ழ 6வது இதழ் – பிப்ரவரி / மே 1979


தேவதச்சன்

மூன்று கவிதைகள்


வாழ்வு சாவெனத்தன்
வேசம் மாற்றிக் கொள்ளுமுன்
உன் சீட்டைக் காலிபண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத்
தலைகீழாய் நாடகம் மாறப்போகிறது.


மேகம் தெரியாத
மீனின் கோஷத்தை
ஓரத்தில்லை
இரண்டும் தெரிந்த
பறவையின் பாட்டை
ஏற்றிப்பார்.


விதையாய் தொடர
வேறுவழி உண்டோ
மரமாய் பெருகி
பழமாய் கனியாமல்

ம்
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணு மென்றால்
பசியால் சோற்றை
ஜெயீக்கணும் தான்.

2. பகலிலிருந்து
உதிர்ந்தவனுக்கு
பகலெல்லாம் துவக்கம்
பகல் தொறும் துவங்கும் என்கனம்
ஒரு வெளிறிய சந்தேகம்
இடையறாது மிதந்து தொங்கும்
பயமேகம்
இடையறாதுசிரித்தோடும்ஒடைப்புனலில்
பகலுக்கொரு
பார்வைச் சன்னல்

3. திறந்து கிடக்கிறது
வரம்
நீ விரும்புவதுன்
உடல் முழுவதும்
ஆகுக

கதிரவன் எழுதுகிறான்

அழகியசிங்கர்

ஒரு தாளை எடுத்து
கதிரவன் எழுதினான்
இரண்டு வரிகள்
பின் அம்மாவிடம் காட்டினான்

இதெல்லாம் கவிதை
இல்லை என்றாள் அம்மா

கதிரவன் விடவில்லை
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
பின் அப்பாவிடம் காட்டினான்

உனக்கு அதெல்லாம் வராது என்றார்
அப்பா
பல்லை நறநறவென்று கடித்தான் கதிரவன்

பின்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

அலுவலகம் போகும் பிகுவில்
இருந்த அக்காவிடம் காட்டினான்

வேலையைப் பார், கதிரவா..
உனக்கெல்லாம் வராது இதெல்லாம்..என்றாள்.

இன்று யாருடன் சுற்றப் போகிறாள் இவள்
என்று கோபமாக முறைத்தான்.

பின் சற்றும் மனம் தளராமல்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

துள்ளிக் குதிக்கும் வயதில் நடமாடும்
தங்கையிடம் காட்டினான்

போடா…இங்க கொண்டு வராதே
வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்காதே
கலீல் கீப்ரான் என்ற நினைப்போ என்றாள்..

அவளை அடிக்கப் போனான் கதிரவன்
அம்மா கதிரவனைத் திட்டினாள்
பெண் குழந்தையைத் தொடாதே..என்றாள்

கதிரவன் தான் எழுதிய காகிதத்தை
ஒருமுறை படித்தான்..திரும்பவும்
இன்னொருமுறை படித்தான் பிறகு
கிழித்து எறிந்தான் துண்டங்களாக..

ஒருமுறை கதிரவன் வீடு திரும்பும்போது
அம்மா பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்

என்மகன் கதிரவன் கவிதை எழுதுகிறான் என்று..

(10.04.2013)

வளசரவாக்கம்

 
அழகியசிங்கர்

 காலையில் பொழுது விடிந்ததும்
 தூங்கியும் தூங்காமலும்
 எழுந்து கொஞ்சம் உட்கார்ந்தபிறகு
 ஞாபகம் வருகிறது
 வளசரவாக்கம் என்று

 8.30மணி அளவில்
 ஓடி ஆடிப் போக முடியாத வயதில்
 ஏதோ தொத்தல் வண்டியில்
 ஏறி
 எதிர்படும் கூட்டத்தைப்பற்றி
 கவலைப்படாமல்
 முகத்தில் புன்னகை மாறாமல்

