உயிர்ப்பித்தல்..

அமைதிச்சாரல்
விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும்
கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன்
குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக்
கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு
வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம்
செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும்
மல்லிகைத்தோட்டமும்.
சிந்திச்சிதறிக்கிடக்கும்
சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த
அணிற்பிள்ளைகளுடன்
பகிர்ந்துண்ட
தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது
அடிநாக்கில்.
“செவ்வகப்பெட்டியினுள்
அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக
இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக்
கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும்
ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும்
மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும்,
க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன்
உயிர்த்தெழுகிறான்

மனதுள்
உறங்கும் விவசாயி.

“மார்க் ஸுக்கர்பெர்க் நகர்”

பா சிவபாதசுந்தரம்
பிரகாஷை ஒரு குறும்பட பயிற்சி பட்டறையில்தான் அவன் சந்தித்தான். சிறுசேரியில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருந்தான். இப்ப அவனை பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அம்பத்தூரிலிருந்து நேர் பஸ் கிடையாது. மத்திய கைலாஷ் வந்து வேறு பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
ராஜீவ் காந்தி சாலை இன்றைக்கு காலைலதான் பேக் பிரித்து எடுக்கப்பட்டது போல் ஒரு மெருகோடு இருந்தது. பார்க்கிற பக்கமெல்லாம், ஜீன்ஸ், லெக்கின் மற்றும் கவ்வி பிடித்திருக்கும் மேலாடைகளுடன் இளம்பெண்கள். அனேகமாக அனைவரது கழுத்திலும் கலர் கலரான பட்டைகளுடன் அடையாள அட்டை. தாலி மாதிரி.
இருபது வருடங்களுக்கு முன் தரமணியில் வேலை செய்கையில் இதே ரோடில் தினமும் பயணித்திருக்கிறான். அப்போதெல்லாம் கசங்கிய காக்கி உடைகளுடன் பாலிடெக்னிக் மாணவர்களும், மற்ற தொழிற்சாலை ஆட்களும், மிக சாதாரண அல்லது பழைய உடைகளுடன் வி.ஹெச்.ஸ் நோயாளிகளும், அவர்களின் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களும் நடமாடுவதை பார்த்திருக்கிறான். ஹும், எல்லாம் மாறிப்போச்சு. சாலையின்
 அழகை சமதளமாக இடப்பட்ட தார் மட்டுமல்ல, அதில் நடமாடும் மனிதர்களின் நாகரிகமும், அழகும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது என நினைத்துக்கொண்டான்.
சிறுசேரிக்கு பஸ் ஏதும் இருக்கா என்று யாரையாவது விசாரிக்கலாம் என நினைத்தவன், தன்னை கடந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இரண்டு ஜீன்ஸ் ஏறுவதைப் பார்த்தவுடன், மனதை மாற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோவை நோக்கி ஓடினான். உள்ளே ஏற்கனவே ஒரு ஐடி இளைஞனும் ஓரு சுடிதாரும் இருந்தனர். ஆர்வமாக ஏறப் போனவனை தடுத்தது டிரைவரின் குரல், ‘முன்னாடி வா சார்’. சிலரை பார்த்ததும் பிடிக்காமல் போகும்,
 சிலருடன் பேசியவுடன் பிடிக்காது. அவனுக்கு டிரைவரை பார்க்காமலே பிடிக்காமல் போனது. கறுவிக் கொண்டே டிரைவவர் பக்கத்தில் அமர்ந்தான்.
இருக்கையின் பின்புறம் ஏதோ இடிப்பது போன்ற பாவனையுடன் நாசூக்காக பின் திரும்பி உட்கார்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான். அனைவர் காதுகளிலும் இயர்ஃபோன். உண்மையாகவே அவர்கள் இசை தான் கேட்கிறார்களா என அவனுக்கு சந்தேகம். ஏன்னெனறால் எல்லார் முகத்திலும் பக்கத்திலுள்ளவர்கள் ஏதேனும் பேசிவிடுவார்களோ என்ற பயம் மட்டுமே தெரிவதாக நினைத்துக் கொண்டான். முன்பெல்லாம்
 எலக்ட்ரிக் ட்ரெயினில் ஹிண்டு பேப்பரில் புதைத்துக் கொண்டவர்களுடன் பயணித்திருக்கிறான். முன்னர் புத்தகம் அல்லது பேப்பர், இப்போது செல்ஃபோன் மனிதர்களுக்கு திரையாகிவிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டான்.
ஷேர் ஆட்டோ மாறி மாறி வந்து, சிறுசேரியில் இறங்கி பிரகாஷுக்கு ஃபோன் செய்தான்.
‘பாஸ், வந்துடிங்களா? ஒரு மீட்டிங்க்ல மாட்டிக்கிட்டேன். கொஞ்ச நேரத்தல வந்துர்ரேன்’.
எவ்வளவு நேரம் ஆகும் பிரகாஷ்?
‘ஒன் அவர் தான் பாஸ்’
என்னது, ஒன் அவரா? இவன் கேட்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சே, அம்பத்தூரிலிருந்து இங்கு வரவே ரெண்டு மணிநேரம் ஆயிருச்சு. இன்னும் ஒரு மணி நேரம் என்ற அலுப்பு வந்தது.
சாலையை பார்த்தான். பள பளப்பான கட்டிடங்கள் விரைந்து செல்லும் வெள்ளை நிற ஏசி பஸ்களும் சொகுசு கார்களும். வாகன தடுப்பு போட்டிருந்த ஒரு ஐடி கட்டிடத்தினுள் இளைஞர்கள் சிலர் எதையோ தொலைத்த முகபாவத்துடன் வெளிப்பட்டனர். நவநாகரிகமான இளம் பெண்கள் சோம்பேறித்தனமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர்.  ஐடி கமபெனிகளில் அழகான பெண்களத்தான் வேலைக்கு எடுப்பார்களா அல்லது
