கூழாங்கற்கள்
மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.
பிரபஞ்சத்துக்கு அப்பாலும்
வர்த்தகப் பரிமாற்றம்..
அன்றாடம் நாம் அனுப்பும்
புண்ணிய பாவங்களின் வடிவில்.
செல்வக் குவியலென நினைத்துச்
சேகரிப்பவற்றில்
செய்த நல்லன மட்டும்
கணக்கில் வருகின்றன.
பக்தியும் பவ்யமும்
மயங்க வைத்தக் கைத்தட்டல்களும்
வைர வைடூரியங்களானாலும்,
இருட்டத் தொடங்கியதும்
ஆட்டம் முடிந்ததென
ஆற்றங்கரையோடு குழந்தைகள்
விட்டு வந்து விடும்
கூழாங்கற்களாகிப் போகின்றன.
***
-ராமலக்ஷ்மி

ஐராவதம் பக்கங்கள்

ஆட்கொல்லி – நாவல் – ஆசிரியர்
க.நா.சுப்ரமண்யம் – வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 – விலை ரூ.1.65 – பக்கம் 119
முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்..
தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாமா வேங்கடாசலம் பற்றி பேசுகிறார்.  மாமா 25 வருஷங்களுக்கு அதிகமாக மாசம் நூறு ரூபாய்க்குள் சம்பளம் வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை லட்ச ரூபாய் பணம் சேர்த்தவர்.  இன்றைய பண வீக்க யுகத்தில் இந்தத் தொகை அல்பமானதாக நமக்குப் படலாம்.  ஆனால் 1950, 1960களில் இது பெரிய தொகைதான்.
‘தவறு செய்பவர்கள் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது.  கடவுளும் சாதிக்காத காரியங்களைச் செய்பவன், கடவுளைக் கூப்பிடுகிற அளவு சாதாரண வாழ்வு வாழும் எவனும் கூப்பிடுவதில்லை.  தர்மம், நியாயம் என்பவற்றின் பெயரால் உலகில் நடக்கிற அதர்மங்களும் அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா (பக்கம் 26)’
‘பணம் சேர்ப்பதில் ஈடுபாடுள்ள எல்லோருக்குமே தெய்வப் பக்தியும் அதிகமாக இருப்பதற்குக் காரணம் ஏதாவதிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பாவங்கள் செய்துதான் பணம் சேர்க்க வேண்டும்.  பண மூட்டையுடன் பாவ மூட்டையும் பெரிது ஆகாதிருப்பதற்காக பணக்காரர்களாக விரும்புகிறவர்கள் கடவுள் பக்தியையும் உடன் கைக் கொள்ளுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது (பக்கம் 48/49).’
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டித் தத்துவத்தை கடைபிடிப்பதுதான் நான் இந்த நாவல் எழுதினேன் என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்.  கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன் என்பது முப்பது வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியத்தை மேற்கொள் காட்டியிருக்கிறார்.

U¦dùLô¥ GÝjRô[oLs Be¡X IúWôl©V GÝjRô[oLû[l ©uTt± AYoLs Y¯«úXúV ReLs TûPl×Lû[ EÚYôd¡]ôoLs Gu ÏtfNôhÓ EiÓ. L.Sô.Ñ JÚ U¦dùLô¥ GÝjRô[o GuTÕ NofûNdϬV ®`Vm. B]ôÛm AYo Rªr UWûT – Ck§V UWûT – ©uTt± TQm JÚ BhùLôs° Gu¡ £kRôkRjûR ¨ûX ¨ßjR CkR SôY­p ØVu±Úd¡ôo Gu YûL«p CûR Rªr CXd¡Vj§tÏ ×§V RPm AûUdÏm ØVt£ Guß HtßdùLôsY§p Sôm GkR ®RUô] IVlTôÓm ùLôs[j úRûY«pûX.
ஆசிரியர் அவருடைய 45வது வயதில் எழுதப்பட்ட இந்த நாவலை அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் 2012லும் படிக்க முடிவது நமது பாக்கியம்.

 

