துடைத்து எறிய

 


காற்றில் மிதந்து

அல்லது 
அல்லாடிப் பறந்து
தன்மீதே
குழந்தையின் கிறுக்கெழுத்தில்
நல்ல நீல நிற மசியினில்
எழுதப்பட்டிருந்த
அந்த சில வரிகளைக் கொண்டு
அது யாரைத்தேடுகின்றது?
மிதந்து நடனமாட
தென்றலையா?
யாராவது படித்து
“ஆஹா” போடுவதற்கா?
எழுதிய குழந்தை வந்து
மீதத்தை எழுதி முடிக்கவா?
நானறியேன்-
எடுத்து
என்  காலணியிலிருந்த
அழுக்குத்துளியைத்
துடைத்தெறிந்தேன்-

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!

 
 
 
எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை.. 
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்    
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே! 

                                             

Reply
Forward

சந்தை

 
 
வீட்டில் செய்த
பண்டங்களை
விற்க
கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
ஒரு கடைகாரனும்
என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
சம்மதிக்கவில்லை…
பண்டங்களை
நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாளும்
பண்டங்களை செய்தேன்..
விற்பனை செய்ய
தெருவெங்கும்
கூவிச்சென்றேன்.
யார் வீட்டு
கதவுகளும் திறக்கவில்லை
காசு கொடுத்து
வானொலியில் என் பண்டத்தின் பெயரை
ஒலிக்கச்செய்தேன்.
ஒன்று கூட விற்கவில்லை.
சுவரொட்டிகளும்
விளம்பரங்களும்
பத்திரிக்கைகளும்
எதனாலும்
கைகூடவில்லை விற்பனை.
நடுத்தெருவில்
வீசியெறிந்தேன்
என் பண்டத்தை.
வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
என்னவென்று பார்த்து
பின்னர் சுவைத்தனர்
ஜனங்கள்.
அடுத்த நாள்
பண்டத்தை
சமைக்கத்துவங்கிய போது
வாசலெங்கும்
நுகர்வோர்களின் வரிசை.
                             

வெயிலிலிருந்து மற்றொன்றாக

பகலின் சுவர்களில்
பட்டுத்  தெறிக்கும்
வெயில்
வாலாட்டுகிறது
ஒரு நாயின்
நிழலில்

சித்திரக்கோடுகளை  தீட்டி
நெளிகிறது
ஒரு சாளரத்தின்
 நிழலில்

மரத்தில் இருந்து
ஒரு துண்டாய்  உடைந்து
ஊர்ந்து பறக்கிறது
ஒரு பறவையின்
நிழலில்

அன்பொழுக
தன் குட்டியை நக்கி
கொஞ்சி மகிழ்கிறது
ஒரு பூனையின்
நிழலில்

கருவை சுமந்தபடி
பெருமூச்செடுத்து நடக்கிறது
ஒரு கர்பிணியோடு

ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறி மாறி
பயணித்த வெயில்
கடலில்  விழுந்து
பிரசவிக்கிறது
எண்ணிக்கையற்ற விண்மீனை

ழ 6 வது இதழ்

வருகை

கலையாத மேகங்களின் முன்னால்
காற்றுக்கு மிகவும் காத்திருந்து
அசைகின்ற மரஇலைகள் லேசாக
சோகம் காட்டும்.
முகம் வெளுப்பாய் கருமையில் சிவந்து
கன்றிப்போய் கன்னங்கள் வாடி கண் சோர்ந்து
தலைமுடி கலைய பார்வை உலர்ந்து அதுவும் முடியாமல் கைகளை
பின்னால் கோர்த்து நடந்து நடந்து களைத்துப் போய்
வானம் பார்த்து எப்போதோ ஒருமுறை கேட்கும்
மனது உறுத்தும் பறவைக்குரல் கேட்டு நனையும்
அவசரத்தின் அழைப்பாய் அடிக்கடி எழும்பும்
மணியோசை கவனத்தைக் கலைக்க வாடிய முகமும்
கூடியவயிறும் கைத்தாங்கி அணைத்துக்கொண்டே
உள்ளேசெல்ல வெண்சீறுடை செவிலியர் கண்டிப்பு
சாந்தம் கலந்த பார்வைக்கு ஓசையுடன் கூடிய சிறு
நடை கொண்டு வரும் செய்திக்காய் துடித்துப்போகும்
உள்ளே தாங்கமுடியாமல் அவதிப்படும் வலி
நீண்ட இரக்கமாய் கவலையுடனே கூட
எதிர்பார்பாய் மற்றெதுவும் மறிக்காமல்
அன்பே முதன்மையாய் மனது பொங்கி வழிந்தோடும்
நீ பெறப்போகும் இன்பத்தையும்
துன்பத்தையும் மற்றெல்லாவற்றையும்
விதியாய்க் கொண்டு வரும் அந்த
முதல் அழுகையை தயவுசெய்து பரவவிடு.