 வேலையில் சேர்ந்தபின் அழகாகி விடுகிறார்களா என்ற சந்தேகம் அவனுக்கு எப்பவுமே உண்டு.
வேடிக்கை பார்த்தபடியே சிறிது தூரம் நடந்தான்.லேசாக பசிப்பது போலிருந்தது. ஒரு டீ குடிக்கலாம் என்ற யோசனை வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை டீக்கடை ஏதும் இல்லை. சிறிது தொலைவில் ஒரு மரத்தடியில் நாலு சைக்கிள் சக்கரங்களுக்கு  மேல் ஒரு டப்பாவை பொறுத்தியது போலிருந்த தள்ளு வண்டி கடை இருந்து. அருகில் செனறான். மறுபுறமிருந்து பின்னப்படாத தலையுடன், சிகரெட் புகையை
 ஊதியவாறு வெளிப்பட்டாள் ஒரு இளம்பெண். கையிலிருந்த பேபப்ர் டம்பளரிலிருந்த கடைசி மடக்கு டீயை குடித்து விட்டு, அருகிலிருந்த பெரிய வாளிக்குள் டம்பளரை கசக்கி எறிந்தாள். முடிந்த சிகரெட்டை காலால் நசுக்கி விட்டு, அருகிலிருந்த கட்டிடத்தை நோக்கி அவசரமாக நடந்தாள்.
‘ஒரு டீ, சக்கரை கொஞ்சம் கம்மியா’ கடைகாரரிடம் சொல்லி விட்டு சாலையை நோக்கி பார்வையை வீசினான்.
சிறிது தூரத்தில் சில டெம்போ டிராவலர் வண்டிகள் நின்றிருந்தன. முதலாம் வண்டி அருகில் மெலிதான கூட்டம். வெள்ளை சீருடை அணிந்திருக்கும் டிரைவர்கள் சிலர் வண்டியின் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவரை சுற்றி நின்றிருந்தனர். டீயை முடித்து காசு கொடுத்து விட்டு அவர்களை நோக்கி நடக்கலானான்.
உட்கார்ந்திருந்தவர் டி.ராஜேந்தர் மாதிரி முடியை கையால் ஒதுக்கியபடி பேசிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய உலகத்திலுள்ள எல்லா தலைப்புகளிலும் பேசிக் கொண்டிருந்தார். அவரின் சுவாரஸ்யமான பேச்சில் லயித்திருந்த அவனின் செல்ஃபோன் அடித்தது.
‘பாஸ், எங்க இருக்கிங்க?’
சொன்னான்.
சிறிது நேரத்தில் யமஹா வண்டியில், முதுகில் தொங்கும் மூட்டையுடன் பிரகாஷ் வந்தான்.
‘ஏறுங்க பாஸ் போலாம்’ இவன் பின்னால் அமர வண்டிஒரு உறுமலுடன் கிளம்பியது.
‘பிரகாஷ்  நீங்க ஆஃபிஸ் பஸ்ல வர்ரதில்லையா? எப்படி இவ்ளோ தூரம் டூ வீலர்ல வர்ரிங்க?
இவ்ளோ தூரமா? இங்கதான், பக்கத்துல ஃப்ரண்ட்ஸ் நாலு பேரோட ஒரு வீடெடுத்து தங்கிருக்கோம்.
‘இப்ப வீட்டுக்கா பிரகாஷ்?’
இல்ல பாஸ். லைட்டா எதனாச்சும் ஃடிபன் சாப்பிடுவோம் முதல்ல. அப்புறம் வீட்டுக்குப் போய்ட்டு நாம ஷார்ட் ஃபிலிம் பத்தி பேசலாம்.
வண்டி ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் நின்றது.
‘கோரமணடல் பிளாஸா’ எழுத்துக்கூட்டி படித்தான்.
‘679 பொறியியல் கல்லூரி’ என எழுதியிருந்த மஞ்சள் நிற பஸ் வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தது.
பெயர் வியப்பளிக்கவே, பிரகாஷிடம் கேட்டான்.
என்ன பண்றது, எல்லா பேர்லயும் இன்ஜினியரிங் காலஜ் இருக்கு. பேர் வச்சு கட்டுபடி ஆகலையாம். அதுனால இனிமே நம்பர்தானாம்.
சரி, வாங்க பாஸ் போகலாம், பிரகாஷ் விறு விறு வென முன் நடக்க பலஹீனமாக பின் தொடர்ந்தான் அவன்.
‘நூடுல்ஸ் கிங்’ வண்ண எழுத்துக்களில் மின்ன உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.  இரண்டொருவரைத் தவிர உள்ளே யாருமில்லை. ஒரு கணம் தயங்கிய இவன் பேண்டின் பின் பாக்கெட்டில் பர்ஸை தடவியவாறு பின்தொடர்ந்தான்.
பிரகாஷ் கவுண்டர் அருகே செல்ல
இவன் ஒரு சேரில் அமர்ந்தான்.
முன்னால் மூலையில் உட்கார்ந்திருந்த பெண் முடியை வைத்து எழுதிக் கொண்டிருந்தாள்.
‘பாஸ் ஆர்டர் பண்ணிட்டேன். அது வர்ரதுக்குள்ள ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்ரேன்’ சொல்லி விட்டு ஃபோனை காதில் வைத்தவாறு ‘சொல்லுப்பா’ என்றவாறு கடைக்கு வெளியே சென்றான்.
மீண்டும் மூலையில் இருந்த சுடிதார் அணிந்த பெண்ணை பார்த்தான். மெல்லிய கறுப்பு நிறம். ‘பம்’ என அடங்க மறுக்கும் தலைமுடி.  சேரில் உட்கார்ந்திருந்த அவள், உடலை முன் நீட்டி டேபிளில் முழங்கையை ஊன்றி, பக்கவாட்டாக திரும்பி உட்கார்ந்து. . . இல்லை ஏறக்குறைய படுத்திருந்தாள்.  முன்னால் விழுந்திருந்த முடியை வலது கையில் பிடித்திருந்தது, எழுதுவது போன்றிருந்தது. எழுந்து
 நின்றால் முடியின் நீளம் இடுப்பைத் தாண்டும் என நினைத்துக் கொண்டான். நீளமான தலை முடியுள்ள பெண்களுக்கு உடலெங்கும் முரட்டு முடி இருக்கும் என்பது அவன் எண்ணம்.
அவள் கண்களை மூடியிருந்தாள். தூங்குவது போலிருந்தது. கூர்ந்து கவனித்தான். மூடிய இமைகளினுள் விழி வேகமாய் உருண்டு கொண்டிருந்தது. ஓ. . . கனவு காணுகிறாள் போலும்.
அவனுக்கு ஒரு பழக்கம், தன் கனவின் மூலம், பிறர் கனவிற்குள் நுழைந்து பார்ப்பது. அடுத்தவர்களின் அந்தரங்கம், அநேகமாக எல்லாருக்குமே சுவாரஸ்யமானதுதான். அவனுக்கு அது கூடுதல் சுவாரஸ்யம். சினிமா தியேட்டரில் சிறுநீர் கழிக்கும் போதுகூட பக்கத்தில் எட்டி பார்ப்பான்.
