செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்

நவீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், “நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?” என்று கேட்டார். “வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்,” என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே.

இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்துவிட்டார். ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டேன். அவரைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் எளிமையாக சிந்திப்பார். சாதனை மன்னர். ஆனால் பந்தா இல்லாமல் சாதாரணமாக இருப்பார்.
உடனே பேச ஆரம்பித்துவிட்டார். யாரும் வராவிட்டால் அவரைப் பேட்டிகண்டு விருட்சத்தில் போட்டுவிடலாமா என்று நினைத்தேன். என்னுடைய டேப் ரெக்கார்டர் மக்கர் பண்ணுகிறது என்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன். போன கூட்டத்தை நான் ரிக்கார்ட் பண்ணியதெல்லாம் வீணாகப் போய்விட்டது. ஃபேன்களின் சப்தம் மனிதர்களின் சப்தங்களை பதியவிடாமல் செய்து விட்டது. கூட்டத்தில் பதியவிடாமல் 2 வாரங்கள் கம்ப்யூட்டர் மக்கர் செய்துவிட்டது. அதனால் போன கூட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் என்னுடைய மெமரி ரொம்ப வீக். உடனே ஞாபகத்திலிருந்து பதிவு செய்யாவிட்டால் எல்லாம் தப்பாகப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவர் நூற்றாண்டு கடந்து போய் 2 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் எழுதியது மொத்தமே 24 கதைகள்.

மௌனியைப்பற்றி எப்படிப் பேச்சு வந்தது. பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உட்கார்ந்துகொண்டு நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம். ‘மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மௌனியைப் பற்றி கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார் ஞானக்கூத்தன். உடனே மௌனி என் தலைக்குள் நுழைந்துவிட்டார்.

சா கந்தசாமி, கவிஞர் வைதீஸ்வரன் போன்றவர்கள் மௌனியை நேரில் சந்தித்திருக்கிறார்.

‘மௌனி ஒரு உற்சாகமானவர். என்னைப் பார்த்தாலே போதும், கந்தசாமி என்று கத்திக்கொண்டு அவர் வீட்டு சமையலறை வரைக்கும் அழைத்துக்கொண்டு போவார். உடனே உபசரிக்காமல் இருக்க மாட்டார்…..அவருக்கு எத்தனையோ துன்பம்… ஒரு பையன் டிரெயினில் அடிப்பட்டு இறந்து விட்டான்….இன்னொரு பையனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது….அவர் ஒண்ணும் சம்பாதிக்கலை….சாதாரண மெடில் க்ளாஸ் குடும்பம்…அவர் எழுத்தில எந்த அரசியலும் இல்லை..அவர் முற்போக்கும் இல்லை..பிற்போக்கும் இல்லை…
கந்தசாமி மௌனியை மட்டும் பேசவில்லை வேற சிலவற்றையும் பேசினார். “நாமெல்லாம் இங்கே கூடியிருக்கோம். ஆனா நாமெல்லாம் தனித்தனியா இருக்கோம். பொதுவா நாமெல்லாம் மனிதர்கள்..”

“பி எஸ் ராமையா மௌனியைப் பார்க்கும்போது அவர் நோட்டில் கதைகள் எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டிலிருந்துதான் கதைகளை மணிக்கொடியில் ராமையா பிரசுரம் செய்தார்…”

“மௌனி என்கிற பெயரைக்கூட ராமையாதான் அவருக்குவைத்தாராம்,” என்றேன் குறுக்கே நான்.

“ஆமாம். அவர் இயற்பெயர் மணி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு மௌனி எங்களால் கொண்டுவந்த கசடதபற பத்திரிகையில் ஒரே ஒரு கதை எழுதியிருக்கிறார். மௌனி கதைகளில் எந்த ஜாதி என்பது கிடையாது. ஏன் பெயரே கிடையாது…எல்லாரும் மனிதர்கள்…மௌனி மாதிரி இன்னொருத்தர் கதை எழுத முடியாது…”

“ஆனால் கசடதபறவில் பல எழுத்தாளர்கள் மௌனியைப் படித்து கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் பல கதைகள் வெளிவந்தன…”என்றேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவக்கோட்டை மூர்த்தி,”நான் கூட யாரையாவது பார்த்தால் இரக்கப்பட்டு எதாவது கொடுக்கிறேன். மனிதாபிமானம் இன்று எல்லாரிடமும்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மௌனியை எடை போட முடியாது. அவர் படைப்புகளைப் பற்றிதான் நாம் பேச வேண்டும்.. கந்தசாமி அதுமாதிரி பேசவில்லை என்று தோன்றுகிறது..”