 இதோ
 வளசரவாக்கம்

 வந்து நுழைந்தவுடன்
 என் சீட்டில் போய் அமர்ந்து கொள்வேன்
 ஏதோ கனவுலகில் இருப்பதுபோல்
 தோற்றம்
 பலவிதமான மனிதர்களைப்
 பார்த்து பார்த்து
 அவர்கள் ஏதோ சொல்ல
 நானும் கேட்பேன்
 பின் நான் ஏதோ சொல்ல
 அவர்களும் கேட்பார்கள்
 வளசரவாக்கம் வளசரவாக்கம்

 சக ஊழியர்கள் அவர்கள்
 இருக்கைகளில் போய் அமர்ந்து
 எதிர்படும் நீண்ட கூட்டத்தை
 சமாளிப்பார்கள்
 வளசரவாக்கத்தில்தான்
 இருக்கிறோமா
 என்பது தெரியாமல்
 வாகன நெரிசல்
 பிரதான சாலை வழியாக
 போய் வந்தவண்ணம் இருக்கும்..

 நான் வெளியே வரும்போது
 இருட்டாகிவிடும்..
 வீடு போய் சேர்வதற்குள்
 போதும் போதுமென்றாகிவிடும்

 இப்படித்தான் கிலி உண்டாக்குகிறது
 வளசரவாக்கம்..
                                                          09.04.2013
 
 

அப்பா……


     அழகியசிங்கர்
                                                                                               

அப்பா சொன்னார் :
குட்மார்னிங்
சரிதான்

காலையில் காஃபியைச்
சுடச்சுட குடிப்பார்
சரிதான்

முன்னாள் முதல்வர்
கருணாநிதி மாதிரி பேசுவார்
சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்
பார்த்து
நலமா என்று கேட்பார்
சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்
நலமுடன் வாழ்க என்பார்
சரிதான்

கண்ணாடி இல்லாமல்
பேப்பர் படிப்பார்
சரிதான்

தடியை ஊன்றி தானே
நடைபயிற்சி செய்வார்
சரிதான்

தரையில் அமர்ந்து
காய்கறி நறுக்குவார்.
சரிதான்

யார் உதவி இல்லாமல்
தன் துணிகளை
தானே துவைப்பார்
சரிதான்

சத்தமாக மெய்மறந்து
பாட்டுப்பாடுவார்
சரிதான்

91வயதில் தானே
ஷேவ் செய்து
கொள்வார்
சரிதான்

டிவி முன் சீரியலை
விழுந்து விழுந்து ரசிப்பார்
சரிதான்

படுக்கையை விரித்து
தானே படுப்பார்
சரிதான்

ஆனால் என் 59வது வயதில்
        என் தலைமை அலுவலகத்திற்குப்
போன் பண்ணி
என்னை மாம்பலம் கிளைக்கு
மாற்றச் சொல்லி கெஞ்சுகிறார்
அதுதான் சரியில்லை………..
                                             08.04.2013

காலத்தின் கொலைகாரன்

எம்.ரிஷான் ஷெரீப்

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்

இசைத்தட்டளவு வாழ்க்கை

 ரவிஉதயன்

சுழலும் இசைத்தட்டளவு
வாழ்க்கை
மெல்லிய ரேகைகள் போலவரிகள்
நாட்கள்
செக்கு மாடு சுற்றுவாழ்க்கை.
அதன் மேல்
ஊசி முனைப் பயணம்.
சட்டென்று
நின்று விடுகிறது
நகர்கிற வாழ்வு சிலருக்கு.

சுற்றுக்கள் முடிந்து
மீண்டும்
சுழல தொடங்குகிறது
தொடக்கத்திலிருந்து மிகச்சிலருக்கு.

பிரியத்தின் யதார்த்தமும் எதிர்பார்ப்பும்


 தேனு

மழைச்சாரல் துவங்கிய நாளொன்றில்
நெஞ்சோடு அணைத்து வந்திருந்தாள் யாழினி,
பெயரும் சூட்டியாகிவிட்டதென
இறுமாப்பாய் சிரித்து
இதழ் குவித்து கலைநேசன் என்றாள்.
அன்றிலிருந்து வீட்டில் ஒருவனாய்
வளரத் துவங்கினான்,
முகத்தோடு முகம் வைத்து
புரிதலாய் அவள் மொழியில்
கொஞ்சிக் கொண்டே இருப்பாள்,
உணவு வேளைகளில் எல்லாம்
அவனுக்கும் வைத்துத்
தானும் அருகமர்ந்து உட்கொள்வாள்.
அவன் குளிப்பதற்காகத் தனியாய்
ஒரு தொட்டி வாங்கி
தினம் இரு மணி நேரம் குளிக்க வைத்துச்
சிரிக்க யாழினிக்கு மட்டுமே வந்தது..
இணை பிரியா தோழர்களாகிப்
போயினர் இருவரும்..
கட்டிக் கொண்டே தூங்குவதும்
அவர்கட்கு வழக்கமாகிப் போனது..
இயந்திரமாய் கல்வி ஏற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பும் வந்தது,
பிரியா விடை கொடுத்து
அழுதழுது அவனுக்கு முத்தம் முத்தமாய் கொடுத்து
விடுதிக்குச் சென்று விட்டாள் யாழினி..
இரு நாட்களாய் இம்மியும் நகராமல்
வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
கலைநேசன்..

அழகியசிங்கர் கவிதைகள்

கவிதை ஒன்று

டேபிளின் மீதிருந்த
காப்பிக் கோப்பைகளை
அலட்சியமாக விட்டுவிட்டுப்
போய்விட்டீர்கள்….

யார் அதை எடுத்துத்
தூக்கி எறிவது….

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
அது அப்படியே இருப்பது….

காப்பிக்கோப்பைகள்
தானாகவே போய்க்
குப்பைக் கூடையில் வீழாது..

மிச்சம் மீதியிருக்கும்
காப்பிக் கரைகளைப்
பார்க்க பார்க்க அருவெறுப்பாக இல்லையா..
யார்தான் அதைத் தூக்கி எரிவார்கள்..
                                                                      11.02.2013

கவிதை இரண்டு

வாழ்க்கை என்பது
என்னவென்று கேட்டேன்..

