பழம் புத்தகக் கடை

அப்போது எல்லாருக்கும் மட்றாஸ்தான். சென்னை என்று சொல்லுவது நாகரிகமற்ற கர்னாடக வழக்கமாய்க் கருதப் பட்டிருக்கலாம். நான் மட்றாசுக்கு வருமுன்பே அப்பாவின் மூலம் அறிந்திருந்த முக்கியமான இடங்களில் ஒன்று மூர்மார்க்கெட். மதறாசில் எனக்கு மிகவும் பிடித்த இடமே இதுதான். இதன் இந்தோ சாராசானிகக் கட்டிட பாணியின் அழகை சொல்லி மாளாது. நுழைவாயில்களில் கருங்கள்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கலசங்களுமிருந்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பபட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் சுவர்களில் மேற்கூறிய கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் உள்ளே மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த மூர்மார்க்கெட்டில் அன்று பெற்ற அப்பா அம்மாவைத் தவிர மற்றது எல்லாம் கிடைக்கும். பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும்.
பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்குமிடம். ஒரு கடையில் பத்து வருடத்து ஆங்கில செய்தித்தாள் கூட (The Mail) கிடைப்பதாக, பழைய அபூர்வ பேனாக்களை வாங்கி விற்கும் ஒரு கடைக்காரர் எனக்குச் சொன்னார். அன்றைய மஞ்சள் பத்திரிகைகளான தீரன், இந்து நேசன் இதழ்களின் (1940) பைண்டு செய்த தொகுப்புகளை நான் மூர் மார்க்கெட் கடையொன்றில் பார்த்திருப்பதோடு, வாடிக்கையாளன் என்ற சலுகையுடன், ஸ்டூலில் அமர்ந்து புரட்டிப் படித்துப் பார்த்துமிருக்கிறேன். அந்தக் காலத்து அனுமான், காண்டீபம், நாரதர் போன்ற இதழ்களின் பைண்டு செய்த தொகுப்புகளையும் அதே கடையில் பார்த்தும் படித்துமிருக்கிறேன்.
மூர்மார்க்கெட் பழைய புத்தகங்கள், பத்திரிகைகள் என்பனவற்றோடு இன்னொரு முக்கிய விஷயத்திற்கும் புகழ் பெற்றது. கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் ”எல் பி ரெக்கார்டுகள்” வரை கிடைக்கும். கர்னாடாக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் முதல் ”எல் பி ரெக்கார்டுகள்” வரை கிடைக்கும். ஆங்கிலோந்திய குடும்பங்கள் மேனாட்டு இசைத்தட்டுக்களை விற்கவும், வாங்கவும் ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் அலையும் இடமாயிருக்கும் மூர்மார்க்கெட். நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதில் நாம் வேறு இசைத் தட்டை எடுத்துக் கொள்ளலாம். கடைக்காரர் கூடுதலாக சொற்பக் காசை மட்டும் கேட்பார். அதிலும் பேரம் பேசலாம். கூடவே சொல்லுவார் :
”கேட்டனுபவிச்சிட்டு இங்கியே கொண்ணாந்து குடு, வேற எதுவேணுமோ எடுத்துக்கிட்டுப் போ.”
மூர்மார்க்கெட் தலை வாசல்லேயே இசைத் தட்டுக்கடைகளின் தரகர்கள் காத்திருப்பார்கள். கையில் இசைத் தட்டோ டு வருபவர்களைக் கண்டதும் பாய்ந்து இழுப்பார்கள்.
”நம்ம கடைக்குப் போகலாம்.”
”டேய், சார் நம்ம கடை வாடிக்கைடா, நீ வா சார்.”
வைதீஸ்வரன் கோயில் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் செருப்பு – அர்ச்சனைத்தட்டு விஷயமாய் ஏஜெண்டு கள் நம்மை இழுப்பது கணக்காய்….