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சாந்தாராம் என்பவர் மிகச் சுவாரசியமாய் ராமையாவைப்பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார். “வயதான படைப்பாளிகள் மூவரை ஒரு பத்திரிகை பேட்டி கண்டது. அப்பேட்டியை உடனடியாக அப்பத்திரிகை பிரசுரம் செய்யவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது. பல மாதங்கள் கழித்து ராமையா இறந்தபிறகு, அப்போதுதான் பேட்டி கண்டதுபோல் பிரசுரம் செய்தது,”என்றார்.

அவர் சொன்ன இன்னொரு தகவல். “ராமையா முதலில் எதுவும் எழுதவில்லை. மணிக்கொடியில் எல்லோருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்ய செய்ய அவரும் எழுதுவதில் தூண்டுதல் பெற்று எழுத ஆரம்பித்தார்.”

எஸ் சுவாமிநாதன் பேசும்போது,”மௌனியைப் பற்றி சரியான இலக்கியத் தடம் உருவாகவில்லை. ஆனால் தமிழில் மௌனியைப் போல் ஒருவர் கிடையாது. அவர் எழுத்தில் எந்த வருணனையும் கிடையாது. அனாவசியமாய் ஒரு வார்த்தை கிடையாது… அவர் மனதிற்காகத்தான் எழுதினார். இன்னும் அவர் படைப்புகளைப்படித்து ஆராய வேண்டும்…இது போதாது என்றார.”

வைதீஸ்வரன்,”மௌனி அவர்படைப்புகளை மட்டும்தான் சொல்வார்… மற்ற படைப்பாளிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார், என்றார்.
(இன்னும் தொடரும்)

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின் நிழலும் கலங்கிய குளத்து நீரின் சுவையும் பாதங்களை கறையாக்கும் செம்மண் பாதைகளும் தின்னத் தின்னத் திகட்டாத பனங்கிழங்கும், பனஞ்சுளையும் பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன கோடை விடுமுறையின் வெக்கையான பொழுதுகளும் நடசத்திரங்கள் வந்து குதித்து விளையாட ஆசைப்படும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில் பேரின்ப பேரானந்தத்தை அடைந்துவிடும் ஐம்பொறிகளும் பணத்தை வைத்து எவரையும் எடைபோடத் தெரியாத பளிங்குகளாய் உருளும் பால்யவெளிப் பயணங்களும் அனைவரையும் பிள்ளையாராய் பிடிக்க நினைத்து குரங்காக்கிய பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடும் ஒரு சில பிள்ளையாருக்காக குரங்கான நாங்களும்…

சிங்கம் ——-


சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

சில குறிப்புகள்

சமீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

“நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?” என்று கேட்கிறார்கள்.

“தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,”என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

“உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?” என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். “நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்,” என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன்
காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார்
ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார்
ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன்
கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது
மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)
பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து
நிறைய எழுதியிருந்தாய்…
நீயும் நானும் விளையாடிய, கதை பேசிய, கனவு விதைத்த பொழுதுகளை…
நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில்
மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச…
கவிதை (3)
சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில்..!
அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு…
என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய, சந்திர, நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது…
புழுதி அப்பிய மண்ணும் இருந்தது… மழை நனைக்கும் தாழ்வாரம் இருந்தது…
ஆனால் சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு சொந்த வீடு இருக்கிறது….
பொய்யாய் பழங்கதையாய்….

பேசும் மௌனங்கள்…


எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0

இலக்கியக் கூட்ட அறிவிப்பு

27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணிவரை கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை 2 கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் நடைபெற உள்ளது. எழுத்தாளர் சா கந்தசாமி, மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மெளனியைக் குறித்துப் பேசுகிறார். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்து உரையாடுகிறார். கலந்து கொள்பவர்கள் கவிதைகள் வாசிக்கலாம். வரவும்.

