ஓசிப்மெண்டல்ஷ்டாமின் கவிதை


  கவிதை எண் 17

 குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
 அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
 மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
 சுவாசிக்கிறேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை

 மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
 போவதை
 எவரும் பார்ப்பதில்லை
 இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
 ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்

 நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
 மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது
 ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
 மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்

     தமிழில் : பிரம்மராஜன்

சில குறிப்புகள்


    அழகியசிங்கர்

    நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார். 


    எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.

    எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன். 

    எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.

    இருவர் கையெழுத்தும் அழகாக இருக்கும்.  சிறுபத்திரிகையின் நண்பர்கள் இருவரும்.  பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபிறகுதான் நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் நான் அனுப்பிய பத்திரிகை போய் சேர்ந்ததற்கான அறிகுறி அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான்.

    வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை டெச்பேட்ச் க்ளார்க் என்று கிண்டல் செய்திருக்கிறார்.  ஆனால் எனக்கு அப்படித் தோன்றாது.  இன்று ஒருவரைப் பாராட்டுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயமாகத் தோன்றுவதில்லை.  அதை முழு மூச்சுடன் செய்பவர்கள் தி.க.சியும் வலலிக்கண்ணனும்தான்.

    சென்னையில் நான் குடியிருந்த தெருவில் தி.க.சியும் அவர் புதல்வர் வண்ணதாசன் வீட்டில் தங்கியிருந்தார்.  நான் அவரைப் பார்க்கச் செல்வேன்.  வண்ணதாசனிடம் பேசுவதை விட தி.க.சியிடம் பேசிவிட்டுச் சென்று விடுவேன்.  வண்ணதாசன் நண்பர்களான வண்ணநிலவன். விக்கிரமாதித்யன் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள்.  வண்ணதாசன் அப்படி அல்ல. 

    வண்ணதாசன் வீட்டிற்குச் சென்று திகசியிடம் மட்டும்தான் பேசுவேன்.  என் 94வது இதழ் விருட்சத்திற்குக்கூட அவர் கடிதம் எழுதியிருந்தார். 

    05.08.2013 அன்று நவீன விருட்சம் 93வது இதழைப் படித்துவிட்டு எழுதிய கடிதம்.

    அன்பு நண்பர் அழகியசிங்கர் அவர்களுக்கு,

    வணக்கம்.  நவீன விருட்சம் 93வது இதழ் பார்த்தேன்.  மிக்க நன்றி.  1988 ஜøலையில் தோன்றிய நவீன விருட்சம்.  25ஆம் ஆண்டு நிறைவைத் தாண்டி, 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது எனக்குபெரும் மகிழ்வும், மனநிறைவும் தந்துள்ளது.  தங்கள் நவீன இலக்கியத் தொண்டு போற்றத்தக்கது; அது மேன் மேலும் தொடர்வதாக.  என் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்கள்.  தமிழில் தற்காலத் தோரணை – பாரதியின் கவிதை எனும் சி கனகசபாபதியின் கட்டுரையை (மே 1965இல் எழுத்து இதழில் வெளிவந்தது).  இப்போது மீண்டும் படித்தேன்.  இன்று புதுப்பார்வையில் இலக்கிய ரசனையை வளர்க்கும் பணியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

    என்றும் அன்புடன்,
    தி.க.சி.

    அவர் இனி இல்லை என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
   

மாதங்கள் கடந்து போதல்


ந.பெரியசாமி

மேசையின்மேல் இரண்டு
கண்ணாடி கோப்பைகள்
ஒன்றில் பொவண்டாவையும்
மற்றதில் பியரும் நிரப்பினீர்கள்
புன்னகைத்து அருந்தத் துவங்கினீர்கள்
எப்படியோ இம்மாதத்தை கடந்தாயிற்று
நிம்மதி பெருமூச்சொன்றை விட்டீர்கள்
அசட்டையான சிரிப்பை உதிர்த்து
எனக்கு இன்னும் கடக்கவில்லை
தேதி ஐந்தாகிவிட்டதே
மறுபடியும் நகைத்து
அதுகூடவா தெரியாது
எனக்கு முடிவடையவில்லை
சம்பளத் தேதியை சொல்கிறீர்களா
இல்லை எனக்கும் ஒன்றாம் தேதிதான்
புரியவில்லையே வேறென்ன
குழப்பத்தோடு கடைசி துளியை வழியவிட்டீர்கள்
இம்முறை கொஞ்சம் சப்தமாக சிரித்து
உங்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்
மாதங்களை கடப்பது
உங்களுக்கு தேதிகள் தீர்மானிக்கும்
எங்களுக்கோ எங்களின்
உதிரப்போக்கு.

நாம் என்ன செய்ய முடியும்? – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

 தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.
நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?
எதுவும் செய்ய முடியாது.
முடிந்தவரை விலகி இருப்போம்
துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல்.
ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள
சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம்
எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும்
அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும்
தப்பிக்கிறார்கள் வெகு சிலர்
நாம் தப்பிப்பது நம் கையில்
சரியான திட்டம் வேண்டும்
தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை
உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன்
அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை
மனிதத்துக்கு மட்டுமே அவர்கள்
உயர்ந்தவர்களாய் புகழ் பெற்றவர்களாய் இருக்கிறபடியால்.
என்னாலும் தப்பிக்க முடியவில்லை
ஆனால் மறுபடி மறுபடி முயன்று கொண்டே இருப்பதில்
நான் தோற்றுப் போகவில்லை.
நம்புகிறேன் என் மரணத்துக்கு முன்னால்
அடைந்து விடுவேன் என் வாழ்க்கையை.
**
மூலம்:
What can we do?
by
Charles Bukowski
***

எதையாவது சொல்லட்டுமா…..93

அழகியசிங்கர்

இந்தப் புத்தாண்டில் என் நண்பரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்தது. ஒரு கார்டில் எழுதியிருந்தார். புத்தாண்டு வாழ்த்து என்று மேலே குறிப்பிட்டு பாரதியார் கவிதை வரிகளை இப்படி எழுதியிருந்தார்.
இனி
என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்
சந்தோஷம் கொண்டிக்கச் செய்வாய்
– பாரதி
இப்போதெல்லாம் கார்டில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது என் நண்பர் மட்டும்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களில் பலர் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக புத்தாண்டு என்பதை கண்டுகொள்வதில்லை. ஆனால் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வோம். கைக் குலுக்கிக்கொள்வோம். நானும் பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர்களுக்கு கார்டில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் என்றுதான் அனுப்புவேன். அதற்கு சிலர் பதில் வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்கமாட்டார்கள். அழகான கையெழுத்தில் வல்லிக்கண்ணன், தி.க.சி, பழமலய் போன்ற படைப்பாள நண்பர்கள் பதில் எழுதாமல் இருக்க மாட்டார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் புத்தாண்டு வாழ்த்துக் கார்டு அனுப்பாமல் இருக்க மாட்டார்.