என்னைத்தேடி ஊரிலிருந்து வருபவர்களை நேராக என் அறைக்கு வரச் சொல்லாமல் மூர்மார்க்கெட் தலை வாசலில் இத்தனை மணிக்கு வந்து நிற்கச் சொல்லுவது என் வழக்கம். நண்பர்களோடான எனது சந்திப்புக்கள் பெரும்பாலும் மூர்மார்க்கெட் வளாகத்தில் வைத்தே நிகழ்ந்து வந்த நாட்கள் அதிகம்.
மூர்மார்கெட் வளாகத்தில் முக்கியமான இரண்டு வரையாக பழைய புத்தகங்கள் விற்பனையிலிருக்கும். ஒன்று, நிரந்தர கடைகள். இவை பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் பெயர் தெரியும்படி அடுக்கப்பட்ட தோல் பைண்டலான வெளி நாட்டு – உள்நாட்டு அரிதான நூல்கள். ஒரு நுற்றாண்டு வயது நிரம்பியவை. அதற்கும் மேலான தாத்தா கொள்ளுத்தாத்தா. எள்ளுத் தாத்தா காலத்து நூல்கள் எல்லாம் இந்த பீரோக்களிலிருக்கும். சாதாரண – பேப்பர் பேக்ஸ் வகை நூல்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று முறை வாங்கிய சுருக்கில் வாடிக்கையாளர் அந்தஸ்தைப் பிடித்து விடலாம். கடைக்காரருக்கு கவனம் பிசகாது. பத்திரிளகைகளைக் குடைய வேண்டும்போது சிறு ஸ்டூலைக் கொடுத்து உட்கார்ந்தே நம் காரியத்தைப் பார்க்கச் சொல்வார். சில அபூர்வ இலக்கிய கட்டுரைகள் பேட்டிகளை வியப்பூட்டும் வகையில் கொண்டிருந்த விலையுயர்ந்த அமெரிக்க ஆபாச பத்திரிகையான ”ப்ளே பாய்” இதழ்களை இப்படித்தான் நான் வாங்கிப் பார்த்துவிட்டுத் திருப்பித் தருவேன். பிக்காஸோவைப் பற்றிய சால்வேடார் டாலியைப் பற்றிய அரிதான கட்டுரைகளும் ழான் பல் சார்தரோடான அரிய நேர்காணல் ஒன்றும் ப்ளோபாய் இதழ்களில் நான் படிக்க நேரிட்டவை. இதே கடையில் பழக்கம் மற்றும் நம்பிக்கை மேலிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துவிட்டு ஒன்றிரண்டு நூல்களை எடுத்தப் போனதுண்டு.
மற்றொரு வகை விற்பனையாளர் ”கேர் ஆஃப் பிளாட்பாரம்” தினுசு. இவர் மூர்மார்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார்கள். பெரும்பாலும் போப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேக்கம் அதிகரிக்கும்போது நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து ”இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா” என்று எழுதிய அட்டைகளைகக் குத்தி வைப்பார்கள். நிரந்தர புத்தக விற்பனையாளர்களில் முதலியார் என்றும் நாயக்கர் என்றும் ஐரே என்றும் எல்லாராலும் அழைக்கப்பட்ட மூவர் எனக்கு பழக்கமானார்கள்.
