Author: virutcham
காவேரி
பயணத் துணை
–
தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்துவிடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குலைந்து குலைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்…
கிழிபடும் மிச்சத்தின் பட்டியல்
பழைய பெயர் பட்டியலின்
கிழிபட்ட மிச்சத்தின் மீது புதிய பட்டியல்
ஒட்டப்படுகிறது
ஒரு பிரிவு
ஓர் ஏக்கம்
ஒரு காதல்
ஒரு புன்னகை
ஒரு காமம்
ஒரு பசலை
ஒரு துக்கம்
ஒரு வஞ்சம்
ஒரு கருணை
ஒரு துரோகம்
ஒரு யாசிப்பு
மற்றுமோர் பிரிவு
மற்றுமொரு தொடக்கம்
முற்றிலும் விடைபெறல்
பயணத்தைத் தொடங்குகிறது ரயில்
இன்னும் தீர்ந்திராத தவிப்புகளோடு
பழைய பயணிகளின் ஸ்டேஷன்களை நோக்கி
*******
எதையாவது சொல்லட்டுமா………69
ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள
சொற்களை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறது.
என்னிடம்.
இடையே வந்த தென்றல்
கொஞ்சம் அதன் முடியை
மயிலிறகு கொண்டு
நீவிச்சென்றது
அவ்வப்போது பெய்த
சிறு மழைத்துளிகள்
கலைந்த முடிகளை
சிறு கற்றைகளாக்கிச்சென்றது
அக்கற்றைகளிலிருந்து
வடிந்த மழைத்துளிகள்
காதோர மணிகளில்
தொக்கி நிற்க, அதில்
சூரியன் தன் முகம்
பார்த்துச்சென்றது.
இன்னும் தான்
உனக்குப்போதுமான
சொற்கள்
கிடைக்கவில்லையா
என அக்கவிதை
என்னை கேலி
செய்துகொண்டிருக்கிறது.
ஒரு புன்முறுவல்
கிடைத்தால்
இந்தக்கவிதை
முழுமை பெறும்
யாரேனும் அதனிடம்
சொல்வீர்களா..?!
ஜப்பான் பேனா நண்பி
முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்
புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்
அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்
காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்
அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு
‘நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து
மூலம் – இஸுரு சாமர சோமவீர
கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்
நாம்.






