இலக்கியக் கூட்டங்களை சீக்கிரமாக முடியுங்கள்

அழகியசிங்கர்

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் சீக்கிரமாக ஆரம்பிப்பதில்லை.  சரியாக மாலை  5 மணிக்கு ஆரம்பிப்பதாக சிற்பி அவர்கள் படைத்த கருணைக்கடல் இராமாநுசர் காவிய நூல் அறிமுக விழா  இருந்தது.  ஆனால்  மாலை  6 மணிக்குத்தான் ஆரம்பித்தது.  நல்லகாலம் நான் 6மணிக்குத்தான் சென்றேன்.  கொஞ்சம் தூங்கி விட்டேன்.

அங்கு பேசியவர்கள் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார்கள்.  இதுவே அரைமணிநேரம் மேல் ஓடியிருக்கும்.  அதற்கு முன்னால் பேசுபவர்கள் பற்றிய அறிமுகமே 20 நிமிடங்களுக்கு மேல் போயிருக்கும். அப்புறம் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.

முதலில் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பேச ஆரம்பித்தார்.  கேட்டுக்கொண்டே இருக்கும்போது எப்போது பேச்சை நிறுத்துவார் என்று தோன்றியது. üமருத்துவர் சொல்லியிருக்கிறார்.  கூட்டத்தில் அதிக நேரம் பேசக்கூடாது,ý என்றே அரைமணி நேரம் மேல் பேசி விட்டார்.  அதேபோல் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் அரைமணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டு விட்டார்.

அவர் பேசியவுடன் கூட்டத்திலிருந்து பலர் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.  மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  மணி 8.30 ஐத் தொட்டுவிட்டது.  இனிமேல் அங்கு இருக்க முடியாது என்று தோன்றியது.  உடனே எழுந்து கிளம்பி விட்டேன்.

இதுமாதிரியான இலக்கியக் கூட்டங்களில் ஒரே ஒருவரை மட்டும்பேசக் கூப்பிட்டு, கூட்டத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.  5 மணிக்கு ஆரம்பித்து 7 அல்லது 7.30 மணிக்குள் கூட்டம் முடித்திருக்க வேண்டும்.

நான் எழுந்து வந்தபிறகு அக் கூட்டம் எப்போது மாலை முடிந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தேன்.  நிச்சயமாக இரவு 10 மணிக்கு முடிந்திருக்கும்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 38



அழகியசிங்கர்  

பொய்க்கடை

மாலதி



தெரிந்தவர் யாரும் சுற்றும் முற்றும் கண்ணில் படாத
சடக்கென்ற கணத்தில் நுழைந்தேன்.
பொய் விற்கும் கடைக்குள்.

நெடு நாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கிவிட.

ஒவ்வொன்றாய் உபயோகித்து என்
உலகை அலங்கரிக்க
தேடினேன்.

இது வரியிட்ட பொய்
கட்டமிட்டது,
ஓரம் மட்டும் பொய்.
அரை வெளுப்பில் பொய்
பாதிப்பொய் அரைக்கால் பொய்

இது மதப்பொய், இது நம்பிக்கைப்பொய்
மதிமில்லாத மதர்ப்பின் பொய்
இருக்குமிடம் தெரியாத,
லேசாய் இது இலக்கியப் பொய்.

உண்மையிடத்துப் பொய். வாதத்துக்காய்
பொய்.  உயிர்காக்கும் நியாயத்துக்காய்
பொய்.  இப்படி நிறைய
முழுப் பொய் கிடைக்குமா? கேட்டேன்.
என்னை ஏற இறங்க பார்த்தார்
கடைக்காரர்.

கனப் பொய் முடக்கி வைத்திருக்கிறோம்
கனவான்களுக்காக.
பாதுகாக்க ஒன்றுமில்லாத
பைத்தியங்களுக்கு நாங்கள்
பொய் விற்பதில்லை என்றார்.
அப்போது தான் உணர்ந்தேன்
என் ஆடையின்மையை

நன்றி : மரமல்லிகைகள் – கவிதைகள் – மாலதி – வெளிவந்த ஆண்டு : 2003 – சாந்தினி பதிப்பகம், ஆர்என் 6 பட்டினப்பாக்கம் குடடியிருப்பு, சென்னை 600 028 – புத்தகத்தில் விலையே குறிப்பிடப்படவில்லை – தொலைபேசி : 044 24941111

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்

 

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்.  மொட்டையின் விளைவு என்னைத் தூக்கி கள்ளிமேடு என்ற கிளைக்கு மாற்றினார்கள். அதேபோல் இன்னொரு அலுவலரை கள்ளிமேடு பக்கத்தில் உள்ள கிராமக் கிளைக்கு மாற்றினார்கள்.   உண்மையில்  குமாஸ்தாக்களை ஒன்றும் செயயவில்லை. ஏன்?
அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுமாதிரியான மொட்டைகடிதாசைத் தயாரித்திருக்க மாட்டார்கள்.  காரணம்.  அந்த மொட்டைக் கடிதம் டைப் அடித்திருநதது. இறுதியில் பந்தநல்லூர் வாசிகள் என்று கையெழுத்து எதுவும் போடாமல் அனுப்பியிருந்தார்கள்.  கிராமத்தில் யார் இதுமாதிரி  செய்வார்கள் என்று யோசிப்பேன். அலுவலகத்திலேயே பிடிக்காதவர்கள் செய்திருக்க  வேண்டுமென்று தோன்றியது.  கள்ளிமேட்டிற்குப் போகும்படி வற்புறுத்தினால் வேலையை விட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.  ஆனால் அதுமாதிரி ஒன்றும் ஆகவில்லை. என்னையும் இன்னொருவரையும் மிரட்டி ஆர்டரை ரத்து செய்தார்கள்.
அந்தத் தருணத்தில் நான் எழுதிய ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  ஜனவரி 2008ல் வெளிவந்த விருட்சத்தில் இந்தக் கவதையைப் பிரசுரம் செய்தேன்.
இதை அலுவலத்தில் உள்ள மேலதிகாரிகள் படித்துவிட்டு என் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று துளிக்கூட பயமில்லை எனக்கு. காரணம்.  விருட்சம் என்ற பத்திரிகையை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.  மேலதிகாரியைத் திட்டி பத்திரிகையை அனுப்பினாலும் அவர் படிக்கக் கூட மாட்டார்.  தொடக்கூட மாட்டார்.  என் கிளை அலுவலகத்திலேயே தமிழில்தான் பேசுவார்கள்.  தமிழ் புத்தகம், தமிழ் பத்திரிகை படிக்கக்கூட மாட்டார்கள். என் தொகுப்பில் சேர்க்க மறந்த அந்தக் கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.

மொட்டை லிகிதங்கள்

பத்மநாபன் கையில்
மொட்டைக் கடுதாசின் நகல்
அலுவலகத்தில்
கஸ்டமர் முன்னால் தூங்கிக்கொண்டிருக்கிறாரென்று
பத்மநாபன் திகைத்து விட்டார்
அவருக்குத் தூக்கம் சரியாக வந்து
ஆயிற்று பல மாதங்கள்
ஏன் இப்படி ஒரு மொட்டை..?

