என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 – ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, “ஹலோ ஷர்மா,” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பதாகவும் சொல்லி ஆத்மாநாம் விடைபெற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணி பைக்கிராஃப்ட் சாலையில் எங்களின் இந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 1984 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நானும் ஆத்மாநாமும் மௌன்ட் ரோட் அரசாங்க நூல் நிலையக் கட்டடித்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். நண்பர் ராஜகோபாலனும் எங்களுடன் வந்திருந்தார். கடுமையான அடிதடியாக மாறக்கூடிய அபாயத்தை நோக்கி அந்த இலக்கிய கூட்டம் சரிந்துகொண்டிருந்ததால், அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் கூட்டத்தின் மத்தியிலேயே வேகமாக வெளியேறிவிட்டோம். டீ ஷாப் ஒன்றில் டீ சாப்பிட்டவாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின் மெதுவாக நடந்தோம். ஆத்மாநாம் அம்பத்ததூர் செல்ல வேண்டும். நான் தியாகராயநகர். அதனால் நாங்கள் சர்ச்பார்க் கான்வென்ட் அருகில் ஆளுக்கொரு பஸ் ஸ்டாப்நோக்கிப் பிரிந்தோம். சில தினங்களில் ஆத்மாநாம் பெங்களூர் செல்லப் போவதாகவும் எப்போது மெட்ராஸ் திரும்புவேன் என்பதைச் சொல்ல முடியாதுயென்றும் கூறி விடை பெற்றார். எங்களுடைய கடைசிச் சந்திப்பு அதுவே. 1984 ஜøலை ஆறாம் தேதி பெங்களூரில் ஆத்மாநாம் காலமான செய்தி சிறு அஞ்சல் அட்டைச் செய்தியாக விருதுநகரில் இருந்த எனக்கு அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டு வருஷங்களில் நானும் ஆத்மாநாமும் நாட்குறிப்பின்படி 1200 நாட்கள் சந்தித்திருக்கிறோம். நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்வது வெறும் மேலோட்டமான கூற்று என்பது என் அபிப்பிராயம். நட்பு என்ற தளத்திற்கு மேலான ஆழ்ந்த வெளியில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அறிமுகமான சில நாட்களிலேயே அதற்கான வெளி இயல்பாக உருவாகிக்கொண்டது. என்னை நான் தங்கியிருக்கும் லாட்ஜின் அறையில் வந்து சந்தித்துப் பேசுவதில் நாள் கிழமை நேரம் காலம் என்ற எந்தத் தடங்கல்களும் ஆத்மாநாமுக்கு இல்லாமல் இருந்தது மிகவும் குறிப்பிடும்படியானது. என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம். இடையே உணவுவேளை வந்தால் என்னுடனேயே சாப்பிடலாம். ஆத்மாநாம் என்னைப் பார்க்க இரவு பதினொரு மணிக்குக்கூட மோட்டார் சைக்களில் வருவார். இரண்டுபேரும் கிளம்பி மௌண்ட்ரோட் புஹாரி ரூஃப் போவோம். டீ குடித்தவாறு அதிகம் பேச்சு இல்லாமலேயே கூட உட்கார்ந்திருப்போம். ஆத்மாநாம் ஜ்யூக் பாக்ஸில் காசு போட்டு பிடித்தமான பாட்டு எதையாவது அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். சில விஷயங்களில் நானும் ஆத்மாநாமும் நேர் எதிரான குணம் கொண்டவர்கள். நான் எதையும் திட்டமிட்டு செய்வேன். ஒரு புத்தகம் வாங்குவதென்றால்கூட நான் எந்தக் கடையில் போய் வாங்கலாம்; எந்தத் தேதியில் எந்த நேரத்தில் போய் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தீர்மானம் பண்ணி விடுவேன். ஆத்மாநாம் திடீரென்று “வாங்க போகலாம்,” என்று கிளம்புவார். மௌண்ட் ரோட், பாண்டிபஜார், பாரீஸ் கார்னர்; சில நேரங்களில் புரசைவாக்கம்கூட போவார். என்ன வாங்கலாம் என்ற தீர்மானம் – வீதிகளில் நடந்து கொண்டிருக்கும்போது தோன்றும். இசைத் தட்டுகள் விற்பனை செய்கிற கடைகளுக்குள் நுழைவார். பத்துப் பதினைந்து இசைத்தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லி கேட்பார். ராக், ஜாஸ், பாப் – என்று எந்தவித இசைத்தட்டாக இருந்தாலும் வாங்குவதற்காக தேர்வு செய்வார். சிலவேளைகளில் எனக்கும் ஒரு இசைத் தட்டு பரிசாக வாங்கித் தருவார். அவர் தேர்வு செய்யும் இசைத்தட்டு கேள்வியே பட்டடிராததாகக்கூட இருக்கும். பத்துப் பன்னிரெண்டு இசைத் தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லிவிட்டு எதையும் வாங்காமல் அவர் வெளியேறி விடுவதும் உண்டு. அந்த மாதிரி ஆத்மாநாம் வெளியேறும்போது ஏமாற்றத்துக்குள்ளாகும் கடை விற்பனையாளரின் முகம் போனபோக்கை அவர் வெளியேறிச் செல்கையில் குழந்தையின் குதூகலத்துடன் சொல்லிச் சிரிப்பார். பிடிக்காத பட்சத்தில் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லையென்று வாதிடுவார். நான் எதிர்வாதம் செய்வதில்லை – ஆயினும் நான் அந்த மாதிரி ஒரு நாளும் நடந்துகொள்வதில்லை. நானும் ஆத்மாநாமும் அடிக்கடி போகிற ஒரு இடம் – கன்னிமாரா ஹோட்டலில் இருக்கும் புத்தகக் கடை ஒன்றுக்கு. ரொம்பச் சின்ன கடை அது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும்மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடையின் அமைப்பே ரம்மியமாக இருக்கும். அங்கேதான் நான் ஒருநாள் “ஜோன் பேஸ்” என்ற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப ரொம்பச் சின்னப் புத்தகம்தான் அது. ஆனால் அருமையான புத்தகம். இன்றும் என்னால் மறக்க முடியாத புத்தகம் அது. என்னிடமிருந்து அதை வாங்கிப்போய் படித்த ஆத்மாநாம் அவருக்காக மற்றொரு பிரதியை உடனே வாங்கி விட்டார்….ஒன்றே ஒன்று – அந்தப் புத்தகக் கடையில் மட்டும் ஆத்மாநாம் எதுவும் வாங்காமல் வெளிவருவதில்லை. எப்போதும் அந்தக் கடையில் புத்தகம் வாங்கியதும் கன்னிமாராவின் ரெஸ்டாரண்ட்டில் நானும் அவரும் காஃபி சாப்பிடுவோம். அந்த ரெஸ்டாரண்டின் காஃபியும் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு ஒன்பது மணியாக இருந்தது. இரவு உணவு ஆத்மாநாம் என்னுடன்தான் சாப்பிட்டிருந்தார். அதனால் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தவாறு என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டென ஞாபகம் வந்தவராக, “ராம்மோஹன் – கிளம்புங்க; எனக்கு ஒரு ஷர்ட் துணி வாங்கி வேண்டியிருக்கு; மௌண்ட் ரோடுல எங்கேயாவது வாங்கலாம்..”