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
12
பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.  
மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.  
ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?’ என்று கேட்டேன்.  
”அதுதான் ஏன் எழுத முடியவில்லை என்பது தெரியவில்லை?”
”முயற்சி செய்தி பாருங்களேன்..”
”முதலில் நாவல் என்பது வேறுவிதமாய்ப் போய்விட்டது.  நாவலின் களம் என்ன?  ஒரு நாவல் எதைக் குறித்து செயல்படுகிறது?  நாவல் படிப்பவர்கள் யார்?”
”இதையெல்லாம் யோசித்தால் நாவலே எழுத முடியாது..”
”நானும் நாவல் எழுத வேண்டுமென்றுதான் யோசனை செய்கிறேன்.  ஏதோ கவிதை எழுத வருகிறது.  சிறுகதைகள், ஏன் கட்டுரைகள் கூட எழுதுகிறேன்.  ஆனால் நாவல் எழுதத் துணிவதில்லை..”
”இன்றைய இலக்கிய உலகில் நாவல் எழுதாவிட்டால், உங்களை இலக்கிய உலகிலேயே சேர்க்கமாட்டார்கள்.”
”ஆமாம்.  ஒப்புக்கொள்கிறேன்..”
”நீங்கள் நான் பதவி உயர்வு பெற்று வந்த என் முட்டாள்தனத்தைக் கூட நாவலாக புனையலாம்..”
”முட்டாள்தனமா?”
”ஆமாம்.  50வது வயதில் பதவி உயர்வு என்ற ஆபத்தை சம்பாதித்துக் கொண்டது என் முட்டாள்தனம் இல்லாமல் என்ன்?”
”நானும் ஒப்புக்கொள்கிறேன்.  நீங்கள் செய்தது முட்டாள்தனம்தான்..ஆனால் அதேசமயத்தில் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள்.  ஒன்றுமே இல்லாதவர்கள் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பார்க்கும்போது, வங்கியில் நல்ல வேலையில் இருக்கிறீர்கள்.  அதை நினைத்துப் பார்த்தீர்களா?”
அதை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் நானே தேடிக்கொண்ட முட்டாள்தனம்தான் இந்தப் பதவி உயர்வு.”
”உண்மையில் நீங்கள் துணிச்சல்காரர்.  உங்கள் துணிச்சல் எனக்கு வராது.  
”இங்கு வந்தபிறகு, ஏன்டா இதுமாதிரி தப்பை செய்து விட்டோம் என்று தோன்றுகிறது..”
”ஆனால் தனிமையில் இருக்கப் பழகிக் கொண்டு விட்டீர்களே?”
”தனிமை சிலசமயம் பயத்தையும், சில சமயம் அழுகையும் ஏற்படுத்துகிறது.”
”அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்..”
(இன்னும் வரும்)

 

எதையாவது சொல்லட்டுமா….79


அழகியசிங்கர்
 

 
என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நான் போன் செய்தேன்.  அவர் வருத்தத்துடன் ஒரு தகவலைக் குறிப்பிட்டார. அவர் வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டாராம். எனக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.  =வேற வழியில்லையா? + என்று கேட்டேன்.  =வழியில்லை.  அவர்களுடன் இருக்க வேண்டுமென்றால், புத்தகம் இருக்கக்கூடாது..+

இத்தனைக்கும் நண்பர் ஏற்கனவே இருந்த இடத்தைவிட இன்னும் அதிகம் இடம் உள்ள இடத்திற்கு மாற உள்ளார்.  ஆனால் அவருடைய மனைவியும், புதல்வனும் கட்டாயம் புத்தகத்திற்கு இடம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

 ==என்ன சார், புத்தகம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள்..இதிலிருந்து ஒன்று தெரிகிறது..வீட்டைத் தவிர தனியாய் ஒரு ஆபீஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.++

 வீடைத் தவிர தனியாய் புத்தகம் வைத்துக்கொள்ள ஒரு இடமா? முடியுமா?  சாதாரணமானவர்கள் எங்கே போவார்கள். 

 என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் இருக்கிறார்.  இவர் பழுத்த இலக்கியவாதி.  உலக இலக்கியம்  முழுவதும் அவருக்கு அத்துப்படி.  ஆனால் அவர் சேகரித்து வைத்திருந்த மிக முக்கியமான புத்தகங்கள் எல்லாம் பரண்மீது தூங்கிக் கொண்டிருக்கின்றன.  என்ன நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை.  அங்கிருந்து எடுக்க வழியே இல்லை.  அதை எடுத்தால் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிடும் போல் தோன்றுகிறது.  மேலும் நண்பர் வீட்டிற்குப் போய் புத்தகம் பற்றி பேசவே பயம்.  பெரிய கலவரமே நடந்துவிடும்.

 அவரால் இப்போது ஒரு இடத்திற்குப்போய் புத்தகம் கூட வாங்க முடியாது.  அந்த அளவிற்கு வயதின் முதிர்ச்சி.

அதனால் அவரை யாராவது பார்க்க வந்தார்களென்றால் அவரே அவர் கையில் படும் புத்தகங்களை எடுத்துக்கொடுத்து விடுவார்.  அல்லது அவருடைய நண்பர்கள் உரிமையுடன் அவர் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.  எடுத்துக்கொண்டு செல்பவர்கள் புத்தகங்களைத் திரும்பவே தரமாட்டார்கள்.  அவருடைய அபூர்வமான புத்தகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவர் பிளாட்பாரத்தில் புத்தக வியாபாரியிடம் பேரம் பேசி சேர்த்தப் புத்தகங்கள்.

 நான் அந்த நண்பரைப் பார்க்கச் சென்றால் அவர் அலமாரியிலிருந்து எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கக் கூட மாட்டேன்.  டேபிளில் மீது புத்தகம் இருந்தாலும் எடுக்க மாட்டேன்.  ஏன்என்றால் எனக்கு அது தேவையும் இல்லை.

அதனால் என்னைப் பார்க்கும்போது அவருக்கு என் மீது நம்பிக்கை வரும்.
 நானும் அவரைப்போல் புத்தகம் சேகரிப்பவன்.  புத்தகம் சேகரிப்பவன் என்பது வேறு, புத்தகம் படிப்பவன் என்பது வேறு.  எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளும் நான் புத்தகத்தை எடுத்து எளிதில் படித்துவிட மாட்டேன்.  பிறகு படிக்கலாம்.  நம்மிடம்தானே அந்தப் புத்தகம் இருக்கிறது என்ற நினைப்பில் இருப்பவன். சிலசமயம் நான் வாங்கிய புத்தகத்தையே திரும்பவும் வாங்கி  விடுவேன் ஞாபகமறதியில். என் வீட்டிலுள்ளவர்கள் நான் எதாவது புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால் போதும்.  பார்க்கிறவர்களுக்கு ரத்தக்கொதிப்பு நோய் வந்துவிடும்.  வீட்டில் பெரிய ரகளையே நடக்கும். 

 கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் அலுவலகத்தையும் வீட்டையும் தனியாகப் பிரித்து வைத்துவிடுவார். 

 மேலை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நூல்நிலையம் உண்டு.  வீட்டு உபயோகத்திற்கு பாத்திரங்கள் வைத்திருப்பதுபோல் நபுத்தகங்களை வைத்திருப்பார்கள். 

 குடும்பத்தலைவர் ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார். குடும்பத் தலைவி ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார்.  புதல்வன் வைத்திருப்பான். புதல்வி வைத்திருப்பாள். ஆனால் இங்கோ புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதே ஒரு பெரிய தப்பான காரியம் செய்வதுபோல்.  தமிழ்நாட்டில் ரொம்ப மோசம்.  எழுத்தாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.

 புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் நண்பர் ஒருவர், பத்தாண்டுகளுக்கு முன்பே எல்லாப் புத்தகங்களையும் நூல்நிலையத்திற்கு தானே செலவு செய்து கொடுத்துவிட்டார்.

அவர் முடிவு ஆச்சரியத்தைத் தந்தது.  அவர் புத்தகங்களைப் பாதுகாக்க குடும்ப வாரிசு தயாராக இல்லை 

 நான் முன்பு இருந்த வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் வைத்திருப்பேன்.  அதை சரியாகக் கூட வைத்திருக்க மாட்டேன.  ஒவ்வொரு தருணத்திலும் நான் புத்தகம் வாங்கி சேகரித்தப் புத்தகங்கள்.  பல புத்தகங்களை படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்திருக்கும் புத்தகங்கள். 

 நான் புத்தகம் இப்படி வாங்கிக் குவிப்பதைப் பார்த்து என் அப்பாவிற்கு என் மீது கடும் கோபம் வரும்.  ஒருமுறை அப்பா கேட்டார் : ==எத்தனை ஜன்மங்கள் ஆகும்டா நீ இத்தனைப் புத்தகங்களைப் படிக்க..?++ அப்பா இப்படிக் கேட்டுவிட்டாரே என்று அப்பா மீது எனக்கு கோபம் கோபமாக வரும்.  அவருக்கு 90வயது.  எனக்கு 60வயது.  அவர் என்னைப் பார்த்து ஒரு எல்.கே.ஜி படிக்கும் மாணவனைப் பார்த்துக் கேட்பதுபோல் கேட்பார்.  என் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  மேலும் இன்னொன்றும் சொல்வார்.  நான் புத்தகம் வாங்கி என் சேமிப்பையெல்லாம் அழித்துவிட்டதாக.  புத்தகம் வாங்குவதால் யாராவது சேமிப்பை அழிக்க முடியுமா? 

 நான் புத்தகம் வைத்துக்கொள்ளும் அறைக்கு அவரும் என் மனைவியும் வந்தால்போதும், தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான். 

 என் மனைவிக்கு ஹிஸ்டிரீயா நோய் வந்துவிடும்.  அன்று முழுவதும் மனைவியின் வசவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.  பொதுவாக புத்தகங்கள் மட்டுமல்ல எதையும் வாங்கி சேகரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.  புத்தகம் பார்த்தால் புத்தகம், சீடி பார்த்தால் சீடி என்று பலவற்றை சேகரிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் ஆடியோ காசெட்டுகளை அடுக்கடுக்காக வைத்திருப்பேன். வெறுமனே சேகரிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இது ஒரு வியாதி.  சேகரித்து வைத்துக்கொள்ளும் வியாதி.

 என்னைப்போல் புத்தகம் சேகரிக்கும் எண்ணம் என் பல நண்பர்களிடம் உண்டு.  யாரிடமாவது எதாவது புத்தகம் இருந்தால் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.  பின் அதைத் திருப்பித் தரும் எண்ணம் இல்லாமல் இருப்பார்கள்.

அப்படித்தான் ஒரு நண்பர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  நான் அலுவலகம் சென்று விடுவதால் ஞாயிற்றுக்கிழமை வருவதாகக் குறிப்பிட்டார்.  அவர் வந்தால் கட்டாயம் புத்தகம்தென்பட்டால் எடுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் புத்தகம் வைத்திருந்த அறையைப் பூட்டி வைத்துவிட்டேன்.
 வந்த நண்பர், =என்ன புத்தகம் வைத்திருக்கிறீர்கள்?++ என்று கேட்டபடி வந்தார். 

 ==புத்தகம் வைத்திருக்கும் அறை சாவி எங்கயோ வைத்துவிட்டேன்,++என்று கூறியபடி இன்னொரு அறையில் அவரை உட்கார்த்திவைத்து பேசிக்கொண்டிருந்தேன்.   அந்த அறையில் ஜே கிருஷ்ணமூர்த்தி ஆடியோ காசெட்டுகளை வைத்திருந்தேன்.  போகும்போது அதிலிருந்து சில காசெட்டுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 காலம் மாறிவிட்டது.இப்போதெல்லாம் புத்தகம் வாங்கிக்கொள்ளகூட யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கிடையாது.

                              (டிசம்பர் 2012 அம்ருதா இதழில பிரசுரமானது)


இரண்டு கவிதைகள்

அழகியசிங்கர்

1)

நான் சொல்வேன்
வாய்த் திறந்து
ஜெம்பு என்று
அவர் ஏன் என்று
கேட்க மாட்டார்

இன்னொரு முறை
கூப்பிடுவேன்
ஜெம்பு ஜெம்பு என்று
அவர் உம் என்று சொல்லமாட்டார்

எனக்குத் தெரிந்தது
அவருக்குப் பிடிக்கவில்லை

பின் நான்
நகர்ந்து அவரிடம் போய்
பிடபூள்யு என்பேன்

பின்
இருவரும் கிளம்புவோம்
சலிப்புடன்……..

2.

ஒருவர் ரிட்டையர்டு
ஆகிறாரென்றால்
என்ன நினைக்க முடியும்?
அவர் இனிமேல்
வரப் போவதில்லை

காலையில் சீக்கிரமாய்
வந்திருந்து
அலுவலகக் கதவைத் திறக்கப் போவதில்லை

அவர் பார்த்த அலுவலக இருக்கையில்
கொஞ்ச நாட்களுக்குத்
தெரியும் அவர் கையெழுத்து

மற்றவர்களெல்லாரும்
வழக்கம்போல் வந்து கொண்டிருப்பார்கள்

நான் பிப்பரவரி 2014ல்
வரும் என் ரிட்டையர்மெண்டை
நினைத்து
காலத்தைத் தள்ளுவேன்


நதியும் நானும்

பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை
எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க
ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை
அவசியமெனக் கருதுகிறேன் நான்

சற்று நீண்டது பகல் இன்னும்
மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை
அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது

வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்
வந்த தூரமும் அதிகம்
எல்லையற்றது மிதந்து அசையும் திசை
இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி

எனினும்
கணத்துக்குக் கணம் மாறியபடியும்
ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்
நதியும் நானும்


– ரொஷான் தேல பண்டார
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்


உள் நோயாளி

நான் எப்போதும்
உள் நோயாளி தான்
என் காதலை உன்னிடம்
சொல்ல நினைத்ததிலிருந்து.

கிடைத்தது

பல சமயங்களில்
கிடைத்தது என்பதை விட
ஏற்றுக்கொண்டேன்
என்பதே சரியாயிருக்கிறது

பலாச்சுளை

சிறு ஊடலுக்குப்பின்
அளவுக்கதிகமாக
அன்பைத்தெரிந்தே
பொழிவது போல
இந்தப் பலாச்சுளை
ஏகத்திற்கு இன்று தித்திக்கிறது.

எல்லோரும் 

கொண்டாடப்படும் இடத்தில்
குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல
எல்லோரும் தான்.

பெயர்

நான் வைத்த பெயர்
என் மகளுக்கு
பிடித்திருக்கிறதாம்
நீ வைத்த பெயர்
உன் மகனுக்குப்
பிடித்திருக்கிறதா ?


முதல் பாடல்

காலையில் கேட்ட
முதல் பாடல் போல்
நாள் முழுதும் சுழலும்
உன் ஞாபகங்கள் என்னுள்.

ஒரு பக்கக் காதல்

கடலை மடித்துக்கொடுத்த
காகிதத்தில் இருந்த
பாதிக்கவிதை போலிருக்கிறது
என் காதல்.

– சின்னப்பயல் 

இரு சீன வைத்தியக் கதைகள்
அசோகமித்திரன்
சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது. நான் ஒரு முறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை.
கதைகளில் முதல் கதை நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் ‘காம்ப் ஃபைய’ரில் நிழல் நாடகமாக நட்த்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் ‘காம்ப்’ இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும். வெட்ட வெளியில் கூடாரங்கள் போட்டு, நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் ‘காம்ப் ஃபையர்’ நடக்கும். ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு, ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு.
எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர், சீன நர்ஸ், சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸுக்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார்த்து எறிவாள்.டாக்டர் அதை வைத்து நோயாளியின் வயிறை அறுத்து அதைத் திரும்ப நர்ஸிடம் எறிவார்.அவள் ஒரு டவலை அவரிடம் எறிவாள். அவர் வெட்டின இடத்திலிருந்து ஓர் உளி, மண்வெட்டி,கடப்பாரை எனப் பல இரும்புப் பொருள்கள் எடுத்த பிறகு ஒரு எலியையும் எடுப்பார்.நர்ஸ் கைதட்டிப் பாராட்டுவாள்.அதன் பிறகு எடுத்த பொருள்களை நோயாளி வயிற்றில் திணிப்பார். நர்ஸ் ஒரு கோணி ஊசி எடுத்துத் தருவாள். படுத்துக் கிடக்கும் நோயாளி தலையில் மீண்டும் ஒரு போடு. அவன் விழித்து எழுந்து டாக்டருக்குப் பணம் கொடுத்து வெளியேறுவான். அன்று சீனா பிரிட்டிஷ் தரப்பு. இந்த நாடகத்தைப் பார்த்தால் ஜப்பான் பக்கம் போய் விடக்கூடும். நல்ல வேளை, எங்கள் பள்ளியில் சீன மாணவன் யாரும் கிடையாது.
நிழல் நாடகத்தில் முக பாவத்துக்கு இடம் கிடையாது. ஆனால் நிழல் நாடக வடிவத்தில் அற்புதம் செய்து பார்த்திருக்கிறேன். நடனக் கலைஞர் உதயசங்கர் புத்தர் பற்றி ஒரு முழு நீள நாடகம் சென்னையில் நட்த்தினார்.நிழல் நாடகத்துக்கு இவ்வளவு சாத்தியங்கள் உண்டா என்று ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த முறை இரண்டாம் கதை..
தோற்பாவைக்கூத்து