நான் இதுமாதிரி பலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியும் ஒருசிலரைத் தவிர பலர் பதில் எழுத மாட்டார்கள். எனக்கு சந்தேகம் வந்துவிடும். அவர்களுக்கு என் வாழ்த்துக் கடிதம் போய் சேர்ந்ததா என்று. நான் இப்போதெல்லாம் அப்படி எழுதி அனுப்புவது இல்லை. ஏன் தபால் கார்டையே நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் தபால் அலுவலகத்திற்குப் போனால் கார்டை வாங்கி சேகரிக்கும் பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை. உண்மையில் எதாவது சொல்வதென்றால் சுருக்கமாக கார்டில் பதில் எழுதி விடலாம். மறைந்த என் இலக்கிய நண்பர் எம் என் பதி அவர்கள் கார்டில் அவர் மனதில் தோன்றுவதை எழுதி விடுவார். சின்ன சின்ன எழுத்தில் அவர் எழுதியதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.

அசோகமித்திரனும் கார்டில் எதாவது தெரிவிக்க வேண்டுமென்றால் தெரிவித்து விடுவார். பிரமிள் கார்டும் பேனாவுமாக அலைந்து கொண்டிருப்பார். üஉங்களை இந்த நாளில் வந்து சந்திக்கிறேன்,ý என்பதைக்கூட கார்டில் எழுதி விடுவார். ஆனால் இப்போது கார்டு இடத்தை எஸ்எம்எஸ், இ மெயில் பிடித்துக்கொண்டு விட்டது. கையால் எழுதும் பழக்கம் நம்மைவிட்டுப் போய்விட்டது.

இன்னொரு விஷயம் பொன்மொழி. அறிவுரையும் பொன்மொழிகளும் நம்மை விட்டுப் போகாது என்று தோன்றுகிறது. யாருக்காவது நாம் இலவசமாக வழங்க வேண்டுமென்று நினைப்பது அறிவுரையைத்தான். சிலர் கேட்காமலேயே அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

நான் சின்ன வயதில் ரேஷன் கடையில் க்யூவில் நின்றுகொண்டிருக்கும்போது, விவேகானந்தர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அவருடைய பொன்மொழிகளைப் படிக்கும்போது எனக்கு வீரம் வந்துவிடும்போல் நினைப்பேன். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் வீரம் வந்துவிடும். சில பாடல்களைக் கேட்டால் சோகமாக இருக்கும்.

சிலதினங்களுக்கு முன் நான் வளசரவாக்கம் தெருவில் வண்டியை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் விவேகானந்தரின் பொன்மொழிகள். பொன் மொழியைப் படிப்பதுபோல் அபத்தத்தைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் நம்மிடம் தென்படும் துயரத்தை எப்படி சரி செய்வது.
என் நண்பர் ஒரு திருமணத்திற்கு அவர் மனைவியுடன் சென்றிருந்தார். அது உறவினர் திருமணம். அந்தத் திருமணத்தில் மனைவியின் நகைகள் சில தொலைந்து போய்விட்டன. இருவரும் பதட்டம் அடைந்து விட்டார்கள். எல்லா இடத்திலும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. இந்தத் துயரம் ரொம்ப நாட்கள் அவர்களை வாட்டிக்கொண்டிருந்தது. அவர்களை அழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று குறி சொல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். எனக்கும் குறிசொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஒரு வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். அவருடைய புதல்வருடன் அவர் வசித்துக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர்கள் அந்தப் பெண்மணியிடம் தங்கள் துயரங்களைக் கொட்ட காத்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பரும் அவர் மனைவியும் பூ பழங்கள் வாங்கிக்கொண்டு பயப்பக்தியுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை சொல்வதற்குமுன் எல்லோருடைய துயரங்களையும் கேட்டுக்கொண்டிருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அது எத்தனை கொடுமையான விஷயம். ஒரு துயரத்தை முடித்தவுடன், அடுத்தவர் துயரத்தை சொல்லஆரம்பித்து விடுவார். இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் துயரம் என்பது எல்லோருக்கும் சிறிய அளவிலாவது இருந்து கொண்டுதான் இருக்கும், குறி சொல்லும் பெண்மணிக்கும் துயரம் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவர் யாரிடம் அதை வெளிப்படுத்த முடியும்.

நண்பர் நகை தொலைந்து போன விஷயத்தைச் சொன்னவுடன், அந்த பெண்மணி ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டார். பின் சொன்னார் : üüஉங்களுக்குத் தெரிந்தவர்தான் அதை எடுத்துக் கொண்டு விட்டார். உங்களுக்குக் கிடைக்காது..ýýஎன்றார். எனக்கும் நண்பருக்கும் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. நண்பரின் மனைவிக்கு வருத்தமாக இருந்தது. நண்பரை நான் சமாதனம் செய்தேன். பின் இன்னொருவரிடம் அழைத்துப் போகிறேன் என்றேன். அவரும் சரி என்றார்.

இன்னொருவர் ஒரு எழுத்தாளர். இராமலிங்க சுவாமிகள் படத்தை பூஜை செய்பவர். மனதில் தோன்றுவதையெல்லாம் அவர் எழுதி வைக்கும் வழக்கம் உடையவர். உலகத்தில் இந்தியாவில் நடக்ககும் விஷயங்களை எல்லாம் அவர் எழுதிக்கொண்டே வருவார்.

நண்பரும் நானும் போய் நின்றோம். அவர் மெதுவாக கேட்டுக்கொண்டார். பின் அதைப்பற்றி அவர் பேசவில்லை. வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தவர், இறுதியில் குறிப்பிட்டார்.
üüகிடைப்பது கஷ்டம்,ýý என்றார். நண்பரை திரும்பவும் ஆறுதல் படுத்தினேன். üஇன்னொரு இடத்திற்குப் போகலாம்,ý என்றேன். நண்பருக்கு எப்படியாவது நகைக் கிடைக்க வேண்டுமென்ற ஆதாங்கம். சரி என்றார். நான் அவரை அழைத்துப் போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. குறி சொல்வது என்றால் என்ன? நம்முடைய கஷ்டங்களை மட்டும் கேட்பது மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதுதான்.

அந்த வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டிருந்தார். அவர் பூஜை செய்யும் இடம் ஒரு கோயிலாக இருந்தது. நண்பர் தன்னைப் பற்றி கூறி அவர் முன் போய் உட்கார்ந்தார்.
நண்பரின் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, üநாளை வாருங்கள்.ýý என்றார். அடுத்தநாள் நானும், நண்பரும் சென்றோம்.
“உங்கள் நகைகள் திரும்பவும் வந்துடும். எடுத்தவர் உங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்,”என்றார். நமஸ்காரம் செய்துவிட்டுக் கிளம்பினோம்.
நண்பருக்கும் எனக்கும் நம்ப முடியவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து நகைகள் கிடைத்துவிட்டன. எடுத்தவர்கள் அவருடைய டூ வீலர் சைட் பாக்ஸில் போட்டுவிட்டார்கள். யார் எடுத்தார்கள் என்பது தெரியாவிட்டாலும் நண்பருக்குக் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.
இப்படித்தான் நம்முடைய கஷ்டங்களை பிறரிடம் சொல்லிக்கொண்டே நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் அவர்களை பிரமிளுடன் சந்தித்தபோது, நான் சாமியார்களைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன். யோகி ராம்சுரத்குமார் பாஸிங் ஷோ என்ற சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். ஒரு அழுக்கு ஆடையில் காட்சி அளித்தார். அவர் குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதுபோல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ்ûஸ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வந்திருந்த எங்களை அவர் குறிப்பிட்ட இடத்தில் உட்காரச் சொன்னார்.

