நான், பிரமிள், விசிறிசாமியார்……11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்து வந்தார். பொது கழிவறை பக்கத்தில் அவர் அறை இருந்தது. தமிழில் முக்கியமான படைப்பாளியான பிரமிள், யார் கவனமும் இன்றி தனிமைவாசியாக இருந்தார். எனக்கு அவர் நிலையைப் பார்த்து வருத்தமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் இருந்தார். பொதுவாக எழுதுபவர்களெல்லோரும் ஒரு மாதிரியான நிலையில்தான் இருப்பார்கள். ஏன் எழுதுபவர்கள் இல்லாமலே சாதாரண மனிதர்களே அப்படித்தான் இருப்பார்கள். எதாவது ஒன்றில் தீவிரமாக இருப்பவர்கள் அமைதியில்லாமல்தான் இருப்பார்கள். எதாவது ஆசை மனதில் பிடித்துக்கொண்டால் அந்த ஆசையை விட்டு வர முடியாது. இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது. ‘என்னிடம் அதிகமாக பணம் தங்கக் கூடாது. நான் எப்போதும் பிச்சை எடுப்பவனாகத்ததான் இருக்க முடியும்,’ என்பார் பிரமிள். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும். அலுவலகத்தில் என்னைப் பார்க்க வரும்போது, அலுவலகப் பெண்மணி ஒருவரைப் பார்த்து சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார் ஒருநாள். எனக்குத் திகைப்பாக இருந்தது. அந்தப் பெண்மணியின் பெயர் சித்திரா. எப்படி அவருக்கு அப்படி செல்லவந்தது என்று யோசிப்பேன். ‘ஒரே விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்,’ என்பார் பிரமிள். என் இயல்பு நான் எதாவது ஒன்றை ரசித்தால் அதில் நுழைந்து விடவேண்டும் என்று நினைப்பவன். சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போது நானும் கிரிக்கெட் வீரனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு மருத்துவனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். ஞாநி நடத்திய பரீக்ஷா நாடகத்தில் நான் நடித்தபோது ஒரு மெச்சத்தகுந்த நடிகனாக மாற வேண்டுமென்று கற்பனை செய்வேன். நான் எழுத ஆரம்பித்தபோது நான் எழுதுவதையெல்லாம் எல்லோரும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் ஒன்றுமே நடக்காது. பல ஆண்டுகளாக நான் விருட்சம் பத்திரிகையை நடத்துவதைப் பார்த்து, பிரமிள் ‘நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்றார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருமுறை பிரமிள் அவர் அறை வாசலில் விட்டிருந்த செருப்பை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மோசமான நிலை இது. அவர் செருப்பே ரொம்ப சாதாரணமாக இருக்கும். அதை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அலுவலகம் போகும்போது அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று அவர் அறைக்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன், என்னிடமிருந்த செருப்பைக் கழட்டிவிட்டுப் போகச் சொன்னார். அலுவலகம் போகும் சமயத்தில் செருப்பில்லாமல் போக முடியாது என்றேன். ஆனால் அன்று அலுவலகம் விட்டு வரும்போது, அவருக்கு செருப்பு வாங்கிக்கொடுத்தேன். அப்போதுதான் அவர் சோ ராமசாமியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை ஒரு கார்டில் எழுதியிருந்தார். ராமசாமி என்ற பெயரில் இருப்பவர்கள் எப்படி புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பது மாதிரி இருந்தது அந்தக் கவிதை. சோ ராமசாமி, ஈ வே ராமசாமி என்றெல்லாம் தொடர்புப் படுத்தி எழுதியிருந்தார். அந்தக் கார்டை என்னிடம்தான் கொடுத்தார். நான் எங்கோ தொலைத்துவிட்டேன். (இன்னும் வரும்..)

காக்கை கூடு

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி
எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

கூட்டிலிருந்த
கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்

இருக்கும் வரை சொறுவைத்த
அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.

இரண்டு கவிதைகள்


கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது


விசாரித்தல்

எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.

எதையாவது சொல்லட்டுமா….7

கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது.

சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது.

கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை. பல இடங்களுக்கு நடந்தே செல்கிறேன். இதனால் டூவீலர் இல்லாத குறையும் மனதில் உறுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மயிலாடுதுறையைவிட கும்பகோணம் இன்னும் வசீகரமாக இருக்கிறது. கூட்டம். கோயில்கள். என்று அமர்களமாக நல்ல களையாக கும்பகோணம் தெரிகிறது. பலதரப்பு மக்கள் வந்தவண்ணம் போய்வண்ணம் இருந்து கொண்டிருந்தார்கள்.

இன்டர்நெட் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் தமிழில் அடிக்க சென்னைக்குத்தான் கொஞ்ச நாட்களாக வர வேண்டியிருக்கும். முடிந்தால் ஆங்கிலத்தில் அடிக்க முயற்சிக்கலாம். ஆனால் விருட்சத்திற்கு வரும் கவிதைகளை வளைதளத்தில் போட்டுவிடலாம்.

