் கவிதைகள் தத்துவ பூர்வமானவை.  மக்களை விழிப்படையச் செய்தவை.
 காலிப்பின் கவிதைகள் பெரும்பாலும் கஸல்களாய் வெளிவந்தவை.  அராபிய மொழியில் கஸல் என்பது தனது பிரியத்துக்குரியவளிடம்,  உரியவன் பேசும் காதல் மொழி.  பிரிவைத் தாங்காது காதலன் அரற்றும் மொழி.  உறவை எதிர் நோக்கியிருக்கும் அன்புமொழி.  ஆனால் இக்பாலின் கவிதைகள் நஸாம் எனப்படுபவை.  இவை வேறுபட்டவை.  நாட்டுப் பற்றை, இஸ்லாமியப் புனருத்தாரணத்தை வலியுறுத்தியவை.
காலிப்பின் சில வரிகள்

  ”என்னுடைய இதயத்தின் துளைகளை
 ஒன்று சேர்த்து வைக்கிறேன்-
 அவளுடைய கண்கள் மறுபடியும்
 அதைத் துளைக்கட்டும்”

 ”இப்போது ரத்தக்கண்ணீர் சொரிவது கடினம்
 இதயத்தில் ரத்தம் வரச்  சக்தியில்லை”

 ”காதலின் வலிக்கோ மருந்தில்லை
 அற்பமான இதயமே-மறுபடியும்
 காதல்வலி கொள்கிறாயே”

 ”நீ இல்லாமல் ஒரு பொருளும் இருக்கமுடியாது
 அவ்வாறிருக்க-கடவுளே ஏனிந்த ஆரவாரம்”

 ”உலோபியான மண்ணைப் பார்த்து
 கேட்கிறேன் நான்-அதனுள்
 புதைத்த அழகுகளை அது
 என்ன செய்தது?”

 ”சூரிய உதயத்தில் பனித்துளி இறக்கக் கற்கிறது.
 அவள் பார்க்கின்ற வரை நானும் உயிருடன் இருப்பேன்.”
 ”நெடுஞ்சாலை வழிக் கள்ளர்களைப் போலவே
 என் மனதைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாளே,”
 ”இறப்பு நிச்சயம்-கண்டிப்பாய் வரும்
 ஆனால் அவளோ நான் விரும்பினும் வாராள்”
 ”ஒரு லட்சம் நம்பிக்கைகள் எனது மெளனத்தில்
 புதைந்து கிடக்கின்றன. நான்
 ஏழை யொருவனின் கல்லறையின்
 எரிந்த விளக்கு.”
 ”ஓ! காலிப்! இப்போது போய் ஒரு நிலத்தில் வாழு
 அந்த நிலத்தில் உனது அந்தரங்கத்தையும்
 பாட்டினையும் பகிர்ந்து கொள்பவர் இருக்கக்கூடாது
 அங்கொரு வீட்டினைக் கட்டு கதவுகளும்
 சுவர்களும் இருக்கக் கூடாது.
 அந்த வீட்டிற்குக் காப்பாளர், பக்கத்து
 வீட்டுக்காரர் இருக்கக் கூடாது
 நீ உடல் நலம் குன்றினால் உன்னைக் கவனிப்பார்
 இருக்கக் கூடாது.  நீ உயிரை விட்டால் துக்கம்
 அனுஷ்டிப்பவர் இருக்கக் கூடாது.”
இக்பாலின் சில வரிகள்
 ”ஓ அந்தணனே-நான் ஒன்று சொல்லட்டுமா?
 நீ வருந்தாமல் இரு-அது ஒரு உண்மை
 உன்னுடைய ஆலயங்களின் சாமிகள்
 எல்லாம் மிகவும் பழையன
 அவை உனக்கு வெறுப்பைப் போதித்தன
 உனக்குச் சொந்தமானவற்றை
 சொந்தமில்லை என்றன
 சண்டையிடு அல்லல்படு என்பவை
 கடவுளின் விருப்பம்-அறிவுக்குத்
 தெரிந்த உண்மை
 உன் அறிவு வார்த்தைகளால் நான் களைத்து
 வேதங்களையும் கோயில்களையும் விட்டு விடுகிறேன்
 எனக்குக் கற்கள் மட்டுமல்ல
 என்னுடைய நாட்டின் அற்பமான தூசியும் புனிதமானது”.
 ”கடலின் அருகே நின்றேன்
 ஓயாதடிக்கின்ற அலைகளைக் கேட்டேன்
 நீ எதற்கு அடிமை?
 ஆயிரக்கணக்கான கீழ்த்திசை முத்துகளுடன்
 உன்னுடைய ஓரங்கள் பளபளக்கின்றனவே!
 என்னுடைய இதயத்தைப் போன்ற
 மாணிக்கம் ஒன்று உன்னிடம் உள்ளதா?
 கடல் கரையிலிருந்து வெட்கப்பட்டு ஓடியது
 பேசவில்லை.”
 ”நான் விடைபெறும் போது
 எல்லோரும் கூறுவர்
 அவனை அறிந்தேன்-அவனை அறிந்தேன்
 எனினும் ஒருவரும் அறியவில்லை-
 எப்போது நான் வந்தேன்?
 என்ன நான் சொன்னேன்?
 யாருக்கு நான் சொன்னேன்?”

                                                                                                     திவ்யா.

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

இறப்புக்குமுன் சில படிமங்கள்

பிரம்மராஜன்

ஜன்னலில் அடைத்த வானம்
குறுக்கிடும்
பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லை என்றாலும்
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள்
நேரமாய் வந்துவிட்ட
தோட்டியின் கால்களின் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்
பியானோவென இசைத்து ஒலித்தது
உறங்காமல் திரிந்த
மணிகூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது
நேற்று
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றொரு கையேந்த
கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது
அவன் இறந்து விட்டான்
இன்றெதற்கு இரண்டாவது மாடியில்
அழகான அறை?
பூக்கள் நிஜமாய்
மலராது அங்கு

 

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

காலம்

காளி – தாஸ்

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள்.  எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை.  ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்……..

ழ கவிதைகள் – 5வது இதழ்

நீலமணி


சேரிகள்

சிறியார்க் கில்லாப் பெரியார் உறுப்பு
பச்சைத் தோரணம்.  பொற்கொடி முட்கள்
உற்றுழி உதவாது ஓடிப்போகிற
பட்டைப் போலவும் பருத்திபோ லவுமின்றி
ஒட்டிஉற வுகொளும் வெட்டிவேர், வேடர்
ஒட்டமுடி யாத தேனீ மொய்ப்பு.
ஆண்டவன் தந்த அத்தி இலை.  இது
இடையில் வந்நது.  மூலைகளில் ஒளியும்
இருட்டு, காலம் போர்த்திய பொன்னாடை
அழைப்பு விடுக்கும் பச்சை விளக்கு
பாடல் பெறாத்திருப் பதிகள்.  விழல்கள்
பாம்பின் பச்சைப் படம்.  உயிர் வேலி
சந்தன மரத்துப் புல்லுரு விக்கொடி
வீட்டு வாசலில் போட்ட கோலம்
சல்லிவேர்ச் சல்லடை.  மவுன சாட்சி
விளக்கடி நிழல்இது எப்பறவைக் கூடு?
தோள்மீ தமரும் வழக்கம் மாறி
தோளுள் அமர்ந்த பச்சைக் கிளிகள்
பிரியும் புத்தகப் பக்கங் களிடை
பையன் வைத்த நீலமயி லிறகு
பொன்னுலகத்து இருண்டகண் டங்கள்
மாம்ச ஒட்டடை.  ராமன் கோடுகள்
காலம் ஒட்டிய பச்சை ஸ்டாம்புகள்
சிறையின் கம்பிகள்.  தேதிமுத் திரைகள்
புழுக்க நேரத்துத் தோகை விசிறிகள்
தாரால் எழுதிய புரட்சிகோ ஷங்கள்
புரியாத அயல்மொழிக் கவிதைகள்.  பாசி
சாயம். தீவுகள்.  பொன்வேய்ந்த கூரை
இக்கறை களுக்குக் கடவுள் பொறுப்பு
வெற்றித் தலைவன் தோளில் கூட்ட
நீ வளர்த்த கறுப்புப் பூக்கள்
குறில் நிழல்கள்.  உப்புப் பயிர்கள்
தேகச் சுவரில் தட்டிய வரட்டிகள்
அடங்கி நடக்கும் அந்தப்புரப் பிறவிகள்
தான்தோன்றி விளைச்சல்.  கடித்தநா கவிஷம்
நிலவுக் கறை, பாலில் மிதக்கும் நஞ்சு
அடக்குமுறை எதிர்த்த புரட்சிக் கருங்கொடி
கருப்புக்கண் ணாடிகள் கடைசிச் செய்திகள்
அம்புப் படுக்கை ஆருக் காகவோ?
பர்த்தாவும் அகற்றாப் பர்தா.  சேரிகள்
ஆண்டவன் பரமண்டலத்துச் சாத்தான் காலனிகள்
பரபரப்பான செய்திப் பத்தி
இலையின் மூலையில் இருக்கிற ஊறுகாய்

  நீலமணி.

ழ கவிதைகள் – 5வது இதழ்

மூன்று கவிதைகள்
1.
அவர்கள் சென்றபின்
இவர்கள் இடம் பெயராது
இருந்தனர்
2.
நாய் கொடுத்த
காசு குரைக்கும்;
பட்ட மரத்திலுண்டு
பல கெட்ட நாய்கள்;
நடுப்பகல்
இருட்டாகும்
3.
பிறந்த சூட்டில்
இரத்தச் சிவப்பில்
எலிக்குஞ்சு  போல்
கிடக்கும்;
புழுப்போல் நெளியும்
                                                                    நகுலன்
டிசம்பர் 1978 ஜனவரி 1979