அங்கு நான் எப்படி நடந்துகொண்டேன், எப்படிப் பேசினேன் என்பதை இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன். மனிதர்களின் சுபாவம் அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உணர்வதே இல்லை. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் இப்படி செய்ய வேண்டுமென்று நினைப்பதே இல்லை. அகந்தை என்ற ஒன்று இருக்கிறதே அது நம் பேச்சில் வெளிப்பட்டு விடும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

குறி சொல்பவர்களைப் பார்ப்பதுபோல்தான் யோகி ராம்சுரத்குமார் போன்ற எல்லாம் துறந்தவர்களையும் பார்ப்பது. அவர்களிடமும் நம் துயரத்தைக் கொட்டுகிறோம். அவர் ஒரு சம்பவம் சொன்னார். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்தாராம். அந்தப் பெண்மணிக்கும் அவருடைய கணவருக்கும் பெரிய சண்டை மூண்டு விட்டதாம். அதைத் தீர்ப்பதற்கு எதாவது வழி இருக்கிறதா என்பதைக் கேட்க யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் உடனே அந்தப் பெண்மணியின் பெயரை மாற்றி வேறுவிதமாக உச்சரிக்கச் சொன்னாராம். சில மாதங்களில் அந்தப் பெண்மணிக்கு கணவருடன் இருந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்தப் பெண்மணி திரும்பவும் யோகியாரைப் பார்த்து நன்றி சொன்னாராம். üஎனக்கும் அலுவலகத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது,ý என்றேன் பிரமிளிடம் ஒருநாள். üஉங்கள் நீளமான பெயரில் கடைசியில் உள்ள இரண்டு எழுத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள்,ý என்றார் பிரமிள். நானும் அவ்வாறு முயற்சி செய்தேன். ஆனால் பிரச்சினை தீரவில்லை.

(Appeared in Amirtha February 2014 issue)

a story by KRISHNA

மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், “அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு.” என்பான்.

ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைப்பது வழக்கம். வினய் நெகிழ்வாக பேசுவான். (“ஹௌ இஸ் யுவர் ஹெல்த் மாம்? டோண்ட் சே லைக் திஸ், தென் ஐ வில் பி அப்செட், கம் ஆன், ஐ அம் தேர் ஃபார் யூ. ஹவ் பில்ஸ் ரெகுலர்லி) மீரானுக்கு – புரிகின்ற அளவுக்கு கூட ஆங்கிலம் தெரியாது. எனக்கு கொஞ்சமாக புரியும்.

வீட்டிலிருந்து வேறொரு ஊருக்கு சென்று தங்கி வேலையிலிருக்கும் மக/மகள்களிடம், பெற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை வினய் போன்றவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மகன், நான் பிடித்திருக்கும் கடிவாளத்தோடுதான் இன்னமும் பயணிக்கிறான் என்பதை உறுதிசெய்துகொள்ள இதுபோன்ற செல்போன் விசாரிப்புகள் தேவைப்படுகிறது. வினய் கடிவாளத்தைப் பிடித்தபடி பயணிப்பவன். நான் வேறு வழியில்லாமல் அதை வலுத்துப் பிடித்துக்கொள்பவன்.

இதன் படி, வினய்க்கு முதல் இடம். இரண்டாவது இடத்திற்கு போகும் முன்பாக வினயைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. வினய் ஒரு கிதார் பிரியன். மறந்தும்கூட கெட்ட வார்த்தையை உச்சரிக்காதவன். அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் சென்றால், மதியம் இரண்டு மணிக்கு வந்து விடுவான். மாலையில் கிதாரை பின்னந்தோளில் போட்டுக்கொண்டு நண்பனின் அறைக்குச் சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்குள் அறைக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் பேசியபடி உறங்கிவிடுவான். கண்டிப்பாக, மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்றுவிடுவான். அதற்காக, முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டு எப்போதுமே அவனுடைய துணிப்பையில் இருக்கும். சுத்தமாக, சீராக தனது பொருட்களை அறையில் அடுக்கி வைத்திருப்பான். எந்த “கூடுதல்” வேலைகளும் செய்யாமல் முறையாக வாழ்பவன் வினய்.

இவையனைத்தும் எனக்கு ஒத்துப்போகாத ஒன்றாக இருப்பதாலும், செயலளவில் கொண்டுவராத/ முடியாதபடி இருப்பதாலும் வினய் என்னிடமிருந்து விலகிய ஒரு மனிதனாக இருந்தான். இதைத் தவிர, பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுபவன் நான். மூன்று பேர் சண்டைபோடுவதை ஓரத்தில் நின்று பார்க்கும்போதே நெஞ்சு படபடத்து ஓடுவேன். வார இறுதியில், ஞாயிறு என்றால் சாயங்காலம் வரை தூங்கிவிட்டு பலமுறை அடுத்த நாள் அலுவலகத்தில் அவதிப்பட்டிருக்கிறேன். யார் உதவியாவது எப்போதாவது எனக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். பசி, நல்ல தூக்கம், பெண்ணைப் பார்த்தால் அடி மயக்கம் என்ற கோட்டுக்கு வெளியே எதையுமே நான் உணர்ந்திருக்கவில்லை.

தனது நண்பன் பெயர் முருகன். ரோஸ் கலரில் பொசுங்கிய மாதிரி தோல் இருக்குமில்லையா?!. முருகனுடைய மாமா அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர். அவர் ஒரு பால்காரர். மாமாவின் வீட்டில் பத்துக்கு ரெண்டு அறை ஒன்று முதல் மாடியில் இருக்கிறது. டயமண்ட் சேப் துளையிடப்பட்ட அந்த அறையின் சுவர் தெருவைப் பார்த்தபடியிருக்கும். அப்போது சிப்பி பீடி எங்களுடைய பக்கம் ஃபேமஸ். அறையின் ஒரு பக்கம் சாயம் விலகிய அரக்கு நிற டிரெங்கு பெட்டியின் மேல் இரண்டு கட்டு பீடி எப்போதும் இருக்கும். நானும், முருகனும் அப்போது ஐந்தாம் வகுப்பில் இருந்தோம். வகுப்பு முடிந்ததும் நேராக முருகனுடைய மாமா வீட்டுக்கு சென்று ஆளுக்கு ஐந்து பீடிகளை ஊதி தள்ளிவிட்ட கையோடு பற்பசையால் வாயைக் கழுவிவிட்டுவிடுவேன். பின்னாள் கடையில் வைத்து என்னுடைய பெரியப்பா பார்த்ததிலிருந்து பப்ளிக்காக பீடி இழுக்க ஆரம்பித்துவிட்டேன்.

வினயை பொருத்தவரை அசைவுகளை வைத்துக்கொண்டுகூட தமிழ் மொழியைப் புரிந்துகொள்ள தெரியாது. பகலில் ஒரு மதிய வெளிச்சத்தில் வினய் இருக்கும்போது தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருந்தான் மீரான். இதெல்லாம் பட்டியலில் ஒரு பக்கம்தான். பட்டியலுக்கு உட்புறம் இருக்கும் தனது பரிணாமத்தின் வளர்ச்சியை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே இருந்தவன் அசலில் தற்பெருமையை சொல்லிக்கொள்ளும் சாதனையாளனாக மாறியிருந்தான்.