என்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிப் போனோம். மணி அப்போது ஒன்பது இருபது ஆகியிருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்தோம். சில நிமிடங்களில் கடையை மூடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன. சிப்பந்திகள் சற்று சோர்வுடன் பார்த்தார்கள். மூடப்போகிற நேரத்தில் வருகிறார்களே என்ற ஆயாசம் அவர்களுடைய முகங்களில் இருந்தது. ஆத்மாநாம் துணிகளை எடுத்துக் காட்டச் சொல்லி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சிப்பந்தி மட்டும் உற்சாகம் இல்லாமல் துணிகளை எடுத்து காட்டிக்கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் இடங்களில் வெறுமே நின்றார்கள். எல்லோருடைய கவனமும் ஆத்மாநாம் மேலேயே இருந்தது. பொதுவாகவே எந்தப் பொருளை வாங்கப் போனாலும் பார்த்தோம் வாங்கினோம் என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது ஆத்மாநாமிடம். எடுத்து எடுத்து காட்டச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவசரமே இருக்காது. அன்றும் அதே மாதிரிதான். நிதானமாக ஒவ்வொரு துணியாக பார்த்துக்கொண்டேயிருந்தார். மேலும் மேலும் துணிகளை எடுத்துக்காட்டும் படியும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு துணியைத் தேர்வு செய்தார். கடைப் பணியாளர் அந்தத் துணியில் ஆத்மாநாமுக்குத் தேவையான அளவை கேட்டு கிழித்தார். அவரிடம் ஆத்மாநாம் தான் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்க பணியாளும் கணக்கிட்டுச் சொன்னார். ஆத்மாநாம் உடனே மணிபர்ûஸ எடுத்தார். அந்தத் துணிக்கான பில் தொகை அவரிடம் இல்லை. பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஷர்ட் பாக்கெட்; பேண்ட் பாக்கெட்; ப்ரீஃப் கேஸ் – எல்லாவற்றிலும் தேடினார். பணம் இல்லை. என்னிடம் இல்லை. கடைச் சிப்பந்தி பொறுமை இழந்து ஆத்மாநாமையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆத்மாநாம் சிறிதுகூட பதட்டமடைந்துவிடவில்லை. “நோ ப்ராப்ளம்; செக் புக் இருக்கிறது. செக் குடுத்திடலாம்…” என்றார். துணியை ‘பேக்’ பண்ணி கையில் வைத்திருந்த பணியாள் விருட்டென்று சொன்னார்,”செக்கெல்லாம் வாங்க மாட்டோம் சார்..” “ஏன் வாங்க மாட்டிங்க…ஏமாத்தற ஆள் இல்லை நாங்க…என்ன பண்றது ..கேஷ் எல்லாம் செலவாயிடிச்சி – கவனிக்காம வந்திட்டேன்… செக் தர்றேன்..வாங்கிக்கோங்க..” “ஸாரி, சார்..செக் வாங்க மாட்டோம்..” “உங்க முதலாளிகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க, அவர்கிட்ட நான் பேசறேன்..” கல்லாவில் நின்றபடி கடை முதலாளி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! பணியாள் முன்னே செல்ல நானும் ஆத்மாநாமும் அவரிடம் சென்றோம். கடை முதலாளியிடமும் ஆத்மாநாம் பணியாளரிடம் சொன்னதையே சொன்னார். தானே ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிலில்தான் இருப்பதாக சொல்லி, தன்னுடைய ‘விசிட்டிங் கார்டை’ எடுத்துக்காட்டினார். கடை முதலாளி அதை வாங்கிப் பார்த்தார்…”ஓ கே சார் – போனா போகட்டும்…இந்தத் தடவை உங்ககிட்ட செக் வாங்கிக்கிறேன்..ஆனா – உங்க கிட்ட இல்லை; யார் கிட்டேயிருந்தும் செக் வாங்கற வழக்கம் கிடையாது எங்களுக்கு.. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்யாதீங்க..” என்றார் கடை முதலாளி. ஆத்மாநாம் கடை முதலாளிக்கு நன்றி சொன்னார். செக் என்ன பெயரில் தரட்டும் என்று கேட்டு எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். கடை முதலாளியும் நன்றி சொல்லி செக்கை வாங்கிக்கொண்டு துணிப் பார்சலை ஆத்மாநாமிடம் கொடுத்தார். ஆத்மாநாமும் நன்றி சொல்லி வாங்கி கடை முதலாளியிடம் கை குலுக்கினார். நாங்கள் வெளியில் வந்தோம். ஆத்மாநாம் சில நிமிடங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து குதூகலமாய் சிரித்தார். செக் தருவதாக சொன்னதும் கடைப் பணியாளர்கள் எல்லோருமே எப்படி ஆற்றாமையோடு விழித்தார்கள் என்பதைக் கூறி சிரிப்பு. இந்தச் சம்பவத்தை நான் சொல்லிக் கேட்பவர்களுக்கு ஆத்மானாமின் குதூகலமும் சிரிப்பும் கொஞ்சம் விகற்பமாகவோ சிறுபிள்ளைத் தனமாகவோ தெரியலாம். ஆனால் அப்படி இல்லை உண்மையைச் சொன்னால் இதே மாதிரியான சம்பவங்களை நிறையவே சொல்லமுடியும். ஆனால் இந்த மாதிரியான சிரிப்பும் குதூகலமும் சிறுபிள்ளைத்தனமானவை கிடையாது. ஆத்மாநாமுக்கே உரித்தான கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான சுபாவம் இது. அடிப்படையில் ஆத்மாநாம் கண்ணியமும் மேன்மையும் கொண்ட மனிதர். கண்டிப்பான சில நாகரீகங்களை பின்பற்றுகிறவர். மிக மென்மையான் சிறிது சங்கோஜமான நண்பர் அவர். எப்போதாவது இரவு நேரங்களில் என் அறையிலேயே தங்கிக் கொள்ளும்போது நான் தரும் புதிய வேட்டியையோ லுங்கியையோ கட்டிக்கொண்டு பனியன் அணிந்த தோற்றத்தோடு தூங்குவதற்குக்கூட அவரால் முடியாது. வெட்கப்படுவார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில்வெளி வராந்தாவில் இருக்கும் பாத்ரூமில் குளிக்கப் போகும்போதுகூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில் வெளி வராந்தாவில் இருக்கும். பாத்ரூமில் குளிக்கப் போகும்போதும் கூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டுடன்தான் செல்வார் – இதே ஆத்மாநாம் பேண்ட்டையும் ஷர்ட்டையும் கழற்றி படிகளில் வைத்துவிட்டு உள்ளாடையுடன் ஒருநாள் கிணற்று நீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஆத்மாநாம் 1984 ஜøலை 6ஆம் தேதி தற்கொலை செய்து உயிர் இழந்தார். (ஸடெல்லா புரூஸின் கட்டுரைகள் என்ற தொகுப்பு நூல் விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அதில் ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரம் ஆகிறது. அடுத்த பகுதி நாளை பிரசுரம் ஆகிறது)