1961ல் நான் உருப்படியாக மூர்மார்கெட்டில் வாங்கிய சில புத்தகங்களில் குறிப்பிடத்தக்கது ஒரு பிரிட்டிஷ் சைத்திரகனின் சுயசரிதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கில பத்திரிகையுலகில் கேலிச்சித்திரம் மற்றும் பல்வேறு மனிதர்களை உருவகப்படுத்தும் ”கோகேச்சர்” வகைப் படங்கள் வரைவதில் புகழ் பெற்றிருந்த ஃப்ராங்க் ரேனால்ட்ஸ் ஜூனியர் என்பவரின் சுயசரிதை நூல் அது. ஏராளமான கருப்பு வெள்ளைக் கோட்டோ வியங்களோடு சிற்சில நீர் வண்ண ஓவியங்களும் கொண்ட நூல் அது. இந்த நூல் முகப்பு அட்டையும், பின் அட்டையுமிழந்த கதியில் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் அம்பாரக் குவியலில் கிடைத்தது. இப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் இன்று நீங்கள் ”தாள்” என்று பார்த்துத் தடவி உணரும் வகையைச் சார்ந்ததே அல்ல. இன்றைய சராசரி தமிழ் நாவல் ஒன்றின் முகப்பு மற்றும் பின் அட்டையளவுக்கு கனம் கொண்ட தாள் அது. தாள் என்பதைவிட அட்டையென்றே சொல்லிவிடலாம். அப்படியான அந்தத் தாள்கள் ஒரு எண்பது கொண்ட அந்த நூலின் தலைப்பு FRANK RAENOLDS, JR என்பது. ரேனால்ட்ஸ் தன் சிறு வயது, பள்ளி நாட்கள், ஓவியப் பயிற்சி பத்திரிகைகளோடான தொடர்பும் அனுபவமும், பொது வாழ்வில் சந்திக்க நேரிட்ட பல்வேறு முகங்கள் பற்றியெல்லாம் புத்தகத்தில் சொல்லிக்கொண்டே போகையில் அதையெல்லாம் – அவர்களையெல்லாம் பென்சிலால், க்ரேயானால், கருப்பு மையால், வண்ணங்களால், அடுப்புக் கரியால் எல்லாம் வரைந்த படங்களையும் நெரிப்படுத்தி இடம்பெறச் செய்திருக்கிறார். இவரது கேரிகேச்சர் படங்கள் அபூர்வமானவை. துல்லியமும் நேர்மையுமானவை. இவரது கார்டூன்களும், இதர படங்களும் ஓரளவுக்கே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை அவற்றின் கால வரிசையில் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் ஓட்டத்தில் நடந்தேறியிருக்கும் ஐரோப்பாவின் ஆண் – பெண் – குழந்தைகளுக்கான சிகையலங்காரம், ஆடை தினுசுகளின் வடிவமைப்பு, காலணி மற்றும் தொப்பி தினுசுகள், பல்வேறு பருவ நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவற்றின் படிப்படியான தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறியலாம். இப்புத்தகம் இங்கிலாந்தில் 1907-ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு.மூர்மார்கெட் நாயக்கர் கடையில் பல்வேறு அரிய மேனாட்டு பத்திரிகைகளைத் தேடி வாங்கிய அனுபவத்தில் இங்கிலாந்தில் தயாராகி வெளிவந்த மாதப் பத்திரிகை ARGOSY முக்கியமானது. நாற்பதாண்டுகளுக்கு முன்பே நின்றுபோன இதழ். ஆர்கோஸி என்பதால், ஏராளமான அற்புத விஷயங்களை ஏந்தி வரும் கப்பல் என்று – கிட்டத்தட்ட பொருளாகிறது. ஆர்கோஸி பத்திரிகையின் விசேஷமென்ன? இது முழுக்கவும் சிறு கதைக்கான பத்திரிகை. சிறுகதைகளுக்கெனவே பிரத்தியேகமாய் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை. ஒவ்வொரு மாதமும் ஆர்கோஸி முப்பது வரை சிறுகதைகளைக் கொண்டு வரும். இதில் சாமர்செட் மாம், ஆல்பெர்டோ மொரேவியா, வில்லியம் சரோயன், ஃப்ராங்க் ஆகுனர், மால்காம் வுட், கிரஹம் கிரீன் ஆகியவர்கள் சிறுகதைகள் எழுதியவர்கள். ஆர்.கே நாராயணனின் சிறுகதையொன்றையும் ஆர்கோஸியில் பார்த்த நினைவு.மூர்மார்க்கெட் முதலியார் கடையில் நான் மெளனமாக நின்றபடி கண்களால் ஆராய்வேன். ஒரு நாள்….”ஒரு நாள் போக வந்து வந்து நிற்கிறியே, என்னமோ பெரிசா வாங்கறாப்பல…ஓர்ரூபாய்க்கு யாவாரம் பண்ணியிருப்பியா எங்கடையில?……” என்றார் முதலியார். ”என்ன இருக்குனு பார்க்கிறேன்.””இது தேவைப்படுமா?” என்று கூறிக்கொண்டே ஒரு புத்தகக் கட்டை எடுத்து வெளியில் போட்டார்.”