அவள் கனவிற்குள் நுழைந்தான். ஆடிக் கொண்டிருந்த ரஜினியை புறந்தள்ளி விட்டு, ‘அவள் வருவாளா’ என பாடிக் கொண்டிருக்கும் அஜித்தை ரசித்து மெய் மறந்திருந்தாள்.
புன்னகையுடன் அடுத்த டேபிளில் உட்கார்ந்திருந்தவனை பார்த்தான். பாதி அளவே இருந்த விரல்களுடன் அவன் தன் செல் ஃபோனில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். முடித்தவுடன் இவனைப் பார்த்து ‘வெற்றி’ என்பது போல் கட்டை விரலை உயர்த்தினான். கட்டை விரல் பாதி அளவு தான் இருந்தது. இவன் புரியாமல் பார்க்க, இன்றைக்கு போட்ட ஐம்பத்து மூன்றாவது ஸ்டேடஸ் என்றான். ‘ஆதி முதல் அடி முடி
 வரைக்கும் எல்லாம் நம்மளுக்கு தெரியும்லா’ என்றான் தனக்குள்.
‘என்ன பாஸ் டயர்டா’ என்ற குரல் கேட்டு விழித்தான். எதிரே இரண்டு தட்டுகளும் இரு கோப்பைகளில் நூடுல்ஸும் இருந்தன. கையிலிருந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு உட்கார்ந்தான் பிரகாஷ்.
இவன் ஆவலுடன் புத்தகத்தை பிரித்துப் பார்த்தான்.
‘எப்படி இருந்துச்சு சாந்தி?’
‘இந்த நாலு வருஷத்துல இன்னைக்குதான் சூப்பர். சரி சரி சீக்கிரம் கிளம்பு, ஹஸ்பண்ட் வந்திருவார்’
புரட்டி வேறொரு பக்கத்தைப் பார்த்தான்.
‘அவன் வாஷ் பேஸினில் வெற்றிலை எச்சில் போல துப்பினான். அவள் அதை பார்த்து சிரிக்க, ‘நாயே, பீரியடஸ்னா சொல்லக்கூடாதா? என்றான்’
என்ன இது பிரகாஷ்?
குறுங்கதைகள்.
த்தூ… தற்கொலைதான் பண்ணிக்கணும் படிச்சிட்டு. கருமம்.
சரி விடுங்க பாஸ். சாப்பிடுங்க முதல்ல.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அப்பபோதுதான் மிக நெருக்கமாக நடந்து வந்த ஒரு இளம் பெண்ணும், ஒரு முதிர் இளைஞனும் வலது பக்க சேர்களில் அமர்ந்தனர். புடவையில் அந்தப் பெண் மிக அழகாகவே இருந்தாள், ஒரு சுமாரான நடிகை மாதிரி. கழுத்தில் பட்டையும், அடையாள அட்டையும். அவளை அவன் இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறான். அவசரமாக ஞாபக அடுக்குகளில் துழாவினான். மீண்டும் ஒரு முறை பார்த்தான். அமலாபால் மாதிரி
 இருந்தாள்.
‘என்னா பாஸ் பார்க்குறிங்க, அது அமலாபாலே தான்’
என்னது அமலா பாலா? இங்க ஐடில என்ன வேலை? ஆச்சரியம் கலந்த மென்குரலில் கேட்டான்.
அதையேன் கேக்கிறிங்க. மார்க்கெட் காலி. படம் ஒண்ணும் இல்ல. இங்க டி.சி.எஸ் ல தான் ஹெ.ஆர் ல இருக்காங்க.
கூட இருக்குறது யாரு?
வினய். காக்னிஸண்ட்ல இருக்காரு. நல்ல கவிதை, கதையெல்லாம் எழுதுவாரு. அமலாபாலை பத்தி ஃபேஸ் புக்குல எழுதி எழுதியே அவங்கள கமாத்திட்டார்னா பாத்துக்குங்களேன். சரியான மச்சம் பாஸ்.
கல்யாணம் ஆயிருச்சா?
அது தெரியல பாஸ்.
பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷின் செல் அழைத்தது. பேசியவனின் முகம் அதிர்ச்சியை காட்டியது.
என்ன ஆச்சு பிரகாஷ்?
ஒரு பேட் ந்யூஸ். எங்க மாட்யூல் மேனேஜர் சூசைட் பண்ணிக்கட்டார்.
ஐய்யய்யோ. ஸாரி பிரகாஷ். இவன் மனக்கண்ணில் ஒரு நாற்பத்தைந்து, ஐம்பது வயதுள்ள ஒரு ஆண் தூக்கில் தொங்கும் காட்சி வந்தது. மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நல்ல ஜாலியான மனுஷன். ரெண்டு பொம்பள பிள்ளைகள். போன மாசந்தான் இங்க அபார்ட்மெண்ட்ல எட்டாவது மாடில பெரிய வீடு வாங்கினார்.  பாவம் அவர் வைஃப் வேலைக்கு கூட போகலை. இனி அந்த குடும்பம் என்ன ஆகுமோ.
ச்சே.பாவம், கம்பெனி எதாவது உதவி செய்யுமா? என்றான் இவன்.
நீங்க வேற. இன்னைக்கு காலைலதான் அவரை வேலை விட்டு தூக்குனாங்க. வீட்டு பால்கனில இருந்து குதிச்சிட்டாராம். ஹெச். ஆர். ல கொஞ்சம் அனுசரிச்சு போயிருக்கலாம். நேர்மையா இருப்பேன், உண்மை இருப்பேன்னு பிடிவாதமா இருந்தார். இருபத்தெட்டே வயசு தான். எல்லாம் முடிஞ்சி போச்சு.
என்னது, இருபத்தெட்டு வயசா?
ம்.
ஏன் பிரகாஷ், உங்களுக்கு யூனியன், லேபர் போர்டெல்லாம் கிடையாதா?
பாஸ் நானே சோகமா இருக்கேன். ஜோக் அடிக்காதிங்க. எங்களுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், ‘டார்கெட்’
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். எதிரே ஆறிய நூடுல்ஸ் பாதி இருந்தது.
பிரகாஷ் எழுந்து கொண்டான். ‘ஸாரி பாஸ். நான் கிளம்பறேன், பில் பே பண்ணிட்டேன். இன்னோரு நாள் பார்க்கலாம்.
பிரகாஷ் சென்ற சில நிமிடங்களில் இவன் எழுந்து கொண்டான்.
கிளம்ப யத்தனித்தபடி அமலாபாலை ஒரு முறை பார்த்தான். அமலாபால் மெனு கார்டை கையில் பிடித்தபடி யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்திருந்த விநய் , ‘இன்று அனுஷ்கா மாதிரி ஒரு பெண்ணை பார்த்தேன்’ என ஃபேஸ் புக்கில் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
மால் ஐ விட்டு இவன் வெளியே வந்தான். இறுக்கி உடை அணிந்து, கழுத்தில் பட்டை தொங்க, பதின்ம வயதை தற்போதுதான் கடந்த, வருங்கால ஐடி அடிமைகளை சுமந்தபடி, மஞ்சள் நிற இஞ்சினியரிங் கல்லூரி பஸ் இவனை கடந்து விரைந்து கொண்டிருந்தது.
அடையாறுக்கு எந்த பஸ் போகும் என விசாரிக்க நடந்தான்.