தனலட்சுமி டாக்கீஸ்


டுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?

துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் “தனலட்சுமி டாக்கீஸ்” இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.

தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.

நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.

கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும்”எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்”

“ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு”

எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.

ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.

“என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல” டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.

“வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்” என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.

இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.

தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.

“எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்”

அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.

மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.

தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.

திருமண நாளும் வந்தது.

பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.

நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.

அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.

பின் கதைக்குறிப்பு:

ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் “தனலட்சுமி டாக்கீஸ்”க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.

(நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை navina.virutcham@gmail.com என்ற இணையத் தளத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கும் படைப்புகள் முதலில் நவீன விருட்சம் blog லும் பின் நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் ஆகும்)

சந்தி

ஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ************************* தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்று உலகிலேயே பெரிய மக்களாட்சி கொண்ட நாடு இந்தியா என்பதுதானே. சந்தித்த பெரிய சோதனை, 32 ஆண்டுகளுக்கு முன், June 25, 1975 இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த “உள்நாட்டு நெருக்கடி நிலைமை.” நள்ளிரவில் எதிர் அணியில் முன்னணியில் இருந்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தி இதழ்கள் வாய் பூட்டு இடப்பட்டு, அரசிற்கு எதிரான செய்திகள் வெளியிடக் கூடாதென்ற தடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டு, குடிமக்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்பட்டது. கவிந்தது காரிருள். இவ்வாண்டு பிப்ரவரி 25-ல் காலமான நீதிபதி ராஜ் ஹன்ஸ் கன்னா (அகவை 95), மக்களின் மரியாதைக்கும், போற்றதலுக்கும் உரியவர், பொறுமை, பணிவு, கூர்ந்த மதிநுட்பம், எல்லாவற்றிற்கும் மேலாக வீரமும் கொண்டவர். 1912-ம் ஆண்டு பிறந்த அவர் 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் ஒருவராக பதவியேற்றார். உள்நாட்டு நெருக்கடி நிலைமை என்ற அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக பல ‘ஆள்கொணர்வு’ வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்போது, ‘ஏடி. எம் ஜபல்பூர் எதிர் சிவகாந்த சுக்லா’ என்ற பேர் பெற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐவர் கேட்டு தீர்ப்பளித்தனர் – அந்த வழக்கின் தீர்ப்பு, அரசின் நிலையை ஆராய்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உட்படுத்தக் கூடிய ஒன்று. நான்கு நீதிபதிகள் அரசின் நிலையை – உள்நாட்டு நெருக்கடி நிலைமையை ஆதாரித்து எழுதினார்கள். நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் தீர்ப்பு, நியாயத்தையும், நீதியையும் வலியுறுத்தி, அரசின் நிலையைக் கேள்விக்குரியதாக்கிய எதிரான ஒன்று. அவ்வாறு அரசின் நிலையை எதிர்த்துக் கொடுத்தத் தீர்ப்பிற்காக, அவர் கொடுத்த விலை, அவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி என்ற பதவி உயர்வைப் பறித்தது. அப்பதவி, அவருக்கு இளையவரான மற்றொரு நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. நீதியரசர் ஹன்ஸ் ராஜ் கன்னா தன் பதவியைத் துறந்தார். அன்னாரின் வீரமும், தியாகமும் இந்திய நீதித்துறையின் மானத்தையும் கண்ணியத்தையும், நேர்மையையும் காப்பாற்றியது. நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கன்னாவின் உருவப்படம் சுப்ரீம் கோர்ட் இரண்டாம் வளாகத்தை அலங்கரிக்கின்றது. இன்று.(நன்றி : திரு அனில் திவான் கட்டுரை வீர நீதியின் ஒரு முகம் – ஹிந்து நாளிதழ் 07.05.2008). ******************************* புகழுக்கு மூன்று வழிகள், ஒன்று, புதிதாகச் செய்வது, இரண்டு, பெரியதாய் செய்வதாம், மூன்றாவது சிறப்பாகச் செய்வது. எழுத்திலும் இதேதான். வழிகள் நேராக இருந்தால் குறுக்கு வழிகள் இருக்காதா என்ன? அதில் ஒன்று, மாற்றி சொல்வது. உங்கள் வீட்டு பெண்மணிகளைக் கேட்டுப் பாருங்கள்: தமிழ் திரைப்பட இசையில் இது ரீமிக்ஸ் காலம். பார்த்தார் ஒரு சுஜாதா சிஷ்யக்குஞ்சு, சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ரீ மிக்ஸ் செய்து உலவவிட்டுவிட்டார். இலக்கியத்தில் வேண்டாமே இந்த ரீ மிக்ஸ். ******************************* சென்ற இதழ் ‘சந்தி’யில், தன் ‘இனிய’ வாசகர்களுக்காக, கொம்பன், ரெசினாகுன்றுக்குக்கூட போவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருந்தான். கடவுளால் தலையில் தைலம் தடவப்பட்டவர், காப்பாற்றப்பட்டார். குறைந்தபட்ச தகுதியே அவருக்கு இல்லையாம். போகட்டும். கொம்பனிடம், ஆசிரியர் அழகியசிங்கர், பேசும்போதெல்லாம்,’உங்கள் வாசகர் வட்டம் விரிந்துகொண்டே வருகின்றது. சந்தியை நிறுத்தி விடாதீர்கள்,’ என்று கூறி வருகின்றார். அப்படித்தானே!! “ஆம்” என்கிற கடலோசை.(நவீன விருட்சம் 79/80 வது இதழில் வெளிவந்த கட்டுரை)

புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்

பெங்களூரிலிருந்து வந்திறங்கினார்
புட்டா சுந்தரசாமி
எங்களூருக்கு.
ஹஸ்தினாபுரம் கிளையை
ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக.
பாதி கன்னடம், பாதி தமிழ்
எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில்
அவருடன் உரையாடுவோம்

ஏறக்குறைய என் வயது
அவரைப் போல தோற்றத்தில்
முன் வழுக்கையோடு
உயரம் சற்று கூடுதலாக
இன்னொருவர் இருக்கிறார் எங்கள்
அலுவலகத்தில்

வியாதிகளிலே எங்கள் இருவருக்கும்
பொதுத் தன்மை உண்டு

குடும்பத்தினரை விட்டு விட்டு
தனிமை வாசம்
அதுவே தனி விசாரம்
தற்போது இருக்குமிடம்
பெரும் குழப்பம்
மாதம் ஒன்று ஆகப் போகிறது
தங்கும் இடம் தேடி தேடி
தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி

தினம் தினம்
எங்களில் ஒருவரோடு
வீடு தேடும் படலம்
பார்க்கும் வீடெல்லாம்
ஏனோ கோணலாய்த் தெரிகிறது
வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு
வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது

நீண்ட கூடம்போன்ற
அறை இருந்தால் வாடகை
மலைக்க வைக்கிறது
கொஞ்சம் மிச்சம் பிடித்து
வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி

அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம்
இருந்தது. போய்ப் பார்த்தார்
இடமும் பிடித்திருந்ததுஆனால்
இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்
பாத்ரூமையும், லெட்ரீனையும்
கேட்டவுடன் மூக்கைப் பொத்தியபடியே வந்துவிட்டார்
புட்டா சுந்தரசாமி
நாற்றம் அவரைச் சூழ்ந்து கொண்டதோ

இன்னும் சில இடங்கள்
வாகாய் இல்லை
சுகாதார கெடுதலை தரும்
இடமெல்லாம் கண்ணில் பட்டு
வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வைக்கிறது

ஒரு இடத்தில்
கொசுக்கள் தொல்லை அதிகம்
எதாவது சமயத்தில்
மழைப் பெய்தால்
பாம்புகள் நெளியுமாம்
போதுமடா புட்டா சுந்தரசாமி

தன் துயரங்களை
வெளிவாசலில் நின்றபடி
புகை ஊதியபடி
எல்லோரிடம் ஆங்கிலமும் தமிழும்
கலந்துரையாடியபடியே
அழுக்கு ரூம் ஒன்றில்
தற்காலிகமாகக் காலத்தைக் கழிக்கிறார்
புட்டா சுந்தரசாமி

கட்டாயம் சனிக்கிழமைகளில்
பங்களூருக்கு ஓடி விடுகிறார்
குடும்பத்தைப் பார்க்க..