வாழ்க்கை என்பது
அப்படித்தான் என்றான் படுபாவி

                                                                     15.02.2013

எதையாவது சொல்லட்டுமா….83

அழகியசிங்கர்
பந்தநல்லூர் கிராமத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது, என் அலுவலக நண்பர் ஒருவர் நடிகர் நீலு மாதிரி இருப்பார்.  அவரும் நானும் உதவி மேலாளர்கள்.  இது பெரிய பதவி இல்லை.  மேலே உள்ளவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  கீழே பணிபுரிபவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  நாங்கள் இருவரும் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தோம்.  வங்கிக் கிளை அலுவலகத்தை காலையில் போய் திறப்பது முதல், இரவு மூடும் வரை நாங்கள் படுகிற அவஸ்தையை எந்த மாதிரியும் விளக்க முடியாது.  மேலும் அந்தக் கிராமத்தில் சரியான ஓட்டல் இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் தங்குவது என்பது  முடியாத காரியம்.  நானும், அந்த நண்பரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள்.
நான் அந்த நண்பரை நடிகர் நீலு மாதிரி இருப்பார் என்று சொன்னது அடையாளத்திற்குத்தான்.  நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை தமிழ் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றும்.  அதில் நீலு என்ற நடிகரும் ஒருவர்.  அவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் நடிக்க வைத்துவிட்டு அம்போ என்று தமிழ் சினிமா உலகம் விட்டுவிட்டது.  அவர் உருவத்திற்கு ஏற்ற ஒரு கதையை பிரமாதமாக தயாரித்து அவரை நடிக்க வைத்திருக்கலாம்.  ஆனால் தமிழ் சினிமா உலகத்தில் கதாநாயகர்கள்தான் முக்கியமானவர்கள்.  நடிகர் நம்பியாரை வெறும் வில்லன் நடிகராகவே நடிக்க வைத்து வீணடித்துவிட்டோம்.  அதேபோல் எம் ஆர் ராதா என்ற நடிகர்.  
எதாவதாக ஆக வேண்டுமென்று நாம் எல்லோரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.  என் சின்ன வயதில் என்னையும், என் இளைய சகோதரனையும் பாட்டு சொல்லிக் கொடுக்க என் குடும்பம் முயற்சி செய்தது. என் பெற்றோர்கள் ஆசைப் பட்டதில் எந்தத் தவறும் இல்லை.  பாட்டு எங்களுக்கு வந்தால்தானே.. =பெரியவனுக்கு (நான்) உச்சரிப்பு நன்றாக வருகிறது.. குரல் வளம் இல்லை.. சின்னவனுக்கு குரல் வளம் நன்றாக உள்ளது.  ஆனால் உச்சரிப்பு போதாது..+ என்று எங்களுக்கு பாட்டு சொல்லி கொடுத்தவர் சொல்லி எங்கள் குடும்பத்தினரிடமிருந்து சில மாதங்கள் பணம் பறித்தார்.  அதன்பின் எனக்கும் பாட்டிற்கும் காத தூரம் ஆகிவிட்டது.  இப்போதுகூட நான் பாட்டை கேட்கத்தான் முடியும்.  அது என்ன ராகம் என்பது தெரியாது.  
மேலும் ஒரு கச்சேரியை பல மணிநேரம் மெய்மறந்து என்னால் ரசிக்க முடியாது.  சிலர் மெய்மறந்து போனேன் என்பார்கள்.  பரவசம் அடைந்து விட்டேன் என்பார்கள்.  இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பாட்டு மனதில் நிற்கிறது என்பார்கள்.  எனக்கு அதெல்லாம் புரியாது.  அயோத்தியா மண்டபத்தில் அத்தனைக் கூட்ட நெரிசலில் என் மனைவி சுதா ரகுநாதன் கச்சேரியைக் கேட்டு மெய் மற்நது போனேன் என்பாள்..  நானோ அங்கு நிற்க முடியாமல் ஓடி வந்து விடுவேன்.
என்னால் பெரிய பாடகனாக வரமுடியவில்லை.  பாட்டையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை.  என்னால் முடியாததை என் பெண் மூலம் நிறைவேற்ற நானும் என் பெண்ணை இரண்டாவது   படிக்கும்போது பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஒருவரிடம் பாட்டு கற்றுத்தர அனுப்பினேன்.  அதுவும் சில மாதங்கள்தான்.  பெண்ணிற்கும் பாட்டு வரவில்லை.  இப்போது பெண் அவள் பெண்ணிற்கு   பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.  
என் அலுவலக நண்பரின் பெண் நன்றாக பாட்டு கற்றுக் கொண்டிருந்தாள். கச்சேரி செய்யும் அளவிற்குப் போய்விட்டாள். ஒருமுறை பணம்கொடுத்து  அவள் பாட்டு கச்சேரியை நண்பர் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்.  கும்பகோணத்தில் காந்தி பூங்கா எதிரில் உள்ள ஒரு இடத்தில் பாட்டுக் கச்சேரி நடத்த ஏற்பாடு ஆயிற்று.  அவள் பாட்டுக் கச்சேரியைப் பாராட்ட 85 வயதுக்குமேல் உள்ள ஒரு மிருந்தங்க நிபுணரை ஏற்பாடு செய்தார்.  பின் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிற குருவை ஏற்பாடு செய்தார்.  கல்லூரியில் அந்தப் பெண்ணிற்கு பாடம் நடத்தும் ஒரு பேராசிரியரையும் ஏற்பாடு செய்தார்.  பின் பாட்டுக் கச்சேரி நடக்கப் போவதை அறிவித்து அழைப்பிதழைத் தயார் செய்து எல்லோரையும் கூப்பிட்டார்.
