நான், பிரமிள், விசிறி சாமியார்….16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை.

அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது.

பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இருந்தது. தேவதேவன் மென்மையான மனிதர். அழகான கையெழுத்தில் அவர் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் விருட்சம் ஒவ்வொரு இதழிலும் அவர் கவிதைகள் அனுப்பாமல் இருக்க மாட்டார். பிரமிள் மதிக்கக்கூடிய கவிஞர்களில் தேவதேவனும் ஒருவர்.

”சரி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்…நான் உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்துவிட்டேன். நீங்கள் போங்கள்…” என்று என்னை அனுப்பி விட்டார்.

நான் திரும்பவும் என் நண்பர்களிடம் வந்து, அவர்தான் பிரமிள் என்றேன். அவர்களுக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. எல்லோரும் கிளம்பும்போது, பிரமிளும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி விட்டார். அப்போது என் பக்கத்தில் வந்தவரை, ‘இவர்தான் குவளைக்கண்ணன்,’ என்று குவளைக் கண்ணனை அறிமுகப் படுத்தியதாக நினைப்பு. பிரமிள் அவரைப் பார்த்து,’இப்போது அமெரிக்காவில் உறவு என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது…எல்லாம் பணம்…பணம் கொடுத்தால் பேசுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிது நேரம் பேசுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் நம்முடன் இருந்துவிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்…வயதானவர்களுக்கு யாரும் பேசுவதற்குக் கிடைக்க மாட்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்….” என்றார்.

பின் நாங்கள் வாசல் பக்கமாக நகர்ந்து வந்தோம். எதிரில் பிரமிளுக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் வந்தார். அவர் பிரமிளைப் பார்த்து, ‘ஹலோ..’ என்றார். உடனே பிரமிள் அவரைப் பார்த்து பயந்து ஓடுவதைப் போல் ஒதுங்கிப் போனார். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. இதுதான் பிரமிள். அவருக்குச் சிலரை சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.
(இன்னும் வரும்)

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம்
நாங்களனைவரும் வளர்ந்த இடம்
ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள்
இருந்த இடம்
எப்பொழுதும் சந்தன வாசம்
கமழும் இடம்
சமையலறையில் விறகு அடுப்பு
அணைக்கப்படாமல்
சதா எரிந்து கொண்டேயிருந்த இடம்
தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால்
அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும்
பணிகளைச் செய்த இடம்
வீசிய புயலுக்கு தாங்காமல்
ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள்
இதோ பொக்லைன் இயந்திரம்
தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது
எங்கள் பொக்கிஷத்தை
இனி எங்கள் ஞாபகங்களில் தான்
வாழும் இந்த வீடு.

எதையாவது சொல்லட்டுமா – 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.

சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.
அதுதான் சி சு செல்லப்பாவின் ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.

ஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.

அவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.

இந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்?

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின்

வியர்வை ஊற்றுக்

கண்களிலெல்லாம்

வாசனைத் திரவமூற்றி

காற்றில் போதையேற்றி

சற்றே முகமெங்கும்

வெள்ளை அடித்து

வீதிக்கு வருகிறார்கள்.

அவர்களின் ஒரு கையில்

பெரிய பூதக் கண்ணாடியும்

இன்னொரு கையில்

தார் சட்டியும்.

பூதக்கண்ணாடியால்

ஒவ்வொருவரையும்

கூர்ந்து பார்த்துவிட்டு

அவர்கள் முகத்தில்

சிறிது கரும்புள்ளி

தென்பட்டால் கூட

உடனடியாக அவருடைய

உருவம் வரைந்து

அதில் தார் பூசி

எல்லோருக்கும் காட்டி

இளித்து இன்பமடையும்

மக்கள்.

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம்

சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ?
கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ!
மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –
உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்!
தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –
தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?
இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே!
என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே
என் மூளையில் பூத்த வெண்மலரே!
உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

இன்னொரு கவிதை

அழிவுப் பாதையில் பயணம் –
இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு –
தொடுவானம் கண்டது!
ஆக்கப் பாதையில் பயணம் –
செளகரியங்களின் நிரந்தரத்திறகான – கதறலோடு
பட்டமெனப் பறக்கவும் –
ஆதூரம் கொண்டது
ரொம்ப நாட்கள் கழித்து-
ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் –
அழிவுப் பாதையும் –
ஆக்கப் பாதையும் –
தெரியாத இடத்தில் –
களைத்து!