மீரான் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தபடி, பேர் சொல்லி அழைத்தாலும், பின்னாள், வா, போ என்று அழைக்கும் தூரத்திற்கு நெருக்கமாகியிருந்தான். காரணம் ஒரே மொழிக்காரன் என்பதை விட இருவருக்குமான குணாதிசய தூரக்குறைவினால்தான் என்று நினைக்கிறேன். தைர்யமாக பொதுவில் செயல்படாதவொன்றின் மீது எப்போதுமே ஒரு கிராக்கி இருப்பதுண்டு. அந்தரங்கமாக அறியவேண்டியதின் புதிர்களை அப்பட்டமாக்கி செயல்படுத்தியதன் விளைவாக ஒரு பிணைப்பு மீரானிடத்தில் எப்போதுமே இருந்தது. ஆனால், வினயிடம் இதே உறவமைப்பை நான் உணர்ந்ததில்லை. அவன் முற்றிலுமாக எங்களிலிருந்து புதிதாக வளர்ந்தவன். இதனால் கூட நான் என்னை இரண்டாவது இடத்தில் நிறுத்திக்கொள்வதுண்டு. இதை மீரானிடம் பகிர்ந்துகொண்டதே கிடையாது. அவனை மூன்றாவது இடத்தில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

“இந்தா மீரான், இதைப் பிடி! அவன் நிற்கிறான். நேரா போய். ஏங்க – அங்க கொஞ்சம் பாருங்க-னு வேக வேகமா சொல்லு. பாக்குறானோ இல்லையோ, இதால சாத்திரு. நீ அடிச்ச வேகத்துல நான் ஓடி வந்து மீதிய பாத்துக்குறேன். நைட்டு நேரம், காரியம் முடிஞ்சதும் சுத்தமாக்கணும். நீ என்ன பண்ணு, ஏற்கனவே சொன்ன மாதிரி அல்சூருல ரமேஷ் வீட்டுக்கு போயிரு. ஓசூர்-ல நடந்தத இத்தோட மறந்துரு. வெளங்குதா?”

“இது கொலை. இப்பவும் கம்பளத்துக்கு அடியிலேதான் இருக்குது. வெளியில் வராமல் நண்பன் பரந்தாமன் பார்த்துக்கொண்டான். ஒரே காரணம், பரந்தாமனுடைய அக்கா அவளுடைய வயிற்றில் குழந்தையோடு கெரசின் ஊற்றி இறந்தாள். மாமாவின் உயிர் நீத்தல் தான் ஒரே வழி என்று முடிவெடுத்தோம். பரந்தாமா! எனக்கும் இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குதடா ” மீரான் அந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக சொல்லிக்கொண்டிருந்தபோது இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வினய் நல்ல உறக்கத்தில் இருந்தான். அது ஒரு புழுக்கமான அறை. சாதாரண நாட்களில் கூட சட்டையைக் கழற்றிவிட்டுதான் படுக்க முடியும். மீரானின் குரலினால் என்னுடல் ஒரு மெழுகு திரவம் போல உருகிவிடுவதை உணர்ந்தேன். வியர்வை தாரை தாரையாக வெளியேறியது. சட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டேன். மீரான் தான் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை ஆழமாக பார்த்துக்கொண்டே தூங்குவதற்கு தயாராகியிருந்தான்.

பிப்ரவரி 28. வருடத்தின் எல்லா மாதங்களும் எல்லாவற்றிலும் பிந்தும்போது முந்திக்கொள்ளும் ஒரே மாதமாக பிப்ரவரி இருப்பதால் எனக்கு அதன் மேல் ஒரு தனி பிரியம் இருப்பதுண்டு. சம்பளம் கிட்டிவிடும். மூன்று நாள் வேலை மிச்சம். இதுபோக வினய் ஊருக்கு செல்வதால் கழிப்பறை வறண்டு எனக்கே எனக்கானபடி இருக்கும். இதுபோன்ற நாட்களில் மீரானையும் பார்க்க முடியாது.

பெரும்பாலும் மாதக் கடைசி வார விடுமுறையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வினய் தன்னுடைய ஊருக்கு சென்றுவிடுவான். இந்த முறை அப்படியிருக்கவில்லை. இருந்தாலும், வினய் ஊருக்கு செல்வதற்கு தயாராகியிருந்தான். நான் அப்பொழுதுதான் அலுவலகம்விட்ட அறைக்கு வந்திருந்தேன். காலுறையை கழற்றியபடியே மீரானிடம் சாதாரணமாகத்தான் சொல்லியிருந்தேன். மீரான், வினய் பாத்தியா? எவ்ளோ நல்லவனா இருக்கான்?

சற்றே ஏற்றமான உரத்த குரலில், “நண்பா, நல்லவன்-னு யாருமே கிடையாது. பார்க்கப்போனா நல்லதுங்கிறதே கெட்டது இல்லாம இருக்குறதுதான். சாமி மாதிரி, பேய் மாதிரி, மனசு மாதிரி, “நல்ல” அப்படிங்கிறதுகூட ஒரு நம்பிக்கைதான். என்னைய கேட்டியன்னா.. எல்லாமே கெட்டதுதான். கெட்டதுக்கு மரியாதை பண்ணின காலமெல்லாம் மனுஷனுக்கு பேர் சொல்லியே கூப்பிடாத காலம் நண்பா. எல்லாமே இடத்துக்காகதான். நீ யாரு? உன்னோட இடம் என்ன அப்படிங்கிறதுலதான் இருக்கு எல்லாமே. எல்லாருக்குமே ஒரு இடம் தேவைப்படுது. நம்மல ஊரே பாக்கணும்னு தோணுது. அதுதான் நல்லதுங்கிறாங்க. எதுக்குமே பேரில்லாம இருந்த காலத்தோட தொடர்பு பண்ணாம இருக்குறதுக்கு பேர்தான் நீ சொல்ற நல்லவன், வினய் மாதிரி. யோசி, உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் நாக்குல வந்துட்டா அப்புறம் நல்லது எங்க இருக்கும். புரியலண்ணா விட்டுரு. அதுதான் நல்லது!!” என்று சொன்னான்.

கசிந்த நீரின் வேகத்தைப்போல அப்போது மௌனம் மெல்ல பரவ ஆரம்பித்து அறை முழுதும் ஆக்கிரமித்தது. வினய் தன்னுடைய பையை தோளில் போட்டுக் கொண்டு எங்களைப்பார்த்து புன்முறுவலிட்டுக்கொண்டு அறையின் கதவைத் திறந்து படியிறங்கிச் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது மீரான் கைக்கடிகாரத்தை உற்று நோக்கி பார்த்தபடியிருந்தான். ஐந்தே நிமிடங்களுக்கு முன் வினய் எப்போதும் போல இருந்ததை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.

வினய் சென்ற முதல் நாள், மீரான் அறையிலிருந்து எங்கோ வெளியில் சென்றிருந்தான். அவன் எப்போது வருவான், எங்கே செல்கிறான் என்பதே தெரியாது. வாரத்தின் சில நாட்களில் அவனைப் பார்க்கவே முடியாது. சில முறை சீக்கிரமாகவே அறைக்கு திரும்பிவிடுவான். சில நாள் வார இறுதியில் அறைக்கு வந்ததே கிடையாது. அவன் அறையிலிருந்த நாட்களில் நானாக பேச்சு எடுத்தாலொழிய அவனாக பேசியது கிடையாது. அப்படி பேசிய சில நேரங்களில் அவனைப் பற்றிய தகவல்களை இப்படி மறைக்காமல் சொல்லிவிடுவான். அவன் யதார்த்தமாக பொய் சொல்பவன் என்பதே எனக்கு தோன்றுகின்ற கருத்தாக இருக்கிறது.