சின்னப்பயல்

 
புதிதாக வெள்ளையடித்த சுவரில்

நகத்தை
வைத்துக்கீறும்போது ஏற்படும்

மனக்குறுகுறுப்பை
உள்ளூர ரசிப்பது,

மண்ணெண்ணெய்
பாட்டிலைத் திறந்து

அதன்
மணத்தை தான் மட்டும் நுகர்வது,

ஆகக்கூடுதல்
சிரமத்திற்குப்பின்னர்

கைவிரல்களால்
பிடித்த வண்ணத்துப்பூச்சியின்

நிறத்தை
உற்றுநோக்குவது,

இப்போது
அடிக்கப்போகும் பெரிய அலை

கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்

என நினைக்கையில்

அது
அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,

தரைமட்டமான
கட்டிட இடுபாடுகளிலிருந்து

சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,

சிறு
கண்ணாடிக்குடுவையின்

உள்ளுக்குள்
நீந்தும் மீனை வெளியிலிருந்து

ஏதும் செய்ய இயலாது பார்க்கும்

பூனை
மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,

எனக்கென்னவோ

இவையெல்லாவற்றிற்கும்

காதலுக்கும்
தொடர்பிருக்கிறது

என்பது போலத்தான் தோணுகிறது.

 
எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம்
                       
                                                                                                            – நிஸர்கதத்தா மஹாராஜ்

                                                                                                               தமிழில் : அழகியசிங்கர்)
 
 
 

கேள்விகேட்பவர் : நான் நன்றாக இல்லை.  ரொம்பவும் பலவீனமாகத் தெரிகிறேன்.  நான் என்ன செய்வது? 

 நிஸர்கதத்தா மஹாராஜ் : யார் நன்றாக இல்லை. நீயா அல்லது உன் உடலா?

 கே.கே : என் உடலாகத்தான் இருக்கும்.

 நிஸர் : நீ உன் உடல் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாய்.  உன் உடல் நன்றாக இல்லாதபோது வருத்தப்படுகிறாய்.  ஒருநாள் வருத்தமாகவும், ஒருநாள் மகிழச்சியாய் யார் இருக்கிறார்கள்.

 கே.கே : மனம்தான்

 நிஸர் :  யாருக்குத் தெரியும்?  மனதின் மாற்ற நிலை.

 கே.கே : மனதிற்கு.

 நிஸர் :  மனம்தான் தெரிந்தவர்.  ஆனால் யாருக்குத் தெரியும் தெரிந்தவரை.
 கே.கே : தெரிந்தவருக்கு அவரைப் பற்றியே தெரியுமா?

 நிஸர் : மனம் தொடர்பு அறுந்து போய்விடுகிறது.  திரும்ப திரும்ப அது ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. தூக்கத்திலிருப்பது போல், மயக்கத்தில் இருப்பதுபோல், அல்லது விலகிப் போய்விடுவதுபோல்.  தொடர்பறுந்ததை தொடர்ந்து பதிவு செய்கிறது. 

 கே.கே : மனம் ஞாபகப்படுத்துவதால்தான் தொடர்ந்து செயல்பட காரணமாகிறது.

 நிஸர் : ஞாபகம் எப்போதும் அரைகுறையானது.  நம்ப முடியாதது.  ஞாபகம் எப்போதும் மன ஆழத்தை விவரிக்காது.  üநான்தான்ý என்பதை அறியாதது.  மனதின் அடிதளத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடி.

 கே.கே : என்னதான் ஆழமாகப் பார்த்தாலும், நான் மனதைதான் அறிய முடிகிறது.  உங்களுடைய வார்த்தையான üமனதிற்கு அப்பால்ý என்பதை அறிய முடியவில்லை.

 நிஸர் : மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தால், அதைத் தாண்டி போக முடியாது.  மனதிற்கு அப்பால் போகவேண்டுமென்றால், மனதிலிருந்தும் அதன் பிணைப்புகளிலிருந்தும் விலகிப் பார்க்க வேண்டும்.

 கே.கே : எந்த வழியில் நான் பார்க்க வேண்டும்?

