பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

9.
 

நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.  யாரும் இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  நான் யார்? அவர்கள் யார்? இந்தக் காலத்தில் உறவுமுறைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
 
உற்சாகமாக எனக்கு வனஜா சமையல் செய்து போட்டதை நான் மறக்க முடியாது.  எனக்குத் தோன்றியது.  இந்த பெரியம்மா, பெரியப்பா உயிரோடு இருந்திருக்கும்போது நான் வந்திருக்கக் கூடாதா என்று.  அப்போது வந்திருந்தால் அவர்களை என் கூடவே இருந்திருக்கச் சொல்லியிருப்பேன்.

வனஜாவைப் பற்றி எப்படிச் சொன்னாலும், அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வாய்நிறைய ”அண்ணா, அண்ணா” என்று கூப்பிடுவாள்.  என் பெரியப்பா பையன் மூர்த்தி அவ்வளவாகப் பேச மாட்டான்.  ஏன் பேசத் தெரியாது.

 
நான் பந்தநல்லூருக்கு வந்த அடுத்தநாள், மயூரநாதர்  கோயிலுக்குக் காலையில் சென்றேன்.  தனியாகத்தான்.  அந்தக் காலை நேரத்தில் அந்தக் கோயில் ஹோ என்றிருந்தது.  அம்மன் சந்நிதிக்குப் போய் நின்றேன்.  யாருமில்லை.  கோயிலின் அந்தகாரம் பயமுறுத்தியது.  அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிடலாமென்று நினைத்தேன்.  ஏன் இந்தத் தனிமையில் அம்மனைப் பார்க்கும்போது பயம் புகுந்துவிடுகிறது.
 
இது குறித்து அழகியசிங்கரிடம் பேசவேண்டுமென்று நினைத்தேன்.
 
வள்ளலார் கோயில் சந்நிதித் தெருவில் வனஜா குடியிருக்க நல்ல இடமாக வாடகைக்குப் பார்த்துக் கொடுத்தாள். அவள் முன்பு குடியிருந்த இடம்தான்.  நான் வங்கியில் பணிபுரிகிறேன் என்பதால் வாடகை கொஞ்சம் அதிகமாக கேட்டார்கள்.  நானும் சரி என்றேன்.  எனக்கு என்னமோ அந்த இடத்தை விட முடியவில்லை.  மேலும் கோயில் இருக்கும் இடத்தில் வீடு.
 
அழகியசிங்கரை ஒருமுறை வரும்படி கூப்பிட்டேன்.  பெரியப்பா பையன் வீட்டில் இருந்தபோது இரவு நேரங்களில் யூரின் போக நான் அவதிப்பட்டேன்.  மேலும் பல கதவுகளைத் திறந்துதான் பாத்ரூம் போக வேண்டும்.  இரவு நேரத்தில் கதவுகளைத் திறந்தால், பயங்கரமாக சத்தம் போடும்.  பின் நான் யூரின் போவது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
 
 
(To be continued)
 
 
 
 
 
நானும் அசோகமித்திரனும்….
 
 
அழகியசிங்கர்
 
 
அசோகமித்திரனை நான் எப்போது சந்தித்தேன்.  அவரை முதலில் சந்தித்தேனா அல்லது அவரைப் பற்றி எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் அறிந்துகொண்டேன்.  இந்தக் கேள்விகளுக்குமுன்னால், நான் நூல்நிலையத்தில் அதிகமாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்.  ஒவ்வொரு முறையும் நூல் நிலையம் போகும்போது எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  ஒருமுறை என்ன சிறுகதைத் தொகுப்பு என்பது ஞாபகம் இல்லை.  அசோகமித்திரன் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்தேன்.  மிகத் தயக்கத்துடன் எடுத்து வைத்துக்கொண்டேன்.  அத் தொகுப்பில் கதைகள் எல்லாம் சின்ன சின்ன கதைகளாக இருக்கும்போல் தோன்றியது.  அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.  சுஜாதா,இந்திரா பார்த்தசாரதி, கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், அகிலன் போன்ற எழுத்தாளர்கள்தான்.  முதன் முதலாக அசோகமித்திரனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆரம்பத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனால் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது.  ஒவ்வொரு சிறுகதையிலும் ஆரம்பமும் முடிவும் இல்லாததுபோல் தோன்றியது.  ஆனால் படிக்கத் தூண்டியது.  என் முதல்வாசிப்பிலேயே அகிலன், ந.பா எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. 

 அடுத்த வாசிப்பில் இன்னும் சிலபேர்கள் விலகிவிட்டார்கள்.  ஆனால் இன்னும் சிலபேர்கள் சேர்ந்தார்கள்.  அசோகமித்திரன் தொடர்ந்து இருந்து கொண்டு வந்தார்.  அவர் பெயரைக் கண்டால் அப்புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவேன்.  அசோகமித்திரன் எதை எழுதினாலும் அவர் ரசித்து எழுதுவதாக தோன்றும்.  வாசகர்களும் அந்த ரசிப்புத் தன்மையை நிச்சயமாக உணர்வார்கள்.

 அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தார்.  அதனால் அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் படிக்க கணையாழியை வாங்குவேன்.  இந்த கணையாழி மூலமாக அவர் சொல்கிற பலவற்றை நான் புரிந்துகொண்டேன்.  எத்தனையோ நல்ல சினிமாக்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  எத்தனையோ நல்ல புத்தகங்களை, பத்திரிகைகளை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  அவர் சொல்கிற உத்தியும் ஒரு சிறுகதையை எழுதுவதுபோல் இருக்கும். அவர் மூலம்தான் ஐ பி ஸிங்கரை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய புத்தகங்களை அமெரிக்கன் லைப்பரரியில் தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.  நான் அழகியசிங்கராக மாறுவதற்கு அது ஒரு காரணம்.

 நானும் அந்தச்சமயத்தில் கொஞ்சம் கொஞ்சம் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன்.  நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளை பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்யவில்லை. எல்லாம் திரும்பி திரும்பி வந்துவிடும்.  ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு எழுதிய கதை ஒரு வருடம் கழித்து திரும்பி வந்துவிட்டது.  வெறுத்துவிட்டேன். 

 இன்னும் பல எழுத்தாளர்களை நான் கணையாழி மூலமாகவும், அசோகமித்திரன் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.  ஒரு முறை =கவனம்= என்ற பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு கணையாழில் வந்தது. அந்தப் பத்திரிகையை வாங்குவதற்காக மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து கவனம் பத்திரிகை நடத்தும் இடத்திற்கு வந்தேன்.  அது ராஜகோபாலன் என்பவரின் வீடு என்பதைத் தெரிந்துகொண்டேன்.  இப்படி ஒரு பத்திரிகை நடத்த தனி அலுவலகம் என்பது தேவையில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். 

 கவனம் பத்திரிகை மூலம், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் முதலிய நண்பர்களைச் சந்தித்தேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்மாநாமும் என் கண்ணில் பட்டார்.  சம்பத்தையும் அறிவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பீச்சில் ஏதோ ஒரு சிலைக்குப் பக்கத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏதோ ஒரு சிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாரதியார் சிலைக்குப் பக்கத்தில் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

 ஆனால் அசோகமித்திரனை என்னால் மறக்க முடியாது.  அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு முறை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை தி நகரில் நிகழ்ந்தது.  அந்தச் சந்திப்பு அவர் ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை.

 அடுத்தமுறை அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் என்னுடைய குறுநாவல் ஒன்று கணையாழியில் பிரசுரம் ஆக இருந்தது.  அந்த குறுநாவலில் வங்கியில் பணிபுரிபவர் ஒருவர் கதாபாத்திரமாக வந்திருப்பார்.  நானும் வங்கியில் பணிபுரிவதால் யாராவது படித்து பிரச்சினை ஆகிவிடுமோ என்று நினைத்துப் பயந்து அசோகமித்திரன் வசிக்கும் தி நகர் வீட்டிற்கு சென்றேன்.  நான் அவரைப் பார்த்த சமயம் அவருக்கு உடம்பு சரியில்லை.  படுத்துக்கொண்டிருந்தார்.  என்னைப் பார்த்தவுடன் நான் அவரிடம் =வங்கியில் பணிபுரிபவர்+ என்பதை நீக்கி விடலாமா என்று கேட்டேன்.  அவர் அதெல்லாம் மாற்ற வேண்டாம்.  ஒரு பிரச்சினையும் வராது என்று கூறிவிட்டார். 

 மேலும் அவர் என் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் விஜாரித்தார்.  அசோகமித்திரன் அவரைப் பார்த்துப் பேச வருபவர்களிடம் அக்கறை உள்ளவர்.  கல்லூரிப் படிக்கும் மாணவர்கள் யாராவது கதை எழுதுபவர்களாக இருந்தால் படிப்பை முடித்துவிட்டு எழுதுங்கள் என்று கூறக்கூடியவர்..  அதேபோல் வேலை தேடிக்கொண்டிருப்பவர் கதை எதாவது எழுதினால் முதலில் வேலையைத் தேடுங்கள் எழுதுவது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக் கூடியவர்.  அதே சமயத்தில் போரடிக்கும்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தால், பேச வந்தவரின் மனம் கோணாதபடி அனுப்பி விடுவார்.

 அசோகமித்திரன் ஒரு எளிமையான மனிதர்.  அவர் எழுத்தில் காணப்படும் எளிமை அவர் பேச்சிலும் காணப்படும். நகுலன் எழுத்தில் தூக்குதலாக தெரியும் தன் உணர்வுத் தன்மை அசோகமித்திரனிடம் இருக்காது.  அதேபோல் மிகை உணர்ச்சித் தன்மையும் அவர் எழுத்தில் காணப்படாது.  ஒரு தினசரி பத்திரிகையை எடுத்துப் படிப்பதுபோல அவர் எழுத்து சரளமாகப் போய்க் கொண்டிருக்கும்.  ஆனால் அந்த எழுத்தில் ஒரு ஆழம் இருக்கும். 

 முதலில் நவீன விருட்சத்திற்கு எதாவது எழுதித் தருவாரா என்ற சந்தேகம் இருந்தது.  அவரிடம் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டபோது அவர் தொடர்ந்து எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்..  கேட்ட ஒரு வாரத்தில் எல்லாம்  எழுதி அனுப்பி விடுவார்.  ஆனால் என் பத்திரிகையைக் கொண்டுவர நான் இன்னும் பல நாட்கள் எடுத்துக்கொள்வேன்.  இரண்டு பக்கங்களுக்கு மேல் அவர் எழுதித் தரமாட்டார்.  சரியாக அளவு எடுத்து அனுப்புவதுபோல் அவர் கட்டுரை அமைந்திருக்கும். 
  