விடுதியின் காப்பாளர், மீரான் தான் அதிகாலையில் வருவான் என்பதை என்னிடம் தெரிவிக்க சொல்லியிருந்ததை சொன்னார். அடுத்த நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி. கதவு இரண்டு தட்டு விட்டு அடுத்த தட்டுக்கு சிறு இடைவெளியிட்டபடி அதிர்ந்துகொண்டிருந்தது. தூக்கமயக்கத்தோடு எழுந்தபடி தாழினை விலக்கித் திறந்தேன். மீரானோடு இன்னொருவன் நின்றுகொண்டிருந்தான்.

“இது நம்ம ஃபிரெண்டு, ஆற்காட்டுல இருக்கான். ஒரு வேலையா இங்க வந்துருக்கான் குளிச்சிட்டு கெளம்பிருவான்” என்று மீரான் சொன்னான்.

நான் லுங்கியை ஏற்றிக்கட்டியபடி அவனிடம் கைகொடுத்து அறிமுகம் செய்துகொண்டேன். அவன் ஆள் நெடிய உருவம். கை விரல்கள் பத்தும் இருபதுக்கு சமம் எனலாம். அடித்தால் மண்டை சுழலும். கைலி அணிந்திருந்தான். சட்டையின் இரண்டாவது பட்டன் தையலகன்று அங்கு ஒரு ஊக்கு போடப்பட்டிருந்தது. தலை மயிர் கம்மியாகவும், மீசை உதடு விளிம்புக்கு மேல் வரை மட்டும் விட்டு குறைத்தபடி சிரிக்காத முகத்தோடு வந்த வேலையை உடனே முடிப்பவன் போல கழிவறைக்குள் புகுந்துகொண்டான். நான் மீண்டும் என்னுடைய ஆழ்ந்த தூக்கத்துக்கு திரும்பியிருந்தேன்.

வெப்பம். படுக்கை ஒரு அடுப்பாக மாறியிருந்தது. மின்விசிறி “கெரக்கா, கெரக்கா” என்று சுழலும் சத்தம் மட்டுமே கேட்டது. அறை முழுவதும் இருள் பட்டை பட்டையாக நிரம்பியிருந்தது. மாலை மணி ஆறு இருக்கலாம். அப்போது தான் உறைத்தது. வழக்கத்திற்கும் மாறாக தூங்கிவிட்டேனோ! என்று. மீரானும், அவனுடைய நண்பனும் வெகு நேரம் முன்பே சென்றிருக்க வேண்டும்.

அந்த நினைப்போடு, புட்டத்தை நெருடிக்கொண்டே மெல்ல எழுந்து விளக்கின் பொத்தானைத் தேடிக்கொண்டிருந்தேன்.

வியர்வை நெடியால் உடல் வீச்சமடித்துக்கொண்டிருந்தது. பின்முதுகிலிருந்து பாய்ந்த வியர்வை நீர் முதுகுப் பள்ளத்தில் இறங்கிய சில்லென்ற உணர்வோடு விளக்குப் பொத்தானை அழுத்தினேன்.

கண்களைத் திறக்க முடியாதபடி வெளிச்சம் இருட்டைக் கொன்று அறையெங்கும் படர்ந்தது. வினய் பயன்படுத்தும் படுக்கையின் அருகாமையிலிருந்த நீர்க் குவளையிலிருக்கும் தண்ணீரை எடுத்துப் பகிர எழுந்து நின்றேன். ஒரு பருத்த வஸ்து என் கைகளை அரித்தது. அதன் இடுக்குகளில் வியர்வை நுழைந்து இறங்கியதால் அரிப்பு சுவாதீனமாக அதிகரித்தது. அப்போதுதான் மீரானுடைய கைக்கடிகாரம் என்னுடைய கைகளில் கட்டப்பட்டிருந்ததை உணர்ந்தேன். (இது அவனுடைய கையில் அல்லவா இருக்க வேண்டியது?)

நான்கு மடக்கு நீரை வேகவேகமாக அருந்திவிட்டு உடை மாற்றிக்கொண்டு மீரானைப் பார்ப்பதற்காக ஓடினேன்.

மக்கான பேட்டை துணிச்சந்தை போடும் இடத்தில் ஒரு நீண்ட வழி இருக்கிறது. அது நேராக பிரதான சாலையில் கொண்டு போய் முடியும். மெல்லிருட்டில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். இதயம் வேகமாக கனைத்தது. ஒவ்வொரு இடமாக தேடினேன். மீரானைப் போல சிலரை சந்திக்கவும் செய்தேன். ஆனால், மீரான் இருக்குமிடத்தை பார்க்க முடியவில்லை.

எதேச்சையாக துணிச்சந்தை சந்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் மீரானின் பின்னந்தலையைப் பார்த்தேன். ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையில் தன்னுடைய இடக்கை நகர்ந்தபடியும், வலக்கை அவளது மார்பகத்தைப் பிடித்தபடியும் மீரான் அவளின் மேற்புறமேனியில் ஊர்ந்துகொண்டிருந்தான். நான், அவன் செய்துகொண்டிருக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல், “மீரான், இங்க பாருப்பா…. இதைக் கொஞ்சம் எடுத்துக்குறியா?… இது உன்னோட வாட்சு தானே. என் கையில மாட்டியிருந்தது.. இதை வாங்கிக்கோ” என்று சொன்னேன். என்னுடைய குரல் ஒலித்த நேரத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தவனை, அவள், சட்டைக் காலரைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தாள். மீரான் அவளிடம் திரும்ப மறுத்தான்.

“மீரான், இது ரொம்ப நேரமா என்கிட்டயே இருக்கு, இதைக் கொஞ்சம் வாங்க்கிக்கிறியா?” அந்தப் பெண்ணைத் தள்ளி உதறிவிட்டபடி, மீரான் தன்னுடைய குறியை சரியாக கால்சராய்க்குள் விட்டுக்கொள்ளாமல் சந்தின் இருட்டில் ஓட ஆரம்பித்தான்.

“மீரான், ஓடாதே!! நில்லு. எங்க போற” என்று கத்திக்கொண்டே அவனைத் தொடர்ந்து ஓடினேன் . எனக்கு பின்னால், அந்தப் பெண் என்னைத் துரத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். பின்பக்கம் திரும்பி நான் அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே நீண்ட சந்தின் இடையில் ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டிருந்த மீரானின் நண்பன், இன்று காலையில் அறைக்கு வந்தவன் தான், அந்த பெண்ணை மறித்துப் பிடித்து ஒரு விலங்கைப் போல புணர ஆரம்பித்தான். அவள் அடித்தொண்டையிலிருந்து ஒரு விநோதமான ஒலியை எழுப்ப ஆரம்பித்தாள். அது காயடி வாங்கிய நாயின் குரல் போல ஒலித்தது.

இதைக் கவனித்துவிட்டு மீரானைத் தொடர்ந்து ஓடியபோது அவன் சந்தின் எல்லைக்கே சென்றிருந்தான்.

