அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

வித்யாசாகர்






வள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த
அவளுடைய ஆசைகளாகவே
அவளை நான் பார்க்கிறேன்;

அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள்
வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள்
வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த
அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான
எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில்
எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில்
எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும்
அம்மா; அம்மா மட்டுமே..

இன்று எனக்கு வலித்தாலும்
இன்று நான் அழுதாலும்
என்னோடு சேர்ந்து அழுவது
அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்..

அவள் கொடுத்த சோற்றின்
அவள் கொடுத்தப் பாலின்
அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு..

அம்மா எங்கே அம்மா எங்கே
என்று ஏங்குகிறது மனசு..

அம்மா இல்லையே என்று கசங்கி
அழுகிறது மனசு..

அம்மா இல்லாத நானும்
இருந்தும் இல்லாதவன் தான்..

உண்மையில் எனக்கு
அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள்,
அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது,
தீராத நாட்களோடு வதைபடுகிறேன்
அம்மாவைத் தேடும் கண்கள் சிவக்கச் சிவக்க அழுகிறேன்

அம்மா நேற்று கனவில் வந்தாள்
அழாதே என்றாள்
நானிருக்குமிடத்தில் அவளும் இருப்பாளாம்
தொட்டுப் பார் என்றாள்
அம்மாவைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடல் சிலிர்க்கிறது,
அவள் தனது வயிற்றுள் எனைத் தொட்டுப் பார்த்த
அதே தொடுதல்
அதே அம்மாவின் வாசம்
அதே ஈர்ப்பு உடலெங்கும் பரவி ‘நானிருக்கேண்டா தங்கம்’
என்றாள் அம்மா,
இரவின் கனத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு
அம்மா அம்மா என்று கதறுகிறேன்..

இரவுகள் இன்னும் நீண்டு நிற்கிறது
வாழ்க்கை இப்படித் தான் இருப்பதோடும்
இல்லாததோடும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது..

நான் விடிந்ததும் கண்விழிக்கிறேன்
எப்போதும் போல புறப்படுகிறேன்
மதிய உணவையும் எடுத்துக்கொண்டு ஓடி
பேருந்திலேற அதே ஜன்னளோர இருக்கைக் கிடைக்கிறது
அமர்ந்துக் கொண்டு வழியெங்கும் தேடுகிறேன்
கண்ணீர் வழிந்து காற்றோடு அலைகிறது
அம்மா நினைவினுள் இருந்துக் கொண்டேயிருக்கிறாள்..

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 6

    வட்டம் 1

    வாழ மனமில்லை
    சாக இடமில்லை

    வானில் மேகமில்லை
    ஆனால்
    வெயிலும் மடிக்கவில்லை

    கந்தைக் குடைத்துணி
    யெனக்
    கிடக்கும்
    தன்னினமொன்றைச்
    சுற்றிச்சுற்றி வருமிக்
    கறுப்பின்ஓலம்போல்

    செத்துக் கிடக்கும்
    சுசீலாவை
    வட்டமிட்டு
    வட்டமிட்டு
    வட்டமிட்டு…….

                        நகுலன்

எதையாவது சொல்லட்டுமா…..93

                                                                                                       


அழகியசிங்கர்   

இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் போல் ஒரு சோதனையான மாதத்தை நான் சந்தித்ததே இல்லை.  வங்கியிலிருந்து 33 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி பதவி மூப்பு அடைகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.  அதாவது பிப்பரவரி மாதம் நான் பதவி  மூப்பு அடையும் மாதம்.  அந்த மாதம்தான் எனக்குப் பிரச்சினையான மாதமாக மாறிவிட்டது.  கண் பொறை காரணமாக எனக்கு இரண்டு கண்களிலும் சரியான பார்வை இல்லை.  வண்டி ஓட்டிக்கொண்டு செல்லமுடியவில்லை. கணினிகளைப் பார்க்க முடியவில்லை.   கண் பார்வையைச் சரி செய்யலாமென்றால் சர்க்கரை நோயையும், உயர் அழுத்த நோயையும் சரி செய்தால் முடியும்.  அதை உடனே செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் அலுவலகம் போகலாமா வேண்டாமா என்ற நிலை.  ஆனால் அலுவலகத்திற்கு வரும்படி தொந்தரவு.  வேறு வழியில்லாமல் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன்.  நிம்மதியாக ஏன் பதவி மூப்பு அடைய முடியவில்லை என்று தோன்றி கொண்டிருந்தது.


    ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து எனக்கு இந்தப் பிரச்சினை.  அதனால் அலுவலகம் வராமல் இருந்தேன்.  பிப்பரவரி நாலாம் தேதிதான் திரும்பவும் வந்தேன்.  அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மிஸஸ் ஐராவதம் அவர்களிடமிருந்து எனக்கு போன்.  “பேசிக்கொண்டே இருந்தார்..அப்படியே விழுந்து விட்டார்….அவசரமாக ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்..வர முடியுமா?” என்று அவசரமான தொனியில் பேசினார்.  நானும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவசரமாக அவர் வீட்டிற்குச் சென்றேன்.  நான் அப்போது ஒன்றும் நினைக்கவில்லை.  ஏதோ மயக்கமாகி விழுந்திருப்பார்.  ஆஸ்பத்ரியில் சேர்க்கும்படியாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.  ஐராவதம் மனைவி முடியாதவர்.  கொஞ்ச மாதங்களாக கால் நடக்க முடியாமல் எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருப்பவர்.  அவருடன் பேசிக்கொண்டிருந்த ஐராவதம்தான் எதிர்பாராதவிதமாய் சாய்ந்து விட்டார். 

    நான் போனபோது ஐராவதம் பிணமாகத்தான் ஆஸ்பத்ரியிலிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார்.  ஆப்புலன்ஸ் வண்டியில் தூங்குவதுபோல் படுத்துக்கிடந்தார்.  அன்று நெற்றியில் பட்டையாய் விபூதி இட்டிருந்தார்.  நான் இப்படி ஒரு ஐராவதத்தைப் பார்ப்பேன் என்று சந்றும் எதிர்பார்க்கவில்லை.  பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்களில் ஐராவதம் ஒருவர்.  புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் விவாதித்துக்கொண்டிருப்போம்.  பின் அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுப்பேன்.  சரவணா பவன் ஓட்டலுக்குச் சென்று பொங்கல், காப்பி சாப்பிடுவோம்.  வண்டியில்தான் அழைத்துக் கொண்டு போவேன்.  அவரால் கொஞ்ச தூரம்கூட நடக்க முடியாது. 

    எனக்கு ஐராவதத்தைப் பார்க்கும்போது சம்பத் ஞாபகம் வரும்.  இரண்டு பேர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.  ஒரே குண்டு, ஒரே உயரம்.  இருவரும் நல்ல நண்பர்கள்.  பணம் பத்தும் செய்யும் என்ற கதையை இருவரும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள்.  ஐராவதம் சொல்வார் :  ‘நான் சொல்ல சொல்ல சம்பத் எழுதுவான்’ என்று.  சம்பத் ஐராவதம் விட சற்று திவீரமானவர்.  ஒருமுறை பரீக்ஷா நாடக விழாவில் சம்பத் சத்தம் போட்டு கத்தியதை நான் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.  ஐராவதம் அப்படி இல்லை. 

    ‘கெட்டவன் கேட்டது’ என்ற சிறுகதை ஒன்றை கவனம் என்ற சிற்றேட்டில் ஐராவதம் எழுதியிருந்தார்.  அதைப் படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  அவரும் மாம்பத்தில்தான் வசிக்கிறார் என்பதை அறிந்தேன்.  அப்படித்தான் என் தொடர்பு அவருடன் ஏற்பட்டது. 

