என் அம்மா


அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு –

அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது….

சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-

அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு….

நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?

மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் …ஏ

சரி,
புரியவேயில்லை…
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.

நவீன விருட்சம் இதழில் சமீபத்தில் வெளிவந்த எ தியாகராஜனின் இன்னொரு கவிதை இது. மிக எளிமையாக எழுதப்பட்ட கவிதை. பொதுவாக ஒரு தொகுப்பை முழுவதுமாக வாசிப்பதைவிட பலருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பை வாசிப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். ஒருவருடைய தொகுப்பபு மட்டுமே நிரம்பிய கவிதைகள் ஒரே விதமாகவும் படிக்க அலுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதினாலும் இதுதான் உண்மை நிலை. யாருடைய கவிதை நூல்களாக இருந்தாலும், படிக்க படிக்க ஒரே வித mind process ஐப் படித்து படித்து நமக்குப் போர் அடித்துப் போய்விடும். என் சகோதரனுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் Education and its significance என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்க இந்த ஒரு புத்தகமே போதும் என்று கூறிவிட்டு அவருடைய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இருந்துவிட்டான். கவிதையிலும் ஓரளவு சிறுகதைகளிலும் ஒரே மாதிரியான mind process போரடிக்கிறது. படிக்கிறவர்களுக்கு இது ஏற்படாமல் இருப்பதில்லை. அதனால் ஒருவரின் தனிப்பட்ட தொகுதியைவிட பலர் எழுதிய தொகுதி சிறப்பாக இருக்கிறது.
விருட்சம் முழுவதும் பலருடைய கவிதைகள் படைக்கப் பட்டிருப்பதால், வேறு வேறு அலைவரிசையை உண்டாக்குகிறது.
அழகியசிங்கர்
15.07.2008 (செவ்வாய்க்கிழமை)

புரிவதில்லை கவிதை

உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை

ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் –

தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல

இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை –

கேட்டால் –
புரியாது
உனக்கு என்கிறாய்

அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்

நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்டார். கவிதைக்கு படிமம், உவமை போன்ற சமாச்சாரங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிப்பவர்கள். ‘என்ன வசனத்தை உடைத்துப் போட்டு எழுதி உள்ளாரே’ என்பார்கள். உண்மையில் அப்படி இல்லை. எழுதும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல்தான் வரி அமைப்பும் அமைகிறது. அதை அப்படியே வாசிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை முழுதாக மனதில் தோன்றி எழுதப்படுகிறதா? அல்லது எழுதும்போது அதுவே தோன்றுகிறதா என்பதெல்லாம் தெரியாது. கவிதையை எளிதாக வாசித்துவிடலாம். ஆனால் ஒரு கதையையோ நாவலையோ அப்படியெல்லாம் வாசித்துவிடமுடியாது. வாசிக்க அவகாசம் அதிகம் தேவைப்படும். கவிதை வாசிப்புக்க அவகாசம் தேவையில்லை. ஒரு பக்கம் அல்லது அரைப் பக்கம்தான் வரும். ஆனால் அதன் மூலம் சிந்திப்பது என்பது அலாதியான விஷயமாக இருக்கும். பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கவிதைகள் ஞாபகத்தில் வரிகள் வராது. அதன் தாக்கம்தான் மனதில் அலைகளை எழுப்பும். படிக்கும்போதுதான் அது தோன்றும். சரி, இப்போது எ தியாகராஜன் கவிதைகளுக்கு வருவோம்.
தியாகராஜன் சிதம்பரத்தில் மெளனி வீட்டிற்கு எதிரில் குடியிருந்தவர். விருட்சத்தில் மெளனியைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளார். தற்போது மும்பையில் வாசம். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.