“ஓடாதே!! கொஞ்சம் நில்லு. இதை கொஞ்சம் வாங்கிக்கோ!” என்று அவனை ஒரே ஓட்டமாக நெருங்கியதும், சரியாக அவன் சாலையில் கால் வைத்து வேகமாக இடையில் நுழைந்த சரக்கு வாகனமொன்றை கவனிக்காமல் கனமாக மோதி மூக்கு, கண் சிதைந்து உடல் தூக்கி வீசப்படுவதற்கும் இடையே இரண்டு நொடிகள் மிச்சமிருந்தது.

மீரானின் உடலிலிருந்து ரத்தம் பேனாவிலிருந்து தெறிக்கும் மையைப் போல என் மீது குறுக்கு வெட்டாகப் பாய்ந்தது.

உடல், வண்டியின் மீது அடிபடும் தொலைவுக்கு மிக அருகில் இருந்தபோது மீரானின் கண்கள் சிதைவதற்கு முன்னால் சுழன்று உருண்டுகொண்டே என்னைப் பார்த்தது. அது கைக் கடிகாரத்தை வாங்க மறுத்ததன் அடையாளமாகவும், வினயின் கைகளில் அவனுக்குத் தெரியாமல் கட்டிவிடும்படி சொன்னதாகவும் இருந்தது. நான் அப்போது பின்பக்கமாக திரும்பி மீரானின் நண்பனை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். சட்டையிலிருந்த மீரானின் இரத்தக் கறையையும், கடிகாரத்தையும், என்னையும் பார்த்தவன் தப்பிக்க ஆரம்பித்தான்.

37வது சென்னை புத்தகக் காட்சியில் விருட்சம் பங்கேற்கிறது.  ஸ்டால் எண் 741ல் பங்கேற்க உங்களை அன்புடன்அழைக்கிறேன்.
2012ல் நான்கு புத்தகங்களும் 2013ல் 6புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  புத்தகங்கள் பற்றிய விபரம் இதோ:

ரோஜா நிறச்சட்டை – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.100 – பல ஆண்டுகளாக கதை எழுதி வருபவர்.  கதை எழுதும்போது  எப்போதும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அனுபவத்தை ஒரு கேடயமாக வைத்து கதைகள் எழுதினாலும்,  அனுபவம் வேறு, கதைகள் வேறு.   கிட்டத்தட்ட 60 கதைகள் எழுதியிருக்கிறார்.

வினோதமான பறவை – கவிதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.60 – üஅழகியசிங்கர் கவிதைகள்ý என்ற தொகுதிக்குப் பிறகு வெளிவரும் தொகுப்பு இது.  எழுதிய கவிதைகள் பல எந்தத் தேதியில் எந்த வருடத்தில் என்ற குறிப்பை வைத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டவை.

ஓசிப்மெண்டல்ஷ்டாம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் – விலை ரூ,20 – இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப்மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது. மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளும் அக்மேயிச இயக்கம் பற்றிய நூல்,

ழ கவிதைகள் – கவிதைகள் – பக்கம் ரூ.100 – 1990 ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த ழ கவிதைகள் என்ற இந்தத் தொகுப்பு மீண்டும் மறு பிரசுரமாக 23 ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.

ராம்காலனி-சிறுகதைத் தொகுதி-அழகியசிங்கர் – விலை ரூ.130 – 60 வயதாகிற அழகியசிங்கரின் 3வது சிறுகதைத் தொகுதிதான் ராம் காலனி என்ற புத்தகம்.  இதன் இரண்டாவது பதிப்பு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு பிரசுரம் ஆகிறது.

406 சதுர அடிகள் – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ. 70 – 406 சதுர அடிகள் என்ற அழகியசிங்கரின் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு டிசம்பர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது.  இது மூன்றாவது பதிப்பு.

