சில தகவல்கள்

அழகியசிங்கர்


நா முத்துக்குமார் மரணம் அடைந்த  செய்தி மதியம்தான் எனக்குத் தெரிந்தது.  சினிமா பாடலாசிரியராக பிரபலமடைந்தாலும் நல்ல நண்பர்.  காஞ்சிபுரத்தில் உள்ள வெ நாராயணன் இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு போனபோது முத்துக்குமார் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள்.   அவர் வீட்டில் ஒரு லைப்பரரி வைத்திருப்பதாக சொல்வார்கள்.
அவருடைய புதல்வர். என்று நா முத்துக்குமார் சென்னையில் ஒரு முறை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  தான் கவிதைகள் எழுதுவதாகவும் அதையெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர என் அறிவுரையைக் கேட்டார். அப்போது அவர் சினிமாப் பாடலாசிரியராக பிரபலமாகவில்லை.  கவிதைப் புத்தகம் கொண்டு வந்தாலும் அதிகப் பிரதிகள் அச்சடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறினேன்.  
அவருடைய திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். சென்றிருந்தேன்.  குறுகிய காலத்தில் பிரபலமானவர்.  அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
                                                                                                                                         *******
ஞானக்கூத்தனின் அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது.  கிட்டத்தட்ட 100 பேர்கள் கலந்து கொண்டார்கள்.  ஒரு மூத்த எழுத்தாளர் பேசும்போது அவரைவிட மூத்த படைப்பாளியை அவமரியாதையாகப் பேசினார்.  இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  எப்போதோ ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது. அதைக் குறித்து இப்போது கோபப் படுவதோ வருந்துவதோ தவிர்த்திருக்கலாம்.  மேலும் அஞ்சலி கூட்டம் என்று சொல்வதை விட ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும் கூட்டம் என்று மாற்றி அமைத்திருக்கலாம். அஞ்சலி கூட்டம் என்று சொல்லும்போது தேவையில்லாத சோகம் சூழ்ந்து விடுகிறது. ஞானக்கூத்தனே அதை விரும்பியிருக்க மாட்டார்.
                                                                                                                                          ********
நேற்று காலை ஐந்தரை மணிக்கு பெஸன்ட் நகர் பீச்சில் உள்ள கடற்கரைக்கு ஒரு கதை வாசிக்கும் கூட்டத்திற்குச் சென்றேன்.  எல்லோரும் இளைஞர்கள். 30 பேர்கள் வநதிருப்பார்கள்.   பெரும்பாலோர் ஆங்கிலத்தில் கதை வாசித்தார்கள்.  எப்படி ஒரு கதையை திரும்பவும் எழுத வேண்டுமென்று அதை நடத்துபவர் சொன்னதாக சொன்னார்.  அதெல்லாம் சரி.  ஆனால் சொன்னவருக்கு இதில் எந்த அளவிற்கு திறமை இருக்கும் என்பதும் சந்தேகம்தான்.  அவர்கள் வாசித்த கதைகளை உள்வாங்கிக் கொள்வதில் சிரமமாக இருந்தது.  

ழ – விருட்சம் இணைந்து நடத்தும் அஞ்சலி கூட்டம்

சமீபத்தில் காலமான கவிஞர் ஞானக்கூத்தன் நினைவைப் போற்றி அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.

தலைவர் : எழுத்தாளர் அசோகமித்திரன்

கலந்து கொள்பவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, கி அ சச்சிதானந்தன், வைதீஸ்வரன்,சா கந்தசாமி, வி அரசு, ம ராஜேந்திரன், வெ ஸ்ரீராம். வெளி ரங்கராஜன், பாரவி, திருப்பூர் கிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், ராஜ் கண்ணன், க்ருஷாங்கினி, பெருந்தேவி, ஆர் வெங்கடேஷ் இன்னும் பலரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இடம் : விழாவேந்தன் என் கே டி முத்து ஹால்
4/எ டி பி கோயில் இரண்டாவது சந்து
(மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரில்)
ஐஸ் ஹவுஸ் பஸ் நிலையம் அருகில்
திருவல்லிக்கேணி, சென்னை 5

தேதி 13.08.2016 (சனிக்கிழமை)

நேரம் மாலை 5.30 மணிக்கு

அனைவரும் வருக,

அன்புடன்
(ழ ராஜகோபாலன் – அழகியசிங்கர்)

இன்னும் யாராவது பேச விருப்பப்பட்டால், கூட்டத்தில் கலந்துகொண்டு பெயர்களைக் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று சர்வதேச பூனைகள் தினம்

சிங்கள மொழிக் கவிதை
பூனையாகிய
நான்…


உங்களைப்
போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப்
போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் அழ இயலாது
உங்களிடம்
கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம்
என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப்
போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப்
போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை
உங்களைப்
போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப்
போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப்
போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை
விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில்
– எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் பற்றிய
குறிப்பு
தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
சமூகம்
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக்
கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல்
என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

சில தகவல்கள்

அழகியசிங்கர்


கௌரி கிருபானந்தன் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர்.  முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்தார்.  ஐராவதம் அவர்களின் மாறுதல் தொகுப்பிலிருந்த கதை ஒன்றை தெலுங்கிற்கு மொழி பெயர்க்க அனுமதி பெற. “ஐராவதம் கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார்.  நீங்கள் மொழி பெயருங்கள்,” என்றேன்.  அந்தக் கதையை மொழிபெயர்த்த கௌரி கிருபானந்தன் அதை ஒரு தெலுங்கு பத்திரிகையில் பிரசுரமாக வழி வகுத்தார். 
ஒரு நாள் அவர்கள் ஐராவதத்தைச் சந்திக்க ஏற்பாடும் செய்தேன்.  ஆனால் அன்று அவரால் அவரைச் சந்திக்க முடியவில்லை.  ஐராவதமும் அவரைச் சந்திக்காமலயே இறந்து விட்டார். 
ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்பம் ஒத்துழைத்தால்தான் எதுவும் சிறக்கும்.  கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு அவர் கணவர் கிருபானந்தன் முழு ஒத்துழைப்பு.  கிட்டத்தட்ட 100 நாவல்களுக்கும் மேலாக தமிழில் புத்தகங்களை தெலுங்கிலிருந்து கொண்டு வந்துள்ளார்.  ஆனால் தமிழிலிருந்து தெலுங்கில் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார்.  தமிழில் உள்ள மாதிரி பதிப்பாளர்கள் தெலுங்கில் இல்லை என்கிறார்.
மீட்சி என்ற ஓல்காவின் தெலுங்கு சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தற்காக கௌரி கிருபானந்தன் சாகித்திய அக்காதெமியின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான பரிசை வென்றுள்ளார்.  தெலுங்கிலும் அப் புத்தகம் ஓல்காவிற்கு தெலுங்கு மொழிக்கான சாகித்திய அக்காதெமி பரிசை அள்ளித் தந்திருக்கிறது. இப்படி இரண்டு பரிசுகளைத் தட்டித் தந்திருக்கும் புத்தகம் மீட்சியாகத்தான் இருக்கும்.
112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை  பாரதி புத்தகாலயம் பிரசுரம் செய்துள்ளது.  இப் புத்தகம் விலை ரூ. 70 தான்.  இவருடைய இன்னொரு முக்கியமான புத்தகம் கொண்டபல்லி கோடேஸ்கரம்மா எழுதிய ஆளற்ற பாலம் என்ற புத்தகம்.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப் புத்தகம் பற்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எல்லோரிடமும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நானும் இப்புத்தகத்தினல் 26 பக்கங்கள் வரை படிக்கத் தொடங்கி விட்டேன்.  
    
சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற ஓல்கா என்கிற மீட்சி என்ற கதைத் தொகுப்பு இராமயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள்.  எப்படி வித்தியாசமாக ராமாயணக் கதைகளை யோசிக்கலாம் என்பதற்கு இப் புத்தகம் ஒரு உதாரணம். 
               கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு விருட்சம் சார்பில் என் வாழ்த்து.
 
