எனது மஹாராணியின் நினைவாக

short story

அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட – நடனத்தில்.
எனது மயில்….ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே….பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் – ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு – அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு – அவள் பெப்பி பெப்பி பெப்பி……..
பெப்பி – என் நினைவே, என் கனவே…….ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? – இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். ‘என் மயிலின் மடியில்.’ ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும்.
ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப்பி என்கிறேன்? சொல்கிறேன். உங்கள் வீட்டில் பியானோ இருக்கிறதா? பெப்பி ஆரோமெல்லோ என்ற இளைஞனின் பியானோ இசையில் உங்களுக்குப் பைத்தியம் உண்டா? மயிலிடம் இரண்டும். எனது மயிலும் பிரமாதமாக பியானோ வாசிக்கும். அதனால்தான் பெப்பியென்று என் மயிலை நான் மட்டும்…
லைட் ப்ளு வர்ண சுவர்கள். மூலையில் ரெட் கார்ப்பெட்..பியானோ. மயில் பியானோ வாசிக்கிறது. மயிலின் டிரஸ் குரு ரெட்டில். மயிலின் பொன் வர்ணக் கூந்தல் – தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு அருவி அமைதியாக வழிவதைப் போல. மயிலின் அருவியை மெதுவாக ஸ்பரிக்க ஒரு மலராத ரோஜாவை அந்தப் பொன் வர்ணக் கூந்தலில் சூட்ட நான் – பைத்தியமாக…
பெப்பி எனக்கு இன்ஸ்பிரேஸன். எனக்கு அவள் அடுத்த வீட்டுப் பெண். அதனாலா மயிலை நான் ‘படோசன்’ பார்க்க அழைத்துப் போனேன். மயிலுக்கு இந்திப் படம் பிடிக்கவில்லை. ஆனால் நஸீம் பானுவின் பெண்ணைப் பிடித்தது. ‘ஸி ஹர் அய்ஸ்’ என்றாள். பார்த்தேன். மயிலின் கண்களை; நீல நிற விழிகளில் நான்.
எனக்கு மயிலின் வீட்டில் மிகவும் சுதந்திரம். அந்த சுதந்திரம். அந்த சுதந்திரத்தின் ஆரம்பம் – புத்தகம். மயிலின் அப்பா – அவருக்கு எல்லா இடங்களிலும் ஒரே பெயர்தான். மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 50 வயது ஜென்டில் மேன். பார்த்தால் 30 வயது. மிஸ்டர் தாமஸ் ஒரு புத்தகப் பூனை. நான் சொல்லவில்லை. எல்லாம் என் மயில்தான். தூங்குவதும்கூட மயிலின் அப்பாவிற்குப் புத்தகத்தில்தான். புத்தகத்தில் தூங்கினால் பூனையா? அப்படியானால் நானும்தான்.
மகளை மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன் சொல்வார் : “மகளே நீ கூட நமது புஸ்ஸி போல,” புஸ்ஸி? யெஸ், மயில் வீட்டுப் பூனைக்குட்டி.
“பரிஹரின் டெரிடோபைட்டைப் படிக்கும்போது தான் நினைத்தேன். உன் அம்மாதான் சொன்னாள் – ஜெனிடிக்ஸ் படிக்கும்போதுதானாம்.. பரீட்சையிலும் போய் தூங்காதே மகளே…”
நானும் மனதிற்குள் சொல்கிறேன்.. “பரீட்சையிலும் போய் தூங்காதே மயிலே…” என்னுடைய மயில் பாட்டனி ஸ்டூடண்ட்..எனக்கென்ன தெரியும் பாட்டனியில்? ஆங்கிலம் தெரியாதவனுக்கும் எ பி ஸி டி என நான்கு எழுத்துக்கள் தெரியும்போது. எனக்கும் பாட்டனியில் தேலோபைட்டா, பிரையோபைட்டா என இரண்டு பெயர் சொல்லத் தெரியும். பூக்கும் தாவரம் பூக்காத தாவரம் என்று மயில் பெரிய லெக்சரை ஆரம்பிப்பாள். பாதியில் நிறுத்தி, ‘போரடிக்கிறேனா,’ என்பாள். நான் என்ன சொல்வேன்? பேசாமல் இருப்பேன்.
நான் இல்லாமல் மயிலின் வீட்டில் கிறிஸ்துமஸ் இல்லை. மயிலின் பிறந்த நாள் இல்லை. எப்படி இவ்வளவு நெருக்கமானேன்? சொல்கிறேன். எனக்கு முதலில் அறிமுகம் மயில் இல்லை. மயிலின் அப்பாதான்.
ஒருநாள் தலைமைச் செயலகம் பக்கம். சிகப்பு வர்ண பஸ் நின்றுவிட்டது. பஸ் போகாதுயென்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் அந்த மஞ்சள் வர்ண ஹில்மன் கேம்பிரிட்ஜி. நிலைமை புரிந்து, என்னைப் பக்கத்து வீட்டுக்காரனாகத் தெரிந்து கொண்டார் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். ‘கெட் இன்’ சொல்லிக் கதவைத் திறந்தார். முன் ஸீட்டில், அவருக்கு வலது பக்கம் நன்றி சொல்லி உட்கார்ந்தேன். அறிமுகப் பரிமாற்றம், கார் போகிறது என்பதை ‘வார் மெமோரியலைப் பார்த்துத்தான் தெரிந்தேன்.
“என்ன அது புத்தகம்?” – தாமஸ் கேட்டார்.
“சாத்தர் – ட்ரபிள்ட் ஸ்லீப்…” தாமஸ் ஆச்சர்யப்படவில்லை. சந்தோஷப்பட்டார்.
“சாத்தரில் வேறு என்ன படித்திருக்கிறீர்கள்?”
“த ஏஜ் ஆஃப் ரீஸன்.”
“வேர்ட்ஸ்?”
“படித்ததில்லை.”
“அவசியம் படியுங்கள்.”
“வேர்ட்ஸ் எனக்குக் கிடைக்கவில்லை.”
“நான் தருகிறேன்…” சாந்தோம் வந்தது. க்ரீன் வேஸ் ரோட் வந்தது.
‘பொகைன் வில்லா’ மயிலின் வீட்டிற்குப் பொருத்தமான பெயர்தான். சுற்றுச்சுவர் பூராவும் வெள்ளையாய், ஆரஞ்சாய். இரண்டும் கலந்ததாய் – பொகைன்விலா பூக்கள் – இலைகளே இல்லாமல.
தாமஸ் ஆண்டர்ஸன் என்னை வீட்டிற்குள் அழைத்தார். போனேன். மயிலையும் மயிலின் அம்மாவையும் அறிமுகம் செய்தார். வெளிச்சமான ஃப்ரிஜ்ஜிலிருந்து புகை நெளியும் கொக்காகோலா.
மயிலின் அப்பாவிடம் எவ்வளவு புத்தகங்கள்……ஒரு புத்தகம் வாங்கப் போனவன் இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டு வந்தேன். ஆஸ்கர் வயில்டின் – தாஸ்தாவ்ஸ்கியின் – இன்னும் நிறைய…
மயிலின் அறையிலும் நிறைய புத்தகங்கள்.. என்ன புத்தகங்கள்? கார்ட்டூன்ஸ். நாய் வளர்ப்பு. பூனை வளர்ப்பு. மீன் வளர்ப்பு. வீட்டை அலங்கரிப்பது. தோட்டக் கலை. இவைகளைத் தவிர்த்து பெரிய பெரிய உறை போட்ட வால்யூம்கள் – இசையைப் பற்றி… இசை விற்பன்னர்களைப் பற்றி; அவர்களுடைய சாதனைகள் பற்றி…போகட்டும்.
மயிலைப் பற்றிய பிற விஷயங்கள் – ஸ்டெல்லா மேரீஸில் பி எஸ்ஸி இறுதி ஆண்டு. பாட்டனி மெயினில் முன் வரிசையில். கல்லூரி முழுவதுக்குமே கனவுக் கன்னியாக.
என்னைப் பற்றி – ப்ரசிடென்ஸியில் எம்.ஏ இறுதியாண்டு – ஆங்கில இலக்கியத்தில் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம். புரபஸர் உறுதி சொல்லி இருக்கிறார். ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அப்புறம்? பான் அமெரிக்கனில், பாரிஸ் வழியாக, சுதந்திரச் சிலை வரவேற்க – யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. ஹார்வர்ட் யுனிவாஸிட்டியில் மஞ்சள் நிறப் பூக்கள் உதிர்ந்த விரிப்பாய் விரிந்திருக்கிற மைதானத்தில், மூடுபனியில், பக்கத்தில் மயில். மயிலின் அருவி என்னுடைய தோளில்..சபையரில் மீசை வைத்த மஹாராஜாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மஹாராணியுடன் சுதந்திர சிலையைப் பார்த்து வருவேன்.
என் மயிலை, என் பெப்பியை நான் காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலை அவளிடம் நான் வெளிப்படுத்தவில்லை. காரணம்? காதலுக்கு அர்த்தம் காதல் இல்லையாம். பின்? காதலுக்கு அர்த்தம் செக்ஸôம்? என் மயில்தான் சொல்கிறாள். இதை என் பகுத்தறிவும் இருதயமும் ஒப்புக் கொள்ளவில்லை;. காதல் வெறும் செக்ஸ் இல்லை என்பதை எப்படி விளக்குவேன்? காத்திருக்கிறேன்; காலத்திற்காக.
என்னுடைய மயிலைப் பியானோ பைத்தியம் என்றேன். பியானோவுக்கு மட்டுமல்ல, இசைக்கே அவள் பைத்தியம். இசைக்குஞ்சு என் மயில். கிளாரினெட்டில் தனித்வம் காட்டியவன் மொஸôர்ட் என்பாள். ஷைக்காவ்ஸ்கியின் ஃபிரான்ùஸஸ்கா – டி – ரிமினியாம். அதை அந்த ஸ்டீரியோவில் போட்டுக்கொண்டு ரெட் கார்பெட்டில் மயில் ஆடும் ஆட்டம்… ஆடு மயிலே ஆடு. பொன் வர்ணக் கூந்தலுக்கு பீர் ஊற்றிக் குளிக்குமா என் மயில்? அவளின் கூந்தல் அந்த வர்ணமாய்; அந்த நுரைபோல்…
ஃப்ரான்ஸ் ஷ÷பருக்கு பித்தோவன் கடவுள் மாதிரியாம். இசைஞர்களைப் பற்றி மயிலுக்குத் தெரியாத விஷயமே கிடையாதோ?
ஸம்மர். மயில் அப்பாவோடும் அம்மாவோடும் லோனாவாலாவில். லோனாவாலா என்ற பெயரைக் கேட்டாலே என் மயிலின் கண்கள் ஒரு மயக்கம் மயங்கிச் சிரிக்கும். கண்களுமா சிரிக்கும்? சிரிக்கும். என் மயிலுக்கு மட்டும். பத்து நாட்கள் மயில் அந்த மலைச் சரிவுகளின் ஈரக் காற்றில. அதெல்லாம் பித்தோவன் ரசனை மாதிரியாம். லோனாவாலா ரசனை. போகட்டும்..
மணக்கும் எங்கள் பாத்ரூம். ஜில்லென்ற ஷவரின் கீழ் பச்சை நிற ரப்பரின் மேல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். பெப்பி பெப்பி பெப்பி.. மயிலே மயலே. என்னென்னவோ நினைக்கிறேன். மயில் பீர் வர்ணக் கூந்தல். ரெட் கார்பெட். ஜ÷ம் ரீவ்ஸ். ஜøலி ஆண்டரூஸ். ரசனை. ஓவியம். வாஷ்கோ. ரசனை. சீன்கானரி 007. ரெக்யல் வெல்ச். ரசனை, மயில், ரசனை. கண்டு பிடித்து விட்டேன். கண்டு பிடித்து விட்டேன். ஷவருக்கும் பச்சை நிற ரப்பருக்கும் இடையே போய் போய் வந்தேன். குளிரும் ஷவரில் ஷேக்.
மயிலே. நீ இறகு போடப் போகிறாய். குயிலாக இந்த ஷோல்டரில் சாய்ந்து பாடப் போகிறாய். ஆர்க்கமிடிஸ் போல ஓடினால் என்ன? பாம்பே டையிங்கின் கதகதப்பில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறேன். ஷவரை நிறுத்துகிறேன். நீர் சொட்டுச் சொட்டாக பச்சை நிற ரப்பரில் உருண்டு உருண்டு ஓடுகிறது.
கதவுக்கு வெளியே தங்கையின் குரல். “அண்ணா, என்ன பண்ணுகிறாய்? குளிக்கிறாயா, இல்லை பாத்ரூமை கழுவி விட்டுக்கொண்டு…..” “ஷட்டப்,” கதவைத் திறக்கிறேன்.
“லிட்டில் நெல் ; இந்த பாத்ரூமில் நான் ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன்..”
“உனக்கென்னப்பா, நீ பெரிய ஆர்க்கிமிடிஸ்.”
எங்கள் வீட்டில் லிட்டில் நெல் பிரியம் வந்துவிட்டால் வீட்டில் எல்லோரையும் போப்பா வாப்பா என்றுதான் பேசும். ஒன்றும் சொல்லக்கூடாது. அருமையான குழந்தை..
