குழந்தையின் நிலாப் பயணம்

பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள். 

உண்மை

 
 
 
 உண்மைகள் என்றால் 
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்
தனக்குத் தெரியாத உண்மைகளே 
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்
அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்
முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்
அவனது பாதுகாப்பே
விலையென்றாலும் 
பயப்பட மாட்டான்
எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே 
சொல்லி அனுப்பினார்கள்
சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்
சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்
அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும் 
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்
மறுக்கப்படும் 
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை 
என்கிற உண்மை மட்டும்
பார்வைக்குச் சிக்காமல் 
அவனது நடுமுதுகில் அமர்ந்து 
கண்சிமிட்டிச் சிரித்தபடி 
சவாரி செய்து கொண்டிருந்தது
தன்னை விலை பேசவே முடியாதென்று.

பார்வைகள்

 
 
 
 
 
டெட்ராய்ட் நகரத்தின் ஒரு டிசம்பர்மாதக்  காலைப்பொழுது.
 
வழக்கம் போல ஜாக்கிங்கிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி சிறு அறிமுகம்.
 
பெயர் அரவிந்தன்.வயது இருபத்தி எட்டு,இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாய் அமெரிக்கா வந்திருக்கிறேன்.கார் நகரத்துக்காரிகைகளை ரசித்தபடியே ஆறுமாதங்களைக்கழித்துவிட்டேன்..ஆயிற்று அடுத்தவாரம் தாய்மண்ணே வணக்கம் என்று கூவிக்கொண்டுசிங்காரச்சென்னைக்குப்போய்விடுவேன்.
 
தினமும் ஜாக்கிங் செய்யும் பாதையில்  என் கால்கள் செல்கின்றன. எங்கும் மூடுபனியின் ஆக்கிரமிப்பு.
 
மிச்சிகன் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற குளிருக்குப் பாதுகாப்பாய்த் தான் புறப்பட்டு வந்திருக்கிறேன்.
 
எல்லாவற்றிலும் எனக்கு முன்எச்சரிக்கை உணர்வு அதிகம். என் பார்வை கூர்மையானது. பள்ளி நாட்களிலிருந்தே கண்பார்த்ததை மனசு உள் வாங்கிக் கொள்ளும். எனது இந்தத் திறமைதான் என்னை இந்த உயர்நிலைக்கு வரவழைத்திருக்கிறது என்பதில் பெருமை எனக்கு!
 
எதேதோ நினனத்தபடி ஜாக்க்கிங் முடித்து என் அபார்ட்மெண்ட்டிற்குத் திரும்ப நடக்கிறேன்.
 
அப்போதுதான் உணர்கிறேன் பாதை தெரியாத  அளவுக்கு பனிப்படலம் புகையாய் சூழ்ந்துவிட்டிருக்கிறது என்பதை.
 
ஒருக்கணம் என்ன செய்வதென்றே புரியவில்லை.
 
அலுவலகத்தில் இன்று முக்கியமான மீட்டிங் வேறு சரியான நேரத்திற்குப் போக வேண்டுமே?
 
தவிப்புடன் நிற்கும் போது தொலைவில் யாரோ நடந்து வருவதை டக்டக் என்ற ஷூவின் ஒலி நிரூபித்தது.
 
பெருமூச்சுவிட்டவன்,” எக்ஸ்யூஸ்மீ?” என்று குரல் கொடுக்கிறேன்.குரல்தான் இப்போதுஎனக்குப்பார்வையாக இருக்கிறது.
 
ஷூ சத்தம் நிற்கிறது.”யெஸ்?” என்று கேட்கிறது. குரலுக்குரியவருக்கும் என்னைதெரிய வாய்ப்பில்லைதான்  பனிப்புகை தான் எங்களை மறைக்கிரதே!
 
தொடர்ந்து,” உங்களூக்கு ஏதும் நான் உதவவேண்டுமா?” என்கிறது
ஆர்வத்துடன்.அந்த ஆங்கில உச்சரிப்பு குரலுக்குரிய நபர் அமெரிக்கர் என உறுதிப்படுத்துகிறது.இந்த ஊர்க்காரர்களுக்கு  ஓரளவு எல்லா இடமும் அத்துப்படியாய் இருக்குமே?
 
நான், எனது நிலைமையைக்கூறி உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
“வித் ப்ளஷர்… எதற்கும் நான் என் கைத்தடியை நீட்டுகிறேன் அதை பிடித்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்றார் அந்த மனிதர்.குரலைவைத்து நாற்பதுகளில் வயதைச் சொல்லலாம் போலிருக்கிறது.
 
