கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்

தன்னைத் தானே

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகைத்தவுடன் என்றேன்.
சரி நீ எழுதுவதைப்
படிப்பவர் இப்போது
புன்னகைக்கிறார்
நீ நிறுத்துவாயா என்றது.
நானும் புன்னகைத்துக் கொண்டே
சரி என்றுவிட்டேன்.

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….6

இந்தத் தொடரில் நான் பிரமிளைப் பற்றி எழுதுகிறேனா விசிறி சாமியார் பற்றி எழுதுகிறேனா அல்லது என்னைப் பற்றி எழுதுகிறேனா?
விசிறி சாமியாரைப்போல் அட்டகாசமான சாமியாரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு முதலில் திகைப்பாக இருந்தது சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து. பின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் மாலைகளைப் பார்த்து திகைப்பாக இருந்தது. மாலைகள் முழுவதும் தூசிகள் நிரம்பி வழிந்தன. அவர் கட்டளை யார் யார் எங்கே உட்கார வேண்டும். நான் போய் முன்னால் உட்கார முடியாது. சாமியார் கட்டளை இடுகிறார் பிரமிள்தான் முதலில் உட்கார வேண்டுமென்று. அடுத்தது லயம் சுப்பிரமணியன். மூன்றாவதுதான் நான். அந்தப் பகுதியிலிருந்து நான்தான் முதல். ஆனால் பிரமிள்தான் அவர் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தார். அடிக்கடி முதுகில் ஷொட்டுகளை வாங்கிக்கொண்டு.
ஏன் சாமியார் இதெல்லாம் செய்கிறார் என்று எனக்குத் தோன்றாமலில்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு மாதிரி தோன்றியது. சாமியார் ஒரே நிமிஷத்தில் என் மூடை மாற்றுகிற காரியத்தைச் செய்தார். அவர் கையில் வைத்திருந்த Passingshow சிகரெட் தீர்ந்து விட்டது. பிரமிள் சிகரெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார். சாமியார் சரி என்றார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து சிகரெட் வாங்க பைசா கொடுங்கள் என்றார். பிரமிளிடம் பைசா இல்லை. அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போகும் செலவை நான் ஏற்றக்கொண்டிருந்தேன்.
நானும் உற்சாகத்துடன் சிகரெட் வாங்க சாமியாரிடம் பணத்தை நீட்டினேன். ஆனால் சாமியாரோ என்னிடமிருந்து சிகரெட் வாங்க மறுத்துவிட்டார். இன்னொன்றும் சொன்னார். சிகரெட் வாங்கும் பணத்தை பிரமிளிடம் கொடுக்கச் சொன்னார். நானும் சாமியார் சொன்னபடி பிரமிளிடம் கொடுத்தேன். பிரமிள்தான் என்னிடம் வாங்கிய பணத்தை சிகரெட் வாங்க சாமியாரிடம் கொடுத்தார்.

அந்த நிகழ்ச்சி நடந்தபிறகு நான் சாதாரண நிலையில் இல்லை. ஏன் சாமியார் என்னிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தார் என்ற கேள்வி என்னை குடை குடையென்று குடைந்துகொண்டிருந்தது. என் முகம் வாடிவிட்டது. நான் எப்போதும் போல் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் நண்பர் எஸ் சண்முகத்திடம் இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவர் சாமியாரும் சிபிஐக்காரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம் மூளையை அவர்கள் முன்னதாக நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்கள். முளைக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்துவது அவர்கள் வழக்கம். உங்கள் இயல்புநிலையை சீர்குலைக்கும் உத்தியாகக் கூட இருக்கும் என்று கூறியதாக ஞாபகம்.
சாமியாருக்கு உதவி செய்யும் பையன் ஒருவன் அவருக்கு சிகரெட் வாங்கி வந்தான். பிரமிள் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இன்னொன்று சொல்லியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி ஒருவரைத் தொட்டால் ஒன்றுமில்லை. ஆனால் நாம் கிருஷ்ணமூர்த்தியைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால் நமக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு விசிறி சாமியார் மீதுள்ள என் மரியாதை கொஞ்சங்கூட குறையவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு சாமியார் எல்லோருக்கும் கொய்யாப்பழத்தைப் பிண்டு கொடுத்தார். முதலில் எனக்குத்தான் கொடுத்தார். எனக்கு கொய்யாப்பழம் என்றால் ரொம்பவும் உயிர். நான் விரும்பி சாப்பிடும் பழங்களில் இதுவும் ஒன்று. எப்படி சாமியாருக்கு எனக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன்.
(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….5

பிரமிள் எண் கணிதம் என்று சொல்வதை விசிறி சாமியார் வேறுவிதமாக சொல்கிறார் என்று தோன்றியது.ஆனால் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது விசிறி சாமியார் எங்கள் மூவருக்கும் பால் கொடுத்தார். ஒரு தம்ளரில்தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.. நடுவே நடுவே Passingshow சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். விசிறி சாமியார் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை பிரமளிடம் கொடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்கும்படி கூறினார். பிரமிள் பயப்பக்தியுடன் எடுத்துப் படித்தார். திடீரென்று பிரமிள் முதுகில் ஒரு ஷொட்டு. பிறகு அவருடைய கையை வெகுநேரம் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கோ இதெல்லாம் ஆச்சிரியமாக இருந்தது. நடுவில் அமர்ந்திருந்த லயம் சுப்பிரமணியம் எந்தவித சலனத்தையும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானோ அவர்கள் பேசுவதைக் கேட்டு பரவசம் அடைந்து விட்டேன். ”பேசுவது ரொம்ப interesting ஆக இருக்கிறது,” என்று வேறு சொன்னேன்.
இப்போது ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இருவரும் பேசினார்கள். அந்தக் காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டுப் போனார்கள். நாராணோ ஜெயராமன் (வேலி மீறிய கிளைகள்) கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார். யார் எது எழுதினாலும் ஜே கிருஷ்ணமூர்த்தியை மீறி எழுதிவிட முடியாது என்று என்னிடம் கூறுவார். பிரமிள் கூட ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டு விட்டார் என்று எனக்குத் தோன்றும்.
விசிறி சாமியாரும், பிரமிளும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். முதலில் விசிறி சாமியார், ”இந்தப் பிச்சைக்காரன் ஒரு முறை, அப்பாய்ண்ட்மென்ட் எதுவும் இல்லாமல் வசந்த் விஹாரில் தங்கியிருந்த ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன்…அங்குள்ளவர்களிடம் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். முன்னதாக அப்பாண்ட்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று பார்க்க விடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது ஜே கிருஷ்ணமூர்த்தி மாடிப்படியிலிருந்து இறங்கிநடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஒரு முறை பார்த்தார். பின் என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்,” என்று கூறினார் விசிறி சாமியார். உடனே பிரமிள், ”நானும் ஒருமுறை என் வாழ்க்கையில் தாங்க முடியாத பிரச்சினையாக இருந்தபோது, ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன். என்னிடம் வாழ்க்கையைப் பற்றி கேட்க ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருந்தேன். அவரை தனியாக சந்திக்க வேண்டுமென்று அனுமதி கேட்டேன்… அனுமதி தந்தார்கள். உள்ளே நுழைந்து கிருஷ்ணமூர்த்தி முன் அமர்ந்தேன். ஒருமுறை அவர் என்னை உற்றுப் பார்த்தார்…என்னமோ தெரியவில்லை…நான் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை…என் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிட்ட மாதிரி தோன்றியது. நான் அவரிடம் எதுவும் பேசவில்லை,” என்றார்.என் நண்பன் ஒருவன் கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்டுவிட்டு வரும்போது எக்ஸ்பிரஸ் காப்பி குடித்த மாதிரி இருக்கும் என்பான். பின் அதன் effect போய்விடும் என்பான். பிரமிள் வேடிக்கை. ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் மாலை மயிலாப்பூரிலுள்ள ஷீரிடி சாய்பாபா கோயிலுக்குப் போவார். அதேபோல் சனிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீடியோ பேச்சைக் கேட்க மாலை வந்துவிடுவார். இதை ஒரு கடமைபோல் செய்து கொண்டிருந்தார்.
(இன்னும் வரும்)