பிரத்தியேகமான ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு – 1948. முதல் புத்தகம். இரண்டாம் புத்தகம் 1949. இப்படியாக பன்னிரெண்டு புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் சுமார் ஆறுமாத காலத்திய தினப்படி சேதிக் குறிப்புகளைக் கொண்டது. 1746-ம் ஆண்டு ஏப்ரல் முதல், 1746 நவம்பர் ஆரம்பம் வரையிலான டைரி குறிப்புகள் எழுதப்பட்ட நூலின் உள்ஞானு தியாகு என்ற பெயலில் ஒருவர் எழுதியிருக்கிறார். முகவிலை மூன்று ரூபாய். பேரம் பேசியதில் முதலியார் ஒவ்வொரு புத்தகத்தையும் எழுபதைந்து பைசாவுக்குக் கொடுத்தார். அன்றைய கணக்கில் அது அதிகப்பட்ட விலையாகவே பட்டது எனக்கு. (இன்னும் வரும்)

பழம் புத்தகக் கடை

புதிய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளைவிட பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கும் – வாங்கி விற்கும் கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்னடைய போக்குவரத்து அங்கு அதிகமிருக்கும். அந்தக் கடைகளில் பொக்கிஷங்கள் பல தேடத் தேடக் கிடைத்திருக்கின்றன. பழைய புத்தகக் கடைகளில் ரகம் பலவுண்டு. மிக மிக மலிவான மட்டமான புத்தகங்கள், பத்திரிகைகள் இவற்றோடு பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இ பாட்டில்கள் ஆகியவற்றையும் வைத்து வியாபாரம் செய்யும் வகை ஒன்று. மிக உயர்ந்த அரிதான நூல்களையும் பத்திரிகைகளையும் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் ஒரு ரகம். இந்தக் கடைகளில் வாடகை நூல் நிலைய வசதியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த வகையில் வாடகைக்குக் கிடைக்கும் நூல்கள் மலிவும், சாதாரண ஜனரஞ்சமானவையுமானதாக இருக்கும். நம்மில் ஒவ்வொருவனும் வாழ்ந்து கடந்த வந்த நாட்களை நினைவூட்டும் பல புத்தகங்களை – எழுத்தை வாசிக்கும்போது தன் பழைய காலத்தில் மீண்டும் மனத்தளவில் வாழ்ந்து பார்ப்பது ஓர் அற்புத அனுபவச் சிலிர்ப்பு. அதை நமக்கு வழங்கும் வகையில் புத்தகங்களைக் கொண்டிருப்பது பழைய புத்தகக் கடைகளே. ஒருமுறை வருகை தந்து எதையாவது வாங்குபவர்கள் தொடர்ந்து வருகைத் தருவதும், தம்மிடமுள்ள பழைய நூல்களை தள்ளிவிட்டு வேறு பழையதை வாங்குவதுமான வியாபர உறவை ஏற்படுத்தும். எனக்கான வாசிப்பு தளத்தைப் பெருக்கி விஸ்தாரப் படுத்திய பழைய புத்தகக் கடைகள் அவற்றில் நான் கண்டெடுத்த அரிதான – வினோதமான சிறந்த புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவை குறித்து இந்தப் பக்கங்களில் எழுதி என் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பழைய புத்தகக் கடை – புத்தகங்களோடான உறவும் சுகானுபமும் சேலத்தில் ஆரம்பமானது. சேலத்தில் முதல் அக்ரகாரப் பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்தது அந்தக் கடை. அந்நாளில் முக்கியமான இடமாயிருந்த சேலம் பாங்கு (இன்று இந்தியன் வங்கி) மற்றும் ஹென்றி அண்டு உல்சி ரொட்டி – கேக் கடை, சினிமா தியேட்டர்களில் போட்டுக் காண்பிக்கும் விளம்பர ஸ்லைடுகள் தயாரிக்கும் நாஷனல் ஸ்டூடியோ ஆகியவை இடம் பெற்றிருந்த கட்டிடத்தின் அறை ஒன்றில் அந்தக் புத்தகக் கடையுமிருந்தது. ஆனால் அது பழைய புத்தகக் கடையல்ல. அங்கிருந்தவை எல்லாமே புதிய புத்தகங்கள். வெளிநாடுகளிலிருந்த இறக்குமதியான ஆங்கில புத்தகங்கள். நஷ்டமேற்பட்டுவிட்டதால், கடையை மூடிவிட்டுப் போகும் முடிவில் கையிருப்புப் புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர் வாசுமுராரி. வாசுமுராரி ஒரு எம் ஏ ஆங்கிலப் பட்டதாரி. வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, புதிய புத்தகங்களை விற்பனை செய்து வந்த கடை ஒன்று திடீரென்று பழைய புத்தகக் கடையாக மாறியது.