இந்த காலச்சுவடு இதழ் கவிதை இதழாக வந்துள்ளது. அதில் முக்கியமாக சுகுமாரன் கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத்து பத்திரிகைதான் புதுக்கவிதையைத் தூக்கிவிட்டதாக எழுதி உள்ளார். உண்மையில் பாரதியின் வசனக் கவிதைகளுக்குப் பிறகு, புதுக் கவிதை முயற்சி ந பிச்சமூர்த்தி, க.நா.சு என்றெல்லாம் தொடங்கி விட்டது. புதுக்கவிதை என்ற பெயரை க.நாசுதான் கண்டுபிடித்தார். சுகுமார் அவருக்குப்பிடித்த சில கவிஞர்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

1978 வாக்கில் ஆத்மாநாம் தொடங்கிய ழ வைப்பற்றி குறிப்பிடவே இல்லை. அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் கடந்த 22 ஆண்டுகளாக வருவது அவர் ஞாபகத்தில் இல்லவே இல்லை. கவிதையைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

எல்லார் கண்களுக்கும் எல்லோரும் தென்படுவதில்லை. நான் அது மாதிரி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் சுகுமாரன் கவிதையைத் தொட்டிருக்க மாட்டேன். சிலருக்கு எதாவது ஒரு ல்ர்ள்ண்ற்ண்ர்ய் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதி விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் இன்னும் அதிகம் பேர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர் கவிதை எழுதுவதே தெரியாமல் போய் விடுகிறது.

இன்டர்நெட் வந்தபிறகு பலருடைய கவிதைகள் தெரிய வருகின்றன. அவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது. இன்னும்கூட கவிதைப் புத்தகங்கள் புத்தகமாகப் போட்டால் விற்பதில்லை. இதை என்னவென்று சொல்வது.

திரும்பவும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைப் பார்ப்போம்.

போன்சாய் ம‌ர‌ நிழல்


இருள் பூத்துத் தொங்கும்
போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து
வெளிவ‌ருகிறாள்
அர‌ளிப்பூ தேவ‌தை
பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின்
மேல்
க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம்
ப‌ழைய‌ க‌விதையொன்றின்
பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார்
காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன்
எல்லாக் க‌விதைக‌ளிலும்
தேவ‌தை
என‌ அடித்து எழுதுகிறான்
ஆசிரிய‌ சித்த‌ன்

விமான நிலைய வரவேற்பொன்றில்…



#
பயணக் களைப்பாய்
இருக்கலாம்.
போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.
எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.
ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.
சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.
இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன் நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

நாவிஷ் செந்தில்குமார்



உனக்குமட்டுமொரு
ரகசியம் சொல்கிறேன்
என்றொருவன் காதில் சொன்னதை
எனக்குமட்டும்
சொல்வதாகச் சொல்கிறான்
இன்னொருவன்...
ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள
புள்ளிக்கும்
நாளும் கசிகின்ற
எங்கள் வீட்டு
தண்ணீர்த்தொட்டியிலுள்ள
ஓட்டைக்கும்
நானறிந்து வித்தியாசமேதும் இல்லை

எதையாவது சொல்லட்டுமா….6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள்.

எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது.

பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்).
எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன்.

எல்லோரும் தீவிர எழுத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கவிதைகளைத் திறமையாக எழுதுகிறார்கள். கதைகளை விதம் விதமாக தருகிறார்கள். இந்தப் புதியவர்களின் வேகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தப் படைப்பையும் எப்படி எழுத வேண்டுமென்ற கோட்பாடு என்றெல்லாம் கிடையாது. ஆனால் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகிற தன்மை புதியவர்களிடம் உள்ளது.

பாரதியாரின் வசனக் கவிதைதான் புதுக்கவிதை உருவாகக் காரணம். எந்தப் படைப்பும் ஒன்றைப் பார்த்துதான் இன்னொன்று உருவாகிறது. பாரதி வசனக் கவிதை மட்டும் எழுதவில்லை என்றால், இன்றைய புதுக்கவிதை உருவாகி இருக்குமா?

க.நா.சு ஒருபடி மேலே போய் புதுக்கவிதை எளிதில் வாசிக்கும்படி உரைநடை பாணியில் எழுதி அசத்தி விட்டார்.

இதை புதியவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது. தானாகவே தெரிந்து கொண்டார்களா? இவர்கள் படைப்புகளைப் பிரசுரிப்பது மிக முக்கியமான ஒன்று. நான் ஒவ்வொரு முறையும், வலைத்தளத்திலும், நவீன விருட்சம் இதழிலும் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறேன்.

நவீன விருட்சம் 85வது இதழை வரும் 3 நாட்களில் தயாரிக்க வேண்டும். முடியுமா என்று பார்க்கிறேன். யார் படைப்புகளாவது விட்டுப் போயிருந்தால் ஞாபகப்படுத்தவும்.

சில கவிதைகள்

தூக்கி எறியும்
பழைய செருப்புகளும்
புதிதில்
ஆசையாக வாங்கியதுதான்

*
வரும்போது
இனிதே வரவேற்று
போகும்போது
இனிதே வழியனுப்பும்
இரு பக்கங்கள்
வாய்க்கிறது..
ஊர் எல்லை
பெயர்ப்பலகைக்கே.
*
ஊருக்குப்போயிருக்கும்
மகனின்
மழலைச்சிரிப்பை
எண்ணுந்தோறும்
தனிமையில் விரக்தியாய்
சிரித்துக்கொள்கிறான்

அதற்கும் பெயர்
சிரிப்புத்தானா?
*
கைகளேந்திப் பெற்றுக்கொண்டு
திரும்பி நடக்கும்

அந்தக் கண்களை
உற்று நோக்குங்கள்
திரளும் கண்ணீர்