நான் அவர் நீட்டிய கைத்தடியை பனிப்புகைமண்டலத்தில் அனுமானமாய் கைவிட்டுத் துழாவி கெட்டியாய் பிடித்துக் கொள்கிறேன்.
 
போகும்வழியில் என்னைப்பற்றி கூறிவிட்டு,”இந்த ஆறுமாதத்தில் எனக்கு இப்படி வழி தெரியாமல் போனதே இல்லை..என் பார்வையில் ஒருதடவை எதைப்பார்த்தாலும் அது மனதில் பதிந்துவிடும். என்னவோ இன்று இப்படியாகிவிட்டது” என்கிறேன்.
 
“ஓ அப்படியா?” என்கிறார் அவர் வியப்புடன்.
 
அபார்ட்மெண்ட் வாசலுக்கு என்னைக் கொண்டுவிடுகிறார்.
 
“நன்றீ”என்று நான் கூறும்போதே சூரியன் எட்டிப்பார்க்க மெல்லப்பனிப் படலம்  விலக ஆரம்பிக்கிறது.
 
அவரை நோக்கி,”அதெப்படி,பனிப்படலத்தில் வழி  பிசகாமல் நடந்து வந்தீர்கள்? ஆச்சரியமாய் இருக்கிறது!” என்றுகேட்டேன்.
 
அந்த மனிதர் சட்டென தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபடி,” என்னைப் போன்றவர்களுக்கு பாதங்களில் தான் பார்வை. உங்களுக்கு இன்று உதவமுடிந்ததில் மகிழ்ச்சி வருகிறேன்’ என்று அடக்கமுடன் கூறி கைகுலுக்கி விடை பெறுகிறார்.
 
டக் டக் டக்..
 
அவரது கைத்தடியின் ஓசை கம்பீரமாக ஒலித்தபடி நகர்கிறது அந்த நேரம்அதுவரை என்னைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்திருந்த என் பார்வை சட்டென தாழ்கிறது.

ழ கவிதைகள்

ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 
1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.
அப் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் முக்கிமானவை.  கவிதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் உடையவர்கள், ழ வில் வெளிவந்த கவிதைகளை பயிற்சிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.  நவீன விருட்சம் பத்திரிகைக்குக் கூட ழ ஒரு முன்னுதாரணம். ழ வில் வெளிவந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிறேன். 
ழ 5வது இதழ்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
இந்த நிழல்
பசுவய்யா
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?
பூமியில் காலூன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும்போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும்.