 நிஸர் : எல்லா வழிகளும் மனதிற்குள்தான்.  நான் உங்களை எதாவது ஒரு நிச்சயமான வழியில் பார்க்கச் சொல்லவில்லை.  உங்கள் மனதில் நடப்பவை எல்லாவற்றையும் சாதாரணமாகப் பாருங்கள்.  பின் அதன் மூலம் üநான் தான்ý என்பதை உணர முயலுங்கள்.  ‘நான் தான்’ என்பது வழி அல்ல.  அது எல்லா வழிகளையும் நிராகரிப்பது.  இறுதியாக ‘நான்தான்’ என்பதும் போகக் கூடியது.   üநான் தான்ý என்ற உணர்வு நிலைக்கு மனதைக் கொண்டு செல்லும்போது, எல்லாவற்றிலிருந்தும் மாறுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

 கே.கே : இவை எல்லாம் எங்கே என்னை அழைத்துச் செல்லப் போகிறது?

 நிஸர் : எப்போது மனம் தன்னுடைய தளைகளிலிருந்து விடுபடுகிறதோ அப்போது அமைதியாகிறது.  அந்த அமைதியை  தொந்தரவு செய்யாமல், அதைத் தக்க வைத்திருந்தால், இதுவரை அறியாத வெளிச்சத்தையும், அன்பையும் கண்டுணரலாம்.  கூடவே இயல்பான சுபாவத்தையும் உணர்வாய்.  ஒருமுறை நீ இந்த அனுபவத்தைக் கடந்து விட்டால்,  எப்போதும் உள்ள மனிதனாக இருக்க மாட்டாய்.  கட்டுக்கடங்காத மனம் அமைதியை சீர்குலைக்க முயலும்.  பார்வையை மாற்றும்.  உன் முயற்சி தொடர்ந்து இருந்தால், அது பழைய நிலைக்குத் திரும்ப வழி இல்லை.  எந்த ஒரு நாளில், எல்லாத் தளைகளும் விலகி, பிரமைகளும், பிணைப்புகளும் விலகுகிறதோ அப்போது வாழ்க்கை  தற்சமயத்தில் நிலைத்திருக்கும். 

 கே.கே :  இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
 
 நிஸர் : மனம் என்பது இருக்காது.  நம் செயல்பாட்டில் அன்புதான் இருக்கும்.

 கே.கே. : அந்த நிலையை அடைந்துவிட்டேன் என்பதை எப்படி உணர முடியும்? ஆபத்துகளும் புதிர்தன்மை நிறைந்த உலகம் நம்மைச்சுற்றி இருக்க நான் எப்படி பயமில்லாமல் இருக்க முடியும்?

 நிஸர் : உன்னுடைய சின்ன உடம்புக்குள்கூட புதிர்தன்மையும் ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.  இருந்தாலும் நீ பயப்படுவதில்லை.  என்ன உனக்குத் தெரியாது என்றால் இந்தப் பிரபஞ்சம் கூட உன் உடம்புதான்.  அதற்காக நீ பயப்படத் தேவை இல்லை.  நீ சொல்லலாம் உன்னிடம் கூட இரண்டு உடல்கள் உண்டு.  ஒன்று உன்னுடையது இன்னொன்று பிரபஞ்சத்துடையது என்று. உன்னுடையது வரும் போகும். ஆனால் பிரபஞ்ச உடல் எப்போதும் உன்னுடன் இருக்கும்.  உன்னுடைய முழு ஆக்கமும் பிரபஞ்ச உடல்தான்.  நீ உன்னுடைய உடலுடன் கட்டுப்பட்டிருக்கிறாய்.  நீ பிரபஞ்சத்தை உணர்வதில்லை.
 

கட்டுப்பட்டிருப்பதை அப்படியே விட்டுவிடக் கூடாது.  இதை கெட்டிக்காரத்தனமாகவும், முயற்சியாலும் விடுவிக்க வேண்டும்.  எல்லாவித மாயைகளையும் புரிந்துகொண்டு விட்டுவிட்டால், நீ குற்றமில்லாத புனிதமான நிலையை அடைவாய்.  அப்படி அடையும் தறுவாயில் உனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இருக்காது. 

 கே.கே : நான் சாதாரண மனிதன். காலத்தையும் இடத்தையும் மிகக் குறைவாகவே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  மிகச் சில தருணங்களைத் தவிர எல்லாம்  என்னை விட்டுப் போய்விடுங்கின்றன.  எனக்குள்ளே இந்தப் பிரபஞ்சத்தை உணரவே முடியாது.

 நிஸர் : நிச்சயமாகக் கிடையாது.  நீ உனக்குள் உன்னுடைய உண்மையான சொரூபத்தை புரிந்துகொண்டால், நீ அதை உணர்வாய்.  உன்னுடைய உடல் சிறியது அதேபோல் உன்னுடைய ஞாபகமும் குறைவானது.  ஆனால் அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை உன்னுடையது.
 கே.கே : üநான்ý, üபிரபஞ்சம்ý ஒன்றுக்கொன்று முரணானது. ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது.

 நிஸர் : அவை அப்படியில்லை.  பிரபஞ்சத்துடன் கூடிய உணர்தலைத் தேடு.  அப்போதுதான் நீயும் பிரபஞ்ச மனிதனை கண்டுபிடிக்கலாம்.  அவன் உன்னிடமே முழுவதுமாய் நிரம்பி இருக்கிறான்.
 எப்படியோ உலகமானது உன்னிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துகொள்.  அதாவது நீதான் உலகத்தில் உள்ளாய் என்றல்ல.  
 