  (நவீன விருட்சம் சார்பாக 22.09.2012 அன்று நடந்த அசோகமித்திரன் 82 என்ற கூட்டத்தில் பேசிய கட்டுரை.  கூட்டம் 200க்கும் மேல் கூடியுள்ள கூட்டம்.  சிறப்பாக நடந்தது. )

சிறுவன்

முடிவேயற்று
மிகவும் நீண்ட

அந்தப் பேரூந்துப்
பயணத்தில் வாந்தியெடுத்த,

காய்ச்சலுக்கு
தெருவோரக் கடையொன்றில்

தேயிலைச் சாயம்
குடித்த,

அப்பாவைத் தேடி
அம்மாவுடன்

*பூஸாவுக்குச்
சென்ற…

கல்லெறிந்து
மாங்காய்ப் பிஞ்சுகளை

பையன்கள்
பறித்துப் போகையில்

அவர்களுக்கொரு
பாடம் புகட்டிட

அப்பா
இல்லாததால்

உதடுகளைக்
கடித்து

பெருமூச்சைச்
சிறைப்படுத்திக் கொண்ட…

ஒருபோதும் தான்
காண அழாத அம்மா

மறைவாக அழுவதைக்
கண்டு

உறங்காமல்

உறங்குவது போல்
தலையணை நனைய அழுத…

ஆற்றில் சுழிகள்
உடையும் விதத்தை

இரவுப் பூக்கள்
மலரும் விதத்தை

நட்சத்திரங்கள்
உதிர்ந்து வீழும் விதத்தை

தன்னந்தனியாகப்
பார்த்திருந்த…

எவ்வளவு
துரத்தியும் போகாத

அந்தக் கருத்த,
ஒல்லியான, விடலைச் சிறுவன்

இருக்கிறான்
இன்னும்

நள்ளிரவில்
விழித்து அவன்

அவ்வப்போது
தனியாக அழுகிறான்

ஈரமாகிறது எனது தலையணை

*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

இஸுரு
சாமர சோமவீர

எம்.ரிஷான் ஷெரீப்,

 

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
8.
நான் அலுவலகத்தில் நுழைந்தவுடன், ‘பெரிய முட்டாள்தனம் செய்து விட்டாய்,’ என்றான் மூர்த்தி. ”என்ன” என்றேன்.  ”பிரமோஷனில் வந்ததைத்தான் சொல்றேன்..”  மூர்த்தி மயிலாடுதுறையைச் சார்ந்தவன்.  பதவி உயர்வுப் பெற்று வடக்கு இந்தியாவிற்குச் சென்றுவிட்டு ஓய்ந்துபோய் பந்தநல்லூரில் ஒடுங்கி உள்ளவன்.  நான் வந்ததால் அவனை வேறு எங்காவது மாற்றி விடுவார்கள்.  
வங்கி மேலாளர் சற்று உற்சாகமில்லாமல் இருந்தார்.  ஒரே ஒரு பெண்மணியைத் தவிர வேற யாருமில்லை அந்தக் கிளையில்.  நான் சென்னையிலிருந்து வந்த பரபரப்பில் இருந்தேன்.  மனம் தெளிவில்லாமல் இருந்தது.  ஊர் சற்றுக்கூட பிடிக்கவில்லை. நெரிசல் மிகுந்த சென்னையை விட்டு வந்து விட்டோமே என்று தோன்றியது. மேலும் நான் சுருக்கெழுத்தாளராக இருந்துவிட்டு வந்திருப்பதால், கிளை அலுவலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
ஜானகி என்கிற அந்தப் பெண்மணி சற்று ஆறுதலாகப் பேசினாள்.  ”ஏன் சார் இங்க வந்து மாட்டிண்டீங்க?” என்றாள்.  எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  கும்பகோணம் வட்டாரத்தைப் பொறுத்தவரை பதவி உயர்வுப் பெற்று வந்த பெண்களை கிராமத்துக் கிளைகளில் போடவில்லை.  என்னைப் போன்ற சிலர்தான் மாட்டிக்கொண்டோம்.  நான் மயிலாடுதுறை வேண்டுமென்று சொன்னதால்,பெரிய மனது பண்ணி என்னை பந்தநல்லூரில் பணி நியமனம் செய்துள்ளார்.
ஐந்துமணிக்கெல்லாம் கிளார்க்குகள் சிட்டாகப் பறந்துபோய் விட்டார்கள்.  சிலர் தஞ்சாவூரிலிருந்து இங்கு வருகிறார்கள். அதில் ஒருவருக்கு காது கொஞ்சம் கேட்காது.
வீட்டிலிருந்து போன் வந்தது.  போய் சேர்ந்து விட்டாயா என்று அப்பா கேட்டார்.  அவருக்கு 83 வயது.  மாமியாருக்கு 80 வயது.
நான் தமிழ் பஸ் பிடித்து மாயவரம் சேருவதற்குள் மணி எட்டாகிவிட்டது.  என் பெரியப்பா பையன் வீட்டில் நான் தங்கியிருந்தேன்.  ஒரு வீடு எடுத்துத் தங்குவதற்குள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.  அவர்களுக்கு நல்ல மனது.  என்னை ஏற்றுக் கொண்டார்கள்.
(இன்னும் வரும்) 

