உன்
காலடி வானம்

அன்றைய மழைக்கால
முன்னிரவில்

அவளது நீண்ட நேரக்
காத்திருப்பின் முடிவு

பேருந்துத்
தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்

தாண்டிச் சென்ற
எவரையோ அழைத்துப் பேசி

கூடச் செல்லுமுனது
பார்வையின் கீழே

நழுவியதவளது
பூமி

தெருவோரம் எவரோ
வெட்டி வீழ்த்தியிருந்த

மரத்தினை நோக்கிக்
கூடு திரும்பிய பட்சிகள்

இருளாய் வட்டமிட்ட
அன்றைய இரவு

ஒரு சாத்தானின்
உருவம் கொண்டது

அந்தகாரத்தில்
உனது நடை

மீன்களின் நீச்சலை
ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த
ஒவ்வொரு எட்டிலும்

நதிகள்
உதித்தன

தண்ணீரில் தோன்றிய
மலையின் விம்பத்தில்

தலைகீழாய்
ஏறினாய்

வானவில் தொட்டில்
அந்தரத்தில் ஆடிய

அம் முன்னந்திப்
பொழுதில்

இதுநாள் வரையில்
அவள் கண்டிருந்த

மேகங்கள்,
வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்

உன் காலடியில்
நீந்தின

அந்தப் பயணத்தின்
முடிவில்

இருவரும்
பிரிந்துவிடுவதான உறுதி

தீர்மானமாயிற்ற
பின்னரும்

உனக்காக மட்டுமே
காத்திருந்தவளை

விழுங்கிய அம்
மௌனச் சிலந்தி

நீர்
வலைப்பின்னல்களின் மீது

இன்னும்
ஊர்கிறது

இரவின் பனியோடு
சொட்டுகிற

எட்டுக்கால்
பூச்சியின் ரேகைகள்

எம்.ரிஷான் ஷெரீப்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன