புத்தக விமர்சனம் -1

அந்தரங்கம் – ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் – பக்கம் 112 – விலை ரூ.60 – வெளியீடு – அகரம், தஞ்சாவூர்
கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு.
பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்.
கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு கவிஞனும் வாங்கிப் படிக்க வேண்டும்.
கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்கு வார்த்தை விளையாட்டு என்று கவிஞர் பிரமிள் பதில் அளித்ததாக விக்ரமாதித்யன் கூறுகிறார். அப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை செல்வராஜ் ஜெகதீசன் நிறையாவே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
ஒன்றன்றி…. என்ற கவிதை
ஒன்றில்லை
ஒன்றுமில்லை
ஒன்றன்றி
ஒன்றுமே இல்லை

மற்றொரு கவிதை

இன்றென்ன
கிழித்துவிட்டோம்.
நாளை மீது
நம்பிக்கை வைக்க.

இவையெல்லாம் சொற்சிலம்பம்தான். ஜெர்மனியில் Concrete Poetry என்ற ஒரு இயக்கம் 1960 களில் செயல்பட்டது. அது வார்த்தை விளையாட்டை இயக்கமாகவே நடத்திக் காட்டியது. Concrete கட்டிடங்கள் போல வார்த்தைகள் அடுக்கப்படும்.

நல்ல கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகளை விக்கிரமாதித்யன் பாராட்டுகிறார். ஆனால் எழுத்தில் நல்ல எழுத்து மோசமான எழுத்துகள் உண்டு. நல்ல எழுத்தை கெட்ட எழுத்து கிடையாது என்பார் ஆஸ்கர் வைல்ட்.
எத்தனை நாட்கள் என்ற கவிதை

சோற்றுக்கலையும் வாழ்க்கையில்
சொல்லிக்கொள்ளத்தான்
எத்தனை நாட்கள் என்று முடிகிறது.

சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது. பிரியமான என் வேட்டைக்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் பன்னிரண்டு வரிகளில் பன்னிரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் ஒளிமயமாய் குடும்பம் நடத்துகிறார்கள். நமது நாயகியோ நாற்பதைக் கடந்து பெண்மானாக வலம் வருகிறாள். பிரியமான வேட்டைக்காரன் தன்னைக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையுடன்.
விக்கிரமாதித்யன் தன் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலிய பெண்ணிய கவிஞர்கள் இந்த வரிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?
சாஸ்வதம் என்ற கவிதையில் கலைகள் கால விரயம் என்று கூறும் ஆசிரியர், அடுத்த கவிதையான ‘கவன ஈர்ப்பு’ என்ற கவிதையில்,
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம்
என்வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை என்கிறார்.
சுயம் என்ற கவிதையில்,
உண்மையில் எனக்கு நான் யார்?
என்ற கேள்வியுடன் கவிதையை முடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்கிறது ஆதி சங்கரரின் அத்வைதம். நான் கடவுள் என்கிறார் திரைப்பட இயக்குநர் பாலா.
பக்கம் 91-ல் கவியெழுதி பிழைத்தல் கடினம் என்கிறார். இந்த கவிதைகள் படிக்க சுலபமாகத்தானிருக்கின்றன. ஆனால் வார்த்தைகளின் ஊடான மெளனம்தான் கவிதை என்ற பிரெஞ்சு கவிஞர் Paul Valery ஐ செல்வராஜ் ஜெகதீசன் அவசியம் படிக்க வேண்டும்.

சந்தி

க்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்தனை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி – எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையான ஆட்சியை, சாவிக்கொத்தையே கொடுத்துவிட்டனர் மக்கள், அவர்களின் ஒரே கட்டளை ”செய்து காட்டு” என்பதே.
***********

வ்வொரு ஆண்டிலும் ‘மே’ மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் உலக முழுவதிலும் ‘அன்னையர் தின’மாகக் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்ற ‘தினங்கள்’ பொதுவாக வணிகர்களால் ‘விற்பனை’ தினங்களாக மாற்றப்பட்டு மக்களை, ‘இதைவாங்கு’ ‘அதைவாங்கு’ மூளையடித் திருநாட்களாக மாறிவிடும்.

இந்த ஆண்டு ‘அன்னையர் தினத்’தன்று ”டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த விளம்பரமொன்று, இந்தியாவின் சாதனை செய்யும் இளம் வீரர்கள், இசை வித்தகர் ஏ ஆர் ரஹ்மான், கிரிக்கெட்டின் டெண்டூல்கர், உலக சதுரங்க மாவீரர் ஆனந்த்., இர்ஃபான் சகோதரர்கள், திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் ஒரு எளிய ஆயினும் ஆழமான கவிதையாக உருவாகியிருந்தது. இதோ அது
ஒளிவெள்ளத்திற்கு முன்னால்
வெறியேறுவதற்கு முன்னால்
கைதட்டல்களுக்கு முன்னால்
மாயங்களுக்கு முன்னால்
கையெழுத்து வேட்டைக்கு முன்னால்
கொழிக்கும் செல்வத்திற்கு முன்னால்
பாரட்டுதல்களுக்கு முன்னால்
தலைப்புச் செய்திகளுக்கு முன்னால்
யாவற்றிற்கும் முன்னால் அம்மா இருந்தாள்.
*******************

