ஒரு விதை போல

ரவிஉதயன்

துளிகள் அடர்ந்து
வானம் பெயர்ந்து விழுகிறது
மழை தாரைகள்
நிற்காது மண் முற்றத்தில் தாளமிசைக்கின்றன
தாளக்கிரமங்களை
செவியுற்றவாறே
ஒரு விதைபோல
வீழ்ந்து கிடக்கிறேன்
சரி பாதி
தொட்டிலில் உறங்கிக்கொண்டும்…
சவப்பெட்டியில் சரிந்துகொண்டும்…

கொக்குகள் பூக்கும் மரம்

 எம்.ரிஷான் ஷெரீப்

தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது

காலையில் பறக்கும் கிளைகளை

தலையில் கொண்ட பெரு விருட்சம்

ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்

நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை

அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

வெள்ளைப் பூக்களென

வந்து தங்கிச் செல்லும்

கொக்குகள்

இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்

கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

இரை தேடி விடிகாலையில்

தமதிரு நெடிய கிளைகளையும்

வயிற்றில் பதித்துப் பறப்பவை

விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள

வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

அவற்றைச் சேமிக்கும் மரம்

காற்றைத் தொட்டு

இறகுத் தூரிகையால்

ஓடும் ஆற்றில் கவியெழுதும்

எதையாவது சொல்லட்டுமா…………84

அழகியசிங்கர்



எங்கள் அலுவலகத்தில் மதியம் ஒன்றிலிருந்து, இரண்டு மணிவரை உணவு அருந்தப் போவோம்.  உண்மையில் அரைமணி நேரம்தான் உணவு இடைவெளி.  நாங்கள் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்வோம். இப்போது பிரபலமாக இருக்கும் யோகா வகுப்பில் என் அலுவலக நண்பர் என்னையும் சேர்த்துவிட்டார்.  நான் சொல்லும் இந்தக் கதை பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது.
நான் யோகா கற்றுக்கொண்டு விட்டேன் என்ற கர்வத்தில் இருந்தேன்.  மதியம் சாப்பிடுவதற்கு முன் சூன்ய தியானத்தை ஆரம்பிக்க வேண்டும்.  ஒரு இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உட்கார வேண்டும்.  பின் எந்த யோசனையும் இல்லாமல் இருக்க வேண்டும்.  வெளியில் நடக்கும் எந்தச் சப்தமும், அசைவும் மனதில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதுதான் சூன்ய தியானம்.  கண்ணை மூடியவுடன் தத்ரூபமாய் ஆழ்ந்த யோக நிலையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அலுவலகக் கட்டடத்தில் மூலையில் நான் கற்றுக்கொண்ட புதியதில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன்.  பெரும்பாலும் யாரும் என்னைப் பார்க்க முடியாத இடத்தில்தான் உட்கார்ந்து இருப்பேன்.  ஆனாலும் கடைநிலை ஊழியர்களிடமிருந்து தப்பிக்க முடியாது.  அதுவும் கேசவன் என்பவன் பொல்லாதவன்.
“சார், என்ன பண்றீங்க?”
நான் பதில் சொல்ல மாட்டேன்.  தியானம் கெட்டுவிடும்.
         “ஓ…தியானம் பண்றீங்களா?”
அன்று நான் கேசவன் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சூன்ய தியானத்தில் மனதை செலுத்தினேன். 
தியானம் முடிந்தவுடன், கேசவனைக் கூப்பிட்டு என்னுடைய யோக முயற்சியைப் பற்றி சொன்னேன்.  நான் மேற்கொள்ளும் சூன்ய தியானத்தில் மனம் ஒருமைப்பட்டு எந்தவித எண்ணமும் என்னுள் போகாமல் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.  கேசவன் தலையில் அதெல்லாம் ஏறவில்லை.
அடுத்தநாள் நான் திரும்பவும் உட்கார்ந்து சூன்ய தியானம் செய்யும்போது கேசவன் வந்துவிட்டான். ஆபத்து.
  
“நான் பைலைத் தேடி வந்தேன்….சார், தியானம் செய்யறாரா?”
என் மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.  கேசவன் சொல்வதெல்லாம் காதில் விழக்கூடாது என்று உறுதியாக பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடியபடி உட்கார்ந்திருந்தேன்.  
கேசவன் விடவில்லை..
  