கே.கே : எப்படி இருக்க முடியும்.  பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் நான்.  இதில் எப்படி உலகம் முழுவதும் இருக்க முடியும்.கண்ணாடியில் பார்ப்பதுபோல் ஒரு கீற்றுபோல் இருக்கலாம்.

 நிஸர் : நீ சொல்வது உண்மைதான்.  உன்னுடைய உடல்
ஒரு பகுதிதான். அதில் பிரபஞ்சம் முழுமையும் எதிரொலிக்கிறது.  ஆனால் நீ ஒரு பிரபஞ்ச உடலாக உள்ளாய்.  நீ சொல்லமுடியாது எனக்குத் தெரியாதென்று.  ஏன்என்றால் நீ எப்போதும் இதைப் பார்த்துக்கொண்டும், உணர்ந்துகொண்டும் இருக்கலாம்.  என்னவென்றால் அதை நீ பிரபஞ்சம் என்று கூறுவாய்.  அது குறித்து பயந்துகொண்டும் இருப்பாய்.

 கே.கே : என்னுடைய சிறிய உடலைப் பற்றி அறிவேன்.  மற்றபடி அறிவியல்முறைப்படி மற்றவர்களைப் பற்றியும் அறிவேன்.

 நிசர் : உன்னுடைய சிறிய உடலும் அற்புதகங்களும், புதிர்தன்மைகளும் நிரம்பியது.  அதற்கும் உன் அறிவியல்தான் புரியவைக்க இருக்கிறது.  உடலைப் பற்றிய சாஸ்திரமும், வானியல் சாஸ்திரமும் உன்னைப் பற்றி விவரிக்கிறது.

 கே.கே : நீங்கள் சொல்கிற பிரபஞ்ச உடலைப் பற்றி ஏற்றுக்கொண்டாலும், எந்த வழியில் நான் அறிவது?  அதனால் என்ன பயன் எனக்கு?

 நிசர் : உனக்குள் இதை உணர்ந்தால், நீ விடுவதற்கு ஒன்றுமிருக்காது.  பிரபஞ்சம் முழுவதும் உன் அக்கறையாக மாறிவிடும்.  ஒவ்வொரு உயிரினத்தையும் நீ விரும்புவாய் ரொம்ப நேசத்துடனும், கெட்டிக்காரத்தனத்துடனும்.  உனக்கும் மற்றவர்களுக்கும் எந்தப் பூசலும் இருக்காது.  எல்லாவித எதிர்பார்ப்புகளும் முழுவதும் இல்லாமல் போய்விடும்.  உன்னுடைய எந்தவொரு முயற்சியும்  பயன் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு அருள் அளிப்பதாகவும் மாறிவிடும்.

 கே.கே  : நீங்கள் சொல்வது என்னைத் தூண்டுவதுபோல் உள்ளது.  ஆனால் எப்படி என்னுடைய பிரபஞ்ச உணர்வை அறிந்து கொள்வது.

 நிசர் : இரு  வழிகள் உள்ளன.  நீ உன்னுடைய இதயத்தையும், மனதையும் முழுவதும் ஒப்படைத்து விடு.  அல்லது நீ, நான் சொல்வதை முழுவதுமாக நம்பி அதன்படி நடந்துகொள்.  வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீ முழுமையாக உன்னைப் பற்றி நினைத்துக்கொள். அல்லது முழுமையாக உன்னைப் பற்றிய நினைவில்லாமல் இரு.  இதில் முழுமையாக இருப்பதுதான் முக்கியம். உயர்வை அடைய நீ தீவிர எல்லையை அடைய வேண்டும்.

 கே.கே. : நான் மிகவும் சாதாரணமானவன்.  அந்த உயரத்தை நான் எப்படி அடைய முடியும்?

 நிசர் : எல்லாமும் கடலைப்போன்ற பிரஞ்ஞையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.  இது ஒன்றும் கடினமானதல்ல.  முழுமையாக தன்னைத் தானே புரிந்துகொள்ளும்  ஒரு சிறிய முயற்சிதான் இது.  நீ பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியும் உன்னுடைய பிரக்ஞையை மீறிப் போவதில்லை.

 கே.கே : உலகம் முழுவதும் பல சம்பவங்கள்.  இவை யாவும் என் பிரக்ஞையில் நிகழ்வதில்லை.

 நிசர் : ஏன் உன்னிடம்கூட பல சம்பவங்கள்.  யாவும் உன் பிரக்ஞையில் தெரிவதில்லை.  இதனால் இது என் உடல் இல்லை என்று தடுக்க முடியாது.  உனக்குத் தெரியும் பிரபஞ்சத்தைக் கூட எப்படி உன் உடலை உணர்வுகளின் மூலம் அறிகிறாயோ அப்படித்தான்.  உன் மனம்தான் எல்லாவற்றையும் பிரிக்கிறது.  வெளி உலகம் உள் உலகம் என்று. ஒன்றுக்கொன்று முரண்பட வைக்கிறது.  இதுதான் பயத்தையும், வெறுப்பையும் இன்னும் பல துயரங்களையும் நம் வாழ்க்கையில் உருவாக்குகிறது. 