எங்களூருக்கு வந்த பங்களூர்
ஏபிஎம் புட்டா சுந்தரசாமி படும்பாட்டைப் பார்த்தீரா?

ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்……



டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த மூவரின் மறைவு என்னைப் பெரிதும் நினைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தது. ஒருவரின் மறைவு, ஒருவரைப் பற்றிய என் மனதில் தோன்றிய வரைபடமாக என்னை அடிக்கடி நினைக்கத் தூண்டி, ஒருவிதத்தில் என்னைச் சங்கடப்படுத்தியது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன், நவீன விருட்சம் தொடக்கக் காலத்தில், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.பழகுவதற்கு அற்புதமானவர்கள்.
ஆதிமூலமும், மருதுவும் தேனாம்பேட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிமூலம் பழகுவதற்கு எளிமையான மனிதராகவும், கம்பீரமான மனிதராகவும் எனக்குத் தோற்றம் தருவார். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. சத்தமாகவே பேச மாட்டார்.
விருட்சம் முதல் இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது, எனக்கு அவரிடமிருந்து விருட்சம் எழுத்தை கையால் எழுதி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு ஓவியக் கூட்டத்தில் ஞானக்கூத்தனுடன் நான் சென்றிருந்தேன்.
அக் கூட்டத்தில்தான் ஆதிமூலத்தைப் பார்த்து விருட்சம் என்ற பெயரை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். நான் கேட்ட விதமோ, கேட்ட சூழ்நிலையோ அவருக்குச் சங்கடத்தைத் தந்திருக்குமென்று நினைக்கிறேன். இதனால் அவர் மறுத்துவிடுவார் என்றும், கேட்ட விதத்தால் கோபத்துடன் எதாவது சொல்வாரென்றும் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக, கேட்ட சில நிமிஷங்களில் எனக்கு விருட்சம் எழுத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அவர் கையால் வரைந்த விருட்சம் எழுத்துக்கள்தான் இன்னும் தொடர்ந்து அட்டையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ உதவிகளை அவர் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். முதன் முதலில் ஸ்ரீனிவாஸனின் கவிதைத் தொகுதியை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவந்தேன். ஆதிமூலம்தான் அதற்கு ஓவியம். ஸ்ரீனிவாஸன் மீது அளவுகடந்த அன்பு அவருக்கு. உடனே ஸ்ரீனிவாஸன் கையெழுத்தை வைத்து ஒரு அட்டைப் படம் தயாரித்துக் கொடுத்தார். அந்தப் படத்தை வைத்துத்தான் புத்தகமே வந்தது. அதைத் தரும்போது, ஸ்ரீனிவாஸனைப் பற்றி ரொம்பவும் உயர்வாகவும், சீனு என்று உரிமையாகவும் அவர் உச்சரித்தது என் ஞாபகத்தில் இருக்கிறது.
பழகுவதற்கு அற்புதமான மனிதர் ஆதிமூலம், உலகளவில் போற்றுகின்ற ஒரு ஓவியர், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல, பழகுவது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமான விஷயம். அதற்குக் காரணமாக நினைப்பது, சிறுபத்திரிகை சூழல். அன்றைய சிறுபத்திரிகைச் சூழலில் தங்களையும் வெளிப்படுத்திக்கொண்ட ஓவியர்கள் பலர். அதில் ஆதிமூலம் முக்கியமானவர். அவருடைய காந்தி ஓவியம் இன்னும்கூட மறக்கமுடியாத ஒன்று.
விருட்சம் மூன்றாவது இதழ் வரும்போது, க. நா. சு. இறந்துவிட்டார். அந்த இதழ் அட்டைப் படத்தை அலங்கரித்த ஆதிமூலம் வரைந்த க.நா.சுவின் ஓவியம்தான் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. என்னால் மறக்க முடியாத ஓவியத்தில் அதுவும் ஒன்று. ஆதிமூலமும் சரி, மருதுவும் சரி, விருட்சம் இதழிற்காகப் பல ஓவியங்களை மனமுவந்து நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
ஞானக்கூத்தனின் ‘கவிதைக்காக’ என்ற புத்தகத்திற்காக ஆதிமூலம் அவர்களைச் சந்தித்தேன் ஞானக்கூத்தனுடன். அன்று பொங்கல் தினம் என்று நினைக்கிறேன். ஆதிமூலம் அவருடைய பல ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமும், பாக்கியமும் எனக்குக் கிட்டியது. அன்போடு வரவேற்று உபசரித்ததோடல்லாமல், சாப்பிட்டுப் போகும்படியும் சொன்னார்.
ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாம் சேர்த்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்து அதன் வெளியீட்டு விழா நடத்தும்போது, ஆதிமூலம் அவர்களின் 60வது வயது விழாவும், சா. கந்தசாமியின் சாகித்திய அக்காதெமி விருதுப் பெற்றதையும் சேர்த்து மூவர் விழாவாக விருட்சம் சார்பில் கொண்டாடினோம். அவ்விழாவிற்கு பேரறிஞர் சிவத்தம்பி, அனிதா ரத்னம், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் வந்திருந்து சிறப்பு செய்தார்கள். விருட்சம் நடத்திய அக் கூட்டத்திற்குப் பிறகு, நடிகர்கள் போன்ற பிரபலமானவர்களை அழைத்து இலக்கியக் கூட்டம் நடத்துவது வழக்கமாகிவிட்டது.