பாட்டுக் கச்சேரிக்கு வருபவர்களுக்கு மாலை டிபன் மற்றும் முடிந்து போவோருக்கு சாப்பாடு என்றெல்லாம் ஏற்பாடு செய்தார்.  அந்தக் கச்சேரி நடப்பதற்கு சில தினங்கள் வரை பரபரப்பாக இருந்தார்.  என்னையும் கூப்பிட்டார்.  அன்று அலுவலகம் முடிந்து பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் சென்று பாட்டுக் கச்சேரியைக் கேட்டு திரும்பவும் மயிலாடுதுறையில் உள்ள என் இருப்பிடத்திற்கு வரவேண்டும்.  பயங்கர அலைச்சலாக இருக்கும்.  அலுவலக நண்பருக்காக நானும் புறப்பட்டேன்.  நான் அங்கு போனபோது பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.  எல்லோரும் வேண்டியவர்கள்.  காப்பி மட்டும்தான் கிடைத்தது.  டிபன் தீர்ந்து விட்டது.  நானும் போய் அமர்ந்தேன்.  வந்த பரபரப்பே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  பாட்டு முடிந்த இடைவேளைக்குப் பின் விருந்தினர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் அந்தப் பெண்ணை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள்.  அவள் கல்லூரியிலிருந்து வந்திருந்த பேராசிரியர்.  “கல்லூரியிலும் இந்தப் பெண் சிறப்பாகப் படிக்கிறாள்.  இங்கு கச்சேரியும் செய்கிறாள்.”என்றெல்லாம் பாராட்டினார்.  
எல்லோரும் பேசி முடித்தப்பின் திரும்பவும் கச்சேரி ஆரம்பித்தது.  துக்கடா மாதிரி சில பாடல்களை அந்தப் பெண் பாட ஆரம்பித்திருந்தாள்.  =சம்போ சிவ சம்போ+ என்ற பாடலை பாட ஆரம்பித்தாள்.  அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது கீழே இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் கல்லூரியில் உள்ள பேராசிரியர் எதிர்பாராதவிதமாக கீழே சாய்ந்தார்.  கூட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.  பயத்தில் அந்தப் பெண் பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டாள்.  அந்தப் பேராசிரியரை நானும் நண்பரும் இன்னும் சிலரும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கும்பகோணத்தில் பிரபலமான சுகம் மருத்துவமனைக்கு ஒரு காரில் அழைத்துச் சென்றோம்.
சுகம் மருத்துவமனையில் அவரைப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய் சில நிமிடங்கள் ஆகிவிட்டன என்றார்கள்.  என் நண்பர் இதை என்னிடம் சாதாரணமாக சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அங்கிருந்து நான் மயிலாடுதுறைக்கு ஓட்டமாக ஓடிப் போய்விட்டேன்.  பின் வீட்டிற்கு வந்தபிறகு எனக்கு அந்தப் பாட்டு கச்சேரியை மறக்க முடியவில்லை. நான் தனியாக இருந்ததால் இரவு முழுவதும் வீட்டிலுள்ள எல்லா அறைகளிலும் விளக்கு போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன்.  எனக்கு தூக்கம் வரவில்லை.  
அடுத்தநாள் அலுவலகம் வந்தபோது நான் சுரத்தாகவே இல்லை.  என் நண்பர் அன்று வாங்கிவைத்திருந்த சாப்பாடு மீந்து விட்டது.  யாரும் சாப்பிடவில்லை  என்றார் சாதாரணமாக.  ஒரு கடை ஊழியன் கிண்டல் செய்தான்: ‘என்ன உங்கள் பெண் கச்சேரியில் பேச வந்தவரை மேலேயே அனுப்பிவிட்டீர்கள் போலிருக்கு.’
எதாவது ஆக வேண்டுமென்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  கிரிக்கெட்டைப் பார்க்கும்போது கிரிக்கெட் வீரராக வர வேண்டுமென்று நினைக்கிறோம். அதற்கான முயற்சி தெருவிலேயே நின்று விடுகிறது.  சினிமா பார்க்கும்போது நாமும் நடித்தால் என்ன என்று தோன்றும்.ஆனால் நடப்பதில்லை.  இப்படி எத்தனையோ முடியவில்லை தொடரத்தான் செய்கிறது. யோசித்துப் பார்க்கும்போது நாம் ஏன் எதாவது ஆக வேண்டுமென்று நினைக்க வேண்டும்.  சாதாரணமான இந்த வாழ்க்கையே போதுமானதாக தோன்றுகிறது.  ஏன் இப்படி சொல்கிறேனென்றால் எதாவது ஆக வேண்டுமென்றாலே பிரச்சினை.  
(APPEARED IN AMIRTHA TAMIL MAGAZINE APRIL ISSUE)

பயணீ கவிதைகள்

If there are images in this attachment, they will not be displayed.  Download the original attachment
 
 

அமுதாக்கா இறந்துவிட்டாள்

 
காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்து
வெளியே வந்து பார்த்தபோது வானம் இருண்டிருந்தது
மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது
எதிரே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில்
27.09.2009 அன்று அமுதாக்கா இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது
ஆம் அமுதாக்கா இறந்துவிட்டாள்
27.09.2009 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில்
அமுதாக்கா தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனாள்
அவள் சாவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன
பல ஊகங்களும் உலவுகின்றன
அமுதாக்காவை எனக்கு நன்றாகத் தெரியும்
அவள் ஒரு பெண் குழந்தையின் தாய்
முருகனின் அழகு மனைவி
சுந்தர பெருமாளின் அன்பான கள்ளக்காதலி
எங்கள் தெருவின் சிறந்த அழகி
அமுதாக்காவை முதன்முதலில் தேநீர் கடையில்
நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பார்த்தது
இடுப்பில் குழந்தையுடன் சொம்பில் தேநீர் வாங்க வந்தவளை
நண்பர்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க
நான் மட்டும் வைத்த கண் வாங்காமல்
அமுதாக்கா திரும்புவரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்
அன்று ஒற்றைச் சாமந்திப்பூ சூடி வந்த அமுதாக்கா
இடத்தை விட்டு அகன்ற பின்பும்
சாமந்திப் பூவின் மணம் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது
அது அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும்
அமுதாக்காவின் இல்லத்திலிருந்து
இப்பொழுது மரண ஓலமும் செண்டை மேளமும் ஒலித்துக் கொண்டிருந்தன
சாமந்திப் பூவின் மணமும் கொஞ்சம் தூக்கலாக வீசிக் கொண்டிருந்தது
இதுவும் அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
மேலும் மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது
 