அந்த வயதில் என்னைக் கவர்ந்ததும், எனக்குத் தேவையுமான சாகசச் செயல்களை உள்ளடக்கிய கதைப் புத்தகங்களை நானே தேடினேன். கூடவே, நிறைய வண்ணப்படங்களும் இருந்தாக வேண்டும். காமிக்ஸ் வகை புத்தகங்கள் என்னை வசீகரித்தன. அதில் “க்ளாசிக்கல்” எனும் தலைப்பில் நிறைய வெளியீடுகள் யு.எஸ் லிருந்து இறக்குமதியாகும். க்ளாசிக்ஸ் காமிக் வெளியீடுகள் அழகிய வண்ணப்படங்கள் மூலம் மிகப் பிரபலமான ஆங்கில, அமெரிக்க, பிரைஞ்சு நாவல்களை மிகச் சிறிய அளவில் தயாரித்துத் தள்ளின. பெரியவர்களின் கையிலும் இவை இருக்கும். இந்த வகையில் வாசுமுராரியின் கடையில் நான் முதல் முதலாக என் அப்பாவின் பரிந்துரையோடு வாங்கியவை. ஆர.எல்.ஸ்டீவன்ஸன், ரைடர் ஹாக்கார்டு இருவரின் கதைகள். மயிர்கூச்செரிய வைத்தன. ஆனால் வாசு முராரி எனக்கு மிகவும் ஆசையோடு சிபாரிசு செய்து படிக்கச் சொன்னது, அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வெல் எழுதிய “மோபிக் டிக்” கதையை.
மோபிடிக் எனும் வெள்ளைத் திமிங்கலம். ஒரு சமயம் மரணத்தின் குறியீடாகவும், விடாமுயற்சியுடன் துரத்தும் பழிவாங்கலின் குறியீடாகவும் திமிங்கலத்தையும், அதை வேட்டையாடும் சமயம் அதன் வாயிக்கு தன் காலொன்றைப் பறிகொடுத்துவிட்டு கொலை வெறியோடு பழிவாங்க அதைத் தேடி கடலில் அலையும் காப்டன் அஹாப்பையும் கதையில் பார்க்கிறோம். இம்மாபெரும் நாவல் நாற்பது பக்கங்களுக்குச் சருக்கி படக்கதை வடிவில் காமிக்ஸôய் தயாரிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் வாசு முராரி தூக்கி எறியும் விலைக்கு எனக்குத் தந்தார்.
இரண்டொரு வருடம் போனதும் தியேட்டரில் வெளியான மோபிடிக் ஹாலிவுட் படத்தை அப்பாவிடம் அடம் பிடித்து காசு வாங்கிப் போய்ப் பார்த்தேன். கிரிகிரிபெக் காப்டனாக ஒரு காலில் நடித்திருந்தார். ஜான் ஹ÷ஸ்டனின் டைரக்ஷன். அறுபதுகளில் இந்தக் கதையை நாடகமாக்கி அமெரிக்க நகரங்களில் பெரும் வெற்றியோடு நாடகம் போட்ட ஹாலிவுட் நடிகர் ராட் ஸ்டீகர் (தர்க் நற்ங்ண்ஞ்ங்ழ்) காப்டன் அஹாப் பாத்திரத்தில் நடித்திருந்தார.