    அவர் மனைவியால் மட்டுமல்ல என்னாலும் அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.  ‘நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  அதன் பின் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்’ என்று நான் அடிக்கடி அவரிடம் சொல்வது வழக்கம். அவர் இறந்த நான்காம் தேதி அன்று எனக்கு தூக்கமே வரவில்லை.  ஐராவதம் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. 

    ஐராவதம் புத்தகங்களைப் படித்துவிட்டு எழுதுவது வழக்கம்.  அவருடைய பொழுதுபோக்கே புத்தகம் படிப்பதுதான்.  அவர் கடைசியாக விஸ்வரூபம் என்கிற இரா முருகனின் மெகா நாவலைப் படித்தது.  அதைப் படித்தவுடன், ‘இரா முருகனைப் பார்க்க ஏற்பாடு செய்யா..’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.  பொதுவாக அவர் எழுதுவதை என்னிடம் கொடுப்பார்.  நான் அப்படியே என் பிளாகில் ஐராவதம் பக்கங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதுவதைப் போடுவேன்.  அவர் வேகத்திற்கு என்னால் ஈடுகட்ட முடியவில்லை.  ‘கொஞ்சம் அவசரப் படாதீர்கள்.  நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  நேரம் அதிகமாகக் கிடைக்கும்,..,போடுகிறேன்..’ என்று சொல்வேன். 

    ஒருமுறை இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு என் வண்டியின் பின்னால் உட்காரவைத்து ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு போனேன்.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஐராவதம் அவர்களால் எளிதில் வரமுடியாது.  யாராவது ஒருத்தர் துணை வேண்டும்.  அழைத்துக் கொண்டு போக ஒருவர் வேண்டும்.  என் துணையுடன்தான் பல இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.  அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்.  பல படைப்பாளிகளைப் பார்க்கவே விரும்ப மாட்டார்.  அதைப்போல் இலக்கியக் கூட்டமும் அவருக்குப் பிடிக்காது. 

    இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் ஐராவதம் அவர்களைப் பார்த்த நா. முத்துசாமி. “என்னய்யா…உம்மைப் பார்க்கிறதே அதிசயமாய் இருக்கிறது…இங்கெல்லாம் வந்திருக்கிற..”என்று விஜாரித்தார்.  ஐராவதம் அவர்களுக்கு எப்போதும் ஒருவித நகைச்சுவை உணர்வு உண்டு…உடனே என்னைக் காட்டி,”இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.

    ஒருமுறை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிரமிள் உயிருக்குப் போராடியபடி படுத்துக் கிடந்தார்.  நான் ஐராவதத்தை அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தேன்.  மருத்துவமனை மாடியில் பிரமிள் படுத்துக்கொண்டிருந்தார்.  ஐராவதத்தைப் பார்த்து, ‘பிரமிள் மேலே இருக்கிறார்…பார்க்க வருகிறீர்களா?’ என்று கேட்டேன்.  ஐராவதம் உடனே, ‘அவருக்கு நான் காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,’ என்றார்.  ஐராவதத்தின் இந்தப் பதில் எனக்கு திகைப்பாக இருந்தது.  யாருக்கு யார் காட்சிப் பொருள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  சில எழுத்தாளர்களை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், போய்ப் பார்க்கக் கூட விரும்ப மாட்டார்கள்.  ஐராவதமும் அப்படித்தான். 

    ஐராவதம் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  நான் கேட்பேன்.  ‘எதாவது குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடாதா?’ என்று.  அதைக் கேட்டவுடன், ‘நாயா பூனையா வளர்க்கிறதுக்கு,’என்றார் உடனே.  இப்படித்தான் எதாவது சொல்லிவிடுவார்.  சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்.  ஆனால் உண்மையில் அவருக்கு குழந்தைகள் மீது ஆசை.  அவர் வீட்டிற்கு மேலே குடியிருக்கும் குழந்தைகள் அவர் வீட்டில் உரிமை எடுத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்.