அறிவிப்பு

நவீன விருட்சம் 91வது இதழ் ஒரு வழியாக ஓராண்டிற்குப் பிறகு அச்சில் வெளிவந்துவிட்டது.  இதழில் பங்குகொண்ட படைப்பாளிகளின் அட்டவணை இதோ-

1. முகப்போவியம் எஸ் வைதீஸ்வரன்
2. பூனைக்குட்டியும் நிலாவும் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
3. தாகம் – கவிதை – சின்னப்பயல்
4. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறுவெளி – கவிதை – ப தியாகு
5. கடந்தது – கவிதை – எஸ் வைத்தியநாதன்
6. கார்க்கால ஞாபகங்கள் – கவிதை – சமீலா யூசுப் அலி
7. புதிய அத்தியாயம் – கவிதை – ராமலஷ்மி
8. சில நேரங்களில் – கவிதை – மிருணா
9. பூனை – கவிதை – அழகியசிங்கர்
10. ஒரு – கவிதை – அழகியசிங்கர்
11. தேடிப்பற – கவிதை – ஷைலஜா
12. குட்டி குட்டி அழகு – ப ஜெயபால்
13. எது கவிதை…. – கட்டுரை – அழகியசிங்கர்
14. கறுப்பு – வெள்ளை – கவிதை – நீலமணி
15. பானகம் – சிறுகதை – ஷைலஜா
16. இருபது ரூபாய் – சிறுகதை – அழகியசிங்கர்
17. எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம் – நிஸகர்தத்தா மஹாராஜா
18. எனக்குப்பிடித்த முன்னுரை
19. என் எம் பதி என்கிற நண்பர்…. அழகியசிங்கர்
20. ஐராவதம் புத்தக விமர்சனம்
உரையாடல்

91வது இதழில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு என் நன்றி.  இதழ் அனுப்ப முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.  சீர்காழியிலிருந்து சென்னை மாறி வரும்போது பலருடைய முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.

அம்மாவின் மோதிரம்
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.
அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள். அவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.
அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.
அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.
அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.
மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.
சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.
அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.
காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.
அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.
பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.
வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.
நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.
பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.
கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.
அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.
அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.
அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.
அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.
எதையாவது சொல்லட்டுமா….77
 

அழகியசிங்கர்
 

 ஜே. கிருஷ்ணமூர்த்தி யார் மூலம் எப்படி அறிமுகம் என்பதை சில நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  புரியவில்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தி சென்னை வரும் ஒவ்வொரு ஆண்டும் நான் அங்கே போய் நின்றுவிடுவேன்.  ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் என் பொழுது கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்பதில் போய்விடும்.  சில சமயம் அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு காலை நேரத்தில் நடக்கும்  உரையாடல்களில் என் கவனம் செல்லும்.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.  இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் நான் படிக்காமல் இருந்தது.

 பிரமிளும் நானும் பல தடவைகள் சந்திக்கும்போது கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.  ஒரு முறை பிரமிளுடன் நான் தி நகரில் நடேசப் பூங்கா உள்ள எதிரில் உள்ள  ஒரு பெரிய விளையாட்டு மைதானத்திற்குச் சென்றோம்.  பிரமிள் ஒருவரைச் சுட்டிக் காட்டினார்.

 “யார் அவர்? ” என்று கேட்டேன்.

 “உங்களை மாதிரி வங்கியில் ஒரு காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்..”

 “ஏன் இப்போது இல்லையா?”

 “இல்லை.  அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள்…”

“எதாவது பணம் திருடினாரா?”

 ”இல்லை..ஆனால் ஜே கிருஷ்ணமூர்த்திதான் அவர் வேலை போவதற்குக் காரணம்..”

 பிரமிள் சொன்னது எனக்கு திகைப்பாக இருந்தது.  ”எப்படி?” என்று கேட்டேன்.

 ”அவருக்கும் ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி மாற வேண்டும்போல் தோன்றியது.  வங்கிக் கிளையில் கிருஷ்ணமூர்த்தி மாதிரி பிரசங்கம் செய்யப் போவதாக சொல்லி அலுவலகத்தில் சத்தமாகப் பேச ஆரம்பித்தார்.  பின் நிலைமை மோசமாகி வங்கிக் கிளையில் உள்ள லட்ஜர்களைக் கிழிக்க ஆரம்பித்தார்…அவர் குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து முதலில் விட்டுவிட்டார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்யாமல் வேலையை விட்டு போக சொல்லி விட்டார்கள்…”

எனக்கு  கேட்க வருத்தமாக இருந்தது.  ஆனால் பிரமிள் இன்னும் சில சம்பவங்களை கிருஷ்ணமூர்த்தி பற்றி சொன்னார். 

 ”புத்தரைவிட கிருஷ்ணமூர்த்தி மேலானவர்..அவருடைய தத்துவம் நவீனத்துவமானது…புத்தரை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி..” என்றெல்லாம் பிரமிள் என்னிடம் சொல்லியிருக்கிறார்.   