மோபிடிக் நாவலை முழுசாக அதன் அசல் பிரதியில் படிக்கத் தேடினேன். இதை சேலம் தேர்முட்டி (தேரடி)யில் தரையில் பழைய புத்தகங்களைப் பரப்பி வைத்து விற்று வந்த நடேச ஆச்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன். நடேச ஆச்சாரி பற்றியும் அவரது பழைய புத்தகக் கடை பற்றியும் சொல்லுமுன் வாசுமுராரி குறித்து மேலும் கொஞ்சம் சொல்லலாமென்று தோன்றுகிறது.
கடைசியாக அவர் கடை மூடப்பட்டது. நடைப் பாதையில் அவரது கடையில் கடைசியிலிருந்த புத்தகங்கள் “எது எடுத்தாலும் எட்டணா, ஒரு ரூபாய்,” என்று இரு கூறுகளாய்ப் பிரித்துக் கட்டி விற்கப்பட்டன. வாசு முராரியைக் காணோம். பக்கத்திலிருந்த நாஷனல் ஸ்லைடு ஸடூடியோ உரிமையாளர் தியாகி கந்தசாமியை அணுகி விஜாரித்தேன். இவர் எப்போதும் கதர் ஜிப்பா கதர் வேட்டி. உண்மையில் அவர் தியாகியே இல்லை. ஒரு பிரமுகரின் பலமான சிபாரிசில் தியாகிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தியாகியானவர். தியாகிகளுக்கு தர்காஸ் பூமி என்று இலவசமாய் இரண்டு முதல் நான்கு ஏக்கர் வரை நிலம் தருவார்கள். அதைக் குறி வைத்து தியாகிப் பட்டியலில் பெயர் நுழைத்து தியாகியாகி நிலமும் பெற்று ஊரில் தியாகியாய் அறியப்பட்டு நிலைத்தவர்கள் நிறையவே உண்டு. கந்தசாமி அப்படியானவர். கூடவே ரகசியமான ஹோமோ செக்ஸவலிஸ்ட். இருந்தும் சொத்துக்கு வாரிசு வேண்டி கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு பையனையும் பெற்றெடுத்தவர். இவரிடம் வாசு முராரி பற்றி விசாரித்தபோது அவரைப் பழிச் சொற்களால் ஏசினார். புத்தகக் கடை இருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பிறகு போகப் போகத் தெரிய வந்தது என்னவென்றால், தகராறு வியாபார ரீதியால் அல்ல என்றும் கந்தசாமி உபயோகப் படுத்தி வந்த பையன்களை வாசுமுராரி தன் கடையிலுள்ள வண்ணப்படங்கள் நிறைந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டதால் ஏற்பட்டதென்றும் கூறுவார்கள். வாசு முராரி கல்யாணமாகாத ஹோமோ செக்சுவாலிஸ்டு.
ஒருநாள் சிறிய சிற்றுண்டிக் கடையொன்றில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
“ரெண்டு பட்டை சாதம்,” என்ற பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிர் வரிசையில் சாயம்போன சட்டை வேட்டியில் இளைத்துக் காணப்பட்ட வாசுமுராரியைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். தான் ஒரு அச்சாபீசில் பணிபுரிவதாகச் சொல்லிவிட்டு,
“தேர் முட்டியில நடேசாச்சாரினு ஒருத்தர் பழைய புஸ்தகங்களைப் போட்டு விற்கறார். போய்ப்பார். நம்ம கடை மாதிரி இருக்காது. பழைய புஸ்தகம்னா பக்கா பழைய புஸ்தகம்,” என்றார்.
அன்று மாலையே தேரடிக்குச் சென்றேன்.