கம்பீரமான தோற்றம் கொண்ட எளிய சுபாவம் கொண்ட ஆதிமூலத்தின் மரணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் மரணம் அடைந்தபிறகுதான், அவர் சில ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்படுகிறார் என்பதை அறிந்தேன். அந் நோயைக் கூட அவர் யாரிடமும் கூறவில்லை என்பதையும் அறிந்தேன். மரணத்தை முன்கூட்டியே அறிந்ததால், அவரிடமிருந்து மரணத்தைப் பற்றிய எந்த அசைவும் நிகழவில்லை என்பதோடல்லாமல், அதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். இன்னும்கூட ஆதிமூலம் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு சாயலில் எனக்கு ஆதிமூலத்தைப் பார்க்கும்போது, சா கந்தசாமியையும், சா கந்தசாமியைப் பார்க்கும்போது, ஆதிமூலமும் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள்.
ஆதிமூலம் மரணத்துடன் போராடவில்லை. வெற்றிகரமாக மரணத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ****************
சுஜாதாவை சென்னையில்தான் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறேன். கணையாழி கவிதைக் கூட்டத்தில், நான் படித்த கவிதைகளைப் பற்றி கருத்துக்களை உடனடியாக வழங்கினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நான் நடத்திய ஞானக்கூத்தன் கவிதைகள் கூட்டத்தில் கட்டுரை வாசித்தார். நான் அவர் வருவாரா என்று சந்தேகத்துடன் இருந்தேன். சுஜாதா எல்லார் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய வேகம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் பங்களூரில் இருந்தபோதுகூட, பெரிய பதவியில் இருந்தும்கூட எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். எல்லாப் பத்திரிகைகளும் அவர் எழுத்தை விரும்பி பிரசுரம் செய்யும். ஏன் அவரைக் கேட்டுக்கூட பிரசுரம் செய்யும். அவர் பெரிய பத்திரிகைகளில், சிறு பத்திரிகைகளைப் பற்றி தன் கருத்துக்களை எழுதாமல் இருக்க மாட்டார். ஒருமுறை அவர் குமுதம் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சிறுபத்திரிகையில் வெளிவந்த கவிதைகளை அதிகம் வெளியிட்டிருக்கிறார். அவருடைய தொடர்கதைகளில் என்னைப் பற்றியும், நவீன விருட்சம் பற்றியும் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இவர் வேகத்திற்கு க.நா.சுவைத்தான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் க.நாசு வேறு, சுஜாதா முழுக்க முழுக்க வேறு. இன்று சுஜாதாவைப் போல எழுத முயற்சி செய்பவர்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம்.
சுஜாதாவும் கநாசு மாதிரி ஒரு ஆண்டில் அவருக்குப்பிடித்த பல விஷயங்களைக் குறித்து லிஸ்ட் போடுவார். இந்த ஆண்டின் சிறந்த சிறு பத்திரிகை நவீன விருட்சம் என்று ஒருமுறை சுஜாதா குறிப்பிட்டுள்ளார். அவருடைய எந்த எழுத்தையும் பிரசுரம் செய்ய பத்திரிகைகளும் தயாராக இருந்தன. சுஜாதாவைப் பிடிக்காத இலக்கிய நண்பர்களும் எனக்குண்டு. அதே சமயத்தில் சுஜாதா எழுதும் எந்த எழுத்தையும் படித்து திரும்பவும் அப்படியே மனப்பாடமாகச் சொல்கிற நண்பர்களும் எனக்குண்டு. அவர் மரணம் இட்டு நிரப்ப முடியாத மரணம்தான்.
ஆழ்வார்பேட்டையில் அவர் வீட்டிற்கு எதிரில் இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இந்திரா பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டு, சுஜாதாவையும் பார்க்கச் செல்வேன். 406 சதுர அடிகள் என்ற என் சிறுகதைத் தொகுதியை சுஜாதாவைப் பார்த்துக் கொடுக்கச் சென்றேன். அப் புத்தகத்தைப் பற்றி எதிலாவது எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். என் புத்தகத்திற்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வேண்டிக்கொண்டேன். காரணம் பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்காக புத்தகம் அனுப்பினால், புத்தகத்தைப் பற்றி யாரும் மதிப்புரை செய்வதில்லை. அதனால் ஒரு புத்தகம் வந்தால் அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றும் கூட தமிழில் இந்த நிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்போதெல்லாம் யாரிடமும் புத்தகம் கொடுப்பதில்லை. சுஜாதா என் புத்தகத்தைப் பற்றி எழுதாமலில்லை. ஆனால், ‘அழகியசிங்கரே விரும்பிக் கேட்டக்கொண்டதால்.’ என்று எழுதிவிட்டார். எனக்கு அவர் அப்படி குறிப்பிட்டது சற்று வருத்தமாக இருந்தது.