விளம்பரத்துறை ஒரு அருமையான கொதிகலன். ”மாற்றி சிந்தி”ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான களம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை சின்னத்திரையில் ஒளிபரப்பும்போது, கூட வெளியாகும் விளம்பரங்களில், இதுவரை பெருமிடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகள் யாவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பது ‘வோடோ .போன்’ விளம்பரங்களில் தோன்றும் ”ச்ஜீ..ச்ஜீ..”க்கள்தான். கேலிச்சித்திரங்கள், கார்ட்டூன்களை இயக்கி ‘அனிமேஷன்’ என்ற உத்தியை ”மாற்றி யோசித்து” மனிதர்களையே கார்டூன்களாக மாற்றி, திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யும் 22 ப்ரேம்களை, 20 ப்ரேம்களாக சற்று மெதுவாக ஓடவிட்டு, படமெடுத்து ஒரு அனிமேஷன் படம்போல் செய்து நிகழ்வுகளையும் கற்பனை வளம் நிரம்பிய காட்சி அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள், தயாரிப்பாளரும், இயக்குனர்களுமான, ‘நிர்வாணா’ விளம்பர நிறுவனம். பல ”ச்ஜீ..ச்ஜீ..” விளம்பரங்கள் மக்களின் கவனத்தையும் கவர்ந்து, அவ் விளம்பரங்களை காண்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டன. படுத்துத் தூங்கும் முதலையை உசுப்பி விளையாடும் ஒருவனை அந்த முதலை விழுங்கிவிடும் அந்த விளம்பரம் பலரால் நினைவு கூரப்பட்டது.

அஞ்சலி

கவிஞர் சி மணி அண்மையில் இயற்கை எய்தினார். ஆங்கிலத்தை தனது முதுகலைப் படிப்பாகத் தொடர்ந்து, ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சி மணியின் கவிதைச் சிந்தனையை, டி எஸ் எலியட்டும், ஆடனும், தங்களது கவிதைகளால் ஈர்த்தது வியப்பில்லை. அமரர் சி சு செல்லப்பாவின் ‘எழுத்து’ வில் கவிதை எழுதத் தொடங்கி, பின், தானே ‘நடை’ என்ற சிற்றிதழைப் பதிப்பித்து வெளியிட்டார். மனிதர், எளியவர், யாருடனும் உடனே சரளமாகப் பழகிவிடாத சிறிது கூச்ச சுபாவம். பழகிவிட்டால் கூட மற்றவர்களின் அந்தரங்களில் அதிரடியாகப் புகுந்துவிடாத ஒருவகை ‘கனவான்’ மனப்பான்மை.

சேலத்தில் வசித்த அவர் மாலை வேளைகளல் கடைத் தெருவிலிருந்த நண்பரின் துணிக்கடைக்கு, தவறாத வருவார், வந்து ஒரு காப்பி0 அருந்திவிட்டு, ஓரிரு சிகெரெட் புகைத்து விட்டு விடைபெறுவார். சேரம் செல்லும்போது, மாரியம்மன் கோவிலுக்கு அருகே இருந்த துணிக்கடைக்கு, நானும் போவேன்; தொழில் முறையிலும், நட்புமுறையிலும். அந்தத் துணிக்கடைக்காரர், இன்னும் என் நெஞ்சில் நண்பராகவேஉள்ளவர். அவர்தான் என்னிடம் சி மணி ‘நடை’ நடத்தியபோது தன் சொந்தப் பணத்தை பெருமளவு தோழர்களாகக் கருதியவர்களினால் ஏமற்றப்பட்டு இழந்தார் என்றும், பண இழப்பைவிட தோழமையின் இழப்பு, அவரை மிகவும் வாட்டியதாக கூறினார். கவிதை எழுதுவது போலவே, சி மணி மிகவும் அழகாக தையல் கலையையும் பயின்றிருந்தாராம்.

ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல்
வழிதப்பிய குறுஞ்செய்தியொன்றுஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான்உடனே கிளம்பி வா.
உண்மையில் வேணுகோபால்என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல்அந்தக் கவலையும் தீர்ந்தது.

முத‌ல் நிலவு
இறுக மூடிக்கிடக்கும்அந்தக் குழந்தையின்கைகளை யாரோவிடுவிக்கிறார்கள்.
அந்தக் குழந்தைதன்னோடு கொண்டு வந்தநட்சத்திரங்கள், நிலவுகள்உ…ரு…ண்…டோடுகின்றன.
கனவில்கடவுள் கோபிக்கிறார்.குழந்தை சிரிக்கிறது.
இரண்டாம் முறையும்நட்சத்திரங்கள், நிலவுகளைதருகிறார்.அது ஒருபோதும்முதல் நிலவுமுதல் நட்சத்திரங்கள்போல் இருந்ததில்லை.

யாரும் சொல்லாத கவிதைஇதுவரை யாரும் சொல்லாதகவிதையைஎடுத்துக்கொண்டுதிரும்பினேன்.
அ‌ங்கேநீ இல்லை.நான் இல்லை.யாரும் இல்லை.எதுவும் இல்லை.எதுவுமற்ற அதுவும் இல்லை.
நீட்சி
முன்பொருநாள்எவனோ ஒருவன்தன் சதைகளை அரிந்துகழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்றுஅடுக்குமாடி குடியிருப்பின்என் ஜான்னலூரம்காத்துக்கிடக்கின்றனஅதே புறாக்கள்.
***********பாரியின் காலத்திலிருந்துகிளம்பி வந்தகொடியென்று இருசக்கரவாகனம் மீதுபடர்ந்தெழுந்திருந்தது.எடுக்கவா தொடுக்கவாஎன்றதுஎன்னைப் பார்த்து.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……15


ஏழு ஜென்ம வதைப்படுத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான்
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய்
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……14

வித்தியாசமான மியாவ்

சுந்தர ராமசாமி

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்.
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்.
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.
நான் பேசத் தொடங்கினேன்:
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது மேலும்…

