அப்பாவின் அறை

 துளி – 204

அழகியசிங்கர்

இன்று தந்தையர் தினம். 


அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன்.  அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.


இது நான் எதிர்பார்த்ததுதான்.  ஆனால் அந்தக் கதை ஒரு உண்மையான சம்பவத்தை வைத்துக்கொண்டு எழுதியது. அப்பாவைப் பற்றி எழுதியது.
95 வயதுவரை என் அப்பா நடமாடிக்கொண்டிருந்தார்.  96வது வயதில் தகராறு ஆரம்பித்துவிட்டது.  பின் ஒரு ஆண்டு படுக்கையில் படுத்தபடி இருந்தார்.
அப்பா படுத்திருக்கும் அறையை ஒட்டினாற்போல் உள்ள ஹாலில் ஒரு திவானில் நான் படுத்துக்கொண்டிருப்பேன்.  இரவில் அப்பா சத்தம் போடுவார்.  எழுந்து உட்கார்ந்து அப்பாவைக் கவனிப்பேன்.


எனக்குத் தூக்கம் கலைந்து விட்டதென்று கோபம் வரும்.  ஆனால் அப்பாவிடம் காட்ட முடியாது.  இரவு நேரத்தில் டைபரை கழட்டிவிட்டு அப்பாவிற்கு சிஷ்ருசை செய்வேன். 
அது மாதிரி இரவு நேரத்தில்  எழுந்து எழுந்து இப்போதும் அது மாதிரி எழுந்து கொள்கிறேன்.
அப்பா இறந்த பிறகும் நான் ஓராண்டாக அப்பா இருந்த அறையைப் பார்க்கவே பயந்தேன்.  அந்த அறையைக் கடந்து போகும்போது எனக்கு அப்பா ஞாபகம் வரும்.


அப்பா கூப்பிடுகிற மாதிரி தோன்றும்.   அப்பா அறை திறந்திருந்தால் உடனே போய் மூடி விடுவேன்.  இந்தப் பிரமை என்னைவிட்டுப் போக ஒரு வருடம் மேல் ஆனது.
அப்பாவின் தினத்தன்று தோன்றிய சின்ன குறிப்பு இது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன