சாகசம்

கருவறைச் சிசுவின்
தரையிறங்கும் தருணம்
தாய்வசமில்லை.
கொடியறுந்து தனியான
மினிமனிதனுக்குப் பசி முதற்பாடம்.
முலைப்பால் ருசி தனிப்பெருங்கருணை.
தேனீக்குப் பூ, மீனுக்கு மீன்
மானுக்குப் புல், புலிக்கு மான்
வேடனுக்குப் புலியென
சங்கிலித்தொடர் ரகசியம்
மூளைக்குளத்தில் பூ விரியும்
ஆகாயத்தில் அந்தரவிளக்குகள்
அகிலத்தில் இருள்விலக்கும்
படைப்பு நுணுக்கமாய் திட்டமிட்டதுபோல.
கண் காட்சி காணும்
மனம் சிருஷ்டி ரகசியம் தேடும்
கடவுள்துகளை விண்டு பார்க்கும்
கண்டிராத முதல் கடவுள்துகளைத் தேடும்
அண்டப்பெருவெளியளக்கும்
சாகசம் நிகழ்த்தும்
எறும்பு.

லாவண்யா

அறுந்த மஞ்சக் கயிறு..
வித்யாசாகர்

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை..
அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் பிடித்து தன்னை விழாமல் காத்துக்கொள்வதற்காக அவளின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடுகிறான், அது அறுந்து அவன் கையோடு போய்விடுகிறது.
கலைக்கு தாலி அறுந்ததும் பதற்றம் தாங்கமுடியவில்லை. ஐயோ கடவுளே ஈஸ்வரா என்று அலறுகிறாள். சாமியறைக்கு ஓடிப்போய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கொஞ்சம் தாளியிலும் கண்ணீர்மல்க அப்பி வைக்கிறாள்.
தாஜ் ஓடிவந்து தாலிக் கயிற்றை வாங்கி அவளுடைய கழுற்றில் மீண்டும் கட்டிவிட்டு, அசடு இதற்கெல்லாம் போயா இப்படி அழுவாய் என்று சொல்லி அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்.
“வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அறுந்துப் போச்சே தாஜ்”

“அதனாலென்ன அதலாம் ஒன்னும் ஆகாது, இனி அறுந்துவிடாமப் பார்த்துக்கோ”

“இல்லை தாஜ்., தாலி அறுந்தாலே கெட்ட சகுனம்னுவாங்க, அதிலும் வெள்ளிக்கிழமைன்னு பார்த்து அருந்திருக்கே, இப்படி ஆச்சின்னா புருஷனுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க தாஜ்”

“அம்மா அம்மா.. இதப்பாறேன்..”

“ஹேய்… சும்மா இரு சனியன்.., குழந்தையா நீ, உன்னால தான் இதெல்லாம்”
“ச்ச குழந்தையைப் போயி சனியன் அது இதுன்னு.. நீ வாடா செல்லம்”

அவன் தன் குழந்தை விமலைத் தூக்கி ஒரு முத்தமிட, கலையும் வந்து அவன் மார்மீது சாய்ந்துக் கொண்டாள். கலையும் தாஜும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். பெற்றோர் அவர்களை வீட்டைவிட்டே விரட்டிவிட்டதால் ஒதுங்கி தன் ஒரே மகனான விமலோடு வாழ்க்கையை வாழும் அன்பு இதயங்களுக்கிடையே இப்படி ஒரு மஞ்சக் கயிறு உயிரை அறுக்கும் கத்தியாக வந்துநிற்குமென்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கலைக்கு மட்டும் அந்த கவலை மிகையாக இருந்தது. இப்படி தாலி அறுந்து புருஷன் இறந்த நிறைய கதைகளை அவளின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார் சொல்ல அவள் முன்பே கேட்டிருக்கிறாள். அதும் வெள்ளிக்கிழமையன்று கண்ணாடியே உடையக் கூடாது என்பார்கள் இன்றென்னடான்னா தாலியே அறுந்துவிட்டதே என்றொரு பெரிய கவலை அவளைத் தொற்றிக்கொள்ள வருத்தத்தில் தாஜைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்க முயற்சிக்கிறாள்.
கடிகார முட்களின் சப்தத்திற்கு இடையிலும் மின்விசிறியின் காற்று உரசும் பொழுதிற்கு நடுவேயும் எப்படியோ அவளுக்கு தூக்கம் வந்து தூங்கிதான் போகிறாள்.
அவள் தூங்கினாலென்ன சும்மா விடுமா அந்த தாலியறுந்த சகுணம் அவளை? என்று கேட்டாற்போல் இதோ அவளின் தூக்கத்தில் புகுந்து கண்திரை கிழித்து கனவாகப் படர்கிறது அந்த மரணபயம்..
கனவை விரட்டி கைகளை அசைத்து போ.. போவென்று தள்ளிவிடுகிறாள் கலை. அவளின் கைபட்டு தாஜ் கண்விழிக்க, தூங்கிக் கொண்டிருந்த கலை எழுந்து தாஜ்.. தாஜ்.. என்று கத்துகிறாள். தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். யாரையுமே கன் திறந்துப் பார்க்காமலே அவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதுபோல் துடிதுடித்துப்போகிறாள் கலை.
தாஜ் அவளைக் கட்டி தன் மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்த முயல கலை அவனை தொட்டு தொட்டு பார்த்து அழுதாள், உடம்பெல்லாம் தடவி உண்மையாகவே அவன் உயிரோடுதான் இருக்கிறானா என்று சரிபார்த்துக் கொண்டாள். ஒரு ஆபத்து நிறைந்த கனவு கண்டதாகவும், வெள்ளிக்கிழமையில் தாலி அறுந்ததன் காரணமே இப்படியெல்லாம் வருகிறதென்றும், கட்டாயமாக ஏதோ கெட்டது நடப்பதற்கான சகுணம்தான் இதலாமென்றும் அழுதுப் புலம்பினாள் கலை.
தாஜ் ஏதோ வேகமாக காரோட்டிப் போனதாகவும், திடீரென கார் பிரேக் பழுதாகி வண்டி நேரே போய் வேறு நிறைய கார்களின்மீது மோதி; பிறகு ஒரு பாலத்தில்மீது முட்டி நசுங்கிவிட்டதாககவும், இவளுக்கு மட்டும் ஒன்றுமே ஆகாமல் பின்னால் நன்றாக அமர்ந்திருந்ததாகவும், பின் பயந்து எட்டியுள்ளே பார்த்தால் தாஜ் நசுங்கிய காரினுடைய பாகத்திலிருந்து தவறி அந்த பாலத்தின் கீழிருந்த ஆற்றினுள் விழுந்து இறந்துவிட்டதாகவும் சொல்லி அவள் கதற – அதைக்கேட்ட தாஜுக்கே கூட கொஞ்சம் பயம் வந்தது.
அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த விமல் வேறு இவள் செய்த அட்டகாசத்தில் அலறி எழுந்து அவனொரு பக்கம் அழுதுக் கொண்டிருந்தான். தாஜூக்கு யாரை சமாதானப் படுத்துவதென்பதேப் புரியாமல் தவிக்க அருகாமை வீட்டு ஆட்கள் வந்து அதற்குள் கதவைத் தட்டினார்கள்.
பார்த்தியா நீ கத்தி செய்த ஆர்பாட்டம்தான் அக்கம்பக்கம் கூட எழுந்து வந்த விட்டார்கள், ஏன் கலை இப்படி பண்ற, எனக்கு அதலாம் ஒன்றும் ஆயிடாது, சகுனம் ஜோசியமெல்லாம் அத்தனை முழுமையான உண்மையொன்றுமில்லை. அப்படிச் சொல்லத் தக்க ஆட்கள் இப்போதெல்லாம் மிகக் குறைந்துப்போய்விட்டார்கள். இந்த காலத்தில்போய் ஒரு மஞ்சக் கயிறு அறுந்ததுக்கு நீ இப்படி அவஸ்தைப் படுறியே கலை (?). அதலாம் ஒரு கணிப்பு’ எச்சரிக்கை’ அவ்வளவு தான். அதற்காக இப்படி பயந்து நடுங்கி ச்சே..” என்று தலையில் அடித்துக்கொள்ள அவள் மன்னித்துவிடக் கேட்டு அழுதாள். மனசெல்லாம் படபடன்னு இருப்பதாகவும் ஏதோ நடந்துவிடுமோ என்று பயமாகவே இருப்பதாகவும் சொல்லி தவித்தாள் கலை. தாஜூக்கு அவள் படும் அவஸ்தையைக் காண வலிப்பதாக உணர்ந்தான். அதற்குள் மீண்டும் படப்படவென கதவு வேகமாக தட்டப்பட்டது.
ஓடிப்போய் கதவு திறந்தால், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பட்ட தன் குழந்தையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த பக்கத்துவீட்டுக் காராரின் மனைவி வந்து அவன் காலில் விழுந்து ஓவென்று கத்தினாள்.
ரத்தம் வழிய குழந்தையைப் பார்த்ததும் ‘ஆ அல்லா..’ வென வாய்பொத்திக் கொண்டு தாஜ் அவர்களிடம் என்ன ஆனதென்று கேட்க, திருடன் யாரோ திடீரென வீட்டிற்குள் வந்ததாகவும், அவன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், கடைசியில் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகையில் மகளை தூக்கி தூரே எரிந்துவிட்டதாகவும், இந்த இரவு நேரத்தில் யாரும் உதவ வரமாட்டார்கள் நீங்கள் தான் மருத்துவமனை வரை வந்து உதவவேண்டும் என்றும் கேட்க, தாஜ் சற்று கவலையோடு கலையைப் பார்க்க ‘ஐயோ வென கலை பதறினாள்’ அழத் துவங்கினாள், அவர்களுக்கு இதலாம் ஒன்றும் புரியவில்லை என்பதைவிட புரிந்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லாதிருக்க, தாஜ் ஒன்னுமாகாது நீ போவென்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி கதவைச் சாற்றிவிட்டு கார்சாவி எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ரத்தம் போக போக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறுக்கி மூடலானாள். அதற்குள் அந்த குழந்தையின் தாய் ஐயோ என் குழந்தை கண்மூடுதே என்று கத்த, தாஜ் பதறியடித்து அவளைத் தூக்கி தன் காரில் படுக்கவைத்துக்கொண்டு அவர்களோடு மருத்துவமனைக்கு விரைந்தான்.
குழந்தை என்பதால் எல்லோருமே மிகுந்த கவனம் காட்டினார்கள். ஆளாளுக்கு ஒருபுறம் ஓடி, ஒரு தனியறையை உடனடியாக சுத்தம் செய்து குழந்தையை அங்கே கிடத்தி ரத்தமெல்லாம் துடைக்க, அவசரமாக அங்கு வந்த மருத்துவர் குழந்தையை நன்றாக பறிசோதித்து, ரத்தமேற்றி மருந்திட்டு வலிபொருக்க மயக்கமருந்தும் கொடுக்க குழந்தை கண்ணயர்ந்து மூடிக் கொண்டது.
பொழுது மெல்ல சாய்ந்து விடிகாலைப் புலர, காகங்கள் இதற்கெல்லாம் சம்மந்தமே இல்லாததாய் தன் மொழியில் கத்திக் கொண்டிருக்க, தாஜ் அருகிலிருந்த ஒரு தேநீர் விடுதிக்கு அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்துச்சென்று குடிக்க தேநீர் வாங்கிக்கொடுத்து அவனும் ஒரு தேநீர் வாங்கிக்கொள்ள கலை மீண்டும் அவனை அலைபேசியின் வழியே அழைத்தாள்.
இரவெல்லாம் இப்படித் தான் நிமிஷத்திற்கோர் முறை அவள் அவனை இடை இடையே அழைத்து நடப்பதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள், அவளுக்கு நடப்பதெல்லாமே ஒவ்வொன்றும் விபரீதமானதாகவே இருக்க அது மேலும் பயத்தைக் கூட்டியது.
ஏனோ எல்லாம் நிகழ்வுகக்ளையுயம் வைத்துப்பார்த்தால் ஒவ்வொன்றாக நகர்ந்து கடைசியில் அது தாஜின் மரணம்வரைதான் வந்துவிட யிருக்கிறதோ, அந்த தாலி அறுந்த சகுணம் சங்கதியெல்லாம் சரிதானோ எனுமொரு அச்சம் உள்ளுக்குள்ளே அவளுக்கு மிகுதியாகிக் கொண்டேயிருக்க, அதைப் புரிந்துக்கொண்ட தாஜ் அதைப்பற்றியெஎல்லாம அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இங்கு மருத்துவமனனயில் நடந்த விவரத்தையெல்லாம் அவ்வப்பொழுது சொல்லிவிட்டு ‘இதோ புறப்பட்டுவிட்டேன், இனி நீ அழைப்பதை விடு கவலையெல்லாம் படாதே நானின்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று சொல்ல, அவளுக்கு பயமாக இருப்பதாகவும், அவனின்றி அவள் ஒரு நொடி கூட உயிரோடிருக்கமாட்டாளென்றும் சொல்லி அழுகிறாள்.
‘வாழ்க்கையின்னா இப்படித் தானே, எல்லாம் தானிருக்கும், நீ கலவரமில்லாமல் இரு, நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்’ என்று சமாதானமாகச் சொல்லி அலைபேசியை மடக்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தேனீருக்குப் பணம் தர தன் பணத்தை எடுத்து நீட்ட, அவர்கள் தாம் தருவதாக முன்வர பரவாயில்லை குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
நேரே அங்கிருந்து கார் பார்க்கிங் போய், பார்கிங்கிலிருந்து காரெடுத்து வெளிப்புறம் திரும்பி, பின் வாசலுக்கு வந்து வாசலிலிருந்த அந்த தேநீர் கடை அருகே வர, அங்கே சோகமாய் அமர்ந்திருந்த அந்த பெற்றோர்களைப் பார்த்து மனம் நொந்தான், இப்படி தனியே விட்டுச் சொல்கிறோமே என்றொரு வருத்தம் அவனை மேவிக்கொள்ள, வண்டியை நிறுத்தி இறங்க எண்ணுவதற்குள் மீண்டும் கலை அவனை விடாமல் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்.
அழைப்பைத் துண்டித்து அலைபேசியை கார் டேஷ்போர்டின் மேல் வைத்துவிட்டு, அங்கிருந்தே ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி அந்த பெற்றோரை ஒரு ஆர்ன் அடித்து அழைத்து ‘சரி நான் சென்று வருகிறேன் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும் அவசியமெனில் அழையுங்கள்’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து புறப்படுகிறான்.
அங்கிருந்து புறப்பட்டு வேகமாக திரும்பி, நான்கைந்து தெரு தாண்டி தன் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடைப்பட்டதொரு தூரத்தில் வருமந்த பாலத்தில் ஏற, கலை மீண்டும் அவனுடைய அலைபேசிக்கு விடாமல் மாறி மாறி அழைக்கிறாள்.
அவனுக்கு கோபமே வந்துவிட்டது. அலைபேசியில் வரும் அழைப்பை ஏற்று அவளிடம் பேசுவதா இல்லை திருப்பத்தில் வண்டி பாலத்தின் மீதேறுகிறதே அதைப் பார்ப்பதா என்று இரண்டிற்கும் மத்தியில் தடுமாறி நிதானிப்பதற்குள் தலையெழுத்தென அந்த கனவுவேறு நினைவில் வந்துத் தொலைக்கிறது.
அவளும் விடாமல் அழைக்கிறாள், மணி அடித்துக் கொண்டேயிருக்கிறது, தாஜ் பாலத்தைப் பார்க்கிறான், அலைபேசி கையில் அலறுகிறது, பின்னால் வந்துகொண்டிருந்த வண்டிகள் வேறு இவனின் வேகக்குறைவினை கண்டித்து வீல் என்று அலறுவதுபோல் மாறி மாறி ஆர்ன் அடிக்கிறார்கள், எதிரே வேகமாக ஒரு லாரி வந்து திரும்பி இடித்துவிடாமல் விலகிவிடும் இடைவெளிக்குள் குப்பென இவனுக்கு வியர்த்து கைகால் ஆடி கண்திரை மூடப்பட்டு இதயம் வெடிப்பதுபோல் ஒரு அதிர்வு மூளைக்குள் அதிர, எட்டிமுறித்து எப்படியேனும் இந்த விபத்தை உதறிவிட்டு தப்பித்துவிடுவதாக எண்ணி ஓங்கி ஒரு உதையை காலால் பிரேக் மீது எட்டிவிட, அது இடம் தவறி ஆக்சிலேட்டர் மீது பட்டு,

அடுத்த வினாடியே வண்டி பாய்ந்துபோய் நான்கைந்து வண்டிகளைத் தாண்டி பாலத்தின் மறுமுனையில் விழுந்து சீறிக்கொண்டுபோய் வேறொரு எதிரே வந்த காரின்மீது முட்டி டயர்கள் இளகி கண்ணாடிகள் உடைந்து ஆடி கலகலத்து பின்பும் முன்நகர்ந்துபோய் நிற்க –

எதிரே எதிர்பாராமல் வந்த வண்டிகளின் மீதெல்லாம் மோதி, ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து வண்டிகள் முட்டி ஒருவழியாக நின்றுவிட, வண்டி மொத்தமும் புகை பரவி, மக்கள் கூட்டம் கூடி உள்ளேயிருந்த தாஜை எடுத்து வெளியே கிடத்துகிறார்கள் தெருப் பயணிகள். அதற்குள் விவரம் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சொல்லப்பட்டு ஐந்தாறு மணித்துளிகள் நகர்வதற்குள் ஆம்புலன்ஸும் தீயணைப்பு வண்டிகளும் சீறிக் கொண்டுவருகிறது.

தாஜினுடைய கதை இப்படியெனில் கலைக்கு நடந்த இன்னொரு கொடுமையைப் பாருங்கள். கலை மீண்டும் மீண்டும் தாஜ் மருத்துவமனையில் நின்றிருந்தபோதே விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள் இல்லையா (?)
தாஜ் அதை எடுக்காமல் விட்டதால் அவள் பயந்து பதறி அப்போதே வீட்டிலிருந்துப் புறப்பட்டு மருத்துவமனை வரத் தொடங்கிவிட்டாள். அதைச் சொல்லத் தான் மீண்டும் மீண்டும் அவனை அழைத்து அவன் எடுக்காமல்போக என்னவோ அபாயம் தான் நேர்ந்து விட்டதோ என்று பதறி வேகமாக வந்து பாலம் நெருங்கி தாஜினுடைய காரில் முதன்முதலாய் முட்டியதே இவள் தான்.
சிலநேரம் இப்படித் தான், விதி எல்லாவற்றையும் வென்று விடுகிறது. என்றாலும், அதையும் மதியை பயன்படுத்தி அன்பினால் வெல்ல இயலும் என்பதை இங்கே கலை புரியவைத்துவிடுகிறாள்.
ஆம்புலன்சில் தாஜைத் தூக்கிக் கிடத்தி, அவனோடு முட்டி மோதி தலையில் கைகாளில் அடிப்பட்டு வீழ்ந்த வேறு இரண்டு மூன்று பேரையுமென எல்லோரோடும் சேர்த்து கலையையும் ஏற்றி ஆம்புலன்சிற்குள் படுக்க வைக்கிறார்கள் அவசரப் பிரிவினர்.
அதோடு ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை நோக்கிப் புறப்பட, அந்த வண்டிக்குள்ளேயே அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூலம் எல்லோருக்கும் உடனடி உயிர்காப்பு மருத்துவம் பார்க்கப் படுகிறது. இரண்டு மூன்று பேர் வலியால் துடிக்கின்றனர். தாஜ்க்கு உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்டையில் பலத்த அடியும் பட்டிருப்பதாகவும் கலைக்கு அத்தனை அடியில்லை பயத்தில் மயங்கித் தான் கிடக்கிறாள் என்றும் மருத்துவர் சொல்ல, கலை மெல்ல முயன்று கண்களை லேசாக திறக்கப் பார்க்கிறாள்
எதிரே இருப்பவர்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறார்கள். சற்று உற்று இமைப் பிரித்துப் நன்றாக ஆழ்ந்துப் பார்க்கிறாள் தாஜ் எதிரே படுத்திருப்பதுபோல் லேசாகத் தெரிகிறது அவளுக்கு. தாஜுக்கு சீ.பி.ஆர் கொடுத்து வேகமாக மூச்சு வாங்கியதும் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி ரத்தம் பரிசோதித்தவரிடம் என்ன வகை ரத்தமென்று கேட்டு அதை எடுத்து அவனுக்கு ஏற்ற, அருகிலிருந்தவர் வந்து மானிடர் பார்த்துவிட்டு உயர்த குரலில் இப்போ ஹார்ட் பீட் ஓகே, இனி பயப்படவேண்டாம் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று சொல்ல..,

கலைக்கு கண்களின் ஓரம் ஒரு சொட்டு கண்ணீர் உயிரில் கரைந்து வழிந்தது. முழுதாக கண்திறந்துப் பார்த்து அவன் பிழைத்துவிட்ட சந்தோசத்தில் அவனைக் கட்டிக்கொண்டு அழ இயலாவிட்டாலும் அவளால் அந்த தருணத்தின் உயிர்ப்பினை நன்றாக உணர முடிந்தது.
மனதின் தாளா சந்தோஷம் உடலெங்கும் பரவிநிற்க, கையைத் தூக்கி தன் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள மார்பில் தடவுகிறாள். அதற்குள் அருகிலிருந்த மருத்துவர் வெடுக்கென கையைப் பிடித்துக்கொண்டு நோ நோ கையையசைக்கக் கூடாது என்று சொல்லி அவள் கையை கீழே அழுத்தி கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, லேசாக உதடு கோணி சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தவாறே மகிழ்வாக கண்மூடி ஆனந்தப் பட்டுக் கொள்கிறாள் கலை.