எதையாவது சொல்லட்டுமா……….57

ஒவ்வொரு முறையும் அந்தக் கோயிலைத் தாண்டித்தான் வண்டி போகும்.  இதோ நான் இங்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது.  ஒவ்வொரு முறையும் நான் பஸ்ஸைவிட்டு இறங்கி வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நினைப்பதுண்டு.  ஆனால் முடிவதில்லை.  எங்கள் குடும்ப குலதெய்வம் அந்தக் கோயில். 
செப்டம்பர் 3 ஆம்தேதி சனிக்கிழமை இறங்கி அந்தக் கோயில்போய் சாமி தரிசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  எதிர்பாராதவிதமாய் சங்கரைப் பார்த்தேன்.  அந்தக் கோயிலில் அவன் குடும்பமே பணிபுரிகிறது.  புதிதாக திறந்த ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்துப் போனான்.  பின் அந்தக் கோயிலைப் பற்றி சொன்னான்.  மொத்தம் 300 பேர்கள் பணிபுரிவதாக சொன்னான்.  கூட்டம் தாங்க முடியாது.  திருப்பதிக்குப் பிறகு இதுதான் என்றான்.  உண்மைதான் கூட்டம் தினமும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும்.”என் சகோதரர்கள் இருப்பார்கள்.  நீங்கள் போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை பண்ணுங்கள்,”என்றான். 
அர்ச்சனை டிக்கட்டுக்களையும், அர்ச்சனைப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். 
பழையபடி அழுக்காகவே அந்தக் கோயில் காட்சி அளித்தது.  தினமும் ஆயிரக்கணக்கானவர் வருகின்ற கோயில் அப்படியே இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.  அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சனைப் பண்ணுபவர்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.  தட்டில் விழுகிற எல்லாப் பணமும் எந்தந்த அர்ச்சர்களின் தட்டுக்களில் விழுகிறதோ அவர்களுக்குச்  சொந்தம்.  பக்தியைவிட அதிகமாக பணம் பண்ண வேண்டுமென்கிற எண்ணமே அவர்களிடம் இருப்பதாகப் பட்டது. 
அந்தக் கோயிலின் அழகே குளம்தான்.  அது பாசிப்பட்டு வீணாகிப் போய்க் கிடந்தது.  தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரைக் கொண்டு வர எந்த பிரயத்தனமும் அங்கில்லை.  நான் சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்தேன்.  என்னிடம் அர்ச்சனைத் தட்டு வாங்கியவர், என்ன நட்சத்திரம் என்றுகூட கேட்கவில்லை.  பின் கோபமாகக் கூட சாமி கும்பிட வந்தவர்களைத் திட்டினார்.  அம்மனிடம் அர்ச்சனையை முடித்துக்கொண்டு சாமி சந்நிதானம் வந்தேன்.  அங்கேயும் உள்ள அர்ச்சர்கள் யந்திரத்தன்மையுடன் உற்சாகமில்லாமல் காணப்பட்டார்கள்.  அதில் ஒருவர் விபூதி குங்குமத்தைப் பொட்டலம் கட்டி 10 ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்.  சாமியைப் பார்க்க வரும் பக்தர்களிடம் காணப்படும் பக்தி இவர்களைப் பார்க்கும்போது ஓடியே போய்விடும் போல் தோன்றியது. பெரும்பாலான இந்துக்களுக்கு வைதீஸ்வரன் கோயில் என்ற பெயரில் உள்ள அந்தக் கோயில் குலதெய்வக் கோயில்.
அடுத்தநாள் திருஇந்தளூரில் உள்ள பரிமேள ரங்கநாதன் கோயிலுக்குச் சென்றேன்.  முக்கியமான திவ்ய தரிசன கோயில்.  சாமி உள்ள அறையில் நல்ல வெளிச்சமாக இருந்தது.  ஏசி செய்திருந்ததால் குளு குளுவென்றிருந்தது.  கோயில் வெளியில் பல சிற்ப வெளிப்பாடுகள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  கோயிலை சுத்தமாக வைத்திருந்தார்கள். அரங்கநாதரின் சயனத்திருக்கும் தோற்றத்தை நெருக்கத்தில் கண்டு களிக்க முடிந்தது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தும் சரியாக பராமரிக்காத வைதீஸ்வரன் கோயில் எங்கே?
இந்தக் கோயில் எங்கே என்று தோன்றியது. பக்தி மணம் என்பது பணம் பறிக்கும் குறிக்கோளால் சிதறிப் போய் விடுவதாக தோன்றுகிறது.
  

ப்ளோரிடா

ப்ளோரிடா என்ற இந்த ஊர்
எனக்குப் பிடித்திருக்கிறது
வீதியெல்லாம் நீரால்
துடைத்தது மாதிரி சுத்தமாய் இருந்தது
அங்கங்கே ஓங்கி உயர்ந்த மரங்கள்
வரிசையாய் வீற்றிருந்தன
இங்கேதான்
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்
ஐ.பி.சிங்கர் வாழ்ந்தாராம்..
மியாமி கடற்கரையில்
ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைக்
கடந்தவண்ணம்
காரில் பறந்தவண்ணம் இருந்தோம்
ஐ.பி சிங்கர் பெயரில் ஒரு தெருவைக்
கடந்து  சென்றதாக புதல்வன் சொன்னான்
என் மனதுக்குகந்த எழுத்தாளர்
ஏதோ ஒரு வீட்டில்
வாழந்திருப்பார்
இங்கிருக்கும்போது
அவர் ஞாபகமும் அவர் எழுத்தின் மணமும்
சுற்றி சுற்றி வந்தன..
ஏன்…………..?

ஒரு மாதமாய்…….

கடந்த ஒரு மாதமாய்
நாங்கள் மூவரும்
இந்த வீட்டில் இருந்தோம்
பல ஆண்டுகளாய்
அப்படி இல்லை
புதல்வன் தூர தேசத்தில் இருந்தான்
நானோ இன்னொரு கோடியில் இருந்தேன்
வீட்டில் அடைப்பட்டிருந்தாள் மனைவி
இங்கே –
மூவரும் ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் கூடியிருந்தோம்
உண்டு உறங்கினோம்
வெளியே கிளம்பி
ஊர்ச் சுற்றத் தொடங்கினோம்
வாழ்க்கையில்
இந்தத் தருணம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தோம்
எங்களின் வார்த்தைகளின் பரிமாற்றம்
சில நொடிகளே….
இதோ
ஒவ்வொருவாய்
ஒவ்வொரு திசைக்குப் பயணமாகிறோம்….
(12.08.2011 / Florida 1.20 pm)