என் அறைக்குள் ஓடுகிறேன். என் மயிலுக்கு ரோஜா நிறக் காகதிதங்களில் காதலுக்கு ஒரு தீஸிஸ். என்னுடைய காதல் ராணிக்கு காதல் சாசனம் எழுதுவது இந்தப் பட்டையடித்த லுங்கியைக் கட்டிக்கொண்டா? சுருட்டி எரிகிறேன். டார்க் ப்ளூ பேண்ட். சில நிமிடங்கள் மயிலின் கூந்தல் நினைப்பில். எழுத ஆரம்பிக்கிறேன்.
அன்புத் தோழி பெப்பி,
உன் நண்பன் ஆனந்த்ஷங்கர் எழுதும் இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தைத் தருகிறதா?பிரியமுள்ள பெப்பியே. எங்கள் வீட்டு பாத்ரூமில் நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறேன். அது என்ன? எழுதுகிறேன். பெப்பி; கோடை வந்தால் நீ லோனாவாலா, லோனாவாலாயென்று ஓடிப் போகிறாயே…. அதை என்ன வென்று சொன்னாய்? ரசனையென்று. இப்போதும் இல்லையென்று மறுக்க மாட்டாய். உதகமண்டலத்தை விட அந்த லோனாவாலா உனக்கு சுகமாக. இனிமையாக..லோனாவாலா ரசனை. இது உன் ரசனை. உன்னுடைய இன்னொரு ரசனை – நிறைந்து வழியும் பீர் கிண்ணத்தில் பொங்கிப் பூரிக்கும் பொன்னிற நுரைகள் உரசி நொறுங்கும் ஓசை எப்படி இருக்கும்? நீ சொல்வாய் – ஜøலி ஆண்ட்ரூஸ் குரல் போல்யென்று. அந்தப் பீர் நுரைக் குரலுக்காக ‘நட்சத்திர’ படத்தை மூன்று தடவைப் பார்த்தது நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய் என் அம்மாவிற்கும் ஜøலி ஆண்ட்ரூஸ் ரசிக்குமா? ரசிக்கவில்லை. அவளுக்கு டி.கே பட்டம்மாளின் ஆலாபனை. சங்கராபரணம். புன்னாகவராளி. இது அவள் ரசனை.
இன்னும் உன் ரசனைகளின் அட்டவணை.
சௌன்ட் ஆஃப் ம்யூஸிக் ஏழு தடவை ஏன்? அந்த ரெஸ்பிகி அவனுடைய ரோமாபுரி ஊற்றுக்கள். ஜிம் ரீவ்ஸ். க்ளிப் ரிச்சர்ட். கார்லோ பான்டியின் மனைவியும் அவளுடைய நடிப்பும் – இவை அத்தனையுமே உனது ரசனை ரசனை ரசனை. அந்த ரசனை சுகமானது. ஆனந்தமானது – இதயத்திற்கு; அதன் உணர்வுகளுக்கு. இந்த சுகானுபவமான ரசிப்புக்குச் சரியான பொருள்தான் காதல். ஒப்புக்கொள். கர்ஸ்ங்ழ் ர்ச் அழ்ற்ள் என்றால் அர்த்தம் என்னவோ – காதலுக்கு அர்த்தம் அதுதான். அவசரப்பட்டு விடாதே பேபி. ரசனை எல்லாமே காதலா? உனக்கு ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கவனமாய்ப் படி.
லோனாவாலாவின் அமைதியான புல்வெளியில் ஓடி ஓடி வண்ணத்துப் பூச்சி பிடிக்கிற உன்னுடைய ரசனை; ஜøலி ஆண்ட்ரூஸின் பாட்டில் மயங்கும் உன் ரசனையின் சுகம் – இவற்றிலெல்லாம் செக்ஸ் – பாலுணர்வு ஒட்டி இருக்கின்றதா? அல்லது இதற்கு அடிப்படை செக்ஸô? சொல்வாயா நீ? சொல்ல மாட்டாய். ஜாக்கிரதையாக வாசி தோழி. இது ப்ரையோபைட்டா இல்லை. ரசனை என்பது காதல்தான். செக்ஸ் அல்ல. காதல் வேறு, செக்ஸ் வேறு. இரண்டையும் ஏன் பிணைத்து நோக்க வேண்டும்? கூடாது – அது தப்பு. செக்ஸ் என்றால் என்ன?
Sex is an instinct ; A biological need. காதல் அது போன்ற instinct அல்ல. உடல் பூர்வமான தேவையும் அல்ல. பாலுணர்வு எல்லோருக்குமே பொதுவாக. ஆனால் காதல், ரசனை – எல்லோரிடமும் இருக்கிறதா சொல்? இல்லை. எல்லா மனிதர்களுமா காதலிக்கிறார்கள்? சொல் பேபி. அப்பாவின் அறையில் ‘கிங்ஸ்’ ஸ்டோரி இருக்கும். படித்துப்பார். எல்லோருக்குமே பொதுவான பாலுணர்வோடு எல்லோருக்கும் பொதுவாக இல்லாத காதலையும் ரசனையும் பிணைப்பது கூடாது. காதல் வயப்படும் ஒரு ஆண் பெண் இருவரிடையே பாலுணர்வு கிடையாது என்பதல்ல நான் சொல்லிக் கொண்டு வருவது. அந்தக் காதலுக்கு அடிப்படை பாலுணர்வு உடலில் இருந்து – அதாவது Physical. காதலுணர்வு உள்ளத்தில் இருந்து – அதாவது psychical.
உடலின் உஷ்ணமான எழுச்சியும்; ஹிருதயத்தின் ஆன்ம ரசிப்பும் ஒன்றா பேபி? இப்போது நீ ஒப்புக் கொள்வாய் – காதல் செக்ஸ் அல்ல என்பதை. காதல் ஒரு ரசனைதான். ஆனால் ரசனைகள் எல்லாமே காதலா? சந்தேகம் வரலாம் உனக்கு. சொல்கிறேன். ஒரு பொருளின், இசையின், நபரின் மீது நமக்கு ரசனை உள்ளது என்றால் அந்த ரசனை என்பதுதான் முதல் கட்டம் என்பதல்ல. ரசனை நமக்கு ஏற்பட்டிருக்கிற பொருளின் மீது முதலில் ஏற்படுவது அட்மிரேஸன்தான. அந்த அட்மிரேஸன் நேற்று இன்று நாளை என்ற அப்பியாசத்தில்தான் ரசனையாக மலர்கிறது. கவனமாகப்படி. அந்த ரசனையின் பரிணாம மலர்ச்சிதான் காதலா? பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல – ஒரு பெண்ணின் இயல்புகளை ரசிக்கின்ற ஆண் மகனை அதே பெண்ணும் ரசிக்கும்போது ஒருமிக்கின்ற ரசனைதான்; ரசனையின் பரிவர்த்தனை காதல.
என் அன்புள்ள பெப்பியே ; இனியும் நீ காதல் என்றால் செக்ஸ் என சொல்லமாட்டாய். மை டியர் ஸில்வியா ஆண்டர்ஸன், காதலைப் பற்றி இவ்வளவு நீண்ட விளக்கத்தை உனக்கு எழுதியிருப்பது, காதல் செக்ஸ் அல்ல என்பதை வெறுமே விளக்குவதற்கு மட்டும்தானா? இல்லை பெப்பி, இல்லை. இக் கடிதம் வெறும் காதல் பற்றிய சாஸனம் அன்று. என் காதலின் வெளிப்பாடு. உன்னுடைய குயில் இசையை நான் ரசித்த ரசிப்பும்; அந்த ரெட் கார்பெட்டில் அண்டனியாக ஹாம்லெட்டாக எனது நடிப்பாற்றலை நீ ரசித்த ரசிப்பும் உன் நாட்டியத்தில் நான்; கீட்ஸிற்கு ஒப்பாக கிதை இயற்றும் என் கவித்துவத்தில் நீ; உன் ஆடை அலங்காரத்தில் நான்; ஷேக்ஸ்பியரின் முப்பத்தேழு நாடகங்களையும் பிளந்து பிளந்து சொல்லித் தருகிற என் ஆங்கில இலக்கியப் புல1மையில் – நீ இப்படி உன்னில் நானும், என்னில் நீயும் கொண்ட, பாலுணர்வின் நெடியே அற்ற ஒருமித்த ரசனையின், ரசனைப் பரிவர்த்தனையின் அர்த்தம் என்ன சொல் தோழீ? ஸôரி நான் அழுகிறேன். என்னைச் சில நாட்கள் காணாமல் நீயும், உன்னைச் சில நாட்கள் காணாமல் நானும் எப்படி சோகமாகிச் சோர்வடைந்து போகிறோம். ஏங்கிக் கலங்கிப் போகிறோம். மீண்டும் கண்டதும் அந்த ரெட் கார்ப்பெட்டில் நீ ஆடும் ஆட்டம் என்ன, பாடும் பாட்டென்ன? – இதற்கெல்லாம் பொருள் என்ன ராணி? நான் சொல்லட்டுமா கோடிட்டு எழுதுகிறேன். லவ். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அட்மிரேஸன் ரசனையாக உயர்ந்து காதலாக மலர்ந்திருப்பதை நீ புரியவில்லையா? உணர்வு வயப்பட்டுக் கண் கலங்கி எழுத முடியாமல் தவிக்கிறேனே – அதே கண்ணீரும் உணர்ச்சி நெரிசலும் உன்னில் ஏற்படவில்லையா? அந்த மன நெரிசலை காதல் என நீ புரிந்து கொண்டால் – தோழி; உனக்காக எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு மெரீனா ரெஸ்டாரண்ட்டில் காத்திருப்பேன் – அன்புடன் வந்து சேர்…
உன் அன்பு நண்பன்
ஆன்ந்த் ஷங்கர்
கடிதத்தை முடித்தேன். தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டி போல சிகப்பு நிற தகர டின்; என் காதல் ராணிக்குத் தூது போகிற காதல் அஞ்சலும் இதற்குள் தானா? ஒரு பால் வெள்ளை அன்னம் கொண்டு செல்லாதா? ஒரு பஞ்சு மேனி பொமரேனியன் எடுத்துப் போகாதா? வழியில்லை. கடிதத்தைத் தெரு முனை பாக்ஸில் போடுகிறேன்.
ஏழாம் தேதி இரவு நான் தூங்கவில்லை. மகத்.தான காதல் காவியங்களை எடுத்து வாசிக்கிறேன்.
எட்டாம் தேதி. சரியாகச் சாப்பிடவில்லை. யாரோடும் பேசவில்லை. என் மயில் வராவிட்டால்? என் காதலை நிராகரித்து விட்டால்? என்ன செய்வேன் நான்? ஸலீம் மாதிரி கண்ணீர் விடுவேனா? தாடி வைத்துக்கொண்டு தாஜ்மஹாலில் பெப்பி பெப்பி யென்று அலைவேனா? இல்லை – அண்டனியைப் போல கண் கலங்கியது.
கலகத்திலும் கவனமாய் ட்ரெஸ் செய்கிறேன். கிளம்புகிறேன். மயில் வீட்டுப் போர்டிகோவில் மஞ்சள் நிற ஹில்மன் கேம்பிரிட்ஜ். டேவிட் அதைத் துடைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு வியர்க்கிறது. மயிலைச் சுமந்துகொண்டு அந்த மஞ்சள் வர்ணம் புறப்படுமா? காதல் தேவதையைப் பிரார்த்திக்கிறேன்.
பஸ்ஸில் கிளம்புகிறேன். 4.46 சாந்தோம். 4.48 ராணிமேரி. 4.50 மெரீனா. இறங்கி நடக்கிறேன். 5 மணி. ரெஸ்டாரண்ட்டில் மஞ்சள் வெயில் முகத்தில் அடிக்கிறது. பிரதான வாயிலில் கூர்க்காவின் ஊதல். மஞ்சள் வர்ணமா? இல்லை. வேறு கார். 5.05. வருவதெல்லாம் எம்எஸ் க்யு; எம்எஸ்ஆர்..எங்கே அந்த சிசி. எங்கே என் மயிலின் மயில் வாகனம்?
கூர்க்கா ஒரு முட்டாள். ஊத மறந்து நிற்கிறான். ஹில்மன் கேம்பிரிட்ஜ் ஆகாயத்திலிருந்து வழிந்து வருவதைப் போல..டிரைவிங் ஸீட்டல் மயில. மயிலின் கண்களில் சிரிப்பு. தாமரை இதழ் என்னை நோக்கி அசைகிறது. அழைக்கிறது. சிரிக்கிறேன். ஓடுகிறேன். கதவைத் திறக்கிறேன். மயிலுக்குப் புடவை என்ன அழகாய்…
மயிலின் கண்கள் ஆனந்த ஷங்கரின் கண்களை. ஆனந்த் ஷங்கரின் கண்கள் மயிலின் கண்களை. ஜுய்க் பாக்ஸ் பாட்டுப் பாடி எங்களை வரவேற்கிறது.
ப்ளு டயமண்டில் ரோஸ் மேரீஸ் பேபி. கேலார்டில் ரத்தச் சிகப்புக் கம்பளத்தின் மேல் வெளிச்சமான நடனங்கள். ட்ரைவ் இன். கடற்கரைக் கோயில்.