அவளுக்கெப்படித் தெரியும் அவள் கழுத்திலந்த மஞ்சள் கயிறு இல்லையென்று, அது அப்போதே அந்த பாலத்தில் தாஜினுடைய கார்மீது வந்து அவள் இடித்தபோதே அவளின் கழுற்றிலிருந்து அறுந்து தூர எறியப்பட்டு பாலத்தின் ஓரமிருந்த ஒரு கம்பியில் மாட்டிக் கொண்டிருந்ததை யார்தான் கண்டார்.., அது இப்போதும் காற்று சற்று வேகமாய் வீச அப்போது விழுந்த அதே கம்பியிலிருந்து ஆடிக் கொண்டேயிருந்தது..
தாஜும் கலையும் விதியின் வாசல்களை உடைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மனதால் எண்ணி எண்ணி இனி வாழப்போகும் நாட்களுக்காய் ஏங்கி படுத்துக் கொண்டிருந்தனர். விமல் வெளியேச் சென்ற அப்பாவும் அம்மாவும் எப்போது வருவார்களோ என்று ஜன்னல் வழியே வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தான்..
கடவுளின்குரல்

இறந்தநண்பனின்
கைத்தொலைபேசியை
ஒருமுறை
தொடர்புகொண்டுபார்கிறேன்
இம்முறை
மறுமுனையில்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருப்பதாகச்சொன்னகுரல்
கடவுளுடையது

ரவிஉதயன்

முற்றுகை

விடுமுறைநாட்களில் கைப்பேசிகள்
குடும்பக்கதைகள் சொல்கின்றன.
அவைகளில் காதல்கதைகள்
மர்மக்கதைகள், சோக்கஃகதைகள்
பலவகையுண்டு. ஒவ்வொன்றும்
தனித்தனிக்கதையாகத் தெரிந்தாலும்
அவற்றின் சாராம்சமொன்றுதான்.
ஒருகூரையின்கீழ் பலதீவுகளாயான
உறவுகளின் உரிமைப்போர்களால்
அகந்தைக்கலகங்களால்
வீடுகள்குட்டிச்சுவர்களானதுதான்.
அப்பாவின் கடிதங்களை உன்னிப்பாக
படிக்கமுடிவதும் விடுமுறை நாட்களில்தான்.
என் கிராமத்து ந்தி மணல்கிணறானதும்
(ஏ) மாற்று விதைகளை விதைத்து
பொன்வயல் பொட்டல்காடானதும்
தாலாட்டும் தெம்மாங்கும் ஊமைகளானதும்
அப்பாவுக்கு இருமையின் அடையாள இழப்புகளாய் தெரிவது
காலம் பின்னுக்குத்தள்ளும் ஒரு கிழவனின்
ஆற்றாமை மட்டுமில்லையென உணர்கிறேன்.
கழனிகளைத் தின்று வளர்ந்த
கான்க்ரீட் வனங்களிலிருந்து பரவும்
பேராசைத்தீயின் நடுவில் ஒரு ரோபோவாய்
பட்டப்பகலில் வெறிநாய்கள்
பெண்மாமிசம் தின்னும் நகரில் பிழைக்கிறேன்.
கல்வெட்டாய் கண்முன் நிற்கிறது காலம்
இந்தக்கல்வெட்டின் தர்மகர்த்தாக்கள் யார்?
அவர்கள் மலைகளை விழுங்கும் மாயம் செய்பவர்கள்.
அவர்கள் அதிகாரத்துக்கு அருகிலிருப்பவர்கள்
அவர்கள் ஆயுதங்களுடனிருப்பவர்கள்
ஊதுவத்திச் சாம்பலாய் உதிர்கிறது நம் பொறுமை
நாம் அவர்களை முற்றுகையிடும் நாள் தொலைவிலில்லை.
மேலும் முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியுமென்று
நேற்றுவந்த கடித்தஃதில் அப்பா எழுதியிருக்கிறார்
 
 
லாவண்யா
 
 
 
   சுமை
 
சுமக்கமுடியாமல்
சுமையை
இறக்கிப்போட்டு
அவன் போய்விட்டான்.
அவர்கள்
சுமக்கிறார்கள்
சுமக்கமுடியாமல்.
 
 
 
 
தீர்க்கதரிசி
 
கூடுகட்டவொரு கடன் மகனின்
கண்ணைத் திறக்கவொரு கடன்
மகளின் காதலை மணமாக்க
ஒரு கடன். காலில் சக்கரம் கட்டி
காலத்தை சேமிக்கவொரு கடன்
ஆயுள்காப்பீட்டுப் பத்திரத்தை
அடகுவைத்தொரு கடன்
ஆறுமாத்தஃதுக்கொரு நகைக்கடன்
அவ்வப்போது  கடனட்டைக்கடன்
 
அம்மா ஒரு தீர்க்கதரிசி.
 
லாவண்யா

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
6.