ஆடிமுன் நின்று தன்  முகத்தைப் பார்த்தார்
முகம் களையிழந்து போயிற்றா?
ஒரு சமயம் தூங்கிக்கொண்டிருக்கும்
முகமாய் மாறிவிட்டதா?
.

கேசவனுக்கு வேறுவிதமாய் மொட்டை
பெண் கஸ்டமரை மட்டும் தனியாகக்
கவனிக்கிறானென்று –
இம்சிக்கிறானா கவனிக்கிறானா
புடவைக் கட்டிக்கொண்டிருந்தால் போதும்
சேகரனுக்கு என்று இளித்தக்கொண்டே
சொன்னான் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி மீதும் சந்தேகம் பத்மநாபனுக்கு
மொட்டை உருவாகுமிடம்
அவனிடம்தான் என்று. அலுவலகத்தைப் பற்றி
அவதூறாக மேலிடத்திற்குத் தவறாமல்
தகவல் தருவதைக் முக்கிய கொள்கையாகக் கொண்டவன்

இன்னொரு மொட்டையும் துளிர்த்தது
கோவிந்தன் மீது
லோன் பார்ட்டியை லோ லோவென்று
அலைய விடுவானென்று
மொட்டையைப் படித்துத் திருதிருவென்று விழித்தான்.
..

சந்தேகம் வராத மாதிரி தட்சிணாமூர்த்தியின் மீதும்
ஒரு மொட்டை. அவனே எழுதிக்கொண்டதா?
கஸ்டமர் வந்தால் லொள்லொள் என்று எரிந்து விழுவானென்று
üநான் அப்படியில்லை..அப்படியில்லைý என்று புலம்ப
ஆரம்பித்தான் மொட்டையைப் பார்த்து

பத்மநாபன் பின்னால் அமர்ந்திருக்கும்
குண்டு மகாலிங்கம் மீதுதான் எல்லோருக்கும்
எரிச்சல்.  அலுவலகம் வந்தால் விவஸ்தை இல்லாமல்
ஆர்ப்பரிப்பான். சிலசமயம் அசிங்கமாய்
உடலசைத்துப் பாட்டு பாடுவான்
கஸ்டமர் முன்னால் குஸ்திக்கு நிற்பான் என்றெல்லாம்
மொட்டையின் விபரீத வரி வடிவங்கள்
‘ப’  கிராமத்து வாசிகள் என்று
கையெழுத்து இல்லாமல், தேதி இல்லாமல்,
டைப் அடித்த மொட்டை லிகிதங்கள் துளிர்க்கும்.
யாரோ வேண்டாதவர்கள் செய்த சதி
என்று கத்தினான் மகாலிங்கம்

மாற்றினார்கள் குண்டு மகாலிங்கத்தையும், பத்மநாபனையும்
தூர இடங்களுக்கு
ஆபிஸர்கள் என்பதால் –
நினைத்துப் பார்க்க முடியாத தூரக் கிளைகள் –
இருவரும் ஓடினார்கள் சரணம் சரணமென்று மேலிடத்திற்கு

மேலிடம் முறுக்கிக்கொண்டது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37

அழகியசிங்கர்  

 மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள்

கோ ராஜாராம்


“ஹலோ”
வழக்கம் போல்
கையுயர்த்தி நானிரைந்தேன்
தூரத் தெரிந்த நண்பனிடம்.
அருகிருந்த ஃபாக்டரியின்
மெஷினிரைச்சல் ஓசைகளில்
என் ஓசை கரைந்தது.

என்
உயர்த்திய கைக்குப் பதில்
அவனசைக்கும் கையும்
வாயசைப்பும் தெரிகிறது.
வழக்கம் போல்.

மெஷின்களில் ஓசைகளில்,
பழக்கமில்லா உயிர்ப்பு.

நன்றி : அலுமினியப் பறவைகள் – கவிதைகள் – கோ ராஜாராம் – வெளியீடு : அன்னம் பிரைவேட் லிமிடெட், சிவகங்கை 623 560 – முதல் பதிப்பு : டிசம்பர் 1982 – விலை ரூ.4 – அட்டை : ஞான. இராசசேகரன்

