கதிரொளி

மழையில் நனைந்த பறவை
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.

குட்டி குட்டி அழகு

குட்டி குட்டி பற்களை 
பிரசில் தேய்த்துவிட்டு 
சாக்கடையில் வந்து 
நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது
சாக்கடையில் வழிந்தோடுகிறது 
அழகு…
குட்டித் தலையை 
அப்பாவின் கைக்குள் 
நுழைத்து தூங்கும்பொழுது 
காற்றில் பரவுகிறது 
அழகின் மணம்…
 குறு குறு பார்வையில் 
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 
குட்டிச் சிரிப்பொன்று வந்து 
வெட்கம் கொள்கிறது…
குட்டிக் கண்களில் 
மாட்டிய கறுப்புக் கண்ணாடி 
எதிர்வரும் வாகனங்களை 
மமதைக் கொள்ளச் செய்கிறது…
பாசை புரியா பாடலில் 
செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது…
அளப்பரிய அர்த்தத்தை 
குட்டிக் கணத்தில் 
கொட்டிச் செல்வது 
அழகு… ம்ம் அழகு…
                             

அன்புடையீர்,

வணக்கம்.
Navinavirutcham blogspot.com படைப்புகள் சில வேறு வலைத்தளங்களிலும் பிரசுரமாகின்றன. தயவுசெய்து, ஒரே படைப்பை எல்லா வலைத்தளங்களிலும் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் படைப்பு நவீன விருட்சம் இதழிலிலும் வெளி வர வாய்ப்பு உள்ளது. 
கவிதை அனுப்புவோர், ஒரு கவிதை மட்டும் ஒரே சமயத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா……….52

வாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30.  ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது.  முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.  அதன்பின்தான் உள்ளே விட்டார்கள்.    எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அவசரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம்.  வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.  1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள்.  ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள்.  ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம்.  அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும்.  இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன.  அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள  ரயிலில் பயணம் செல்லும்போது, ரிசர்வ் செய்தாலும், என் ராசி கழிவறைக்குப் பக்கத்தில்தான் இடம் கிடைக்கும்.  இரவு முழுவதும் நாற்றத்துடன்தான் பயணம் செய்ய வேண்டி வரும்.  அங்கு ஒவ்வொரு பெட்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  உட்காரும் இடம் மெத்தையில் உட்காரும்படி பிரமாதமாக இருந்தது. 
பொதுவாக இங்கே பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகப் படுகிறது. சிலர் புகை பிடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திகொண்டும் ரயிலில் வந்து கொண்டிருந்தார்கள்.  உடை அணிவதிலும் அவர்கள் அலட்சியமாகவே இருந்தார்கள்.  அல்லது அதுதான் அவர்கள் இயல்பாக இருக்கிறது.  அரை டிராயரும், மேலே அணியும் உடையும் அணிந்திருந்தார்கள்.  எல்லோர் முன்னிலும் வெட்கப்படாமல் அவர்களுக்குப் பிடித்த ஆண்களுடன் உதட்டில் முத்தமளித்துக்கொண்டிருந்தார்கள்.  எனக்கு அவர்களைப் பார்க்கும்போது திகைப்பாகவே இருந்தது. முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் எப்படி அவர்கள் நாசூக்காகப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருந்தேன்.  
நாங்கள் இறங்கும்போது இரவு 11.30க்கு மேல் ஆகி விட்டது.  ஒரு டாக்ஸியைப் பிடித்து நியு ஜெர்சிக்கு அரவிந்த் அழைத்துப்போனான்.  டாக்ஸிக்கே 40 டாலர் மேல் ஆகிவிட்டது.  நியுயார்க்கில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்குவது என்பது அதிக விலை கொடுக்கும்படி இருக்கும்.  மேலும் 3 பேர்கள் தங்க அறை அவ்வளவு வசதிப்படாது என்று அவன் நினைத்திருந்தான்.  Comfort Inn என்ற இடத்திற்குச் சென்றோம்.  இரவு 1 மணி மேல் ஆகிவிட்டது நாங்கள் தூங்கும்போது.  எல்லாவற்றையும் ப்ளோரிடாவில் இருந்தபடி நெட் மூலம் பதிவு செய்திருந்தான். 
காலையில் அவசரம் அவசரமாக எழுந்து கொண்டோ ம்.  நியு ஜெர்சியிலிருந்து நியுயார்க் செல்ல ஒரு shuttle ஐ விடுதிக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.  அதில் அந்த விடுதியில் தங்கியிருந்த எங்களைப் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏறிக்கொண்டார்கள். நியுயார்கில் இறங்கியவுடன், NFTA-METRO Trolley Day Pass வாங்கிக்கொண்டு நியுயார்க்கைச் சுற்றிக் கொண்டிருந்தோம்.  Empire State Building என்ற இடத்திற்குப் போனோம்.  மொத்தம் 102 மாடி கொண்ட கட்டிடம். அதில் 86வது மாடியிலிருந்து நியுயார்க்கையும் அதனைச் சுற்றி உள்ள இடத்தையும் பார்த்தோம்.  நியுயார்க்கை ஒட்டி உள்ள மற்ற மாவட்டங்களையும் பார்த்தோம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்ட நியுயார்க் சின்ன நகரமாகத் தோன்றியது.