பாலிதீனில் பணப்பை

 மாயன் சத்யா
பாலிதீன் பையில்
பத்திரப் படுத்தப்பட்டது
கொஞ்சம் துவண்டு போன
அந்த பணப்பை (மணிபர்ஸ்)
பின்பையில் வைத்தால்
காணாமல் போகலாம்
என்றெண்ணி
நெஞ்சருகே அணைத்து
வைக்கப்பட்டது பணப்பை
வருடத்தின் ஓரிரு மாதத்தில்
ஒரு சில நாளில்
பெய்யும் மழைக்காக
வருடமெல்லாம் பாலிதீனில்
பதுங்குகிறதா பணப்பை
இல்லை.. இல்லவே இல்லை
வருடமெல்லாம்
பொய்க்காமல் பெய்யும்
மழை ஒன்றிடமிருந்து
பாதுகாக்கப் படுகிறது பணப்பை
மண் சூடு தீர்க்கும்
வான் மழை பொய்க்கலாம்
உழைப்பாளியின் உடல் சூடு
நீக்கி பெருகும் மழை
வற்றாமல்
வருடமெல்லாம் வழிந்தோடும்
வியர்வை
உழைக்காத காசு
உடம்பில் ஒட்டாது
இங்கே உழைத்த காசு
ஒட்டிவிடக்கூடாது என்பதற்க்காக
வியர்வையிடமிருந்து
ஒழித்து வைக்கப் படுகிறது
பாலிதீனில் பணப்பை

பஞ்சு மனசுகள் (சிறுகதை) –


செல்வராஜ் ஜெகதீசன்


கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு,
தூர எறிந்தான் பாலு.
பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால்,
இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான்.
இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
வேலை மட்டும் போயிருக்காவிட்டால் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவைகள்  எல்லாம் 
இல்லாமல் போய் இருக்கும்.
வேலையிலேயே
இருந்திருந்தால் கலாவும் கூடவே இருந்திருப்பாள். அப்படியும் சொல்ல
முடியாது. வேலை போனதை எப்படி கலா போனதோடு ஒப்பிட முடியும்?
இத்தனை வருடங்கள் கழித்து,
எட்டு ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டு ஒரு அம்மாவால் இன்னொருவனோடு எப்படிப் போக முடிந்தது?
“வா
சார் வா அஞ்சு வச்சா பத்து, பத்து வச்சா இருபது”
என்ற குரல் வந்த திசை நோக்கி அவன் கால்கள் திரும்பின.
ஸ்டாப் குவாட்டர்ஸ் ஒட்டி இருந்த மதிற்சுவர் ஓரம் மாணிக்கம் தன் கடையை விரித்து எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முன் பெரிய அட்டைத்தாள் ஒன்று விரிக்கப்பட்டு,
ஆறு சினிமா நடிகர் நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விளையாட விருப்பம் உள்ளவர்கள்,
தான் விரும்பும்
படத்தின் மீது காசோ பணமோ வைக்கலாம். ஏறக்குறைய எல்லாப் படத்தின் மீதும்
காசோ பணமோ வைக்கப்படும் வரை மாணிக்கம் திரும்பத் திரும்ப கூப்பிட்டுக்
கொண்டிருப்பான்.
அத்தனை படத்தின் மீதும் காசோ பணமோ வைக்கப்பட்டபின், “எடுக்கலாமா
எடுக்கலாமா எடுக்கப்போறேன்” என்று ஒன்றிருமுறை கூவுவான். 
“கூட வைக்கணும்னா இப்பவே வச்சுக்கோ,
அப்பால படம் வரச் சொல்லோ பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல சொல்டேன்” என்று ஓரிருமுறை சொல்லிக் கொண்டிருப்பான்.
காசை வைத்துவிட்டு காத்திருப்பவர்கள் 
கொஞ்ச கொஞ்சமாக “சரி எடுப்பா” என்று நச்சரிக்கத் தொடங்கும் போதும் எடுக்க மாட்டான்.
“கொஞ்சம் பொறு சார்,
இதோ எடுத்துடலாம்”
என்று கொஞ்ச நேரம் கடத்துவான்.
முன்பென்றால்,
பாலு இந்நேரம் யாரோ ஒருவருக்காக சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருப்பான்.
“தலைவர் மேல வை சார்,
வாரி வாரி குடுத்த கை சார்” என்பான்.
“என் கைல கண்டி காசு இருந்தா,
இந்நேரம் அப்படியே தலைவர் படத்துல வச்சிருப்பேன் சார்” என்பான்.
இதெல்லாம் போன வாரம் வரை. இன்றைக்கு?
எதுவும் சொல்லாமல்,
எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கம் கூட பாலுவைப் பார்த்து “இன்னா அண்ணாத்தே ஒரு மாரியா கீற” என்றான்.
பதில் ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றுப் பார்வையை வீசினான் பாலு.
“சரி அண்ணாத்தைக்கு ஏதோ மூடு அவுட்டு போல” என்று மாணிக்கம் அட்டைத்தாளின் வலப்புறமாக வைக்கப்பட்டிருந்த கவர்களை கையில் எடுத்தான்.
சீட்டுக்கட்டுக்களைக்   கலைத்துப் போடுவது போல் அந்தக் கவர்களை மாற்றி மாற்றி வைத்தான். 
ஒருவாறாக ஒரு கவரை எடுத்தவன், அதை இரண்டு விரல்களுக்கு
மத்தியில் வைத்தபடி “யார் வரப் போறா’னு பார்க்கலாமா,
தானைத் தலைவனா,
அபிநய சரஸ்வதியா,
நாட்டியப் பேரொளியா” என்றவாறு அந்த கவரை ரெண்டு உதறு உதறினான்.
அவன் சொன்னது எல்லாம் அங்கே ஒட்டப்பட்டிருந்த படங்களில் இருந்த எம். ஜி. யார்,
சரோஜாதேவி,
பத்மினி ஆகியோரை.
கவரை ஒருமுறை ஊதி விட்டு,
பிரித்து,
உள்ளிருந்த படங்களை வெளியே எடுத்தான். மூன்று படங்கள். ஒரு சரோஜாதேவியும் இரண்டு பத்மினியும்.
த்மினியை
கலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் சிவாஜியோடு நடிக்கும் படங்கள்
மட்டும். வேறு
எந்த நடிகரோடு பத்மினி நடித்த படம் என்றால் அவளுக்கு பிடிக்காது. நிறைய
முறை எம்.ஜி.யாரோடு நடித்த படத்திற்கு இவன் கூப்பிட்டு அவள் மறுக்க,
பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிறது. அந்த சண்டையெல்லாம் கூட ஒரு காரணமாய் இருக்குமா?
இதையெல்லாம் ஒரு காரணமாய் அவனால் யோசிக்க முடியவில்லை. எது காரணமாய் இருக்கும் என்று,
யோசிக்க முடியாத அளவுக்கு குழம்பிப் போயிருந்தான். பஞ்சாலை வேலை கூட சமீபத்தில்தான் போனது.
“ஏய் என்னப்பா இங்கன நின்னிட்டிருக்கே,
ரெண்டு பொண்ணுங்களும் அங்க சாப்டாம காத்துக்கினு இருக்கு” 
என்றாவாறு இவன் தோளைத் தொட்டான் குரு.
எதிர் வீட்டுக்காரன். நைட் சிப்ட் வேலைக்கு போகிறான் போல.
“சீக்கிரம் போ,
சாப்பிட ஏதாவது வாங்கிட்டுப் போடா” என்றவாறு நடையை எட்டிப் போட்டான்.
வீட்டை
நெருங்கும்போது எதிர்வீட்டு வாசலில் குருவின் மனைவி மீனாட்சியோடு மூன்று
பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் மீனாட்சி
“என்னாச்சு போன விஷயம்” என்றாள்.
பதில் எதுவும் சொல்லாமல் பாலு வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
சித்ராக்குட்டி கூடத்தில் தரையில் ஒரு மூலையில் சுருண்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பெரியவள் நளினா இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து இவன் கையைப் பிடித்துக் கொண்டாள். பாலு “வாங்க சாப்பிடலாம்,
ஏன் சித்துக்குட்டி தூங்கிட்டா” என்றான் கையில் இருந்த பார்சலைப் பிரித்தபடி.
“இவ்ளோ நேரம் விளயாடிட்டுதான் இருந்தா. அம்மா எப்போ வருவான்னு கேட்டுக்கினே அப்படியே தூங்கிட்டா” என்றாள் நளினா.
“சரி நீ சாப்பிடு” என்றவாறே சட்டையைக் கழற்றி சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு,
பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் பாலு.
வேக வேகமாய் இட்லியைப் பிட்டு சாப்பிடும் நளினாவையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பசி போல,
சீக்கிரமே சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்தாள்.
“சரி படும்மா,
நாளைக்கு ஸ்கூல் போனம்ல” என்றவாறு பாயை எடுத்து உதறிப் போட்டவன்,
ஒரு ஓரமாய்,
சித்ராவை தூக்கி கிடத்தினான். பக்கத்தில் தன் உடலைச் சாய்த்தான். ஒரே அசதியாக இருந்தது.
விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் படுத்துக்கொண்டிருந்த நளினா “அப்பா” என்றாள்.
“என்னம்மா குட்டி”
“அம்மா,
எப்போ வருவா?”

“நாளைக்கு வந்துருவாங்க,
நீ தூங்கு” என்றபடி நளினாவின் தலையை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான் பாலு.

எதையாவது சொல்லட்டுமா…..91

அழகியசிங்கர்
ரெட்ஹில்ஸ் பக்கத்தில் உள்ள பம்மாத்துக்குளம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அங்குதான் என் மாமனார் (நான் அவரைப் பார்த்ததில்லை) அறுபதுகளில் இரண்டு கிரவுண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டிருக்கிறார்.  அதைப் பற்றி அவருடைய வாரிசுகள் யாரும் கவலைப்படவில்லை.  என் மாமியார் உயிரோடு இருந்தவரை அந்த வீட்டு மனை நல்ல விலைக்குப் போகும் என்ற கற்பனையோடு இருந்தார்.  பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அந்த இடத்தைப் பார்க்க பெரிய முயற்சி செய்து பார்க்கவும் செய்தேன். அப்போது அந்த இடத்தில் மண் வாரிக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பள்ளமாக இருந்ததால் அங்கு வீட்டு மனைகள் உண்டா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அதன் பின் நான் பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டேன்.  ஆனால் சமீப காலமாக ஒரு புரோக்கர் என் மாமனார் இடத்தை 2 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லி பலமுறை போன் தொல்லை செய்து கொண்டிருந்தான்.
அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நானும் அந்த இடம் பத்து லட்சம் போகும் என்று அடித்துப் பேசினேன்.  அவன் விடவில்லை.  தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.  மேலும் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்பினான்.  நான் அவனைப் பார்க்க தவிர்த்தேன்.  கடைசியில் அவன் என்னிடம் சொன்னான். “நீங்கள் பத்து லட்சம் போகும் என்று சொல்கிறீர்கள்.  என்னிடமும் சில காலி மனைகள் உள்ளன.  நீங்கள் கூறும் விலைக்கு விற்றுத் தர முடியுமா?”என்று என்னை மடக்கினான்.  பின் எனக்கு அவன் போன் பண்ணவில்லை.
எப்படியாவது அந்த இடத்தை இன்னொரு முறை போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  முன்பு நான் டூ வீலரில் போய்ப் பார்த்தேன். ஆனால் இப்போதோ என்னால் அப்படியெல்லாம் முடியாது என்று தோன்றியது.  என் மாமனாரின் வாரிசான நான்கு பெண்களுக்கும் அந்த இடத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எப்படி ஒரு இடத்தை வாங்கிப்போட்டுவிட்டு அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.  பத்திர அலுவலகம் மூலமாக வில்லங்கம் வாங்கிப் பார்த்தேன்.  நல்லகாலம்.  என் மாமனார் பெயர்தான் இருக்கிறது.  ஆனால் புரோக்கர் சொன்ன இன்னொரு தகவலும் என் ஞாபகத்திற்கு வந்தது.  அந்த இடத்தைத் திரும்பவும் இன்னொரு லே அவுட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக.  அது உண்மையா என்பதைப் போய்ப் பார்த்துவிட நினைத்தேன். 
எந்த ஞாயிற்றுக்கிழமையும் என்னால் போக முடியாது.  ஒருநாள் அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டுப் போக வேண்டும்.  அலுவலகத்தில் யூரின் போவதற்குக்கூட நான் அனுமதி கேட்கவேண்டும்.  அந்த அளவிற்குக் கெடுபிடி.  ஏதோ பொய் சொல்லி ஒருநாள் லீவு எடுத்துக்கொண்டேன்.  மதியம் 3 மணி சுமாருக்குக் கிளம்பலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய நானோ கார் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.  நானே எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் ஓட்ட முடியாத என்ற காரணத்தால், ஒரு டிரைவரை ஒரு அமைப்பு மூலம் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். காலி மனையைப் பார்ப்பதோடல்லாமல், சில புத்தகக் கட்டுகளை ஒரிடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் சேர்த்துக் கொண்டேன். 
டிரைவர் வந்தான்.  பார்க்க இளைஞனாக இருந்தான்.  புத்தகங்களை ஒரு இடத்தில் கொண்டு போடவேண்டும் என்று குறிப்பிட்டேன்.  அவன் திடீரென்று நகுலனைத் தெரியுமா, சார்.”என்றான்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.  கார் ஓட்ட வருபவன் எப்படி நகுலனைத் தெரியுமா என்று கேட்கிறான் என்பது போல் யோசித்தேன்.
அவரைப் போல ஒரு எழுத்தாளரைப் பார்க்க முடியாது   
நகுலன். என் நண்பர்.
:அவருடைய புத்தகம் இருக்கிறதா படிக்க,,”என்று கேட்டான்.
“இல்லை..ஆனால் அவருடைய இரு நீண்ட கவிதைகள் புத்தகத்தை நான்தான் பிரசுரம் செய்தேன்..”
“சார்..அவர் நினைவுப் பாதை அற்புதம். நான் காலேஜ் படிக்கும்போது, நகுலன் புத்தகத்தைத்தான் படிப்பேன்…அற்புதமான எழுத்தாளர்.”
:நகுலன் சென்னை வந்தபோது என் வீட்டு பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில்தான் தங்குவார்..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.
 மெதுவாக ரெட்ஹில்ஸ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது கார்  பம்மாத்துக்குளம் பற்றி அங்குள்ளவர்களிடம் விஜாரித்தோம்.  அவர்கள் சொன்ன வழியில் பம்மாத்துக்குளத்தைக் கண்டுபிடித்தோம்.  ஆனால் எங்கள் மனை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  வண்டியை வெகுதூரம் ஓட்டி வந்துவிட்டோம். பின் அந்தப் பம்மாத்துக்குளம் இல்லை இன்னொரு பம்மாத்துக்குளம் என்று சொன்னார்கள்.  வெறுத்துவிட்டேன்.
டிரைவருக்கு ஒரு போன் வந்தது.  “சார் நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும்.” என்றான்.
என் திட்டமெல்லாம் வீணாகப் போய்விட்டது.  புததகங்களைக் கூட சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியவில்லை.  வண்டியை டிரைவர் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான்.  அந்த வேகத்தில் நான் வண்டியை ஓட்டி பார்க்கவில்லை.
” பி இ படித்திருக்கிறேன்.  ஆனால் ஒரு பேப்பர் கூட பாஸ் பண்ணவில்லை.. இப்ப அஸிஸ்டென்ட் டைரக்டராக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன்..”
“ஏன் டிரைவராகப் பணிபுரிகிறீர்கள்?” என்று கேட்டேன்.
:பணம் வேண்டும் சார்.  வாடகை கொடுக்கப் பணம் வேண்டும். வீட்டுக்காரர் வேற இடம் பார்க்கச் சொல்கிறார்.  வேற இடத்தைத் தேட வேண்டும்.”
பின் அவன் ஒரு கடை முன் நின்றான்.  சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான்.  
“நீங்கள் புகைப்பீரா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் சிரித்தான்.  “புகைப்பதையே விதம் விதமாக புகைக்கத் தெரிய வேண்டும். அது தெரிந்தவர்கள்தான் மாடர்ன் எழுத்தாளர்கள்.”
அவன் என்னை அவசரம் அவசரமாக வீட்டிற்குக் கொண்டு விட்டு ரூ.300 கேட்டான்.  உண்மையில் ரூ250தான் கொடுப்பார்கள். நகுலனைப் பற்றி பேசினானே என்று கொடுத்தேன்.  நகுலன் அவனைக் கெடுத்துவிட்டதாக மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
எனக்குப் பெரிய வருத்தம்.  பம்மாத்துக்குளத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  அதைவிட வருத்தம் புத்தகப் பார்சலை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  
போகும்போது திரும்பவும் சொன்னான் : “நீங்கள் கூப்பிடுங்கள் திரும்பவும் புத்தகங்களைக் கொண்டு போக வருகிறேன்” என்றான்.
நகுலன் ஏன் இப்படி குறுக்கே வருகிறார் என்று யோசித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு என் வீட்டிற்கு நான் இல்லாதபோது வந்திருந்து என் அப்பாவைப் பார்த்து நகுலன் புத்தகம் கேட்டிருக்கிறான்.  புத்தகம் என்றவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாக அவருக்கு காது கேட்காது.  புத்தகம் என்றவுடன் இன்னும் காது கேட்காது.  
அவன் அங்கிருந்து போன் செய்தான். “சார் க.நா.சுவின் அசுரகணம் புத்தகம் படித்து விட்டேன்.  பிரமாதம்.. எப்படி எழுதியிருக்கிறார், பாருங்கள்..” என்றான்.
“க.நா.சு படிக்கறது அவ்வளவு ஈஸி இல்லை,” என்றேன்.
“சார்.  நகலனின் Non Being  ..கேட்டேனே.”
“என்னிடம் இல்லை.  வேற எங்காவது முயற்சி செய்யுங்கள்..”
என்றேன்.
“சார், வாடகைக்கு எதாவது இடம் கிடைக்குமா?”
“எனக்குத் தெரியாது.” என்றேன்.
எழுத்தாளர் அசோகமித்திரன் பொதுவாக யாராவது அவரைப் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால், படிப்பை முடித்துவிட்டு இலக்கியத்துக்கு வாருங்கள் என்பார்.  நான் அவரைப் பார்க்க போனபோது கூட என்னைப் பற்றி அவர் விஜாரித்திருக்கிறார். 
ஒருவித அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இந்தப் புத்தகம் படிக்கிறது அல்லது எழுதுவதில் நுழைய வேண்டும். எந்தவிதத்திலும் இந்த எழுத்து அடிப்படைகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் உதவி செய்யாது. அடிப்படைகளைப் பேணி காக்காத எத்தனையோ எழுத்தாள நண்பர்களை எனக்குத் தெரியும்.  ஒரு சிலருக்குத்தான் இதில் வெற்றி கிடைக்கும்.  
சில தினங்கள் கழித்து அவனிடமிருந்து போன் செய்து கட் செய்து விட்டான்.  நான் போன் பண்ணவில்லை.  அவன் திரும்பவும் போன் செய்தான்.  “சார்.. Non Being  கிடைத்ததா.”என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் திரும்பவும்,”சார்.. ஒரு உதவி..வாடகைக் கட்டணும்..பணம் கடனா தர முடியுமா?”
“முடியாது.”என்றேன்.
“சார்,  பணம் தர மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?”
“அதுமாதிரியெல்லாம் யோஜனை பண்ணவில்லை,”என்றேன்.
அவன் போனை கட் செய்துவிட்டான்.  நான் இன்னும் பம்மாத்தக்குளத்தைப் போய்ப் பார்க்கவில்லை.  யாராவது டிரைவரைக் கூப்பிடவும் பயமாக இருக்கிறது. புத்தகக் கட்டு காரிலேயே இருக்கிறது.
                      (அம்ருதா  டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