சாருநிவேதிதாவின் இராச லீலா என்ற புத்தகம் பற்றி

 நண்பர்களே
வணக்கம்.  நீங்கள் இங்கே ஆவலுடன் கூடியிருப்பது இராச லீலா என்ற 614 பக்கங்கள் கொண்ட நாவலைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்று.  தமிழில் 3 எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எங்கு போய் பேசினாலும் அபிமானிகள் கூடி விடுவார்கள்.  உங்களுக்கும் இது தெரியும்.   3 எழுத்தாளர்களில் ஒருவர் சாருநிவேதிதா.  சாரு நிவேதிதாவிற்கு அபிமானிகள் அதிகம் உண்டு.  ஆனால் சாருநிவேதிதா விஷயத்தில் அபிமானிகளும் எதிர்ப்பவர்களும் உண்டு.  நான் வேண்டுமென்றே பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்கும் மற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் மட்டும்தான் உண்டு.  இந்த எதிர்ப்பாளர்கள் சாருநிவேதிதாவின் புத்தகத்தைப் படித்து அவரை கண்டபடி திட்டவும் திட்டுவார்கள்.  ஏன் சிலசமயம் வன்முறையில் இறங்கினாலும் இறங்குவார்கள்.  சாருநிவேதிதாவும் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருக்க மாட்டார்.  நான் இந்தப் புத்தகத்தைப் பாராட்டி சொன்னால், அபிமானிகள் என்னை வாழ்த்துவார்கள்.  ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரை எதிர்ப்பதுபோல் என்னையும் எதிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.   நான் எந்தப் பக்கம் என்பதை அறிய நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்..
சரி, சாருநிவேதிதாவின் அபிமானிகள் தவிர, உங்களில் எத்தனைப் பேர்கள் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள்?  அந்தப் புத்தகம் எப்படி இருக்குமென்று பார்த்திருக்கிறீர்களா?    நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்க மாட்டீர்கள்.  ஏன் நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா என்பது கூட எனக்குச் சந்தேகம்.
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இப் புத்தகம் ஒரு போன் செய்தால் உங்கள் வீட்டிற்கே வந்து விடும்.  612 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  உண்மையில் இதன் விலை 600 ரூபாயிக்கும் மேல்தான் வைத்திருக்க வேண்டும்.  சரி இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கத் தயாராக உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு என்ன வயது இருக்க வேண்டும்.
நான் பள்ளிக்கூடம் படிக்கும் வயதில் இருக்கும்போது பேப்பர் கடை முன்னால் நின்று என்ன பத்திரிகை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன்.  என் மாமா ஒருவர் கல்கண்டு பத்திரிகையை வாங்கச் சொல்வார்.  குமுதம் ஆனந்தவிகடன் ராணி போன்ற பத்திரிகைகளை வாங்க வேண்டாம் என்று சொல்வார். அவையெல்லாம்  ஆபாஸப் பத்திரிகைகள் அவருக்கு.   படித்தால் மனசு கெட்டுவிடும் என்பார்.  ஆனால் அப்போது டிவி இல்லாத காலம்.  இப்போது டிவியை எல்லா வயதினரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் பார்க்கக் கூடாததைப் பார்க்கத் தவறுவதில்லை.  ஆபாஸமும், வன்முறையும்தான் டிவி சீரியல் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.  குழந்தைகள் முன் நாம் இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகள் மனம் கெட்டுப் போக வாய்ப்புள்ளது.
ஆனால் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு என்ன வயதிருக்க வேண்டும்.  எனக்கு வயது 60க்கு மேல் ஆகிவிட்டது.  எனக்கு இப் புத்தகத்தைப் படிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை.  என் வீட்டிலும் வயதானவர்கள்தான் இருக்கிறோம்.  மேலும் ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்துப் படிக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறது.  என் வீட்டில் என்னைத் தவிர தமிழ்ப் புத்தகங்களை யாரும் படிக்க மாட்டார்கள்.  ஏன் தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் புத்தகங்களைக் கூட படிக்க மாட்டார்கள்.  யாரும் நான் வைத்திருக்கும் புத்தகத்தைத் தொடக் கூட மாட்டார்கள்.  உங்கள் விஷயம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன்.  நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பதால் இந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஆனால் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள்!  நீங்கள் டேபிளில் இந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியூர் சென்று விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது நீங்கள் என்ன புத்தகம் படிக்கிறீர்கள் என்று யாராவது எடுத்துப் பார்ப்பார்களா?  ராஸ லீலா என்ற புத்தகத்தை அப்படி எடுத்துப் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அவர்களுக்கு உங்களை விட வயது குறைவு என்று வைத்துக்கொள்ளுங்கள்.  இதுமாதிரியான புத்தகங்களை அவர்கள் படித்த அனுபவம் இல்லாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களைப் பார்த்து அவர்கள் திட்ட எல்லா வாய்ப்பும் உண்டு.  பள்ளிக்கூடம் படிக்கும் புதல்வனோ புதல்வியோ இருந்தால்  நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க அனுமதிப்பீர்களா?   இப் புத்தகம் படிக்க இன்னும் கொஞ்சம் வயது வர வேண்டும்.  நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் 614 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தைப் படிக்க நேரம் இருக்கிறதா உங்களுக்கு?  நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால், அலுவலகம் போய்விட்டு வந்து இப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொள்வீர்களா?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் நீங்கள் புத்தகம் படிக்க எடுத்துக்கொள்வீர்கள்?  உண்மையில் தண்டமாக ஒரு தமிழ் சினிமா பார்க்க உங்கள் பொழுதை செலவு செய்வீர்கள்.  ஆனால் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றாது.  ஏன்?
சில சினிமாக்களைப் பார்க்க இரண்டு விதமான சான்றுகளை அளிப்பார்கள்.  ஒரு சான்று யு இன்னொரு சான்று எ.  எ சான்றிதழ் பெற்றப் படமாக இருந்தால், அதைப் பார்க்க 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.  புத்தகத்திற்கும்  அதுமாதிரியான பிரிவைக் கொண்டு வந்துவிடலாôம்.  சாருநிவேதிதாவின் இந்த நாவலைப் படிக்க எ சான்றிதழ் அளிக்கலாம்.
நீங்கள் கேட்கலாம்.  எல்லாம் சரி, இன்னும் இப் புத்தகம் உள்ளேயே போகாமல் வேற எதுவோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.
