நமக்கிருப்பது


நமக்குத் தெரியும்
ஒரு பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று.
நமக்குத் தெரியும்
உண்மையில் நாம்
சம்பள அடிமைகளென்று
நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநில மன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.
நமக்குத் தெரியும்
மாமன்னராகும் கனவு
பலருக்குமிருக்கிறதென்று
நமக்குத் தெரியும்
அரசன் வசமும் அவன்
எதிரிகள் வசமும்
ஆளும் அம்பும் உண்டென்று.
நமக்குத் தெரியும்
பசுக்களை, இளங்கன்றுகளை
காளைகளை, பறவைகளை, மரங்களை
சாய்த்தது யாரென்று.
நமக்குத் தெரியும்
கண்ணால் கண்டதும்
காதால் கேட்டதும்
தீர விசாரித்ததும் மெய்யென்று.
நமக்குத் தெரியும்
நமதடுத்த கணம்
கத்தியின் கூராய்
அரிவாளின் மின்னலாய்
துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.
நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று.
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரிப்பில் ஆழ்த்தும்படி இருக்கும். ஆனால் தீவிரமான கவிதைகளும் உண்டு. ஒருமுறை நவீன விருட்சத்திற்காக ஒரு கவிதை தரும்படி கேட்டேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அதைப் படித்தபிறகு எனக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வந்தது. குதிரை என்பது அக் கவிதையின் தலைப்பு.
குதிரை

மரத்துக்குக் கீழே குதிரை
அதற்குக் கொடுக்கப்பட்ட
புல்லைக் குனிந்து குனிந்து
தரையிலேயே தின்றவாறு நிற்க
குதிரைக்குப் பக்கம் இவன் போனான்
‘குதிரை,’ ‘குதிரை’ என்றான்.
இவனைக் குதிரை கவனிக்காமல்
தன்
பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது
மீண்டும் இவன் சொன்னான்
‘குதிரை, குதிரை, குதிரை’
விட்டது பட்டென் றொருஉதை
அந்தக் குதிரை.
தரையில் உருண்டான்
அப்பால் ஒருமுறைக்கூட
குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.
பெரும்பாலும் பலருக்கு கவிதை மூலம் சிரிப்பை வரவழைக்கத் தெரியவில்லை. லாவண்யாவின் ‘நமக்கிருப்பது’ என்ற கவிதையில் சிரிப்பு வருகிறது. இந்தச் சிரிப்பை கடைசியில் கொண்டு வருகிறார்.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று……….
படிக்கும்போது நமக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வருகிறது. நவீன விருட்சம் 80ஆவது இதழில் இக் கவிதை பிரசுரம் ஆகி உள்ளது. 80 ஆவது இதழைப் படித்த நண்பர் ஒருவர், லாவண்யா ஆணா பெண்ணா என்று கேட்டார். ஆண் என்றேன். அவருக்கு அதைக் கேட்டவுடன் சுவாரசியம் குறைந்து விட்டது. திரும்பவும், என்ன வயது என்று கேட்டார். ’60க்கு மேல்’ என்றேன். நண்பர் என்னிடம் லாவண்யாவைப் பற்றி அப்புறம் பேசவே இல்லை.
– அழகியசிங்கர்
19.07.2008

“நமக்கிருப்பது” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன