கவிதை குறித்து உரையாடல் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 57வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (26.06.2021) நடை பெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்கள். அதன் காணொளியின் பதிவு.

கவிதையும் ரசனையும் – 18

 (தொடர்ச்சி)

அழகியசிங்கர்


‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.


அளவு


நீண்ட நாளாய் எதிர்பார்த்த

மழை பெய்தது – ஆனால்

எங்கள் வீட்டு சாய்ந்த

தென்னைமரங்களின்

முதுகு நனையவில்லை.


இந்தக் கவிதையில் கவிகுரலோன் மழை பெய்ததற்காக சந்தோஷப்படத் தோன்றவில்லை. ஏன் எனில் அவன் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களில் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் பலர் தன்னைப் பற்றியே நினைத்துக்கொள்வார்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இப்படிப் பல கேள்விகள் ஒரு கவிதையைப் படிக்கும்போது தோன்றுகிறது. கவிகுரலோன் ஒன்று நினைக்கிறார். வாசகன் இன்னொன்று நினைக்கிறான்.
சின்ன சின்ன வரிகளில் அதிகமாக நாரணோ ஜெயராமன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதோ இன்னொரு கவிதை


சஞ்சாரம்

நாங்கள்

எங்கள் பிரச்சினைகளைப் பேசி

தீர்வு காணா நிலையில்””

எங்கள் நிழல்கள் பேசிக்கொண்டன”


எப்படித் தீர்வுகாண முடியும் பிரச்சனைகளால் ? அதற்காக நிழல்களை வம்பிககிழுக்கிறாரோ என்று தோன்றுகிறது.

பொதுவாக ஜெயராமன் கவிதைகளில் இயற்கையைப் பற்றி அவதானிப்பும், தத்துவப்போக்கும் எல்லா கவிதைகளிலும் பரவிக் கிடக்கின்றன.
ஜெயராமனின் புகழ்பெற்ற கவிதைகள் பல உண்டு. ‘லெவல் கிராஸிங்’ அதில் ஒள்று.


லெவல் கிராஸிங்


இந்த

என்ஜினும் ஓர் எல்லையில்

மூச்சடங்கிவிடும்.


அன்றாடக் காரியம் முடித்த

எந்திரத் திருப்தியுடன்.


பேப்பரில் முகம் மறைத்து

பயணம் செய்யும் மாந்தர்

உறங்கப் போவர்

மூட்டையைப் பத்திரமாய்ச் சேர்த்த

நிம்மதியுடன்.

வெறும் தண்டவாள அதிர்வுகள்

சத்தை, குப்பை குவியலில் கண்ணாடித்

துகள் –

என்னில் வாழ்வு ஒளி


இந்தக் கவிதையில் ஒரு ரயில் பயணம் நடைபெறுகிறது. பத்திரமாக என்ஜினும் ஒர் எல்லைக்குப் போய் மூச்சடங்கி விடுகிறது.வெறும் அதிர்வுகளைக் கொடுக்கும் தண்டவாளம். சக்கை, குப்பை குவியலில் கண்ணாடித் துகளைச் சேர்க்கிறது. கடைசியில் ஒரு வரி எழுதி கவிஞர் முடிக்கிறார். என்னில் வாழ்வு ஒளி என்று.

இதில்தான் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லா அவதிகளையும் தாண்டி வாழ்வு ஒளிமயமாக இருக்கிறது.

சில இடங்களில் இவர் கவிதைகளில் வெளிப்படும் வைர வரிகளை வியக்காமலிருக்க . முடியவில்லை.


‘உயிர்’ என்ற கவிதையில்


‘ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்’


‘தவம்’ என்ற கவிதையில்

‘இமைசொடுக்க விழி மலர்ந்த’


இன்னொரு வரி,

‘அரைத் துஞ்சலில் எருமை.’


‘வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுப்பிற்குப் பின் கவிதைகள் எழுதுவதை விட்டு ஒதுங்கி விட்டார் ஜெயராமன். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் 2011ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அவர் கவிதைகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார். அக் கவிதைகளை அவர் யாரிடமும் குறிப்பிடவில்லை, எந்தப் பத்திரிகைக்கும் பிரசுரம் வேண்டி அனுப்பவில்லை. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாரோணா ஜெயராமனின் கவிதைகள் முற்றிலும் வேறுபட்டவை..

அவற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.

‘கடியாரப் பிரக்ஞை’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.


வயோதிகத்தில்

மூதாட்டிக்கு,

மணிக்கொரு முறை சிறுநீர்,


ஒவ்வொரு முறையும்

‘பெட்பேன்’ வைத்து

அகற்றுகையில்

மணி என்னவென முனகுகிறாள்

அவஸ்தை நீள

காலம் நீர்க்காமல்


அவஸ்தை மட்டும் நீண்டு கொண்டிருக்கிறது

ஆனால் காலம் அப்படியே நீர்க்காமலிருக்கிறது.