நீங்கள் அப்படி நினைப்பது தவறு.  நான் ராஸ லீலாவைப் பற்றிதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  614 பக்கம் உள்ள  இந்த நாவலை நான் ஒரே மூச்சில் படித்தேன்.   தினம் தினம் நான் பல மணி நேரங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டேன்.  படிக்க படிக்க கீழே வைக்க முடியவில்லை.  சில புத்தகங்களைப் படிக்கும்போது நமக்குத் தேவையில்லாத அலுப்பு வந்து விடும்.  முழுக்க முடிப்பதற்குள் படிக்க முடியாமல் நின்றுவிடும்.  இதோ நீங்கள் எதிர்பார்த்தபடியே நேற்று அதாவது 11ஆம் தேதி அக்டோபர் மாதம் 2016 அம் ஆண்டு இப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.   அதாவது இந்தக் கட்டுரையை 12ஆம் தேதியிலிருந்து எழுத ஆரம்பித்துள்ளேன்.  நீங்கள் ஆவலாக இருப்பது தெரிகிறது.  நான் எத்தனைப் பக்கங்கள் எழுதுவேன் என்று எனக்கு இப்போது  தெரியாது.    உடனே அவருடைய இன்னொரு நாவலான புதிய எக்ûஸல் எடுத்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  100 பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.   இந்த நாவலை  எப்போது முடிப்பேன் என்று தெரியாது.   புதிய எக்ûஸல் என்ற  நாவல் 867 பக்கங்கள் கொண்டது.   இந்த நாவலும் வித்தியாசமாக எழுதப் பட்டிருக்கிறது.  ராஸ லீலா மாதிரி தெரியவில்லை.  இதிலிருந்தே சாருநிவேதிதா ஒரு திறமையானவர் என்று தெரிகிறது.  சரி சரி நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.  இதோ ரா4 லீலா என்ற நாவலுக்கு வருகிறேன்.
ராஸ லீல6ô என்ற நாவலில் பாகம் ஒன்றில் கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் பின்குறிப்புகளும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பிக்கும்போதே சாருநிவேதிதா எப்படி ஆரம்பித்துள்ளார் என்பதைக் காட்ட விரும்புகிறேன்.  நான் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நீங்கள் முகம் சுளிக்காமல் கேட்க வேண்டும்.
‘வீட்டில் ஐந்து மணிக்கே எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பும்போது மலஜலமெல்லாம் சரியாகப்  போயிருக்க முடியாது.  நம்முடைய உணவில் ஐரோப்பியர்களின் உணவைப் போல் நார்ச்சத்து இல்லையாதலால் அவர்களுடைய மல வெளியேற்றத்துக்கும் நம்முடைய மல வெளியேற்றத்துக்கும் எக்கச்சக்கமான வித்தியாசம் உள்ளது.  அவர்களுக்கோ இரு இரண்டு நிமிட வேலை.  அதனால் ரயில் கிளம்பியதும் ஒவ்வொருவராக கக்கூûஸ நோக்கிப் படையெடுப்பார்கள்.  அதில் பெருமாளும் சேர்த்திதான்.’
சென்னையிலிருந்து வேலூருக்குப் போய் பணிபுரிபவர்களின் அவதிகளை துல்லியமாக சாரு நிவேதிதா வர்ணித்துக்கொண்டு போகிறார்.  இதில் படுகிற அவதிகளை கொஞ்சங்கூட கூச்சப்படாமல் விவரித்துக் கொண்டு போகிறார். உண்மையை எழுதுகிறார்.   நமக்கு படிக்க படிக்க சங்கடமாக இருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால் இதைப் படிக்கும்போது நாமும் இந்த அவதியில் மாட்டிக்கொள்வதுபோல் தோன்ற வைக்கிறார்.  அதுதான் அவர் வெற்றி.    எனக்கு அதுமாதிரி தோன்றுகிறது.  உங்களுக்குத் தோன்றவில்லையா? நானும் மயிலாடுதுறையில் பணிபுரிந்தவன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சொன்னையை நோக்கி வருவேன்.  பின் வேண்டா வெறுப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி திங்கள் அலுவலகம் போவேன்.  அப்படி வண்டியில் போவதில் பலவித சங்கடங்கள்.  பஸ்ஸில் செல்லும்போது தாங்க முடியாத அவதி.  ஒரு சமயம் உட்கார சீட்டுக் கூட கிடைக்காமல் 7 மணி நேரம் நின்றுகொண்டே மயிலாடுதுறைக்குப் போயிருக்கிறேன்.   அதன்பின் ரொம்ப நேரம் நிற்பது எனக்கு சங்கடமாக மாறிவிட்டது.  அதனால் நின்றுகொண்டு ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதனால்தான் உட்கார்ந்து உங்களுடன் இந்த நாவலைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் பொதுவாக சாதாரணமாக ஒரு நாவலை படித்துப் பழகி இருப்பவராக இருக்கலாம்.  அப்படிப் பழகியவர்களுக்கு இந்த நாவலைப் படிக்கும்போது முகம் சுளிக்கும்படி இருக்கும்.  ஏன் இதையெல்லாம் இப்படி வர்ணிக்கிறார் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.  இது மாதிரியான தருணத்தில் ஏன் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்று கூட நீங்கள் முடிவெடுக்கலாம்.  ஆனால் அதற்காக இந்த நாவலை படிக்காமல் இருந்து விடாதீர்கள்.  உண்மையில் சாரு நிவேதிதா தத்ரூபமான ஒரு சங்கடமான சூழ்நிலையைத்தான் யதார்த்தமாக சொல்லிக்கொண்டு போகிறார்.
உங்களுக்கு நான் இந்த நாவலைப் பற்றிய முன்கதை சுருக்கம் சொல்லப் போவதில்லை.  ஏன் என்றால் நீங்கள் இந்த நாவலை வாங்கி படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பீர்கள்..என் முன் கதை சுருக்கத்தைக் கேட்டு இதுதானே கதை எதற்கு வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள்.  வாங்க வேண்டிய புத்தகத்தை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.   அதனால் ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்லும்போது யாரும் அந்த புத்தகத்தைப் பற்றிய சாராம்சத்தை முழுவதும் சொல்லி விடக் கூடாது. அதைப்போல மோசமானது வேறு ஒன்றுமில்லை.  ஆனால் ஒரு புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் நான் எதுமாதிரி சொன்னால் நீங்கள் வாங்குவீர்கள்..அது கஷ்டமான விஷயம்தான்.  ஒரு வாசகனாகப் படிப்பவருக்கு இந்த நாவல் மூலம் என்ன தெரிய வருகிறது.  என்ன சாருநிவேதிதா  இந்த நாவல் மூலம்  கொண்டு போகிறார் என்பதைத்தான் சொல்ல முயற்சி செய்யப் போகிறேன்.
இரண்டு விஷயங்கள் எனக்கு இந்த நாவல் மூலம் தெரிந்தது. ஒன்று உடல் உளச்சல்.  இன்னொன்று மன உளச்சல்.  உடல் உளச்சல் மன உளச்சலாகக் கூட மாறி விடுகிறது. அதை அவர் சொல்லிக்கொண்டு போகிற விதம் சிறப்பாக உள்ளது.
சில தினங்களுக்கு முன் நான் வாக் செய்துகொண்டிருக்கும்போது என்னுடன் நடந்து கொண்டிருக்கும் ஒரு நண்பரிடம்,  ‘சாருநிவேதிதாவின் இந்த நாவல் பிரமாதம் என்று சொன்னேன்.’  அவர் இலக்கியப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்.  அவர் உடனே, “அப்படி சொல்லாதீர்கள்.” என்றார்.  “ஏன்?” என்று கேட்டேன்.  “அது எல்லோரும் சொல்வது…படித்துவிட்டு எளிதாக சொல்லி விடுவார்கள்,” என்றார்.  “பின் எப்படி இதைப் பற்றி சொல்வது?  வேறு வார்த்தை இருக்கிறதா?”  என்று கேட்டேன்.  அவரால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.  ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு க நா சு எழுதுவதென்றால், அந்தப் புத்தகம் ஒரு வெற்றி என்று எழுதுவார்.
அப்படி சொல்லவில்லை என்றால் பின் எப்படித்தான் அந்தப் புத்தகத்தை விவரிப்பது. அதனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், சாருநிவேதிதாவின் இந்த நாவல் ஒரு வெற்றி. பக்கம் 217ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : üஎன் எழுத்து ஒரு உரையாடல்.  எனக்குள் நான் நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் என்கிறார் . தமிழில் இந்த நாவலுக்கு முன்னோடி உண்டா?  உண்டு.  ஜி நாகராஜன், கரிச்சான் குஞ்சு என்ற இரண்டு எழுத்தாளர்களைப் பற்றிதான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.  ஜி நாகராஜன் விலை மாதர்களிடம் போவதைப் பற்றி தன் எழுத்தில் எழுதியிருக்கிறார்.