    

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர் 


சில கவிதைகளைப் படிக்கும்போது, படிப்பவர்க்கு ஒரு பங்காகவும், கவிதை எழுதுபவருக்கு இரண்டு பங்காகவும் பலன் தரும. கவிதை எழுதுபவர்கள் படித்து ரசிப்பதோடல்லாமல், இப்படியெல்லாம் கவிதை எழுதலாம் போலிருக்கிறது என்று முயற்சியும் செய்யலாம்.  
ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அப்படிப்பட்டதுதான்,  இதை மொழி பெயர்த்தவர் பிரம்மராஜன். இந்தப் புத்தகம் முதல் முறையாக 2001லும் இரண்டாவது முறையாக 2013லும் வெளிவந்துள்ளது.  இப் புத்தகத்தின் தற்போதைய விலை ரூ.20தான்.  ஆனால் இதன் மூலம் ஏராளமான வரலாற்று விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். 32 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை எளிதில் படித்து முடித்துவிடலாம்.  
இருபதாம்ம நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது.  மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளைக் கொண்ட நூல் இது. அக்மேயிசம் என்ற கவிதை இயக்கத்தைப் பற்றி இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அக்மேயிஸ்டுகள் “சொல்” ஒரு குறியீடாக்கப்படுவதை விரும்பவில்லை. ஒரு சொல் அது இருக்கிறபடியே, அதன் வாழ்நிலையிலேயே அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவரது கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தி கட்டுரை எழுதி உள்ளார்.  உங்கள் வாசிப்புக்கு ஓசிப் மெண்டல்ஷ்டாமின் கவிதை ஒன்றை இங்கு அளிக்கிறேன்.
– என்ன தெரு இது?
– மெண்டல்ஷ்டாம் தெரு
– என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திரும்பினாலும் கூட
இது கோணல்மாணலாகவே வருகிறது
– அவரும் கூட நேரான ஆள் இல்லை துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலர ஒத்திருக்கவில்லை
மேலும் அக் காரணத்தினால்தான் இத்நத் தெரவுக்கு (மாறாக,
நேர்மையாகச் சொல்வதானால், இந்த சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர் தரப்பட்டது. 

உரையாடல் தொடருகிறது….