   “சார், நல்லா தோரணையாகத்தான் உட்கார்ந்திருக்கிறார்….தியானம் பண்றாரு தியானம்…”
கேசவன் சொல்வதெல்லாம் என் காதில் விழுந்தவண்ணம் இருக்கிறது.  என்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.
கேசவன் திரும்பவும், “சார்…தியானம் பண்றதில தீவிரமா இருக்காரு,….ஆனா அவர் முகத்தில சிரிப்பு வருது…பாரு.”என்று சொன்னவுடன், தாங்க முடியாமல் சிரித்துவிட்டேன். 
        “கேசவா..” என்று சத்தமும் போட ஆரம்பித்தேன்.
கேசவன் இருக்கிறவரை அலுவலகத்தில் தியானம் செய்ய முடியாது என்று தீர்மானித்தேன்.  அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கேயும் அதுமாதிரி தியானம் செய்ய முடியாது என்று தோன்றியது.
  
அந்தத் தியானத்தின் ஆரம்பத்தில் வீட்டில் மொட்டை மாடிக்குச் சென்று சில யோகா பயிற்சிகளைச் காலையில் செய்வேன்.  அதில் ஒன்று காக்காய் மாதிரி கத்துவது.  நான் அப்படிக் கத்தப் போய் பதிலுக்கு வேற இடத்தில் இன்னொரு காக்காய் குரல் கொடுக்க ஆரம்பித்தது.  அது என்ன சொல்ல வருகிறது?
இதுமாதிரி யோகா கற்றுக்கொள்ள நான் வருவதற்குக் காரணம்.  என் அலுவலகத்தில் ஒரு அதிகாரி அவர் கீழ் பணிபுரியும் சிம்பந்தியுடன் ஏதோ தகராறு.  அந்தப் பெண்மணி அவருடன் பேசவில்லை என்பதோடல்லாமல் அவரை விட்டு வேறு ஒரு அதிகாரியுடன் பணிபுரிய சென்றுவிட்டார்.   இதை அவரால் தாங்க முடியவில்லை.  இருவரும் திருமணம் ஆனவர்கள். மன அமைதிக்கு யோகா வகுப்புக்குப் போனவர்.  என்னைப் போன்ற பலரை யோகா கற்றுக்கொள்ள சொல்லி இழுத்துவிட்டார்.  அவர் சொல்வார் : ‘யோகா கற்றுக்கொண்ட பிறகு எனக்குக் கோபமே போய்விட்டது’ என்று. ஆனாலும் அந்தப் பெண்ணை அவரால் மறக்க முடியவில்லை.  நடித்துக்கொண்டிருந்தார்.
என்னதான் கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில்தான் அங்கு சென்றேன்.  ஆனால் மனம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை.   இதில் பைத்தியமாக பலர் ஈடுபடுவதாக அறிந்தேன்.  பணம் கொடுத்துதான் இதெல்லாம் கற்றுக்கொள்ள முடியும்.  அமைதியைக் கற்றுத் தர பெரிய கொள்ளை.
இந்த யோகா கற்றுக்கொண்டதால் எனக்கு தூக்கம் சரியில்லாமல் போய்விட்டது.  தூங்க வேண்டிய நேரத்தில் சரியாக தூக்கம் வருவதில்லை.  அப்படி தூங்காமல் இருப்பது அதிக ஆற்றல் என்று அவர்கள் சொன்னார்கள்.  
 என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  
ஆழ்நிலை தியானம் என்ற ஒன்றை என் நெருங்கிய நண்பர் கற்றுக்கொண்டார்.  அதை நடைமுறை படுத்தும்போது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது.  எப்போதும் அளவாகப் பேசும் அவர், அதிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.  அவர் எண்ணுவதையும், பேசுவதையும் நிறுத்த முடியவில்லை.  உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் அவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார்.  திரும்பியவுடன் அவர் சொன்னதை என்னால் இன்னும் மறக்க முடியாது. ‘வெறுமே கோயிலுக்குப் போய்க்கொண்டு சாதாரணமாக இருந்தால் போதும்.’
ஆரம்பநிலை தியானத்திலிருந்து அடுத்த நிலை தியானத்திற்கு கோயம்புத்தூர் பக்கத்திலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றேன். பெரிய சிவனை உருவாக்கியிருந்தார்கள்.   போய் வேண்டினால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று எழுதியிருந்தார்கள்.
நான் போவதை அறிந்து அப்பா வழக்கம்போல் தடுத்தார். எங்கே யோகா கற்றுக்கொள்ள போய் குடும்பத்தை விட்டு விட்டு துறவு பூண்டு விடுவேனோ, என்று அவருக்குப் பயம். பலர் அப்படிப் போயிருக்கிறார்கள்.
அங்கு போனபிறகுதான் தெரிந்தது மன அமைதிக்காக எத்தனைப் பேர்கள் இதுமாதிரி யோகா கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று.  யோகா போகிறவர்கள் எல்லோரும் அரைகுறையாக அதைத் தொடர்கிறார்கள்.  அவர்களுக்கு மனநிலை, உடல்நிலையில் பல தொந்தரவுகள் இருக்கும்.  அதைச் சரிசெய்ய யோகா போகிறார்கள்.  சரியாகப் போய்விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அங்கு ஒரே கூத்தாக இருந்தது.  தேவையில்லாதவற்றை யோசனை செய்ய வைக்கிறார்கள்.  அதனால் பலர் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன்.  அழுது கொண்டிருப்பவர்களை உடனடியாக சிரிக்கவும் வைக்கிறார்கள்.. எல்லோரையும் ஓட வைக்கிறார்கள். சினிமா பாட்டிற்கு ஏற்ப நடனமாட வைக்கிறார்கள். பின் விபரீதமான யோகா ஒன்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.  அது ஒரு மாதிரி மூச்சுப் பயிற்சி.  அதைச் செய்த பலர் மயக்க நிலையில் மாறி விடுவார்கள்.  அவர்களை சத்குருதான் எழுப்ப வேண்டும்.
  