கதம்பப் பூவுக்கு, தஞ்சாவூர் கதம்பம், மதுரைக் கதம்பம் திருச்சி கதம்பம் என்று பெருமை பேசுவார்கள். சேலம் கதம்பம் இந்தக் கதம்பப் பூச்சரம் ஊருக்கு ஊர் வேறுபடுவதும் அந்தந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதுமாய் அமைவதில் ஒரு சில சரக்குச் சேர்க்கைகள் காரணமாகின்றன. தாழம்பு மடல், மருதாணி, தவனம், மருக்கொழுந்து மற்றும் திருநீற்றுப் பத்திரி என்பன கதம்பத்தில் இடம் பெறுவது அத்தகைய காரணங்களில் ஒன்று. இக்கதம்பச் சரம் சாலையின் திருப்பத்தில் எதிரெதிரே நிற்கும் மாரியம்மன் தேர்களின் அடிவாரத்தில் வரிசையாய் கடை விரித்து விற்கப்படும். இக் கடைகளின் கோடியில் தேர் சக்கரத்தை அணைத்தாற்போல அந்தப் பழைய புத்தகக் கடை விரிக்கப்பட்டிருந்தது. ஓர் ஈச்சம்பாய் மீது அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஒரு நூறு புத்தகங்கள். மற்றபடி வரிசை வரிசையாக விரித்துப் பர்ப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள், அனேகமாய் எல்லாமே வெளிநாட்டில் – குறிப்பாக இங்கிலாந்தில் பதிக்கப்பட்ட புத்தகங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பதிப்பிக்கப் பட்டவையாவும் அடுக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை. 1940 – களிலிருந்து வெளிவந்தவை பரப்பி வைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் எடைக்குத்தான் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும் இதையெல்லாம் படித்திருக்கக் கூடிய மனிதர்கள் இந்த ஊரில் யார் யார் என்றுகூட யோசித்து வியந்ததுண்டு.
அப்போதைய என் ஆங்கில அறிவுக்கும் வாசிப்பு முதிர்ச்சிக்கும் நடேச ஆச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னை சிறிதும் கவரவேயில்லை. வாரம் ஒருமுறை தேரடியிலுள்ள ராஜ கணபதியைத் தரிசித்துவிட்டு வரும் சமயம் மட்டும் அந்தக் கடையை நின்று கவனிப்பேன். நடேச ஆச்சாரி பகலெல்லாம் தச்சு வேலை செய்பவர். கருத்த பருத்த தோள்கள் கொண்ட நெடிதுயர்ந்த உடல். வெள்ளை வெளேரென்ற வேட்டி தாடியும். எட்டு வயதில் அவர் ஜாடையில் ஒரு பையன். மனைவி இறந்து விட்டதாய்க் கேள்வி. அப்பாவுக்கும் இந்தப் புத்தகக் கடைக்காரருக்கும் புத்தகத்தைக் கலைத்த விஷயமாய் ஏற்பட்ட சண்டை நெருக்கமான நட்பில் கொண்டுவிட்டது வேறு கதை. டேவிட்கூப்பர் போன்ற ஆங்கிலக் கவிகளின் கவிதைகள் கொண்ட புத்தகத்தை அப்பா கொண்டு வருவார். தான் இண்டர் மீடியட்டில் படித்து ரசித்ததை இந்த நூலிலிருந்து படித்து எனக்கு விளக்கிப் படிக்கவும் வற்புறுத்துவார். மர்டாக் ரீடர், கிங் ரீடர் போன்ற ஆங்கில வாசகங்களை நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடையிலிருந்து கொண்டு வந்து பாடஞ்சொல்லித் தருவார். இவை அவர் காலத்தில் பள்ளிகளில் பாடப் புத்தகங்களாயிருந்தவை என்பார். இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. ஒரு மாதிரி புத்தியை ஆங்கிலத்தனமாய் வளர்த்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னையும் கவர்ந்தது. வண்ண ஓவியங்கள் நிறைந்த கிரேட் பிரிட்டனில் பதிப்பிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் கதைகள், நாடகங்கள், சர்வாண்டிஸ்ஸின் “டான்க்வையோட்டே” முதலியவற்றை வாங்கினேன். இந்த சமயம் அமெரிக்க பதிப்பில் சுருக்கப்படாத அசல் மோபிடிக் கிடைத்தது. கடலும் திமிங்கல வேட்டையும் பாய் மரக் கப்பலும் என்னைக் கவர்ந்தன.