அதன்பின் நாங்கள் Liberty Islandம் Ellis Islandம் சென்றோம். Liberty Island ஐப் பார்க்க வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.  பல நாட்டவர்கள் எங்களுடன் வரிசையில் இருந்தார்கள்.  பெரும்பாலும் சீனர்கள் அதிக அளவில் இருந்தார்கள்.  இந்தியாவிலிருந்து தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக வந்திருந்தார்கள்.  லிபர்ட்டி சிலையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.   செப்பால் புனையப்பட்ட சிலை கம்பீரமாக வீற்றிருந்தது.  என்னால் வரலாறை எழுத முடியவில்லை.  வெளிநாட்டவர்களால் உருவாகப்பட்ட சிலை அது.  அங்கங்கே வரலாறை எழுதி வைத்திருந்தார்கள்.  நான் சாதாரண பார்வையாளன்.  ஒரு பார்வையாளன் கோணத்தில் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.  அங்கிருந்து Ellis Island சென்றோம்.  அமெரிக்க நாட்டிற்கு வருபவர்கள் Ellis Island வழியாகத்தான் உள்ளே வரமுடியும்.  அங்கு அதற்காகவே ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது.  அங்குள்ள அதிகாரிகள் சிலரை உள்ளே வரவிடாமல் தடுத்து விடுவார்கள்.  அன்றைய பொழுது போய்விட்டது.  திரும்பவும் நாங்கள் விடுதிக்கு வந்தோம்.

தேடிப்பற

 
 
 
 
 
தேடித்தேடி
அலைந்த என்னை
குமபல்சேர்ந்து
கேள்விகேட்டது.
 
தேடும்பொருளின்
பெயர்தான் என்ன
 
என்றே என்னிடம்
கேட்பவர்களிடத்தில்
நானும்,
 
தேடும்பொருளின்
 பெயரை அறியேன்
 
என்றதும்
பார்வையாலே
என்னை பரிகசித்துப்
பைத்தியம் என்று
பட்டமும் சூட்டி
பரபரவென்று
 கலைந்ததுகும்பல்!
 
பெயருள்ளபொருளையே
தேடும் உலகில்
பெயரற்ற பொருளைத்
தேடுபவர்களுக்கு
கிடைக்கும் பெயர்தான்
பைத்தியம்போலும்!

 

 

மாற்றம்

நிலைக்கண்ணாடி முன்பு
தான் தொலைத்த
இளமையைத் தேடுகிறார்கள்
தன் பிம்பம் தான் இது
என்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
வயதைக் காட்டிக் கொடுக்கும்
நரைத்த முடியை
டை அடித்து மறைக்கிறார்கள்
பருவத்தில் மினுமினுத்த மேனியில்
சுருக்கம் விழுவதை பார்த்து
பதறுகிறார்கள்
இன்று எந்தக் கண்களுமே
ஆச்சர்யத்துடன் தன் எழிலை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை
என்பதை எண்ணும் போது
நிலைக்கண்ணாடி முன்பு நின்று
கேவி அழுகிறார்கள்.