பழம் புத்தகக் கடை

புதிய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளைவிட பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கும் – வாங்கி விற்கும் கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்னடைய போக்குவரத்து அங்கு அதிகமிருக்கும். அந்தக் கடைகளில் பொக்கிஷங்கள் பல தேடத் தேடக் கிடைத்திருக்கின்றன. பழைய புத்தகக் கடைகளில் ரகம் பலவுண்டு. மிக மிக மலிவான மட்டமான புத்தகங்கள், பத்திரிகைகள் இவற்றோடு பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இ பாட்டில்கள் ஆகியவற்றையும் வைத்து வியாபாரம் செய்யும் வகை ஒன்று. மிக உயர்ந்த அரிதான நூல்களையும் பத்திரிகைகளையும் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் ஒரு ரகம். இந்தக் கடைகளில் வாடகை நூல் நிலைய வசதியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த வகையில் வாடகைக்குக் கிடைக்கும் நூல்கள் மலிவும், சாதாரண ஜனரஞ்சமானவையுமானதாக இருக்கும். நம்மில் ஒவ்வொருவனும் வாழ்ந்து கடந்த வந்த நாட்களை நினைவூட்டும் பல புத்தகங்களை – எழுத்தை வாசிக்கும்போது தன் பழைய காலத்தில் மீண்டும் மனத்தளவில் வாழ்ந்து பார்ப்பது ஓர் அற்புத அனுபவச் சிலிர்ப்பு. அதை நமக்கு வழங்கும் வகையில் புத்தகங்களைக் கொண்டிருப்பது பழைய புத்தகக் கடைகளே. ஒருமுறை வருகை தந்து எதையாவது வாங்குபவர்கள் தொடர்ந்து வருகைத் தருவதும், தம்மிடமுள்ள பழைய நூல்களை தள்ளிவிட்டு வேறு பழையதை வாங்குவதுமான வியாபர உறவை ஏற்படுத்தும். எனக்கான வாசிப்பு தளத்தைப் பெருக்கி விஸ்தாரப் படுத்திய பழைய புத்தகக் கடைகள் அவற்றில் நான் கண்டெடுத்த அரிதான – வினோதமான சிறந்த புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவை குறித்து இந்தப் பக்கங்களில் எழுதி என் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பழைய புத்தகக் கடை – புத்தகங்களோடான உறவும் சுகானுபமும் சேலத்தில் ஆரம்பமானது. சேலத்தில் முதல் அக்ரகாரப் பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்தது அந்தக் கடை. அந்நாளில் முக்கியமான இடமாயிருந்த சேலம் பாங்கு (இன்று இந்தியன் வங்கி) மற்றும் ஹென்றி அண்டு உல்சி ரொட்டி – கேக் கடை, சினிமா தியேட்டர்களில் போட்டுக் காண்பிக்கும் விளம்பர ஸ்லைடுகள் தயாரிக்கும் நாஷனல் ஸ்டூடியோ ஆகியவை இடம் பெற்றிருந்த கட்டிடத்தின் அறை ஒன்றில் அந்தக் புத்தகக் கடையுமிருந்தது. ஆனால் அது பழைய புத்தகக் கடையல்ல. அங்கிருந்தவை எல்லாமே புதிய புத்தகங்கள். வெளிநாடுகளிலிருந்த இறக்குமதியான ஆங்கில புத்தகங்கள். நஷ்டமேற்பட்டுவிட்டதால், கடையை மூடிவிட்டுப் போகும் முடிவில் கையிருப்புப் புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர் வாசுமுராரி. வாசுமுராரி ஒரு எம் ஏ ஆங்கிலப் பட்டதாரி. வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, புதிய புத்தகங்களை விற்பனை செய்து வந்த கடை ஒன்று திடீரென்று பழைய புத்தகக் கடையாக மாறியது.