நாம் எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும்.  பந்தநல்லூர் பதவிக்கு நான் நன்றாகவே கூலி கொடுத்துவிட்டேன்.   இன்னும் யோசிக்கப்போனால் இதைப்பற்றி ஏன் இப்படி தீவிரமாக யோசிக்க வேண்டுமென்று தோன்றியது.  அழகியசிங்கரிடம் சொன்னபோது, ”ஒருவிதத்தில் சரி, இன்னொரு விதத்தில் சரியில்லை,” என்றார்.
கும்பகோணம் செல்லும் அரசாங்கப் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர்.  கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பந்தநல்லூரில் பாமா.  என்னால் அந்தப் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள்கூட படிக்க முடியவில்லை.  ஏன் என்று தெரியவில்லை.  எல்லோரையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.    
புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அழகியசிங்கர் மூலம்தான் ஏற்பட்டது. அவர்தான் எங்கே புத்தகம் கிடைத்தாலும் விலைக்கு வாங்கி பத்திரப்படுத்துவார். அசோகமித்திரன், ஜானகிராமன் என்று வித்தியாசமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் ஆரம்பத்தில்தான். எனக்கும் அழகியசிங்கருக்கும் நட்பு என்பது 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.  
ஆரம்பத்தில் நாங்கள் புத்தகங்கள் படிப்பதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம். என்னை வைத்து அவர் எழுதும் எழுத்துக்களையும் நான் படிப்பேன்.  என் நிழல் நீதான் என்பார் அழகியசிங்கர். உன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.  அதை வைத்துத்தான் நான் எழுத முடிகிறது என்பார். நான் வெறுமனே புத்தகம் படிப்பவன்.  சிலசமயம் அழகியசிங்கர் படைப்புகளைப் படித்து என் அபிபப்பிராயத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டேன்.  
புத்தகம் படிப்பதுதான் உலகம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். நம்மைச் சுற்றிலும் புத்தகம் படிக்காதவர்களே இருக்கிறார்கள்.  யாரிடம் புத்தகம் படிப்பது பற்றி பேசுவது. அதேபோல் நானும் அழகியசிங்கரும் சந்தித்தால் புத்தகங்கள் பற்றி எழுத்தாளர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம்.  யாராவது எங்கள் பக்கம் வந்தால் போரடித்து ஓடிப்போய் விடுவார்கள்.  
நான் பந்தநல்லூருக்குப் போவது அழகியசிங்கருக்கு கை ஒடிந்தாற்போல் ஆகிவிடும்.  யாரும் அவரிடம் புத்தகங்களைப் பற்றி இலக்கியக் கூட்டங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.  
                                                                                                                                (இன்னும் வரும்)   
மேலும் 

அன்பு செய்வதை விடுத்து
கொலை செய்தலை கையாள்தல்
பூதாகரமான அன்பிற்கு
நீ என்னையும்
நான் உன்னையும்
அறிமுகப்படுத்தியதின்
முன்னமே
தன் தற்கொலை டைரியில்
பதிந்து வைத்திருந்ததின்
குறிப்பொன்றை
சற்று முன் வழியில் கண்ட
அதிகம் பரிச்சயமுள்ள
நிமிர்த்த முடியாத வாலுடைய
ஜீவன் ஒன்று சொல்லிப் போகிறது
தன் பாஷையில்
மேலும்
உன்னிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
உன்னிற்கு

ஆறுமுகம் முருகேசன்

உன்
காலடி வானம்

அன்றைய மழைக்கால
முன்னிரவில்

அவளது நீண்ட நேரக்
காத்திருப்பின் முடிவு

பேருந்துத்
தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்

தாண்டிச் சென்ற
எவரையோ அழைத்துப் பேசி

கூடச் செல்லுமுனது
பார்வையின் கீழே

நழுவியதவளது
பூமி

தெருவோரம் எவரோ
வெட்டி வீழ்த்தியிருந்த

மரத்தினை நோக்கிக்
கூடு திரும்பிய பட்சிகள்

இருளாய் வட்டமிட்ட
அன்றைய இரவு

ஒரு சாத்தானின்
உருவம் கொண்டது

அந்தகாரத்தில்
உனது நடை

மீன்களின் நீச்சலை
ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த
ஒவ்வொரு எட்டிலும்

நதிகள்
உதித்தன

தண்ணீரில் தோன்றிய
மலையின் விம்பத்தில்

தலைகீழாய்
ஏறினாய்

வானவில் தொட்டில்
அந்தரத்தில் ஆடிய

அம் முன்னந்திப்
பொழுதில்

இதுநாள் வரையில்
அவள் கண்டிருந்த

மேகங்கள்,
வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்

உன் காலடியில்
நீந்தின

அந்தப் பயணத்தின்
முடிவில்

இருவரும்
பிரிந்துவிடுவதான உறுதி

தீர்மானமாயிற்ற
பின்னரும்

உனக்காக மட்டுமே
காத்திருந்தவளை

விழுங்கிய அம்
மௌனச் சிலந்தி

நீர்
வலைப்பின்னல்களின் மீது

இன்னும்
ஊர்கிறது

இரவின் பனியோடு
சொட்டுகிற

எட்டுக்கால்
பூச்சியின் ரேகைகள்

எம்.ரிஷான் ஷெரீப்,


கல்லும் கடவுளும்..