 நானும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக நினைப்பதுண்டு.. நானும் அவரும் கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வராத சமயத்தில்கூட வசந்தவிஹாருக்கு சனிக்கிழமை செல்வோம்.  அங்கு காட்டும் வீடியோ பார்க்காமல் இருக்க மாட்டோம்.

 கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்னை கலகலவென்று இருக்கும்.  பல எழுத்தாளர்களை நான் இங்கு சந்தித்திருக்கிறேன்.  ஆத்மாநாம் கையை குலுக்கியிருக்கிறேன்.  குலுக்கும்போது அவர் கை நடுங்கிக் கொண்டிருக்கும். 

 கிருஷ்ணமூர்த்தி கூட்டம் முடிந்து நானும் பிரமிளும் ஒரு நாள் திரும்பி வரும்போது, ”என்ன பாஸ்..” என்று கூறியபடி ஒரு நண்பர் பிரமிள் பாக்கெட்டில் பணத்தைத் திணித்தார்.  எனக்கு திகைப்பாக இருந்தது.  பிரமிளுக்கு இப்படி பலர் உதவி செய்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

 அந்த நண்பர் போனபின் பிரமிள் அவரைப் பற்றி சொன்னது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.  ”கிருஷ்ணமூர்த்திதான் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றினார்..”

”எப்படி?”
 ”இவரும் இவருடைய தம்பியும் பயங்கர கஞ்சா பிடிப்பவர்கள்.  ஒரு நாள் தீவிரமாகப் போய் இவர் தம்பி இறந்து விட்டார்..இவரும் மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு தப்பித்தார்..அப்போது இவரை கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அழைத்துப் போனேன். அவர் கஞ்சா பக்கமே அதன்பின் போகவில்லை. ”

 எனக்குக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.  என் அலுவலகத்தில் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பேன் என்று யாருக்கும் தெரியாது..ஆனால் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பதால் கர்வமாக இருப்பேன்.  ஏன் என்றால் கிருஷ்ணமூர்த்தி என்றால் யாருக்கும் தெரியாது..புரியவும் புரியாது.  ஒருவர் கிருஷ்ணமூர்த்தி படிக்கிறார் என்றால் அவர் மேதாவி என்ற குருட்டுத்தனமான எண்ணம் எனக்குள் இருப்பதுண்டு.  நான் பிரமிளை மதித்ததுகூட கிருஷ்ணமூர்த்தியால்தான். 

 க்ரியாவில் அறிமுகமான ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதிய நாராணோ ஜெயராமன் என்ற கவிஞரை எனக்கு தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் பிரமிள் அறிமுகப்படுத்தினார்.  ஜெயராமன் என்ற பெயரை பிரமிள்தான் நாராணோ ஜெயராமன் என்று மாற்றினார்.  இப்படி பலருடைய பெயர்களை எண் கணிதப்படி பிரமிள் மாற்றி இருக்கிறார்.  சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றி இருக்கிறார். இப்படி பிரமிள் பெயரை மாற்றியதால் எழுத வேண்டியவர்கள் தொடர்ந்து எழுத முடியாமல் போய் ஓட்டம் பிடித்ததாக எனக்குத் தோன்றுகிறது.  
 
ஜெயராமன் அப்போது சொன்னது எனக்கு இப்போது கூட ஞாபகத்தில் இருக்கிறது. ”ஏன் அசோகமித்திரன், ஞானக்கூத்தனெல்லாம் படிக்க வேண்டும்.. இப்போது எழுதுகிற எந்த எழுத்தாளனும் ஜே கிருஷ்ணமூர்த்தி என்ற ஆகிரிதையை மீறி ஒன்றும் செய்து விட முடியாது.”

 இன்னொரு எழுத்தாளர் சொல்வார்.  கிருஷ்ணமூர்த்தியை யாரும் படிக்கக் கூடாது.. அவரைப் படித்தால்..எழுதுபவர்களுக்கு ஏன் எழுத வேண்டுமென்று தோன்றும்..
 எனக்கு ஆத்மாநாமின் பல கவிதைகள் ஜே கிருஷ்ணமூர்த்தியை ஞாபகப்படுத்தும்.. ‘இல்லாத தலைப்பு’ என்ற கவிதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்..நான் இருக்கிறேன்/ நான் இருக்கிறேன்/ என்பது தெரியாமலே/ இருக்கிறேன்.
 
உண்மையில் ஜே கிருஷ்ணமூர்த்தி படைப்பாளியின் மனதை ஊடுருவி நுழைந்து விடுகிறார்.  அவரிடமிருந்து படைப்பாளி தப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
 ஒருமுறை கிருஷ்ணமூர்த்தியின் கால நேர கூட்டத்திற்கு வந்திருந்தேன்.  கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.  ”நீங்கள் ஒரு துறவி..ஏன் இப்படி அலங்காரமாக ஒப்பனை செய்து கொள்கிறீர்கள்?” எனக்கு அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து இப்படி கேட்டுவிட்டாரே என்று கூட தோன்றியது.  ஆனால் அதற்கு கிருஷ்ணமூர்த்தி சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
”நண்பரே உங்களை மதிப்பதற்குத்தான் இப்படி ஒப்பனை செய்து கொள்கிறேன்…” என்று. 
 என் அலுவலக நண்பர் ஒருவர் சபரிமலை கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பார்.  போய்விட்டு வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி போரடிக்கும்படி அளந்து கொண்டிருப்பார்.  அவருக்கு கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்திúன்.  அடுத்த ஆண்டு அவர் சபரிமலை கோயிலுக்குப் போவதையே நிறுத்தி விட்டார். 
 கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.  எல்லாவற்றையும் மாற்றக்கூடிய வல்லமைப் படைத்தவர் அவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்தித்ததை மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகிறேன். ***
            