 அதேபோல் பசித்த மானுடம் என்ற நாவலிலும் ஆணின் காமத்தை விவரித்துக் கொண்டே போகிறார் கரிச்சான் குஞ்சு.  ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி விட்டார் சாருநிவேதிதா.   ஒரு ஆணின் காமத்தை வெளிப்படுத்தும் நாவல் என்று இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
பல உத்திகளை நாவல் மூலம் கொண்டு வருகிறார்.  நேர்க்கோட்டுத் தன்மையில் இந்த நாவல் எழுதப்படவில்லை.  நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படுகிற எழுத்தில்  ஒரு ஆரம்பம்  முடிவெல்லாம் இருக்கும்.  நாவல் இப்படித்தான் போகும் என்று படிப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.   பின் முடிவு வரும். .  முடிவைக் கூட வாசகன் யூகித்திருப்பான்
.  ஆனால் நேர்க்கோட்டுப் பாணியில் எழுதப்படாத தாவும் தன்மையைக் கொண்ட இந் நாவலை நீங்கள் முதல் பக்கத்திலிருந்துதான் படிக்க வேண்டுமென்பதில்லை.  எதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் வாசிக்கலாம்.  நீங்கள் வாசிக்கும் இடத்திலிருந்து நாவலின் போக்கை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். முன்னும் பின்னும், பின்னும் முன்னுமாகக் கூடப் படிக்கலாம்.   நகுலன் என்ற எழுத்தாளரைப் பற்றி உங்களில் சில பேருக்காவது தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  அவருடைய நாவல்கள் பெரும்பாலும் நேர்கோட்டுப் பாணியில் எழுதப்பட்டிருக்காது. சாருநிவேதிதாவின் நாவல்களும் அப்படித்தான்.  சுயசரிதத்தைத்தான் நாவலாக நகுலன் எழுதியிருப்பார்.  சாருநிவேதிதாவின் நாவலும் சுயசரிதமாக இருக்கிறது.  பொதுவாக சுயசரிதம் என்று சொல்வதில் முழுவதும் உண்மை என்பது இல்லை.  சுயமாக சரிதத்தை எழுதபவர்கள் 50 சதவீதம்தான் எழுதியிருப்பார்கள்.  ஆனால் சாருவின் சுயசரிதமான இந்தப் புத்தகத்தில் 90 சதவீதம் உண்மை இருக்கும் போல் தோன்றுகிறது.  இந்த நாவல் மூலம் தன்னையே உரித்துக் காட்டுகிறார்.  அதனால் இது சுய சரிதத்தையும் மிஞ்சும் நாவல் என்று கூடச் சொல்லலாம்.  கண்ணாயிரம் பெருமாளின் கதை ஒரு சுய சரிதம் சார்ந்த கதைதான் அந்தக் காதாபாத்திரம் மூலம் சாருநிவேதிதா ஒளிந்துகொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.  அவருடைய அஞ்சலக அலுவலகத்தைத்தான் கதையாகச் சொல்லிக்கொண்டு போகிறார்.
இந்த நாவலில் கதை என்பது இல்லை.  ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாமா அதுவும் இல்லை.  பித்தனைப் பற்றி எழுதிய பித்தன் கதையா..  இல்லை.. இல்லை..படிக்க படிக்க நீங்கள படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். சரி இதை ஒரு மனப்பிறழ்வு உள்ள ஒருவரின் கதை என்று நீங்கள் தீர்மானித்தால், எனக்கு உடனே ஞாபகம் வருவது கோபி கிருஷ்ணனும், எம் வி வெங்கட்ராமனும்.  மனப்பிறழ்வின் உச்சத்தில் இருந்து எழுதியவர் கோபிகிருஷ்ணன்.  காதுகள் என்ற நாவல் எழுதியிருக்கிறார் எம் வி வெங்கட்ராமன்.  ஓயாமல் கேட்கும் குரலில் பதிவுகளை நாவல் முலம் கொண்டு வருவார்.  சாருநிவேதிதாவின் நாவலில் மனப்பிறழ்வின் தன்மை இருந்தாலும், மேலே குறிப்பிட்ட  இவர்கள் இருவரின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகப் படுகிறது.
இந்த நாவலின் முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்..கண்ணாயிரம் பெருமாள் அவருடைய கதையை நாவலில் சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சாருநிவேதிதாவும் நாவலில் எழுதுகிறார்.  அதனால் இதை மெட்டா பிக்ஷன் என்றும் கூறலாம்.
பக்கம் 219ல் சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார் : ‘சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல.  என் எழுத்து ஒரு உரையாடல், எனக்குள் நான் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்’ என்கிறார்.  இப்படிச் சொல்வதே பின் நவீனத்துவ நாவல்களின் ஒரு வழி.
கதை ஆரம்பிக்கும் முன்,  முன் குறிப்புகளும், பின் ஒவ்வொரு கதை முடிவிலும் பின் குறிப்புகளும் கொடுத்துக்கொண்டே செல்கிறார். இந்த பின்குறிப்புகள் சிலசமயம் கதையை விட நீண்டு விடுவதாக தோன்றுகிறது.  கதைக்குள் கதையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.  கதையைக் கூடப் படிக்காமல் இந்தப் பின் குறிப்புகளைப் படித்துக்கொண்டே போகலாம்.  இது இந்த நாவலில் காணப்படும் வித்தியாசமான முயற்சி.
இதோ இந்த நாவலன் பக்கங்களைத் திறப்பதற்கு முன் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  இதோ ஏதோ ஒரு பக்கத்தை எடுக்கிறேன்.  படிக்கத் துவங்குகிறேன்.
கதை : இருபத்தொன்று
தமிழ் மொழி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.  ஆனால் இருநூறு பேருக்காகவும், முன்னூறு பேருக்காகவும் இலக்கியம் படைப்பதில்தான் சற்றும் உடன்பாடில்லை.  என்னைப் பொறுத்தவரை எந்த மொழியில் எழுதினாலும் ஒன்றுதான்.  ஆனால் தமிழர்களும் மற்ற மொழிக்காரர்களும் ஏன் தங்களுடைய மொழியை மட்டும் உயர்ந்ததாகவும், மாற்றான் மொழியை மட்டமாகவும் கருதுகிறார்கள் என்று புரியவில்லை.  பாரதியே இது விஷயத்தில் பொய் சொல்லியிருக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகும் சாருநிவேதிதா கண்ணுக்கும் காதுக்கும் இனிமையாக இருக்கும் ஒரே மொழி அரபிதான் என்கிறார். அதில் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க ஆரம்பிக்கிறார்.  அந்த மொழியில் உள்ள எழுத்துக்களை இந்த அந்தியாயம் முழுவதும் எழுதி உள்ளார்.
எனக்கு இதைப் படிக்கும்போது, ஞானக்கூத்தனின் கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது.  ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு.  ஆனால் பிறர் மேல்  விடமாட்டேன்’ என்பதுதான் அந்த வரி.
கலை வெளிப்பாட்டில் உடலின் மொழியைப் பற்றி ஆய்வு செய்பவர்களையே தொடர்ந்து கவனப்படுத்தி வருவதாக சாருநிவேதிதா தெரியப்படுத்தி உள்ளார்.  மார்க்கி தெ ஸôத், ஜார்ஜ் பத்தாய், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற பல எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.  ஹென்றி மில்லர், யெரிக்கா ஜென்க் என்ற பெயர்களை ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை.
இந்த நாவலில் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வதைப் பற்றி செய்தி வருகிறது.  கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்கு மேலாக அது தொடர்ந்து விவிரிக்கப்படுகிறது. படிப்பவரின் மனதை சஞ்சலப்படுத்தும் பக்கங்களாகவே இதைக் கருதுகிறேன். ஆனால் அதையும் நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறார்.
‘எனக்கு மன அழுத்தமும், மனப் பதற்றமும் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது நான் பதினைந்து ஆண்டுகள் வேலை பார்த்த தபால் துறை.  அதுவே என்னை மரணத்தின் விளிம்புவரை தள்ளியது.  ஆனால் அதே தபால்துறைதான் பைபாஸ் சர்ஜரி மூலம் நான் உயிர் பிழைத்துக்கொள்ளவும் வழி செய்தது.  ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொடுத்தது என்கிறார் ஒரு இடத்தில்.’
நண்பர்களே, 614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலைப் படித்தவிட்டு  நான் இன்னும் எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  பரிட்சைக்குத் தேர்வு எழுதும் மாணவனைப் போல் நான் இருக்கிறேன்.  எந்தத் தேர்விலும் நான் பார்டர் மார்க் வாங்கித்தான் பாஸ் செய்திருக்கிறேன்.  இந்தத் தேர்விலும் எனக்கு பார்டர் மார்க்குதான் கிடைக்குமா?  சாருநிவேதிதாதான் பதில் சொல்ல வேண்டும்.
புதுமைப்பித்தன் காலத்திலேயே படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது இயல்பாக இருந்துள்ளது  புதுமைப்பித்தன் அவருடைய கவிதைகள் மூலம் பலரை தாக்கி உள்ளார்.
வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்ற விமர்சகர்கள் ஒருவரை ஒருவர் கட்டுரைகள் மூலம் சாடியிருக்கிறார்கள்.  இது சகஜமான சாதாரண விஷயம்.  நீல பத்மநாபன் ஒரு மகா நாவல் எழுதியிருக்கிறார். நாவல்  முழுவதும் அவர் சந்தித்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைப் பற்றி விளாசி எழுதி உள்ளார்.  அந்த நாவல் பலருடைய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  ஏன் நகுலன் கூட சகப் படைப்பாளிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.  ஆனால் அவரை யாரும் ஒன்றும் சொன்னதில்லை.
பிரமிள் கடைசிக்காலத்தில் அவருக்கு ஸ்டோரோக் வந்து செயல்படாமல் இருப்பதற்கு முன்பு கூட சுந்தர ராமசாமியையும், வெங்கட்சாமிநாதனையும் திட்டி நீண்ட கவிதைகளை எழுதி உள்ளார்.  அதன்பின்தான் அவருக்கு ஸ்டோரோக் வந்தது. சகப் படைப்பாளிகளைத் தீண்டுவதுமூலம் பிரமிளுக்கு எழுதுவதற்கான உத்வேகம் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.  இன்னொரு விததத்தில் அவரால் தொடர்ந்து வேறு விதமாக எழுத முடியாமல் போவதால் இப்படி நிகழ்கிறதோ என்றும் தோன்றுகிறது.
சாரு நிவேதிதா அவருடைய ராசலீலா நாவலில் சகப் படைப்பாளிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.  சிறுபத்திரிகை நடத்துபவர்கள் கூட அவரைத் தொந்தரவு செய்திருக்கிறார்கள்.  அதை இந்த நாவலில் அங்கங்கே தெரியப்படுத்தாமல் இல்லை.   நம்வீட்டில் சகோதரர்கள் கருத்து வேற்றுமையால் ஒருவரை ஒருவர் சாடுவதுபோல்தான் இதை நான் பார்க்கிறேன்.  மேலும் அவர் சந்தித்தவர்களைப்பற்றியும், அவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றியும்  கதைப் பொருளாக மாற்றி விடுகிறார்.  இதை அப்படித்தான் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இன்னொரு 100 வருடங்கள் கழித்து இந்த நாவலை அப்போதுள்ள வாசகன் படிக்கும்போது, அதில்  குறிப்பிடுகின்ற எல்லாம் சம்பவங்களாகவும், பெயர்களாகவும்தான் தென்படும்.
இந்த நாவலை மூன்று விதமாகப் பார்க்கலாம்.  முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும். முன்குறிப்பு 1, 2, 3 என்று எழுதி இருக்கிறார்.  சென்னையில் இருக்கும் கண்ணாயிரம் பெருமாள்  சென்னையிலிருந்து வேலூருக்கு சுருக்கெழுத்தாளராக வேலூர் பிரிவு தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலத்தில் சுருக்கெழுத்தாளராகப் போகிறார்.  அவர் ஒரு சுருக்கெழுத்தாளர் மட்டுமல்ல எழுத்தாளரும். தீவிர வாசகர்.  அவர் எழுதவதைக் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.  அங்கு பணிபுரியும்போது ஏற்படும் அவதிகளை விவரித்துக்கொண்டே போகிறார்
.அங்கே சந்திக்கும் காயத்திரி என்ற பெண்ணுடன் ஏற்படும் உறவு கண்ணாயிரம் பெருமாள்  சென்னை ஸர்க்கிள் ஆஃபீஸ÷ற்கு மாற்றப்படும்போது முடிவுக்கு வந்து விடுகிறது.
இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.  பின்குறிப்பு எழுதுவதன் மூலம் ஒரே வரியில் காயத்திரியின் உறவை கண்ணாயிரம் பெருமாள் முடித்து விடுகிறான்.
கதை 1, கதை 2, கதை 3 என்று ஒவ்வொரு அத்தியாயங்களும் தொடருகிறது.  இதில் கதைக்குப் பின் கூறப்படும் பின்குறிப்பு கதையைவிட அதிகமான பக்கங்களில் வருகிறது.
கதைகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலர் எழுதியிருக்கிற பொன்மொழிகளை வெளிப்படுத்திக்கொண்டு போகிறார் ஆசிரியர். ஸில்வியா பிளாத், ஷேக்ஸ்பியர், ஆஸ்கர் ஒயில்ட் என்றெல்லாம் முக்கியமான ஆசிரியர்களின் கூற்று வெளிப்படுத்தப்படுகிறது. கதை பதின்மூன்று என்ற அத்தியாயத்தில்  6 பக்கங்கள் எந்தவித பாராவும் பிரிக்காமல் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.  அதில் ஒரு இடத்தில் உங்கள் குழந்தையை விட உங்கள் பெற்றோரை விட விடவிட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட விட என்று இரண்டு வரிகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.
கதை 26லிருந்து முதல் பகுதி முடிவடைந்து விடுகிறது.  இரண்டாவது பகுதி ராஸ லீலா என்று ஆரம்பிக்கிறது.  ராஸ லீலா முன்னுரை முற்றும் என்று முடித்து மூன்றாவது பகுதி ஆரம்பமாகிறது.  இந்த மூன்றாவது பகுதியில் 1லிருந்து 64 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார்.  அதர்வ வேதம், பட்டினத்தார், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்துடன் உதாரணங்களுடன் ஒவ்வெபாரு அத்தியாயமும் ஆரம்பமாகி முடிகிறது.   இதில் வித்தியாசமான எழுத்து முறையை 64 பகுதிகளிலும் கடைப்பிடித்திருக்கிறார்.  இதைப் படிக்கும் போது காதல் கடிதங்களைப் படிப்பதுபோல் படுகிறது.  ஒரு பெண்ணின் அந்தரங்கம் சுழன்று சுழன்று வருகிறது.
இந்த நாவலில் சில பக்கங்கள் இருக்கின்றன.  அந்தப் பக்கங்களை நீங்கள் வாய்விட்டு சத்தமாக எல்லோர் முன்னாலும் படிக்கவே முடியாது.  இந்தப் புத்தகத்தின் 454ஆம் பக்கத்தை நீங்கள் சத்தம்போட்டு படிக்கவே முடியாது. அதுவும் பெண்கள் முன் படிக்கவே முடியாது.  அதனால் இந்த நாவல் ஆபாஸமான நாவல் என்று ஒதுக்க முடியாது.  தமிழில் இதுமாதிரியான தன்மை உள்ள நாவலை இதுவரை யாரும் இவ்வளவு துணிச்சலாக எழுதியிருக்க முடியாது. இதை ஒரு பதிப்பாளர் பதிப்பித்திருக்கிறார் என்றால் அவரையும் பாராட்ட வேண்டும்.  ஒவ்வொருவரும் ஏன் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்றால்  இந்த நாவலை எழுதியிருக்கும் விதத்திற்காக.  தமிழில் யாரும் எழுத முடியாத ஒரு நாவலை எழுதியிருப்பதற்காக.  அடிப்படையில் தொடர்ந்து இந் நாவலை வாசிக்கத் தூண்டிக்கொண்டிருக்கும் வசீகரத்திற்காக.
அதனால் சாருநிவேதிதா எழுத்திற்கு எதுமாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று யோசிக்கும்போது, அவர் நாவலுக்கு  தமிழில் இலக்கிய விருது அளிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  அதற்கான தகுதி அவர் நாவலுக்கு இருந்தாலும்.
(டாக் சென்டரில்  புத்தக நண்பர்கள் கூட்டத்தில் 25.10.2016 அன்று வாசித்தக் கட்டுரை)
ராஸ லீலா – நாவல் – சாருநிவேதிதா – கிழக்குப் பதிப்பகம் – 614 பக்கங்கள் – விலை ரூ. 500