    அவருக்கு சைக்கிள், டூ வீலர் என்று எதுவும் ஓட்ட வராது.  ஆனால் ஒரு கார் சொந்தமாக வாங்கிவிட்டார்.   டிரைவரை வைத்துக்கொண்டு அந்தக் காரில் பல இடங்களுக்குச் செல்வார்.  எனக்குத் தெரிந்து அவர் விருப்பப்பட்டு வாங்கியது கார் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  நல்ல துணிமணிகள் கூட அவர் வாங்கி போட்டுக்கொண்டு நான் பார்த்ததில்லை.  பிளாட்பாரத்தில் கிடைக்கும் பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவார். விலை உயர்ந்த உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிட விருப்பப் பட மாட்டார்.  நான்தான் அவரை வலுகட்டாயமாக சரவணபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போவேன்.  சாப்பிட்டுவிட்டு விலையைக் கேட்டு மலைப்பார்.  ஒருமுறை அவரை அவருக்குத் தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  திருமணம் முதல்மாடியில் நடந்து கொண்டிருந்தது.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  பின் விருந்து சாப்பிட்டுவிட்டு கீழே மாடிப்படிகள் வழியாக நடந்து வரும்போது, ஐராவதம் தடுமாறி விட்டார்.  அவரால் படிக்கட்டுகளில் காலை வைத்து நடக்க முடியவில்லை.  12 ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  இரண்டு மூன்று முறைகள் தெருவில் நடந்து  செல்லும்போது மயங்கி விழுந்திருக்கிறார்.  அவர் மனைவிக்கு அவரை தனியாக அனுப்ப பயம்.  நான் அழைத்துப் போகிறேன் என்றால் அனுப்புவார்.

    ஒருமுறை வைதீஸ்வரன் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது சரவணபவன் ஓட்டலுக்கு ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.  வழக்கம்போல் பொங்கல் வடை ஆர்டர் செய்தேன்.  ஆனால் அன்று ஐராவதம் அவர்களால் உட்காரகூட முடியவில்லை.  ”உடனே போய் ஒரு மருந்து வாங்கிக்கொண்டு வா.” என்று ஐராவதம் சொல்ல, நான் அவசரம் அவசரமாக எதிரில் உள்ள அப்பல்லோ மருந்தகத்தில் அவர் கேட்ட மருந்தை வாங்கிக்கொண்டு வந்தேன்.  அதைச் சாப்பிட்டப்பிறகுதான் அவருக்கு சரியாயிற்று.  ஐராவதம் டாக்டரைப் பார்க்க அச்சப்படுவார்.  அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் பட்டப்பாடை எளிதில் விளக்க முடியாது.  ”என் மனைவிக்கு முன்னே நான் போய்விட வேண்டும்” என்பார்.  
    ”என்ன வீட்டிற்குள்ளேயே இருக்கிறீர்கள்…வெளியே வாருங்கள்,”என்பேன்.
    “நான் வீட்டிற்குள்ளே இருந்தே போய்விடுகிறேன்..” என்பார்.

    என்ன இப்படியெல்லாம் சொல்கிறாரே என்று தோன்றும்.  உண்மையில் அவர் வீட்டிற்குள் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் இறந்து போனார்.  யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல்.