                          (அக்டோபர் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.) 
அடையாளம்
தனக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வரை அந்தப் பெயரால்தானே எல்லோரும் அவனை அழைத்தார்கள்? இப்போது யாருமே அந்தப் பெயரால் அவனைக் கூப்பிடுவதில்லை. ‘உம் பேரு என்ன’, கேட்பதுமில்லை. பாழாய்ப் போன அந்த விபத்தில் ஏற்பட்ட ஊனத்தையும், ஏழ்மைக் கோலத்தையுமே அல்லவா உலகம் அவனுக்கான அடையாளமாக்கி விட்டது!
“மூர்த்தி.”
மெல்ல முணுமுணுத்தான். அவன் பெயர் அவனுக்கே அந்நியமாகத் தோன்றியது. யார் பெயரோ போல, அந்த பெயருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமேயில்லாதது போல ஒலித்தது. அம்மா சின்ன வயதில் தன்னை எப்படி அழைப்பாள் என்பது நினைவுக்கு வரக் கண்ணீர் துளிர்த்தது.
“மூர்த்தீதீஈஈஈ….”
கடைசி எழுத்தை நீட்டி முழக்கி அம்மா முடிக்கும் போது அவளது அன்பும் சேர்ந்தே வெளிப்படும். சின்னதாக அவன் விரலில் ஒரு காயம் பட்டாலும் எப்படித் துடித்துப் போய் விடுவாள். குனிந்து ஊனமான தன் இடது காலைப் பார்த்தான். இந்தக் கதியில் தான் இருப்பதைக் காண நேர்ந்தால் தாங்கியிருப்பாளா? நினைக்கையில் நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.
இப்போது அவனுக்கென்று யாருமில்லை. எவரும் அவனிடம் பேசுவது கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், யார் பெயர் சொல்லி அழைக்கப் போகிறார்கள்? எதையேனும் தெரிவிக்க நினைப்பவர்கள் கூட அலட்சியமாக “ஏய்”, “இந்தா…” என்றே அவன் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்புவது வாடிக்கையாகி விட்டது. தங்களுக்குள் ‘பிச்சைக்காரப் பய, நொண்டிப் பய’ என்றும், சிலர் கொஞ்சம் கெளரவமாய் ‘பய’ போடாமல் ‘நொண்டிப் பிச்சைக்காரன்’ என்றும் தன்னைக் குறிப்பிட்டுப் பேசுவது இவன் காதில் விழாமல் இல்லை.
கூட அமர்ந்து இவன் போலவேக் கையேந்திப் பிழைத்தவர்களும் கூட இவனிடம் அனுசரணையாய் நடப்பதில்லை. இவனது ஊனம் அதிக கருணையை வருவோர் போவோரிடம் பெற்றுத் தருகிறதென ஒருவித வெறுப்பையேக் காட்டி வந்தார்கள். ஒரேடியாக விரட்டி அடிக்காவிட்டாலும் தங்களில் ஒருவனாக ஏற்கவேயில்லை. ‘தள்ளி உக்காரு’ ‘அங்க போ’ ‘இங்க போ’ எனக் கட்டளையிட வேண்டியிருந்த கட்டாயத் தருணங்களில் கூட முகத்துக்கு நேரே கை நீட்டியோ, விரல்களைச் சொடுக்கியோ சொல்வார்களே தவிர அவன் பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள எவருமே விருப்பம் காட்டியிருக்கவில்லை. நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.
இப்படிப் பெயரில்லாமல் காலம் தள்ளி வருவது ஒரு குறையாகவே பட்டதில்லை, நேற்று வரையில். முன் தினம் மாலை ஆறு மணி இருக்கும். கோவிலுக்கு இளம் ப்ரெளன் நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மூன்றடி உயரத்திலிருந்த உயர்சாதி நாயைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள் அந்தப் பணக்காரப் பெண்மணி.
வாசலிலேயே தடுத்து விட்டார் காவலாளி, நாய்களுக்கு அனுமதியில்லையென. முகம் சிவக்க ஏதேதோ சொல்லிப் பார்த்தாள். காவலாளி மசியவில்லை.
“பேசாம அந்தக் கம்பத்துல கட்டிவிட்டுட்டுப் போய்க் கும்பிட்டுட்டு வாங்கம்மா. சும்மாப் பேசி எங்க நேரத்தையும் வீணடிக்காதீங்க” என்றார் உள்ளேயிருந்த வெளிப்பட்ட, கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த பெரிய மனிதர்.
சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டவளின் முகத்தில் அப்பிக் கிடந்த அப்பட்டமான அருவெறுப்பு ‘எப்படி இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்துக்கு மத்தியில் என் பிரிய நாயை விட்டுச் செல்ல முடியும்’எனச் சொல்லாமல் சொன்னது. அவள் வளர்த்த நாயும் அவளைப் போலவே. ஏதோ தேவலோகத்திலிருந்து வந்த மாதிரி மிதப்பாக இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஜிம்மி டார்லிங். ப்ளீஸ். நா உள்ளே போயிட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்றயாடா” நாயிடம் கொஞ்சிக் கெஞ்சியவள், அருகிலிருந்த பூக்கடைக்கு அதை அழைத்துச் சென்றாள். பத்தே நிமிடங்களில் வந்து விடுவதாகவும் அதுவரை பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லியபடியே சில நோட்டுத் தாள்களை எடுத்து தோரணையுடன் நீட்டினாள், நிச்சயம் மறுக்க மாட்டான் என்கிற நம்பிக்கையுடன். கண்கள் மினுங்க வாங்கிக் கொண்டு தலையசைத்தான் பூக்காரன். போனால் போகிறதென ஜிம்மியும் பெரிய மனது வைத்துத் தலையசைத்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த மூர்த்திக்கு முதலில் எழுந்த கேள்வி ‘நா உள்ள போக நினைச்சாலும் இப்படித்தான் தடுப்பாங்களோ’ என்பதுதான். அதுநாள் வரை முயன்றதில்லை. அப்படியே முயன்றாலும் பஞ்சடைந்த தலையும், கந்தல் உடையுமாய்க் காட்சி தந்த தன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது ஆனால் வருத்தமாக இல்லை. ‘எதுக்கு உள்ள போகணும்? அவருக்கு தெரிஞ்சதையே அவருட்ட சொல்லுறதுக்கா?’என்றே நினைத்தான்.
ஓடிய சிந்தனையைக் கலைத்தது ஜிம்மியின் குலைப்பு. திரும்பிப் பார்த்தான். பூக்கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரைப் பார்த்துப் பயங்கரமாகக் குலைத்துக் கொண்டிருந்தது.
“ஜிம்மி…” என்றார் அழுத்தமாக, ஒரே ஒரு முறை கடைக்காரார்.
அவ்வளவுதான். கப்சிப் என்றாகி விட்டது ஜிம்மி.
பெயர் சொல்லி அழைக்கப்பட்டதில் தன்னைச் சுற்றித் தன்னை அறிந்தவர்கள் இருக்கிறார்கள் எனப் பாதுகாப்பாய் உணர்ந்திருக்க வேண்டும் ஜிம்மி என்று தோன்றியது மூர்த்திக்கு.
அப்படி எண்ணிய நொடியில்தான் தன் பெயர் திடீரென நினைவுக்கு வந்து விட்டது அவனுக்கு. அப்போதிலிருந்து மருக ஆரம்பித்து விட்டிருந்தான். தன்னோடு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களில் தொடங்கி வாடிக்கையாக இவனுக்குத் தானம் செய்யும் மனிதர் வரை ஒருவர் கூடத் தன் பெயரை இதுகாலமும் தெரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அழுகையும் வந்தது.
பொதுவாகக் கோவில் வாசலில் யாசிப்பவர்களுக்கு நல்ல வருமானம்தான். பண்டிகை காலமாக இருந்ததால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவனுக்குக் கிடைத்தத் திருப்திக்கு வருமானம் மட்டுமே காரணமென்று சொல்ல முடியாது. மூன்று வேளையும் கிடைத்த நல்ல சாப்பாடும்தான். சும்மா உட்கார்ந்து சம்பாதித்தாலும் சாப்பாடு சும்மா கிடைத்து விடவில்லை. பணம் கொடுத்துதான் வாங்குகிறான். இருந்தாலும் ஒரு இழிவான நிலையில் நின்றே அந்தச் சாப்பாட்டைப் பெற வேண்டியிருந்தது. செய்கிற தொழில் இழிவானதாகக் கருதப்படுகையில் ராஜ மரியாதையையா எதிர் பார்க்க முடியும்? எதிர்பார்க்கவில்லை அவனும்.
அந்த விடுதியின் முதலாளி கண்டிப்பானவர். உள்ளே செல்ல மட்டுமல்ல, அதன் வாசல் பக்கம் கூட இவர்களின் தலை தென்படக் கூடாது. “பிச்சக் காரனுங்க சாப்பிடுற ஓட்டல்னு பேர் வந்தா வியாபாரம் வெளங்குன மாதிரிதான்” என ஆட்களை விட்டு விரட்டியடிப்பார். ஒழுங்கு மரியாதையாகப் பின்வாசலில் போய்க் காத்திருக்க வேண்டும். பிரச்சனை பண்ணாமல் அதைப் பின்பற்றியவர் நல்லபடியாகக் கவனிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நேரமும் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு ஒரே தடவையாகச் சாப்பாடு வெளியே அனுப்பப்படும். அவரவர் பாத்திரங்களில்தான் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் எப்போதும் சாப்பாடு சூடாகவும், சுவையாகவுமே இருந்தது. மற்றவரிடம் வசூலிக்கும் கட்டணத்தையே இவர்களிடமும் வசூலித்த முதலாளி அதே தரமும் அதே அளவும் இவர்களுக்குக் கிடைக்கிறபடி நியாயமாக நடந்து கொண்டார். அலட்சியமாகக் கருதி ஒருநாளும் ஏமாற்றியதில்லை.