மயில் ஒரு நாள் என்னிடம் சொன்னது : “தாடி வைத்துக் கொள்ளுங்கள்.” நான் சொன்னேன் : “நானென்ன ஆப்ரஹாம் லிங்கனா? ஆஃப்ட்ரால…” க்யூடெக்ஸ் முலாமிட்ட மயிலின் நகங்கள் என் உதடுகளை மூடின. மயில் கேட்டாள். “யாரெல்லாம் உங்கள் குருஜிகள்; யாருக்கெல்லாம் நீங்கள் அட்மைரரர்?” தொடர்ந்தும் மயிலே சொன்னாள்.
“ஷேக்ஸ்பியர்?”
“யா..”
“ஷா..”
“யா..”
“டால்ஸ்டாய் அன் ஹேமிங்வே?”
“யா..”
“யுவர் செகால்.”
“யா..”
அவர்களைப் போலவே நானும் தாடி வைத்தேன். தாடியுடன் நான். என்னுடன் மயில். எங்களுடைய காதலை எப்போது வீட்டில் சொல்லப் போகிறோம்? விரைவில் மயிலின் அப்பா தெரிந்தால் சந்தோ1ப் படுவார். ஆனந்த் ஷங்கர் ஒரு நவீன ஷேக்ஸ்பியர் ஆயிற்றே…என் அம்மாவிற்குத் தெரிந்தால்? மயிலுக்கும் காது குத்தி வைரத்தோடு போடுவேன் என்பாள்.
நானும் மயிலும் கலாம் கனியக் காத்திருக்கிறோம்.
ஓடியன் கடைசி வரிசையில் நானும், மயிலும். எல்லோரின் கண்களும் எங்கள்மேல்.
‘க்ராஜ்யேட்’ ஆரம்பத்தில் மயில் வெட்கமடைந்தது. அப்புறம் சிரித்தது. பின் மௌனம். சந்தோஷம். வருத்தம். கடைசியில் அதிகமான பூரிப்பு. அருமையான திரைப்படம். பின் மயில் ஏனோ சிந்தனையானாள். மஞ்சள் வர்ணத்தை மௌனமாகச் செலுத்துகிறாள். ஒரு வாரமாகவே அவள் ஏதோ சிந்தனையில்.
ஒரு நாள், என்ன மழை என்ன காற்று. ஸ்வப்னாவிலிருந்து நாங்கள். காரின் கண்ணாடிகளில் பனிப்போர்வை. குளுமையாக, மஞ்சள் தேய்த்துக் குளித்தது போல ஹில்மன் கேம்பரிட்ஜ் நீர் வழிந்து அதன் மஞ்சள் வர்ணமே கரைவது போல். நாங்கள் இருவரும் மௌனமாக.
வைப்பர்கள் இயங்குகின்றன. கார் கிளம்புகிறது. அண்ணாசாலை, சேப்பாக், மாநிலக் கல்லூரி…க்வின் மேரிஸ்.
மயில் என்னைப் பார்க்காமலே, “ஆனந்த்; உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்…”
சாந்தோம். க்ரீன்வேஸ்ரோட்…
‘பொகைன்வில்லா – ஈரம் சொட்டச் சொட்ட..
ஒட்டப்பட்ட வெள்ளைக் கவரை என்னிடம் நீட்டுகிறாள்.
“குட் நைட்..”
“குட் நைட்”
மேலே மேகங்கள் முட்டி மோதி வெடிக்கின்றன. கடிதத்துடன் என்னுடைய அறைக்கு ஓடுகிறேன். கதவைப் பூட்டுகிறேன். மயிலின் கடிதத்தைப் பிரிக்கிறேன்.
அன்புள்ள நண்பரே –

ஐந்து தினங்களுக்கு முன்பாக ஷைக்காவ்ஸ்கியின் குளிர்காலக் கனவுகளை ரிக்கார்ட் ப்ளேயரில் போட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது? சிவப்பு விரிப்பில் என்னைக் கூத்தாட வைக்கும் அந்த இசை வறண்டு போயிருந்தது. மயங்கி மயங்கி நான் ரசித்த ரசிப்பெல்லாம் எப்படி எதனால் சலித்துப் போயிற்று. பாதியில் நிறுத்தினேன். சிந்தித்தேன். ரசனையும் சலித்துப் போகுமா?
ஒவ்வொரு சம்மருக்கும் லோனாவாலா இன்னும் சலித்துப் போகவில்லையா? அங்கு போய்ச் சேரும் நாளில் நான் எப்படி மகிழ்ச்சி கொள்வேன்? பிரியும்போது எப்படி மனம் கனத்துக் கலங்குவேன். அப்படிப் பிரிந்து வந்து விடுவதாலேயேதான் அந்தப் பள்ளத் தாக்குகளின் மேல் உள்ள ரசனை மாறாமல் சலிக்காமல் இருக்கிறேனா? அதை விட்டு வர முடியவில்லை என்பதற்காக அந்தப் பள்ளத்தாக்கிலேயே என் வாழ்க்கையை நிரந்தரமாகப் பிணைத்துக் கொண்டால், அப்படிப் பிணைத்துக் கொள்வதாலேயே என் ரசனை என்ன வாகும்? காலத்தில் உலர்ந்து ஆவியாகிப் போகும்.
– அப்படி உலர்ந்து போய்விடக்கூடாது என் ரசனை. அந்த ரசனையின்; காதலின் இனிமையை உலரவிட மாட்டேன் நான். அந்த லோனாவாலாவைப் பிரிந்திருக்கிற பிரிவுதான்; அந்தப் பிரிவின் ஏக்கம்தான் – ரசனையின் காதலின் ஜீவன். சாரம். லோனாவாலாவிலேயே என் வாழ்வைப் பிணைத்து ரசனையின் சுக உயிரை இழப்பதைவிட அதைப் பரிந்திருந்து காலமெல்லாம் கரையாத காதலுடன் வாழவே நான் விரும்புகிறேன்.
ஆனந்த் : வாழ்க்கையில் நாம் நம்மை நிரந்தரமாக பிணைத்துக் கொண்டு சலிப்படையக் கூடாது. பெரு மூச்சுக்களின் உஷ்ணத்தில் நம் காதல் கனலாகிவிடக் கூடாது. நம் நெஞ்சங்களின் ஆழத்தில் என்றும் அது ஜீவ ஊற்றாக ஜீவித்திருக்க. நம் நினைவுகளிலும் கனவுகளிலும் காதல் என்றைக்கும் உயிர்த்திருக்க ; பசுமையாக நிலை பெற்றிருக்க – நாம் நம்மைப் பிரித்துக் கொள்வோம். பிரிவின் ஏக்கம்தான்; அந்தக் ஏக்கத்தின் கண்ணீர் தான் நம் காதலுக்கு உரம். அந்த உரத்துடன் வாழ்ந்திருப்போம் – கண்ணீருடன்; மாறாத காதலுடன் உங்களுடன் விடை பெறுவது – ஸில்வியா ஆண்டர்ஸன் என்ற – உங்களின் பெப்பி…
நான் கண்ணீர் விட்டேன். பெட்ரூமில். பாத்ரூமில். இனி நான் என்ன செய்யப் போகிறேன்? யாரிடம் சொல்வேன்? மயிலின் பொன் வர்ணக் கூந்தலை வாரிவிடாமல்; அவளின் நீல நிற விழிகளைக் காணாமல் – இவ்வளவு அருகாமையில் என்னால் சிறைப்பட்டிருக்க முடியாது. நான் போய் விடுகிறேன். ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. உறுதி செய்து விட்டேன்.
ஸாண்டாகுரூஸ். அப்பா, அம்மா, புரபஸர் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன்; நீலவிழிகளில் நீர்படிய என் மயில்…
ஜூஹிவில் இருந்து குளிர்ந்த உப்பங்காற்று. அந்தக் காற்றில் பொன் வர்ணக் கூந்தல் தலைதெறிக்க விடை தருகிறது. குலுக்கிய தாமரைக் கையை ஒரே ஒரு முத்தம்? முடியவில்லை.
விமானத்தின் கதவுகள் மூடுகின்றன.
ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டியில் ; மஞ்சள் நிறப் பூக்கள் விரிப்பாய் உதிர்ந்திருக்கின்ற மைதானத்தில்; மூடு பனியில் – நான் மட்டும்…..கண்ணீருடன்
ஸ்டெல்லாபுரூஸின் நீண்டகால நண்பர் ஸ்ரீ தேவராஜன் விருப்பப்படி இக்கதையைப் பிரசுரித்துள்ளேன். – ஆசிரியர் நவீன விருட்சம் 79-80வது இதழில் பிரசுரமான கதை

என் நண்பர் ஆத்மாநாம்


கடைசிப் பகுதி
எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு பெண்ணிடம் அறிமுகமான குறுகிய காலத்திலேயே மெல்லிய நட்பை அரும்ப வைத்திருந்தது. நட்பு உறவாகவும் மலர வித்திட்டுக்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் என்ற அவசர குறிக்கீடு ஆத்மாநாமையும் மீறி அப்பெண்ணை நோக்கி எய்யப்பட்டதில் அத்தனையும் கலைந்து போனது. அழகிய மலர்வனம்போல் உருவாகிக் கொண்டிருந்த சதுக்கம் ஒரே நாளில் காலிமனையாகி விட்டது. நிஜமாக வாழ்க்கையில் அந்தக் கணம் தன்னந்தனியாக நின்றார் – ஆத்மாநாம். ஒரு நிமிஷம் அவளை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு விநாடி அவளின் குரலை தொலைபேசியிலும் கேட்க முடியவில்லை. அவள் அவளுடையகுடும்பத்தாரால் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டாள்..அந்த அத்தியாயம் மர்ம புதிராக முற்றுப் பெறாமலே முற்றுப் பெற்றுவிட்டது.
மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின் பாலத்தைத் தாண்டி வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்தோம். தூரத்தில் கடற்கரைச் சாலையில் இருந்து திரும்பி அவள் அவளுடைய பெற்றோர்களுடனும் தங்கைகளோடும் வந்தாள். நாங்கள் அவர்களைப் பார்த்துவிட்டோம். அவர்களும் எங்களைப் பார்த்து விட்டார்கள். ஆத்மாநாமின் உடல் உயர்ந்து விறைத்தது. சட்டென என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர்களுடைய தோற்றத்திலும் நிசப்தம். இறுக்கம். நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையும் எதிர்கொண்டு கடந்தோம். ஆத்மாநாம் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார். கடற்கரைச் சாலையின் புல்வெளியில் நாங்கள் அமர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து ஆத்மாநாம் சொன்னார்: “நீங்க வேனா பாருங்க..அவ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படப் போறா..” ஆனால் எதிர் வந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்டு குலைந்து போனது யார்?
ஆத்மாநாம் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் மயிலாப்பூர் சென்றிருந்தேன்..அது டிசம்பர் மாத அவரின் அன்புக்கு உரியவளின் வீணைக் கச்சேரி. பகல் இரண்டு மணிக்கு ஒரு சபாவில் நடக்கப் போவதற்கான அறிவிப்பு அந்த சுவரொட்டி…ஆத்மாநாமுடன் நட்பு மலர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே அவள் தீவிர வீணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவள்..மானிட புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கணிதங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யப் படுத்தவும் செய்கின்றன. சில நேரங்களில் அதிர்ந்து ஸ்தம்பிக்கவும் வைத்து விடுகின்றன..ஆத்மாநாமின் மனம் ஸ்தம்பிப்பதற்கும் மேலான குழைவிற்கு உள்ளானதுதான் துர்பாக்கியம். இன்னொரு சிறு சம்பவம் கூட இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல… ஒருநாள் காலை ஆறரை மணி இருக்கும். அதிகாலை ஐந்தரை மணிக்கு என்னுடைய அன்றாட வழக்கப்படி மெரீனா கடற்கரைக்குப் போய் ராணி மேரி கல்லூரிக்கு எதிரான புல்வெளியில் உட்கார்ந்துவிட்டு அறைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தில் நான் நடைபாதையில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். ஒரு சதவிகிதஎதிர்பார்ப்பு கூட இல்லாமல் அதே நடைபாதையின் தூரத்தில் ஆத்மாநாம் வந்துகொண்டிருந்தார். அவருடன் அவரின் அண்ணாவும் மற்றொருவரும் வேறு வந்தார்கள். சின்ன கேள்விக்குறியுடனேயேஎன் நடை தொடர்ந்தது. ஆத்மாநாமின் முகத்தோற்றத்தில் வித்தியாசம் ஏதோ இருந்தது. இரண்டொரு விநாடிகளில் தெரிந்து விட்டது. அவருடைய மீசை மழிக்கப்பட்டிருந்தது. ஆத்மாநாமின் அண்ணா கையில் சில பொருட்கள் இருந்தன. ஒரு புள்ளியில் நாங்கள் சந்தித்தோம். வறண்ட வெற்று வார்த்தைகளில் ஆத்மாநாம் சொன்னார்: “என்னோட பாதர் இறந்திட்டார்.. ஸாரி – உங்களுக்குசொல்லலை..அவரோட அஸ்தியை கரைக்கிறதுக்காக போறோம்..நெக்ஸ்ட் வீக் உங்களை வந்து பார்க்கிறேன்..”