 கே.கே : பிரஞ்ஞையைத் தாண்டி போகச் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  நான் வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் அந்த அனுபவத்தை உணரவில்லை.  நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையில் இருப்பதாக.

 நிசர் : நீ சொல்வது சரிதான்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையைத் தாண்டி இல்லை.  ஆனாலும் இருத்தலே ஒரு அனுபவம்தான்.  பிரஞ்ஞையைத் தாண்டி ஒரு நிலை உண்டு.  அது அ-பிரஞ்ஞை கிடையாது.  அதேபோல் உன்னதமான பிரஞ்ஞை நிலையும் கிடையாது.  தன்னிலை புறநிலை என்ற குழப்பத்திலிருந்து விலகி முழுவதுமாக உணர்வது.

 கே.கே :  தியோசபி படித்திருக்கிறேன்.  நீங்கள் சொல்வதில் எதுவும் புதுசாகத் தெரியவில்லை.  தியோசபி உருவாக்கத்தைப் பற்றிதான் சொல்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்திலுள்ளவர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறது.  அது பலதரப்பட்ட நிலைகளையும், அனுபவங்களையும் ஒப்புக்கொள்கிறது.  ஆனால் அது அதைத் தாண்டிப் போகவில்லை.  நீங்கள் சொல்வது அனுபவத்தைத் தாண்டிப் போகச் சொல்கிறீர்கள்.  அப்படி போவதென்றால் அது அனுபவமே இல்லை.  அதைப் பற்றி பேசி என்ன பயன்?

 நிசர் : பிரஞ்ஞை என்பது முழுமையானதல்ல.  பல இடைவெளிகள் இருக்கும்.  ஆனால் நம்மைப் பற்றிய தொடர்ச்சி அதற்குண்டு.  பிரஞ்ஞையைத் தாண்டிப் போகவில்லை என்றால் இந்த அடையாளத்தால் என்ன பயன்?

 கே.கே : மனதைத் தாண்டுவதாக இருந்தால், எனக்குள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?

 நிசர் : எதையும் மாற்றுவதற்கு என்ன அவசியம்?  எப்போதும்
மனம் தானாகவே மாறிக்கொண்டிருக்கிறது. உன் மனதை எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் பார்.  அதை அமைதிப் படுத்த அதுவே போதும்.  அது அமைதி அடைந்தால் தானகவே அதைத் தாண்டிப் போவாய்.  எப்போதும் அதைப் பரபரப்பாக்காதே.  அதை நிறுத்து. பின் அப்படியே இரு.  அதற்கு ஓய்வு கொடுத்தால் அது தானகவே சரியாகிவிடும்.  அதனுடைய புனிதத் தன்மையையும் வலிமையையும் தானகவே நிகழும்.  தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் அது சிதைவு அடையத் தொடங்கும்.

 கே.கே : என்னுடைய உண்மையான சொரூபம் என்னுடன் இருக்கும்போது, எப்படி நான் அதைப் பற்றி தெரியாமலிருக்கிறேன்.

 நிசர் : ஏனென்றால் அது நுணுக்கமானது.  ஆனால் உன்னுடைய மனம் அடர்த்தியானது.  அமைதியாக உன் மனதை ஆக்கு.  அப்போது தான் உனக்குப் புரியும் நீ எப்படி இருக்கிறாய் என்று.

 கே.கே : என்னைப் புரிந்துகொள்ள மனம் தேவையா?

 நிசர் : நீ மனதைத் தாண்டிப் பயணிப்பவன்.  ஆனால் உனக்கு எல்லாவற்றையும் அறிய மனம்தான் முக்கியம். உன்னுடைய ஆழத்தை, உன்னை அறிய மனம்தான் ஒரு கருவியாகப் பயன்படும்.  நீ எது மாதிரியான கருவியைப் பயன்படுத்துகிறாய் என்பது முக்கியம்.  நீ உன் கருவியை  மேன்மைப் படுத்தினால், உன் அறிவு தானாகவே அதிகரிக்கும்.

 கே.கே : சரியாக அறியவேண்டுமென்றால் நான் சரியான மனம் வைத்திருக்க வேண்டும்.

 நிசர் : அமைதியான மனம் எப்போதும் தேவை.    உன் மனம் அமைதி அடைந்தால், எல்லாம் தானாகவே நிகழும். சூரியன் உதிக்கும்போது இந்த உலகம் உயிர்ப்பிக்கிறது.  அதேபோல் தன்னைப் பற்றிய கவனம் மனதை மாற்ற வல்லது.  அமைதியான முறையில் தன்னைப் பற்றிய கவனம், உன்னுடைய உதவியிலலாமல் பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது.

 கே.கே : நீங்கள் சொல்வது என்னவென்றால் பெரிய காரியங்களெல்லாம் அவ்வாறு செய்யாமல் நிகழ்கிறது. 

 நிசர் : நிச்சயமாக.  தயவுசெய்து புரிந்துகொள். பூரண ஞானத்தைப் பெற விதிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை. அதற்கு எதிராகப் போகாதே. அதைத் தவிரக்க முயற்சி செய்யாதே.  அது தானாகவே நிரம்பவிட்டுவிடு.  நீ என்ன செய்ய வேண்டுமென்றால் முட்டாள் மனம் ஏற்படுத்தும் தடைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.   ****