எதற்காகவும் எதையும்…

வைரமுத்து

எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்…

மயானத்திலிருந்து

பா. சிவபாதசுந்தரம்

கழற்றி எறிந்த மாலையின்

பூக்களை மேயும் ஆடுகள்

அரிசிதனை கலைத்து

காசை பொறுக்கும் சிறுவர்கள்

காலையில் போன

கதிரவன் வருகின்றான்

மாலை மரியாதையுடன்

மந்திரியும் வர

நாலு நாள் கழித்து

கருமாதி முடிவாச்சு

நான் செத்து இன்றோடு

நாட்கள் பத்தாச்சு

கதையல்ல……. நிஜம்

பா சிவபாதசுந்தரம்
நேற்று “தீராநதி” அழகியசிங்கரோட கவிதையை படித்தேன். இன்று காலையில்
அழகியசிங்கரின் நவீனவிருட்சத்தை பற்றி விநாயக முருகனின் பதிவையும்
பார்த்தேன். அழகியசிங்கர் எங்கள் கல்லூரியிலுள்ள இந்தியன் வங்கியின்
கிளையில்தான் மேலாளராக உள்ளார். இன்று மாலை கல்லூரி முடிந்தவுடன்
அழகியசிங்கரை பார்க்கலாமேன்னு கிளம்பினேன்.
பாங்க் போகும் வழில கிரவுண்ட்ல பொம்பளபிள்ளைங்க கொ-கொ வும், பசங்க
கிரிக்கெட்டும் ஆடிட்டிருந்தாங்க. கிரிக்கெட் ஆடுறத பார்த்தவுடனேயே மனசு
நமநமக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பல்லாம் பேட்டை கைல வச்சிருக்கவங்கெல்லாம்
மனசுல வீராத் கோஃலி, தவான்னு நெனச்சுக்கிட்டிருக்க மாதிரி, அந்த காலத்துல
எனக்கு கவாஸ்கர்ன்னு நெனப்பு.(ஆனா ஒரு தடவ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரில
நடந்த ஒரு மேட்ச்ல Orthodontist சந்திரசேகர் அடித்த ஷாட்ட காட்ச் பிடிக்கப்போய்
மூஞ்சி கிழிஞ்சு வந்தது தனி கதை)மன உந்துதல கட்டுப் படுத்திக்கிட்டு ஒரு
வழியா அழகியசிங்கர பார்த்திட்டு திரும்பறேன். கொ-கொ ஆடுற பெண்கள் வழிவிட,
சில மாணவிகள் விஷ் பண்றாங்க. என் பார்வை அந்த பவுலிங்க் போடற பையன் மேல.
அநேகமா ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயரா இருக்கலாம். அவன் ஓடிவந்த லாவகம்
ஏறக்குறைய ராஜாவின் Chord progression மாதிரி தான் இருந்தது. குறி தவறாத
வில்லுல இருந்து கிளம்புற அம்பைப் போல அருமையான பவுலிங். என்னால அதுக்கு
மேல பொறுக்க முடியல. பிட்ச்சை நோக்கி நான் நடந்தவாறே அழகியசிங்கர் கொடுத்த
ரெண்டு புத்தகங்களையும் ஒரு மாணவனிடம் நீட்ட, அனி்சையாக, பேட்டிங்க் செய்து கொண்டிருந்தவன் என்னிடம் பேட்டை நீட்டினான். ரெடியாயிட்டேன்.
ஆஃப் அண்ட் மிடில் எடுத்துக்கிட்டு கேள்விக்குறி போல குனிந்து செல்லமாக
தரையில் ரெண்டு தட்டு தட்டிட்டு நிமிர்றேன். ஒரு கணம் மூச்சே நின்று
விட்டது. ஏன்னா கொ-கொ ஆடிக்கி்டிருந்த மற்றும் அதை வேடிக்கை
பார்த்துக்கிட்டிருந்த சுமார் இருபது பெண்கள் மிட்விக்கெட் இடத்திலிரு்ந்து
நான் ஆடப்போவதை பார்க்க கூடிவிட்டனர். மெதுவா லெக் சைட்ல பார்க்கிறேன்.
குட்டை சுவரில் உட்கார்ந்திருந்த ஒரு எட்டு, பத்து மாணவிகள் என் பக்கமாக திரும்பி
உட்கார்ந்திருந்தனர். ஸ்டெம்பிற்கு பின்னால் ஒரு ஆறேழு பசங்க. கை லேசா
வேர்க்க ஆரம்பிக்குது. பேப்பர் மற்றும் டிவி மூலம் தினம் கிரிக்கெட்
தொடர்பு இருக்கிறத தப்பா கணக்கு போடடு்டேன் போல. கடைசியா எப்ப கிரிக்கெட்
பேட்டை தொட்டேன்னு ஒரு வினாடி யோசிச்சு பார்க்கிறேன். சனியன் ஞாபகமே வரல.
ஒரு வேளை, முதல் பந்துலேயே கில்லி எகிருடுசசுன்ன? என் கால்களும் நடுங்கிற மாதிரி ஒரு
உணர்வு. நைசா செல் ஃபோன காதுல வச்சக்கிட்டு ஹலோ ஹலோன்னு சொல்லிக்கிட்டே எஸ்
ஆயிரலமான்னு கூட தோணுச்சு. சேச்சே அது இன்னு்ம் அசிங்கமாயிரு்கும்னு தோண,
இதென்னடா வம்பாப் போ்சு. விளையாட்டுக்கு ஆரம்பி்ச்சு மானப்
பிரச்சினையாயிருச்சேன்னு எம்மேலேயே ஒரு பரிதாபம் வந்திருச்சு(பாவம்
டெண்டுல்கர் அந்த கடைசி மேட்ச்சி்ல் எவ்வளவு மன உளைச்சலடைந்திருப்பார்ன்னு தோணுச்சு).
சரி, வருவது வரட்டும்னு நேரா பார்க்கிறேன். பௌலருக்கு பதி்ல் ஒரு தண்ணீர்
லாரி கிளம்பத் தயாராவது போல இருந்தது. அதோ ஓடி வர்ரான்….. புல்லட் மாதிரி
பந்து அவன் கையிலிருந்து வெளி வருது. நல்ல வேகம். ஒரடி முன்னால் போய்
தடு்க்கப்போனேன். பந்து பேட்ல பட்ட மாதிரியே இல்ல. கண்ணுக்கும் தட்டு படல.
ஆஃப் ஸ்டெம்ப்புக்கு மூணு அடி தள்ளி எப்வோ என்னை அது கடந்திருச்சு.
அடுத்த பந்துக்கு ரெடியாகுறேன். இந்த வாட்டி என்னை சுத்தி இருக்கிறவங்க
யாரையும் பார்க்கல. பௌலர மட்டும் பார்க்கிறேன். அருமையான யார்க்கர்
முயற்சி. வேகம் கொஞ்சம் குறைச்சல்தான். ஏறி ஒரு சாத்து சாத்தலாந்தான். ஆனா
மிஸ் பண்ணா மிடில் ஸ்டெம்ப் எகிறது உறுதி. நின்ன இடத்திலிருந்தவாறே டிஃபணட்
செய்றேன். அவன் அடுத்த பால் இதே மாதிரி போடட்டும், கண்டிப்பா எனனோட
ஃபேவரைட்
 ஸ்ட்ரட் டிரைவ் தான்னு நெனச்சுக்கிட்டேன்.
ஒரு சி்ன்ன ஃப்ளாஷ் எனக்குள். ஒரு வினாடி பௌலரோட முகத்த ஞாபகப்படுத்தி
பார்க்கிறேன். நான் பேங்க்குக்கு போகும் போது போட்ட ஆக்ரோஷம் அவனிட்த்தில்
இல்லை. மாறாக ஒரு பயம்தான அவன் முகததிலிருநதது. எல்லா பௌலருக்கும்
பேட்ஸ்மேனை அவுட்டாகணும்னு ஒரு வெறி இருக்கும். ஆனா இவன பார்த்தா நான்
அவுட்டாயிரக் கூடாதேன்னு கவலை படுற மாதிரி இரு்ந்துச்சு.
ஏறக்குறைய நாம குழந்தைகளுடன் விளையாடி வேணும்னே தோப்பமே, அது மாதிரி.
அப்பத்தான் எனக்கு டக்குனு ஞாபகம் வந்துச்சு. நான் இந்த காலேஜுக்கு
பிரின்ஸ்பால், பௌலிங்க் பண்றது ஒரு ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயர்
ஸ்டூடண்ட்னு.
அடுத்த பந்த வேகமா ஓடிவந்து போடுறான்.எதிர் பார்த்த மாதிரி வேகமற்ற ஒரு
ஷார்ட் பிச்பால். மிக சுலபமாக குறைந்த மென்க்கெடலில் தரையை தொடாமல் எலலைக்
கோட்டை தாண்ட வைக்கும் பந்து. கை பரபரக்குது. அடிச்சா கண்டிப்பா நாளை
கல்லூரியில் அது பேசப்படலாம். குறைந்த பட்சம் வேடிக்கை பார்க்கும் சில
பெண்களாவது கைதட்டலாம்.
ஒரு அடி பின்னால் சென்று, அதை ரசித்து அன்புடன் பிளாக் செய்துவிட்டு,
ஸ்டெம்ப்பிற்கு பின்னால் இருந்தவனிடம், “தேங்க்ஸ்” என்றவாறு பேட்டை ஒரு
புன்னகையுடன் கொடு்த்து விட்டு, அழகியசிங்கரை பெற்றுக்கொண்டு என் காரை
நோக்கி நடந்தேன்.