ஒரு சாண் வயிற்றுக்கு முன் உலகில் எதுவுமே முக்கியமில்லை எனத் தோன்றிப் போனதும் அந்த விடுதியில் சாப்பிட ஆரம்பித்த நாளில்தான். தாங்கு கட்டையோடு அவன் நின்ற கோலத்தைப் பார்த்தே ‘வேலையில்லை வேலையில்லை’ என உலகம் விரட்டியடித்தபோது, பசியால் அரை மயக்கத்தில் சுருண்டு விழுந்து விட்டவனைச் சுற்றித் தங்கள் கருணையை சில்லறைகளாக வீசிச் சென்றிருந்தனர் சிலர். தயக்கத்தோடு அள்ளிக் கொண்டு தள்ளாடியபடியே அங்கு வந்தவன், சாப்பிட்டு முடித்தபோது சில்லறைகளைப் பொறுக்கிய குற்ற உணர்வு விலகி யாசக வாழ்வை ஏற்றுக் கொள்ள முழு மனதாகத் தீர்மானித்து விட்டிருந்தான். அன்றிலிருந்து தொடருகிறது கோவில் வாசலில் தொழிலும், கிடைக்கிற பணத்தில் இங்கு வந்து சாப்பிடுகிற வழக்கமும்.
காலை, மதிய வேளைகளை விட இரவு உணவை நிதானமாக ருசித்து அனுபவித்துச் சாப்பிடுவான். அடுத்து தொழிலுக்குப் போக வேண்டும் என்கிற பரபரப்பு இருக்காது. சாப்பிட்டு முடிக்கிற போது ஒரு பாதுகாப்பான வாழ்வு தனக்கு வாய்த்திருப்பதாகவே எண்ணி வந்திருக்கிறான் இதுநாள் வரையில். பல நாட்கள் மகிழ்ச்சியாகக் கூட உணர்ந்திருக்கிறான்.
ஆனால் நேற்றிலிருந்து அப்படியில்லை. பரம திருப்தியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் பெரிய தடுமாற்றம். பெயரில்லாத வாழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஜிம்மியை எண்ணிப் பொறாமையாக இருந்தது. ‘ஒருவேளை ஜிம்மியும் என்னப் போல ஆக்சிடண்டுல மாட்டி அதுக்கும் ஒரு கால் ஊனமானா உலகம் என்ன செஞ்சிருக்கும்? ஜிம்மின்னு கூப்புடறத நிறுத்திடுமா? நொண்டிநாய், உன்னால இனி ஒரு பிரயோசனமும் இல்ல, பிச்சயெடுக்கதான் லாயக்குன்னு அனுப்பிடுமா?’ எழுந்த கேள்விகளுக்கு ‘அநேகமா அப்படி செய்யாது’ என்றே மனதுக்குப்பட, தன்னிரக்கம் சுரந்தது.
அடுத்த கணம் ‘சே, நமக்கேன் இந்த ஈனப்புத்தி? எதுக்கு ஜிம்மிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகணும்? நல்லாருந்துட்டுப் போட்டும். பேரில்லாத கேவலமான பொழப்பா எம் பொழப்பு ஆனதுக்கு, பாவம் அது என்ன செய்யும்?’ நினைத்தபடியே, கோவில் தெருவின் மூன்றாவது விளக்குக் கம்பத்தை வந்தடைந்தான்.
வழக்கமாகப் படுக்கிற இடம். நடைபாதையானாலும் இரவு தலை சாய்க்க இன்னார்க்கு இந்த இடமென பதியப்படாத பட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாங்கு கட்டையை ஓரமாக வைத்து விட்டு, துண்டை விரித்துப் படுக்கப் போனவனைத் தூக்கம் கலைந்து தலையைத் தூக்கிப் பார்த்தது ‘ஓ.. நீயா’ என்பது போல், தினம் அதே கம்பத்தின் கீழ் நாலடி தள்ளிச் சாலையோரம் உறங்குகிற நாய்.
உற்று ஓர் நொடி அதைப் பார்த்தவன் “எம் பேரு மூர்த்தி” என்றான்.
***
-ராமலக்ஷ்மி
வழித்துணை



குண்டும் குழியும் தாண்டிய
களைப்பில் நின்று போனது கார்.
ஓட்டுனர் போராடினார்
மற்ற வாகனங்கள் சத்தமிட்டன.
புதிதாக முளைத்திருந்த
மாலை நிலா
பின்னிருக்கையில் இருந்த
என்னைப் பார்த்து.சிரித்தது
இருட்டு பரவிய
நெடுஞ்சாலையில்
வழி நெடுக
வந்தது முழு நிலா.
நகர எல்லையில்
காரணம் புரியாமல்
ஸ்தம்பித்திருந்த போக்குவரத்தில்
முதலெது முடிவெது என்றறியாமல்
நீண்டிருந்த வாகனவரிசையில்
ஓய்வற்று காத்திருக்கையில்
பார்வையிலிருந்து
தொலைந்து போனது
பால் நிலா.
தொட்டுத் துழாவி
இருட்டான மாடிப்படிகளில் ஏறி
வீட்டுக் கதவை திறந்து
உள்ளே செல்கையில்
மின்னொளியில்லாமலேயே
வரவேற்பறையெல்லாம் வெள்ளொளி.
ஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.

V GANESH