பின் சுஜாதாவை அவர் நோய்வாய்ப்பட்டு மீண்ட ஒரு சமயத்தில் ரவி சுப்பிரமணியனுடன் மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் பார்த்திருக்கிறேன். ரொம்பவும் ஒடுங்கி போயிருந்தார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. அதிகமாகப் புத்தகங்கள் அவர் வீடைத் தேடி வருவதாகவும், அதனால் புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாமென்று சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனந்த விகடனில் அவர் உடல்நிலையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் மரணத்துடன் போராடி போராடியே வெற்றி பெற்றிருக்கிறார். இறுதிவரை மரணத்துடன் சண்டைப் போட்டவர் சுஜாதா. மரணம் கடைசியில் அவரை வென்றது. ***************
ஸ்டெல்லா புரூஸ் எனக்கு காளி-தாஸ், ராம் மோஹன் என்ற பெயரில்தான் முதன்முதலாக அறிமுகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கடற்கரையில், ராம் மோஹன், வைத்தியநாதன், ராஜகோபால், ஆனந்த், ஸ்ரீனிவாஸன், ஞானக்கூத்தன் என்று பட்டாளமே சேரும். முதன் முதலில், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளவனாகவே இருந்திருக்கிறேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேனே தவிர, வாய்த் திறந்து நான் பொதுவாக அதிகமாகப் பேச மாட்டேன். கவிதைகள் குறித்தும், உலக நடப்புக்களைக் குறித்தும் அதிகமாகவே பேசியிருக்கிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் ஒரு அறை வாசியாக பூங்கா மேன்சன் ஒன்றில் குடியிருந்தார். அப்போது எனக்கு அவரைப் பற்றிய ஒரு பிரமிப்பு எப்போதும் இருக்கும். எந்த வேலைக்கும் போகாமல், தனக்கென்று பெரிய எதிர்ப்பார்ப்பின்றி சேமிப்பிலிருந்து மிகக் குறைவான செலவில் சிக்கனமாகச் செலவு செய்துகொண்டு வருபவர் அவர். புத்தகங்களைப் பற்றியும், தனக்குப் பிடித்த மனிதர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். பெரும் பத்திரிகையில் குறிப்பாக ஆனந்தவிகடனில் அவருடையதொடர்கதைகள் வெளிவந்தவுடன், அவருக்குப் பல தொடர்புகள் ஏற்பட்டன. முதலில் வாசகியாக இருந்த ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.
அறை வாசியாக இருந்த அவர், தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.எளிமையான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவருடையது.
விருட்சம் ஆரம்பித்த சமயத்தில் உள்ள நிலை வேறு; இப்போதைய நிலை வேறு. இந்தக் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது குறுகிப் போய்விட்டது. ஏன் பேசுவதுகூட நிகழாமல் போய்விடுகிறது.
ஸ்டெல்லா புரூஸின் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நண்பர்கள் வட்டமும் மாறிப் போய்விட்டது. ஹேமா உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், ஹேமா இல்லாத வாழ்க்கையை ஸ்டெல்லாபுரூஸ் நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். ஆனால் அவரால் வாழ முடியவில்லை. ஆன்மீகத்தில் தனக்கு ஏதோவொரு சக்தி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, நெற்றிமேடு என்ற பெயரில் அவர் பெரும்பாலும் யாராவது இறந்து போவதை மட்டும் குறிப்பிடுவார். ஒரு முறை அவருடன் பேசும்போது நான் கூட குறிப்பிட்டேன்: ‘ஏன் உங்கள் நெற்றிமேடு மரணத்தை மட்டுமே குறிப்பிடுகிறது,’ என்று.
ஸ்டெல்லாபுரூஸ் தவறுதலாகக் கருதிய ஆன்மீகம்தான் அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதோ என்றும் தோன்றுகிறது. அவர் ஏற்கனவே பல தற்கொலைகளைச் சந்தித்திருக்கிறார். ஒரு முறை கடற்கரையில் ஒரு இளைஞன் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சிததைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஏன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டதுகூட கவனித்திருக்கிறார். அவர் உறவினர் கூட தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி எழுதியும் இருக்கிறார். அப்படிப்பட்டவர் தானே தற்கொலை செய்துகொள்வார் என்பதைத் துளியும் எதிர்பார்க்க முடியவில்லை.
ஆதிமூலம் மரணத்தைக் குறித்து எந்த முணுமுணுப்பும் இன்றி முழுக்க ஏற்றுக் கொண்டவர். சுஜாதாவோ மரணத்துடன் சண்டைப் போட்டு எதிர்த்து இறுதியில் வெற்றி கொள்ளமுடியாமல் தோல்வி அடைந்தவர். தானே மரணத்தைத் தேடி தழுவிக் கொண்டவர் ஸ்டெல்லாபுரூஸ்.
அழகியசிங்கர்
20.07.2008 at 10.25 pm