அந்த வயதில் என்னைக் கவர்ந்ததும், எனக்குத் தேவையுமான சாகசச் செயல்களை உள்ளடக்கிய கதைப் புத்தகங்களை நானே தேடினேன். கூடவே, நிறைய வண்ணப்படங்களும் இருந்தாக வேண்டும். காமிக்ஸ் வகை புத்தகங்கள் என்னை வசீகரித்தன. அதில் “க்ளாசிக்கல்” எனும் தலைப்பில் நிறைய வெளியீடுகள் யு.எஸ் லிருந்து இறக்குமதியாகும். க்ளாசிக்ஸ் காமிக் வெளியீடுகள் அழகிய வண்ணப்படங்கள் மூலம் மிகப் பிரபலமான ஆங்கில, அமெரிக்க, பிரைஞ்சு நாவல்களை மிகச் சிறிய அளவில் தயாரித்துத் தள்ளின. பெரியவர்களின் கையிலும் இவை இருக்கும். இந்த வகையில் வாசுமுராரியின் கடையில் நான் முதல் முதலாக என் அப்பாவின் பரிந்துரையோடு வாங்கியவை. ஆர.எல்.ஸ்டீவன்ஸன், ரைடர் ஹாக்கார்டு இருவரின் கதைகள். மயிர்கூச்செரிய வைத்தன. ஆனால் வாசு முராரி எனக்கு மிகவும் ஆசையோடு சிபாரிசு செய்து படிக்கச் சொன்னது, அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வெல் எழுதிய “மோபிக் டிக்” கதையை.
மோபிடிக் எனும் வெள்ளைத் திமிங்கலம். ஒரு சமயம் மரணத்தின் குறியீடாகவும், விடாமுயற்சியுடன் துரத்தும் பழிவாங்கலின் குறியீடாகவும் திமிங்கலத்தையும், அதை வேட்டையாடும் சமயம் அதன் வாயிக்கு தன் காலொன்றைப் பறிகொடுத்துவிட்டு கொலை வெறியோடு பழிவாங்க அதைத் தேடி கடலில் அலையும் காப்டன் அஹாப்பையும் கதையில் பார்க்கிறோம். இம்மாபெரும் நாவல் நாற்பது பக்கங்களுக்குச் சருக்கி படக்கதை வடிவில் காமிக்ஸôய் தயாரிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் வாசு முராரி தூக்கி எறியும் விலைக்கு எனக்குத் தந்தார்.
இரண்டொரு வருடம் போனதும் தியேட்டரில் வெளியான மோபிடிக் ஹாலிவுட் படத்தை அப்பாவிடம் அடம் பிடித்து காசு வாங்கிப் போய்ப் பார்த்தேன். கிரிகிரிபெக் காப்டனாக ஒரு காலில் நடித்திருந்தார். ஜான் ஹ÷ஸ்டனின் டைரக்ஷன். அறுபதுகளில் இந்தக் கதையை நாடகமாக்கி அமெரிக்க நகரங்களில் பெரும் வெற்றியோடு நாடகம் போட்ட ஹாலிவுட் நடிகர் ராட் ஸ்டீகர் (தர்க் நற்ங்ண்ஞ்ங்ழ்) காப்டன் அஹாப் பாத்திரத்தில் நடித்திருந்தார.
மோபிடிக் நாவலை முழுசாக அதன் அசல் பிரதியில் படிக்கத் தேடினேன். இதை சேலம் தேர்முட்டி (தேரடி)யில் தரையில் பழைய புத்தகங்களைப் பரப்பி வைத்து விற்று வந்த நடேச ஆச்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன். நடேச ஆச்சாரி பற்றியும் அவரது பழைய புத்தகக் கடை பற்றியும் சொல்லுமுன் வாசுமுராரி குறித்து மேலும் கொஞ்சம் சொல்லலாமென்று தோன்றுகிறது.
கடைசியாக அவர் கடை மூடப்பட்டது. நடைப் பாதையில் அவரது கடையில் கடைசியிலிருந்த புத்தகங்கள் “எது எடுத்தாலும் எட்டணா, ஒரு ரூபாய்,” என்று இரு கூறுகளாய்ப் பிரித்துக் கட்டி விற்கப்பட்டன. வாசு முராரியைக் காணோம். பக்கத்திலிருந்த நாஷனல் ஸ்லைடு ஸடூடியோ உரிமையாளர் தியாகி கந்தசாமியை அணுகி விஜாரித்தேன். இவர் எப்போதும் கதர் ஜிப்பா கதர் வேட்டி. உண்மையில் அவர் தியாகியே இல்லை. ஒரு பிரமுகரின் பலமான சிபாரிசில் தியாகிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தியாகியானவர். தியாகிகளுக்கு தர்காஸ் பூமி என்று இலவசமாய் இரண்டு முதல் நான்கு ஏக்கர் வரை நிலம் தருவார்கள். அதைக் குறி வைத்து தியாகிப் பட்டியலில் பெயர் நுழைத்து தியாகியாகி நிலமும் பெற்று ஊரில் தியாகியாய் அறியப்பட்டு நிலைத்தவர்கள் நிறையவே உண்டு. கந்தசாமி அப்படியானவர். கூடவே ரகசியமான ஹோமோ செக்ஸவலிஸ்ட். இருந்தும் சொத்துக்கு வாரிசு வேண்டி கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு பையனையும் பெற்றெடுத்தவர். இவரிடம் வாசு முராரி பற்றி விசாரித்தபோது அவரைப் பழிச் சொற்களால் ஏசினார். புத்தகக் கடை இருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பிறகு போகப் போகத் தெரிய வந்தது என்னவென்றால், தகராறு வியாபார ரீதியால் அல்ல என்றும் கந்தசாமி உபயோகப் படுத்தி வந்த பையன்களை வாசுமுராரி தன் கடையிலுள்ள வண்ணப்படங்கள் நிறைந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டதால் ஏற்பட்டதென்றும் கூறுவார்கள். வாசு முராரி கல்யாணமாகாத ஹோமோ செக்சுவாலிஸ்டு.