நான் எதுவும் சொல்லாமல் நகர்ந்து வழிவிட்டு நின்றுகொண்டேன். அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். பார்த்தபடியே நின்றேன். தென்திசை பார்த்தபடி ஆத்மாநாம் தளர்ந்த நடையில் சென்று கொண்டிருந்தார். அந்தத் தளர்ச்சி கடைசிவரை அவரிடமிருந்து நீங்கவில்லை. வேலை பணியென்று பார்த்து எங்கேயும் அவரால் உட்கார முடியவில்லை. உள்ளூர மணவாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். அது அமைவதற்கும் வழி இல்லாமல் இருந்தது.
ஒரு சமயம் ‘ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் மணமகள் தேவை விளம்பரம் பகுதியில் விளம்பரம் கொடுக்க ஆசைப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் யோசனை செய்து பார்த்து விளம்பரத்திற்கான வாசகங்களை எழுதிக்கொண்டு வந்தார். நானும் அவரும் ஹிண்டு ஆபிஸ் போனோம். அதற்கான பிரிவில் போய் ஆத்மாநாம் விளம்பரத்திற்காக எழுதியிருந்த வாசகங்களைக் கொடுத்தார்.
திரும்பத் திரும்ப வரிகளைப் படித்துப் பார்த்த நாளிதழின் அலுவலர் ஆத்மாநாம் எழுதியிருந்த குறிப்பிட்ட இரண்டு சொற்களை எடுத்துவிட்டு வேறு விதத்தில் எழுதித் தரச் சொன்னார். ஆத்மாநாம் காரணத்தைக் கேட்டார். அந்த இரண்டு வார்த்தைகள் தவறாக வாசிப்போரை நடத்தி விடலாம். அது தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றார் அந்த அலுவலர். ஆத்மாநாம் அந்த வாதத்தை ஏற்கவில்லை. தன்னுடைய அணுகலின் அர்த்தத்தை விளக்கமாகச் சொன்னார். அந்த அலுவலர் உள்ளேபோய் ஆத்மாநாமின் வாசகங்களை வேறு யாரிடமோ காட்டிப் பேசிவிட்டு வந்து குறிப்பிட்ட அந்த வார்த்தைகளுடன் விளம்பரத்தைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார். ஆத்மாநாம் அவருடைய வாசகங்களை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை – எழுந்து வந்து விட்டோம். கோபத்தில் ஆத்மாநாம் முகம் சிவந்து போனார். நீண்ட நேரத்திற்கு என் அறையில் மௌனமாக சிகரெட்புகைத்துக்கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தை நான் என்னுடைய இன்னொரு நண்பரான அம்பலவாணனிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தேன். அவருக்கும் ஆத்மாநாமிடம் பரிச்சயம் உண்டு. அம்பலவாணன் ஃபுட் கார்ப்பரேஷனில் பணியில் இருந்தார். யூனியன் போன்ற அமைப்புகளில் தீவிர பங்குள்ளவர். எல்லா நாளிதழ்களிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது. ஹிண்டு ‘ராம்’ போன்றவர்களிடமும் அம்பலவாணனுக்கு அறிமுகம் உண்டு. பத்திரிகை அலுவலகத்திற்கு ஆத்மாநாமை அம்பலவாணன் அழைத்துப் போனார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஹிண்டுவில் ஆத்மாநாமின் மணமகள் தேவை விளம்பரம் வெளி வந்தது. ஆனால் அவர்கள் ஆட்சேபணை தெரிவித்த வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகளுடன் – ஆத்மாநாமின் சம்மதத்தோடு..
விளம்பரத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே பதில்கள் வந்தன. வந்தவைகளும் ஆத்மாநாமிற்கு திருப்தியாக இல்லை. பதில் கொடுத்த இரண்டொருவரை ஆத்மாநாம் சந்திக்கவும் செய்தார். ஆனால் விளைவுகள் எதுவும் இல்லை. இத்தனைக்கும் இந்த விஷயங்களை ஆத்மாநாம் அவரின் குடும்பத்தாருக்குத் தெரியாமல் வேறு செய்தார். இதெல்லாம் 1981-ல் நடந்தது..எல்லாமே இப்படியா இப்படியாக நீர்குமிழியாய் ஒன்றுமில்லாமலே போயிற்று. அதனால் ஆத்மாநாம் என்ற மென்மையான நண்பன் திரும்ப திரும்ப மனச்சிகைவின் தாக்குதல்களுக்கும் தீவிர சிகிச்சைகளுக்கும் ஆளாக நேர்ந்தது சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியாத கொடிய அவலம்தான். மனநல மருத்துவம் ஆத்மாநாம் காலடியில் தோற்று மண்டியிட்டு விட்டது. ஆத்மாநாமை அது மீட்கவில்லை.
ஆத்மாநாமை அது மீட்கவில்லை..ஆத்மாநாமும் உள்ளூர தோற்றுப்போனார். போராடும் வலிமை இல்லை. வலிமை அற்ற நாட்களில் ஆத்மாநாம் அவருடைய அப்பாவின் மரணத்தைச் சந்திக்க வேண்டி வந்தது. அவரின் மூத்த சகோரர் வேலையின் காரணமாக பெங்களூர் சென்றார். பாதுகாப்பின்மை ஆத்மாநாமின் மனதை நெரித்தது. பாதை தெரியவில்லை. முழுவதுமாக அந்தகாரம் சூழ ஆத்மாநாம் வாழ்க்கையிடம் விடை பெற்றார்.
1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் : “நாம ரெண்டு பேரும் ஒருநாள் சிங்கபெருமாள் கோயில் போயிட்டு வரலாம்..” நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். கோயில்களுக்குப் போகிற ஈடுபாடுகள் குறிப்பிடும்படியாக அவரிடம் நான் அறிந்தவரை இருந்ததில்லை. “என்ன திடீர்னு?” என்றேன். “யாரோ என்னை அந்தக் கோயிலுக்குப் போகச் சொல்லி இருக்காங்களாம்..எங்க அம்மா சொன்னாங்க..எனக்கும் கடவுளோட அவதாரங்கள்ள நரசிம்மர் அவதாரம்தான் பிடிக்கும்..அதனாலேயும் போயிட்டு வரலாம்னு நெனைச்சேன்..” “ஓயெஸ், போலாம் ஒருநாள்..” என்றேன். ஆனால் போகவில்லை. தேதி, நாள், விருதுநகர் பயணம் என மாற்றி மாற்றி எதுவோ குறுக்கிட்டு எதுவோ கூடி வரவில்லை. சிங்கபெருமாள் கோயிலுக்கு ஆத்மாநாமை அழைத்துச் செல்ல முடியாமலேயே ஆகிவிட்டது.
சென்ற வருஷம் மே மாதம் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியன்று நான் என் மனைவி என் மைத்துனர் குடும்பம் எல்லோருமாக ஸ்ரீ பெரும்புதூர் கோயிலுக்குப் போயிருந்தோம். விசேஷ பூஜைகள் நடந்தன. தீபாராதனைக்காக உடையவர் ராமானுஜர் சந்நதியில் காத்திருந்தோம். தீபாராதனை முடிந்து விநியோகம். வெண்பொங்கலையும் தயிர் சாதத்தையும் பெற்றுக்கொண்டபோது இருபத்தி மூன்று வருஷத்திற்கு முன்பு நரசிம்மர் அவதாரம் பிடிக்கும் என்று ஆத்மாநாம் சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்தில் நிழலாடின. அன்று நடுநிசியில் தூக்கம் வராமல் படுக்கையில் விழித்திருந்தபோது சிங்கத்தின் கர்ஜனை என் செவி அருகில் முழங்கியது.
பின் குறிப்பு : 1984 ஆம் வருடம் ஆத்மாநாம் வாழ்க்கை முற்றுப்பெறாமல் இன்றும் தொடர்ந்திருந்தால் நவீன தமிழ் கவிஞர்களான பிரமிள், கலாப்ரியா, ஞானக்கூத்தன் போன்றோரின் வரிசைக் குறிப்பில் ஆத்மாநாமும் முக்கிய இடத்தை பெற்றிருப்பார். அதற்கான அடிநாதங்களையும் வீச்சையும் அவருடைய கவிதைகள் உள்ளடக்கியிருந்ததின் அடையாளங்கள் சாதாரணமானவை இல்லை. நட்பான புளியமரம் பற்றி அவர் எழுதியதை ஒரு சிறு உதாரணமாக சுட்டிக் காட்டலாம். ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…
(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய இக் கட்டுரை முடிவுற்றது. ஆத்மாநாம் பற்றி இன்னும் சில விபரங்கள் வரும் நாட்களில் தொடரும்)

என் நண்பர் ஆத்மாநாம்


பகுதி 2 தற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தார். இடையில் ஒரு வருஷம் நான் என் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். காலை டிபன் சாப்பிட நான்தான் ஆத்மாநாமை வரச் சொல்லியிருந்தேன். அப்போது ஊரில் இருந்து என் அம்மாவும் வந்திருந்தார். “ஆத்மாநாமை சாப்பிட வரச்சொல்லு,” என்று என் அம்மாவும் என்னிடம் கூறி இருந்தார். பொதுவாக நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஆத்மாநாம் ஆசைப்படுவார் – அன்று காலை என் சகோதரியின் வீட்டில் காலை டிபன் – ரவா தோசை. தோசையை என் அம்மாதான் வார்த்தார். பொன் நிறத்தில் முறுகலாக பரிமாறப்பட்ட ரவாதோசைகளைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு வியந்து வியந்து பாராட்டி சாப்பிட்டார் ஆத்மாநாம். சாப்பிட்டப்பின் நானும் அவரும் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டோம். அப்போதுதான் ஆத்மாநாம் பத்து நாட்களுக்குமுன் தான் தற்கொலை முயற்சி செய்துகொண்டதைப் பற்றி தணிந்த குரலில் கூறினார். நான் அதிர்ந்து போனேன். எதனால் தான் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள நேர்ந்தது என்பதற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும் விபரமாக எழுதியிருப்பதாகக்கூறி ஆத்மாநாம் மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை என்னிடம் தந்தார். “தனியாக அப்புறம் படியுங்கள்,” என்றார் – அன்று நான் அவரிடம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தேன். தற்கொலை முயற்சி மட்டும் மீண்டும் ஒருமுறை எந்தச் சூழ்நிலையிலும் அவர் மேற்கொண்டு விடலாகாதுயென்று அவரிடம் உருக்கத்துடன் சொன்னேன். தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. எந்த முயற்சியும் இல்லாமல் பிரபஞ்சவெளியின் பற்பல புலப்படாதஉள்தளங்களை காணுகிற பார்வைக் குவிப்பின் புள்ளி 1982 ஆம் வருடத்தில் இருந்து என்னுள் திறந்து காலமற்ற அநேக காட்சிகளை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தது. நான் சொன்னவற்றையெல்லாம் ஆத்மாநாம் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆயினும் அவருடைய வாழ்க்கை தற்கொலையில்தான். ஆத்மாநாம் இறந்து சில மாதங்களுக்குப் பின் கவிஞர் பிரம்மராஜன் ஆத்மாநாமை நினைவு கூர்ந்தும், ஓர் அஞ்சலியாகவும் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார். ஆத்மாநாம் பற்றி குறிப்பும் ஒன்றும் அதில் எழுதியிருந்தார். ஆத்மாநாம் வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இன்றி தற்கொலை செய்துகொண்டார் என பிரம்மராஜன் கருத்துச் சொல்லி இருந்தார் – அது பிழையான கருத்து. ஆத்மாநாமின் தற்கொலைதான் வாழ்க்கையைப் பற்றிய அவரின் கடுமையான புகார். கடைசிப் புகார்..புகார்களுக்கு உரிய கடின வாழ்க்கையை தொடர முடியாமல் போனதில்தான் தற்கொலை என்ற முடிவை அவர் மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுதான் அவலம். அப்படியொரு அவலத்திற்கு உட்படுத்திக் கொள்வதற்கான கொடிய வீழ்ச்சிகளையோ, தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்புகளையோ ஆத்மாநாம் சந்தித்ததில்லை. சிறு சிறு சரிவுகள் ஏற்பட்டன. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்தன. அதையே ஆத்மாநாமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அத்தனை மிருதுத் தன்மை கொண்டது அவரின் மனம். சுக்கல் சுக்கலாக உடைந்து போனது அதனால்தான். 