நமக்கிருப்பது


நமக்குத் தெரியும்
ஒரு பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று.
நமக்குத் தெரியும்
உண்மையில் நாம்
சம்பள அடிமைகளென்று
நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநில மன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.
நமக்குத் தெரியும்
மாமன்னராகும் கனவு
பலருக்குமிருக்கிறதென்று
நமக்குத் தெரியும்
அரசன் வசமும் அவன்
எதிரிகள் வசமும்
ஆளும் அம்பும் உண்டென்று.
நமக்குத் தெரியும்
பசுக்களை, இளங்கன்றுகளை
காளைகளை, பறவைகளை, மரங்களை
சாய்த்தது யாரென்று.
நமக்குத் தெரியும்
கண்ணால் கண்டதும்
காதால் கேட்டதும்
தீர விசாரித்ததும் மெய்யென்று.
நமக்குத் தெரியும்
நமதடுத்த கணம்
கத்தியின் கூராய்
அரிவாளின் மின்னலாய்
துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.
நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று.
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரிப்பில் ஆழ்த்தும்படி இருக்கும். ஆனால் தீவிரமான கவிதைகளும் உண்டு. ஒருமுறை நவீன விருட்சத்திற்காக ஒரு கவிதை தரும்படி கேட்டேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அதைப் படித்தபிறகு எனக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வந்தது. குதிரை என்பது அக் கவிதையின் தலைப்பு.
குதிரை