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.
நவீன விருட்சம் 84வது இதழ் வெளிவந்து விட்டது. 21 ஆண்டுகள் முயற்சி. 160 பக்கம் கொண்ட இந்த இதழ், புதுக்கவிதை இயக்கம் தோன்றி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. க.நா.சு., ந பிச்சமூர்த்தி, சி சு செல்லப்பாவிற்கு நன்றி கூறும் விதமாக இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் முடியும் என்று நினைத்த இந்த இதழ் அவ்வளவு எளிதில் முடியவில்லை. ஜனவரி 2009க்குப் பிறகு ஜூலை மாதம்தான் இதழ் வருகிறது. இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் சற்றுகூட அவகாசம் தராத என்னுடைய கடுமையான பணி, மூட் எல்லாம் சேர்ந்ததுதான். எல்லாவற்றையும் மீறி இதழைக் கொண்டுவர வேண்டுமென்ற பிடிவாதத்தால்தான் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழுக்காக நான் அதிகமாகவே செலவு செய்துள்ளேன். தனிப்பட்ட ஒரு இதழுக்காக நான் இந்த அளவு அதிகமாக செலவு செய்ததில்லை. நவீன விருட்சம் முதல் இதழ் 16 பக்கங்களுடன் தொடங்கியது. இப்போது 160 பக்கம் வரை வந்துவிட்டது. 21 ஆண்டுகளுக்கு முன் இதழ் வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஏகப்பட்டவர்கள் படிக்கிறார்கள், ஏகப்பட்டவர்கள் எழுதுகிறார்கள்.
இந்த இதழ் தயாரிக்க உதவிய படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். வழக்கம்போல் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் இந்த இதழுக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்கி உள்ளார். நாகார்ஜூனன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆங்கிலத்திலிருந்தும், பிரெஞ்சு மொழியிலிருந்தும் நேரிடையாக மொழிப்பெயர்த்துள்ள கவிதைகளில் சில்வியா பிளாத் கவிதைகள் சிலவற்றை அளித்துள்ளார். என்னுடைய பல ஆண்டு கால நண்பரான ஞானக்கூத்தன் இன்னொரு என்னுடைய நண்பரான ஆனந்த் கவிதையைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை அளித்துள்ளார். அதேபோல் அம்சன்குமார், விட்டல்ராவ், வைதீஸ்வரன், ஐராவதம், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன், கொம்பன், க்ருஷாங்கினி முதலிய பல இலக்கிய நண்பர்கள் இதழுக்கு மகுடம் சேர்த்துள்ளார்கள்.
நவீனவிருட்சம் நெட்டில் தெரியவந்தபோது, பலர் நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை அனுப்பி இதழை சிறப்பிக்க உதவி செய்துள்ளார்கள். அவர்களுடைய படைப்புகள் உடனுக்குடன் நவீனவிருட்ம் blogspot ல் வருவதோடல்லாமல், நவீன விருட்சம் இதழிலும் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்தக் கொள்வதோடு அடுத்த இதழ் இன்னும் சீக்கிரமாக கொண்டுவர எல்லாவித முயற்சியையும் எடுத்துக்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். யார் யார் படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதற்கு ஒரு லிஸ்ட் கீழ்கண்டவாறு தருகிறேன். எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப விரும்புகிறேன். தயவுசெய்து முகவரிகளை அனுப்பி உதவுங்கள்.
1. அனுஜன்யா – பிக்பாக்கெட் – சிறுகதை 2 கார்க்கோ – கவிதை – அன்னம், கிளி, மயில், மேகம், ஆன்ந்த் – பக்கம் ௭3. செ செந்தில்வேல் – நான்கு கவிதைகள் – பக்கம் 84. ரா ஸ்ரீனிவாஸன் கவிதை – சொல்லும் சொல்லமைப்பும் – பக்கம் ௧௧5. இரா வசந்தகுமார் – மாமா எங்கே? – சிறுகதை – பக்கம் ௧௨6. யோசிப்பவர் – உயிர் – சிறுகதை – பக்கம் ௧௬7. அம்ஷன்குமார் – வேர்கள் – கட்டுரை – பக்கம் ௨௧8. ஜான்சிராணி – விஸ்வரூபம் – கவிதை – பக்கம் ௨௫9. இரங்கல்கள் – அஞ்சலி – அசோகமித்திரன் – பக்கம் ௨௬10. க்ருஷாங்கினி – அஞ்சலி – கிருத்திகாவும், சுகந்தியும் – பக்கம் ௩௧11. அழகியசிங்கர் – அஞ்சலி – எதிர்பாராத மரணம் – பக்கம் ௩௪12. ஸில்வியா ப்ளாத் கவிதைகள் – தமிழில் நாகார்ஜூனன் – பக்கம் ௩௮13. அழகியசிங்கர் – புரியாத பிரச்சினை – சிறுகதை – பக்கம் ௫014. செல்வராஜ் ஜெகதீசன் – 6 கவிதைகள் – பக்கம் ௫௬15. வடகரை வேலன் கவிதை – 9 மணி அலுவலகத்திற்கு – பக்கம் ௬016. மதன் – என் சட்டைப்பையினுள் – கவிதை – பக்கம் ௬௨17. ஞானக்கூத்தன் – மதிமை சாலா மருட்கை – கட்டுரை – பக்கம் ௬௩18. இரா பூபாலன் – கவிதை – அக்காவின் அன்பளிப்பு – பக்கம் ௭௬19. என் விநாயக முருகன் – கவிதை – இலக்கணப்பிழை – பக்கம் 7௬௨20. பாவண்ணன் – இரண்டு கவிதைகள் – பக்கம் ௭௭21. எம் ரிஷான் ஷெரீப் – நிழற்படங்கள் – சிறுகதை – பக்கம் ௭௯22. அனுஜன்யா கவிதைகள் – பக்கம் ௮௫23. வைதீஸ்வரன் – இரு கவிதைகள் – பக்கம் ௮௮24. நிலா ரசீகன் – மூன்று கவிதை – பக்கம் ௯025. ஒரு தேசமே சேவல் பண்ணையாய் – சிறு – சோ சுப்புராஜ் – பக்கம் ௯௨26. த அரவிந்தன் – கவிதை – பூனையின் உலக இலக்கியம் – பக்கம் ௧0௫27. எம் ரிஷான் ஷெரீப் – கவிதை – சாகசக்காரியின் வெளி – பக்கம் ௧08. பிரேம்குமார் – கவிதை – கோவில் யானை – பக்கம் ௧0௭29. கே ரவிசங்கர் – கவிதை – அபார்ட்மெண்ட் பித்ருக்கள் – பக்கம் ௧0௮30. மாலினி புவனேஷ் – நான்கு கவிதைகள் – பக்கம் ௧0௯31. விட்டல்ராவ் – சிறுகதை – ஓர் ஓவியனும் ஒரு ரசிகனும் – பக்கம் ௧௧௧32, அழகியசிங்கர் – கட்டுரை – சில குறிப்புகள் – பக்கம் ௧௨௧33. விக்கிரமாதித்யன் – கவிதை – என் இனிய இளம்கவி நண்பரே – பக்கம் ௧௩௪34. ப்ரியன் – கவிதை – பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை – பக்கம் ௧௩35. கோகுல கண்ணன் – சிறுகதை – ஒரே நாளில் – பக்கம் ௧௩௯36. கொம்பன் – சந்தி – கட்டுரை – பக்கம் ௧௪௯37. புத்தக விமர்சனங்கள் – ஐராவதம் – பக்கம் ௧௫௨௩அழியா கைக்கிளி – புத்தக விமர்சனம் – மா அரங்கநாதன் – பக்கம் ௧௫௬39. உரையாடல் – அழகியசிங்கர், ஜெகன், மோகினி – பக்கம் 159