வித்யாசாகர்

மூடிய கண்களின் ஆழத்தில்
 பளிச்செனத் தெரிகிறதந்த
 வெளிச்சம்;
வெளிச்சத்தை
 உதறிப் போட்டு எழுந்தேன்
 கடவுள் கீழே கிடந்தார்!!
பாவம் கடவுளென தூக்க
 நினைத்தேன் –
 விழுந்தவர்கள் பலர் நினைவில் வர
 விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன்
உன் கோபம் நியாயம் தான்
 உன்னை இப்படி படைத்தது
 என் குற்றம் தானே என்றார் கடவுள்
உளறாதே நிறுத்து
 உன்னை
 இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்
 இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்
 உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன்
கடவுள் வருத்தப் பட்டார்
 அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்
 உறுதி என்றார்
அப்படியா
 பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா
 எழுந்து போ’ அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன்
உண்மையாகவே எழுந்துப் போய்விடவா
 பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார்
நிறைய பட்டுவிட்டோம்
 அதில்
 இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன்
உடம்பு சற்று குலுங்கி
 கீழே சரிந்துப் போனேன்
ஐயோ என்னாச்சு என்று என்
 மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்
 கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்
 குடும்பமே சூழ்ந்து நின்று
 கத்தி அலறியது கீழே சரிந்த எனைப் பார்த்து
நன்றாகத் தான் இருந்தார் என்கிறார்கள்
 தியானம் செய்து கொண்டிருந்தேன்
 அப்படியே சரிந்துவிட்டேன் என்கிறார்கள்
 கைகால் ஆட்டிப் பார்த்து கண்ணிமை நீக்கிப் பார்த்து
 இறந்துவிட்டேன் என்கிறார்கள்
 என் பிள்ளைகள் கத்தி கதறி
 அப்பா அப்பா எங்களைப் பாருப்பா என்று
 அழுகிறது –
 நான் கடவுளே என்னைக் காப்பாத்திவிடேன் என்றேன்
கடவுள் தெரிந்தார் எதிரே
 சட்டென –
 உடல் துடித்து அசைந்து
 கண்களைத் திறக்க’ அப்பா அப்பா உங்களைப் பார்க்க
 யாரோ வந்திருக்காங்க என்றான் என் மகன்
 மனைவி ஆமாங்க எப்போதோ வந்தார் பாவம்
 அதோ வாசல் ல அமரவைத்திருக்கேன் பாருங்க’ என்றாள்
சுற்றி சுற்றி பார்த்தேன் நான்
 யாரும் என்னைச் சுற்றி அழவோ
 கத்தவோ கதறவோ யில்லை
 அத்தனைக் கூட்டமும் வீட்டிலில்லை
எழுந்து சென்று
 வாசலில் எதிரேப் பார்த்து அமர்ந்திருந்தவரை வணங்கி
 ஐயா வாங்க
 வணக்கம் என்றேன்
 அவர் வணக்கம் சொல்லிவிட்டு
 தன்னை ஒரு கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராக
 அறிமுகப் படுத்திக் கொண்டார்
இன்று மாலை இந்த ஊரில் ஒரு கூட்டம் வைத்துள்ளோம்
 தாங்களும் கலந்துக் கொள்ளவேண்டும்
 கடவுள் பற்றி பேசவேண்டும் என்றார்
நான் புன்னகைத்து விடை தந்தேன்
 கடவுளைப் பற்றிப் பேச வேகமாக
 மாலைக்கு முன்நேரமே புறப்பட்டுப் போனேன்
 அங்கே எனைத்தாக்கும் எதிர்வினைகள்
 நிறைய இருந்தன
எல்லோரும் கடவுள் பற்றி நிறைய இழிவாகப் பேசினர்
 கடவுள் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு
 நீ போய் பேசு என்றார்
 நான் மேடையேறி கடவுள்களுக்கு வணக்கம் என்றேன்
எல்லோரும் கைதட்டினார்கள்
எல்லாம் குற்றம் குறைகளுக்கும்
 காரணம் நாம் தான் பிறகு எதற்கு
 கடவுளையே குறை சொல்லிக் காலத்தைப் போக்குவானேன்
 மனிதரைப் பற்றி பேசுவோம்
 மனிதர் புரிந்தால் கடவுளும் புரியுமென்றேன்
இல்லாத கடவுள் ஏன் புரியவேண்டும்?
 மேலும் கடவுளை உண்டென்று பேசினால் முட்டைப் பறக்குமென்றார்
 கூட்டத்தில் ஒருவர் எழுந்து
நான் திரும்பி கடவுளைப் பார்க்க
 கடவுள் எனைப் பார்த்து பேசு பேசு தயங்காதே என்றார்
எத்தனை முட்டை அடிப்பீர்கள்?
 இன்னும் எத்தனை கொலை விழும்?
 எவ்வளவு நாளிற்கு இன்னுமிந்த இருக்கு இல்லை போராட்டம்,
 இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா?
ஏனில்லை கோவிலையும் சிலைகளையும் உடைத்துப் போடுங்கள்
 போராட்டம் முற்றுபெரும்,
தங்கத்தையும் வைரத்தையும் எடுத்து
 தாலி செய்யுங்கள்
 முதிர்கன்னிகள் எண்ணிக்கை குறையும்,
கோவிலிடத்தில் வீடும் பள்ளிக்கூடமும் கட்டுங்கள்
 ஏழையின் கண்ணீர் காயும்,
இறைஞ்சி நின்ற நேரத்தில்
 இன்னும் நல்லது கெட்டதைப் படியுங்கள் அறிவு வளரும்,
அதைவிட்டுவிட்டு மனிதராய் பிறந்து கடவுளில் தொலைவதா? மிக
 நன்றாக கேட்டார் என்னை அழைக்க வீடுவந்த