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 36

அழகியசிங்கர்  

வீடு                              

இளம்பிறை




சன்னலுக்கு வெளியே                        
சாய்ந்திருப்பது யார்?
நள்ளிரவு விழிப்பில்
பயந்தபின்பு
நினைவிற்கு வரும்
மாடிப்படிகள்.

கைக்கெட்டா தூரத்தில்
பழுத்து உதிரும்
பப்பாளிப் பழங்களைப்
பார்த்து நின்றதில்
இன்றைக்கு…..

பொங்கி வழிந்துவிட்டது பால்!
“சன்னல் கம்பிகளில்
சிலந்தி வலையைக்கூட
தட்டிவிடாமல….
என்னதான் குடித்தனம்
நடத்துகிறாயோ…..?”
திட்டிப் போகிறாள் சுமதி.
சன்னலை
மெள்ள மூடி
திறந்து கொண்டிருப்பதையும்
காற்று,
பலமாக வீசும்போது
பதறிக்கொண்டிருப்பதையும் சொன்னால்
“பைத்தியம்” என்பாள்.

நன்றி : முதல் மனுசி – கவிதைகள் – இளம்பிறை – ஸ்நேகா – 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – விலை : 75

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்…

பொதுவாக நான் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவன்.   பேசுபவனாக இல்லாமல் பார்வையாளனாக இருப்பதைப் பெரிதும் விரும்புவேன்.  பார்வையாளனாக இருக்கும்போது கூட்டம் நடத்துபவர்களை நான் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ஒரு கூட்டம் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதையும், யார்யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பேன்.   மனம் நிறைவு செய்வதுபோல் ஒரு கூட்டம் இருந்தால் அதைப் பற்றி எழுத முயற்சி  செய்வேன்.  அப்படி உடனே எழுதாவிட்டால் கூட்டம் என் நினைவை விட்டுப் போய்விடும்.  பொதுவாக நான் ஒரு காமெரா வைத்துக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பேன்.  ஆனால் இன்று அதுமாதிரி எதுவும் செய்யவில்லை.  கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆடியோவில் பதிவு செய்தேன்.
ஓய்புப்பெற்ற நீதியரசர் சந்துரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் எண்பதாவது பிறந்த தின விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.  எனக்கு எப்போதும் கே எஸ் அவர்களைப் பார்க்கும்போது உற்சாகமான இளைஞர் ஒருவரைப் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்படும்.  இன்றும் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது.  பெரும்பாலும் கே.எஸ் எல்லா  இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்பவர்.  நேற்று – 12.11.2016 – காலை 9.30 மணிக்கே ராக சுதா ஹாலில் அவரைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தேன்.
கே எஸ் அவர்களின் நண்பர்களின் வட்டம் பெரிது.  ஹால் முழுவதும் நண்பர்கள் வட்டம் நிறைந்து விட்டது.  கே எஸ் அவர்களுடன் படித்தவர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள், இலக்கிய நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கே எஸ் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.  இக் கூட்டத்தைப் பர்த்து பதட்டப்படாமல் இருந்தார்.  மூத்த எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வைதீஸ்வரனுடன் இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சம் ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஓதியது.  முதலில் குத்துவிளக்கு ஏற்றி கூட்டம் ஆரம்பமானது.  பின் கே எஸ் அவர்கள் கேக் வெட்ட கூட்டம் சிறப்பாக தொடங்கியது.
கே எஸ் அவர்களை அவருடைய நண்பர்கள் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தேவாரத்தையும் திருவாசகத்தையும் சிறப்பாக  ஓதுவார் கரூர் சுவாமிநாதன் அவர்கள் ஓதினார்.  நான் அமர்ந்த இடத்திலேயே என்னுடைய சோனி பதிவு செய்யும் இயந்திரத்தின் மூலம் பதிவு செய்தேன்.  இதோ என் வீட்டில் கணினியில் நான் திரும்பவும் கேட்கும்போது பிரமாதமான முறையில் பதிவாகியிருந்தது.  கே எஸ் பிறந்த தினக் கூட்டத்தில் இதை மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
கே எஸ் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகள் நன்றாகத் தெரிந்தவர்.  ஜெயகாந்தனின் நாவல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்.  அதேபோல் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.  இந்த 80வயதிலும் சுறுசுறுப்பான ஒருவரைப் பார்க்க முடியாது.  “இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்.  சங்கக் காலத்தில் எழுதப்பட்ட பெண்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகக் கூறினார். சமஸ்கிருதம், தமிழ்கவிதைகளைத் தொடர்புப் படுத்தி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
எப்போதும் அவர் கொண்டு வரும் புத்தகங்களின் ஒரு பிரதியை அவர் நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க மாட்டார்.  சமீபத்தில் எனக்கு அவர் அனுப்பிய ஒரு புத்தகத்தின் பெயர் கடவுளின் கையெழுத்து . மணி பௌமிக் எழுதிய புத்தகம்.  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கே எஸ்.  கூட்டம் முடிந்து வீடு வரும்போது ஒரு மனநிறைவைத் தந்த கூட்டமாக இது இருந்தது.  இன்னும் பல்லாண்டு கே எஸ் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
                                                                                       *************
வாசக சாலை என்ற அமைப்பு ஒவ்வொரு மாதமும் கதையாடல் என்ற ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.  இந்த மாதம் ஆறாவது கூட்டம் ஒன்றை பரிசல் புத்தக நிலையத்தில் நேற்று (12.11.2016) நடத்தி உள்ளார்கள்.
5.30 மணிக்கு ஆரம்பமாகும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  உயிர்மை, ஓலச்சுவடி, காலச்சுவடு, நவீன விருட்சம், காக்கைச் சிறகினிலே, தடம் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை எடுத்துக்கொண்டு அலசினார்கள்.
இக் கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  நானும் கிருபானந்தனமும்தான் முதியவர்கள் என்று நினைக்கிறேன்.  பேசியவர்கள் அனைவரும் மனந்திறந்து கதைகளைப் பற்றி விவாதம் செய்கிறார்கள்.  பேசுபவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கதைகளை வாசித்து விட்டு வருகிறார்கள்.
நவீன விருட்சம் 100வது இதழில் வெளிவந்த கதைகளை லதா அருணாச்சலம் என்பவர் விமர்சனம் செய்தார்.  அகலிகைப் படலம் என்ற பேயோன் கதையைக் குறித்து நீண்ட விவாதம் நடந்தது.  அக் கதைக்கு மாத்திரம் தனியாக ஒரு கதையாடல் கூட்டம் நடத்த வேண்டும் என்று லதா குறிப்பிட்டார்.  விருட்சம் இதழில் 13 கதைகள் வெளிவந்ததாகக் குறிப்பிட்டார்.  கதைகளை மட்டும்தான் பேச முடிகிறது.  இன்னும் இதில் வெளிவந்த கவிதைகளைக் குறித்தும் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.  அதேபோல் காலச்சுவடு, உயிர்மை, ஓலச்சுவடு, தடம், காக்கைச் சிறகினிலே பத்திரிகைகளில் வெளிவந்த கதைகயைப் பற்றியும் பேசினார்கள்.
பொதுவாக அங்கு குறிப்பிட்ட கதைகளைக் கேட்கும்போது நமக்கும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.  இது வாசகசாலையின் வெற்றி என்றே கருதுகிறேன்.  இக் கூட்ட்த்தில் நடக்கும் நிகழ்ச்சியை ஆடியோவில் பதிவு செய்து எல்லோரும் கேட்கும்படி செய்ய வேண்டும்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 35