நீரும் நிலாவும்

பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.

நிலா இருந்தது.

கொஞ்சம்
கரைந்துமிருந்தது.

மீண்டும் மூடி

வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.

இன்னும் கரைந்திருந்தது.  

நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக. 

என்ற போதிலும்

        
     
மாட்டிக் கொள்ள வேண்டிய முகம்

ஏற்றுக் கொள்ள வேண்டிய பாத்திரங்கள்

உள்ளார்ந்த ஒரு உரையாடலின் தீவிரம்

எதிராளியின்  முக பாவ மொழி
முடியவும் துவங்கும் வேலை
அலுத்துக் களைக்கும் வேளை
காத்திருக்கும் கனங்கள்

எல்லாம் மீறி
ஒரு நாளின் எந்த வேளையிலும்
வந்து விடுகிறது
வளையும் வானவில்லோடு
படிகளில் குதிக்கிற ஒரு மழை
பிரத்யேகக் காரணங்களோடு

பிரத்யேக ஈரத்தோடு.
                         

எதையாவது சொல்லட்டுமா……….51

ராம்மோஹன் என்ற பெயர் கொண்ட ஸ்டெல்லாபுரூஸின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி.  அவர் இப்போது இருந்திருந்தால், எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவரைப் பற்றிய அந்த எண்ணம்தான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.   மரணம் என்பது இன்னொரு நிலை.  அந்த நிலையை தானாகவே தேடிக் கொண்டுவிட்டார் ஸ்டெல்லாபுரூஸ். மனைவியை இழந்தத் துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  உண்மையில் மனைவியை இழந்துவிடுவோம் என்று உணர்ந்து தன்னை தயார் செய்து கொண்டிருந்தார்.  நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் மனைவி இறந்தவுடன், அவர் முன்னால் அவரே வைத்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.  தன்னைப் பற்றிய மிகைப் படுத்திய பிம்பம்தான் அவரைத் தற்கொலையில் தூண்டி விட்டது.
ஸ்டெல்லாபுரூஸ் வீட்டிற்குப் போகும்போது, அவர், அவருடைய மனைவி ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா என்று மூவரும் என்னை வரவேற்பார்கள்.  கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தில் அவர் வசித்து வந்தார்கள்.  ராம்மோஹன் புத்தகங்களை எல்லாம் ஒரு கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார்.  ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் கையெழுத்து இல்லாமல் இருக்காது.  புத்தகம் படிப்பது, இசை கேட்பது இதுதான் அவர் வாழ்க்கை முறை.  மூவரும் கலகலவென்று பேசுவார்கள்.  ஹேமா உடனே போய் காப்பிப் போட்டு கொண்டு வருவார்.  விருதுநகரிலிருந்து கொண்டு வந்த முறுக்கு எல்லாம் கொடுப்பார்கள்.  வீட்டை விட்டு பெரும்பாலும் அவர்கள் எங்கும் போக மாட்டார்கள்.  ராம் மோஹனுக்கு இரவு ஸநேரத்தில் கண் பார்வை சற்று சரியாக இல்லை என்பதால், யார் துணையும் இல்லாமல் நகர மாட்டார்கள். 
ஆனந்தவிகடன் பத்திரிகை ஸ்டெல்லாபுரூஸுற்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தது.  அவருடைய முதல் நாவல் பிரசுரமானபோது, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கொஞ்சம் சாமர்த்தியம் இருந்திருந்தால், அவர் இன்னொரு பாலகுமாரனாகவோ, சுஜாதாகவோ மாறி இருக்கக் கூடியவர். அவர் மனதுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பவர். எழுத்து என்பது ஒரு டிரிக். சாமர்த்தியம். அதைப் பயன்படுத்திக்கொண்டு புகழ் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. அவர் தொடர் நாவல்களைப் படித்து பலர் அவரிடம் அவர்களுடைய துன்பங்களை எழுதிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  நேரே அவரைச் சந்திக்க வருவார்கள்.  அப்படி ஒரு சந்திப்பின்போது, ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.  விருதுநகரில் உள்ள அவருடைய குடும்பத்தை விட்டு தனியாக வந்தவர், திருமணமே செய்துகொள்ளாமல் பல ஆண்டுகள் இருந்தவர் ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டார்.