ஒரே நாளில்

“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி.
ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை.
“என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.
கிரி குஷியாக வெளியே வந்தான். ஞாயிற்றுக்கிழமை. ஐந்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டாயிற்று. முறுக்கு மாமி வீட்டில் லாரன்ஸ் அண்ணன் இருந்தால் ஊர் சுற்றப் போகலாம். அப்போதுதான் மழை பெய்து நின்றிருந்தது. வீட்டு வாசலில் சாத்தி வைத்திருந்த கற்பனை புல்லட் வண்டியை காலால் உதைத்தான். “டட்டடட்” என்று வாயால் சத்தம் எழுப்பி இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்வதுபோல் முன் நீட்டி ஓடினான். ஏகப்பட்ட மழைக் குட்டைகள் இருந்த தெருவில் அவன் கவனத்துடன் புல்லட்டை வளைத்து வளைத்து ஓட்டவேண்டி வந்தது. தெரு ஓரமாய் சாக்கடைப் பள்ளத்தில் மழைநீர் ஓடும் சத்தம் கேட்டது. அந்தத் தண்ணீரில் நீளமான வேட்டியின் இரு நுனிகளையும் பிடித்து மீன்பிடி விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் குமாரும் மகேஷும் இவனைப் பார்த்து கத்தியதைப் பொருட்படுத்தாமல் ஓடினான்.

தெருமுக்கில் வாசன் குருக்கள் அப்போதுதான் பிள்ளையார் கோவில் சன்னதிக்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். சட்டென்று ப்ரேக் அடித்து கோவில் முன்னால் நின்றான். “மாமா நான் இன்னிக்கு குளிச்சாச்சு!” என்றான் ஆவலுடன்.

“குளிச்சா என்ன! விழுப்புப் படாம இருக்கணுமே” என்றார்.
“ப்ளீஸ் மாமா. குளிச்ச உடனே எது மேலையும் படாமல் புதுத்துணி போட்டுண்டு நேரே இங்கத்தான் வர்ரேன்.”
வாசன் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“பொய் மட்டும் சொன்னியோ அப்புறம் என்ன ஆகும்னு எனக்குத் தெரியாது!” என்றார் கண்டிப்புடன். அவருடைய ஒரு கையில் நீர் நிரம்பிய செம்புக் குடம் இருந்தது. இன்னொரு கையில் குடலையில் பூக்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை.
‘இல்லை மாமா. மடியா வந்திருக்கேன்”

அவர் பதில்பேசாது சன்னதிக்குள் போனார். குறுகுறுப்புடன் பின் தொடர்ந்தான் கிரி. சன்னதியின் இருட்டாக இருந்து பிள்ளையார் எங்கே என்று தேடவேண்டி வந்தது. குளித்தபின் துடைத்துக்கொண்ட துண்டு விழுப்பா மடியா என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்கவேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டான். பிள்ளையார் அவனுடைய விருப்பத்திற்குரியக் கடவுள் அல்லவா. ஒன்றிரண்டு பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டாரா என்ன! என்னதான் இருந்தாலும் அவனுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

அவன் கூட சன்னதிக்குள் வந்துவிட்டதைப் பார்த்து திகைப்பதுபோல நடித்தார் வாசன். அவன் மளுக்கென்று எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றான்.

“சரி கையை அலம்பிண்டு சுவாமி மேலேயிருந்து பழையப் பூவையெல்லாம் எடுத்துப் போடு” என்றார்.

பிள்ளையாரைத் தொடும்போது கிரியின் கை நடுங்கிற்று. தன்னைக் கிள்ளிக்கொண்டு வலிக்கிறதா என்று பார்த்தான். நிஜமாகவே கிள்ளிய இடம் வலித்தது. தலையைத் திருப்பி சன்னதிக்கு வெளியில் ஒரு கணம் பார்த்தான். வெயில் வெள்ளையாய் கண் கூசியது. இதை மட்டும் பார்த்தால் குமார், மகேஷ், பாஸ்கர் எல்லோரும் வயிறெரிந்துப் போவார்கள். டேய் டேய் என்னையும் சேர்த்துக்கோ என்று கெஞ்சுவார்கள்.

பிள்ளையாரைத் தொட்ட விரல் ஷாக் அடித்தாற் போல இருந்தது. எத்தனை குளுமை. கிரியின் உடம்புக்குள் ஒரு புது சக்தி பாய்ந்தாற் போல இருந்தது. இனி அவனால் லாரன்ஸ் அண்ணனைப் போல பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். குச்சிக் கத்தி சண்டையில் விவேக்கை எளிதாக வென்று விட முடியும்.

வாசன் குருக்கள் ஒல்லியாக இருந்தாலும் பிள்ளையாரைத் தினம் தொட்டுத் தொட்டு எத்தனை சக்தியை பெற்றிருப்பார்? யாராலும் அவரை சண்டையில் வென்று விட முடியாது.

எண்ணெய் மினுக்குடன் இருக்கும் பிள்ளையாருக்கு வாசன் குருக்களைப் போல அபிஷேகம் செய்யவேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கெஞ்சி கடைசியில் இன்று சித்தித்துவிட்டது. வாசன் குருக்கள் சொல்லும் காரியங்களை மிகுந்த கவனத்துடன் செய்தான். முதலில் பிள்ளையாருக்கு பால் குளியல். பிறகு தயிர். அப்புறம் எலுமிச்சை சாறு. கடைசியாக சந்தனக் காப்பு. வாசன் குருக்கள் அவனையே எல்லாமும் செய்யவிட்டார். அபிஷேகத் திரவியங்களை பிள்ளையார் உடம்பிலிருந்து வழித்தெடுப்பது கூட. பிள்ளையாரையுடைய தொப்பையிலும் தும்பிக்கையிலும் காலடியில் கிடக்கும் சுண்டெலி மீதும் கை பட்ட போது கிரிக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. எல்லாம் குழம்பாக வழிந்து சன்னதிப் பீடத்தில் சேர்ந்து ஓடும்போது மூச்சை அடைக்கும் வாசனை வந்தது. தலையெல்லாம் கிறுகிறுத்தது. பூக்களை சார்த்தி விடடு கற்பூரம் காண்பித்த வாசன் குருக்கள் கிரியின் நெற்றியில் விபூதி இட்டுவிட்டார். இனிமேல் அவருக்கு வேலை ஒன்றுமில்லை. வரும் ஜனங்களுக்காகக் காத்திருக்கவேண்டும். இந்தப் புறநகர்ப் பகுதியில் காலையில் வருபவர்கள் அலுவலகம் போகும் அவசரத்தில் தூரத்திலிருந்தே ஒரு கும்பிடும் மனதுக்குள்ளேயே தோப்புக்கரணமும் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமையென்றால் சாப்பாடுக்கடை முடித்த பிறகு தான் பெண்கள் வருவார்கள். அவர்களும் பக்கத்திலிருக்கும் துர்க்கை சன்னதிக்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.