ஒருநாள் சிறிய சிற்றுண்டிக் கடையொன்றில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
“ரெண்டு பட்டை சாதம்,” என்ற பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிர் வரிசையில் சாயம்போன சட்டை வேட்டியில் இளைத்துக் காணப்பட்ட வாசுமுராரியைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். தான் ஒரு அச்சாபீசில் பணிபுரிவதாகச் சொல்லிவிட்டு,
“தேர் முட்டியில நடேசாச்சாரினு ஒருத்தர் பழைய புஸ்தகங்களைப் போட்டு விற்கறார். போய்ப்பார். நம்ம கடை மாதிரி இருக்காது. பழைய புஸ்தகம்னா பக்கா பழைய புஸ்தகம்,” என்றார்.
அன்று மாலையே தேரடிக்குச் சென்றேன்.
கதம்பப் பூவுக்கு, தஞ்சாவூர் கதம்பம், மதுரைக் கதம்பம் திருச்சி கதம்பம் என்று பெருமை பேசுவார்கள். சேலம் கதம்பம் இந்தக் கதம்பப் பூச்சரம் ஊருக்கு ஊர் வேறுபடுவதும் அந்தந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதுமாய் அமைவதில் ஒரு சில சரக்குச் சேர்க்கைகள் காரணமாகின்றன. தாழம்பு மடல், மருதாணி, தவனம், மருக்கொழுந்து மற்றும் திருநீற்றுப் பத்திரி என்பன கதம்பத்தில் இடம் பெறுவது அத்தகைய காரணங்களில் ஒன்று. இக்கதம்பச் சரம் சாலையின் திருப்பத்தில் எதிரெதிரே நிற்கும் மாரியம்மன் தேர்களின் அடிவாரத்தில் வரிசையாய் கடை விரித்து விற்கப்படும். இக் கடைகளின் கோடியில் தேர் சக்கரத்தை அணைத்தாற்போல அந்தப் பழைய புத்தகக் கடை விரிக்கப்பட்டிருந்தது. ஓர் ஈச்சம்பாய் மீது அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஒரு நூறு புத்தகங்கள். மற்றபடி வரிசை வரிசையாக விரித்துப் பர்ப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள், அனேகமாய் எல்லாமே வெளிநாட்டில் – குறிப்பாக இங்கிலாந்தில் பதிக்கப்பட்ட புத்தகங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பதிப்பிக்கப் பட்டவையாவும் அடுக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை. 1940 – களிலிருந்து வெளிவந்தவை பரப்பி வைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் எடைக்குத்தான் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும் இதையெல்லாம் படித்திருக்கக் கூடிய மனிதர்கள் இந்த ஊரில் யார் யார் என்றுகூட யோசித்து வியந்ததுண்டு.
அப்போதைய என் ஆங்கில அறிவுக்கும் வாசிப்பு முதிர்ச்சிக்கும் நடேச ஆச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னை சிறிதும் கவரவேயில்லை. வாரம் ஒருமுறை தேரடியிலுள்ள ராஜ கணபதியைத் தரிசித்துவிட்டு வரும் சமயம் மட்டும் அந்தக் கடையை நின்று கவனிப்பேன். நடேச ஆச்சாரி பகலெல்லாம் தச்சு வேலை செய்பவர். கருத்த பருத்த தோள்கள் கொண்ட நெடிதுயர்ந்த உடல். வெள்ளை வெளேரென்ற வேட்டி தாடியும். எட்டு வயதில் அவர் ஜாடையில் ஒரு பையன். மனைவி இறந்து விட்டதாய்க் கேள்வி. அப்பாவுக்கும் இந்தப் புத்தகக் கடைக்காரருக்கும் புத்தகத்தைக் கலைத்த விஷயமாய் ஏற்பட்ட சண்டை நெருக்கமான நட்பில் கொண்டுவிட்டது வேறு கதை. டேவிட்கூப்பர் போன்ற ஆங்கிலக் கவிகளின் கவிதைகள் கொண்ட புத்தகத்தை அப்பா கொண்டு வருவார். தான் இண்டர் மீடியட்டில் படித்து