‘குரு என்பவர் யார்?  இங்கு கூடியிருக்கும் கூட்டத்தில் குரு இருக்கிறார்,’ என்று சொல்லி, அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து குருவாக மாற்றி விடுவார்கள்.  அவர் கழுத்தில் மாலையைப் போட்டு சத்குருவிலிருந்துமு  எல்லோரும் நமஸ்காரம் செய்வார்கள்.  நான் அங்கிருந்து ஓடியே வந்துவிட்டேன்.
சிவராத்திரி அன்று டிவியில் பார்க்கும்போது அந்த இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை ரிலே பண்ணிக் கொண்டிருந்தார்கள்.  பிரபல பாடகர்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருசிலர் சாதாரணமாக அமராமல் சாமி வந்ததுபோல் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
                                            ஏன்?
      (அம்ருதா மே 2013 இதழில் பிரசுரமானது)

ஐராவதம் பக்கங்கள்

முடியாத யாத்திரை – காசியபன் – கவிதைகள் – விலை ரு.60 – பக்கம் 63 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33

ராஜாஜி ஒருமுறை குறிப்பிட்டார்.  ‘நாற்பது வயதுக்கு மேற்பட்ட வர்கள்தான் இலக்கியம் படைக்க வேண்டும்’ என்று.  இலக்கியத்தில் முதிர்ச்சி காணக்கிடைக்கும் என்பது அவர் எண்ணம்.  அப்படிப் பார்த்தால் கீட்ஸ், பைரன், ஷெல்லி எழுதியதெல்லாம் செல்லாது.
காசியபன் ராஜாஜியின் ஆவலை நிறைவேற்றியிருக்கிறார்.  தன்னுடைய 53வது வயதில்தான் எழுதத் துவங்கியுள்ளார்.  இவருடைய முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியைக் காண நேர்ந்தது.
நானோ?
நீ? நீ யாரடா?
தீப்பொறி யொன்று உள்ளில் எழ
தேடத் தொடங்கினேன்.
பிரபஞ்சத்தைப் பார்த்து பாடினேன்.
கபடங்கள் அசட்டுத்தனங்கள் 
அதிகாரக் கிரகங்களின் சுற்றல்கள்
சிக்கி நாம் அவதிப்படும் வியூகங்கள்
வழியாகத் தேடினேன்.
இதெல்லாம் ஒரு தப்பித்தல் என்று சொல்கிறது மனசு.
நான் இதை  திரேபி  என்பேன்.  கவிதை ஒரு திரேபி.  நாடகத்தில் நடிப்பது ஒரு திரேபி.  பாட்டுப் பாடுவது ஒரு திரேபி.  ஏன் விளையாட்டு கூட ஒரு திரேபிதான்.  
இப்போது 
ஒன்றும் நிகழ்வதில்லை
என்ற வரிகளுடன் கவிதை துவங்குகிறது.  எனக்கு அறுபத்தேழு வயதாகிறது.  நாற்பது ஆண்டுகள் அலுவலகம் போய்விட்டு பத்தாண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வீட்டோடு இருக்கிறேன்.  தென் சென்னையே முதியோர் இல்லமாகத் தோன்றுகிறது.  பையன்கள், பெண்கள் அமெரிக்கா போய்விட்டார்கள்.  எங்கு பார்த்தாலும் கிழவர்களும் கிழவிகளும்தான். 