மரத்துக்குக் கீழே குதிரை
அதற்குக் கொடுக்கப்பட்ட
புல்லைக் குனிந்து குனிந்து
தரையிலேயே தின்றவாறு நிற்க
குதிரைக்குப் பக்கம் இவன் போனான்
‘குதிரை,’ ‘குதிரை’ என்றான்.
இவனைக் குதிரை கவனிக்காமல்
தன்
பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது
மீண்டும் இவன் சொன்னான்
‘குதிரை, குதிரை, குதிரை’
விட்டது பட்டென் றொருஉதை
அந்தக் குதிரை.
தரையில் உருண்டான்
அப்பால் ஒருமுறைக்கூட
குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.
பெரும்பாலும் பலருக்கு கவிதை மூலம் சிரிப்பை வரவழைக்கத் தெரியவில்லை. லாவண்யாவின் ‘நமக்கிருப்பது’ என்ற கவிதையில் சிரிப்பு வருகிறது. இந்தச் சிரிப்பை கடைசியில் கொண்டு வருகிறார்.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று……….
படிக்கும்போது நமக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வருகிறது. நவீன விருட்சம் 80ஆவது இதழில் இக் கவிதை பிரசுரம் ஆகி உள்ளது. 80 ஆவது இதழைப் படித்த நண்பர் ஒருவர், லாவண்யா ஆணா பெண்ணா என்று கேட்டார். ஆண் என்றேன். அவருக்கு அதைக் கேட்டவுடன் சுவாரசியம் குறைந்து விட்டது. திரும்பவும், என்ன வயது என்று கேட்டார். ’60க்கு மேல்’ என்றேன். நண்பர் என்னிடம் லாவண்யாவைப் பற்றி அப்புறம் பேசவே இல்லை.
– அழகியசிங்கர்
19.07.2008

என் ஏகாந்த வனம்


எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை….
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்….
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை…..

எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்……?

என் அம்மா


அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு –

அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது….

சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-

அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு….

நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?

மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் …ஏ

சரி,
புரியவேயில்லை…
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.

நவீன விருட்சம் இதழில் சமீபத்தில் வெளிவந்த எ தியாகராஜனின் இன்னொரு கவிதை இது. மிக எளிமையாக எழுதப்பட்ட கவிதை. பொதுவாக ஒரு தொகுப்பை முழுவதுமாக வாசிப்பதைவிட பலருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பை வாசிப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். ஒருவருடைய தொகுப்பபு மட்டுமே நிரம்பிய கவிதைகள் ஒரே விதமாகவும் படிக்க அலுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதினாலும் இதுதான் உண்மை நிலை. யாருடைய கவிதை நூல்களாக இருந்தாலும், படிக்க படிக்க ஒரே வித mind process ஐப் படித்து படித்து நமக்குப் போர் அடித்துப் போய்விடும். என் சகோதரனுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் Education and its significance என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்க இந்த ஒரு புத்தகமே போதும் என்று கூறிவிட்டு அவருடைய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இருந்துவிட்டான். கவிதையிலும் ஓரளவு சிறுகதைகளிலும் ஒரே மாதிரியான mind process போரடிக்கிறது. படிக்கிறவர்களுக்கு இது ஏற்படாமல் இருப்பதில்லை. அதனால் ஒருவரின் தனிப்பட்ட தொகுதியைவிட பலர் எழுதிய தொகுதி சிறப்பாக இருக்கிறது.
விருட்சம் முழுவதும் பலருடைய கவிதைகள் படைக்கப் பட்டிருப்பதால், வேறு வேறு அலைவரிசையை உண்டாக்குகிறது.
அழகியசிங்கர்
15.07.2008 (செவ்வாய்க்கிழமை)

புரிவதில்லை கவிதை

உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை

ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் –

தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல

இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை –

கேட்டால் –
புரியாது
உனக்கு என்கிறாய்

அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்

நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்டார். கவிதைக்கு படிமம், உவமை போன்ற சமாச்சாரங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிப்பவர்கள். ‘என்ன வசனத்தை உடைத்துப் போட்டு எழுதி உள்ளாரே’ என்பார்கள். உண்மையில் அப்படி இல்லை. எழுதும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல்தான் வரி அமைப்பும் அமைகிறது. அதை அப்படியே வாசிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை முழுதாக மனதில் தோன்றி எழுதப்படுகிறதா? அல்லது எழுதும்போது அதுவே தோன்றுகிறதா என்பதெல்லாம் தெரியாது. கவிதையை எளிதாக வாசித்துவிடலாம். ஆனால் ஒரு கதையையோ நாவலையோ அப்படியெல்லாம் வாசித்துவிடமுடியாது. வாசிக்க அவகாசம் அதிகம் தேவைப்படும். கவிதை வாசிப்புக்க அவகாசம் தேவையில்லை. ஒரு பக்கம் அல்லது அரைப் பக்கம்தான் வரும். ஆனால் அதன் மூலம் சிந்திப்பது என்பது அலாதியான விஷயமாக இருக்கும். பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கவிதைகள் ஞாபகத்தில் வரிகள் வராது. அதன் தாக்கம்தான் மனதில் அலைகளை எழுப்பும். படிக்கும்போதுதான் அது தோன்றும். சரி, இப்போது எ தியாகராஜன் கவிதைகளுக்கு வருவோம்.
தியாகராஜன் சிதம்பரத்தில் மெளனி வீட்டிற்கு எதிரில் குடியிருந்தவர். விருட்சத்தில் மெளனியைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளார். தற்போது மும்பையில் வாசம். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

ஒரு வேண்டுகோள்


சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து).

இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். முதலில் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிய பிறகுதான் உடனடியாக அந்தப் பணியைத் துவங்க வேண்டும்.

இந்த வலை மூலம் எல்லோரிடம் ஆண்டுச் சந்தா கேட்கலாம் என்று பலவாறு யோசித்தே இதை எழுதுகிறேன். 21ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நவீன விருட்சத்திற்காக ஆண்டுச் சந்தா ரூ 40 ஐ அனுப்புங்கள். இந்த இதழ் ரூ 20 தான். இதைப் பெற விரும்பும் வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் ரூ50 அனுப்புங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

NAVINA VIRUTCHAM
6/5 POSTAL COLONY FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI 600 033
INDIA

எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அழகியசிங்கர்
12.07.2008