யாராக இருக்கிறாள்?

குளிரும் கம்பிகளில்
முகம் வைத்தபடி
சிறுமி ஒருத்தி
கடும் மழையில்
தனித்து நிற்கிறாள்.

மழை
ஆயிரம் குமிழ்களாய்
பூத்து மறைவதை
உற்று நோக்கி
தன்னை மறக்கிறாள்.

பின்மாலை நேர மழை
வண்ணக் குடைகளாய்
ததும்பிச் செல்ல
பரவசம் இலைச் சொட்டாய்
அவள் இதயமெங்கும்.

வீட்டின் உள்ளே
திரும்பிப் பார்த்துவிட்டு
தவிர்க்கவியலா உந்தலோடு
உள்ளும் புறமும் நனைய
கம்பிகளூடே கை நீட்டுகிறாள்.

மழை – சிதறல்களாய்
உள்ளங்கைகளில்
பட்டுத் தெறிக்கும்
அந்த இடி, மின்னல் கணத்தில்
அவள் யாராக இருக்கிறாள்?

நான், பிரமிள், விசிறி சாமியார்….15

நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும், அவரால் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அவரால் முடியாது. அதேபோல் வறுமையை அவர் சந்தித்ததைப் போல் யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார். வறுமையைப் பற்றி அவர் கவிதை எழுதியும் இருக்கிறார். அது தனி மனிதனின் வறுமையைப் பற்றி அல்ல.

அரும்பு பத்திரிகை ஆசிரியர் அவர் அன்புக்குரியவர். அவர் சொல்லி அரும்பு பத்திரிகையில் அவர் எழுதினார். ஆனால் கொஞ்ச காலம்தான் அது நீடித்தது. எல்லாவற்றிலும் ஒருவித முரண்பாடு மிக்க மனிதராகவே இருந்து வந்தார்.

அவர் கடைசிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி கூறியதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் நுங்கம்பாக்கத்தில் ஓரிடத்தில் குடியிருந்தார். அந்த இடத்தின் பக்கத்திலேயே பன்றி மாமிசம் விற்கும் இடம். பன்றியை வெட்டிப் போடும்போது ஏற்படும் ஒரு வித துர்நாற்றம் சூழ்ந்தபடியே இருக்கும். பிரமிள் மட்டும் அங்கு இல்லை. இன்னும் நாலைந்து குடித்தனங்களும் அங்கு இருந்தன. மற்ற குடித்தனங்களில் இருந்தவர்கள் பிரமிளை பெரியவர் என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமுறை பிரமிள் தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் ஒருநாள் மின்சார பில்லை கட்ட கார்டும், பணமும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி அவர் கேட்டுக்கொண்டபடி பணம் கட்டிவிட்டார். பிரமிள் திரும்பவும் அந்தக் கார்டைப் பார்த்து பணம் கட்டுவதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக நினைத்து அந்தப் பெண்மணியைத் திட்டிவிட்டார். பிரமிள் திட்டியதைக் கேட்டு அந்தப் பெண்மணி அழுது விட்டார். உண்மையில் தவறு பிரமிள் மீதுதான் என்பதை பிரமிள் உணர்ந்து விட்டார்.

இந்தத் தவறை உணர்ந்தவுடன், சாதாரணமானவர்கள் அதை வேறு விதமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் பிரமிள் செய்த காரியம் அந்தப் பெண்மணியை மேலும் மிரள வைத்துவிட்டது. பிரமிள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய இந்தச் செய்கை அந்தப் பெண்மணியை மிரள வைத்துவிட்டது. இதுதான் பிரமிள். அவருடைய அதீத தன்மையை நான் இப்போது கூட பலரிடம் பார்ப்பதுண்டு. பிரமிள் அறையில் பக்கவாத நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் அவருடைய அறைக்கு பல மணிநேரங்கள் செல்லவில்லை.
(இன்னும் வரும்)