முப்பது ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை ஓய்வூதியம் பெறுபவர்களின் சொர்க்கம் என்பார்கள்.  இன்று பெங்களூர் யுவர்களும், யுவதிகளும் கணிப்பொறி துறையில் பணியாற்றி இளமை ஊஞ்சலாடுகிறது.  சென்னைதான் அழுது வடிகிறது.  அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண்களின் தேசிய கீதமாக ‘முடியாத யாத்திரை’யைப் படைத்துள்ளார் காசியபன்.
என்னை ஒரு முப்பது வயது பெண் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்துக் கேட்டாள்.  üமாமா ஓய்வுப் பெற்ற உங்களுக்குப் பொழுது எப்படிப் போகிறது? மோட்டுவளை தியானமா?
இல்லை என்கிறார் காசியபன்.
விடியும் முன்னே பால்காரன் வந்துவிட்டான்
காப்பிக்கடை முடிந்தாயிற்று
முற்றம் தெளித்து அவள் கோலமிட்டாள்
நித்தியபடி பணிகளை பட்டியலிடுகிறார்.
காலத்தின் போக்கை
கடிகாரம் கணக்கிடுகிறது
தவிர்க்க முடியாத
குளியல், உணவு, உறக்கம்.
எல்லாம் யோசிக்கையில் உண்ணுவதும் உறங்குவதுமாக முடியும் என்ற பழைய வரிகள் நினைவுக்கு வருகின்றன. 
மகள்தான் கடிதம் எழுதுகிறாள்.  எப்போதோ ஒரு முறை.  மகனோ எழுதும் வழக்கமே இல்லை. யமனின் ஓலைதான் வரவேண்டும் என்பேன்.  காசியபன் வரிகள்.  
                     இந்தக் கவிதையை தாமஸ் மன் போன்ற ஜெர்மன் நாவலாசிரியர்கள் படித்திருந்தால் நானூறு பக்க நாவலாக்கியிருப்பார்கள்.  காசியபன் 129 வரிகளில் முடித்திருக்கிறார்.  அற்புதமான படைப்பு. 
இந்த நூலை வெளியிட்ட விருட்சம் பதிப்பகத்திற்கு நமது கோடானுகோடி நன்றி.  தமிழர்கள் பாக்கியசாலிகள்.  ஆனால் அந்தப் பாக்கியத்தை உணருகிற பக்குவம்தான் அவர்களிடத்தில் இல்லை.  அறுபது வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்தக் கவிதையைப் படிக்க வேண்டும்.  சங்கப் பாடலுக்கு நிகரான இருப்பத்தோரம் நூற்றாண்டுக்கான தேசிய கீதம் இது.
பிக்ஷôம் தேஹி யென்று உபாதான பிராம்மணன்
கந்தஷஷ்டிக்கு பிரிக்க வரும் கூட்டம்
ஆனந்தவிகடன் கேட்டு வரும் எதிர்வீட்டு மாமி
இந்த வரிகள் ஆங்கிலம் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் கொண்டு வர முடியாது.  கவிதை அச்சு அசலான தமிழ்க்கவிதை
.
எங்கள் மூக்குக் கண்ணாடிகள் வழி
ஒருவரை யொருவர் நோக்கி 
இரு நாற்காலிகளில் வீற்றிருக்கின்றோம்.
எதிர் எதிர் நாற்காலிகளில்
பழைய நினைவுகள் உறுத்த
நாங்கள் இருக்கின்றோம்
பின் பேசுவதற்கு ஒன்றுமில்லை
ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம்
இரு நாற்காலிகள் சுமக்க.
நோக்கமற்ற யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது
எதிர்பார்க்க இனி ஒன்றுமில்லை.
நாற்காலிகளும் நாங்களும் 
ஒன்றையொன்று பார்த்திருக்கிறோம்.
SAMUEL BECKETT  ன் WAITING FOR GODOT
நினைவுக்கு வருகிறது.  