அழகியசிங்கர்


அழகியசிங்கர், ஜெகன், மோஹினி மூவரும் சோகமாக அமர்ந்திருந்தார்கள்.  அவர்களுடைய சோகத்தை நீண்ட மௌனம்தான் உணர்த்திக் கொண்டிருந்தது. 
அழகியசிங்கர் :   வருத்தமாக இருக்கிறது.  
மோஹினி :  ஆமாம்.  நான் கூட எதிர்பார்க்கவில்லை.
அழகியசிங்கர் :  பிதாமகர் ஸ்தானத்தில் நமக்கு அறிவுரை கூறுபவரை இழந்து விட்டோம்.
ஜெகன் :  அவரைப் பார்க்கும்போது அவர் இறந்து விடுவார் என்பது தெரியவில்லை. 
மோஹினி :   78வயது வரை இருந்து விட்டார்.  78 என்பது சாதாரண வயதில்லை
அழகியசிங்கர் :  நான் ஞானக்கூத்தனைப் பார்க்கும்போதெல்லாம் உடல்நிலை சரியில்லாதவரைப் பார்ப்பதாக தோன்றாது.  அவ்வளவு உற்சாகமாக இருப்பார். 
ஜெகன் :  சமீப காலத்தில் அவர் டயட்டில் இருந்தார்.  குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில் ஒழுங்காக இருப்பார்.  யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் இதில் உறுதியாக இருபபார்.  
அழகியசிங்கர் :  நான் பார்க்க வருகிறேன் என்று சொன்னால் அவர் யோஜனை செய்வார்.  மாம்பலத்திலிருந்து நான் வருகிறேன் என்பதால் சிலசமயம் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.
மோஹினி :   என்னைப் பொறுத்தவரை அவர் கவிதைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.  அவர் கவிதைகள் உலகத் தரத்தில் ஆனவை. 
ஜெகன் :  அவர் கவிதைகள் படிப்பவரை யோசிக்க வைக்கும்.
அழகியசிங்கர் :  இன்று கவிதைகள் எழுதும் பெரும்பாலோர் ஞானக்கூத்தனை டச் செய்துவிட்டுத்தான் வந்திருக்க வேண்டும்.  
மோஹினி :  அவருக்கு உரிய கவனம் தரவில்லை என்பது என் வருத்தம். 
அழகியசிங்கர் :  வாசகர் கவனத்தில் அவர் இருக்கிறார்.  அவர் எழுதி விட்டுச் சென்ற கவிதைகள் அவருடைய பெயரை காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.  
ஜெகன் :  எப்போது நீங்கள் அவரை முதன் முதலாக சந்தித்தீர்கள்.  
அழகியசிங்கர் :  நான் சந்தித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்.  நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், படிப்பதிலும், எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் என் உற்சாகம் அளவு கடந்து இருக்கும்.
மோஹினி :   நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நீங்கள் 88ல் தான் கொண்டு வந்தீர்கள்..
ஜெகன் :  ஆத்மாநாமின் ழ மாதிரிதான் அதைக் கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்தீர்களா…
மோஹினி :  ழ மாதிரி உங்கள் முதல் இதழில் கவிதைகள் மட்டும் இருக்கும்.  வேற எதுவும் இருக்காது.
அழகியசிங்கர் :  ஆமாம். கவிதைகள் மட்டும் இருக்கும்.  ஆத்மாநாமிற்குப் பிறகு ழ பத்திரிகை ஞானக்கூத்தன் ஆசிரியப் பொறுப்பில் திரும்பவும் வந்தது.  அந்தப் பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வர நானும் எனனால் முடித்த உதவியைச்  செய்தேன்.
மோஹினி :  ஆனால் சில இதழ்களுக்குப் பின் அவர்களால் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை 
ஜெகன் :  அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்..
அழகியசிங்கர் : அலுப்பு.  திரும்பத் திரும்ப இதுவேவா என்று அதில் ஈடுபட்டவர்களுக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.  முதலில் அவர்களுக்கு அந்தப் பத்திரிகை முதன்மையாக தோன்றியது.  ஆத்மாநாமின் தறகொலை அவர்களை வேறு மாதிரி யோசிக்க வைத்திருக்கும். அவர்களுக்கு லௌகீக தாக்கம் அதிகமாக இருந்தது.    ஆனால் ஞானக்கூத்தன் வேறுவிதமாக இருந்தார்.  அவர் முழுக்க முழுக்க கவிதைகளைப் பற்றிய சிந்தித்தார்.  கவிதை எழுதுபவர்களை எழுதத் தூண்டினார்.  ழ பத்திரிகை வராத சமயத்தில் நான் கேட்டேன்.  நான் முயற்சி செய்யட்டுமா என்று.  ஞானக்கூத்தன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ü நீங்க வேறப் பத்திரிகை ஆரம்பித்து விடுங்கள்,ý என்றார்.  விருட்சம் பத்திரிகை அப்படித்தான் வந்தது 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :  . அந்தச் சமயத்தில் ஞானக்கூத்தன் ஒவ்வொரு இதழிலிலும் ஒரு கவிதை பிரசுரிக்கக் கொடுப்பார்.  சில இதழ்களுக்குப் பிறகு கவிதை என்றில்லாமல் வேறு விதமாக பத்திரிகை மாறியது.  கதைகள் எல்லாம் வரத் தொடங்கின.  பக்கம் அதிகமாக வந்தது.  நான் ஒருவனே எல்லாச் செலவுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டடேன். அட்டை என்ற ஒன்று இருந்தது.  