எதையாவது சொல்லட்டுமா….92

அழகியசிங்கர்
    2004ஆம் ஆண்டு என் பெண்ணிற்கு திருமணம் செய்தபோது ஆறு லட்சத்தில் கல்யாணச் செலவு முடிந்துவிட்டது.  பெரிய கடன் எதிலும் மாட்டிக்கொள்ளவில்லை.  அதே திருமணத்தை அதே மாதிரி இப்போது நடத்தினால் முப்பது லட்சம் ஓடிவிடும்.  பெரிய கடனாளியாக மாறி இருப்பேன்.  இன்றைய கல்யாணத்தில் சத்திரம் பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.  ஒரு கல்யாணம் நடத்த பல மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  மணப்பெண்ணும் பையனும் வெளிநாட்டில் இருந்தால் ஆண்டுக் கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். 
    எனக்குத் தெரிந்து கல்யாணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமென்று தீர்மானித்து நடத்திய சிலரைத் தெரியும்.  என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.    நான் அவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.  üüஎன்ன பார்க்கிறீங்க? இவள் என் மனைவி,ýý என்றார்.
            “எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?”என்று கேட்டேன்.
    “நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டோம்.  பின் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம்.  அதற்கு ஆகும் செலவையெல்லாம் வங்கிக் கணக்கில் போட்டு டெபாசிட்டாக மாற்றி விட்டோம்,” என்றார்.
    இன்னொரு இலக்கிய நண்பர், ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அங்கிருந்தவர்களுக்கு, üüஇனி நானும் இந்தப் பெண்ணும் சேர்ந்து வாழப்போகிறோம்,ýý என்று கூறி முடித்துவிட்டார்.  ஜாதி சடஙகுகளில் ஆத்திரம் கொண்ட ஒரு நண்பர், ராகு காலத்தில் தாலி கட்டினார்.
    பின் கல்யாணத்திற்கு கூப்பிடுவது.  என் நெருங்கிய நண்பர் மேற்கு மாம்பலத்திலேயே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார்.  அவர் என்னைக் கூப்பிடவில்லை.  எனக்கே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார் என்பதே வேறு ஒரு நண்பர் மூலம்தான் தெரியும்.
    என் விஷயத்திலும் இப்படி தவறு நடந்திருக்கிறது.  என் பெண் திருமணத்திற்குக் கூப்பிட்ட பலரை என் பையன் கல்யாணத்திற்குக் கூப்பிடவில்லை.  
    என் உறவினர் ஒருவர், யாராவது வெறுமனே கல்யாணப் பத்திரிகை அனுப்பினால் போக மாட்டார். திருமணம் நடத்துபவர், உறவினரை போன் மூலமாகவோ நேரிலோ கூப்பிட வேண்டும்.  
    நான் அப்படி ஒரு நிலைப்பாடை எடுத்துக்கொள்வதில்லை.  யாராவது பத்திரிகை அனுப்பினால் அதுவே மரியாதைத் தரக்கூடிய ஒன்றாகக் கருதுவேன்.  போக முடியும் திருமணத்திற்கு நிச்சயமாகப் போவேன்.  கல்யாணம் என்பது மட்டுமல்ல, எந்தக் கூட்டத்திற்கும் அப்படித்தான்.  
    இன்று கூட்டம் நடத்துவது என்பதே பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ரூ75க்கு நான் ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தி விடுவேன்.  ஐம்பது ரூபாய்க்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்வேன்.  பின் இருபத்தைந்து ரூபாய்க்கு கார்டில் எல்லோரையும் கூப்பிடுவேன்.  இன்று அது மாதிரி கூட்டத்திற்கு ஐந்நூறு வரை செலவாகும்.  பின் ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.  
    கல்யாணமாக இருந்தாலும் சரி, எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி எல்லாம் எந்தத் தகராறும் இல்லாமல் நடக்க வேண்டும்.  அப்படி அமைந்தால் நல்லது.  அப்படி நடக்காவிட்டால் அந்தக்கூட்டம் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.  சண்டையோடு முடிந்த பல கல்யாணங்களைப் பார்த்திருக்கிறேன்.  
    கல்யாணக் கூடங்களில் சண்டை நடந்து நான் பார்த்திருக்கிறேன்.  ஜானவாசக் காரில் போதிய அளவிற்குப் பூ வைக்கவில்லை என்று மாப்பிள்ளை வீட்டார் நடத்திய சண்டையை நான் பார்த்திருக்கிறேன்.
    ஒரு கல்யாணத்திற்கு எங்கள் குடும்பம் முழுவதும் சுவாமி மலைக்குச் சென்றோம்.  பையன் வீட்டுக் கல்யாணம்.  பெண்ணின் தந்தை கோபக்காரர்.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.  அந்தக் கல்யாணத்தின் மூன்றாவது நாளன்று சத்திரத்தை விட்டுக் கிளம்பும்போது, டிபனுக்குப் பதில் சாப்பாடு போடலாம் என்று பையன் வீட்டு உறவினர் ஒருவர் கூற, அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார் பெண்ணின் அப்பா.  அதேபோல் பையன் வீட்டு உறவினர் இன்னொருவர் அவரிடம் மாட்டிக் கொண்டார்.அவர் எல்லோரையும் திரும்பவும் சென்னைக்கு அழைத்துப் போக ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வண்டி தஞ்சாவூரிலிருந்து வரும்போது பஞ்சர் ஆகிவிட்டது.  தேவையில்லாத தாமதம்.  குறிப்பிட்ட நேரத்தில் கிளம்ப முடியவில்லை. பெண்ணின் திட்டு திட்டென்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.  பையன் வீட்டாரும் சும்மா விடவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி, இப்படி ஒன்றுமில்லாத விஷயத்தில் சண்டையில் போய் நின்றது.  அந்தத் திருமணத்திற்குச் சென்று விட்டு, தப்பித்தால் போதும் என்ற கதியில் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
    ஒரு நிகழ்ச்சி என்றால், அதைக் குலைப்பதும் நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக நினைக்கிறேன். ஒரு கிரிக்கெட் போட்டிக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருப்பார்கள்.  அதை மழை வந்து குலைத்துவிடும.
    ஒருமுறை எங்கள் அலுவலகத்தில் தங்கக் காசுகள் விற்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  வங்கிக் கிளையே பரபரப்பாக இருந்தது.  பெரிய அதிகாரிகள் வர இருப்பதால் அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காக வங்கிக் கிளையின் தோற்றத்தில் பல மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம்.  அன்று காலையில் ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார்.  அவரை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தச் சமயத்தில் மின்சாரம் நின்று போய்விட்டது.  அந்த வாடிக்கையாளர் இருட்டில் போய்க் கொண்டிருக்கும்போது, லாக்கரைத் திறக்க உதவும் இரும்புப் படிக்கட்டின் முனை நெற்றியில் பட்டு ஒரே ரத்தம்.  விழா சிறிது நேரத்தில் துவங்குவதற்கு முன் இப்படி நடந்து விட்டது.  அன்று எதிர் பார்த்தபடி விழாவும் சிறப்பாக நடைபெறவில்லை.  சிறப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியைக் குலைப்பதற்கான இன்னொரு நிகழ்ச்சி அரங்கேறி விட்டது.  
    இதுமாதிரியான சம்பவங்கள் அரசியல் கூட்டங்களில் அதிகமாக நடைபெறும்.  சோ பேசும் கூட்டம் ஒன்று தி நகரில் ஏற்பாடாகி இருந்தது. 
அந்தக் கூட்டத்தின் முடிவில் பெரிய சலசலப்பு.  ஏனென்றால் மாடுகள் கூட்டத்தில் புகுந்து ரகளை ஆகிவிட்டது.  கூட்டத்தில்ü கலந்துகொண்ட நான் எப்படி கூட்டத்தில் நசுங்காமல் தப்பிப்பது என்ற தோன்றிவிட்டது.கூட்டத்தைக் குலைக்கும் நிகழ்ச்சிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை.
    க.நா.சு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்று விருப்பப் படுவார்.  ஆனால் அவர் இருந்தபோது அதுமாதிரியான கூட்டம் நடத்தமுடியாமல் இருந்தது.  காரணம் கூட்டம் நடத்தும் அனுபவம் இல்லை.
 
    நான் கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது இலக்கியக் கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  எனக்கு இலக்கியக் கூட்டம் நடத்த காரணமாக இருந்தவர் காயின் என்கிற பெயரில் பாத்திரங்களைத் துலக்கும் பவுடரை நடத்திக்கொண்டு வந்தவர்.  அவர் விளம்பரத்திற்காக என்னை மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தும்படி தூண்டினார்.  ஆனால் மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் கூட்டத்திற்கு ஆகும் செலவைப் பகிர்ந்துகொள்ளவில்லை.  நான்தான் ரூ75 செலவில் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  வந்து பேசுபவர்களுக்கு பயணச் செலவு கூட நான் தந்ததில்லை.    ஆனால் எல்லோரும் சொன்னவுடன் வந்தார்கள்.  சிலசமயம் ஓட்டலில் டீ காப்பி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.அந்தத் தருணத்தில் இலக்கியக் கூட்டத்திற்கு ஒரு தேவை இருந்தது.  இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  வல்லிக்கண்ணன் பேசும்போது மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைபற்றி முன்கதைச் சுருக்கம் போல் பேசிக்கொண்டே போனார். சிட்டி, காசியபன். ந. முத்துசாமி, சுஜாதா என்று பலர் பேசியிருக்கிறார்கள்.  கூட்டத்திற்கு வருபவர்கள் கிட்டத்தட்ட 35 அல்லது 40 பேர்கள்தான் இருப்பார்கள். கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் வர மாட்டார்கள்.  பெண்கள் வரவே மாட்டார்கள்.  எல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் அல்லது வயதானவர்கள்தான்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடி அறையில்தான் கூட்டம் நடக்கும்.  அதேபோல் சில படைப்பாளிகளின் இரங்கல் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன்.  கரிச்சான் குஞ்சு, ஷண்முக சுப்பையா. சி சு செல்லப்பா என்று.  
    பிரமிளை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று நினைத்தேன்.  அவரை கூட்டத்திற்கும் அழைத்தேன்.   கூட்டத்திற்கு வரவும் இல்லை.  பேசவும் வரவில்லை.  ஆனால் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  üநீங்கள் இப்படி கூட்டம் நடத்துவது ஆபத்தானது,ýஎன்று.  ஏன் அவர் அப்படி எழுதினார் என்று எனக்கு இன்னும்கூட புரியவில்லை.  எந்தக் கூட்டத்தையும் குலைக்கும் நிகழ்ச்சியை அவர் புரிந்துகொண்டு அப்படி சொல்லியிருக்கலாம்.
    இப்போதெல்லாம் கூட்டம் நடத்தினாலும் கூட்டத்திற்கு வருபவர்கள் போக்குவரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தைக் குலைக்கும் சதியாக போக்குவரத்தும் மாறிவிட்டது. 
   