“உனக்கு பள்ளிக்கூடம் இல்லியா?” என்று கேட்டார் வாசன் குருக்கள்.
“பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சே மாமா,” என்றான் கிரி.
“சரி கழுதையை அவிழ்த்து விட்டாச்சா,” என்று சிரித்தார்.
“உன்னோட அடுத்தக் காரியம் என்ன?”
“முறுக்கு மாமி வீட்டுக்குப் போறேன்”
“யாரு முறுக்கு மாமி?”
“டெய்சின்னு இருக்காங்களே ஆண்டாள் தெருவில். அவங்கத்தான் இப்போ முறுக்கு செஞ்சு விக்கறாங்க!”
“அடக் கடவுளே! அவளையா முறுக்கு மாமின்னு சொல்லற” வாசன் குருக்கள் தலையில் அடித்துக்கொண்டார்.
“சரி அங்கே ஒரு பையன் இருக்கானே.. அவன் பேர் என்ன?”
“லாரன்ஸ் அண்ணா!”
“அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்காமே..?”

கிரி விழித்தான். என்ன லாரன்ஸ் அண்ணனுக்கு பைத்தியமா?

“அட.. நேத்திக்கு நடுத்தெருல ட்ரெஸ் எல்லாத்தையும் அவித்துப் போட்டுண்டு போனான்னு சொல்றாளே!”

முந்தைய தினம் கூட லாரன்ஸ் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தானே. நேற்று ஒரு நாள்தான் கிரி அங்கே போகவில்லை.

“நம்பளவான்னா துர்க்கை சன்னதில வைச்சு வேப்பிலை அடிப்பா. அவாள்ளாம் சர்ச்சுக்குத் தானே போவா”

டெய்ஸி ஆண்ட்டி வீட்டு வாசலில் கிரி நின்றான். யாரையும் வெளியில் காணோம். வீட்டுக்கு முன்னால் எப்போதும் பயல்கள் கூடியிருப்பார்கள். இருந்தாலும் லாரன்ஸ் அண்ணனுக்கு கிரி மீது தனிப் பிரியம்தான். கிரியை மட்டும்தானே சர்ச்சுக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறான். முன் திண்ணையில் காரம்போர்டு ஆட்டம் நடக்கும். சில சமயம் செஸ். முன்வாசலுக்கும் காம்பவுண்டு கேட்டுக்கு இடையில் வண்டி விடும் இடத்தில் குறுக்குவாட்டில் கிரிக்கெட் கூட. டென்னிஸ் பந்துடன். லாரன்ஸ் அண்ணன் கமெண்டரி எல்லாம் சொல்லுவான். அவன் சொல்லும் தமிழ் கமெண்டரி வேடிக்கையாக இருக்கும். மட்டையாடி முட்டை போட்டார் என்றெல்லாம் சொல்லுவான். கபகபவென எல்லோரும் சிரிப்பார்கள். லாரன்ஸ் அண்ணன் வீட்டில் தான் முதன்முதலாக கேஸட் ப்ளேயரை கிரி பார்த்திருந்தான். பிலிப்ஸ் பெட்டி அது. நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் அதில் கேட்ட “வாடி என் கப்பக் கிழங்கே பாட்டு”
எத்தனை வேடிக்கையாயிருந்தது! கிரி வீட்டில் வெறும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோதான். மர்ப்பி பிராண்ட். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பா அதையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. கதவைத் தள்ளித் திறந்தான். உள்ளேயிருந்து எப்போதும் வரும் முறுக்கு வாசனை இப்போதும் வருவது ஆறுதலாக இருந்தது. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு பண்ணி விற்கத் துவங்கியதெல்லாம் கொஞ்ச நாட்களாகத்தான்.

பாலித்தீன் பையில் அடைத்த முறுக்குகளை போட்டு பலசரக்குக் கடைகளுக்கு ஆண்ட்டி எடுத்துபோகும் கூடை கூட நேர்த்தியாக இருக்கும்.
கிரிக்கு இலவசமாக ஓன்று இரண்டு முறுக்குகளை, உடைந்துப்போன சில்லுகளைத் தருவாள். முறுக்கு நன்றாக நாக்கில் கரையும் வண்ணம் இருக்கும். அம்மாவிடமும் கிரி வாங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அம்மாவோ பாட்டிக்காக மடி என்று வாங்கமாட்டேன் என்கிறாள். கிரியைக் கூட அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிப் போகாதே என்று திட்டுகிறாள்.

லாரன்ஸுடைய அப்பாவைக் கொஞ்ச நாட்களாகவே காணவில்லை. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு விற்பது அதனால்தான் என்று பின் வீட்டு ராஜம் மாமி போகிற போக்கில் ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். லாரன்ஸ் அண்ணனிடம் அதையெல்லாம் கேட்க கிரிக்கு பயமாகத்தான் இருந்தது.