ஆற்றுப்பாலத்தைக் கடக்கும் மண்புழு
 
அதுவொரு கிழக்கு மேற்காக அமைந்த நெடிய ஆற்றுப்பாலம்
மண்புழுவொன்று ஆற்றுப்பாலத்தைத் தெற்கிலிருந்து வடக்காக
கடந்து செல்ல நீண்ட நேரமாக முயன்று கொண்டிருக்கிறது
லாரிகளும் பேருந்துகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும்
ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதால்
மண்புழுவின் கடக்கும் காலம் தள்ளிக் கொண்டே போகிறது
அப்பொழுது சிறுமியொருத்தி வடக்கிலிருந்து ஆடிப் பாடிக் கொண்டு
ஆற்றுப்பாலத்தின் ஓரம் வந்து நிற்கிறாள்
வாகனங்களின் ராட்சத வேகத்தையும் இரைச்சலையும் கண்டு
புன்முறுவலுடன் பாலத்தை நோட்டமிடும் சிறுமி
எதிரே மண்புழுவொன்று பாலத்தைக் கடக்க எத்தனிப்பதும்
பின்பு திரும்புவதுமாக இருப்பதைக் காண்கிறாள்
ஆற்றுப்பாலத்தின் ஓரம் சிறுநீர் பெய்துவிட்டு
திடுமென வடக்கிலிருந்து தெற்காக ஆற்றுப்பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறாள் சிறுமி
சிறுமியின் இந்தத் திடீர் செய்கையால்
வாகனங்கள் ஸ்தம்பித்து ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன
பேருந்தும் பேருந்தும் பேருந்தும் லாரியும் லாரியும் காரும்
காரும் இருசக்கர வாகனமும் லாரியும் லாரியும் லாரியும் இருசக்கர வாகனமும்
காரும் காரும் காரும் பேருந்தும்
இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் பேருந்தும்
ஒன்றோடொன்று மோதி ஆற்றுப்பாலத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றன
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறுமி பாலத்தைக் கடக்கத் தொடங்க
மண்புழுவும் ஒருவிதத் துணிச்சலில் பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறது
சிறுமியும் மண்புழுவும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள்
பின்பு அவரவர் வழியில் நடக்கத் தொடங்குகிறார்கள்
ஸ்தம்பித்த ஆற்றுப்பாலத்தைக் கடந்தபடி. . . .
 
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருப்பவர்கள்
 
நேரம்  –  காலை 4.30 மணி
இடம்  –  அயன்புரம் பேருந்து நிலையம்
அன்றைய செய்தித்தாள்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு
பின்பு பகுதி வாரியாக அடுக்கப்படுகின்றன
உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை
செய்தித்தாள்களில் குவிந்திருக்கும் சொற்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டு அவரவர் பகுதிகளுக்கு விரைகிறார்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் இறைத்த சொற்களை
செய்திகளாகச் சேகரித்துக் கொண்டு
தங்கள் காலையைத் தொடங்குகிறார்கள் அந்தந்த பகுதிவாசிகள்
இந்த வழக்கமான சொற்களை நிராகரித்து
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருக்கிறார்கள்
திருடர்களும் பொறுக்கிகளும் பேடிகளும் பைத்தியக்காரர்களும்
இவர்களோடு கள்ளக்காதலர்களும் வேசைகளும் காமத்தரகர்களும் காத்திருக்கிறார்கள் 
காத்திருக்கும் இவர்களைப் புன்முறுவலுடன்
கடந்து செல்கிறார்கள் செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
 
பச்சைப் பட்சி
 
இன்று வெயில் அடி அடியென அடித்துக் கொண்டிருக்கிறது
நான் என் பச்சைப் பட்சியைத் தேடி கிழக்கே செல்கிறேன்
அவளைக் காண இந்த வெயில் நாள்
ஒரு நல்ல சகுனமென்றே தோன்றுகிறது
கிழக்கு ஒரு பெரும் பாலையென விரிந்திருக்கிறது
இந்தப் பரந்த மணற்பரப்பு எனக்கு எதையோ நினைவூட்டுகிறது
மேலும் பாலையின் ஊளையொலி எனக்கெதையோ சொல்கிறது
எனக்கெதுவும் புரியாமல் கிழக்கின் வழி நடக்கிறேன்
பாலையைத் தொடர்ந்து
கிழக்கு ஒரு காட்டின் வழியே என்னை அழைத்துச் செல்கிறது
நிறம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்தக் காடு
ஒரே நேரத்தில் வசீகரித்தும் விலகியும்
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது
நான் பச்சைப் பட்சியின் இருப்பிடம் சென்று சேர்ந்தபோது
அவள் அங்கில்லை
அவள் தன் கருத்த ட்ராகனைத் தேடி
தென்கிழக்கே சென்றிருப்பதாக அறிகிறேன்
வந்த வழியைத் திரும்பிப் பார்க்கும்போது
பாலையின் ஊளையொலி மீண்டும் எனக்கெதையோ சொல்வதாக உணர்கிறேன்
புரிந்தும் புரியாத குழப்பத்தில்
நான் இப்பொழுது தென்கிழக்கே பயணமாகிறேன்
 