 அந்த பெரியவர்
என் கவலை கடவுள் பெயரில்
 மனிதரைக் கொள்வதில் மட்டுமே இருந்தது
சரி கடவுள் போகட்டும்
கடவுள் இல்லை என்போர் கையை உயர்த்துங்கள் என்றேன்
 அந்த அக்கூட்டத்தில் பாதிக்கும் மேல்
 கையுயர்த்தினர்;
சரி இப்போ கடவுள் இருக்கு என்பவர்கள்
 கை தூக்குங்கள் என்றேன்
அந்த கூட்டம் கடந்து
 அந்த ஊரில் இருந்த அத்தனைப் பெரும் கை தூக்கினர்
பார்த்தீர்களா?
 நீங்கள் உடைப்பது வெறும் கோவில் அல்ல
 இத்தனைப் பேரின் மனசு
 நீங்கள் எதிர்ப்பது வெறும் கடவுளின் சிலைகளையல்ல
 இவர்களின் நம்பிக்கையை’
கடவுள் தூர நின்று வெகு ஜோராக கைதட்டினார்
எல்லோரும் திரும்பி
 சப்தம் வரும் திசை நோக்கிப் பார்க்க
 கடவுள் நின்றிருந்த இடம் அவர்களுக்கு வெற்றிடமாகவே தெரிந்தது
நானாகப் பேசத் துவங்கினேன்
 கடவுள் நமக்கு ஒரு பொருட்டல்ல
 நன்மை தீமைகளை ஆராய்வோம்
 அதை யார் மனதும் நோகாமல் எடுத்துச் சொல்வோம்
 இருக்கு என்பவர்களுக்கு தெரியும் கடவுள் தெரிந்துப் போகட்டுமே
இல்லை என்போருக்கு தெரியாத கடவுள்
 எங்கேனும் மறைந்து நின்றுக் கொள்ளட்டுமே என்றேன்
கடவுள் மீண்டும் கைதட்டினார்
நான் கடவுளிருக்கும் திசை நோக்கி
 வணங்கிக் கொண்டேன்
என்ன என்ன நடக்கிறது ஏய் வீசுடா முட்டையை
 என்றொரு கும்பல் எழுந்திருக்க
நான் உங்களைத் தான் வணங்கினேன்
 என்றேன்
எங்களையா?
ஆம் உங்களுக்குள் இருக்கும் கடவுளை என்றேன்
இல்லை இவன் ஏதோ குழப்புறான்
 நீ கீழிறங்கு
 பேசினது போதும் போ’ என்றார்கள்
ஆம் இறங்கத் தான் போகிறேன்
 இறங்கும் முன் ஒன்றைக் கேளுங்கள்; உங்கள் கோபம் கடவுளின்
 மீது வேண்டாம்,
 கடவுள் உண்டென்று நம்பியே வளர்ந்துவிட்ட
 மனிதர்களின் மனதை நசுக்குவதில் வேண்டாம்,
 அவர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு குறைகளை
 இதுவன்று மட்டும்
 அக்கறை உண்டெனில் எடுத்துக் காட்டுங்கள்,
 மூடபழக்கவழக்கத்தின் கொடூர தீவினையை
 முன்வைத்து
 மறுக்கக் கோருங்கள்’ நான் பேசிக்கொண்டிருக்கும் போதே
 ஒருத்தர் எழுந்தார்
வேறென்ன செய்கிறோம் நாங்கள் ?
 இல்லாத கடவுளை உண்டென்று நம்புவது
 மூடத்தனம் இல்லையா?
 அதைத் தானே வேண்டாம் என்கிறோம்?
மிகக் கோபமாக
 கேள்வி எழுப்பினார் அவர்
பொறுங்கள் பொறுங்கள்
 கடவுளே இல்லை என்று எண்ணிக் கொண்ட
 உங்கள் மனசு
 இருக்கு என்று நம்பி வாழ்வோருக்கு வேண்டாமா?
முதலில் கடவுளை நம்புவோர்
 மூடர் என்பதை விடுங்கள்
 முட்டாளை கூட முட்டாள் என்றால் வலிக்கும்
 அது முதலில் அவரவர் உணர்வென்று உணருங்கள்
 இதிலென்ன பெரிய உலக சீர்திருத்தம் வேண்டும்?
சீர்திருத்தம் செய்யத் தக்க இடங்கள் நிறைய உண்டு
 அதை செய்வோம்,
 நமது கோபத்தை
 அப்பாவி மக்களின் நம்பிக்கையின் மீது செலுத்தி
 மனவருத்தத்தை உண்டாக்குவதை விட
 கடவுள் உண்டென்றும் இல்லை என்றும் செய்யும்
 அரசியலின்மீது தொடுப்போம்,
 மூடதனத்தின் மூலதனமே சுயநலம் தான் இல்லையா?
 அந்த சுயநலம் அறுங்கள்
சரி தவறு புரிந்து நன்மைக்கு தோள் கொடுங்கள்
 கடவுள் எங்கேனும் இருந்துவிட்டுப் போகட்டும்..
 நாம் மனிதராக மட்டும் வாழ முயற்சிப்போம் என்று சொல்லிவிட்டு
இறங்கி கீழே நடந்தேன்
 கடவுள் என் பின்னாலேயே வந்தார்
 நான் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
நில் எங்கேப் போகிறாய்
 நானும் வரேன் நில் என்றார்
நான் இல்லையில்லை
 எனக்கு வேறு வேலையுண்டு நான் போகிறேனென்றேன்
 எங்கேப் போகிறாய் இத்தனை அவசரமாக
 சற்று நில் என்றார் கடவுள்
வேறெங்கு போவது, இது என் தியானிக்கும் நேரம்
 என் மனைவிவேறு இன்றைக்கு முழுக்க விரதம்
 எனக்கு ஏக வேலை உண்டு
 உன்னைமாதிரியா நீ தான் வெறுமனே
 கண்மூடிக் கிடக்கிறாய் நானில்லை என்று சொல்லிவிட்டு
 அங்கிருந்து வேகமாக நடந்தேன்
கடவுள் சிரித்துக் கொண்டே அங்கேயே
 நின்றுக் கொண்டார்..
கடவுள் கூப்பிடுந் தூரத்தில் இருந்தும்
 என் பயணம் அவரைவிட்டு விலகி
 கல்லுக்கு பூஜை செய்வதிலேயே இருந்தது..
 

நதி இலை எறும்பு

உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்  
அன்பை

காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை

வன்மத்தை
வெறுமையை
நிறைவை

கொழுத்த உன் கன்னத்தில் 
திரண்டிருக்கும் அம்மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே..!

******
செ.சுஜாதா,
பெங்களூர்.