ஒலி மிகைத்த மழை

மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன

தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை

இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா

மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன

நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்

உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல

இரண்டு கவிதைகள்

மொன்னை மனசு
முற்றத்தில்மழைநீர் கொஞ்சம்மிச்சமிருந்தது
கத்திக் கப்பல்செய்து தாவென்றதுகுழந்தை
கத்தி எதற்கென்றேன்
முட்டும் மீனைவெட்டுவதற்கு என்றதுவிழிகள் விரிய்முனை கொஞ்சம்மழுங்கலாகச்செய்து கொடுத்து விட்டேன்.

இறகின் பிறகும்..

பாலொத்த வெள்ளையும்பரிச்சயமானதொரு மென்மையும்அந்த இறகில் இருந்தது
இறந்திருக்க முடியாதென்றபெருநம்பிக்கையோடு தேடியலைந்தேன்அப்பறவையை
எதிர்ப்பட்ட மின்கம்பங்களில்எருமையின் முதுகிலெனஎங்கேயுமில்லை
அம்மாதிரியொரு பறவைகவலை பெருக்கியும்கையிலிருந்த இறகு கருக்கியும்கவிழ்ந்து கொண்டிருந்த இரவில்வெண்பறவை தென்படாவானம் வழிபறந்து மறைந்ததொரு கருங்காக்கைஎஞ்சியிருந்த அவ்விறகின்நிறமொத்த எச்சமிட்டு

ஒரு வேண்டுகோள்

ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுறுக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்…
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.

சொல்லும் சொல்லமைப்பும்

ஒன்று

சொல்லக் கேட்டு
சொல்லச் சொல்லி
பிறந்தது ஓர் சொல்.

சொல்லச் சொல்ல
சொல் பெருகியது

பின்னிப் பின்னி
உருவானது ஓர் சொல் வலை

சொல் தன்னைத் தானே
சொல்லத் துவங்கியது

தான் வகித்த வலைக்குள்
தானே சிக்கியது சொல்.

இரண்டு

மலரென்ன ஓர் சொல்
கிளையென்ற ஓர் சொல்லிலிருந்து
காற்றென்ற சொல்லைத் தழுவி
மண்ணென்ற சொல் மீது உதிர்கிறது.
மண்ணில் புதைந்த விதையென்ற ஓர் சொல்
மண்ணைக் கீறி மரமென்ற சொல்லாக முளைத்து
வான் என்ற சொல்லைத்
தீண்டி நிற்கிறது….

இலக்கணப்பிழை

உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்