வெயில் நகரம்
 
நானும் தந்தையும் எங்கள் நிலத்தைப் பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டோம்
மலைகளுக்கு நடுவே எங்கள் நிலத்தில்
அவரவருக்கான முட்டாள்தனத்துடன் வாழ்ந்து வந்த நாங்கள்
வேறு வழியின்றி இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தோம்
நாங்கள் இந்த நகருக்கு வந்து சேர்ந்த நாளில்
வெயில் ஓர் அரக்கியென எங்கும் வியாபித்திருந்தது
மேலும் வெயில் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டுமிருந்தது
எங்களைப் போலவே பலரும் தங்கள் நிலத்தைப் பிரிந்து
வெயில் பின்தொடர இந்த நகருக்கு வந்து கொண்டிருந்தார்கள்
எங்கள் நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நாங்கள்
இந்த நகரத்தில் வெயிலுடனும் சில புத்திசாலித்தனத்துடனும் வாழப் பழகிக் கொண்டோம்
நகரத்தில் என்னைப் போலவே வாழும்
ஒரு புத்திசாலிப் பெண்ணை காதல் புரிந்து மனைவியாக்கிக் கொண்டேன்
எப்பொழுதும்போல் வெயில் எங்களைப் பிந்தொடர்ந்து கொண்டிருந்தது
வெயில் நுரைத்துப் பொங்கி நகரமெங்கும் வழிந்து கொண்டிருந்த நாளில்
எங்களுக்கொரு செல்ல மகள் பிறந்தாள்
வெயிலின் நிறத்தோடும் அதன் மினுமினுப்போடும்
வெயில் நகரத்தின் பரிசாக. . .
 
ஒரு மகளின் கனவு
 
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன்
தந்தையிடம் ஓடோடி வந்த சிறுமி
இரவில் தான் கண்ட கனவை விவரிக்கத் தொடங்குகிறாள்
அப்பா அதுவொரு பெரிய காடு
காடு அடர்த்தியாகவும் இருட்டாகவும் இருக்கு
அந்தக் காட்டுக்குள்ள நாம ரெண்டு பேர் மட்டும் போறோம்
நாம ஏன் அங்குப் போறோம்னு தெரியல ஆனா போறோம்
காட்டு விலங்குகள் எல்லாம் நிழல் நிழலா தெரியுது
எதையும் சரியா கண்ணால பார்க்க முடியல
திடீர்னு பார்த்தா நமக்கு முன்னால
ஒரு பெரிய யானைக்கூட்டம் நின்னுக்கிட்டு இருக்கு
நாம அன்னிக்கு டிஸ்கவரி சேனலில் பார்த்தோமே
ஒரு பெரிய யானைக்கூட்டம் அதையும்விட பெருசு
அப்புறம் இன்னொரு நாள் மிருகக்காட்சிச் சாலையில் பார்த்தோமே
அதையும்விட பெரிசு
தந்தையானவர் அப்பொழுதிருந்த காலையின் பதற்றத்தில்
கதையைப் பாதியில் நிறுத்தி மகளிடம் சொன்னார்
குட்டிம்மா காலையில அப்பாவுக்கு நிறைய வேலைகள் இருக்கு
மீதிக் கதைய அப்பா அலுவலகம் போய்ட்டு வந்து
இரவு கேட்டுக்கறேன் சரியாடா செல்லம்
மகளிடம் பதிலை எதிர்பாராமலேயே அவளைவிட்டு நீங்குகிறார்
சுவாரஸ்யத்தின் சங்கிலி அறுபட்ட கோபத்தில்
மகள் தனக்குள் எண்ணிக் கொள்கிறாள்
இனி இந்த அப்பாவை ஒருபோதும்
தன் கனவுக்குள் அழைத்துச் செல்லக்கூடாதென்று…