1979 ஆம் வருடம் இறுதி மாதங்களில் மனச்சிதைவின் முதல் தாக்குதல் அவரில் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட மனச்சிதைவின் அடிப்படைக் காரணங்களாக மனோதத்துவ டாக்டர்கள் தெரிவித்தவை வெறும் தர்க்க ரீதியானவை. ஆத்மாநாமின் குடும்பத்தினர் தெரிவித்த அபிப்பிராயங்கள் மேலோட்டமான ஊகங்கள்தான். ஆத்மாநாமின் மனமையத்தை அவர்கள் கண்டுணர்ந்ததே இல்லை. ஆத்மாநாமின் ஆளுமையின் முக்கியமான தளங்களை அவர்கள் சிறு இழைகூட அறிந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பிறகு தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில் சில இலக்கிய நண்பர்கள் அவரைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். அவற்றையெல்லாம் வாசித்த ஆத்மாநாமின் சகோதரர், “அவன் (ஆத்மாநாம்) இப்படியெல்லாம் இருந்திருப்பான் என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது,” என்று சொல்லி இருந்தார். சத்தியமான வார்த்தை இது. மிக அந்தரங்கத்தில் ஆத்மாநாம் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது. எதனால் அவருக்கு அத்தனை கடுமையான மனச்சிதைவு ஏற்பட்டது; எந்தக் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் – இன்றுவரை நான் மட்டுமே அறிந்தவை. இதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. என்னிடம் மட்டுமே ஆத்மாநாம் அவரின் மிக மிக அந்தரங்க வாழ்வின் சில சம்பவங்களை வெளியிட்டுப் பகிர்ந்துகொண்டார். அவருடைய அன்றாட வாழ்க்கை அந்த விகிதங்களில்தான் கழிந்தது. ஆத்மாநாம் எங்கே வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பார்க்கவும் பேசவும் போவார். காலையில் இருந்தே சென்றுகொண்டு சந்தித்துக்கொண்டு இருப்பார். ஆனால் ஒரு தினத்தில் அவர் கடைசியாக வந்து சந்திக்கும் நபர் – நான்தான். அப்புறம் நானும் அவரும் சேர்ந்து எங்கேயாவது கிளம்பிப் போனாலும் போவோம். போகாவிட்டாலும் இல்லை. என்னைச் சந்தித்தபின் யாரையும் பார்ப்பதற்குச் செல்வதில்லை. நானும் அவருமாக பேசிக்கொண்டிருப்போம். எங்கள் பேச்சில் பெரிய இலக்கிய விசாரம் ஏதும் இருக்காது.ஒருநாள் அவரின் அன்புக்குரியவள் முதல் முறையாக பிரியத்துடன் அவருடைய கையில் கிள்ளி வைத்துவிட்டாள். அவள் கிள்ளிய அரைமணி நேரத்தில் ஆத்மாநாம் என் அறையை நோக்கிப் புறப்பட்டு விட்டார். எதற்காக அவள் கிள்ளி வைத்தாள் என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் அந்த அவசர வருகை …! – எங்களுடைய நட்பின் மையம் இதுதான். சில நேரங்களில் நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பேன். அவர் சிகரெட் புகைத்தபடி மௌனமாக கால்களை நீட்டியவாறு உட்கார்ந்திருப்பார். என் தூக்கம் அவரை தனிமைப் படுத்தாது. சில நேரங்களில் அன்புடன் கோபித்துக் கொள்வார். “ராட்சஸ், வெளியே உலகம் ஜெட் மாதிரி இயங்கி போயிண்டு இருக்கு.. நீங்க இப்படி தூங்கிண்டு இருக்கீங்களே..” என்பார். ஒருநாள் இரவு பத்து மணியாகி விட்டது. மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. அது 1979ஆம் வருஷத்தின் June மாத இறுதி. நான் விளக்குகளை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். தூக்கம் புலன்களில் கவிந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் வந்து கதவைத் தட்டினார். சில வினாடிகளுக்குப் பிறகு நான் எழுந்து விளக்கைப் போட்டு அறைக் கதவைத் திறந்தேன். “வாங்க, பைலட் தியேட்டர்ல நல்ல இங்கிலிஷ் படம் ஒண்ணு காட்டறான்.. நாலைஞ்சு நாள்ள முடியப் போகுது..கௌம்புங்க போலாம்..” -ஆத்மாநாம் அவசரமாக சொன்னார். “மணி இவ்வளவு ஆயிடுச்சே..” என்றேன். “மழை வேற தூறிண்டு இருக்கு..” நான் சிறிது தயக்கத்துடன் சொன்னேன். “மெயின் பிக்ச்சர் ஆரம்பிச்சிருக்காது..மழை பெரிசா ஒண்ணும் இல்லை. பைலட் தியேட்டர் இதோதானே இருக்கு..அஞ்சு நிமிஷத்ல போயிடலாம்..” ஐந்தாவது நிமிடம் அறைக் கதவை பூட்டி நாங்கள் கிளம்பி விட்டோம். மழை நொசநொசவென்று தூறிக்கொண்டிருந்தது. நான் பின்னால் உட்கார்ந்துகொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளை கிளப்பினார். தெருக்கள் மழையால் ஒரு மாதிரி சொத சொதவென்று இருந்தன. ஆத்மாநாம் கொஞ்சம் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தினார். ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு இடதுபுறம் மோட்டார் சைக்கிள் வேகமாக திரும்பியது. எதிரில் லாரி ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் சட்டென மோட்டார் சைக்கிளை இடது பக்க சாலை ஓரமாக திருப்பினார். மோட்டார் சைக்கிள் மழை நீரின் சொதசொதப்பில் பளீரென சுழன்று ஓரத்தில் சேதப்பட்டு உருண்டு கிடந்த கனமான சிமிண்ட் குப்பைத்தொட்டியில் மோதி சாய்ந்தது. ஆத்மாநாம் சட்டென தாவி விலகி கீழே விழாமல் நின்றுகொண்டார். கிட்டத்தட்ட குப்பைத்தொட்டிக்குள்ளேயே நான் புகுந்து விழுந்து விட்டிருந்தேன். என் இடது தோளின் மேல் மோட்டார் சைக்கிளின் ஹேண்டில்பார் பலமாக தாக்கி என் தோள் மேலேயே விழுந்து விட்டிருந்தது. குப்பைத் தொட்டியின் துருத்தியபடி இருந்த நீண்ட இரும்புக் கம்பி என் இடது கையின் மேல் பகுதியை கீறி சதையை பிய்த்து ரத்தக் காயமாக்கி விட்டது. Oh, God, Oh, God, என்று ஆத்மாநாம் செய்வதறியாமல் கத்தினார். நான் கைகளை ஊன்றி எழுந்துகொள்ள முயன்றேன். முடியவில்லை. இடதுகை என் கட்டுப்பாட்டில் இல்லை..வெறும் தொங்கலாக ஊசலாடியது. “இடது கையை ஊண முடியலை..” என்றேன். நான் எழுந்துகொள்ள ஆத்மாநாம் உதவ வேண்டியிருந்தது. “என் சட்டையின் இடதுகையின் மேல் பகுதி ரத்தமாக இருந்தது. “இடது கைக்கு ஏதோ ஆயிடுச்சி,” என்றேன். “வாங்க – ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் பக்கத்லதான் – அங்கே போயிருவோம்,” என்றார் ஆத்மாநாம். அவர் மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே வர நான் அவருடன் மெல்ல நடந்தேன். மழைத்தூறல் நிற்காமல் இருந்தது. ராயப்பேட்டை மருத்துவமனைக்குள் நுழைந்தபோது தூரத்தில் பைலட் தியேட்டரின் விளக்குத் தெரிந்தது. ஜனசந்தடி இல்லாத மருத்துவ மனைக்குள் இருந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு நானும் ஆத்மாநாமும் வெளியில் வந்தோம். தேவையான சிகிச்சைகள் எனக்குத் தரப்பட்டிருந்தன. என் இடது பக்க தோள்பட்டை எலும்பு அதன் இடத்தில் இருந்து பெயர்ந்து கீழ்நோக்கி இறங்கிப் போயிருந்தது. அதன் மத்திய பகுதியில் மெல்லிய கீறலும் ஏற்பட்டிருந்தது. அதற்கான கட்டுகளை மிக நேர்த்தியாக போட்டிருந்தார்கள். இருபது நாட்களுக்குப் பிறகுதான் கட்டுகளை அவிழ்க்க வேண்டும். அதுவரை இடது கையை உபயோகிக்க முடியாது. கையை அசைக்கக்கூட முடியாதபடி கட்டு இருந்தது. மருத்துவமனையில் என்னைச் சோதித்த டாக்டர் ஒரு பெண். என் பெயரையும் வயதையும் கேட்டார். சொன்னேன். குறித்துக் கொண்ட டாக்டர் என்னுடைய மாத வருமானம் என்னவென்று கேட்டார். இந்தக் கேள்வி நான் எதிரேபாராதது. எனக்கு ஏது வருமானம்? பணம் சம்பாரிப்பதற்காக எந்த வேலையிலும் ஈடுபட்டிராத நான் என் மாத வருமானமாக என்ன சொல்ல முடியும்? அதனால் சில வினாடிகள் பதில் சொல்லாமல் வெறுமே முழித்தேன். பின் என் மாத வருமானம் 750 ரூபாய் என்று சொல்லி வைத்தேன். அதையும் குறித்துக்கொண்ட டாக்டர் எக்ஸ்ரே மற்றும் சிகிச்சைகளுக்காக 25 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்றார். இப்போது ஆத்மாநாம் குறுக்கிட்டார். “அரசாங்க மருத்துவ மனையில் எல்லாம் ப்ரீதானே?” என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டார். “மாத வருமானம் 750 ரூபாய் என்று இவர் சொன்னார். அதனால் சிறிது பீஸ் சார்ஜ் பண்ணி இருக்கிறோம்..ஆஸ்பிட்டலின் நடைமுறைதான் இது..” என்றார் டாக்டர். டாக்டரின் வார்த்தை ஆத்மாநாமுக்கு ஏற்புடையதாக இல்லை. “இவருக்கு வருமானமே கிடையாது. சும்மா 750யென்று சொன்னார்,” என்றார். “நானா இவரை 750யென்று சொல்லச் சொன்னேன்?” – டாக்டர் “வருமானம் 250யென்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” ஆத்மாநாம் கேட்டார். “இந்தக் கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது. கட்டணத்தை நீங்கள் செலுத்தினால் சிகிச்சைகள் தருவார்கள்..” டாக்டர் இப்படிச் சொன்னபிறகும் ஆத்மாநாம் இரண்டொரு கேள்விகளை அவருக்கு உரித்தான மென்மையான தொனியில் கேட்டார். அவரின் கேள்விகளுக்கு டாக்டர் பதில் சொல்லவில்லை.டாக்டரின் மௌனம் ஆத்மாநாமின் முகத்தைச் சுருங்க வைத்தது. கட்டணத்தை அவரே கட்டினார். சிகிச்சைகள் முடிந்து இருவரும் வெளியில் வந்தோம். ஆத்மாநாமின் மனம் சமாதானமடையமலேயே இருந்தது. நான் மட்டும் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். மழை தூறிக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் என் அறையை அடைந்தோம். அறைக் கதவை ஆத்மாநாம் திறந்தார். ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தேன். இடது தோள் பகுதி பூராவும் வலி கடுமையாக இருந்தது. ஆத்மாநாம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். குற்ற உணர்ச்சியில் புலம்பியவாறே இருந்தார். இரவு எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்கு வந்து விடுவதாக 12 1/2 மணியளவில் அம்பத்தூருக்குக் கிளம்பி விட்டார்…மறுநாள் காலை 10 மணிக்கு மறுபடியும் என்னைப் பார்க்க கிளம்பி வந்துவிட்டார். புதிய உடைகளில் வந்திருந்தாலும் அவரின் முகத்தில் வருத்தமும் பதட்டமும் அப்படியே இருந்தன. நடந்த விபத்தைப் பற்றி வீட்டில் சொன்னதும் ஆத்மாநாமின் அம்மா அவரை மிகவும் கோவித்துக்கொண்டிருக்கிறார். படுத்து தூங்கிட்டு இருந்த மனுசனை அழைச்சிட்டுப் போய் இருக்கிறார். ஆஞ்சநேயரை துதி செய்கிற ஸ்லோகங்கள் அடங்கிய சின்ன புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து அதை வாசிக்கும்படி ஆத்மாநாமின் அம்மா எனக்கு யோசனை கூறி அனுப்பி இருந்தார். நான் இந்த விபத்தின் வலியால் பல நாட்கள் கஷ்டப்பட்டது உண்மை. அதுவும் தனிமையான லாட்ஜ் வாழ்க்கையில் அந்த சிரமங்கள் பகிர்ந்து கொள்ள முடியாதவை. இத்தனைக்கும் அப்போது பெரம்பூரில் என் சகோதரி இருந்தாள். அவருடைய வீட்டில் போய் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் தங்கியிருக்க முடிந்தது. அந்த நிலையிலும் மெரீனா கடற்கரையின் அலைகளின் ஓரத்தில் போய் சில நிமிடங்களாவது நிற்காமல் இருப்பது பெரும் தனிமை உணர்வைத் தந்ததால் திருவல்லிக்கேணி அறைக்குத் திரும்பிவிட்டேன். இந்த விபத்து வேறு எந்த விதத்திலும் என் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆத்மாநாமின் விஷயம் அது இல்லை. அநியாயமாக என்னை காயப்படுத்தி விட்டதாக அவருடைய மனம் அவரை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தது. அதற்காக அவர் அவரையே கடிந்து கொண்டார். கோபித்துக்கொண்டார். இது அவரின் மிருதுவான மனநிலையிலன் மாற்றிக்கொள்ள முடியாமலே இருந்த இயல்பு. எல்லா விஷயத்திலும் அவருடைய மனநிலையின் இய்ககம் இந்த மிருதுத்தன்மையையே மையமாகக் கொண்டிருந்ததால் சிறிய ஏமாற்றமே பெரும் இழப்புக்குள்ளாகிவிட்ட அளவற்ற துயரங்களை அவரிடம் ஏற்படுத்தியது. சின்னச் சின்ன சரிவுகளே கொடிய அதலபாதாளத்தில் விழுந்துவிட்ட நடுக்கத்தை உண்டு பண்ணியது. 