அழகியசிங்கர்  

நீர் பருகும் மர நிழல்கள்

சத்யன்




டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
நேற்றைய உணவு நேரத்தை
தூக்கத்தில் மறக்கச் செய்து
ப்ளாஸ்டிக் போர்வைகளில்
முடங்கிக் கொண்டிருந்த குடிமக்கள், நகரை
லட்சியம் செய்யவில்லை.
காற்றில் மிதந்துவரும் ஸ÷ப்ரபாதம்
கொடிக்கம்பியில் வரிசைப் புறாக்கள்
வேலியில் படர்ந்திருந்த ஒற்றை ரோஜா
கிரிக்கெட் பயிலும் பெண்கள்
தேங்கி நிற்கும் குட்டையில்
சிறகு சிலிர்த்து குளிக்கும் குருவிகள்
இன்னும் எங்கள் உலகில்
செயற்கை படியவில்லை என்றன.
பருக்கைகளுக்குப் பாய்ந்துவரும் மீன்கள்போல்
நேற்றைய கனவின் சிதிலங்கள்
காப்பிக் கோப்பையில் கனவுமுகங்களைத் துழாவின.
பஸ்களின் ஹார்ன் ஒலியில்
பாஸ்பரûஸ கரைத்து ஆபீஸ் சேர்ந்தேன்.
திவசக் காக்கைகளுக்கு அன்னம் இட்டு
காத்திருக்கும் அந்தணனாய்
கடிதங்கûடிள எதிர்பார்ப்பது
பழக்கமாகிப்போனது.

KAIPPRATHIYAL SILA THIUTHANGAL – COLLECTION OF POEMS – SATHYAN – PUBLISHED BY MEETCHI BOOKS – 61 N G G O COLONY, DHARMAPURI 636 705 – FIRST EDITION :  MAY 1986 – PRICE : 6

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 34

அழகியசிங்கர்

மோனாலீஸ

வத்ஸலா




பாட்டியின் வைரமூக்குத்தி
அத்தையின் மஞ்சள்நிற புடவை
அப்பாவின் சட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும் பேனா
பச்சைநிற ஹெல்மெட்டுக்குள் தெரியும்
என் முகம்
கண்களால் நகைக்கும் தபால் மாமா
கீழ்வீட்டு க்ரோட்டன்ஸ் இலை
வாஷ்பேஸின் குழாயின் மேல்குமிழி

இவற்றுள் எதனைக் கண்டு
கனவில் இதழ் விரித்தாய்
என் பொடி மகளே?

நன்றி : சுயம் – வத்ஸலா – கவிதைகள் – பக்கங்கள் : 96 – வெளியீடு : ஸ்நேகா, 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – விலை : ரூ40 – முதல் பதிப்பு : 2000

மாம்பலம் டாக் என்ற பத்திரிகை

அழகியசிங்கர்


ஒவ்வொரு சனிக்கிழமையும் போஸ்டல் காலனி வீட்டில் மாம்பலம் டாக், மாம்பலம் டைம்ஸ், தி நகர் டாக் இருக்கும்.  இரும்பு கேட் பின்னால் விழுந்து கிடக்கும்.  அலட்சியமாக உள்ளே கொண்டு போய் வைத்துவிடுவேன்.  இது மாதிரியான பத்திரிகைகள் அவசியம் தேவை.  இதில் உள்ள விளம்பரங்கள் அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்குப் பயன் உள்ளவை.  
வீடு வாடகைக்கு வேண்டுமா?  அல்லது விற்பனைக்கு வேண்டுமா?  எல்லாவற்றுக்கும் விளம்பரம்.  மின்சாரம் சம்பந்தமான பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என்று எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.  சமையல் செய்ய ஆட்களா?  நர்ஸ் வேண்டுமா? கரையானை அகற்ற வேண்டுமா? எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு..
பின் சில தகவல்களும் இதன் மூலம் கிடைக்கும்.  அதாவது மாம்பலத்தில் எதாவது முக்கிய நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றி எழுதியிருப்பார்கள்.  விருட்சம் 100வது இதழ் விழா மாம்மலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் வீற்றிருக்கும் காமாட்சி மினி ஹாலில்தான் நடந்தது.  அது குறித்து மாம்பலம் டாக்கில் என் நண்பர் ஜி சீனிவாசன் அக்கறை எடுத்துக்கொண்டு எழுதி உள்ளார்.  
ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த சனிக்கிழமை மட்டும் போஸ்டல் காலனியில் இந்த மாம்பலம் டாக் கிடைக்கவில்லை.  நான் வசிக்கும் ராகவன் காலனிக்கு இதுமாதிரியான பேப்பர்கள் வருவதில்லை.  அதனால் பெரிய முயற்சி செய்து மாம்பலம் டாக்கை தருவித்துக்கொண்டேன்.  அது இன்றுதான் கிடைத்தது.  சீனிவாசன் என்னைப் பற்றி உயர்வாக எழுதி உள்ளார்.  அவருக்கு என் நன்றி.