டெய்ஸி ஆண்ட்டியை வீட்டுக்குள் காணோம். பின்பக்கம் தோட்ட்த்தில் இருக்கலாம். துணி உலர்த்திக்கொண்டிருப்பாள். நேரே லாரன்ஸ் அண்ணனைத் தேடிக்கொண்டு போனான் கிரி. டெய்ஸி ஆண்ட்டி வீட்டை அழகாக வைத்துக்கொண்டிருந்தாள். ஹாலில் பிரதானமாக இருக்கும் ஏசு ஒரு ஆட்டுக்குட்டியை அணைத்துக் கொண்டிருக்கும் படம் கிரிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கடியில் மெழுகுவர்த்திப் வடிவத்தில் சிறிய எலக்ட்ரிக் லைட் ஒன்று எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கும். மூலையில் மீன் தொட்டிக்குள் நீந்தும் தங்கக் கீற்றுகளாக மீன்கள்.

ஹாலையொட்டியிருக்கும் அறையில் சுவற்றில் சாய்ந்தவாறு இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் லாரன்ஸ் அண்ணன். கிரி வருவதையெல்லாம் பார்க்காதது போலவே நேர்க்கோட்டில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே ஒருவன் எதையோ உரக்க விற்றுக்கொண்டு போகும் சத்தம் மட்டும் கேட்டது.

லாரன்ஸ் அண்ணனின் தலை சுவரில் சாய்ந்திருந்தது. முகம் கருமையடித்து இருந்தது. எந்த அசைவுமின்றி இருந்தான். அண்ணா என்று கூப்பிடலாமா என்று தயங்கி நின்றான் கிரி.

குருக்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றாரே. பைத்தியமென்றால் சினிமாவில் காட்டும் பைத்தியம் போலவா? லாரன்ஸ் அண்ணனைப் பார்த்தால் அப்படியெல்லாம் இருக்கவில்லையே. ஒரு சிலையாக மாற்றிவிட்டாற்ப் போலத் தானே உட்கார்ந்திருக்கிறான்!
லாரன்ஸ் அண்ணனை நேற்று மட்டும் தான் கிரி பார்க்கவில்லை. முந்தா நாள் கூட கிரியை லாரன்ஸ் அண்ணன் வழக்கம் போல சாயந்திரமாக சர்ச்சுக்குக் கூட்டிப் போயிருந்தான். அவனுடன் சர்ச்சுக்குப் போவது கிரி வீட்டில் யாருக்கும் தெரியாது. பாட்டிக்கு மட்டும் தெரிந்தால் கிரியை வீட்டிலேயே சேர்க்க மாட்டாள். கிரிக்கு சர்ச் நிறைய பிடித்திருந்தது. அங்கே நடந்த ஒரு கல்யாணத்தைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாதிரியார் தான் எவ்வளவு கம்பீரமாக இருந்தார்! பார்க்கப் பார்க்க அவனுக்கும் அது போல நீண்ட அங்கியணிந்து நிற்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதே. பெஞ்சில் உட்கார்ந்துத் தொழும் பெண்கள் கண்னத்தில் நீர் வழிந்தது. அவர்கள் எல்லோருமே அற்புதமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மிக அழகாக இருந்தார்கள். லாரன்ஸ் அண்ணன் கூட நேர்த்தியாக உடையணிந்துதானே போவான்.

சில நாட்கள் லாரன்ஸ் அண்ணனும் அவனும் மட்டும் தனியாக சர்ச்சுக்குப் போவார்கள். உயர்ந்த கூரைக்கடியில் வெளிச்சம் விழும் கலர் கண்ணாடி சன்னல் பக்கத்தில் நின்று தன்னை பாதிரியாராக கற்பனை செய்தபடி லாரன்ஸ் அண்ணன் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கும் அது மாதிரி செய்ய வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் பயமாக இருந்தது. லாரன்ஸ் அண்ணன் எங்கே கிண்டல் செய்வானோ என்ற வெட்கம்.
லாரன்ஸ் அண்ணன் சர்ச்சுக்கு எதிரே உள்ள பூங்காவில் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு உடற்பயிற்ச்சிக்கென போட்டிருக்கும் இரும்புக் கம்பிகளில் இரு கைகளை ஊன்றி ஊசலாடி மேலும் கீழும் ஏறி இறங்குவான். அவனுடைய தோள்களில் உருளும் தசைநார்களைப் பார்க்கப் பிரமிப்பாகவே இருக்கும். கிரியால் அந்தக் கம்பி ஒன்றில் குரங்குபோல ஊசலாட மட்டும் முடியும். லாரன்ஸ் அண்ணன் கிரியின் சேஷ்டைகளைப் பார்த்துச் சிரிக்கும்போது கரிய முகத்தில் வெள்ளைப் பல்வரிசை பளிச்சென்று மின்னும்.

அப்புறம் குலாரன்ஸ் அண்ணனின் நண்பர்கள் அங்கே வந்து உடற்பயிற்சி செய்வார்கள். சாயங்காலம் பொழுது சாயும்போது எல்லோரும் கும்பலாக பக்கத்தில் டீக்கடைக்குப் போய் டீயும் முட்டை போண்டாவும் சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிடமாட்டியா என்று கிண்டலடிப்பான் லாரன்ஸ் அண்ணன். கிரி முறுக்கோ கடலைமிட்டாயும் தின்பான். கிறிஸ்த்துவப் பொண்ணு உன்னைத் தள்ளிக்கிட்டுப் போப்போறா அப்ப நீ சிக்கனும் மட்டனும் தான் சாப்பிடணும் என்று லாரன்ஸின் நண்பர்கள் கிரியை கேலி செய்வார்கள். கிரிக்கு உள்ளூர பெருமையாகக்கூட இருக்கும். டெய்ஸி ஆண்ட்டியும் சில சமயம் கிரியை கேலி பண்ணுவாள் நீ பெரியவனாகி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற என்று.