ஐராவதம் பக்கங்கள்

இலக்கியத்தின் முதுமை


எனக்கு இப்போது அறுபதைந்து வயதாகிறது.  வங்கியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.  தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் என்னைவிட முதியவர்களைத்தான் எதிர்கொள்கிறேன்.  வாலிபர்களும், யுவதிகளும் சைக்கிள், ஸ்கூட்டர் மோட்டார்கார் முதலிய வாகனங்களில் பயணிக்கிறார்களோ என்னவோ?
சமீபத்தில் எழுபத்தோரு வயது நிரம்பிய ஒரு நண்பரை தற்செயலாக சந்தித்தேன்.  அந்தக் காலத்தில் தீபம், கணையாழி முதலிய இலக்கிய பத்திரிகைகளின் வாசகர்.  காஞ்சிபுரம் நகரத்துக்காரர்.  புனேயில் ராணுவ கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்று கணிசமான ஓய்வூதியம் பெறுபவர்.  மாம்பலம் ஒட்டியுள்ள அசோக்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சொந்தக்காரர்.  மனைவியுடன் வசித்து வருகிறார். 
         இவருக்கு இரு மகன்கள்.  இருவரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று விட்டார்கள்.  இந்தியாவிற்கு திரும்பி வரும் உத்தேசமில்லை.  நண்பர் அமெரிக்கா போய் முறையே நியூஜெர்ஸி நகரில், டல்லாஸ் நகரில் ஆறு ஆறு மாதங்கள் கழித்துவிட்டு இந்தியா திரும்பி விட்டார்கள்.  நியுஜெர்ஸியில் வசிக்கும் மூத்த மகன், ‘அப்பா நீ இங்கேயே பிராணனைவிட்டால் நான் மின் யந்திரத்தில் உன்னைத் தகனம் செய்கிறேன்,’ என்று கூறியிருக்கிறான்.  
        ஆனால் மனிதருக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை.  இந்தியா திரும்பி விட்டார். என்னிடத்தில் சொன்னார் : ‘தம்பி, எனக்கு மரணம் நெருங்கி விட்டது.  நான் கண்ணம்மா பேட்டையில், (தியாகராயநகரின் சுடுகாட்டுப் பகுதி) எரிக்கப்படவே விரும்புகிறேன்,’ என்றார்.  
        இது விரக்தியனாலோ வெறுப்பினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் இல்லை.  நிறை வாழ்வு வாழ்ந்துவிட்ட திருப்தியில் மரணத்தை ஏற்றுக்கொள்கிற விதமாக கூறப்பட்ட வார்த்தைகள்.  
        அவருக்கு வாழ்க்கையின் மீதான பற்று இன்னும் நீங்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் எனக்கு எதிரிலேயே ஒரு செயல் புரிந்தார்.  அந்த வார குமுதம் பத்திரிகையை கடையில் வாங்கி பையில் தயாராக வைத்திருந்த தபால் கார்டில் அதில் வெளியாகியிருந்த ஒரு சமாசாரத்தின் எதிர் வினையாக நாலு வரிகள் எழுதி தபால் பெட்டியில் போட்டார்.  குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் தன் பெயர் பிரசுரமாவதைப் பார்க்க குழந்தைத் தனமான ஆசை.

நவீன தோட்டிகள்

விஜய நந்தன பெரேரா
 
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
 
‘இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்’
கூரிய பார்வைகளும்
குற்றச்சாட்டுகளும்
குத்தும் ஊசிமுனைகளும்
முடிவற்றவை
 
தலைக்கு மேலே சூரியனும்
நோயுற்ற தீக் காற்றும்
கொதிக்கச் செய்கிறது குருதியை.
பரம்பரை வழித் திண்ணையும்
செந்தணலாய்ச் சுடுகிறது.
 
காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன
எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள்
‘இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்’
என்கின்றனர்.
 