எழுத்தாளனாய் வளர்ந்த காலத்தில் தீபம் இதழில் வெளியான எனது பல சிறுகதைகளில் “பேர் கொண்டான்” ஒன்று. இது நடேச ஆச்சாரியையும், என் அப்பாவையும் அவர்கள் உறவையும், பழம் புத்தகக் கடையையும் வைத்து எழுதியது. இதில் நானம் ஒரு பாத்திரம். விசேஷ நாட்கள் பண்டிகையின்போது வீட்டில் செய்யும் தின்பண்டங்கள், பாயசம் ஆகியவற்றை எடுத்துப்போய் அப்பா நடேசாச்சாரிக்கும் அவர் பையனுக்கும் தருவார். பிறகு விலைக்கு வாங்காமல் அங்கிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டுக் கொண்டு போய் வைப்பார். தான் ரசித்த வரிகளை, இடங்களை அப்பா பேனாவால் அடிக்கோடிட்டு வைப்பார். ஆச்சாரி தமிழைக்கூட எழுத்து கூட்டித்தான் படிப்பார்.
“இப்படி எம் புஸ்தகத்தில படிச்சிட்டு கோடு கோடா போட்டு வைக்கிறியே, அப்படி என்ன அற்பும் அதிலயிருக்கு?” என்று அப்பாவிடம் கேட்டபோது, அப்பா அதை விளக்கிவிட்டு படித்துக் காட்டுவார். இருவரும் சில நாட்களில் அருகிலிருந்த வில்வாத்ரி பவனில் காபி சாப்பிடுவார்கள்.
அப்பா இறந்தபோது நடேச அச்சாரி தன் பையனோடு வீட்டுக்கு வந்திருந்து அப்பாவின் உடலுக்கு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார். பல ஆண்டுகள் போய், சென்னையிலிருந்து சேலம் சென்ற சமயம் நரைத்த முடியுடன் கண்ணாடியணிந்து கண்மூடி தேரடியில் அமர்ந்திருந்த நடேசாச்சாரியைப் பார்த்தேன். கடையில் மலிவான தமிழ் செக்ஸ் புத்தகங்கள், மாத நாவல்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமன்கள் ஆகியவை நிறைந்திருந்தன. சிறு மர அலமாரி ஒன்றில் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கில நூல்கள் கொஞ்சம் இருந்தன. எடுக்கும்போதே பிஸ்கெட் உடைவதுபோல் அவற்றி தடித்த தாள்கள் உடைந்தன. அவற்றின் பல பக்கங்களில் பல பத்திகள், வரிகள் பேனாவால் அடிக்கோடிடப் பட்டிருந்தன. என் கண்கள் பனித்தன.
“அதையெல்லாம் எடுக்காதீங்க வைங்க,” என்று அதட்டலாகச் சொன்னார் அவர்.
“இதெல்லாம் வேணும். என்ன விலை?”
“அதெல்லாம் விற்கிறதுக்கு இல்லே. வச்சிடுங்க.”
“ஏன்?”
“இல்லேன்னா போக வேண்டியதுதானே?”
நான் யார் என்பதை சொன்னபோது ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு,”ஒங்கப்பாவும் நானும் பழகினத்துக்க அது சாட்சி. அதை எடுத்து அப்பப்ப பார்த்துக்கிட்டிருப்பேன். அவரு இருக்கிறமாதிரியே இருக்கு. அவரை மறுபடியும் எங்கிட்டேயிருந்து பிரிச்சிடாதே தம்பி” என்றார் நடேசாச்சாரி.