           (அம்ருதா மே 2014 அன்று வெளிவந்த கட்டுரை) 
     
     
       
   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 5


            இயற்கை

        நோடீசு ஒட்டக்கூடாதென்று
        எழுதியிருந்த
        காம்பௌண்டு  சுவரில்
        வேப்ப மரக்கிளை நிழல்
        நோடீசாகப் படிந்திருந்தது
           
                                                                       – நா ஜெயராமன்

இன்று உலகப் புத்தக தினம்

   
                அழகியசிங்கர்

         

    எல்லாக் குப்பைகளையும் தூக்கி
    தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
    என் புத்தகக் குவியலைப் பார்த்து
    மலைத்து நின்றாள்
    என்ன செய்வதென்று அறியாமல்

    பின் ஆத்திரத்துடன்
    தெருவில் வீசியெறிந்தாள்

    போவோர் வருவோர் காலிடற
    புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
    ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
    அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
    படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
    எல்லார் முகங்களிலும் புன்னகை
    நானும் ஆவலுடன்
    மாடிப்படிக்கட்டிலிலிருந்து
    தடதடவென்று இறங்கி
    புத்தகத்தின் வரியை
    இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
    வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
    ‘இன்று உலகப் புத்தக தினம்
    இன்றாவது புத்தகம் படிக்க
    அவகாசம் தேடுங்கள்’
    நானும் சிரித்தபடியே
    புத்தகத்தில் விட்டுச் சென்ற
    வரிகளை நினைத்துக்கொண்டேன்
    இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
    வேஷ்டியைப் பிடித்தபடி….         

                                                                                (14.06.2008)
   

       

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 4

        பாதைப் பசுக்கள்

    பால் வற்றிய பசுக்களும்
    மலட்டுப் பசுக்களும்
    கவனிப்பாரற்ற கறவைகளும்
    தசைகள் அசைத்து
    மெல்ல சாலைகளின் ஊடே
    நடப்பதனால்
    வண்டிக் காளையின்
    கவனம் கெட்டுக்
    குழப்பமும் விபத்தும்
    நிகழ்வது தவிர்க்க
    உரிமையாளர்க் கொரு
    பணிவான வேண்டுகோள்
    அவரவர் பசுக்களை
    ஒழுங்கில் வைக்கவும்
    அநாதைப் பசுக்களை
    அரசுக் காக்கும்

                ஆர். வி சுப்பிரமணியன்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) – 3

  

                பூக்கள்

                                                                            

    1. வெட்கமின்றி சிரித்தது
       கொட்டும் மழையில்
       குளிக்கும் ரோஜாப்பூ

    2. சூரியன் மறைவில்
       கூம்பிய மலர்கள்
       மூடிப்பிடித்தவை அப்
       பாவி வண்டுகள்

    3. பனிபூக்க முகம் பூக்கும்
       நான் வளர்க்கும்
       ரோஜாப்பூ

    4. மனிதரோடு மாடுகள்
      போகும் ஊரோர
      தார்சாலை மரங்கள்
      இறைத்திருக்கும்
      மலர்கள்

    5. இரவில் ஊரார் கால்
        கழுவ
       போகுமிடம் பெருமாள்
                குளம்
       புண்ணாய் நீரெல்லாம்
        ஊதாப்பூ.

    6. வேலைக்குப் போகும்
         மகளிராய்
       பஸ் ஸ்டாண்டில்
             கூடைப்பூ

    7.அருகழைத்து பின்
      விரதமென்று புறந்
      தள்ளும் பவழ மல்லி

                                           பதி

சில குறிப்புகள்

      அழகியசிங்கர்

                          என் நண்பர் ஒருவர், ‘யாருக்கு உங்கள் ஓட்டு?’ என்று கேட்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது.  ஓட்டுப் போய் போட வேண்டும் என்பது.  நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன் என்பதையே நிச்சயமாக சொல்ல முடியவில்லை.  அந்த அளவிற்கு இந்த அரசியல் போரடித்து விட்டது.  இவ்வளவு பெரிய நாட்டை ஏதோ ஒரு கட்சி ஆளப் போகிறது.  அது எளிதான விஷயம் அல்ல.  ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மக்களும் மாற்றி மாற்றித்தான் ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் இந்த நாட்டின் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது. 


    ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடிக்குத்தான் என் ஆதரவு என்று கூறியது.  பெரிய பிரச்சினையாகி அவருடைய நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிவர வேண்டியது நின்று விட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரின் கருத்தை வெளியிடுவது கூட தவறாகப் படுகிறது.  உண்மையில் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் சொல்வதால்தான் அப்படி ஆகிவிட்டது.  அதையே வேறு எதாவது எழுத்தாளர் சொன்னால் அது ஒரு விஷயமாகவே மாறிவிடாது. 

    நல்லகாலம் சாகித்திய அக்காதெமி பரிசு வாங்கும் சமயத்தில்
ஜோ டி குரூஸ் இந்தக் கருத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்.  அப்போது சொல்லியிருந்தால் அவருக்கு அந்தப் பரிசும் கிடைக்காமல் கூட போயிருக்கும். 

    எனக்கு இப்போதுதான் ஞாபகம் வருகிறது.  இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்கு ஆதரவு கொடுத்து நாவலாசிரியர் நா பார்த்தசாரதி பேசியது.  அந்த சமயத்தில் அவர் தப்பிப்பதற்கான வழியாக அது இருந்திருக்கும். 

    சமீபத்தில் ஒரு நடுத்தரப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினேன்.  பாதி பத்திரிகை முழுவதும் மோடியை எதிர்த்து பலவிதமான கட்டுரைகள். 

    நடிகர் ரஜினிகாந்தை மோடி போய் சந்திக்கிறார்.  ஆனால் வெளிப்படையாக அவர் யாரை ஆதரிக்கிறார் என்பதை சொல்லக் கூட முடியாத நிலையில் அவதிப்படுகிறார்.   அவருடைய கோச்சடையான் படம் கூடிய சீக்கிரத்தில் வெளிவர உள்ளது. 

    ஜோ டி குரூஸ் ஏன் அவர் உணர்வுகளை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ள தெரியவில்லை. 
   

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


                   பேப்பர்

    இது என் பேப்பர்
    ரெயிலில் செல்கையில்
    அடுத்தவர் தோள்மேல்
    அரை மேய்ந்ததில்லை
    விரைந்து விழுங்கும்
    இரவல் ஷீட் அல்ல
    கைக்குள் வைத்து
    மடித்துப் படிப்பேன்
    மேஜைமேல் போட்டு
    விரித்துப் படிப்பேன்
    பகலிலும் படிப்பேன்
    இரவிலும் படிப்பேன்
    படிக்காமல் கூட
    தூக்கி எறிவேன்
    இது என் பேப்பர்

                                                                            நீலமணி

காக்கை கூட்டம்

    ப்ரியாராஜ்                                                     

    வெளிநாட்டுப் பறவைக் கூட்டம் காண
    வேடந்தாங்கல் போவானேன்?
    எச்சம் தின்னும் கருநிற காக்கை
    கூட்டம் பார்க்க மெரினா
    கடற்கரை போகலாம்? எதையும்
    தின்னும் இந்த நூற்றாண்டின் மனிதனைவிட
    நாம் எறிந்த மிச்கம் தின்னும் காக்கை மேல்
   
    போன திங்கள் அப்பா திதியின் போது
    ஆசாரமாய்ச் சமைத்த சாத உருண்டையைக் கூவி
    அழைத்துச் சாப்பிட ஒற்றைக் காக்கை கூட வரவில்லை
    இங்கு எத்தைனைப் பேர்கள் நீத்தார் திதியைச் செய்தபின்
    இறுக்கம் போக்க கடற்கரை நோக்கி வந்தாரோ?
    இன்றுவரை இறந்த அத்தனைப் பேரும் காக்கையாய்
    சுற்றி சுற்றி வருகிறார்களா? எறிந்த மிச்சம்
    தின்னும் அத்தனை காக்காய்க் கூட்டம் பார்த்தப்பின்பு
    கொதிக்கும் மனம் கொஞ்சம் அமைதியாயிற்று…