ஆர். ராஜகோபாலன்

பனிநிலா

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

ஆடையின் நூலிழைகளைக்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய் திணறும்

ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று

செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்

சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை

கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

2.
என் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் நான் பதவி உயர்வு என்ற பெயரில் ஊரைவிட்டு, வீட்டைவிட்டுப் போவதை விரும்பவில்லை.  நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பாவிற்கு பெரிய வருத்தம்.  மனைவிக்கு கவலை.  உண்மையில் நான் பதவி உயர்வு பெறுவதால் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது.  பெண் புலம்ப ஆரம்பித்தாள்.  ”ஏன்ப்பா என் திருமணம் நிச்சயம் ஆன நேரத்தில், நீ வீட்டில் இல்லாமல் இருக்கியே?” என்று. 
உண்மைதான்.  ஸ்ரீதேவி கல்யாணம் நிச்சயமான சமயத்தில்தான் எனக்குப் பதவி உயர்வு வாய்த்தது.  கல்யாணம் மே மாதம் நடக்கப் போகிறது.  எனக்கு பிப்ரவரி மாதம் இந்தப் பதவி உயர்வு கிடைத்து விட்டது.  ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஜனவரிமாதம் நிச்சயமாகிவிட்டது.  ஒருவிதத்தில் கல்யாணம் நிச்சயம் செய்தபிறகுதான் நான் கிளம்புகிறேன். 
அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழகியசிங்கர் ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்ய நானும் அலுவலகம் போகாமல் மட்டம் போட்டிருந்தேன்.  அழகியசிங்கரின் புதிய கதைத் தொகுதி வெளியாகியிருந்தது.  புத்தகம் பெயர் ராம் காலனி.  அழகியசிங்கர் பரபரப்பாகக் காட்சி அளித்தார். 
நானும், அவரும் ஒரே வங்கியில் பணிபுரிபவர்கள்.  ஒரே வயதுக்காரர்கள்.  எங்கள் இருவரையும் யாராவது பார்த்தார்கள் என்றால் ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என்பார்கள்.  நாங்கள் இருவரும் பீச்ஸ்டேஷன் எதிரிலுள்ள தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர்களாக வேறு வேறு துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தோம்.  இன்னும் சில ஒற்றுமைகளும் எங்களுக்குள் உண்டு.  நாங்கள் இருவரும் மேற்கு மாம்பல வாசிகள்.  இருவரும் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் இருப்பவர்கள்.  இருவருடைய மனைவிகளும் வேற வேற வங்கிகளில் பணிபுரிபவர்கள்.  எங்கள் இருவருக்கும் சொல்லி வைத்ததுபோல இரண்டு குழந்தைகள்.  என் பெண்ணிற்கு நான் திருமணம் ஏற்பாடு செய்வது போல் அவர் பெண்ணிற்கும் அவர் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். 
என் பையனும் அவர் பையனும் கோயம்புத்தூரில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் பல ஒற்றுமைகளும் பல வேடிக்கைகளும் எங்களுக்குள் உண்டு.  அதைப் பற்றி இன்னும் சொல்கிறேன்.
                                                                                                                           (இன்னும் வரும்)

வீழ்வது

 


குடை இல்லாமல் வெளியே
செல்வது
சரியல்ல-
வெயிலானாலும் சரி
மழையானாலும் சரி
அட் லீஸ்ட் ஒரு குல்லாயாவது தேவை
சிலருக்குக் கறுப்புக் கண்ணாடி
சிலருக்குக் குறுந்தாடி
எழுதும் வர்கமெனில் ஜோல்னாப்பை
கருப்புச்சட்டை
சிவப்புச் சட்டை
அல்லது
டிசைனர் துணிமணிகள்…
 
இப்போதெல்லாம்
மற்றபடியிருப்பது
டன் தின்ங் இல்லை-
ஓபனாக இருந்து
அதன் இயல்பான
உள்ளுரை முரண்பாடுகள்
மருத்துவரிடம் செல்லும்
கட்டாயத்தை ஏற்படுத்தி
ஏன் இந்த வீண் வம்பு?
 
இந்த ஞானம்
நமது கனவுக் கன்னிகளும் உண்டென்பது
உண்மைதானே
 
 
மெல்லச் சாகும் என்பது
ஒருவகை சாஸ்வதமே
ஏனெனில்
செத்துக் கொண்டிருக்குமே தவிர
சாவதில்லை
கலிபுருஷனல்லாவா
ஆள்கிறான்!
 
எல்லாமே ஒருவகை
சாலென்ஜ்/
மானேஜ் செய்யப்பட
வேண்டியது
எல்லாமே
ரிலேடிவ் மதிப்பு உள்ளவையே
கண்ணகிக்கும் சீதைக்கும்
ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்
 
துகில் உரிந்தால்
உள்ளது தெரியுமென்று
கடவுளரே எண்ணுவதாக
கதைத்தவர் பெரியோர்
சொல்லாமல் சொல்லிச் சென்றனர்-
 
நாமெல்லாம் எந்தமட்டு-
வண்டியிலேயே ப்ரெட் சாப்பிட்டு
விரைந்து
சிவப்பு சிக்னலில்
காத்திருக்கச்
செல்வோம்
நேரம் இல்லை
யாருக்கும்
நமக்கேயும் கூட
 
வீழ்வது நாமாயினும்
வாழ்வது நேரமே-
மெல்லச் செத்தாலும்…

 

பாஞ்சாலி சபதம்

 
 
தொலைபேசியில்
உன் முகம்
வாரந்தோறும் நிழலாடும்-
இது தவிர வேறென்ன
உன் நினைவு
பாலைவனத்து எண்ணைக் கிணறுகள்
டாலரின் முகம் காட்டி
உன் முகத்தைப் பறித்தது பழங்கதை
மறந்து போன கதை
 
நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ்
யாருடைய தாகத்தை
தணிக்காதே பெருக்கியதென்பதை
நீ அறியாதிருப்பதே நலம்-
 
காலையின் உதயம்
கலைந்ததைச் சரிசெய்யும்
உன் நினைவுகள்
அடுத்த வாரம் வரை
காத்தேயிருக்கும்-
 
ஒன்றில் மட்டும்
உறுதியுண்டு
சபதமென-
குழந்தையொன்று
பேறானால்
அது உன்னுடையதாகத்தான்
இருக்கும்
பிறக்கும்
இது
சத்தியமே