TWO POEMS BY KRISHNAKUMAR

பைத்திய வாழ்க்கை..
காய்ச்சலால் உடம்பு தகிக்கிறது
வெளியில்
மழை முடிவில்லாமல் பெய்கிறது
தகிக்கும் அந்த கேவலமான உடம்போடு
மழையில் சென்று வர வேண்டிய
வாழ்க்கையை வாழ்கிறான் அந்த மனிதன்.
 
வெயில் என்றால் பாலைவன வெயில்
சே, இந்த மஞ்சள் காமாலையின்
மழுங்கிய கண்களோடு
வெயிலில் அலைந்து திரிய வேண்டிய
அற்பமான வாழ்க்கை அவனுடையது.
 
மழைக்கான தனி இடமும், வெயிலுக்கு
ஒரு பிடி நிழலும்
வாய்க்கும்போது
அனுபவிக்க தோதுபடாத பைத்திய வாழ்க்கை
அந்த மனிதனுடையது.
 
==================================================
முதல் கவிதையின் மாற்றுப்பிரதி
=========================================
முதல் கவிதை எல்லோருக்கும்
ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது.
படிமகுறியீடுகளின் பிரக்ஞையற்றது
அந்த கவிதை.
ந.பிச்சமூர்த்தி முதல் சபரிநாதன்
வரை எவர் சாயலுமற்ற மலட்டுத்தன்மை
அதனுள் ஒளிந்திருக்கும்.
“நேற்றுதானே உன்னை சந்தித்தேன்,
இன்று என் இதயத்துக்குள் எப்படி வந்தாய்?”
என்று அந்த கவிதையை ஆரம்பித்திருப்போம்.
போகட்டும், இப்போது எழுதுவது
ஒரு கவிதையா? சொந்த வரிகளா?
எதுவானாலும் இது அனைவருக்கும் பொதுவான
அம்முதல் கவிதையின் மாற்றுப்பிரதியாக
இருக்கக்கடவது.

90களின் பின் அந்தி –

-ஜெம்சித் ஸமான்

ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை

‘நீல’ வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
‘ஜஃபர் மச்சான்’ இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்