ஜெகன் :   இப்படித்தான் விருட்சம் 99வது இதழ் வரை வந்துவிட்டது. 
அழகியசிங்கர் :  1988ல் இதன் முக்கியத்துவம் பெரிதாக இருந்தது.  இப்போது சிறுபத்திரிகையின் முகம் மாறிவிட்டது.  இருந்தாலும் ஒரு தனி மனிதனின் குரலாகத்தான் இது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  வெறும் பத்திரிகை மட்டுமல்லாமல் புத்தகங்களும் கொண்டு வந்தேன்.  அப்போது ஞானக்கூத்தனின் கவிதைகள் சிறு சிறு புத்தகங்களாக வந்திருந்தன.  ஒரு முழுத் தொகுதி வேண்டுமென்று ஒரு முயற்சி செய்தேன்.  ஞானக்கூத்தனின் பல கவிதைகளை தீபம் என்ற பத்திரிகைகளிலிருந்து தனிப்பட்ட முறையில் ந பா புதல்வரின் வீட்டிற்குச் சென்று தீபம் பத்திரிகைகளைப் பார்த்து ஒரு தாளில் எழுதி சேர்த்தேன்.  இன்னும் பல பத்திரிகைகளிலிருந்து விட்டுப் போன கவிதைகளையும் சேர்த்தேன். ஞானக்கூத்தன் கவிதைகளின் மீதான ஈடுபாடால் இதையெல்லாம் செய்தேன்.புத்தகம் கொண்டு வந்தேனே தவிர புத்தகம் விற்கும் வழிமுறை சரியாக தெரியாது.  அத் தொகுதியின் பெயர் ஞானக்கூத்தன் கவிதைகள். மொத்ம் 196 கவிதைகள்.  ஞானக்கூத்தன் வரைந்த ஓவியங்களுடன் அப்புத்தகம் வந்தது.  
மோஹினி :  ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் வரும்போது முப்பெறும் விழா நடத்தினீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் :    ஆமாம்.  ஆதிமூலம், சா கந்தசாமிக்கும் சேர்த்து நடத்தினோம்.  
ஜெகன் :    பென்சில் படங்கள் என்ற புத்தகம் கூட கொண்டு வந்தீர்கள்..
அழகியசிங்கர் :   நான் ஒருவனே கணினியில் அடித்துக் கொண்டு வந்த புத்தகம்.  கிட்டத்தட்ட 87 கவிதைகள் கொண்ட புத்தகம்.  அதன்பின் கவிதைக்காக என்ற கட்டுரைத் தொகுதியும் கொண்டு வந்தேன்.  .இதோ இப்போது இன்னொரு கவிதைத் தொகுதி ஒன்று கொண்டு வர உள்ளேன். அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு அவர் கவிதைகள் மீது உள்ள ஈர்ப்பு  அலாதியானது.  அவர் உலகம் முழுவதும் போற்றப்பட வேண்டிய கவிஞர்.  இது குறித்து ஒரு கட்டுரை எழுத உத்தேசம். இத் தருணத்தில் அவர் உயிரோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவர் நினைவாக ஒரு  மலர் கொண்டுவர நினைத்துள்ளேன்.  
(மூவரும் ஞானக்கூத்தனுக்காக மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)
                                                                            (இன்னும் வரும்…)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 2

அழகியசிங்கர் 
 ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது

    கண்டராதித்தன்

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக் கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.
இரண்டெடிôருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.
நன்றி : திருச்சாழல் – கண்டராதித்தன் – கவிதைகள் – விலை : ரூ.70 – வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 98426 47101

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1

அழகியசிங்கர் 

புத்தர் அழுதார்




வெய்யில்


யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க…
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.

நன்றி : குற்றத்தின் நறுமணம் – வெய்யில் – கவிதைகள் – விலை : ரூ.80 – வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112
தொலை பேசி : 98426 47101

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22

அழகியசிங்கர்

இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம்.  ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன்.  கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் :

1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு.   நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்;

2.  ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச;

3.  ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள;

4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள

கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.