நியுயார்க்

நான் தெருவில்
காலடி எடுத்து வைத்தபோது
உயரமான அந்தக் கட்டிடங்கள்
என்னை வியக்க வைத்தன
ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல்
கட்டிடங்கள்
ஒவ்வொன்றையும் அண்ணாந்து
பார்க்க பார்க்க தட்டாமாலை
சுற்றுவதுபோலிருந்தது.
தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய்
ஆண்களும் பெண்களும்
நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்
மாலை வேளையில்
டைம் ஸ்கெயர் என்ற இடத்தில்
கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு
பாட்டு பாடிக் கொண்டிருந்தார்
பலர் கூட்டமாய் கூடி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை
உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்
வயதானவர்கள்
நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கட்டிடங்கள் மேல்
வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில்
விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தன.
பெண்கள் அரைகுறை உடைகளுடன்
மிதந்த வண்ணம் இருந்தார்கள்.
திசை தெரியாத திசைக்கு
நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.

பதினேழாம் வயது

எனது ஐ.க்யூ’வை கணக்கிலெடுத்து,
என்னுயரத்திற்கு சரியானவன்
எனக்கணித்து ,
என் வாழ்நாள் முழுதும்
துணையாக உடன் வரத்தக்க
பொருத்தமான ஒருவனை
தேர்ந்தெடுத்தால்,
அவன் ஏற்கனவே
பல சலிப்பூட்டும் இளம்பெண்களின்
காதலனாகவே இருந்திருக்கிறான்
அவன் தனது நீண்ட காலக்கனவை
என்னுட்ன் விவாதிக்கிறான்
இவனும் மற்ற இளைஞர்கள்
போலவே நிகழ்காலத்தில்
வாழ மறுக்கின்றவனாகவே
இருக்கிறான்.
சலித்துத்தான் போகிறது
எனக்கும்.

எதையாவது சொல்லட்டுமா – 56

 
ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது 28ஆம் தேதி ஜூலை மாதம். ஞாயிற்றுக்கிழமை.  வழக்கம்போல் சென்னையிலிருந்து மாயூரம் கிளம்ப வழக்கம் போல் இரவு 8 மணிக்குமேல் e-ticket ஐ பிரிண்ட் எடுத்தேன். எனக்கு டிக்கட் எப்போதும் என் உறவினர் ஒருவரால் புக் செய்யப்படும்.  அவரும் என்னைப்போல் ஞாயிறு இரவு கிளம்பி திங்கள் மாயூரம் வந்து பின் திருக்கடையூர் பயணம் செய்வார். 
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவருக்கும் எனக்கும் டிக்கட் எடுப்பார். எப்போதும் நாகூர் விரைவு வண்டியில்தான் நாங்கள் செல்வோம்.  அது காலையில் மாயூரம் 4.50 மணிக்குச் செல்லும்.  நாங்கள் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து ஒரு டீக் கடையில் காப்பி குடிப்போம். பின் நடந்து சென்று ஒரு பஸ்பிடித்து நான் என் இடத்திற்கும், அவர் திருக்கடையூரிலுள்ள அவர் இடத்திற்கும் செல்வார்.
28ஆம் தேதி அவர் என் கூட வரவில்லை.  எனக்கு மட்டும் டிக்கட் அவர் பதிவு செய்திருந்தார்.  நான் வழக்கம்போல இரவு 9.45க்குக் கிளம்பி மாம்பலம் ரயில்வே நிலையம் சென்று எக்மோர் டிக்கட் வாங்கி மெதுவாக வந்து சேரும் மின்சார வண்டியில் தொற்றிக்கொண்டு எக்மோர் சென்றேன். 
நாகூர் வண்டியைத் தவிர எல்லா வண்டிகளும் போய் விட்டன.  மெதுவாது s4 கோச்சில் 6 எண்ணைப் பார்த்தேன்.  என் பெயர் இல்லை.  திகைத்தேன்.  எப்படி இந்தத் தவறு நடந்தது? யோசித்தேன்.  பின் டிக்கட்டை ஆராய்ந்தேன்.  தேதி சரியாகப் போட்டிருந்தது.  ஆனால் நாகூர் வண்டிக்குப் பதில் மதுரை எக்ஸ்பிரஸ் என்று போட்டிருந்தது.  அந்த வண்டி 10.45க்குக் கிளம்பிப் போய்விட்டது.  என்னடா இது இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்ற பதறினேன். கடைசிவரை என் உறவினர், ரயில் மாறி டிக்கட் பதிவு செய்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  பின் ரயில்வே டிடிஆரைப் பார்த்து அந்த டிக்கட்டை வைத்துக்கொண்டு போக முடியுமா என்று கேட்டேன்.  அந்த டிக்கட் இனிமேல் செல்லாது என்றார்.  திரும்பவும் ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு வர ஓடினேன்.  அலுவலக சாவிகளை வைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்.  ரிசர்வ் செய்யாத டிக்கட்டை 75 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, ஓட்டமாய் ஓடி s1ல் ஏறினேன்.  டிடிஆர் இரக்கமே இல்லாமல், ‘நீங்கள் unreserve coachல் ஏறிப்போங்கள்,’ என்றான். 
வேறு வழியில்லை அங்கு ஏறினேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  லட்ரின் பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழ்தான் அமர வேண்டியிருந்தது.  நாற்றம் குடலைப் புடுங்கியது.  காலை மடக்கி உட்கார்ந்தேன்.  ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.  பின் நீட்டி உட்கார்ந்தேன். அப்படியும் முடியவில்லை.  உண்மையில் அந்த நேரத்தில் பஸ்பிடித்துப் போக முடியாது.  மேலும் வேளாங்கண்ணி கூட்டம் வேறு.  ஒரு வழியாக இப்படியே போனால் சரி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவாக எனக்கு ரயிலில் தூக்கம் வராது.  இன்னும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  மேல் மருவத்தூரில் வண்டி நின்றது. சிகப்பு ஆடை அணிந்த பெண்கள் கூட்டம் புடை சூழ, நான் உட்கார்ந்த இடத்தில் என் மீதே ஏறி மித்ததார்கள்.  ஒரே சத்தம். அதன்பின் நான் எழுந்து நிற்க ஆரம்பித்தேன்.  காலை இங்கேயும் அங்கேயும் நகர்த்தக் கூட முடியவில்லை.  இரவி 1.30 மணியிலிருந்து காலை 5 மணிவரை நின்று கொண்டே காலை நகர்த்தமுடியாமல் நகர வேதனையில் வந்தேன். 

