குருவும் சிஷ்யனும்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

க. நா. சுப்ரமண்யம்

கை நீட்டித் தலையில் வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
நஇடத்தமர்ந்த சிஷ்யனை
‘விளங்கிற்றா?’
என்று குரு வினவ’விளங்கிற்று’
என்று சிஷ்யன்கூற
‘என்ன விளங்கிற்று
எனக்கும் சொல் ‘
என்று சகபாடி கேட்டான்
‘குருவே சொல்வார்’
என்று பதில் வந்தது.

சில விபரங்கள்

    விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதற்கு முதல் காரணம்.  ஆடிட்டர் கோவிந்தராஜன்.  இவர் முழுக்க முழுக்க ஒரு சிறுகதை வாசிப்பாளர். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஆரம்பித்து நிறுத்தி இருந்த இலக்கியக் கூட்டங்களை திரும்பவும் ஆரம்பிக்க என்னைத் தூண்டியவர்.  இதுவரை நாங்கள் 4 கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.  இலக்கியக் கூட்டம் நடத்தும்போது நான் எதிர்கொள்வதை கோவிந்தராஜனுக்கும் தெரியும்.  அவர் ஒரு ஆடிட்டர் மட்டுமல்ல.  வகுப்பும் நடத்தும் ஆசிரியர்.  பல இடங்களுக்குச் சென்று அவருடைய துறை சம்பந்தமாக பேச வல்லவர்.  என்னமோ தெரியவில்லை அவருக்கு தமிழ் சிறுகதைகளைப் படிப்பதில் ஒரு பித்து.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்தாலும் படித்து விடுவார்.  மேலும் சிறுகதைத் தொகுதிகளையும் வாங்கிப் படிப்பார்.  படிப்பதோடு அல்லாமல் அந்தந்த எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பாராட்டவும் செய்து விடுவார்.     


    அவர் முயற்சியில் இன்னொன்றையும் செய்ய முனைந்து விட்டேன்.  மாதம் ஒரு சிறுகதையை பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்று.  இந்த முயற்சி ஏற்கனவே இலக்கியச் சிந்தனை செய்வதுதான்.  ஆனால் இலக்கியச் சிந்தனை சிறுபத்திரிகையில் வரும் கதைகளை கவனிப்பதில்லை.  நானும் ஆடிட்டரும் எல்லாப் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்து சிறந்த கதை என்று எங்களுக்குத் தோன்றுவதை தேர்ந்தெடுத்து ரூ.500 பரிசளிப்பது என்ற முறையை ஆடிட்டர் கோவிந்தராஜன் முடிவுபடி செய்து உள்ளோம்.  அப்படி ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் கதைகளை மொத்தமாக புத்தக உருவில் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வருவது என்று நான் முடிவு எடுத்துள்ளேன்.  எங்கள் எண்ணம் எந்த அளவிற்கு நிறைவேறும் என்பதை நாங்கள் அறியோம்.

    முதன் முதலாக ஜøலை மாதம் கதையாக ஆனந்தவிகடன் 16.07.2014 ல் வெளிவந்த ‘காணும் முகம் தோறும்’ என்ற எஸ் செந்தில்குமார் எழுதிய கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு என்ற பெயரில் இக் கதை பிரசுரம் ஆகி உள்ளது.  உண்மையில் அப்படித்தான்.  நாங்கள் இதற்காக பல பத்திரிகைகளைப் படித்தோம்.  எல்லாக் கதைகளைப் பற்றியும் சிறு சிறு குறிப்புகளும் எழுதி உள்ளோம்.  இந்தக் கதைத் தேர்ந்தெடுப்பில்  எஸ் ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான கதை ஆசிரியர்களை தவிர்த்து விட்டோம்.  அ முத்துலிங்கம் ‘சின்ன சம்பவம்’ என்ற சிறப்பான கதையை உயிர்மை இதழில் ஜøலை மாதம் எழுதி உள்ளார்.  ஆடிட்டர் அன்பளிப்பாக அளிக்கும் இத் தொகை குறைவானதுதான்.  வேறு யாராவது இன்னும் எதாவது நன்கொடை அளிக்க முன் வந்தால் அதையும் சேர்த்து செந்தில் குமார் அவர்களுக்கு அனுப்பலாம். 

    உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம். 

நவம்பர் 1970 – கசடதபற இரண்டாவது இதழ்


பாலகுமாரன் எழுதிய கவிதை

முட்டி முட்டிப்
பால் குடிக்கின்றன
நீலக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

யாப்பியல்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.  இதுவரை முதல் இதழில் வந்த கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  இப்போது இரண்டாவது இதழ்.

நவம்பர் 1970   –  இரண்டாவது இதழ்

மா. தக்ஷிணாமூர்த்தி

பூங்குயிலே,
யாப்பியல் கற்றனையோ நீ?
இசைக்கும் வசைக்கு –
மின்றியமையாத
‘சை’ கைகளைக் கற்றுக்கொள்.
இலக்கண மிதுவே.
இன்றே லிடையிற் படையாய்ப்
படுத்து விடுவாய்.
அது உன்பாடு.
என் பாடு
உன்னைப் பார்த்துக்
கா கா எனக் கரைதல்.
காவாக்கால் சோகாப்பா-
யிசையிழுக்குப் பட்டு.