1979 ஆம் வருஷத்தின் இறுதி மாதங்களில் ஆத்மாநாம் கடும் மனச்சிதைவுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. சமாதானப் படுத்திக்கொள்ளவே முடியாத துர்பாக்கியமான சம்பவங்கள் அவை. முதலில் வேறொரு மனநல மருத்துவ நிபுணரிடம் ஆத்மாநாமை அவரின் குடும்பத்தினர் அழைத்துப் போனார்கள். ஆத்மாநாமுக்கு அந்த நிபுணரிடம் செல்ல விருப்பம் இல்லை. டாக்டர் சாரதா மேனனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளவே விரும்பினார். அந்த வருடங்களில் சாரதா மேனன் இந்தியாவின் குறிப்பிட்டுச் சொல்கிற மனநல மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர். அந்தச் செய்தி ஆத்மாநாமின் அறிவில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. அவரின் விருப்பப்படி சாரதா மேனனிடமே ஆத்மாநாமின் குடும்பத்தினர் அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டார்கள். அவரைப்போல் கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளான வேறொரு எந்த மனிதனாவது தனக்கு சிகிச்சை தருவதற்கான மனநல மருத்துவ நிபுணரை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருப்பாரா? சந்தேகம்தான்.ஆத்மாநாமுக்கு மனச்சிதைவின் முதல் தாக்குதல் நேரிட்டபோது நான் விருதுநகரில் இருந்தேன். வேறொரு விதத்தில் எனக்கு அது ஒரு விபரீதம் குறுக்கிட்டிருந்த நேரம். விருதுநகரில் என் சித்தியின் 23 வயது மகன் மிக மோசமான மனச்சிதைவுக்கு உள்ளாகி யாராலும் எதிர் நோக்க முடியாத வன்முறைகளில் உக்ரம் பெற்றிருந்தாôன். விருதுநகரில் என் பெற்றோர்களையும் தங்கைகளையும் தவிர நட்பும் உறவும் நான் கொண்டிருந்தது அந்த சித்தியின் மகனிடம் மட்டும்தான். வேறு எந்த உறவினர்களிடமோ; என் சமூகத்தினருடனோ எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அந்த மனிதர்களிடம் இருந்து என்னுடைய 24 வயதிலேயே அந்நியப்பட்டு நான் விலகி வந்து விட்டேன். இன்றைய வருடத்தை கணக்கிட்டால் எனக்குள் இந்த விலகல் ஏற்பட்டு நாற்பது வருடங்களாகி விட்டன. என் குடும்பத்தினரை தவிர்த்து எனக்கு அந்த ஊரில் இருந்த ஒற்றை மனிதன் என் சித்தியின் சுசீந்திரன் என்ற மனிதன்தான். பூட்டப்பட்டிருந்த பெரிய கனத்த காட்ரேஜ் பீரோவை சாவியைக் காணாமல் கடப்பாரையை எடுத்து வந்து உடைத்து ஆவேசத்துடன் திறக்கும் பயங்கர வன்முறைக்குக் கொதித்துப் போகிற அளவுக்கு மனச்சிதைவு அவனைத் தாக்கியது. அப்போது அவன் என்ஜீனியரிங் படிப்பில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தான். அடிப்படையில் ஆத்மாநாம் போலவே அவனும் மென்மையானவன். நேர்மையானவன். மிகவும் சாந்தமானவன். பெரிய வித்தியாசம் என் சித்தி மகனின் உடல் எடை. கரிய நிறத்தில் 120 கிலோ இருப்பான். ஏற்பட்டிருந்த மனச்சிதைவில் மதம் பிடித்த ஒரு யானையைப்போலவே நிலை கொள்ளாத கொந்தளிப்பில் அவனின் உடம்பும் மனதும் திமிறி ஆடின. அவனில் நான் பார்த்த அந்தச் சிதறல் என்னைக் கதி கலங்க வைத்துவிட்டது. அவனின் உக்ரத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாராலுமே அந்தத் தருணத்தை கையாளும் வழி தெரியவில்லை. அவனைக் கட்டுப்படுத்துதல், சிகிச்சைகள் தருதல், சிகிச்சையின் எதிர்விளைவுகளில் அவனை கண்காணித்தல்…போன்ற எல்லாமே யுத்தகளத்தில் என்னை நிறுத்தினாற்போல இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது நாள் யுத்தத்தில் துவண்டு நிலை குலைந்து போயிருந்தது என் மனம்.அந்த அடங்க மாட்டாத களைப்புடன் சென்னை திரும்பினேன். சென்னையில் ஆத்மாநாம் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி காத்திருந்தது. என் மனம் ஒரு மாதிரியாக பீதியடைந்து விட்டது. ஆத்மாநாமுக்கு நேர்ந்த மனச்சிதைவு மனோதத்துவ ரீதியில் எனக்கு இரக்கம் இல்லாத சவாலாக இருந்தது. விபத்து நடந்த ஸ்தலத்தைப் பார்த்தாலே அதிரும் என் மனத்தன்மை ஆத்மாநாமைப் போய் பார்க்கப் பயந்தது. தயங்கியது. ஆயினும் நான் போய்த்தான் ஆக வேண்டும். பார்த்துத்தான் ஆக வேண்டும். நான் தனியாகத்தான் கிளம்பினேன். புரசைவாக்கத்தில் இறங்கி அந்த தனியார் மருத்துவமனையை கேட்டு விசாரித்தபடி மிகமிக மெதுவாக நடந்தேன். மருத்துவமனையின் முதல் மாடியில் ஆத்மாநாம் இருந்தார். குறுகலான படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடியை அடைந்தேன் – நேராக நீண்ட வராந்தா இருந்தது. அதில் வரிசையாக அறைகள். கடைசி அறையின் வெளியில் வராந்தா கம்பி வலைகளால் மறைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல் அறை ஆரம்பிக்கும் இடத்திலும் கம்பி வலையின் அகலமான மறைப்பு இருந்தது. அதன் மையத்தில் சிறிய கதவு சாத்தப்பட்டு பூட்டு தொங்கியது. அதன் அருகில் ஒரு காவலாளி அமர்ந்திருந்தார்.இரண்டாவது அறையின் முன் வராந்தாவில் ஆத்மாநாம் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தார். வராந்தாவின் எதிர்புறம்பார்க்கும்படியாக வானவெளி தெரிந்தது. ஆனால் ஏறி குதித்து விடாதபடி அங்கும் கம்பி வலைகள் பொருத்தப்பட்டிருந்தன. நான் தூரத்தில் நின்றவாறு சில வினாடிகள் ஆத்மாநாமைப் பார்த்தபடி இருந்தேன். என் மனம் உள்ளுக்குள் கேவி தத்தளித்தது. காவலாளியிடம் ஆத்மாநாமின் பெயரைச் சொன்னேன். உடனே அவர் எழுந்து நின்று பூட்டைத் திறக்க தயாரானார். அந்தச் சின்ன சப்தத்தில் திரும்பிய ஆத்மாநாம் ஈஸிசேரில் இருந்து பளீரென எழுந்து நின்றார். அவர் நின்ற இடத்தில் இருந்து வலைக்கதவு பன்னிரெண்டு அடி தூரத்தில் இருந்ததாகச் சொல்லலாம். ஆத்மாநாம் கதவை நோக்கி பாய்ந்தோடி வந்தார். ஒருக்களித்து நின்று அவரின் வலது காலை நான்கு அடி உயரத்ததுக்கும் மேலாகி உயர்த்தி வலைக்கதவை உத்வேகத்துடன் எட்டி உதைத்தார். அவர் உதைத்த வேகத்தில் அகலமான அந்தப் பெரிய வலைப் பகுதியே ஆடி அதிர்ந்தது. ஆத்மாநாம் காவலாளியிடம் கத்தினார். “சீக்கிரமா கதவைத் திறய்யா..நான் அன்னிக்கே உன்கிட்டே சொல்லியிருக்கேனே…விருதுநகர்ல இருந்து என் ப்ரண்ட் வருவார். கதவைத் திறந்து வைன்னு…இவர்தான் அது. திற கதவை…”என்னைப் பார்த்துவிட்ட பரவசத்தில் கைகளாலும் கம்பிவலையை பிடித்துக் குலுக்கினார். அவருடைய உணர்வு மேலீடுகளைப் பார்த்து காவலாளி கதவைத் திறக்க யோசித்தார். “திறய்யா..சீக்கிரம் திற..” ஆத்மாநாம் காவலாளியை அவசரப் படுத்தினார்.. அமைதியான நிதானமான சிறிது சங்கோஜமான ஆத்மாநாமின் சிதைந்துப் போயிருந்த தோற்றத்தை ஏற்கனவே விருதுநகரில் கதிகலங்கி விட்டிருந்த என் மனம் தாங்கிக்கொள்ளும் சக்தியை இழந்திருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அழுகை வெடித்துவிட்டது. கம்பி வலைக்கு அப்பால் இருந்து அதே பரவசத்துடன் சப்தமான குரலில் எனக்கு ஆறுதல் சொன்னார். “அழாதீங்க..எனக்கு ஒண்ணும் ஆகலை. சீக்கிரமா சரியாயிடும்.” அந்த முதல் சந்திப்புக்குப் பிறது மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே நான் அவரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனேன். ஒரே நேரத்தில் எனக்கு மிகவும் வேண்டிய இரண்டு மேன்மையானவர்களுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு என் உடம்பையும் மனதையும் சக்கையாக்கி விட்டது. ஒரு நிமிட தூக்கத்திற்குக்கூட என் உடம்பு உட்படவில்லை. உச்சந்தலையில் ஒரு கொதிப்பு. வலி. எனக்கும் மனச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற பீதி நினைப்பில் ஒரு ஜவ்வுபோல ஒட்டிக்கொண்டது. சிறு சிறு உடல்நலக்குறைவு வரும்போது சிகிச்சைப் பெற்றுக்கொள்கிற டாக்டரிடம் தாமதிக்காமல் போனேன். விஷயத்தைச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட டாக்டர் சொன்னார்: “உங்கள் நண்பரை ஆஸ்பிட்டலில் போய்ப் பார்க்கவே பார்க்காதீர்கள்.. உங்களுடைய மனம் தாங்கவில்லை அதை. மனநோயளிகளை சந்திப்பதும் பராமரிப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிற விஷயம் கிடையாது. உங்கள் நண்பரை டாக்டர்கள் கவனித்துக்கொள்வார்கள். குடும்பத்தினர் பராமரித்துக்கொள்வார்கள். அதற்கும் மேல் உங்கள் நண்பரை கடவுள் பாதுகாக்க நாம் பிரார்த்தனை செய்வோம். நீங்கள் போகாதீர்கள். அது தப்போ குற்றமோ இல்லை. நான் உங்களுக்கு ஒரு வாரத்திற்கான தூக்க மாத்திரைகளும் சில எலிவேட்டர் மாத்திரைகளும் எழுதித் தருகிறேன். வாங்கிச் சாப்பிடுங்கள்… அதற்கும் மேல் ஏதாவது பிரச்னை இருந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். பயப்படாதீர்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது. கடந்த எட்டு வருஷமாக உங்களை நான் பார்த்து வருகிறேன்..எனக்கு உங்களைத் தெரியும்..” என் மனம் டாக்டரின் பேச்சில் சற்று அமைதியாயிற்று. அவர் எழுதித் தந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஒரு பாதுகாப்பு உணர்வுக்காக பெரம்பூரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்குப் போய்விட்டேன். ஒரு வாரம் நான் அங்கேயே இருந்தேன். எனக்கு எதுவும் நேரவில்லை. தூக்க மாத்திரையின் விளைவாக ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். என் சகோதரியின் கணவரின் துணையும் பரிவும் மனப் பதட்டத்தையும் தனித்து சமனப்படுத்தி விட்டது. தூக்கத்திற்காக நான் மாத்திரைகள் சாப்பிட்டது அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும். சற்று கலைந்து போயிருந்த என் வலிமை மீண்டும் அதன் தன்மைக்கு நிமிர்ந்து கொண்டது. நான் திருவல்லிக்கேணி திரும்பி விட்டேன். ஆனால் நான் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த ஆத்மாநாமைப் போய் பார்க்கவில்லை. சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியதும் நண்பர்களுடன் சென்று பார்த்தேன். ஆத்மாநாம் எப்போதும்போல அவருடைய மென்மையான சிரிப்புடன் தெரிந்தார். ஆனால் 1979-ல் இறுதியில் அவரின் தோன்றிய மனச்சிதைவின் முதல் தாக்குதல் மீண்டும் மீண்டும் ஆத்மாநாம் வாழ்க்கையில் கொடிய நிழலாய் நச்சு அரவமாய் படமெடுத்தபடி தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்த விஷத் தீண்டலில் இருந்துமனநல மருத்துவத்தால் அவரை மீட்டெடுக்க முடியவில்லை. ஆத்மாநாம் வாழ்க்கை கிணற்று நீரில் மூழ்கியதில் முடிவு பெற்றது.என் சித்தியின் மகனின் வாழ்க்கை இதற்கு நேர் எதிராக முடிந்தது. உடம்பில் மண் எண்ணையை ஊற்றி நெருப்பிட்டுக்கொண்ட அதி உக்ர வெம்மையின் கருகி அவனின் உயிர் பிரிந்தது. இவர்கள் இருவரும் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டன. வாழ்க்கையில் மறக்கவே முடியாத சில ஜீவன்களில் இவர்களும் என் ஞாபகப் படிவுகளில் பெயர்த்துப் போடவே முடியாதவாறு உறைந்து கிடக்கிறார்கள். மேலும் மேலும் கூட இழப்புகள் வந்தன. அதேபோல் புதிய புதிய உறவுகளும் கைகோர்த்தன. வாழ்க்கை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் தேக்கமுறாமல் ஆரம்பமும் முடிவும் இல்லாத பிரவாகமாய் புரண்டோடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய மிக நீண்ட அறை வாழ்க்கையின் போதும் நண்பர்கள் வந்து வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது என் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் எல்லா நண்பர்களும் என் மனைவிக்கும் நண்பர்கள். பேச்சுக்கள் இடைவெளி இல்லாமல் தொடர்கின்றன. பேச்சில் இலக்கிய ரசனையின் பகிர்தலும் உண்டு. ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்களின் தத்துவ விசாரங்களும் உண்டு. என் வீட்டுப் புத்தக வரிசையில் ஆதிசங்கரரும் உண்டு. ஸ்ரீ அரவிந்தரும் உண்டு. சியாமளா தண்டகமும் உண்டு. திருமுருகாற்றுப்படையும், வால்மீகியும் உண்டு. காளிதாசனும் உண்டு. ரமணரும் இருக்கிறார். உடையவர் ராமானுஜரும் இருக்கிறார். 18 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட பாகவதத்தை கடந்த மாதங்களில் இரண்டு முறை வாசித்தாயிற்று. ஜராசந்தனின் பிறப்பில் அடங்கியிருக்கும் ரகசியப் பிண்டம் மறைவாய் உணர்த்தும் சூட்சுமம் சிலிர்க்க வைக்கிறது -இவை அத்தனையையும் அள்ளிச் சுமந்தபடி வாழ்க்கை எந்தக் கனமும் இன்றி சுயேச்சையாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்டு வீட்டில் ஒலிநாடாக்களின் இசைகளும் கேட்கப்படுகின்றன. கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் தணிந்த ஸ்தாயியில் கசிந்துகொண்டிருக்கின்றன. கேட்கின்ற சில சில இசைகள் ஆத்மாநாமை ஞாபகப்படுத்தும். எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவில் இசை ரசனை மிக அழுத்தமான தளமாக இருந்ததை மறக்கவே முடியாது. நானும் நானும் ஆத்மாநாமும் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றது மிகமிகக் குறைச்சல். இசை நிகழ்ச்சிக்களுக்குப் போனதுதான் அதிகம். நிஜத்தில் அவை எண்ண முடியாதவை. எம்.டி ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மஹாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், எம் எஸ் சாருமதி ராமச்சந்திரன், சேலம் ஜெயலஷ்மி, மணி கிருஷ்ணசாமி, எம்.எல்வி – போன்ற அந்தக் காலகட்ட மேதைகள் அனைவரின் சங்கீதங்களையும் கேட்பதற்கு நானும் ஆத்மாநாமும் சலிக்காமல் போயிருக்கிறோம். அந்த மாதிரி போகின்றபோது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சங்கீத வித்வான்களை சந்தித்து ஒருசில நிமிடங்கள் அவர் பேசிக்கொண்டிருப்பார். இப்படி ஒருசில நிமிட சந்திப்புகளிலேயே எம்.டி ராமநாதனுடன் ஆத்மாநாமுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது ராமநாதனின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இரண்டு முறை ஆத்மாநாமுடன் எம்.டி ராமநாதனின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆத்மாநாமைப் பார்த்ததும், “வாடா மது,” யென்று ராமநாதன் அவருக்கே உரித்தான தொனியில் அழைப்பார். அவருடைய அழைப்பில் ஆத்மாநாமிடம் அவர் கொண்டிருந்த வாஞ்சையின் அந்நியோன்யத்தை உணர முடியும். 1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது. 1976 ஆம் வருட பிப்ரவரி மாத பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சிக்கு ஆத்மாநாமும் நானும் செல்வதற்குத் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பம். அம்பத்தூரில் இருந்து என் அறைக்கு ஆத்மாநாம் நான்கு மணிக்கு வந்து விட்டார். உத்தேசித்திருந்தபடி ஐந்து மணிக்கு கிளம்பத் தயாரானோம் . அப்போது ஒரு வாரத்திற்கு முன்பு நான் வாங்கியிருந்த பர்வீன் சுல்தானாவின் பெரிய எல் பி இசைத்தட்டு ஒரு அழகுப்பொருள் போல என்னுடைய மர ஷெல்பில் முதன்மைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பர்வீன் சுல்தானா இளமையின் வசீகரங்களோடு அழகிய நட்சத்திரமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பிய நிமிடம் ஆத்மாநாம் சட்டென அந்தப் புதிய இசைத்தட்டையும் எடுத்து அவருடைய பெரிய ஜோல்னா பையில் வைத்துக்கொண்டார். “இது எதுக்கு?” – நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். “இருக்கட்டும்..முடிஞ்சா இதுல பர்வீன் சுல்தானாவோட ஆட்டோக்ராஃப் வாங்குவோம்,” என்றார் ஆத்மாநாம். எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் கிடையாது. அதனால், “ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் மது. கூட்டத்ல எதுக்குப்போய் அவளைப் பாத்துக்கிட்டு..சங்கீதத்தை கேட்டுவிட்டு வந்திட்டே இருப்போம்..” “ச்சூ…சோம்பேறி…பேசாம நீங்க வாங்க..நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறேன்..” ஆத்மாநாமின் முடிவை என்னால் மாற்றமுடியவில்லை. இம்மாதிரியான செயல்கள் அவருக்கு வாடிக்கைதான். நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிச் சென்றோம்..எப்போதும்போல பர்வீன் சுல்தானாவின் நாதவெள்ளம் அதற்கே உரித்தான தாளகதிகளில் சுழித்துக்கொண்டிருந்தது. இருபது நிமிட இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆத்மாநாம் அவருடைய ஜோல்னா பையுடன் எழுந்து கொண்டார். “வாங்க அவளைப் பாத்திட்டு வந்திரலாம்,” என்றார். எனக்கு வழி கிடையாது. எழுந்து அவருடன் போனேன். உள் அரங்கத்திற்குள் செல்கிற வழியை நோக்கி ஆத்மாநாம் நடந்தார். மேடைக்குச் செல்கிற வழியின் கதவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆத்மாநாம் இசைத்தட்டை அவரிடம் எடுத்துக்காட்டி விஷயத்தை சொன்னார். அந்த மனிதர் உள்ளே போய் இரண்டொரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். எங்களை உள்ளே போகச் சொன்னார். உள்ளே சிறிது தூரம் நடந்து மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். பர்வீன் சுல்தானா நின்றவாறு யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அது மகத்தான தரிசனம்! ஒருநாள் கூட நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இத்தனை அருகில் அந்த மனுஷியைப் பார்ப்பேனென்று. சங்கீத உபாசனை அந்த மனுஷியின் தோற்றத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்த்திருந்தது. மனுஷியின் பார்வை எங்களை வரவேற்றது. ஆத்மாநாம் அவளுக்கு நமஸ்தே சொன்னார். நான் சொல்லவில்லை. மெய்மறந்த தரிசனத்தின் ஒடுங்கிப்போன மௌனத்தில் நான். ஆத்மாநாம் ஜோல்னா பையில் இருந்து இசைத்தட்டை எடுத்தார். பர்வீன் சுல்தானாவிடம் ஆங்கிலத்தில் சொன்னார் : “இந்த இசைத்தட்டு இவருடையது. இதில் நீங்கள் உங்களுடைய கையெழுத்திட்டுத் தரவேண்டும்…” உடனே பர்வீன் சுல்தானா புன்னகையுடன் எதிர்பாராத கேள்வியை ஆத்மாநாமிடம் கேட்டார்: “இசைத்தட்டு இவருடையது என்கிறீர்கள்..ஆனால் ஆட்டோக்ராஃப் நீங்கள் கேட்கிறீர்களே…” கேள்வியைக் கேட்டபிறகு பர்வீன் சுல்தானாவின் கண்கள் என்னை நோக்கின. ஆத்மாநாம் ஒரு மாதிரியாக திணறிப் போனார். அந்தக் கேள்வி ஏதோ ஒரு தடங்கல் போலாகி விட்டது அவருக்கு. பர்வீன் சுல்தானா – அந்தச் சில விநாடிகள்தான் -கம்பீரமாகக் காத்திருந்தார் – பதிலுக்காக. வழி தவறிவிட்ட தொனியில் ஆத்மாநாம் பதில் சொன்னார் : “உங்களுடைய கையெழுத்தும் அவருக்கும்தான் தேவை. அவர் சார்பாக நான் கேட்கிறேன். அவ்வளவுதான்..” “அப்படியானால் சரி. கொடுங்கள்..”பர்வீன் சுல்தானா இசைத் தட்டை வாங்கிக்கொண்டார். அவரின் அருகில் நின்றவர் உடனே பேனா கொடுத்தார். இசைத் தட்டின் பின்புறத்தில் “வித் லவ்” என எழுதி கையெழுத்திட்டார் பர்வீன். மீண்டும் வாய்க்கவே முடியாத அற்புத கணம் அது. மொத்த சூழலுமே மேற்கு அடிவான சூரியனாக தகதகத்தது. என்னுடைய மொத்த உணர்வுகளும் அந்த மனுஷிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. மனுஷி கையெழுத்திட்டு மட்டும் தரவில்லை. ‘P’ என்ற எழுத்தின் மத்திய வெளியில் இரண்டு கண் மூக்கு வாய் வரைந்தார். வாயின் அமைப்பில் அந்த முகம் -அழுவது போலிருந்தது! Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந்த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, “இசைத்தட்டு உங்களுடையதுதானே?” “ஆம்,” என்றேன். “அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்..” சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன? என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். “என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும்!” திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேஇருந்தார். பர்வீன் சுல்தானாவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். P என்ற எழுத்திலும் S என்ற எழுத்திலும் வரையப்பட்ட முகங்களை கவனித்தார். பின் சொன்னார் : “P லெட்டர்ல சிரிக்கிற முகம் உங்களுடையதுபோல! S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல! ” நான் சட்டென ஆத்மாநாமின் கையைத் தொட்டேன்..”இதுக்குத்தான் ஆட்டோக்ராஃப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..” என்றேன். “இட்ஸ் ஆல்ரைட் ராம்மோஹன்..லைஃப்ல என்னோட பொசிஸன் இதான். உங்களோட பொசிஸன் இதான்..இன் ஏ வே எனக்கு உங்கமேல பொறாமையாத்தான் இருக்கு..அனா என்ன பண்ண முடியும்..ஐம் ஹெல்ப்லெஸ்…” அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து சில நாட்களுக்கு ஆத்மாநாம் மீளாமலேயே இருந்தார். ஆத்மாநாமின் மாற்றமுடியாத ஆளுமை இது. பர்வீன் சுல்தானா கையெழுத்துப் போட்டுத் தந்த இசைத் தட்டு இன்றும் வீட்டு கண்ணாடி அலமாரியில் பார்வையில் படும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னைப்பொறுத்தவரை அந்த இசைத் தட்டு நண்பன் ஆத்மாநாமின் சோகம் தோய்ந்த ஞாபகச் சின்னம் மாத்திரம் இல்லை..அது வேறொரு இம்சையான தருணத்தின் பிரத்யேக வரைபடமும்தான். இன்னும் ஒலி நாடாக்களின் சுழற்சியில் பர்வீன் சுல்தானாவின் ஆலாபனைகள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பன் ஆத்மாநாம் இல்லை.(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய கட்டுரையின் இரண்டாவது பகுதி)