லாரன்ஸ் அண்ணன் கொஞ்ச நாள் வேலைப் பார்த்துவந்தான். கார் டிரைவர் வேலை. என்ன காரணமோ திடீரென்று வேலையை விட்டுவிட்டான். டெய்ஸி ஆண்ட்டி அப்போதெல்லாம் கடுகடுவென்று இருந்தாள். லாரன்ஸ் அண்ணனும் அவளைப் பார்த்துக் கத்தியிருக்கிறான். கிரி முன்னாலேயே. டெய்ஸி ஆண்ட்டி கர்த்தரே என்று கையில் ஜப மணிகளை உருட்டித் தொழத் தொடங்கிவிடுவாள்.

டெய்ஸி ஆண்ட்டி தான் ஈரக் கையுடன் பின்னாலிருந்து வந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வருத்தமாகத் தான் இருந்தது. கிரி கிட்டே வந்து குனிந்து கிசுகிசுப்பாகக் கூறினாள்.
”போய் பேசு..!”
லாரன்ஸ் அண்ணனோ கொஞ்சமும் அசைவில்லாமல்தான் இருந்தான்.
டெய்ஸி ஆண்ட்டியிடம் எவ்வளவோ கேட்கவிருந்தது கிரிக்கு. நாக்கு ஒட்டிக்கொண்டு அப்படியே நின்றான். அவன் கண்களில் இருந்த திகைப்பைப் பார்த்து டெய்ஸி ஆண்ட்டி பெருமூச்சுவிட்டாள்.

லாரன்ஸிடம் போய் “ராஜா, கிரி வந்திருக்கான் பாருப்பா..” என்றாள். அவள் அழுகிறாளோ என்று சந்தேகமாக இருந்தது கிரிக்கு.

லாரன்ஸ் திரும்பி இருவரையும் பார்த்தான். ஆனால் அவன் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

வாசலில் இருந்து ‘கிரி’ என்று அம்மாவின் குரல் கேட்டது. கிரி வாசலுக்கு ஓடி வந்தான். அம்மாதான் வந்திருந்தாள். அடிக்குரலில் “வாடா முதல்ல” என்று அவனை இழுத்தாள். கிரி பேசாமல் அவள் கூட போனான்.

பிள்ளையார் கோவில் அருகே அம்மாவைக் கேட்டான்.

“லாரன்ஸ் அண்ணனுக்கு என்னம்மா ஆயிடுத்து?”

அம்மா துர்க்கை சன்னதியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். பதில் பேசாது கையைக் கூப்பிக்கொண்டாள். கண்கள் மூடிய அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூட அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
@@@
கிரி பாயில் புரண்டு புரண்டு படுத்தான். அவன் முதுகுக்கடியில் எதோ உறுத்துவது போலிருந்தது. கழுத்துக்கடியில் வியர்த்தது.பக்கத்தில் சுருண்டிருந்த ராஜூ தூக்கத்தில் திடிரென தூக்கத்திலேயே என்னவோ உளறினான். எண்ணை சீக்குப் பிடித்திருந்த தலையணையைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. ராஜு எப்போதும் கிரியை சுற்றி சுற்றி வருகிறான். பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது புத்தகப்பையை தூக்கி வரமாட்டேன் என்று பாதி வழியில் தரையில் போட்டுவிட்டு அழுவான். கிரிதான் அதையும் தூக்கிவரவேண்டும். அம்மா சதா இறுக்கமாகவே இருக்கிறாள். அப்பாவிற்கு எப்பொழுதும் தலைவலி வந்துவிடுகிறது. பெரியவர்கள் தாங்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது ஏன் என்று கிரிக்கு புரியவில்லை. தங்கள் கஷ்டங்களையே அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.. அப்பா ஒற்றை வெற்றிலையை நெற்றியில் ஓட்டிக்கொண்டு இருட்டறையில் ஈசிச்சேரில் படுத்துக்கொள்வார். அம்மா சமையலறையில் சாதப் பாத்திரங்களை உருட்டுவாள் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக குறைந்துக்கொண்டே வருவது அவளுக்கு மிகவும் துன்பத்தை அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் மிகுந்த சண்டைக்குப் பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போகிறார் அப்பா. திரும்பி வரும்பொழுது வெறும் கையுடனும் வசையுடனும் தான் வருகிறார்.

கூடத்திலிருந்த கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்பா இன்னமும் வரவில்லை. அம்மா இன்னமும் வாசலில்தான் நின்றுக்கொண்டிருக்கிறாள். வெறும் நிழலாக தெரிந்தாள். ஞாயிற்றுக்கிழமையில் அப்பா இவ்வளவு நேரம் எங்கே இருப்பார் என்று புரியவில்லை. அவன் பார்க்காத பொழுது எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அம்மா சமையலறையில் என்ன செய்கிறாள் எப்போதும்? இப்போது லாரன்ஸ் அண்ணன் என்ன செய்துகொண்டிருப்பான்? வெற்றுப் பார்வையுடன் கட்டிலில் கிடப்பானோ?

எவ்வளவு நேரம்தான் அம்மா வெளியில் காத்துக்கொண்டிருப்பாள்? இரவு முழுவதுமா? ஒருவேளை அப்பா வராதுபோனால்? அங்கேயே நின்றுகொண்டிருப்பாளா? கிரி வெளியே போனான். அம்மா அவனைப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை. அவன் ராஜுவைப் போல சிறியவனாக இருந்தால்அழுகையுடன் அவளைப் போய் அணைத்துக்கொள்ள முடியும். இன்னும் பெரியவனாக இருந்தால் அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்.

‘அம்மா..’ என்றான்.
‘உம்..’
‘அம்மா’ என்று மீண்டும் கூப்பிட்டான்.
‘இந்த மனுஷன் எப்போ வருவார்னு தெரிலை. எங்கே போய் தொலைஞ்சாரோ!’ அம்மா பொதுவாக அலுத்துக்கொண்டாள். கிரியின் முகத்தை பார்க்காமல். அப்பா வந்தால் அம்மா அவரை எந்த கேள்வியும் கேட்க மாட்டாள்.