ரசித்ததை இந்த நூலிலிருந்து படித்து எனக்கு விளக்கிப் படிக்கவும் வற்புறுத்துவார். மர்டாக் ரீடர், கிங் ரீடர் போன்ற ஆங்கில வாசகங்களை நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடையிலிருந்து கொண்டு வந்து பாடஞ்சொல்லித் தருவார். இவை அவர் காலத்தில் பள்ளிகளில் பாடப் புத்தகங்களாயிருந்தவை என்பார். இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. ஒரு மாதிரி புத்தியை ஆங்கிலத்தனமாய் வளர்த்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னையும் கவர்ந்தது. வண்ண ஓவியங்கள் நிறைந்த கிரேட் பிரிட்டனில் பதிப்பிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் கதைகள், நாடகங்கள், சர்வாண்டிஸ்ஸின் “டான்க்வையோட்டே” முதலியவற்றை வாங்கினேன். இந்த சமயம் அமெரிக்க பதிப்பில் சுருக்கப்படாத அசல் மோபிடிக் கிடைத்தது. கடலும் திமிங்கல வேட்டையும் பாய் மரக் கப்பலும் என்னைக் கவர்ந்தன.
எழுத்தாளனாய் வளர்ந்த காலத்தில் தீபம் இதழில் வெளியான எனது பல சிறுகதைகளில் “பேர் கொண்டான்” ஒன்று. இது நடேச ஆச்சாரியையும், என் அப்பாவையும் அவர்கள் உறவையும், பழம் புத்தகக் கடையையும் வைத்து எழுதியது. இதில் நானம் ஒரு பாத்திரம். விசேஷ நாட்கள் பண்டிகையின்போது வீட்டில் செய்யும் தின்பண்டங்கள், பாயசம் ஆகியவற்றை எடுத்துப்போய் அப்பா நடேசாச்சாரிக்கும் அவர் பையனுக்கும் தருவார். பிறகு விலைக்கு வாங்காமல் அங்கிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டுக் கொண்டு போய் வைப்பார். தான் ரசித்த வரிகளை, இடங்களை அப்பா பேனாவால் அடிக்கோடிட்டு வைப்பார். ஆச்சாரி தமிழைக்கூட எழுத்து கூட்டித்தான் படிப்பார்.
“இப்படி எம் புஸ்தகத்தில படிச்சிட்டு கோடு கோடா போட்டு வைக்கிறியே, அப்படி என்ன அற்பும் அதிலயிருக்கு?” என்று அப்பாவிடம் கேட்டபோது, அப்பா அதை விளக்கிவிட்டு படித்துக் காட்டுவார். இருவரும் சில நாட்களில் அருகிலிருந்த வில்வாத்ரி பவனில் காபி சாப்பிடுவார்கள்.
அப்பா இறந்தபோது நடேச அச்சாரி தன் பையனோடு வீட்டுக்கு வந்திருந்து அப்பாவின் உடலுக்கு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார். பல ஆண்டுகள் போய், சென்னையிலிருந்து சேலம் சென்ற சமயம் நரைத்த முடியுடன் கண்ணாடியணிந்து கண்மூடி தேரடியில் அமர்ந்திருந்த நடேசாச்சாரியைப் பார்த்தேன். கடையில் மலிவான தமிழ் செக்ஸ் புத்தகங்கள், மாத நாவல்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமன்கள் ஆகியவை நிறைந்திருந்தன. சிறு மர அலமாரி ஒன்றில் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கில நூல்கள் கொஞ்சம் இருந்தன. எடுக்கும்போதே பிஸ்கெட் உடைவதுபோல் அவற்றி தடித்த தாள்கள் உடைந்தன. அவற்றின் பல பக்கங்களில் பல பத்திகள், வரிகள் பேனாவால் அடிக்கோடிடப் பட்டிருந்தன. என் கண்கள் பனித்தன.
“அதையெல்லாம் எடுக்காதீங்க வைங்க,” என்று அதட்டலாகச் சொன்னார் அவர்.
“இதெல்லாம் வேணும். என்ன விலை?”
“அதெல்லாம் விற்கிறதுக்கு இல்லே. வச்சிடுங்க.”
“ஏன்?”
“இல்லேன்னா போக வேண்டியதுதானே?”
நான் யார் என்பதை சொன்னபோது ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு,”ஒங்கப்பாவும் நானும் பழகினத்துக்க அது சாட்சி. அதை எடுத்து அப்பப்ப பார்த்துக்கிட்டிருப்பேன். அவரு இருக்கிறமாதிரியே இருக்கு. அவரை மறுபடியும் எங்கிட்டேயிருந்து பிரிச்சிடாதே தம்பி” என்றார் நடேசாச்சாரி.