 

திரும்பவும்…


அழகியசிங்கர்

ஏதோ ஒரு சுழற்சி
நடந்துகொண்டே இருக்கிறது

நாம்
ஆரம்பித்த இடத்தில்
வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது

நமக்குப் பதில்
நம் புத்திரர்கள் தொடர்கிறார்கள்

அவர்களும்
நம்மைப் போல் வியர்வைச் சிந்துகிறார்கள்
சம்பாதிக்க எங்கோ
ஓட்டமாக ஓடுகிறாரகள்

ஒரே குரலில் சத்தம் போடுகிறார்கள்
மகிழ்ச்சியை நம்மைப்போல் அனுபவிக்கிறார்கள்
நமக்கு ஏற்பட்ட துன்பமும் துயரமும்
அவர்களிடமும் தொடர்கின்றன

எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எஞ்சிய வருடங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்

நாம் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறோம்

சுழற்சி
திரும்பவும்….                           (19.04.2013)

புதையல்

குமரி எஸ். நீலகண்டன்

சிறு வயதில் அங்கே
புதையல் கிடைத்தது.
இங்கே புதையல்
இருக்கும் என்றெல்லாம்
அன்றைய பெரியவர்கள்
கதைத்த போதெல்லாம்
நான் நம்பவே இல்லை…

சாலையோர
சாக்கடைகளை
செப்பனிடுவதற்கு
கோடையே
சரியானத் தருணமென
முன்பு போட்ட
அதன் காங்கிரீட்டுகளை
உடைத்தார்கள்.

இயந்திர
துளைப்பான்களால்
தூள் கிளப்பினர்
காற்று வெளியெங்கும்…

சிறுமலை போல்
குவிந்தன
தோண்டிய மண்களோடு
உடைந்த
காங்கிரீட் துண்டுகளும்

பாதசாரிகள் வழுக்கியும்
சறுக்கியும்
மலை ஏறி இறங்கி
மயானத்திற்கு
பக்கம் சென்று வந்தனர்…

சாக்கடையை மூடுவதற்கு
கனம் கூடிய
காங்கிரீட் பாளங்கள்
வந்து இறங்கின…

திறந்த சாக்கடைக்குள்
தோண்டிய மண்கள்
விழுந்தன….
அந்தப் புதையலை
காங்கிரீட் பாளங்களால்
மூடினார்கள்…

அகத்திலிருப்பவை
தெரியாத அளவிற்கு
அழகாகவே மூடினார்கள்
ஒப்பந்தம் போல்.

அடுத்த ஒப்பந்தத்திற்கான
புதையல் உள்ளே
மூடப் பட்டிருக்கிறது…
புதையல் புதையல்
என்கிறார்களே
அதை இப்போது
நான் நம்புகிறேன்…

ஊழல் ஊழல்
என்கிறார்களே
ஒப்பந்தம் ஒப்பந்தம்
என்கிறார்களே
இரண்டிற்கும் என்ன
வித்தியாசம்
அதுதான் புரிய
மாட்டேங்கிறது…

வெயில் கவிதை

ரவிஉதயன்

முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்…
ஒரே அனல்…
ஒரே சூடு…
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.

 ஓர் ஒழுங்கற்ற தெருவில் இருக்கிறேன்

அழகியசிங்கர்

 நான் குடியிருப்பது
 ஓர் ஒழுங்கற்ற தெரு
 இங்கே கட்டடங்கள் நீளம் நீளமாக
 வளர்ந்துகொண்டே வருகின்றன..
 குடியிருப்புகள் நாளுக்குநாள்
 பெருகிக்கொண்டே போகின்றன

 கட்டடங்களில் வாகனங்களை
 நிறுத்த முடியாதவர்கள்
 தெருவில்
 நிறுத்துகிறார்கள்
 அத்தனை வாகனங்களா என்று பயப்படும் அளவிற்கு
 வாகனங்களை இடிக்காமல்
 தெருவில் நடப்போர் அவதிப் படுகிறார்கள்

 மாலை நேரங்களில்
 எல்லோரும் தெருவில் நின்று
 பேசிக்கொண்டிருக்கிறார்கள்
 சிலர்
 விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
 சத்தம் போட்டபடியே
 சைக்கிள் ஓட்டிச்செல்லும்
 பொடியன்களும் இருக்கிறார்கள்.

 வளர்ப்பு நாய்களை
 தெருவில் உலாவ விடுகிறார்கள்
 தெருவை பாத்ரூமாக
 அவை பயன்படுத்துகின்றன

 தெருமுனையில்
 வாலை சுழற்றியபடி
 மாடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள்

 ஒழுங்கற்ற தெருவில்
 நாங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறோம். 

 (12.04.2013)