கிரியும் அவள் பக்கத்தில் நின்று அவள் பார்க்கும் திசையில் சிறிது நேரம் பார்த்தான். அவன் முழங்காலில் கொசு ஒன்று கடித்தது. தெருவில் தூரத்தில் மின்விளக்கு அவ்வப்போது அணைந்து அணைந்து எரிந்தது.
‘கண்ணா.. நீ போய் ஸ்டேஷன் வரை பார்த்துவிட்டு வரியா.. நானே போவேன் ஆனா ராஜு எழுந்து அழுதானா?..’

கிரி பதில் சொல்லாது நின்று தெருவையே பார்த்தான். தினம் ராத்திரி தள்ளு வண்டியில் வறுக்கும் வேர்க்கடலையை விற்றுப் போகும் ஆளும் அவர்கள் தெருவை எப்பொழுதோ கடந்து போய்விட்டான்.

‘சரி அம்மா’ என்று கிளம்பினான்.
‘ஜாக்கிரதையா போ. டார்ச்சு தரட்டுமா?’

அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாது போனான்.

சிறிது தூரம் போன பிறகு தான் காலில் செருப்பில்லை என்பது ஞாபகம் வந்தது. அம்மாவும் அதைக் கவனித்திருக்கவில்லை. காலில் கற்களும் வேறு எதோவும் குத்தத் துவங்கின. பின்னால் திரும்பி பார்த்தான். அம்மா மங்கலாகத் தெரிந்தாள். இடது பக்கம் நடந்தான். வாடகை சைக்கிள் கடை மூடியிருந்தது. வாசலில் பெஞ்சில் கடை முதலாளி ஆறுமுகம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். டீக்கடையில் பாய்லரை அலம்பிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். கடைவாசலில் இருந்து வழிந்தோடும் நீர்அரிக்கன் விளக்கொளியில் ரிப்பன் போல பளபளத்தது. அந்தப் பையன் எப்போது தூங்குவான்? அந்தப் பையனின் அம்மாவும் அவன் வருவதற்காக காத்திருப்பாளா?

தெருவைக் கடந்ததும் மைதானம் வந்தது. மைதானத்தின் பக்கத்தை ஒட்டிப்போகும் தெரு வழியாக செல்லுவது சுற்றுவழி. மைதானத்தை வெட்டி குறுக்காகப் போனால் ஆட்டுத்தொட்டியும் ஆட்டுத்தொட்டியின் பக்கத்தில் சர்ச்சும் வரும். அதைத் தாண்டினால் ரயிலடியைத் தொடும் பஜாருக்குள் நுழைந்துவிடலாம்.

இந்த மைதானம் வழிதானே லாரன்ஸ் அண்ணன் கிரியை சர்ச்சுக்குக் கூட்டிப் போவான். எத்தனை முறை அவனுடன் போயாகிவிட்டது. இனி லாரன்ஸ் அண்ணனால் சர்ச்சுக்கு எல்லாம் போக முடியுமா? அந்தக் கட்டிலிலே கட்டிப்போட்டது போலக் கிடக்கிறானே!

மைதானம் இருட்டு வெளியாக கிடந்தது. தன்னிச்சையாக மைதானத்தில் நுழைந்து நடந்தான். இங்கேதான் எல்லோரும் கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடுவார்கள். எதுவோ காலடியில் நழுவியது. பாம்பா..பூரானா. கிரி சட்டென நடுங்கி ஓடினான். ஓட ஓட மைதானத்தின் இருள் கூடிக்கொண்டே வந்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. ஆளற்ற மைதானம் இரவில் எத்தனை பயத்தை உருவாக்குகிறது. கிரிக்கு போகும் திசை குறித்து சந்தேகம் வந்தது. அவன் தொலைந்துப் போனால் அம்மா இரண்டு பேருக்காகவும் வீட்டில் காத்திருக்க வேண்டும்.

அம்மா இவன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பியிருக்கிறாள். ரெயிலடி காலியாகத் தான் கிடக்கும். பதினொரு மணிக்கு மேல் எந்த ரயில் வரப்போகிறது? அம்மாவிடம் அவனால் எப்படி சொல்ல முடியும்?

இன்று இரவு அவர் வரவில்லையென்றால் அவர்கள் மூன்று பேரும் தாத்தா வீட்டுக்கு போகவேண்டியதுதான். விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரிக்குப் போய் தாத்தா வீட்டில் இருந்தபொழுதெல்லாம் எத்தனை சந்தோஷமாக பொழுது கழிந்திருக்கிறது. ஆனால் அப்பா வந்தாலும் வராவிட்டாலும் அம்மா நிம்மதியற்றுத் தான் இருப்பாள். ராஜுவின் அழுகையும் குறையாது. பாதத்தில் ஈரமாய் எதுவோ ஒட்டி அறுவெறுப்பாயிருந்தது. அதைக் கையால் தொட்டுப் என்னவென்றுப் பார்க்கக் கூசி காலை தரையில் அழுத்தித் தேய்த்து நடந்தான். இப்போது புழுதி ஓட்டிக்கொண்டது.

ஆட்டுத்தொட்டியைக் கடந்தவுடன் சர்ச் பக்கத்தில் முளைத்தது. அவன் இதுவரை தனியாக உள்ளே போனதில்லை. எப்போதும் கூடவே லாரன்ஸ் அண்ணன் இருந்திருக்கிறான். லாரன்ஸ் மண்டியிட்டுத் தொழுவதை எத்தனை முறை பார்த்திருக்கிறான்.