திரும்பவும் சின்ன சின்ன கவிதைகள். மிகக் குறைவான வரிகள் கொண்ட கவிதைகள்.
யூகபாரம் என்ற கவிதை.

விழுந்த நொடியில்

நீர் முத்தின்

ஜாலத்தைப் போல்

காலத்தை

கணங்கணமாய்

கைக்கொள்

ஆனந்தக் கூத்தாடு


சூட்சுமமாய் நொடி எதையும் தவற விடாதே என்று அழுத்தமாய் இந்தக் கவிதை கூக்குரலாய் ஒலிக்கிறது.
மரண சுதந்திரம் என்ற கவிதையைப் பார்ப்போம்.


உயிர் துறந்தாள்

அம்மா

92 வயதில்

உணர்ந்த துக்கமெல்லாம்

அயர்ச்சியெல்லாம்

அவள் பட்ட கஷ்டமோ?

இலேசானது மனசு,

எரியூட்டிய பின்,

ஆன்ம விடுதலையில்


அம்மாவிற்கு ஆன்ம விடுதலை அவள் மரணம் என்று முடிக்கிறார். ‘தோற்றுவாய்’ என்ற கவிதை ஒரு தத்துவ விசாரம்.

இதென்னப்பா?

மனிதர்கள் தாம் தோற்றுவித்த சிக்கலில்

வலிந்து கட்டி

மல்லுக்கட்டி

கூத்தடிக்கிறீர்கள்

பிரபஞ்ச வெளியில்

உன் இடமென்ன? என் இடமென்ன?

உன் காலமென்ன? என் காலமென்ன?

வியந்து, அரவணைத்து

வியாபிக்காமல்?


எங்கோ கொண்டு போய் விடுகிறது கவிதை. வியந்து, அரவணைத்துப் போகாமல் நாம் ஏன் மல்லுக்கட்ட வேண்டுமென்கிறார்.

தன் உள்க் குரலை அவர் பின்னாளில் எழுதிய கவிதைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். இக் கவிதைகளைப் படிக்கும்போது வெளிப்படைத் தன்மை அழுத்தமாகத் தென்படுகிறது.

ஒரு நல்ல கவிதைத் தொகுதியைப் படித்த திருப்தி எனக்கு.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20 ஜூன் 2021 வெளிவந்தது)

கவிதையும் ரசனையும் – 18


அழகியசிங்கர்


நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.


ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.


தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும்.


அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.


‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’
மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள்.


இன்னொரு இடத்தில்


‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான். புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான். ஆனால், ருசிகரமான அனுபவமோ மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது.’


1976ல் இப்படி எழுதுவதுதான் ஒரு ஸ்டைல் போலிருக்கிறது. அதில் பிரமிள் கடுமையாக இயங்கிக் கொண்டிருந்தார்.


இந்தப் புத்தகத்திற்கு வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முன்னுரை 2018ல் வெளிவந்திருக்கிறது.


நிலை


அமர்ந்திருக்கும் வரப்பு.
வரப்பின் மேல் சிலுக்கும் செடி
அரக்குச் சிவப்பாய்
ஒளிரும்
மேற்குச் சிதறல்கள்
அண்ணாந்த கண்
தொலைவில் அதிசயிக்க
வேகம் கொள்ளும் பறவைகள்
வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்
முயங்கிக் கிடக்கும் உருவங்கள்,
தொலைவில் மேயும் மாடு,
கன்று.
எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.
எங்கோ மூலையில்
கட்டிப் போட்ட
வீட்டு நாய் மட்டும்
குரைத்துக்கொண்டேயிருக்கிறது.


எங்கோ மூலையில் கட்டிப் போட்ட வீட்டு நாய் குரைப்பதால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றனவா என்ற கேள்விக்குறி எழுகிறது. எல்லாவற்றையும் கவனிக்கிற மாதிரி கட்டிப்போட்ட வீட்டு நாயையும் கவனிக்கிறாரா?

(இன்னும் வரும்)
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20 ஜூன் 2021 வெளிவந்தது)

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

 

அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது  கதை வாசிப்புக்  கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா. 
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி  சிறப்பாகப் பேசினார்கள்.  அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

விருட்சம் நடத்தும் 57வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 26.06.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 57வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (26.06.2021) அன்று நடைபெற உள்ளது. 
கவிதை குறித்து உரையாடல் நிகழ்ச்சியை நடத்துவதாக உள்ளோம்.


எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: சொல் புதிது- கவிதை நேசிப்போம் நிகழ்வுTime: Jun 26, 2021 18:30 Mumbai, Kolkata, New DelhiJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81070838079…

Meeting ID: 810 7083 8079

Passcode: Singer123

சிட்டியின் நினைவுநாள் கொண்டாட்டம்

அழகியசிங்கர் 


 23.06.2021 – புதன் கிழமை அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுநாள்.  இது குறித்து சிட்டியும் ஜானகிராமனும் எழுதிய ‘நடந்தாய் வாழி,  காவேரி’ என்ற  புத்தகத்தைக் குறித்துப் பேசினோம். 

இக் கூட்டம் விருட்சம் – குவிகம் என்ற இலக்கிய அமைப்பு நடத்தியது

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.


அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 14வது  கதை வாசிப்புக்  கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் ஐராவதம், ஸிந்துஜா.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றிப் பேசுகிறார்கள். இக் கூட்டம் 25.06.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.  அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விருட்சம் நடத்தும் 56வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

19.06.2021 அன்று நடந்தது. அதன் காணொளியை இங்கு அளிக்கிறேன்.

அழகியசிங்கர்

கலந்துகொண்டவர்கள் எல்லாம் மொழிபெயர்ப்பு கவிதைகளைப் படித்தார்கள். சிறப்பாக நடந்தது கூட்டம்.

விருட்சம் – குவிகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்

மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியை ஞாபகப்படுத்துகிறோம்..

23.6.2021 அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவு தினம்.

அந்த நாளை முன்னிட்டு ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம்.

சிட்டியும் – தி.ஜானகிராமனும் சேர்ந்து எழுதிய நூல் அது.

அது குறித்து சிறப்புரை வழங்க உள்ளவர் தங்க. ஜெயராமன்.

தலைப்பு : தன் படைப்பாளர்களையும் பாத்திரங்களாக்கிய நடந்தாய், வாழி, காவேரி”

தலைமை : மூத்த எழுத்தாளர் நரசய்யா கலந்து கொள்பவர்கள் :

1. சிட்டி வேணுகோபாலன். 2. உமா சங்கரி 3. அழகியசிங்கர் 4. பானுமதி தேதி :

23.06.2021 நேரம் : மாலை 4 மணிக்கு Topic: ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம். Time: Jun 23, 2021 16:00 India Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89185254214?pwd=QjFkcVAwcWVYSnVUMmp6a09zM2svUT09 Meeting ID: 891 8525 4214 Passcode: 300548

அப்பாவின் அறை

 துளி – 204

அழகியசிங்கர்

இன்று தந்தையர் தினம். 


அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன்.  அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.


இது நான் எதிர்பார்த்ததுதான்.  ஆனால் அந்தக் கதை ஒரு உண்மையான சம்பவத்தை வைத்துக்கொண்டு எழுதியது. அப்பாவைப் பற்றி எழுதியது.
95 வயதுவரை என் அப்பா நடமாடிக்கொண்டிருந்தார்.  96வது வயதில் தகராறு ஆரம்பித்துவிட்டது.  பின் ஒரு ஆண்டு படுக்கையில் படுத்தபடி இருந்தார்.
அப்பா படுத்திருக்கும் அறையை ஒட்டினாற்போல் உள்ள ஹாலில் ஒரு திவானில் நான் படுத்துக்கொண்டிருப்பேன்.  இரவில் அப்பா சத்தம் போடுவார்.  எழுந்து உட்கார்ந்து அப்பாவைக் கவனிப்பேன்.


எனக்குத் தூக்கம் கலைந்து விட்டதென்று கோபம் வரும்.  ஆனால் அப்பாவிடம் காட்ட முடியாது.  இரவு நேரத்தில் டைபரை கழட்டிவிட்டு அப்பாவிற்கு சிஷ்ருசை செய்வேன். 
அது மாதிரி இரவு நேரத்தில்  எழுந்து எழுந்து இப்போதும் அது மாதிரி எழுந்து கொள்கிறேன்.
அப்பா இறந்த பிறகும் நான் ஓராண்டாக அப்பா இருந்த அறையைப் பார்க்கவே பயந்தேன்.  அந்த அறையைக் கடந்து போகும்போது எனக்கு அப்பா ஞாபகம் வரும்.


அப்பா கூப்பிடுகிற மாதிரி தோன்றும்.   அப்பா அறை திறந்திருந்தால் உடனே போய் மூடி விடுவேன்.  இந்தப் பிரமை என்னைவிட்டுப் போக ஒரு வருடம் மேல் ஆனது.
அப்பாவின் தினத்தன்று தோன்றிய சின்ன குறிப்பு இது.