வீடு வந்து சேர்ந்தபோது, பொத்தென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன்.  2 மணிநேரம் தூங்கியிருப்பேன்.  ஆனாலும் கால் வலி தாங்க முடியவில்லை.  அலுவலகச் சாவி மட்டுமில்லாமலிருந்தால், வந்திருக்கவே மாட்டேன்.  கால் வலி அலுவலகச் சாவியால் மாட்டிக்கொண்டதாக தோன்றியது.  அலுவலகம் சென்று சாவியைக் கொடுத்துவிட்டு, திரும்பவும் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தேன்.  என்னைப் பார்த்தவுடன் என்னை விடவில்லை மேலாளர்.  வலி இருந்தாலும் பரவாயில்லை.  சும்மா உட்கார்ந்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.  வேறு வழியில்லாமல் தலைவிதியை நொந்துகொண்டு அமர்ந்தேன்.  மாலை சீக்கிரமாகக் கிளம்பி 7.30 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்து, படுத்தவன்தான் அடுத்த நாள் காலையில்தான் எழுந்து கொண்டேன்.  
அன்றுதான் முதன்முதலாக நிற்பவர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.  மயூரா விலாஸில் நின்றுகொண்டே எல்லோருக்கும் காப்பிப் போட்டுக்கொடுக்கும் முதியவரைப் பற்றி நினைத்துக்கொண்டேன்.  பின் பார்சல் பண்ணி தரும் ஒருவரைப் பற்றியும் நினைத்தேன்.  என் அலுவலகத்தில் நின்றுகொண்டே இங்கேயும் அங்கேயும் சென்று வவுச்சர்களை எடுத்துத் தருபவர்களைப் பார்த்து, ”தினமும் நிற்கிறியே, உனக்குக் கால் வலிக்காதா?’ என்று கேட்டேன்.  ‘வலிக்கும்.. ஆனால் காலையில் சரியாகிவிடும்,’ என்றான் அவன். 
நின்றுகொண்டே இருப்பவர்களைப் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.  நான் அமெரிக்கா போய்வந்தது கூட பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.  ஆனால் ரிசர்வ் செய்யாதப் பெட்டியில் பயணம் செய்வது கொடுமையான விஷயமாக எனக்குத் தோன்றியது.