சர்ச் கதவு ஒரு தள்ளலில் முனகித் திறந்தது. உள்ளே மூலையிலிருந்து வெளிச்சம் துளிப்போல இருந்தது. எப்போதும் அணையாத மெழுகுவர்த்தியிலிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது. மெழுகுவர்த்தியின் துடிக்கும் ஒளியால் நீளமான நிழல்கள் அலைந்தன. உள்ளே இருப்பதை அவன் பார்க்கவேண்டுமா? அவனுக்குத் தெரியாதா? மனதுக்குள் சர்ச்சின் ஒவ்வொரு மூலையும் அவனுக்குத் தெளிவாக தெரிகிறதே! உயரமான கூரைக்குக் கீழே மேடை மீது மேரி மாதாவும் குழந்தை ஏசுவும் சிலையாக. பக்கத்து சுவரில் சிலுவையும் ஏசுவும் ஓவியமாய். கோடியில் பெரிய மீன் தொட்டி போல கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருக்கும் ஏசுவின் பொம்மை.

ஏசுவின் முகத்திலும் மேரி மாதாவின் முகத்திலும் ஏன் இத்தனை வருத்தக் களை என்று முதன்முறையாக யோசித்தான். சர்ச்சுக்குள் மண்டியிட்டுத் தொழும் லாரன்ஸ் அண்ணனின் முகத்திலும் அதே துயரக் களைதானே! டெய்ஸி ஆண்ட்டி முகத்தில் கூட. ஏன் இருட்டில் நின்ற அம்மாவின் முகத்திலும் அதுதான் இருந்திருக்க வேண்டும்.

இன்று காலை பிள்ளையாரைப் பாலால் குளிப்பாட்டும் பொழுது சன்னதியில் வந்த வாசனை மீண்டும் வருவது போல் இருந்தது. ஏசுவிற்கும் அபிஷேகம் எல்லாம் செய்வார்களா என்ன? பிள்ளையார் மேல் வழிந்த பால் ஊடாக அவருடைய கருத்த உருவம் பளபளவென மின்னியிருந்தது. பிள்ளையாரின் உடலைத் தொடும்போது கை சில்லென்று இருந்தது. பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் தோன்றும் முறுவல் ஆனந்தம் எல்லாவற்றுக்கும் நேர் எதிராய் ஏசுவையும் மேரியையும் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் குமுறல் ஏன் எழுகிறது?

லாரன்ஸ் அண்ணனின் கண்களும் இன்று காலை ஏசுவின் கண்களைப் போல இப்படித்தானே எங்கேயோ நிலைத்திருந்தன. கிரி ஒருக்களித்துத் திறந்தக் கதவை சட்டென மூடினான். அடிவயிற்றில் புதிதாகத் துடிக்க ஆரம்பித்த பயத்துடன் படிகளில் சரசரவென இறங்கி இருட்டுக்குள் ஓடினான்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ……

சுகுமாரன்

பூனை…

மனிதர்கள் தவிரமற்ற பிராணிகளுடன்பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோலமாறாத வெதுவெதுப்புள்ளபூனைகளின் சகவாசம்சமீப காலமாய்ப் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்கால் குலுக்கக் கை நீட்டிவிரல் கிழித்த பூனையால்’மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்வடுவாக மிஞ்சிய இப்போதுபூனைப்பயம் பொய்த்துப் போச்சு

வீடு மாற்றியபோது புரிந்தது -நன்றியின் சொரூபம்நாய்களல்ல பூனைகள்நாய்கள்

மாநிதரைச் சார்ந்தவைசுதந்திரமற்றவை
எப்போதோசிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவைஇன்னும் உறிஞ்சியபடிகாலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்வீடுகளைச் சார்ந்தவைசுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவுபூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்தசொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்பூனைகளுடன் இப்போதுபகையில்லை எனக்கு உடல் சுத்தம்சூழ்நிலைப் பராமரிப்புரசனையுள்ள திருட்டுகாதல்காலக் கதறல்பொது இடங்களில் நாசூக்கு – என்றுபூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல

எனினும்என்னைக் கவரக்காரணங்கள் இரண்டு
ஒன்று:எனக்குத் கடவுளுக்கும்வாகனமாய்ப் பூனை இல்லை

இரண்டு:பூனை கண் மூடினால்இருண்டுவிடும் உலகம்

நானும்கண்மூடுகிறேன் “மியாவ்”

o

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த………

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர –

அழகும்கூட –

எங்கும்

விரிந்தேன் –

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் –

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை…

நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம். கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, ‘நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?’ என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது. தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள். என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், ‘நான் இல்லை’ என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். ‘என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை’ என்றார். ‘என் பெயரும் இல்லை,’ என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. ‘என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,’ என்றார். ‘மகிழ்ச்சி’ என்றேன்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

12

பூனைகள்

அழகியசிங்கர்

மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல்

குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று

என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில்

போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற

குட்டிகளோ தாய்ப் பூனையுடன்

சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி

ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை

போனால் போகிறதென்று

ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால்

நம்மெதிரில் குடிக்க வராமல்

பதுங்கிப் பதுங்கி

ஆளில்லா நேரமாய்த் தொட்டு

கவிழ்க்கும் அவசரமாய்

முகமெல்லாம் பால் துடிக்கும்

இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம்

குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும்

கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம்

என்றோ ஒருநாள் நடந்தது

குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம்

வெள்ளை நிறத்தில் பூனையொன்று

இன்னொரு நாள் வரக்கண்டேன்

படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில்

பகல் பொழுதொன்றில்

சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு

பதறிப்போனேன்.

பார்ப்பதற்குப் பிடிக்காத

குண்டுப் பூனையொன்று

மாமிசம் விரும்பாத என் வீட்டில்

மீன்களைக் கடித்துத் துப்ப

அண்டை வீட்டாரின்

தேவை இல்லாத மனவிரிசல்களுடன்

நாற்றம் குடலைப் புடுங்கியது.

அட்டகாசம் பண்ணும் பூனைகளே

போய் வாருங்களென்று மிரட்ட

எடுத்தேன் கையில் கிடைத்ததை

அவை பல தெருக்கள்

தாண்டி ஓடட்டுமென்று