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 – ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, “ஹலோ ஷர்மா,” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பதாகவும் சொல்லி ஆத்மாநாம் விடைபெற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணி பைக்கிராஃப்ட் சாலையில் எங்களின் இந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 1984 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நானும் ஆத்மாநாமும் மௌன்ட் ரோட் அரசாங்க நூல் நிலையக் கட்டடித்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். நண்பர் ராஜகோபாலனும் எங்களுடன் வந்திருந்தார். கடுமையான அடிதடியாக மாறக்கூடிய அபாயத்தை நோக்கி அந்த இலக்கிய கூட்டம் சரிந்துகொண்டிருந்ததால், அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் கூட்டத்தின் மத்தியிலேயே வேகமாக வெளியேறிவிட்டோம். டீ ஷாப் ஒன்றில் டீ சாப்பிட்டவாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின் மெதுவாக நடந்தோம். ஆத்மாநாம் அம்பத்ததூர் செல்ல வேண்டும். நான் தியாகராயநகர். அதனால் நாங்கள் சர்ச்பார்க் கான்வென்ட் அருகில் ஆளுக்கொரு பஸ் ஸ்டாப்நோக்கிப் பிரிந்தோம். சில தினங்களில் ஆத்மாநாம் பெங்களூர் செல்லப் போவதாகவும் எப்போது மெட்ராஸ் திரும்புவேன் என்பதைச் சொல்ல முடியாதுயென்றும் கூறி விடை பெற்றார். எங்களுடைய கடைசிச் சந்திப்பு அதுவே. 1984 ஜøலை ஆறாம் தேதி பெங்களூரில் ஆத்மாநாம் காலமான செய்தி சிறு அஞ்சல் அட்டைச் செய்தியாக விருதுநகரில் இருந்த எனக்கு அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டு வருஷங்களில் நானும் ஆத்மாநாமும் நாட்குறிப்பின்படி 1200 நாட்கள் சந்தித்திருக்கிறோம். நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்வது வெறும் மேலோட்டமான கூற்று என்பது என் அபிப்பிராயம். நட்பு என்ற தளத்திற்கு மேலான ஆழ்ந்த வெளியில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அறிமுகமான சில நாட்களிலேயே அதற்கான வெளி இயல்பாக உருவாகிக்கொண்டது. என்னை நான் தங்கியிருக்கும் லாட்ஜின் அறையில் வந்து சந்தித்துப் பேசுவதில் நாள் கிழமை நேரம் காலம் என்ற எந்தத் தடங்கல்களும் ஆத்மாநாமுக்கு இல்லாமல் இருந்தது மிகவும் குறிப்பிடும்படியானது. என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம். இடையே உணவுவேளை வந்தால் என்னுடனேயே சாப்பிடலாம். ஆத்மாநாம் என்னைப் பார்க்க இரவு பதினொரு மணிக்குக்கூட மோட்டார் சைக்களில் வருவார். இரண்டுபேரும் கிளம்பி மௌண்ட்ரோட் புஹாரி ரூஃப் போவோம். டீ குடித்தவாறு அதிகம் பேச்சு இல்லாமலேயே கூட உட்கார்ந்திருப்போம். ஆத்மாநாம் ஜ்யூக் பாக்ஸில் காசு போட்டு பிடித்தமான பாட்டு எதையாவது அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். சில விஷயங்களில் நானும் ஆத்மாநாமும் நேர் எதிரான குணம் கொண்டவர்கள். நான் எதையும் திட்டமிட்டு செய்வேன். ஒரு புத்தகம் வாங்குவதென்றால்கூட நான் எந்தக் கடையில் போய் வாங்கலாம்; எந்தத் தேதியில் எந்த நேரத்தில் போய் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தீர்மானம் பண்ணி விடுவேன். ஆத்மாநாம் திடீரென்று “வாங்க போகலாம்,” என்று கிளம்புவார். மௌண்ட் ரோட், பாண்டிபஜார், பாரீஸ் கார்னர்; சில நேரங்களில் புரசைவாக்கம்கூட போவார். என்ன வாங்கலாம் என்ற தீர்மானம் – வீதிகளில் நடந்து கொண்டிருக்கும்போது தோன்றும். இசைத் தட்டுகள் விற்பனை செய்கிற கடைகளுக்குள் நுழைவார். பத்துப் பதினைந்து இசைத்தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லி கேட்பார். ராக், ஜாஸ், பாப் – என்று எந்தவித இசைத்தட்டாக இருந்தாலும் வாங்குவதற்காக தேர்வு செய்வார். சிலவேளைகளில் எனக்கும் ஒரு இசைத் தட்டு பரிசாக வாங்கித் தருவார். அவர் தேர்வு செய்யும் இசைத்தட்டு கேள்வியே பட்டடிராததாகக்கூட இருக்கும். பத்துப் பன்னிரெண்டு இசைத் தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லிவிட்டு எதையும் வாங்காமல் அவர் வெளியேறி விடுவதும் உண்டு. அந்த மாதிரி ஆத்மாநாம் வெளியேறும்போது ஏமாற்றத்துக்குள்ளாகும் கடை விற்பனையாளரின் முகம் போனபோக்கை அவர் வெளியேறிச் செல்கையில் குழந்தையின் குதூகலத்துடன் சொல்லிச் சிரிப்பார். பிடிக்காத பட்சத்தில் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லையென்று வாதிடுவார். நான் எதிர்வாதம் செய்வதில்லை – ஆயினும் நான் அந்த மாதிரி ஒரு நாளும் நடந்துகொள்வதில்லை. நானும் ஆத்மாநாமும் அடிக்கடி போகிற ஒரு இடம் – கன்னிமாரா ஹோட்டலில் இருக்கும் புத்தகக் கடை ஒன்றுக்கு. ரொம்பச் சின்ன கடை அது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும்மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடையின் அமைப்பே ரம்மியமாக இருக்கும். அங்கேதான் நான் ஒருநாள் “ஜோன் பேஸ்” என்ற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப ரொம்பச் சின்னப் புத்தகம்தான் அது. ஆனால் அருமையான புத்தகம். இன்றும் என்னால் மறக்க முடியாத புத்தகம் அது. என்னிடமிருந்து அதை வாங்கிப்போய் படித்த ஆத்மாநாம் அவருக்காக மற்றொரு பிரதியை உடனே வாங்கி விட்டார்….ஒன்றே ஒன்று – அந்தப் புத்தகக் கடையில் மட்டும் ஆத்மாநாம் எதுவும் வாங்காமல் வெளிவருவதில்லை. எப்போதும் அந்தக் கடையில் புத்தகம் வாங்கியதும் கன்னிமாராவின் ரெஸ்டாரண்ட்டில் நானும் அவரும் காஃபி சாப்பிடுவோம். அந்த ரெஸ்டாரண்டின் காஃபியும் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு ஒன்பது மணியாக இருந்தது. இரவு உணவு ஆத்மாநாம் என்னுடன்தான் சாப்பிட்டிருந்தார். அதனால் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தவாறு என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டென ஞாபகம் வந்தவராக, “ராம்மோஹன் – கிளம்புங்க; எனக்கு ஒரு ஷர்ட் துணி வாங்கி வேண்டியிருக்கு; மௌண்ட் ரோடுல எங்கேயாவது வாங்கலாம்..”என்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிப் போனோம். மணி அப்போது ஒன்பது இருபது ஆகியிருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்தோம். சில நிமிடங்களில் கடையை மூடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன. சிப்பந்திகள் சற்று சோர்வுடன் பார்த்தார்கள். மூடப்போகிற நேரத்தில் வருகிறார்களே என்ற ஆயாசம் அவர்களுடைய முகங்களில் இருந்தது. ஆத்மாநாம் துணிகளை எடுத்துக் காட்டச் சொல்லி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சிப்பந்தி மட்டும் உற்சாகம் இல்லாமல் துணிகளை எடுத்து காட்டிக்கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் இடங்களில் வெறுமே நின்றார்கள். எல்லோருடைய கவனமும் ஆத்மாநாம் மேலேயே இருந்தது. பொதுவாகவே எந்தப் பொருளை வாங்கப் போனாலும் பார்த்தோம் வாங்கினோம் என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது ஆத்மாநாமிடம். எடுத்து எடுத்து காட்டச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவசரமே இருக்காது. அன்றும் அதே மாதிரிதான். நிதானமாக ஒவ்வொரு துணியாக பார்த்துக்கொண்டேயிருந்தார். மேலும் மேலும் துணிகளை எடுத்துக்காட்டும் படியும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு துணியைத் தேர்வு செய்தார். கடைப் பணியாளர் அந்தத் துணியில் ஆத்மாநாமுக்குத் தேவையான அளவை கேட்டு கிழித்தார். அவரிடம் ஆத்மாநாம் தான் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்க பணியாளும் கணக்கிட்டுச் சொன்னார். ஆத்மாநாம் உடனே மணிபர்ûஸ எடுத்தார். அந்தத் துணிக்கான பில் தொகை அவரிடம் இல்லை. பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஷர்ட் பாக்கெட்; பேண்ட் பாக்கெட்; ப்ரீஃப் கேஸ் – எல்லாவற்றிலும் தேடினார். பணம் இல்லை. என்னிடம் இல்லை. கடைச் சிப்பந்தி பொறுமை இழந்து ஆத்மாநாமையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆத்மாநாம் சிறிதுகூட பதட்டமடைந்துவிடவில்லை. “நோ ப்ராப்ளம்; செக் புக் இருக்கிறது. செக் குடுத்திடலாம்…” என்றார். துணியை ‘பேக்’ பண்ணி கையில் வைத்திருந்த பணியாள் விருட்டென்று சொன்னார்,”செக்கெல்லாம் வாங்க மாட்டோம் சார்..” “ஏன் வாங்க மாட்டிங்க…ஏமாத்தற ஆள் இல்லை நாங்க…என்ன பண்றது ..கேஷ் எல்லாம் செலவாயிடிச்சி – கவனிக்காம வந்திட்டேன்… செக் தர்றேன்..வாங்கிக்கோங்க..” “ஸாரி, சார்..செக் வாங்க மாட்டோம்..” “உங்க முதலாளிகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க, அவர்கிட்ட நான் பேசறேன்..” கல்லாவில் நின்றபடி கடை முதலாளி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! பணியாள் முன்னே செல்ல நானும் ஆத்மாநாமும் அவரிடம் சென்றோம். கடை முதலாளியிடமும் ஆத்மாநாம் பணியாளரிடம் சொன்னதையே சொன்னார். தானே ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிலில்தான் இருப்பதாக சொல்லி, தன்னுடைய ‘விசிட்டிங் கார்டை’ எடுத்துக்காட்டினார். கடை முதலாளி அதை வாங்கிப் பார்த்தார்…”ஓ கே சார் – போனா போகட்டும்…இந்தத் தடவை உங்ககிட்ட செக் வாங்கிக்கிறேன்..ஆனா – உங்க கிட்ட இல்லை; யார் கிட்டேயிருந்தும் செக் வாங்கற வழக்கம் கிடையாது எங்களுக்கு.. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்யாதீங்க..” என்றார் கடை முதலாளி. ஆத்மாநாம் கடை முதலாளிக்கு நன்றி சொன்னார். செக் என்ன பெயரில் தரட்டும் என்று கேட்டு எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். கடை முதலாளியும் நன்றி சொல்லி செக்கை வாங்கிக்கொண்டு துணிப் பார்சலை ஆத்மாநாமிடம் கொடுத்தார். ஆத்மாநாமும் நன்றி சொல்லி வாங்கி கடை முதலாளியிடம் கை குலுக்கினார். நாங்கள் வெளியில் வந்தோம். ஆத்மாநாம் சில நிமிடங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து குதூகலமாய் சிரித்தார். செக் தருவதாக சொன்னதும் கடைப் பணியாளர்கள் எல்லோருமே எப்படி ஆற்றாமையோடு விழித்தார்கள் என்பதைக் கூறி சிரிப்பு. இந்தச் சம்பவத்தை நான் சொல்லிக் கேட்பவர்களுக்கு ஆத்மானாமின் குதூகலமும் சிரிப்பும் கொஞ்சம் விகற்பமாகவோ சிறுபிள்ளைத் தனமாகவோ தெரியலாம். ஆனால் அப்படி இல்லை உண்மையைச் சொன்னால் இதே மாதிரியான சம்பவங்களை நிறையவே சொல்லமுடியும். ஆனால் இந்த மாதிரியான சிரிப்பும் குதூகலமும் சிறுபிள்ளைத்தனமானவை கிடையாது. ஆத்மாநாமுக்கே உரித்தான கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான சுபாவம் இது. அடிப்படையில் ஆத்மாநாம் கண்ணியமும் மேன்மையும் கொண்ட மனிதர். கண்டிப்பான சில நாகரீகங்களை பின்பற்றுகிறவர். மிக மென்மையான் சிறிது சங்கோஜமான நண்பர் அவர். எப்போதாவது இரவு நேரங்களில் என் அறையிலேயே தங்கிக் கொள்ளும்போது நான் தரும் புதிய வேட்டியையோ லுங்கியையோ கட்டிக்கொண்டு பனியன் அணிந்த தோற்றத்தோடு தூங்குவதற்குக்கூட அவரால் முடியாது. வெட்கப்படுவார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில்வெளி வராந்தாவில் இருக்கும் பாத்ரூமில் குளிக்கப் போகும்போதுகூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில் வெளி வராந்தாவில் இருக்கும். பாத்ரூமில் குளிக்கப் போகும்போதும் கூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டுடன்தான் செல்வார் – இதே ஆத்மாநாம் பேண்ட்டையும் ஷர்ட்டையும் கழற்றி படிகளில் வைத்துவிட்டு உள்ளாடையுடன் ஒருநாள் கிணற்று நீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஆத்மாநாம் 1984 ஜøலை 6ஆம் தேதி தற்கொலை செய்து உயிர் இழந்தார். (ஸடெல்லா புரூஸின் கட்டுரைகள் என்ற தொகுப்பு நூல் விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அதில் ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரம் ஆகிறது. அடுத்த பகுதி நாளை பிரசுரம் ஆகிறது)