கவிதை (1)

அலுவலகம் செல்லும் வழியில் அடிபட்டு இறந்திருந்தது ஒரு செவலை நாய் விரையும் வாகனங்களின் குழப்பத்தில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கலாம்
நாலைந்து நாட்களில் தேய்ந்து கரைந்தது இறந்த நாயின் உடல்
காக்கைகள் கொத்தி தின்ன ஏதுவில்லை வாகனங்கள் நெடுகித் தொலையும் பெருவழிச்சாலையில்
எப்போதும் பிறரின் மரணங்கள் ஒட்டியிருக்கிறது நமது பயணத்தடங்களில்.

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன்
காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார்
ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார்
ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன்
கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது
மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)
பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து
நிறைய எழுதியிருந்தாய்…
நீயும் நானும் விளையாடிய, கதை பேசிய, கனவு விதைத்த பொழுதுகளை…
நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில்
மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச…
கவிதை (3)
சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில்..!
அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு…
என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய, சந்திர, நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது…
புழுதி அப்பிய மண்ணும் இருந்தது… மழை நனைக்கும் தாழ்வாரம் இருந்தது…
ஆனால் சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு சொந்த வீடு இருக்கிறது….
பொய்யாய் பழங்கதையாய்….