பார்டர் அனுபவங்கள்..


நான் இப்பொழுது ஒரு
பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் ..

பனிக்கட்டிகள் என்னை சுற்றி
படர்ந்துள்ளது ..

வாடைக்காற்று இதயத்தை
தொட்டு செல்கிறது ..

பெயர் தெறியா பறவையொன்று
“க்கி க்கி” என சப்தமிட்டுக்கொண்டே
வானில் பறந்து கொண்டுள்ளது ..

கவிதை புத்தகம்
கையில் வைத்துள்ளேன்

கம்பனி கமாண்டரின்
விசில் சுப்தம் கேட்கிறது ..

சாய்த்து வைத்திரிந்த
இன்சாஸ் துப்பாக்கியை
எடுத்துகொண்டேன் ..

இப்போது

கடமையையும்
கவிதையையும்
சுமந்துகொண்டு செல்கிறேன் ..

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….10

பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சிலசமயம் பிரமிளிடம் கேட்பேன். கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று. பிரமிள் எளிதில் பதில் சொல்லமாட்டார். கேட்காததுபோல் இருப்பார். பின் சொல்வார், ‘உயிருள்ளதாக இருக்கவேண்டும்,’ என்று. பின் அதைப் பற்றி தொடர்ந்து விளக்கமாக எதுவும் சொல்லமாட்டார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் சில கேள்விகள் எழும். உயிருள்ளதாக இருக்க வேண்டுமென்பது சரி, எப்படி அதைக் கண்டு பிடிப்பது. பிரமிளின் இன்னொரு பழக்கம். அவர் யாரையும் மதிப்பதில்லை. சிலர் பெயர்களைக் கேட்டால் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு சிறு பத்திரிகை என்றால் குறைந்த பட்சம் 1000 பேர்களுக்குள்தான் வாசிப்பார்கள். பிரமிள், ‘படிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் அது சிறு பத்திரிகை இல்லை,’ என்பார்.

பிரமிளும் நானும் ஒருநாள் நடந்துபோய்க் கொண்டிருந்தோம். தியோசிபிகல் சொசைட்டி முழுவதும் சுற்றி வந்தோம். அங்குள்ள விதவிதமான மரங்களைப் பற்றி பிரமிள் பலவிதமாக சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மரங்களைக் காட்ட காட்ட நான் அப்போதுதான் அதை புதிய விதமாக அறிந்து கொண்டதுபோல் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் விசேஷத்தைப் பற்றி விவரமாகச் சொல்வார். பலமுறை அவர் அங்கு வந்து போனவராகத் தோன்றியது.

ஒரு இடத்தில் நின்றார். அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தைப் பற்றி விவரித்து வந்தவர், அங்குள்ள ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துப் புரட்டினார். பாறாங்கல்லின் அடியில் ஒரு கருத்தத் தேள் இருந்தது. பார்த்தவுடன் நான் திகைத்துவிட்டேன். தேள் என்றார் பிரமிள். என்னடா இது வம்பாப் போச்சு என்று தோன்றியது. இவரோடு சுற்றினால் தேள் எல்லாம் தட்டுப் படுகிறது. பின் ஒரு வற்றிய குளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். பிரமிள் ஒரு காகிதத்தில் அவர் பெயரை எழுதி சுருட்டி அந்தக் குளத்தில் வீசி எறிந்தார். பின் என் பெயரையும் எண் கணிதப்படி எழுதி வீசி எறிந்தார். எண் கணிதப்படி பிரமிளிடம் யாராவது அறிவுரைக் கேட்டால் தொலைந்தோம். தமிழ் எழுத்தாளர்களின் பலருடைய பெயர்களை அவர் அப்படித்தான் மாற்றியிருக்கிறார். என் ஜெயராமன் என்ற பெயரை நாராணோ ஜெயராமன் என்று மாற்றியிருக்கிறார். சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றியிருக்கிறார். இப்படிப் பெயரை மாற்றி எழுத ஆரம்பித்தவர்கள் எல்லாம் பின்னால் எதுவும் பெரிதாக எழுதாமல் போய்விட்டார்கள் என்று தோன்றுகிறது. என் பெயரையும் விஸ்வ ரூப கிரி என்று வைத்துக்கொள்ள சொன்னார். அவர் என்னை கிண்டலடிப்பதுபோல் தோன்றியது.

ஒருநாள் வீட்டிற்கு வந்தார். ‘இன்னிக்கு முக்கியமான நாள்,’ என்றார். ‘என்ன?’ என்று கேட்டேன். ‘என் பிறந்தநாள்,’. ஏனோ அவர் எத்தனாவது பிறந்தநாள் என்பதைக் குறிப்பிடவில்லை. நான் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப்போய் டிபன் வாங்கித் தந்தேன். பொதுவாக பிறந்தநாள்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. இன்று என் பிறந்தநாள் என்று கூட நினைக்காமல் பல ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன்.

நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருமுறை குறிப்பிட்டார். அவர் தலை முடியை அவர்தான் திருத்தம் செய்து கொள்வாராம். எனக்கு கேட்க ஆச்சரியம். ‘இன்னொருவர் என் தலையைப் பிடிப்பது எனக்குப் பிடிக்காது.’ பிரமிளுக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். ஒரு திறமையான கலைஞன் வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை. பொது கழிப்பறை உள்ள இடத்திற்குப் பக்கத்தில் அவர் ஒரு அறையில் குடியிருந்தார். யாரும் அவரை அந்த இடத்திற்கு வந்து பார்க்க மாட்டார்கள். மழைக் காலத்தில் அங்கு வசிக்கவே முடியாது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த பிரமிளை ஒரு இலக்கிய நண்பர் அமெரிக்காவில் உள்ள நிலையை ஒப்பிட்டு ஏதோ சொன்னார். அதைக் கேட்டவுடன், பிரமிளுக்கு படு பயங்கரமாக கோபம் வந்து அந்த இலக்கிய நண்பரை ஒரு வழி பண்ணிவிட்டார். திட்டோ திட்டு என்று திட்டி விட்டார்.

(இன்னும் வரும்)