    (APPEARED IN AMIRTHA MAGAZINE JANUARY 2014 ISSUE)
   

பொன்னாடை

 
 பா சிவபாதசுந்தரம்
 
 
ஒரு நண்பரிடமிருந்து சில வாரங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எங்கள் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு நடத்துகிறோம், நீங்கள் வந்து சிறப்புரையாற்ற முடியுமா? கேட்டவர் டாக்டர் பி.குமார்.

என்றைக்கு?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை.

சாதாரணமா நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவேலைகள் ஏதும் வைத்துக் கொள்வதில்லை. ஞாயிற்றுக்கிழமை என் குடும்ப தினம். வாரத்துல அந்த ஒரு நாள் தான் முழுவதுமாக என் மனைவி, மக்களோட இருக்கும் நாள். இருந்தாலும் நான் படித்த கல்லூரிக்கு கூப்பிடுகிறார் என்பதால் மறுக்க முடியவில்லை.

சரி வர்றேன். என்ன தலைப்புல பேசணும்?

உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றில் பேசலாம், என்றார் நண்பர்.

அந்த சுதந்திரமும் பிடித்திருந்தது.

அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு, புகைப்படமும் என்னை பற்றிய குறிப்பும் அனுப்ப சொல்லி.
சனிக்கிழமை மாலை மீண்டும் ஒரு அழைப்பு, வண்டி அனுப்பவா? என்று.

வேண்டாம். நானே என் காரில் வந்து விடுகிறேன் என்றேன்.

ஞாயிறு காலை. வழக்கம்போல் என் மனைவியுடன் கருத்தரங்கிற்கு ஆஜர். மிக சொற்பமான கூட்டம், கல்யாணம் முடிந்து மறுவீட்டிற்கு வரும் கூட்டம் போல.மற்ற கருத்தரங்குகளில் எப்படி என்று தெரியவில்லை. மருத்துவ கருத்தரங்குகளில் இது ஒரு பிரச்சினை. முதல் நாள் முழுதும் மது மற்றும் புகையை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வாசித்து, நிறைய பேசி நிறைய விவாதித்து விட்டு, அன்று மாலை களியாட்டத்தில், மூக்கு முட்ட குடித்து, அடுத்த நாள் காலை நிகழ்வுகளுக்கு வர இயலாத அளவிற்கு மட்டையாகி விடுவோம். ஒரு சில சமயம் இரண்டாவது நாள் காலை
 நிகழ்ச்சிகளில், பேசுபவரும், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டும்தான் இருப்பார்கள். தப்பிதவறி ஒருத்தரோ இரண்டு பேரோ அதிகம் இருந்தால் அநேகமாக அவர்கள் அடுத்து பேச வேண்டியபவர்களாக இருப்பார்கள்.

நான் அனுப்பிய குறிப்பை வைத்து ஒரு பெண், என்னை, வல்லவர், நல்லவர் என அரங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தினார். முன் வரிசையில் என் பழைய நண்பர்களும், வேறு சிலரும். பின் வரிசைகளில் முதுகலை மாணவ, மாணவியர்கள். உரையாற்றுபவர்களை கேள்விகள் மூலம் மடக்கி, தன் மேதமையையும், இருத்தலையும் பறைசாற்றும், அக்கலூரி பேராசிரிய
 நண்பர் அன்று வரவில்லை.

உரை முடிந்ததும் நினைவு பரிசையும் முதல்வரே வழங்கினார். அதை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு நண்பர்களிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு சாப்பிட சென்றோம்.

பிரியாணி. மற்ற நாட்களை விட ஞாயிறு மதியம் சாப்பிடும் பிரியாணியின் ருசியே தனி. முடித்து விட்டு அரை மயக்கத்தில் விடை பெற்றுக் கொண்டோம். கல்லூரியை விட்டு கார் சாலையை தொட்டதும்தான் ஞாபகம் வந்து, என் மனைவி கேட்டாள், ‘ஏங்க அந்த பொன்னாடையை மறந்துட்டமே’.

திரும்பணும் என்றால் ரொம்ப தூரம் போய்தான் ‘யூ டர்ன்’பண்ணனும்கிற சோம்பேறித்தனம். தூக்கக் கலக்கம் வேற.

‘விடு யார்கிட்டயாவது கொடுத்து விட்டிருவாங்க’ என்றேன்.

அடுத்த இரு நாட்களுக்கு வழக்கமான வேலை பளு. மூன்றாம் நாள் பொன்னாடை ஞாபகம் வந்தது. ஆனாலும் ஃபோன் செய்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதுக்கு நடுவுல என் மனைவி பொன்னாடை என்னாச்சுன்னு ஒரு முறை கேட்டாள்.

ம்ம்…. மறந்திருச்சு. ஃபோன் பண்றேன்னேன்.

அம்பத்தூரில் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கும் ஜெயராமன் என் நண்பர். சில சமயம் மதிய வேளைகளில் அவர் கடையில் இல்லாத நேரங்களில் கடை பசங்கதான் வியாபாரத்தை கவனித்துக் கொள்வார்கள். நான் கூட கேட்பதுண்டு, ‘எப்படி ஜெயராமன் பசங்களை நம்பி கடையை விட்டுட்டு போறிங்க?’

சார் பசங்களெல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க சார்.

எப்படி சொல்றீங்க?

அவங்க வேலைக்கு சேரும்போதே சோதித்து விட்டுதான் சேர்ப்பேன்.

என்ன செய்விங்க?

ஒரு நூறு ரூபா நோட்டை அவங்க கண்ணுக்கு மட்டும் தெரிகிற மாதிரி போட்டிருவேன். எடுத்து கொண்டு வந்து கொடுத்துட்டான்னா பரிட்சைல தேறிட்டான்னு அர்த்தம். இல்லையென்றால் பஸ்ஸுக்கு காசு கொடுத்து ஊருக்கு அனுப்பி விடணும்கிறதுதான் சோதனை.

யாராவது எடுத்துக்கிட்டு கொடுக்காம இருந்திருக்காங்களா?

இது வரைக்கும் இல்லை.

நேற்று பீரோவில் பழைய பொன்னாடை ஒன்றை பார்த்த போது ஏனோ ஜெயராமனின் சோதனை ஞாபகம் வந்தது.

படிப்பு ஏறாமல் கடையில் வேலை செய்ய வரும் பசங்களே நேர்மையாக இருக்கையில், படித்து பட்டங்கள் பெற்ற மருத்துவர்கள் கண்டிப்பாக பொன்னாடையை எனக்கு அனுப்பி விடுவார்கள். என்ன, அவர்களுக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம் இருப்பதால் சில மாதங்களோ அல்லது வருடங்களோ தாமதமாகலாம்.

இதில் என் தலையை அரிக்கும் ஒரே சந்தேகம், பொன்னாடையை பார்க்கும் பொழுது எனக்கு ஜெயராமன் ஞாபகம் வருவது போல், எனக்களித்த பொன்னாடையை பார்க்கும் போது அவர்களுக்கு எது ஞாபகம் வரும்? அல்லது
ஏதாவது ஞாபகம் வருமா?

இடையனின் கால்நடை

எம்.ரிஷான் ஷெரீப்
காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை
ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்
வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது
மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் – பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்
தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்