ராம்மோஹன் காளி-தாஸ் என்ற  பெயரில் கவிதைகள் எழுதுபவர்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எழுத்தாள நண்பர்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏன் சிலசமயம் காந்தி சிலை பக்கத்தில்கூட சந்திப்போம்.  ஒரு முறை ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  ”இவர்தான் என் மனைவி,” என்றார்.  எங்களுக்கு திகைப்பாக இருந்தது.  பின் ராம்மோஹன் மனைவிதான் எல்லாம் என்று இருந்துவிட்டார். இவர் இப்படி என்றால், என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் பிரமிள் குடும்பமே இல்லாமல் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்தார்.  
ராம் மோஹன் அவர் குடும்பம் மூலம் கிடைத்தத் தொகையில் வரும் வட்டியில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.  யாரிடமும் அவர் கடன் கேட்க மாட்டார்.  அவர் தேவைகள் மிகக் குறைவு.  ஆனாலும், கூடிவரும் விலைவாசியில், அவர் எப்படி சமாளித்தார் என்பது தெரியவில்லை. ஹேமாவின் மனைவி பிரேமா இருதய நோயாளி.  ஹேமாவிற்கு முன்னால் அவர் இறந்தது ஹேமாவிற்குப் பெரிய அதிச்சி. அதேபோல், ஹேமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது, ராம் மோஹன் தடுமாறி விட்டார்.  சாதாரண நிலையில் உள்ள குடும்பத்தில் நிலை தடுமாற்றத்தைக் கொடுக்கக்கூடிய வியாதி இது.  மனைவியும் இறந்துவிட்டார்.  ராம்மோஹன் அதிலிருந்து தப்ப முடியாமல், மாட்டிக்கொண்டு விட்டார்.
ஆன்மிக பலம் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்து விட முடியும் என்று தவறாக நினைத்துவிட்டார்.  அதுவே அவருடைய தற்கொலைக்கு வித்திட்டது.  மனைவி இறந்தவுடன் அவர் குடும்பத்தில் உள்ள பொருட்களை இலவசமாக அவரைச் சுற்றி உள்ள நண்பர்களுக்குக்கொடுக்க ஆரம்பித்தார்.  இதெல்லாம் அவருடைய குழப்பம் ஏற்படும் தருணம்.  மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போடும்படி ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டார்.  ஹேமாவின் சகோதரர் அடுக்ககத்தில்தான் அவர் இருந்ததால், அவர் அந்த இடத்தை விட்டுப் போகும்படி நெருக்கடி ஏற்பட்டது.  இதெல்லாம் சேர்ந்து ராம்மோஹனின் தற்கொலைக்கு வித்திட்டது. 
ஆரம்பத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதை எழுதினாலும், தொடர்ந்து அவரால் அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.  சில சினிமாப் படங்களிலும் அவருக்கு ஆதரவு கிட்டினாலும், அதிலும் அவரால் முழு நேர எழுத்தளராகப் பணிபுரிய முடியவில்லை.  எப்போதோ அவர் குடும்பத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டதால், அவரால் அங்கு போயும் அவரால் ஒன்ற முடியவில்லை.  தற்கொலைதான் ஒரே வழி என்ற அவர் நிலையை ஜீரணிக்க முடியவில்லை.

”காலம்”

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள். எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்று
அது – முளைக்கவே இல்லை. ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறது
யாரோ காலமான செய்தி
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்….

தேவதையும் கோடரியும்


 

மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்

தேவதையிடம் 
தொலைத்த கோடரி தவிர

வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான்
அவன்

எந்தக்கோடரியும்

மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.