நீ வருவாய்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

ஐராவதம்

ரொம்ப நாளாய்
உனக்காகக்
காத்திருந்தேன் –
மயான பூமியிலே.
நீ வரக்காணோம்.
சரி என்று சட்டையை
மாட்டிக்கொண்டு
ஜரிகை அங்க வஸ்தரம் தொங்க
மியூஸிக் அகடமிக்குப்
புறப்பட்டேன்.
அங்கே இப்போது ஸீஸன்
இல்லையாம்.
ஸீஸனில் பாடியவர்கள்
சிகிச்சைக்குப் போய் விட்டார்கள்.
சரிதான் என்று யூனிவர்ஸிடிக்குப்
போனேன்.  அங்கே கோடை லீவாம்.
வைஸ் சான்ஸலர் வைப்பைக்
கூட்டிக்கொண்டு கனடா
போய்விட்டாராம் கான்பரன்ஸ்
ஒன்றிற்காக.
கான்பரன்ஸ் தலைப்பு
üஇன்றைய கல்வி
மகத்தான அழிவு சக்தி.ý
வெயிலாக இருந்தினால்
வேறெங்கும் போகவில்லை.
உன்னைப்பார்க்க முடியவில்லை
அதனாலென்ன.  இன்றில்லாவிட்டால்
நாறை வரப்போகிறாய் நீயாகவே
துணையில்லாமல்

மனித பாவங்கள்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 


பாலகுமாரன்

இரட்டைத் தடங்களில்
எதிர்ப் பட்ட ரயில்கள்
ஒன்றை ஒன்று கண்டதும்
கண் சிமிட்டிக் கொண்டன
பொறி பறந்தது
நெருங்கி வந்ததும்
வந்தனம் கூறின
குழ லொலித்தது
பிரிந்து போகையில்
இகழ்ச்சி நிரைத்து
எச்சில் துப்பின
என் முகத்தில் கரி அடித்தது –
தடங்களைக் கடக்கையில் தெரிந்தது
ரயில்களின் சினேகிதம் கண்டு
கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது

சகுனம்

அக்டோபர் 1970 – கசடதபற இதழ் (1) 

கோ ராஜாராம்

நீண்டதொரு காலம் போய்,
மீண்டுமொரு சந்திப்பு
அதற்கென விரைவாய் அடியெடுத்து வைத்தேன்
நிலைக்கும் அப்பால் தெருவிலே வந்தேன்
உற்சாகங் குமிழிட்டு உள்ளத்தை விரித்தது
நடையினிலே நான் மிதந்தேன்
    பசபசவென்று உடலெடுத்த
    பூனையொன்று குறுக்கிட்டது
சீயென்றேன்.  தூவென்றேன்
காணக் கூசினேன் பூனையை
திரும்பிவிட அடிவைத்தேன்
துள்ளி விழுந்தது
துரிதமாய் வந்த காரினடியில்
துடித்துப் புரண்டது, பூனை
மனங் குமறிக் குமைந்தேன்
    கூசினேன் – என்னைக் காட்டிக்கொள்ள

தீபப்ரகாசன்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.

அக்டோபர் 1970 இதழ்

பயம்

கூரையில் தொங்கும் விளக்கு
கூட்டும் நிழல் பெரிதென்று
    படுக்கை விளக்கைப்போட்டுப்
    படிக்கப் புத்தகம் எடுக்க,
    விளக்குக் கூண்டின் நிழல்
    விரிந்து சுவரை மறைத்தது.

விளம்பரம்

புதுமைக்கூத்தன்

மல்லிகையிரவில்
விளக்குத்தூணிருட்டில்
விருந்துக்கழைத்தன
வளையொலிகள்
காலணா நாணயமாய்
கண்ட குங்குமம்
மனைவித் தன்மை
மிகுந்ததாலா?

அக்டோபர் 1970 இதழ் 

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.

தமிழை எங்கே நிறுத்தலாம்

ஞானக்கூத்தன்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்
அச்சுப் பொறிகள் அடிக்குமோ?
முத்துச்சாமி போன்றவர் சொன்னால்
மாட்டே னென்று மறுக்குமோ?

காசுகள் ரெண்டு கையிலிருந்தால்
எதையும் எங்கும் நிறுத்தலாம்
காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்
எங்கெல்லாமோ நிறுத்தினான்.

புலவர் பலரும் தமிழை இறுக்கிக்
குகைக்குள் கொண்டு தள்ளினார்.
குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்
கண்ணைக் கண்ணைக் கட்டினார்.

குகையிலிருந்த தமிழைக் கண்டு
குமுதம் கட்டிக் கொண்டதும்
சுப்ரதீபக் கவிஞர்களெல்லாம்
வஜனம் எழுதிக் களிக்கிறார்

தொழில்மய மாகத் திருமணமாகாக்
காளைகள் சுற்றும் நாட்டிலே
அவர்களுக் கென்றே ஏடு நடத்துவோர்
மூட்டைஅவிழ்த்துத் தருகிறார்.

வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால்
தேவலாம் போல இருக்குது.

மோச மின்னும் போவதற்குள்ளே
வித்தைக்டகாரர் வரவேண்டும்
வித்ததை தெரிந்த எழுத்துக் கலைஞர்
விலகி நிற்கக் கூடாது.

வித்தை தெரிந்தவர்க் கெல்லாமின்று
வேலை இருக்குது பலவாக.
நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்டு
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்.

(நன்றி :: கசடதபற ஒன்றாவது இதழ் அக்டோபர் 1970)